somitharan_560

20 நவம்பர் 2010, மாலை 5.00 மணி

இடம்: எம். எம். அரங்கம், கோடம்பாக்கம் பாலம் அருகில், பெரியார் சாலை

இன்றைய நிலையில் வரலாறு குறித்து: 

நேற்றைய வரலாற்றின் தொடர்ச்சியாகவே இன்றைய நிகழ்காலமும் நாளைய எதிர்காலமும் முன்னோக்கி நகர்கின்றது.பெரும்பாலும் தேசிய இன விடுதலைப் போராட்ட வரலாறு பல தலைமுறைகளைக் கடந்தே பயணிக்கின்றது. சேனநாயகாவிலிருந்து மகிந்த இராசபக்சே வரை, சவகர்லால் நேருவிலிருந்து இராகுல் காந்தி வரை என மூன்று தலைமுறைகளைக் கடந்து பயணித்து கொண்டிருக்கின்றது ஈழ விடுதலைப் போராட்டம். 60 ஆண்டுகாலமாக நடந்துவரும் தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு பெரும் பின்னடைவைச் சந்தித்து நிற்கும் கட்டம் இது. இத்தகைய நிலையில், இலங்கை தீவில் இயக்கர், நாகர், வேடர் என்ற இனக்குழுக்களாக வாழ்ந்து வந்த ஈழத் தமிழர்கள் தங்களின் அரசியல் அதிகாரத்தைப் படிப்படியாக இழந்து எப்படி இன்றைய நிலையை அடைந்திருக்கின்றார்கள் என்பதை அறிந்து கொள்வதன் மூலமே நிகழ்காலத்தைப் புரிந்து கொள்ளவும், அதன் மேல் வினையாற்றவும் இயலும். மேலும் நிகழ்காலமோ, ‘நாகரிக உலகம்’ என்று சொல்லப்படும் காலகட்டத்தில் ஒரு இனப்படுகொலையை அனுமதித்து, எந்தச் சலனமும் இன்றி கடந்துச் சென்றுப் பயணித்துக் கொண்டிருக்கும்போது வரலாற்றை அறிந்து கொள்வது இன்றியமையாதத் தேவையாகின்றது. வரலாறே நமது வழிகாட்டி.

வரலாற்றை ஆவணப்படமாக ஆக்கியதேன்?

இன்று தமிழகத்தில் ஈழப் போராட்டத்திற்கு ஆதரவாக எழுந்திருக்கும் புதிய ஆற்றல்களில் பலரும் இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். ’பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற பெயரில் தமிழர்கள் மீது தொடுக்கப்பட்ட இன அழிப்புப் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில், இப்போராட்டத்தின் அரசியல் காரணங்களை அறிந்து கொள்ள வேண்டிய தேவை உந்தித் தள்ளியபோது, வரலாற்று நூல்களைப் படிக்கும் பழக்கமே இல்லாத இன்றைய தலைமுறையைச் சேர்ந்த எங்களைப் போன்றவர்களால் ஈழத் தமிழரின் விடுதலை வரலாற்றை விரைவாகத் தெரிந்துகொள்வதற்கென்று காட்சி ஊடகத்தில் ஒரு பதிவு இல்லை என்பதை உணர முடிந்தது. இனப்படுகொலைப் போரும், அது ஏற்படுத்திய பாதிப்பும் இதன் தேவையை மேலும் வலியுறுத்தியது.

இன்றைய உலகமயமாக்கல் சூழலில் ‘வரலாற்றைச் சுமையாக எண்ணுவதும், தேவையற்ற ஒன்றாக கருதுவதும்’ இளைஞர்களின் பொதுக் கருத்தியலாக இருக்கின்றது. இது புலம்பெயர் நாடுகளில் வாழும் இளைய தலைமுறைக்கும் பொருந்தும் என்றே கருதுகிறோம். சாரமாக, இன்றைய நெருக்கடியானதொரு கணத்தில், இளைய தலைமுறையைப் போராட்டத்தில் உள்வாங்குவதற்குள்ளத் தடைகளைக் தகர்ப்பதற்கு வரலாற்றைக் காட்சி வடிவில் ஆவணப்படுத்துவது உதவும் என்ற நோக்கத்துடனே இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆவணப்படம் குறித்து:

இந்தப் படத்தை திரு.சோமிதரன் அவர்கள் இயக்கியுள்ளார். இவர் முன்னதாக ’எரியும் நினைவுகள்(யாழ் நூலக எரிப்புக் குறித்து)’, ’முல்லைதீவு’ என்று ஈழம் தொடர்பான இரண்டு ஆவணப்படங்களை உருவாக்கியுள்ளார்.

இந்தப் படத்தில், தமிழர்கள் பூர்வகுடிகளாக இலங்கை தீவில் வாழ்ந்த காலம் தொடங்கி, பூர்வகுடித் தமிழர்களிடமிருந்து படிப்படியாக அரசியல் அதிகாரம் பறிக்கப்பட்டவிதம், 60 ஆண்டுகாலத்திற்குமேலாக நடந்துவரும் தமிழின அழிப்பு, ஒப்பந்தங்களும் ஏமாற்றங்களும், தமிழர்களின் அறவழி மற்றும் ஆயுதவழிப் போராட்டங்களுக்கான தேவை மற்றும் கடந்து வந்தப் பாதை ஆகியவை தொகுக்கப்பட்டுள்ளன. இன்னும் குறிப்பாக தமிழீழக் கோரிக்கையின் வளர்ச்சியும் அதன் வரலாற்று தேவையும் இந்த ஆவணப்படத்தில் விளக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை வெளிவராத சில அரிய நேர்காணல்களும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. இப்படத்தின் நீளம் சுமார் 2.45 மணி நேரம்.

இப்படம் நுணுக்கமான ஆய்வு நோக்கில் அல்லாமல் ஒரு வரிசைப்படுத்தப்பட்ட ஆண்டு நிகழ்வுகளின் தொகுப்பாகவே உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை உருவாக்க ஏறத்தாழ ஒராண்டு ஆனது.

இப்படத்தைக் காண்பது என்பது வரலாற்று நூல்களைப் படிப்பதைவிட சற்றே விரைவான மற்றும் எளிமையான அனுபவமாக இருக்குமேயன்றி விறுவிறுப்பான திரைப்படத்தைப் போல் இருக்காது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஈழ விடுதலைப் போரட்டத்தின் வரலாறே, இன்று நம் கையில் இருக்கும் ஆற்றல் வாய்ந்த கருவி என்ற காரணத்தினால், இந்த வரலாற்று ஆவணத்தை இத்தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்களிடம் கொண்டு செல்ல வேண்டிய கடமை நமக்கு உள்ளது என்பதை உரிமையோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

            வரலாறு நம்மை விடுதலை செய்யும்

படத்தின் முன்னோட்ட சுட்டி:

http://www.youtube.com/watch?v=j4_6Z3GL0HU

- தமிழர் பாதுகாப்பு குழுமம் (Save Tamils Movement)

Pin It