(திருவள்ளுவராண்டு 450 முடிய) 

முப்பக்க பரிணாமம்

தமிழகத்துக்  குமரிமுனை, வைகை, அமராவதி, நொய்யல், காவிரி, பாலாறு, கிருஷ்ணா, கோதாவரி,  மகாநதி, நர்மதை, கங்கை கொண்ட ஒருபக்கம்;  கங்கை, சிந்து, யூப்ரடீஸ், டைகரிஸ் சார்ந்த பகுதிகள், அரேபியா, எகிப்து, கிரேக்கம், ரோம் ஆகிய பகுதிகள் கொண்ட ஒரு பக்கம்; மத்தியதரைப் பகுதி, செங்கடல், பாரசீக வளைகுடா, சிந்து முகத்துவாரம், கட்ச் பகுதி கடந்து கேரளக்கரை, குமரி முனை ஒரு பக்கம் என்ற முப்பக்கங்கள் கொண்ட இந்த ஆசியப் பகுதி கி.மு.600 தொட்டே வணிகப்பெருவழிகளாலும், கடல் பயணங்களாலும், இணைப்புண்டு இருந்தது. இது சிறப்பாகக் கருதக்கூடியது, யூதர், கிரேக்க-யவனர், எகிப்தியர், சிரியர் ஆகியோர் வாணிகப் பெரு வழிகளாலும், கடல் பயணங்களாலும் இணைப்புண்டு; யூத, அரேபிய மற்றும் வேதஆரியர், குஷான, மௌரிய, தக்காணம், தமிழகம் சார்ந்த சிந்தனைகள் ஊடாட்டம் கொண்ட நிலப் பகுதி இது.  இங்கே விளை பொருள்கள், இயற்கைப் பொருள்கள், வாணிகப் பொருள்களாகிக் கண்ட போக்குவரவு, படைவீரர் அணிவகுப்பு. மருத்துவர், அறவோர், சாதுக்கள், நாடோடிகள், கலைஞர், கைவினைஞர், தொழில் நுட்பவியலாளர் இவர்களோடு மகளிர் நடமாட்டம் நிலையாக இருந்தது, அரசுகள் மாறலாம். இது மாறாமல் பொலிவுடன் விளக்கம் கொண்டு வாழ்ந்தது.

யூத, கிரேக்க-யவன, எகிப்திய சிந்தனைகள், வைதீக சிந்தனைகள், சமண, பௌத்த சிந்தனைகள், உலகாயதம், நாட்டார் வழக்காறுகள் ஆகியன தமக்குள் ஊடாட்டம் கொண்டு கருத்தியல்களையும், தத்துவங்களையும் உருப்படுத்திக் கொண்ட நிலப் பகுதியாகும்.  மனிதர்கள், பொருள்கள், சிந்தனைகள் பிரிக்க முடியாதவை, கைபிணைந்து உடன் செல்பவை,  தமிழகத்தின் சங்க காலம் என்ற காலப்பகுதியில் இந்தப் பெருவழிகள் கொண்ட நிலம், பயணங்கள் கொண்ட கடல் பகுதிகளோடு தமிழக மக்களும், பொருள்களும், சிந்தனைகளும் இணைந்து விளங்கின. சங்க காலம் தொடர்பாக யவனர் காசுகள், யவனத் தேறல், யவன வீரர், யவன வாணிகர், யவனக் காவலர், யவனர் சேரிகள், கோவில்கள் பற்றிய தொல் பொருள் ஆதாரங்களும், குறிப்புகளும் சிறப் புடையன. மேற்குக் கரையில் இறங்கிய பலமொழி வணிகர் கரூர், புகார், மதுரை, காஞ்சி, புதுவை நகரங்களில் குடியிருப்புகள் அமைத்து வாழ்ந்தனர். 

அவர் தமது வாணிகப் பொருள்களுடன் தமது சொந்த நாட்டில் நிலவிய சிந்தனைகள், கருத்தியல்கள், மெய்யியல்களையும் கொண்டு இருந்தனர்.  ரோமப் பேரரசின் பின்னணியில் இது நடந்தது.  இதனுடன் கூடவே, மௌரியப் பேரரசின் முன், பின் காலங் களில் கங்கைப் புறத்துடனான வாணிபமும் விளக்கம் கொண்ட ஊடாட்டமானது. தமிழகத்தில் வேட்டை, மேய்ச்சல், உழவு சார்ந்த வாழ்வு நிலைமைகளில் பாதிப்பை ஏற்படுத்தி அரசு சார்ந்த வாழ்வு உருவாவதில் பங்கு பெற்றன.  அப்போது அரசு, வாணிக உலகில் அசோகர் தொடங்கி இந்தியப் பேரரசர், அகஸ்டஸ் (கி,பி, 15) தொடங்கி ரோமப் பேரரசர் தமிழகத்தில் தொடர்ந்து பேசப்பட்டனர்.  வாணிக உலகில் செங்கடல் பகுதியில் பெர்நிகே, குவாசிர்-அல்-காசிம் துறைமுக நகரங்களில் கிடைத்துள்ள பானை ஓடுகளில் உள்ள கோற்பூமான், கண்ணன், சாத்தன் பெயர்கள் தமிழகப் பொருள் களை அங்குக் கொண்டு சென்ற வாணிகர்களின் பெயர்களாகும். இந்தத் தரவுகள் தமிழகம்-யவனம் கருத்தியல் ஊடாட்டத்தைப் புலப்படுத்துவன ஆகும்.

statues 600சமூகநிலை

திருவள்ளுவர் மருதத் திணையாம் உழவைச் சிறப்பித்து உயர்த்தினார். நெய்தல் மற்றும் பாலைத் திணைகளின் வேட்டை வாழ்வைப் போற்றவில்லை. முல்லைத் திணையாம் கால்நடை மேய்ப்பு வாழ்வைப் பயன் தருவாழ்வு என்ற அளவில் மட்டும் அனுசரித்தார். குறிஞ்சித் திணையின் உணவு சேகரிப்பு வாழ்வைவிட பொருளின் உற்பத்தியையும், பொருளாகிய முதலினால் வரும் ஊதியத்தையும் மேல்நிலையாகப் போற்றினார். அதன் பொருட்டு, கால்நடை நாடி மற்றும்  மண் நாடிப் போரிடும் வெட்சி, வஞ்சி மற்றும் உழிஞைத் திணைகள் சார்ந்த சிறுகுடித் தலைமைகளைத் தவிர்த்து விட்டுக் கொடுங்கோன்மை அற்ற பேரரசினை / வேந்தனை விவரித்தார். தொல்காப்பியப் புறத் திணைகளில் பேசப்படாத வாணிகத்தில், நடுவு நிலைமை கொண்ட பொருள் வாணிகத்தைப் போற்றினார்.

இது திருவள்ளுவர் கண்ட புதுமை. அப்போது தமிழகத்தில் பலநாட்டு வாணிகர்களின் காசுகள் புழக்கத்தில் இருந்தன. திருவள்ளுவர் அகத்திணை என்றில்லாமல், அகம் என்பதில் காதல்-காமத்தை இன்பத்துப்பாலில் தனியாகக் கையாண்ட படி, உள்ளத்து அகவய உணர்வை அறத்துப்பாலில் முன்னிலைப்படுத்தினார். இவர் காலத்தில் உபரி விளைச்சல் இயற்றும் உழவு, இலாபம் ஈட்டும் வாணிபம், அதிகாரம் கொண்ட அரசு வேர் விட்டுச் சமூகநிலையில் உறுதிப்பட்டு இருந்தன.  இரத்த உறவு நிலையில் அமைந்த இனக்குழுமுறை வாழ்நிலையை விட, குடிப்  பிறப்பமைந்த பரம்பரைக் குலமுறை வாழ்நிலை போற்றுதலுக்கு உட்பட்டது.

இந்தக் குலமுறை வழியில் அமைந்த உழவு, வாணிபம், அரசுநிலையில் தோன்றியவர் நற்குடிப் பிறந்தோர் ஆவர்.  இந்த நற்குடியில் பிறந்த ஒருவர் தமக்குத் தாமே எடுக்கும் சுயமுடிவுகளுடன், அவற்றைத் திருத்திக் கொள்ளும் மருத்துவராகவும் தனிப்பட்ட நிலையில் விளங்கினார் (பழமொழி.149). இனக்குழு சார்ந்தவர்(சிற்றில் பிறந்தோர், கீழோர், அடிமையர்) முடிவுகளை விட அரசவை, சான்றோர் கூட்டம், கற்றவர்குழு, மற்றும் மருத்துவர், கணியர், ஆசிரியர் வகுக்கும் முடிவுகள் சமூகவாழ்வுத் துறைகளில் ஆட்சி பெற்றன.

தத்துவநிலை

அன்றைய தமிழகத்தில் இலக்கணம், தத்துவம், தர்க்கம், சமயம், முக்தி சார்ந்த நூல்கள் வழக்கில் திகழ்ந்தன (சிறுபஞ்ச.86). இந்தப் பகுப்பானது சகாப்த முக்கியமானது. (இந்தத் துறைகளில் அன்று பயிலப்பட்ட நூல்கள் அனைத்தும் இன்று கிட்டாதது தமிழரின் தவக்குறையே). அப்போது தத்துவத் துறையில் அறுவகை நெறிகள் இங்கு வழக்கில் இருந்தன (ஏலாதி.75). அவை உலகாயதம், சாங்கியம், பௌத்தம், சமணம், நியாய-வைசேடிகம், மீமாம்சை என்பன ஆகும் (மணிமேகலை.27:289).

நாலடியார் உலகநூல் என்றும், அறிவு நூல் என்றும் பகுக்கும் பகுப்பில், உலகநூல் தொகுப்பில் உலகுக்குரிய நூல் களையும், அறிவு நூல் தொகுப்பில் வீடுபேற்றிற் குரிய நூல்களையும் உட்படுத்திக் காட்டுவது சிறப்பமைந்தது (பாடல்.140). உலகுக்குரிய நூல் களாக இலக்கணம், தத்துவம், தர்க்கம் (மற்றும் அறம், நீதி, ஒழுக்கம், மரபு, அழகியல், இனக்குழு சார்ந்த பாலை, முல்லை, நெய்தல், குறிஞ்சி, உழைக்கும் மருதநில நாட்டார் வழக்கியல்) ஆகியன வற்றைக் கொள்ளலாம். இவைகளில் உலகாயதப் பொலிவு கொண்ட நூல்கள் வேர்கொண்டு நிலவின. வீடுபேற்றிற்குரிய நூல்களாகச் சமயம் மற்றும் துறவறவழியான முக்திநூல்களைக் கொள்ளலாம்.

இந்த நிலைமையில் திருவள்ளுவர் உலகியற்றி யான் என்றும், புறநானூறும், நற்றிணையும் உலகு படைத்தோன் எனவும் குறிப்பிட்டது சிறப்பாகக் கருதத்தக்கது (1062, 194, 240). உலகின் படைப்புக் கடவுள் பற்றி அப்போது தமிழகத்தில் வேதத்தை அனுசரித்த சைவரும், வைணவரும் (பரிபாடல், காரைக்கால் அம்மையார், முதலாழ்வார்கள்) மற்றும் யவனரும் (யூதர், பாரசீகர், கிரேக்க-ரோமர், எகிப்தியர், அரபு-ஹனீப்கள். அந்தியோக் நகரத்துச் சிரியர்) உரைத்து வந்தனர். ஏலாதியும், மணி மேகலையும் குறிப்பிடும் ஆறுவகைத் தத்துவங்கள் படைப்புக் கடவுளைப் பற்றிக் குறிப்பிடவில்லை.  மீமாம்சை வேதங்களைச் சிரமேற் கொண்டு, வேதச்சடங்குகளை மட்டுமே உச்சி மேற்கொண்டது கடவுளை அனுசரிக்கவில்லை. சாங்கியம், பௌத்தம், சமணம் ஆகியன பற்றற்றானையே உயர்வாக மதித்தன, உலகாயதம் பூதப்பொருள்களையே முதன்மையாகப் போற்றியது. அவை அனைத்தும் உலகுக் குரிய உலகியல் அணுகுமுறையின்பாற்பட்டவை. 

வேதத்தை முதன்மையாகக் கொண்ட சைவ, வைணவங்கள் முறையே சிவனையும், திருமாலையும் படைப்புக் கடவுளராக மேம்படுத்திப் போற்றுவது அப்போது தொடங்கி  இருந்தது. படைப்புக் கடவுள் தொல்காப்பியத்தில் இல்லை. புறநானூற்றிலும் பதிற்றுப்பத்திலும் பேரரசுத் தலைவன் அந்த நிலையில் வைத்துப் பேசப்பட்டான். இனக்குழுக் கடவுளர் படைப்புக் கடவுளாக மேம்படுத்தப்படவில்லை.  படைப்புக் கடவுளைப் பரிபாடல் புலவர் களும், தொடக்க காலச் சைவ, வைணவ பக்தியாளர் களும் விவரித்துப்பாடினர். அவர்களது பாடல்களில் படைப்புக் கடவுளானது உலகுக்கும், பொருள் களுக்கும், இவற்றின் பண்புகளுக்கும் மற்றும் உடலுக்கும், உணர்விற்கும் வேறானதாக, அதீத மேலானதாக, அப்பாலானதாக விவரிக்கப்படுவது கவனிக்கத்தக்கது.

அப்பாலான கடவுள்   உலகையும், பொருள்களையும், பண்புகளையும், உடலையும், உயிரையும், உணர்வையும் படைத்த பின்பும் தனக்குத் தானாகவும், மாறாமலும், நித்தியமாகவும் இருக்கிறது. இதில், கடவுளுக்கு உயிர்கள் அடிமைத் திறம் பொலிய நிலவின என்பது சிறப்பானதாக இருந்தது. அதோடு தன்னால் படைக்கப்பட்ட பொருள்களின் உள்ளே குடிகொண்டு பண்பாகவும். உணர்வாகவும் உள்ளது. மேலும், அது பிறவாதது. உருவம் உடையது என உணர்த்திக் காரைக்கால் அம்மையாரும், முதலாழ்வார்களும் ஆழ்ந்த பக்தியுடன் பாடினர். அநேகமாக, இந்தியாவிலேயே சிவனும், திருமாலும் முதன்முதலாக படைப்புக் கடவுளாக விவரிக்கப்படுவது இவர்களாலேயே  ஆக இருக்கலாம்.

தமிழகத்தில் யூத அரசனான முதலாம் அக்ரிப்பாவின் காசுகள் கண்டு  எடுக்கப்பட்டுள்ளன. இவருடைய மகளான பெர்நிஸ் என்பவரை மார்கஸ் என்பவர் மணந்தார். இந்த மார்கஸின் தந்தை அலெக்சாண்டர். இவரது சகோதரர் பிலோ என்ற யூதஞானி ஆவார். (இவர்கள் மகா அலெக்சாண்டரின் பேரன்மார் ஆவர்). இந்த யூதஞானி இயேசு கிறித்துவின் சமகால மூத்தவர். இவர் தமது வாழ்நாளில் மோசஸ்ஸின் இறையியல் நூல்களுக்குத் தத்துவயியல் விளக்கங்களுடன் விரிவுரை செய்தார். யூத அரசனான முதலாம் அக்ரிப்பாவானவர்,  இயேசுவின் சீடரான புனித பேதுருவைச் சிறையில் அடைத்து, உயிரை நீக்கியவர் ஆவார்.  புனித பேதுருவின் காலத் தொடக்க நிலைக் கிறித்தவயியலில் தனக்கான சுயமான தத்துவ விளக்கங்கள் எவையும் அதனுள் விளக்கம் கொண்டு இருக்கவில்லை.

ஸ்தோயிக் தத்துவக் கூறுகளே விளக்கம் கொண்டு இருந்தன. தமிழ்நாட்டில் கான்ஸ்டான்டைன் வெளியிட்ட சிலுவைக்காசுகள் கிடைக்கின்றன. இருந்தாலும், இந்த ரோமப் பேரரசர் இறுதிவரை கிறித்தவத்திற்கு மாற்றம் அடையாது, யூதராகவே  இருந்தார். இவர் காலத்தில்தான் நிசேயே நகரத்து கிரிகோரியால் (கி.பி.331-394) கிறித்தவ இயலில் புதிய பிளாட்டேனியத் தத்துவ விளக்கம் மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தத்துவ விளக்கத்தின் ஆசிரியர் அலெக்சாண்டிரிய நகரத்துப் பிளாட்டினஸ் (கி.பி.205-270) ஆவார். இவர் கிறித்தவர் அல்லர். கி.பி.47-இல் ரோமானியர் அலெக்சாண்டிரியாவைக்  கைப்பற்றியபின் போகப் போக, கிரேக்க-யவனர் மற்றும் எகிப்தியர் தத்துவ யியல் அபாயகரமானதாக மதிப்பிடப்பட்டது. கி.பி.390-இல் தலைமை அருட்தந்தை தேவஃபில் அலெக்சாண்டிரிய  நூலகத்திற்கு எரி ஊட்டினார். (கி.பி.529-இல் ஜஸ்டின் எல்லாக் கல்விநிலையங்களையும் மூடிவிட்டார்.) என்றாலும் பிளாட்டினஸ் வகுத்த தத்துவ விளக்கமானது கிரிகோரியால் கிறித்துவ இயலில் எடுத்துரைக்கப்பட்டுக்  கான்ஸ்டான்டைன் கூட்டிய மகாநாட்டினில் (கி.பி.381) அதனாசியஸ் மற்றும் இசுபியஸ் அனைய அன்றையக் கிறித்தவ ஞானிகளால் ஏகோபித்து மனமுவந்து ஏற்கப்பட்டது.

இதன் ஒளியில் கிறித்துவின் வழியான மீட்சித் தன்மைக்கும், திரியேகத் தன்மைக்கும் அவர் இலக்கணம் வகுத்தார். பிளாட்டினஸினுடைய தத்துவ இயல் அப்போதைய கிரேக்க-யவன உலகில் பொது விளக்கமாக ஏற்கப்பட்டு இருந்தது. அது கிறித்தவ ஞானியான கிரிகோரியையும் தாக்கம் கொண்டு இருந்தது. (இருந்தாலும் கிரிகோரியின் கிறித்தவ விளக்கம் அப்போது தமிழகத்தில் நிலவவில்லை.) யூதஞானியான பிலோவும், இவருக்குப் பின் வந்த பிளாட்டினஸ§ம் உரைத்த விளக்கங்களானவை, அப்பாலான படைக்கும் கடவுள் தத்துவத்தை மையப் படுத்தியவை ஆகும். இயற்கைக்கும் அறிவிற்கும், உடலுக்கும் உணர்விற்கும், பொருளிற்கும் பண்பிற்கும், புறத்திற்கும் அகத்திற்கும் வேறாக அப்பால் இருக்கும் கடவுளை இருவரும் உபதேசித்தனர்.  இந்தக் கடவுளானது பிறப்பு அற்றது. என்றும் தானாகவே இருப்பது. அதனை, படைக்கப்பட்ட பொருள் களாலும், உயிர்களாலும் அறியவும், உணரவும் முடியாது. படைக்கப்பட்ட இவைகளுக்கு உள்ளும் இந்தப் படைப்புக் கடவுள் குடிகொள்ளாது. அதீத மேலானதான தனிப்பட்ட ஒன்று.     

இந்தப் பின்னணியில் திருவள்ளுவர் சுட்டும் உலகியற்றியான் என்ற கருத்தமைப்பானது நோக்கு வதற்கு உரியது. இந்தப் படைப்புக் கடவுள் பஞ்ச பூதங்களால், அணுக்களால் ஆனவன் அல்லன். ஆனால் அவன் பஞ்சபூதங்களை, அணுக்களை உண்டாக்கும் திறனுடையவன், ஆனால் அவன்  உண்டானவன் அல்லன். பிறப்பை உண்டாக்குவான், பிறவாமல் செய்வான். ஆனால் அவன் பிறவாதவன், பிறவா யாக்கைப் பெரியோன் (சிலப்பதிகாரம் 8:169). அவனால் படைக்கப்பட்ட பொருள்கள் நிலையற்றன. ஆனால் அவன் நிலையானவன்.

அதே சமயம் தமிழகச் சைவ, வைணவ தொடக்க கால பக்தியாளர் பக்குவ உணர்வின்படி அவனால் படைக்கப்பட்ட பொருள்களின் உள்ளும் விளங்குபவன் ஆவான். அதே சமயம் உருவமும் உடையவன். அப்போது தமிழகத்திற்கு வந்து பலமொழி பேசி வாழ்ந்த செமித்திய யவனரது (யூதர், பாரசீகர், கிரேக்க-ரோமர், எகிப்தியர், அரபு-ஹனீப்கள், அந்தியோக் நகரத்து சிரியர்) உச்சநிலை உணர்வின்படி படைக்கப் பட்ட பொருள்களுக்குள் அந்தக் கடவுள் அடங்கி நிலவாதது. உருவமும் அற்றது. என்றாலும் அது எங்குமானது.

பொருள்கள் அழிவன. ஆனால், அந்தக் கடவுள் அழியாதது. இந்த வேதமரபு மற்றும் செமித்திய மரபு ஆகிய இரண்டு வகைக் கருத்தியல் களையும் திருவள்ளுவரது உலகியற்றியான் கருத் தமைப்பு கொண்டு இலங்கியது. அவரது காலந் தொட்டு அப்பாலான கடவுளை முன்னிட்டுக் கொண்டு, முதன்மைப்படுத்தியபடி, புறநிலைப் பொருள்களை அணுகிஉணரும் அப்பாலையியல் அணுகுமுறையானது தமிழகத்தில் உருப் பெறத் தொடங்கியது. உழவின் உபரிஉரிமையும், கடல் மற்றும் தரைவழிகளால் பரந்துபட்ட நடுநிலை வாணிப இலாபமும், பேரரசின் மேல்நிலை அதிகாரமும் இதற்குப் பௌதிக அடிப்படைகளாக நிலவின. வேந்தன் மற்றும் அரசு தோன்றுவதற்குரிய தத்துவமாக, இந்த அப்பாலைப் படைப்புக் கடவுள் தத்துவம் விளங்கியது.

பொருள் பற்றிய கோட்பாடுகள்

காலத்திற்கும் இடத்திற்கும் அப்பால், உலகுக்கும்  பொருளுக்கும் அப்பால், பொருளுக்கும் உணர்ச்சி/அறிவுக்கும் அப்பால், சொல்லுக்கும் - அர்த்தத்திற்கும் அப்பால், புறத்திற்கும் - அகத்திற்கும் அப்பால் எப்போதும் பிறவாத, நித்தியமான பரம் ‘ஒன்று’, இதிலிருந்து அறிவு (நூஸ்), இதிலிருந்து உலகு, ஆன்மாக்கள் தோன்றி இங்கு நிலவி வாழ்ந்து, மீண்டும் ‘ஒன்று’ நோக்கித் திரும்புகின்றன. பிறந்து, உண்டாகி வந்த ஆன்மா மற்றும் படைக்கப்பட்ட உலகு எதிலும் அந்த ஆதி காரணமான ‘ஒன்று’ பிரவேசித்துக் கலந்து விரவிக் குடி கொண்டிருக்கவில்லை. அந்த ஒன்று என்றும் அப்பாலானதே.  ஆன்மாக்களுக்கு உலகுப் பொருள்கள் தீமையானவை. அநித்திய நிலைமைத் தன்மையன.  அதே சமயம் ஆன்மாக்கள் சுயதீர்மானம், சுயசுதந்தரம் உடையவை.  “ஒன்று” நோக்கி மீண்டாலும் ஆன்மாக்கள் சுயம் அழிவதில்லை (ணிஸீஸீமீணீபீs) இது யவனரது அப்பாலைத் தத்துவம். இஃது அவர்களது நாட்டினில் இன்றும் உண்டு,

அகம் / காதற்காமம் பற்றிய கருத்தியல்

இந்த அகம் / காதற்காமம் என்பதானது பிள்ளைப் பேறு அல்லது சந்ததி தொடர்ச்சியின் முதல்கட்டம் ஆகும். அப்போது யவனரில் ஒரு பிரிவினரான  கிறித்தவரிடையே எதிர்மறைப் போக்குகள் இருந்தன.  அவற்றில் அப்பாலைத் தத்துவம் பொலிந்தவை முன்னிலை விளக்கம் பெற்று வந்தன.  புனித பவுலுடைய கருத்தியல் பகுதிகளில், செனெகா, எபிக்தேது ஆகியோருடைய மெய்யியல் கூறுகள் இடம் பெற்றிருந்தன.  புனித யோவானின் நான்காவது சுவிசேஷம் மத்திய பிளாட்டோனிய அப்பாலைத் தத்துவத்துடன் இணைப்புண்டு இருந்தது.  பிறகு வந்த கிளிமெந்து, ஓரிகென், புனித அகுஸ்தின் மற்றும் கப்பதோசியன் அருட்தந்தையர் ஆகியோருடைய  செல்வாக்கிற்குட்பட்டுச் சிரியன் கிறித்தவர் மெய்யியலில் விளக்கம் கொண்டிருந்ததாக ஆய்வாளர் கண்டறிந்துள்ளனர். ஞானியர் - நிஸீஷீstவீநீ - மரபு புதிய பிளாட்டோனியத்தின் ஆழ்நிலை அகவயக் கூறுகளைத் தன்னகத்தே கொண்டிருந்தது. 

அப்பாலைத் தத்துவத்தில் திருமண விலக்கு, மகளிர் பாலான வெறுப்பு, கூடவே ஆண்-பெண் காதற்காம உடலுறவு, சந்ததித் தொடர்ச்சி மறுப்பு என்ற இந்தக் கருத்தியல்கள் ஒளி விட்டன. இவை, மனிதவாழ்வானது நிலையாமை ஆனது, படைக்கப் பட்ட உலகு, உடல் மற்றும் புறப்பொருள் உறவு என்பவை துன்பம் தருவன, பாபமானவை, சிறைப் படுத்துவன, இதிலிருந்து விடுபட்டு உணர்வுக்கும், பொருளுக்கும், அகத்திற்கும், புறத்திற்கும் அப்பாலான தெய்வீகத்துடன் இணைய வேண்டும். அதுவே நிலையானது, தூய்மையானது, இன்பம் அளிப்பது என்பதான தத்துவத்தின் வலுவான பகுதிகள் ஆகும்.  இவை பிற்காலப் பிளாட்டோனிய சாயல் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

பிறப்பது முதல் இறப்பது வரையான வாழ்வை மட்டும் எடுத்துக் கொண்டு, அடுத்த சந்ததியைப் பிறப்பிக்காமல், பெண்ணோடு இணையாமல், இந்த உயிரானது (ஆன்மா) கடவுளிடம் இருந்து வந்தது, கடவுள் பிறவாதவர், பிறப்பை உண்டாக்கிச் சந்ததியைத் தோற்றுவிக்காதவர், அந்தக் கடவுள் போலவே பிறப்பிக்காமல் ஒழுகினால், அந்தக் கடவுளை அடையலாம். அதுவே உயிரின் உண்மையான, நித்தியமான நிலை எனக் கருதிக்கொண்டு துறவைப் பல இறையியல் ஞானிகள் போற்றினர். படைக்கப் பட்ட இந்த உலகோடும், உடலோடும் இருக்கும் இந்தச் சம்சாரநிலை (அகத்திணை) பாபம், தீமை என்ற விளக்கத்தை இதன் பொருட்டு மேற்கொண்டனர்.

இக்கொள்கைகள் கி.மு. 300 - 200 களில் சாக்கடலின் வடக்குப் பகுதியில் கும்ரான் ஓடை ஓரமாக இருக்கும் குன்றுக்குகைகளில் வாழ்ந்த எஸ்ஸின் துறவிக் குழுவினரிடம் விளக்கம் கொண்டிருந்தது.  மனிதப் பிறப்பு என்பதே கிடையாது என்று பிறப்புத் தொடர்ச்சி மற்றும் சந்ததி விருத்திகளிலிருந்து விலகி வாழ்ந்த அவர்கள் வேதாகமங்களைப் போற்றிக் காத்தவர் ஆவார் (ச.கி. அருள்சாமி 2000:8).  இந்த மாதிரியான துறவைப் பௌத்தத் தம்மபதமும், சமணத் தசவைகாலிக சூத்திரமும் அப்போது தம்முள் விளக்கப்படுத்தி இருந்தன. பழைய இனக்குழு வாழ்வு, கால்நடை மேய்ப்பு வாழ்வு, இருக்கும் போதே உழவு, வணிகம், அரசு தோன்றி காலூன்றும் போது பழைய சமூக நிலைமையினர் கடுந்துறவை உபதேசிப்பது அக்காலத்தின் பொதுத் தன்மையே. கும்ரான் மலைக்குகைத் துறவியர் வேதாகமக் கருத்தியல் வழியே கிறித்தவர் என்ற முறையில் சிரிய-நெஸ்தோரியர் நின்றனர். அகத்திணை என்ற இங்கிருந்த மக்களின் வாழ்வியலுக்கு மறுப்புக் கூறுவோராகவே அந்த யவனப் பிரிவினர் உரம் பெற்று நிலவினர்.

இவர் வழியில், பின்னாளில் புனிததாமஸ், தட்சசீல அரசகுடும்பத்தைச் சார்ந்த மிஸிதேயுஸ் என்ற அதிகாரியின் குலமகளிரிடம் திருமணமே பாபம், சிறை என்று உபதேசித்து அவர்களை இல்லற உறவுகளில் இருந்து விலக்கி வைப்பதில் வெற்றி கண்டார். இதுகண்ட அரசனான குண்டபோரஸ் அவரைத் தட்சசீலத்தில் வாளுக்கு இரையாக்கி விட்டார். பின்னாளில், அந்தியோக் நகரத்துச் சிரியன் கிறித்தவர் இவர் வழியினராகத் தம்மைப் போற்றிக் கொண்டனர். யூதஞானியான பிலோ, பெண் என்பவள் உண்டாவதற்கும், அழிவதற்கும் ஒதுக்கப் பட்டவள் எனக் கூறி, கணவனின் சிறப்பே மனைவிக்குப் போதுமான அணிகலன் என்று பெண்ணின் சுய இருப்பை மட்டுப்படுத்தினார்.  இப்படிப் பெண் தாழ்வாகக் கருதப்பட்ட (யூதர், அந்தியோக் நகரத்துச் சிரியர், கிரேக்க-ரோமர்) செமித்திய யவனச்சூழலில், கீழ்க்கணக்கு அறநூல் ஆசிரியர்கள் சம்சாரம், இல்லறத்தைப் போற்றியது சிறப்பாக உற்று நோக்குவதற்கு உரியது. திருவள்ளுவர் இன்பத்துப்பாலையும், இல்லறப் பெண்ணையும், மக்கட் பேற்றையும், சந்ததித் தொடர்ச்சியையும் மங்கலம் என உச்சத்தில் வைத்துப் போற்றினார். மேலும், தமிழக உலகாயத நெறியாளரும் அவர்களது நூல்களும் அவ்வாறே.

புறம், பொருள் பற்றிய கருத்தியல்

உலகப் பொருள்களும், உடலும் பஞ்சபூதங் களால் ஆனவை என்று புறநானூறு பேசுகிறது. பஞ்சபூதங்களில் என்ன இயல்புகள், குணங்கள் உண்டோ, அவையே உடலுள் உள்ள அகத்திலும் உள்ளன. புறமும், அகமும் ஒத்தே நிலவுகின்றன என்பதே புறநானூற்று முரிஞ்சியூர் முடிநாகராயர் காலத் தமிழகக் கருத்தியல் (புறம்.2). பிறகு, புறத் திற்கும், அகத்திற்கும்  வேறான, மேலான படைக்கும் கடவுள் (உலகியற்றியான்) தமிழகச் சிந்தனையில் வேர் கொண்டது. இங்குக் குடியேறிய  யவனரில் ஒருசாரரான யூதரும், பாரசீகரும் தமது மரபுக்குரிய படைக்கும் கடவுளை இங்கும் தொடர்ந்து வழி பட்டனர். யூதஞானியான பிலோ, பொறி-புலன் களால் உணரப்படும் உலகியல் பொருள்கள் படைக்கப் பட்டவை ஆகும். மனிதனின் உணர்வும், மனமும்   மிக உயர்ந்தவை, ஆனாலும், ஆன்மாவின் இந்தப் பகுதி மற்ற பொருள்களால் ஆக்கப்பட்டது அன்று. அதாவது, அகமானது புறப்பொருள்களால் ஆக்கப் பட்டது அன்று. இன்னும், ஒருபடி மேலே போய் அகம், புறம் இரண்டும் வேறுவேறு, முரண், பகை யானவை என்றார். கூடவே, அகமானது சுதந்தர மானதும் ஆகும். அதோடு பிற உயிர்களுக்கு இந்த ஆன்மாவானது இல்லை.

மனிதனுக்கே உண்டு. உடலுள்ளே ஆன்மாவானது இருப்பதை, உடலாகிய கல்லறையில் ஆன்மாவானது புதையுண்டு உள்ளது என விவரித்தார். உலகியலில் உள்ள படைக்கப்பட்ட பூதஉடலுள் ஆன்மா இருப்பதானது ஆன்மாவின் இயல்புக்கு மாறானதும் ஆகும். பஞ்சபூதப் பொருள் களும், உடலும், உயிருக்கு, உணர்விற்குப் பகை யானவை ஆகும். இவைகளின் உறவற்ற நிலையே உயிர்/உணர்வு/ஆன்மாவின் இயல்பான உண்மை நிலை ஆகும். அப்போது அது படைக்கும் கடவுளின் பக்கத்தில் நிலை கொள்ளுகிறது. இதுவே உயிரின் இலட்சிய நிலையான முக்தி இடம் ஆகும் என யூதஞானியான பிலோ  கூறினார்.  இவருக்கு முன்பு இருந்த பாரசீகஞானியான ஜொராஷ்டரருடைய கருத்தியலும் இதுவே. 

பின்பு வந்த பிளாட்டினஸின் கருத்தியலும் இதுவே. பஞ்சபூதப் பொருள்கள் கடவுளால் படைக்கப்பட்டவை என்றாலும், அவை அழிவன இல்லை என்று பிளாட்டோவும், அரிஸ்டாட்டிலும் சொல்லினர். பிளாட்டினஸ் ஒருபடி மேலே போய்க் கூடுதலாக, பஞ்சபூதப் பொருள் களின் உறவானது உயிருக்குப் பாபமானது, தீமை யானது, எதிரானது, முரணானது என்றார். 

பொருளையும் உணர்வையும் எதிரித் தன்மைகள் ஆக்கி விவரித்தார். அப்பாலான, உருவமற்ற கடவுள், உருவமுள்ள பஞ்சபூதப் பொருள்களை மற்றும் உயிரை, உணர்வை, ஆன்மாக்களைப் படைத்தார். உயிர்களின் உண்மையான இருப்பு கடவுளின் அருகாமை ஆகும், ஆன்மாவானது படைப்புக் கடவுளின் அடிமை அன்று. சுயசுதந்தரம் உடையது. படைக்கப்பட்ட பொருள்களுடன் இருப்பதா? கடவுளைச் சேர்வதா? எனத் தீர்மானிக்கும் இயல்பு உடையது. பஞ்சபூதப் பொருள்களுடன் உடலுள் இருப்பது பாபமானது, பகையானது, தீமையானது என உணர்ந்து, இதிலிருந்து மீட்சி பெற்று, கடவுளை அடைதலே உண்மையான வாழ்வு. பொருளோடு, உடலோடு இருப்பதானது பொய்யானது என்றார். இதன் பொருட்டு, புறத்தில் இருந்து அகமானது தனியானது, வேறானது, சுதந்தரமானது என உறுதியாகக் கூறினார். அப்போது அலெக்சாண்டிரியா மற்றும் அதன் அறிவு ஆளுகை சூழ்ந்த இடங்களில் நிலவிய உலகாயதரையும், பலதெய்வக்காரரையும் எதிர்கொண்டே இப்படிக் கருத்தியலை வகுத்தார்.

அப்போதைய தமிழகத்தில் சாங்கியநெறியினர் மூலப்பிரகிருதி என்ற பொருண்மைநிலையில் இருந்து காரியப்பட்டு வந்த பஞ்சபூதப் பொருள்கள் உண்மையானவை. என்றாலும் காரியப் பொருள்கள் ஆதலால் நிலையாமை ஆனவை என்று கூறினர். அணுவியல்காரர்களான சமணரும், நியாய-வைசேடிகரும் கூடப் பொருள்கள் நிலையற்றன, ஏனெனில், அவை உறுப்புகள், பக்கங்கள் கொண்டு இருக்கின்றன. அதாவது, மூலஅணு என்பது உறுப்புகள், பக்கங்கள் அற்ற ஒற்றையானது. இரண்டும், அதற்கு மேற்பட்ட அணுக்கள் கூடும்போது உறுப்புகள், பக்கங்கள் உண்டாகின்றன. அவை பிரிந்து நிலை அழிகின்றன. ஆகவே உறுப்பு, பக்கங்கள் உள்ள பொருள்கள் அழிகின்றன. ஆதலால் பொருளைத் துறந்துவிட்டு, நீங்கிப் பிறவாநிலை காண வேண்டும் என்றனர். பொருள்களின் அடிப்படையான பிரகிருதியும், அணுக்களும் நித்தியமானவை, அழியாதவை என்றனர். கடவுளியலாளர்கள் அப்பாலான கடவுளே நித்தியமானது, அழியாதது என்றனர்.

இதுவே அன்றைய சிறப்பு முரண்பாடு. இது  இவர்களுக்கு உள்ளே ஊடாட்டம் நிகழ்த்தியபடி இருந்தது. இதன் பொருட்டு வாதப் பிரதிவாதங்கள் அன்று கற்றோர் அவைகளில் நிகழ்ந்தன (மலைபடுகடாம்.112). இப்படி வாதம் செய்தவர் புகழ் பெற்றனர் (சிறுபஞ்சமூலம்.56). (அப்படிச் செய்யப்பட்ட வாதங்கள் இன்று கிடைக்கப் பெறாதது தமிழரின் தவக்குறையே. என்றாலும் இலக்கியத் துறையில் கீழ்க்கணக்குநூல்களும், சிலம்பும், மேகலையும் கிடைத்து இருப்பது தவப்பயனே). பொருட்களின் நிலையாமை, உயிரின் பிறவாநிலை என்ற கருத்தியல்களையே திருவள்ளுவரும் மற்றும் அவர் காலக் கீழ்க்கணக்கு நூலாசிரியர்களும் உரைத்தனர். தனது பங்கிற்குத் திருவள்ளுவர் பற்றற்றானை மற்றும் பிறவாநிலையைப் பெரிதாகப் போற்றினார். என்றாலும் உயிர் என்ற பறவைக்கு நிலையான இடம் இல்லை போலும் என வினவினார் (நிலையாமை:10).

ஆனாலும் திருவள்ளுவர் உலகியற்றியான் ஆன அப்பாலைக் கடவுள் கருத்தி யலைப் போற்றவில்லை. படைத்தோன் என்பவனைப் பக்குடுக்கை நன்கணியார், பண்பிலாளன் எனக் கடிந்து உரைத்தார் (புறம்.194). உலகியற்றியானனான படைப்புக் கடவுளை யவனர் மையப்படுத்திப் பேசினர். படைப்புக் கடவுளின் முன்னர் அகமும், புறமும் எதிர் எதிரானவை,

பன்மை நிலைமை

இந்த உலகம் பல உயிர்களை, பலபொருள் களைக் கொண்டு நிலவுகிறது. இந்தப் பன்மைத் தன்மையானது மூலப்பிரகிருதி என்ற பொருண்மை நிலையில் இருந்து வந்தது எனச் சாங்கிய நெறியினர் கூறினர். மூலப்பிரகிருதி நித்தியமானது, பருப் பொருள் தன்மையது. உணர்வு அற்றது. உணர்வற்ற மூலப்பிரகிருதியில் இருந்து பஞ்சபூதப் பொருள்கள் உண்டாகி, அவைகளின் சேர்க்கையினால் இந்தப் பலவகையான சடப் பொருள்கள் உண்டாகி உள்ளன. இது சாங்கியர் கருத்தியல்.

பௌத்தரும், சமணரும், நியாய-வைசேடிகரும் அணுக்களின் சேர்க்கை என்றனர். பிரிக்கமுடியாதது அணு. அதில் பஞ்ச பூதங்களின் இயல்புகள் உண்டு. இந்த அணுக்கள் ஒன்றுடன் ஒன்று கூடும் போது இந்தப் பல வகையான சடப்பொருள்கள் உண்டாகி உள்ளன. உணர்வுப் பொருளான உயிர்/ஆன்மா தனியானது என்பன இவர்களது கருத்தியல். உருவமற்ற கடவுள் உருவம் உடைய சடப் பொருள்களைத் தனியாகவும், உயிர்ப் பொருள்களைத் தன்சாயலில் தனியாகவும் படைத்தார் என்பது யவனர் கருத்தியல். மற்றபடி, இவர்கள் அனைவரும் சடப்பொருளில் இருந்து சடப்பொருள் மட்டுமே உண்டாகும். உணர்வுப் பொருளில் இருந்து உணர்வுப் பொருள் மட்டுமே உண்டாகும். சடப்பொருளும், உணர்வுப் பொருளும் வேறு, வேறு என்பதில் ஒன்றுபட்டுத்  திகழ்ந்தனர். 

உலகாயதர் பூதப்பொருள்களின் (மண், நீர், தீ, காற்று) சேர்க்கையினால் சடப்பொருள்கள் இவற்றில் இருந்து உணர்வுப் பொருள்கள் உண்டாகும் என்றனர். சேர்க்கையின் அளவு காரணமாகப் பலவிதமான பருப்பொருள்கள் உண்டாகி உள்ளன. கருப்பையில் இருந்த இரண்டு கருக்கள் பூதப்பொருளால் ஆனவை.  உணர்வும், உயிரும் உடையவை. அவை வெளிவந்த பின் வேறு, வேறு பண்புகள் உடையனவாக வளர்ந்தன. ஒரே தன்மையனவாக இருக்கவில்லை (பழ.நா.231). யூதப்பொருள்கள் நித்தியமானவை. இவற்றின் சேர்க் கையில் பலவிதமான பருப்பொருள்களும் உண்டாகும் என்பது உலகாயத நெறியாளர் கருத்தியல்.

யவனர் (யூதர், பாரசீகர், அரபு-ஹனீப்கள்) ஒன்றுமற்ற ஒருநிலையில் இருந்து இந்த உலகப் பொருள்கள் உண்டாக்கப்பட்டு உள்ளன என்றனர். அத்தோடு மட்டும் அல்லாது புறப்பொருள்களும், அகவய உணர்வுகளும் எதிரிடையானவை. உலகியல் பொருள்கள் தீமையானவை, படைப்புக் கடவுளை அடைவதற்குப் பகையானவை என்றனர். இப்படியாக, புறமும், அகமும் வேறுவேறு, பகை, தீமை, முரண் என்ற கருத்தியல் வரலாற்றிற்குத் தமிழகத்தில் கட்டியம் கூறி வாழ்ந்தனர்.

பொருளின் சுயசெயல்

பூதப்பொருள்கள் தாமே செயல்படுவன என உலகாயத நெறியினர் மற்றும் ஆசீவக, சாங்கிய, சமண, நியாய-வைசேடிக நெறியாளர் கூறினர். வான்வெளியில் கோள்கள் மற்றும் விண்மீன்கள்  சுயமாகச் செயல்படுவதாக உறையூர் முதுகண்ணன் சாத்தனாரும், திருவள்ளுவரும் கூறினர் (புறம்.30. குறள்:1116). மேலும், திருவள்ளுவர் மழை பெய்வது நீரின் சுயசெயல் என்ற கருத்துடையவராக இருந்தார் (குறள்.17). மற்றபடி எல்லா கீழ்க்கணக்கு நூலாசிரியரும் குடும்பப் பொருளானது (சொத்தானது) தானே வரும், போகும் என்று சுட்டிக்காட்டினர். உலகியற்றியான் ஆன படைப்புக் கடவுளை ஏற்ற வைணவரும், சைவரும், யவனரில் யூதரும், பாரசீகரும், அரபு-ஹனீப்களும் கடவுளே பொருள்களைச் செயல்படச் செய்வதாக உரைத்தனர். பூதப் பொருள்கள் அறிவுணர்வு அற்றவை, சடப்பொருள்கள். ஆகவே அவைகளால் தாமே சுயமாகச் செயல்பட இயலாது என்று யவனக்  கடவுளியலாளர்கள் பேசியபடி தமிழகத்தில் உலவினர்.

அப்போது யூதர், கிரேக்க - ரோமானியர், எகிப்தியர், பாரசீகர், அந்தியோக் நகரத் திருச்சபைத் தலைமை ஏற்றிருந்த நெஸ்தோரியச் சிரியன் கிறித்தவர், அரபு மக்கள் ஆகியோர் தத்தமது வழியில் தமக்குரிய வடிவில் அப்பாலைத் தத்துவத்தை மேற் கொண்டிருந்தனர்.  இதுவே இங்குத் தமிழகக் களத்தில் சிறப்பாக நோக்கத்தக்கது. தத்துவக் கருப்பொருள்களில் முன்னிலைப் பொருளாகக் கைக்கொள்ளுதற் குரியது.

தமிழர்களுடைய பூதவாதம், ஐந்திணைப் பலதெய்வ வணக்கம், பௌத்த-சமண வழியான முக்திநிலை மற்றும் நான்மறையாளரது வேள்வி சார்ந்த அதிதெய்வங்களின் வழிபாட்டு நெறிகளுடன் யவனரது படைப்புக் கடவுள் கருத்தியல்கள் எதிர்நிலை ஊடாட்டம்  கொண்டன.  இதனால் கீழ்க் கணக்கு அறநூல்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியன எழுந்தன. இந்த ஊடாட்டமானது, உருவம் இல்லாத கடவுள் உருவம் உள்ள பொருள்களைப் படைக்கிறது, உருவம் உள்ள கடவுள் உருவம் உள்ள பொருள்களைப் படைக்கிறது, வினை நீங்கினால் உலகத்து உச்சியில் இன்பமுடன் இருக்கலாம், பூதப் பொருள்களால் உலகம் ஆக்கப்பட்டு உள்ளது கருத்தியல்களில் குவிந்து பொலிவு கொண்டது (மணிமேகலை. 21:92-102).

அதுகாலம் திருவள்ளுவர் ஆண்டு 450 ஆகும். யவனரும், சைவ-வைணவரும், சமணரும், உலகாயதரும் முறையே இந்தக் கருத்தியல்களைக் கொண்டு திகழ்ந்தனர். இதனால், புறமும், அகமும் ஒருங்கிணைந்தவை என்ற பூர்வீகக் கருத்தியல் (புறம்.2) குலைந்து புறம், அகம் எதிரிடையானவை என்பதான கருத்தியல் வரலாறு பிறந்தது. (அகம்) உணர்வானது முந்தியது, (புறம்) பொருளானது பிந்தியது என்ற தத்துவயியல் வரலாற்றில் இது ஒளி மிகுந்த பக்கங்களை வரைவது விரிந்து பெருகியது.

கௌடபாதகாரிகை, பிரகதாரண்ய உபநிடதம், பிரம்மசூத்திரம் கொண்டிலங்கும் வேதமரபின் அகவய அத்வைதம் கி.பி. 700 - 800 இல் விந்தியம் கடந்து வந்து இங்கு வேர் விட்டது.  இதற்கும் ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்னமேயே யவனர் காசுகள், பண்டங்கள், தேறல், மகளிர், வணிகர், படையாளர், தொழில் வினைஞர், போதகர் மூலமாக யவன-செமித்திய மரபின் அப்பாலைத் தத்துவம் அரபிக் கடல் கடந்து வந்து தமிழகத்தில் கால் ஊன்றிப் பரவி ஊடாட்டம் கொண்டது என்பதே இங்குக் கவனத்திற்கு உரியது.

ஆதார நூல்கள்

திருக்குறள் மற்றும் பிற கீழ்க்கணக்கு நூல்கள், சரகசம்ஹிதை,  ஈஸ்வர கிருஷ்ணரின் சாங்கிய காரிகை, உமாஸ்வாதியின் தத்துவார்த்த சூத்திரம், காரைக்கால் அம்மையார் மற்றும் முதலாழ்வார்கள் பக்திப் பாடல்கள், ஆல்பர்ட் மனுவேல் என்பவரின் இறையியல் அணிந்துரை (தமிழ்), கௌதமரின் நியாய சூத்திரம், தம்மபதம், எம்.ஆர்.அப்பாதுரை, பிரசுரகர்த்தார், புரசை பாக்கம், சென்னை - 1952, தசவைகாலிக சூத்திரம், ஆர்ய சாயர்ணம்பவர் (கி.பி.429), கஸ்தூரி சந்த் (மொழி), கானடரின் வைசேடிக சூத்திரம்-பிரசஸ்த்தபாதர் உரை, தர்மகீர்த்தி-அகளங்கர் தர்க்கங்கள்-நாகின், ஜே.ஷா. எழுதிய விளக்கங்கள், யூதஞானி மோஸரின் தோரா (ஐந்து சுருள்கள்) அலெக்சாண்டிரிய பிலோவின் அனைத்து நூல்கள் தொகுதி, புனிததாமஸ்ஸின் செயல்கள் மற்றும் நற்செய்தி, பிளாட்டினஸ்ஸின் என்யிட்ஸ், மகாபாரசீகர் ஜொராஸ்டர் பற்றிய நூல்,  எஸ்.எம், ஜியோஃபிரெ கிரேஸ்டோன் என்பவரது சாக்கடல் சுருள்கள் மற்றும் கிறிஸ்துவின் சுயதன்மை, ஜே.என்.கெல்லி என்பவரது தொடக்கநிலைக் கிறித்தவக் கோட்பாடுகள், கிரிஸ்டோபர் ஸ்டெட் என்பவரின் பழங்காலக் கிறித்துவத்தில் மெய்யியல், டாக்டர் ஆர். நாகசாமியின் ரோமன்-கரூர் (ஆங்கிலம்), விவிலியம் வளர்ந்த வரலாறு, ச.இ. அருள்சாமி, நல்லாயன் கல்லூரி, மயிலேறிபாளையம், கோயம் புத்தூர் - 2,000.

Pin It