சூரியத் துணுக்குகள் 

மோத மோத 

இசையெழுப்பி 

நடக்கும் நதி. 

நதியின் இசை 

நாணலுக்குத் தாலாட்டு. 

தாலாட்டில் கலையாது 

தவமிருக்கும் நந்தவனம். 

நந்தவனங்கள் வழியே 

உனை அடையும் பாதை. 

பாதை எங்கும் பார்த்தேன் 

பூவிதழ்களில் கண்ணீர்த்துளி. 

நீ பாராமல் நடந்தாயாம். 

நடந்து சென்ற உன் 

தோள்களின் மேல் 

இரு சிறகுகள் இருந்ததாய் 

ஒரு தேவதைக் கற்பனை. 

கற்பனையின் கதவுகள் 

கண்கள் வழி திறக்கின்றன; 

பேனாவின் ஊற்றுக்கண்கள் வழி. 

எழுதியபின் பார்த்தேன். 

கற்பனையின் பிம்பங்கள் 

காகிதக் கண்ணாடியில். 

நான் மனம் பார்க்கும் 

கண்ணாடி நீதான். 

என் மனதைக் காட்ட 

என்னையே பூசாதே 

பாதரசமாய்.

--

மலையின் அழைப்பு 

 

அதிகாலை வெயிலில்

இளமஞ்சள் பூசிநிற்கும் மலை 

அழகாய் எனை மயக்கி 

அழைக்கும். 

எழிலான பாதைகளை 

ஒயிலான வளைவுகளை 

இருபுறமும் ஓடைகளை 

இளைப்பாற சோலைகளை 

எனை நோக்கி வீசி 

எப்போதும் அழைக்கும். 

அகல விரிந்த தோள்களில் 

முகில்கள் துஞ்சும் மடியினில் 

வெயிலில் ஜொலிக்கும் கணப்பினில் 

சாரல் கொஞ்சம் நாட்களில் 

அப்பாவை, அம்மாவை, 

சகோதரர், தோழர்களை 

நினைவூட்டி மயக்கி 

எனை அழைத்தவாறு இருக்கும் - மலை 

மாலை நெருங்கி 

இருள் கவியும் பொழுதுகளில் 

விழிகள் கனல் 

இருட்டில் உலவும் 

புலிபோல் தோற்றும். 

பகலெல்லாம் நீள நடந்தும் 

ஒவ்வொரு இரவிலும் 

தோற்றுப்போய் மீளும் 

என் பயணங்களை 

வெவ்வேறு விழிகளில் 

பார்த்தவாறே உள்ளது 

மலைப்புலி. 

மலைக்கும் உண்டு 

சில விழிகளும் 

ஒரே இரவும். 

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.