tripur freedom fighters 450

திருப்பூரைச் சார்ந்த 114 தியாகிகளின் வாழக்கை வரலாறுகளைக் கொண்டிருக்கிறது இந்நூல். விடுதலைப் போராளிகள் யார் என்ற தமிழ்நாடு அரசு வெளியிட்ட 1972ம் ஆண்டுக்குறிப்பு நூல், கொடிகாத்த குமரன் என்ற தியாகி பி எஸ். சுந்தரம் எழுதிய நூல் மற்றும் தியாகி பி ராமசாமி எழுதிய நூல்களின் அடிப்படையில் இந்நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு மேல் சுதந்திரப்போராட்ட வீர்ர்கள் சமிதியின் பொதுச் செயலாளராகப் பணியாற்றி வரும் பி ஆர். நடராஜன் இந்நூலை எழுதியுள்ளார். ஏறத்தாழ 90 ஆண்டுகால சுதந்திரப்போராட்டத்தில் திருப்பூர் பகுதியில் பங்கு பெற்ற தியாகிகள் பற்றிய விபரங்கள் இதில் உள்ளன.

தியாகி பி எஸ். சுந்தரம்  முதல் தியாகி சுந்தரம்பாள் வரை அந்த 114 தியாகிகள் இதில் உள்ளனர்.   இதில் இப்போதும் உயிரோடு இருக்கிற தியாகி ஜி.முத்துச்சாமி போன்றோர் சுதந்திரப்போரில் மட்டுமின்றி பின்னர் பொதுவுடமை இயக்கங்களிலும் பத்திரிக்கைத் துறையிலும் பணியாற்றிய அனுபவங்கள் குறிப்பிடத் தக்கவை. வெளி மாநிலங்களிலிருந்து இடம் பெயர்ந்து வந்து பஞ்சு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த  ஆஷர் தம்பதி போன்றோரின் மொழிப்பற்று, தேசப்பற்று போன்றவை குறிப்பிடப்படுகிறது. சுந்தரம்பாள், லட்சுமி அம்மாள் உட்பட பெண்கள் தங்கள் பங்கை குடும்பச் சூழ்நிலைகளில் இருந்து கொண்டு சுதந்திரத்திற்காக ஆற்றி இருக்கும் பங்கு பற்றிய கண்ணோட்டம் விசேசமானது.

குமரனுக்கு முன்னோடியான பிஎஸ் சுந்தரம் சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட பள்ளிப்படிப்பைக் கைவிட்டவர். ரங்கூன் சென்று செய்த வந்த வேலையை உதறித்தள்ளியவர் 1932ல் தேசபந்து வாலிபர் சங்கம் அமைத்து ஈடுபட்டவர். திருப்பூர் கதர் உற்பத்தியில் முன் நின்றவர். சட்டமறுப்புப் போராட்டத்  தடியடியின் போது 19 இடங்களில் அவரின் உடம்பு எலும்புகள் முறிந்து சிரமப்பட்டவர். பி ராமசாமி அவர்கள் வாழ்க்கை பற்றிய விவரமான குறிப்புகள் இதில்

உள்ளன. 1919 ஏப்ரல் 12ம் நாள் சேவியத் யூனியனின் நிர்மாணப்பணிக்காக நடந்த உழைக்கும் மக்களுக்கான நினைவாக உழைப்பை இலவசமாகத் தந்த நாளில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் மில்வேலை, ஜனசக்தி விற்பனை, பொதுவுடைமைப் பணிகள் பற்றி விரிவாகவே சொல்லப்பட்டிருக்கிறது. அவர் திருப்பூர் குமரன் நூற்றாண்டை ஒட்டி எழுதிய நூலில் இருந்து குமரன் பற்றி எழுதிய நூலின் பகுதி இந்நூலில் முக்கியமானதாக அமைந்திருக்கிறது.

ஆர்கே கண்ணன், சி ஏ பாலன் போன்றோரின் வாழ்க்கைக்குறிப்பும் இலக்கியப்பணிகளும் இன்றைய இளையதலைமுறை அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விசயங்களாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இருவரின் திருப்பூர் வாழ்க்கையை விரிவாய் பி.ஆர். நடராசன் போன்றோர் எழுதுவதற்கு முதல்படியாக இந்த நூலைக் கொள்ளலாம்.

இப்போதும் உயிருடன் இருப்போர் முகவரிகள், தொலைபேசி எண்கள தரப்பட்டிருக்கின்றன. வாரிசுகள் பற்றிய தகவல்கள் முறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. அபூர்வமான புகைப்படங்கள்... குறிப்பாக காந்தியின் திருப்பூர் வருகையின் போது குமரன் கூட இருப்பது முதற்கொண்டு இந்தத் தலைமுறைப் பிரமுகர்களுடனான தியாகிகளின் படங்களைச் சொல்லலாம். திருப்பூருக்கு இது 100 வது வயது. இந்தாண்டில் இத்தொகுப்பு வெளி வருவது ஒரு சிறப்பு. இந்தச்சிறப்பை வணிக நகரத்தின் அதிவேக செயப்பாடுகளூடே உணர்த்தியிருக்கும்

பி.ஆர். நடராஜனின் பொதுவுடைமை இயக்கப்பணிகளின் மத்தியில் இதுவும் நினைவு கொள்ளத்தக்கது.

சுதந்திரப் போரில் திருப்பூர் தியாகிகள்

பி.ஆர்.நடராஜன்

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

41-பி, சிட்கோ இண்டஸ்ரியல் எஸ்டேட்.,

அம்பத்தூர், சென்னை - 600098

விலை - 150/-

Pin It