நாட்டில் உள்ள அனைத்து துறைகளிலும் பணம் சம்பாதிப்பது என்பதுவே பிரதானமாகவும், சேவை என்பது பெயரளவுக்குக் கூட இல்லாமல் எவ்வித உத்திகளையும் பணத்திற்காக தத்தமது துறைகளில் ஈடுபடுத்துவது சகஜமாகி விட்டது.

தமிழகத்தில் தற்பொழுது அந்த நிலைக்கு பதிப்புத் துறையும் வந்துவிட்டது. ஒருசில தமிழ்ப் பதிப்பக நிறுவனங்களைத் தவிர பதிப்புத் துறையில் இருப்பவர்கள் அனைவரும் வணிக நோக்கில் செயல்படுபவர்கள்தான். எந்த ஒரு வெளியீடானாலும் தங்களுக்கென்று குறைந்தபட்ச லாபம் வைத்து தொழில் நடத்துபவர்கள்தான். அதில் ஒன்றும் தவறில்லை.

(ஆனால் இப்பொழுது முடி வெட்டும் கடை, மளிகைக்கடை, காய்கறிக் கடையில் இருந்து தொழில் நுட்ப நிறுவனங்கள் வரை நுழைந்துள்ள தாராளமயம் பிரமாண்டம் போன்றவை பதிப்புத் துறையிலும் நுழைந்துள்ளது. தாராளமயம் பணத்திற்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கும்.

பதிப்புத் துறையில் அது கிழக்குப் பதிப்பகமாக உருவெடுத்துள்ளது.

கிழக்குப் பதிப்பகம், சதாம் உசேன், ஹிட்லர், பின்லேடன், எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா, அம்பானி, அசிம் பிரேம்ஜி போன்றவர்களின் வாழ்க்கை வரலாறு அவர்கள் வாழ்வில் ‘முன்னேறிய' கதை, தன்னம்பிக்கை, வரலாறு போன்றவைகளை வெளியிடுகின்றது. அல்லது மிகத் தீவிரமான மக்கள் பிரச்சனைகளை அப்போதைக்கப்போது உடனடியாக வெளியிட்டுக் காசு பார்க்கின்றது.

இவ்வாறு பணம் சம்பாதிப்பதே தொழில் என்றாகி விட்ட பிறகு, அங்கு நேர்மை என்பது எங்கு வரும்? தினசரி ஒரு வெளியீடு என்று திட்டம் வைத்து வியாபாரம் நடத்தி வரும் கிழக்கு பதிப்பகம் அதற்காக எந்த வழிமுறையையும் கையாளத் தயாராய் இருக்கிறது.

கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடுகள் பெரும்பாலும் இணையத்தில் இருந்து சுடப்படுபவைதான். இணையத்தில் இருந்து பிறரது எழுத்துக்களை டவுன்லோடு செய்து, அதனை மொழிபெயர்த்து அப்படியே வெளியிடுவதுதான். இதன் மொழிபெயர்ப்பைச் செய்பவர் பெயர், மற்றும் ஒட்டு வேலைகள் பார்ப்பவர் பெயர், ஆசிரியராக உருமாற்றம் பெற்றிருக்கும். பலர் இது பற்றி அதிக அளவில் குற்றம் சுமத்திய பின்பும் கிழக்கு திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. ஏனென்றால் திரும்பிப் பார்க்கும் நேரத்தில் இன்னொரு நூல் வெளியிட்டு காசு பார்க்க முடியும் என்பதனால்தான். ஆதாரத்திற்கு ஒரு சமீபத்திய திருட்டைப் பார்ப்போம்;

மதுரையைச் சேர்ந்த கருத்துப் பட்டறை அமைப்பைச் சேர்ந்தவர்கள் தங்களது பகுதி முல்லைப் பெரியாறு பிரச்சனை முடிவில்லாமல் நீண்டு கொண்டிருக்கிறதே. விவசாயிகளின் அவலம் தீர வழியில்லையே? என்ற உண்மையான சமுதாய அக்கறையுடன் முல்லை பெரியாறு அணை குறித்த சிறு வெளியீடாக, "முல்லைப் பெரியாறு நதிநீர்ப் பிரச்சினைகள். ஒப்பந்தமும் தீர்ப்பும்'' என்ற சிறு நூலை பிப்ரவரி 2007 இல் கொண்டு வந்தார்கள். அந்த நூலில் சென்னை மாகாணம் அப்போதைய திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு இடையே ஏற்பட்ட 999 ஆண்டு கால ஒப்பந்தம், முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு போன்றவற்றை மொழிபெயர்த்து வெளியிட்டிருந்தனர்.

999 ஆண்டு கால ஒப்பந்தத்தை மதுரை நீதிமன்ற வழக்கறிஞர் எஸ். நாகராசன் மொழிபெயர்த்திருந்தார். மதுரை கருத்துப்பட்டறை நண்பர்களின் முயற்சி, உண்மையான சமுதாய அக்கறையின் வெளிப்பாடு. அப்பொழுது முல்லைப்பெரியாறு பிரச்சனை தமிழகத்தில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த நேரம்.

எந்தப் பிரச்சினையையும் காசு சம்பாதிக்கும் நோக்கில் பார்க்கும் கிழக்கு இதிலும் காசு சம்பாதிக்கும் நோக்கில் "முல்லைப் பெரியாறு அணையா? நெருப்பா?'' என்ற நூலை ஏப்ரல் 2007 இல் வெளியிட்டது. நல்ல விற்பனையும் அடைந்தது. முல்லைப் பெரியாறு பிரச்சனை தீர்ந்ததோ இல்லையோ? கிழக்குப் பதிப்பகத்துக்கு நல்ல வருமானம் கிடைத்தது.

ஆனால், அவ்வாறு வெளியிட்ட நூலிலும் நிறைய திருட்டுத்தனம் இருக்கிறது. கிழக்குப் பதிப்பகம் வெளியிட்ட நூலிலும் 999 ஆண்டு கால ஒப்பந்தத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு இருக்கிறது. அவ்வாறு வெளியிட்ட மொழிபெயர்ப்பு முழுவதும் பிப்ரவரி 2007 இல் மதுரை கருத்துப் பட்டறை வெளியிட்ட மொழிபெயர்ப்பின் நகலாக இருக்கிறது. வரிக்கு வரி, முற்றுப்புள்ளி உட்பட அனைத்தும் மதுரை கருத்துப் பட்டறை அமைப்பினரின் வெளியிட்ட நகல்தான்.

Kizhakku இருவரும் ஒப்பந்தத்தை ஒரேபோல மொழிபெயர்ப்பு செய்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் மொழிபெயர்ப்பு என்பது நபருக்கு நபர் மாறுபடும். இந்த திருட்டைக் கண்டு அதிர்ச்சியுற்ற கருத்துப் பட்டறை வெளியீட்டாளர்கள் கிழக்குப் பதிப்பகத்திற்குக் கடிதம் எழுதினர். கிழக்கு பதிப்பகத்திற்கு பதில் கூறவோ, வருத்தம் தெரிவிக்கவோ ஏது நேரம்? ஏனென்றால் தவறு, காப்பி அடித்ததற்கு வருத்தம் என்று கூற ஆரம்பித்தால் பிறகு தினம் தினம் வருத்தம் மட்டுமே அல்லவா தெரிவித்துக் கொண்டு இருக்க வேண்டும். ஏனென்றால் பெரும்பாலும் ‘டவுன்லோடு' தானே?

சரி, மொழிபெயர்ப்பு ஒன்றுபோல இருக்க வாய்ப்பே இல்லையா? என்று ஏங்கும் நண்பர்களுக்காக மட்டும் சிறு எடுத்துக்காட்டு மதுரை கருத்துப் பட்டறை வெளியிட்ட நூலின் மொழிபெயர்ப்பில் சிறு பிழை ஏற்பட்டு இருந்தது (பக்கம் 3ல் 1886 ஆம் ஆண்டு என்று கூறுவதற்குப் பதிலாக ஆயிரத்து எண்ணூற்று அறுபத்தாறாம் ஆண்டு) என்று பிழையாக கூறப்பட்டிருந்தது.

ஆனால், இதே பிழை கிழக்கு பதிப்பக வெளியீட்டிலும் ஏற்பட்டிருக்கிறது. பக்கம் 153 இல் உள்ள மொழிபெயர்ப்பிலும் 1886 ஆம் ஆண்டு என்று கூறுவதற்குப் பதிலாக ஆயிரத்து எண்ணூற்று அறுபத்தாறாம் ஆண்டு என்று அதே பிழை ஏற்பட்டுள்ளது. உண்மையான மொழிபெயர்ப்பு என்றால் இது நேர வாய்ப்பில்லை.

ஈயடிச்சான் காப்பியில் மட்டுமே இது நேரும்.

இனிமேலாவது ‘கிழக்குப் பதிப்பகம்' தனது திருட்டை நிறுத்துமா?
Pin It