காட்டில்
வாழும் விலங்கு
யானையென்று
எழுதிக் கொண்டிருந்தாள்
சிறுமி பிரியா...
யானையைப் பார்த்திருக்கிறாயா?
என்று கேட்டேன்
இல்லை என்றாள்
உதட்டைப் பிதுக்கி
யானையைப் போல் பிளிறியும்
நடந்தும் காட்டினேன்
அவள் முகம் வாடியிருந்தது
என் மீது அமர வைத்து
யானை சவாரி செய்தேன்
நம்பிக்கை கொள்ளவில்லை
அவள் கண்கள்
எப்படியாவது யானையைக்
காட்ட வேண்டுமென
தேடிக் கண்டுபிடித்து
ஒரு யானைப் படம்
கொண்டுவந்தேன்
அப்பொழுது
அவள் தூங்கிக் கொண்டிருந்தாள்
இரவு முழுக்க
என்னை
சவாரி செய்துக் கொண்டிருந்தது
யானை...

- பாரிமேகம்

Pin It