அண்மையில் ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் முதல்வர் விஜயைச் சந்தித்துப் பேசினர்.
இந்தச் சந்திப்பு குறித்து அந்த மாணவர்கள் சொல்லும்போது, கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவந்த 'நான் முதல்வன்' திட்டத்தினால் எந்தப் பயனும் இல்லை, அதனை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும், அதற்கு விஜய் உரிய நடவடிக்கை எடுக்க உறுதி சொன்னார் என்றும் கூறியிருக்கிறார்.
அதுபோல பிஎம் திட்டத்தைத் திமுக அரசு எதிர்த்ததால் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதனால் அத்திட்டத்தைப் பரிசீலனை செய்ய வேண்டும் (ஏற்றுக்கொள்ள மறைமுகமாக வலியுறுத்தல்) என்றும் சொன்னதற்கு, அதுகுறித்துக் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் உறுதியளித்தார் என்றார் அந்த மாணவர்?
இது குறித்து அரசு தரப்பில் இருந்து எந்த விளக்கமும் சொல்லப் படவில்லை.
முதல்வராக இருக்கும் விஜய் மோடியைப் போல செய்தியாளர்களிடம் பேசப்பயந்து ஓடுகிறார். எது குறித்தும் பேசுவது இல்லை. இரண்டாம், மூன்றாம் மட்டத்தில் இருப்பவர்களைப் பேசச்செய்வது முதல்வர் என்ற பொறுப்புக்கு அழகில்லை.
இது ஒருபுறம் இருக்க, சங்கரன்கோயில் அரசு மருத்துவமனையில் சம்பந்தம் இல்லாமல் தவெக கட்சியினர் மருத்துவ உடையில் ஆய்வு என்ற பெயரில் அத்துமீறி உள்ளனர். மதுரைப் பகுதி மருத்துவமனை ஒன்றிலும் இதுபோன்று அத்துமீறல் நடந்த தாக தொலைக்காட்சியில் செய்தி வருகிறது.
500 மீட்டருக்குள் இருக்கும் டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடுவதாக ஒரு நாடகம் நடந்ததை சமூக ஊடகம் அம்பலப்படுத்தியது. டாஸ்மாக் சங்கம் சொல்கிறது, அத்தகைய கடைகள் 2000 இருக்கிறது என்று. இங்கேயும் நீடிக்கிறது குழப்பம்.
விஜய் பொறுப்பேற்றதில் இருந்து இன்றுவரை பொறுப்பாக என்ன செய்திருக்கிறது அரசு? ஒன்றும் புரியவில்லை.
ஆட்சி என்பது சினிமா அல்ல. முதல்வர் பொறுப்பு என்பது கதாநாயகன் வேடமும் அல்ல.
அரசு என்ன செய்கிறது என்பதை விஜய் செய்தியாளர்கள் முன்னால், மக்களுக்குச் சொல்ல வேண்டும், பேச வேண்டும்.
மாற்றம் என்று சொன்னவர் ஏமாற்றக் கூடாது, மக்களை!
- கருஞ்சட்டைத் தமிழர்