நாவல் பற்றி நான் மாணவர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் பயிற்சி எடுக்கிற போது ஓர் உதாரணத்தைத் திரும்பத் திரும்பச் சொல்வேன்.
ஒரு நாவல் என்பது ஒரு வீட்டு ஜன்னல் வழியாக வெளியே பார்ப்பது. ஜன்னல் வழியே பார்க்கும் பார்வையில் வானமும் வாகனங்களும் மனிதர்களும் நிலப்பரப்பும் பல மனிதர்கள் வாழ்வும் என்று தென்படும். அப்படி விரிவான பார்வையில் பார்க்கப்பட வேண்டியது நாவல். அதுவே சிறுகதையாக இருந்தால் அறையின் வெளியே இருந்து கொண்டு ஜன்னல் வழியாக உள்ளே நடப்பதைப் பார்ப்பது என்றும் எளிதாகச் சொல்லி வைப்பேன். அப்படித்தான் நாவல் வடிவத்தை நாம் எளிமையாகப் புரிந்து கொள்ளலாம் அல்லது ராஜாஜி அவர்கள் சொன்னது போலச் சிறுகதை என்பது வானத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் பனைமரத்தை போல, ஒரு மையத்தை நோக்கிச் செல்வது. நாவல் என்பது ஒரு புளிய மரத்தை போல பல கிளைகளும் பருமனும் என்று வித்தியாசப்படுவது.
என் அனுபவத்தில் நான் நாவல் எழுதுகிற அனுபவத்தை கனவாகத்தான் நினைத்திருந்தேன் ஆனால் நிறையச் சிறுகதைகள் எழுதுகிற போது நாவல் எழுதுகிற எண்ணமும் வந்தது ஆனால் ஒரு நாவலுக்கான விரிந்த காலமும், பரந்த அனுபவமும் இல்லாமல் இருந்தது. ஒரு எழுத்தாளர், தான் வாழ்ந்த அனுபவங்களை மட்டும் தான் எழுத வேண்டும். வசீகரித்த அனுபவங்களையும் எழுதலாம்.
அப்படித்தான் நான் சிறுகதைகள் எழுதிக் கொண்டிருந்தபோது ஹைதராபாத்தில் இருந்தேன். அந்தப் பின்னணியில் ஒரு நாவல் எழுத வேண்டும் என்று தோன்றிய போது அங்கு வந்து குடியேறி இருந்த சின்னாளப்பட்டியைச் சேர்ந்த ஒரு 50 குடும்பங்கள் ஞாபகத்துக்கு வந்தன. அவர்களின் வாழ்க்கை முறையைக் கவனித்தேன் அதை ஒரு நாவலாக எழுத ஆரம்பித்தேன் ஹைதராபாத்தில் இருந்தபோது நான் எழுதிய மூன்று நாவல்களில் முதல் நாவல் “மற்றும் சிலர் “. இரண்டாவது ‘சுடுமணல்’ என்ற நாவல் நதிநீர் பிரச்சனையில் கர்நாடக போன்ற மாநிலத்தில் வாழும் தமிழர்கள் பாதிக்கப்படுவதை ஹைதராபாத் சூழ்நிலையில் வைத்து எழுதினேன். ஏனென்றால் எனக்குக் கர்நாடகம் பெங்களூர் சூழல்கள் அந்நியமாக இருந்தது காரணம்.
பிறகு அங்கு நடைபெற்ற ஒரு அரசியல் சூழ்ச்சி காரணமாக ஆட்சிக் கவிழ்ப்பும் அதை ஒட்டிய மக்களுடைய பலிகளும் பற்றி “நகரம் 90” என்ற நாவலில் எழுதினேன்.
ஆகவே இந்த நாவல் அம்சங்களை நான் எங்கும் தேடிப் போகவில்லை. அது என்னைச் சுற்றியுள்ள நிகழ்வுகளாக இருந்தன. அப்படித்தான் சமகாலத்திய அனுபவங்களை இப்படி நாவலுக்குள் கடத்திக் கொண்டு போகலாம் என்பது விளங்கியது. அதற்காக நெடுகாலம் காத்திருப்பதோ, பெரும் ஆய்வு செய்வதோ இயலாத நிலையில், நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களைக் கவனித்து எழுதுவது ஒரு நாவலுக்கான சாதாரண இயல்பாகிவிட்டது எனக்கு. அப்படித்தான் நான் திருப்பூர் வந்தபோது திருப்பூர் மக்களின் வாழ்க்கையைக் கவனித்து பத்துக்கு மேற்பட்ட நாவல்கள் எழுதினேன் அதில் திருப்பூர் மக்களுடைய வாழ்க்கைக் குறிப்பாக பனியன் தொழிலாளர்களும் பெண்களும் என்னுடைய கவனத்துக்கு வருபவராக இருந்தார்கள்
நான் தொலைபேசித் தொடர்புத் துறையில் பொறியாளராக இருந்தேன். அந்தக் கடுமையான வேலை மற்றும் நான் சார்ந்த உடைமை இயக்கச் சிந்தனைகள் போன்றவை பல ஆய்வுக்குச் செல்லத் தடையாக இருந்தன. ஆகவே என்னை வந்து அடையும் அனுபவங்களை நாவலாக்கினேன். இதற்காக நான் வெளியில் எங்கும் அலையவில்லை ஆய்வு செய்ய முடியவில்லை. என்னை சுற்றியுள்ள மக்களைப் பார்த்து, அவர்களது அனுபவங்களைக் கூர்ந்து கவனிப்பதன் மூலமாக அவற்றை எழுதினேன். இப்படி மலேசியா சார்ந்த நாவல் அனுபவங்களும், பயணம் சார்ந்த சில நாவல் அனுபவங்களும் என்று சொல்லிக் கொண்டே போகலாம்
ஆகவே இந்த நாவலுக்கான களம் என்பது நம்மைச் சுற்றியுள்ள வாழ்க்கையைக் கூர்ந்து கவனிப்பதன் மூலம் கிடைக்கிறது. நல்ல தரவுகளைச் சேகரிப்பதும் ஆய்வுகள் செய்வதும் தேவையாக இருந்தால் கூட என் வாழ்க்கை சூழலில் அதற்கான வாய்ப்புகள் அமையவில்லை.
எந்தப் பிரதேசம் சார்ந்து எழுதுகிறோமோ அந்தப் பிரதேச மொழி, கதாபாத்திரங்களின் பேச்சு மூலமும் வழக்குகள் மூலமும் கொண்டுவரப்பட வேண்டும். பொது மொழியாக இல்லாமல் இப்படிப் பிரதேசம் சார்ந்த பிரத்யேக மொழியைக் கையாளுதல் முக்கியம். இன்றைய பிரச்சனைகள் நாளைய சரித்திரப் பதிவுகளாக மாறும். ஆகவே எழுத்தாளர் அவற்றைப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அப்படித்தான் நான் என்னைச் சுற்றியுள்ள மக்களுடைய வாழ்க்கையையும் குறிப்பாக திருப்பூர் மக்களின் வாழ்க்கையையும் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகளையும் நாவல்களுக்குள் கொண்டு வந்தேன்.
ஆகவே என்ன வகையான மையங்களை நாவலுக்குள் கொண்டு வருவது என்பதில் நம் வாசிப்பும் மற்றும் கூர்ந்து சமூகத்தை பார்க்கும் அனுபவமும் இணைந்து வழிகாட்டும். நாவல் வடிவத்தை எப்படி எடுத்துக் கொள்வது என்று வருகிற போது நேர்கோட்டு தன்மையிலான கதை சொல்லும் விதி முதலில் ஆரம்பத்தில் எழுதுபவர்களுக்குக் கை கொடுக்கும். சிறுகதை பலவற்றை கோர்த்து நாவலாக்குவது போல நேர்கோட்டுத் தன்மையில் எதார்த்தமாகக் கதாபாத்திரங்களைக் கொண்டு அவற்றை உருவாக்கலாம். பின்னால் அந்த வடிவங்களை நான் பின்நவீனத்துவம் முதற்கொண்டு பல்வேறு வகையான விஷயங்களைக் கொண்டு நாவல்களை எழுதி இருக்கிறேன் ஆகவே வடிவம் சார்ந்த விஷயங்களின் கூட கவனம் தேவையாக இருக்கிறது.
மொழியும் வடிவமும் வாழ்க்கை அனுபவங்களும் இப்படி நாவல்களை எழுதிக் கொண்டு போக உதவும். நீண்ட கால வாழ்க்கை, அதேபோல நீண்ட கால அனுபவங்கள் இவை எல்லாம் எல்லோருக்கும் வாய்க்காது, வாய்க்கும் அனுபவங்களை இப்படி நாவலாக்குவது என்பது சிறந்தது, அப்படி வாய்க்கும் அனுபவங்களைப் பதிவாக்குவது இன்னும் சிறந்தது பெரிய நாவல்கள் எழுத வேண்டும் என்ற ஆசை வந்த போது அதற்கான ஆய்வுகளும், பல மனிதர்களுடன் சந்திப்பும் தேவையாகிறது. அப்படித்தான் ஆயிரம் பக்க நாவல் சிலுவையை நான் எழுதினேன் ஆகவே நாவல் என்ற வடிவத்தை நாம் கையாளர்கிறபோது வடிவம் சார்ந்தும், அதில் பயன்படுத்தும் மொழி சார்ந்தும், மக்களின் அனுபவம் சார்ந்தும் நம்முடைய அவதானிப்புகளை அங்கு பதிவு செய்யலாம். நாவல் போன்ற பெரிய வடிவத்தில் வாழ்க்கையைச் சொல்வதும், வாழ்க்கையைச் சார்ந்து அனுபவத்தை விரித்துக் கொண்டு போவதும் ஒரு மாபெரும் தரிசனமாகவே தோன்றுகிறது.
- சுப்ரபாரதிமணியன்