அன்புள்ள எஸ்.வி.ஆர். அவர்களுக்கு வணக்கம்.

S.V.Rajadurai இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக ஜெர்மனியை தளமாகக் கொண்ட இயங்கும் ஐ.என்.எஸ்.டி எனும் தன்னார்வ அரசு சாரா நிறுவனத்தின் அனுசரணையில் திருவனந்தபுரத்தில் நடந்த மாநாட்டில் தாங்கள் சிறப்புரை ஆற்றினீர்கள் (எதுவரை - செப்டம்பர்-அக்டோபர் - 2009) என்பதைக் கேட்டு நான் அதிர்ந்து போனேன்.

 இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை எனச் சொல்கிற சுசீந்திரனின் முன்முயற்சியில் நடைபெற்ற நிகழ்வுதான் திருவனந்தபுரம் கூட்டம் என்பதைத் தாங்கள் அறிவீர்கள் என நான் நம்புகிறேன்.

 இந்து பத்திரிக்கையின் என்.ராமினாலும், சிங்கள இனவாதக் கட்சியான ஜே.வி.பியினாலும் தகவமைக்கப்பட்ட இலங்கை குறித்த அரசியல் பார்வை கொண்ட மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எழுத்தாளர்களான ச.தமிழ்ச் செல்வன், ஆதவன் தீட்சண்யா போன்றவர்களோடு திருவனந்தபுரம் கூட்டத் தளத்தை நீங்கள் பயன்படுத்தியிருந்தீர்கள் என அறிந்தபோது மேலும் அதிர்ந்து போனேன்.

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இலங்கை சார்ந்த நிலைபாட்டுக்கு ஆதரவாக, சுசீந்திரன் போன்றவர்களை முன்வைத்து, இவர்கள் தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருவதையும் நீங்கள் அறியாதவரல்ல என நினைக்கிறேன். இலங்கை அரசின்பாலான ஒரு மென்மையான நிலைபாட்டுடன் விடுதலைப் புலிகளை மட்டுமே நடந்து முடிந்த கொலைகளுக்குக் காரணமாக நிறுத்துகின்ற அரசியலை சுசீந்திரன் போன்றவர்கள் முன்வைத்து வருகிறார்கள். இந்த அரசியலைத் தமிழகத்தில் முன்னெடுத்து வருகிறவர் அ.மார்க்ஸ் என்பதையும் தாங்கள் அறியாதிருக்க வாய்ப்பில்லை. 
 
 இலங்கை பற்றிய, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியலுக்குகந்த வகையிலான சுசீந்திரன் போன்றவர்களின் நேர்முகங்களையும், இவர்களுக்கு ஆதரவாக அ.மார்க்ஸ் எழுதிய கட்டுரையையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினது ஆதவன் தீட்சண்யா அங்கம் வகிக்கிற புதுவிசையில் அவர்தம் கட்சியினது அரசியல் பிரச்சாரத்தின் பகுதியாக வெளியிட்டார்கள் என்பதனையும் தாங்கள் அறிந்தே இருப்பீர்கள்.

சுசீந்திரன் தனது தன்னார்வ நிறுவன அரசியலுக்கும், தனது இலங்கை அரசின்சார்பு அரசியலுக்கும் ஒரே தளத்தில் தங்களையும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் இணைத்திருக்கிறார் என்பதுதான் இன்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
 
 அன்புள்ள எஸ்.வி.ஆர் அவர்களே, இனப்படுகொலை நடக்கவில்லை என்று சொல்கிற சுசீந்திரன் கூட்டிய திருவனந்தபுரம் மாநாட்டில் தாங்கள் ஏன் கலந்து கொண்டீர்கள் எனச் சொல்வீர்களா?

அன்று முதல் இன்று வரை இலங்கை அரசு சார்பான இந்து என்.ராமினதும், சிங்கள இனவாதக் கட்சியான ஜே.வி.பியினதும் அரசியலையுமே முன்னெடுக்கும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினது எழுத்தாளர்களுக்கும் தங்களுக்குமான, அக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான, பொதுக் காரணிகள் என்ன எனச் சொல்வீர்களா?

தன்னார்வ மற்றும் அரசு சாரா அமைப்புகளின் அரசியல் பற்றித் தாங்கள் அறியாதிருப்பீர்கள் என நான் நம்பவில்லை. உலகெங்கிலும் புரட்சிகர அரசியல் முன்னெடுக்கப்படாது முடக்குவதும், அமெரிக்க ஐரோப்பிய பாணியிலான ஜனநாயகத்தையும் சிவில் சமூகத்தையும் அமைப்பதுமே அவர்களது அரசியல் என்பதையும் தாங்கள் ஒப்புக் கொள்வீர்கள் என்றே நம்புகிறேன். 

 ஐ.என்.எஸ்.டி எனும் அமைப்பு ஜெர்மனியைத் தளமாகக் கொண்ட ஒரு தன்னார்வ அரசு சாரா அமைப்பு. இந்த அமைப்பு இலங்கை அரசியலும் இனப்பிரச்சினையும் தொடர்பான கருத்தரங்குகளை நடத்தி வருகிறது. கருத்தரங்குகள் ஜெர்மனியின் பேட் போல் நகரில் அமைந்துள்ள பிராதஸ்தாந்து கிறித்தவ அமைப்பான எவாஞ்ஜலிக் அகாதமி துணையுடன் நடத்தப்பட்டு வருகிறது. Aadhavan 
ஐ.என்.எஸ்.டி அமைப்புக்காக சலுகையில் இக்கருத்தரங்குகளை இந்த அமைப்பு நடத்துகிறது. இக்கருத்தரங்கு தொடர்பு முகவரியாகவும் இந்த அமைப்பினது முகவரியே இக்கருத்தரங்க அழைப்பிதழில் உள்ளது.

உலக தேவாலயக் கூட்டமைப்பிலும் எவாஞ்ஜலிக்கா அகாதமி அங்கம் வகிக்கிறது. ஜெர்மானிய அரசு, இலங்கை அரசு, அரசு சாரா அமைப்புக்கள், பிற ஈடுபாடுள்ள குழுக்கள் போன்றவற்றுக்கு இடையில் புரிந்துணர்வுக்காகவும் ஒத்துழைப்புக்காகவும் இக் கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. ஜெர்மனியிருந்தும், இலங்கையிலிருந்தும், உலகெங்கிலுமிருந்தும் ஐரோப்பியர்களும் ஆசியர்களும் இக்கருத்தரங்ககளில் பங்கு பெறுகிறார்கள்.

 மேலும் ஜெர்மனியிலும் உலகெங்கிலும் பிராதஸ்தாந்து அறத்தைப் பரப்புவதன் ஒரு பகுதியாகவே இந்தக் கருத்தரங்குகளை இவ்வமைப்பு நடத்தி வருகிறது.

மார்க்ஸியர்களும் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்தவர்களும் தன்னார்வ அமைப்புக்களின் கருத்தரங்குகளில் கலந்து கொள்ளும் போது எழுப்பப்படும் கேள்விகளையே தங்கள் முன்பாகவும், தங்களோடு அக்கூட்டத்தில் பங்கு பற்றிய, தன்னார்வ நிறுவனங்கள் குறித்து புரட்சிகரமான அறம் பேசுகிற மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எழுத்தாளர்களான ச.தமிழ்ச்செல்வன் மற்றும் ஆதவன் தீட்சண்யா முன்பாகவும் முன் வைக்கிறேன்.

தன்னார்வ நிறுவனங்கள் என்கிறபோது அதனது நிதியாதாரம் பற்றிய கேள்விகளை இடதுசாரிகளும் மார்க்சியர்களும் எழுப்புவது தவிர்க்க இயலாதது. பெருமளவிலான நிதிச்செலவுகளோடுவும் பயணச் செலவுகளோடும் உலகெங்கிலும் கருத்தரங்குகளை நடத்தும் ஐ.என்.எஸ்.டியின் நிதியாதாரம் குறித்த ஒரு ஆர்வலரின் கேள்விக்கு ஐ.என்.எஸ்.டி தளத்தில் பதில் சொல்லப் பட்டிருக்கிறது. இலங்கை அரசின் நிதியாதாரத்தில் ஐ.என்.எஸ்.டி இயங்குகிறது என்பது குற்றச்சாட்டு. இலங்கை அரசின் பணத்திலோ அல்லது விடுதலைப் புலிகள் பணத்திலோ ஐ.என்.எஸ்.டி இயங்கவில்லை எனப் பதில் தரப்பட்டிருக்கிறது. திட்டவட்டமாக இதில் ஐ.என்.எஸ்.டியின் நிதியாதாரம் குறித்த பதில் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

எவாஞ்ஜலிகல் அகாதமியாவின் உறவு, நிதி தொடர்பாக எழுந்திருக்கும் கேள்விகள், தமிழர்கள் மீதான இனப்படுகொலை எனச் சிக்கலானதொரு சூழ்நிலையில் தன்னார்வ மற்றும் அரசு சாரா நிறுவனமான ஐ.என்.எஸ்.டி நடத்திய கருத்தரங்கில், மார்க்சியராகத் தம்மை முன்னிறுத்தும் தாங்கள் கலந்து கொண்டதற்கான நிதி ஆதாரம் குறித்த தெளிவுறுத்தலையும், நியாயப்பாட்டையும் அன்புள்ள எஸ்.வி.ஆர் அவர்களே, தாங்கள் முன்வைக்க வேண்டும்.

உலகெங்கிலும் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகின்றன. மக்கள் தமது உரிமைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுகிறார்கள். இவ்வாறான மக்கள் இயக்கங்களை வழிநடத்துகிறவர்கள், நிறைய அரசியல் தவறுகளும் செய்கிறார்கள்.

மதவழி நின்று இதனை அணுகுகிறவர்கள் இருக்கிறார்கள். வஹாபிசத்தையும் பிராதஸ்தாந்து அணுகுமுறையையும் இந்துத்துவ அணுகுமுறையையும் தீர்வாக முன்வைக்கிற அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். மார்க்சியர்கள் எனத் தம்மைக் கருதிக் கொள்கிறவர்கள் இவ்வழிகளில் பிரச்சினைக்கான தீர்வுகளை முயல்வதில்லை .

 அப்படி எனில், அன்புள்ள எஸ்.வி. ஆர். அவர்களே, தன்னார்வ மற்றும் அரசு சாரா நிறுவனமான ஐ.என்.எஸ்.டி நடத்திய இலங்கைத் தமிழர் தொடர்பான திருவனந்தபுரக் கூட்டப் பங்கேற்பை மார்க்சியர்களாகத் தம்மைக் கருதிக்கொள்ளும் தாங்களோ, தங்களோடு கூட்டத்தில் கலந்துகொண்ட ச.தமிழ்ச்செல்வன், ஆதவன் தீட்சண்யா போன்றவர்கள் எவ்வகையில் நியாயப்படுத்த முடியும் எனக் கருதுகிறீர்கள்?

தமிழ்செல்வனுக்கும், ஆதவன் தீட்சண்யாவுக்கும் ஒரு கேள்வியை இங்கே முன்வைக்கிறேன். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் உலக தன்னார்வ அரசு சாரா நிறுவனங்களின் எதிர்ப்புரட்சி அரசியல் பற்றி ஒரு நூலையே எழுதியிருக்கிறார்.

புS.Tamilselvanரட்சியாளர்களாகத் தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் ச.தமிழ்ச்செல்வனும் ஆதவன் தீட்சண்யாவும், இலங்கை அரசு சார்பான, தன்னார்வ அரசு சாரா நிறுவனக் கருத்தரங்கில் கலந்து கொண்ட தங்கள் நடத்தைக்கு என்ன காரணத்தை முன்வைக்கிறீர்கள்?

அன்புள்ள எஸ்.வி.ஆர் அவர்களே, இறுதியாக ஒரு முக்கியமான கேள்வி. தாங்கள் இலங்கை அரசைக் கடுமையாக எதிர்த்து வருகிறீர்கள். ஐ.என்.எஸ்.டி நடத்தி வரும் இலங்கை தொடர்பான கருத்தரங்குகளில் தொடர்ந்து கலந்து கொண்டு வரும் பத்திரிக்கையாளர் பௌஸர் என்பவர் யார் எனத் தங்களுக்குத் தெரியுமா?

அவர் இலங்கை அரசுடன் செயல்பட்டு வரும் ஈ.பி.டி.பி செயலர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் ஐரோப்பியப் பிரதிநிதிகளில் ஒருவர் என்பது தங்களுக்குத் தெரியுமா?

 பௌஸர் ஆசிரியராக இருந்து நடத்தும் "எதுவரை" இதழில்தான் உங்கள் திருவனந்தபுரச் சிறப்புரை பற்றிய செய்தி வந்ததும், வேறு எந்த இலங்கைத்தமிழ் பத்திரிக்கைகளிலும், ஐ.என்.எஸ்.டி தளம் உள்பட படத்துடன் அந்தச் செய்தி வரவில்லை என்பதும் தங்களுக்குத் தெரியுமா?

 பௌஸர் பெயரிலோ, சுசீந்திரன் பெயரிலோ அக்கட்டுரை வராமல் தாஸ் எனும் அநாமதேயத்தின் பெயரில் அக்கட்டுரை வெளியாகி இருக்கிறது என்பதனையும் தாங்கள் அறிவீர்களா?

தோழர் எஸ்.வி.ஆர். அவர்களே, இலங்கை அரசு சார்பான கொள்கையுடைய தன்னார்வ அரசு சாரா நிறுவனமொன்று இலங்கை அரசியல் தொடர்பாக நடத்தியிருக்கிற திருவனந்தபுரம் கருத்தரங்கில் நீங்கள் கலந்து கொண்டிருப்பதானது தாங்கள் இதுவரை பேசி வந்திருக்கிற புரட்சிகர மார்க்சியத்துக்கு ஒரு களங்கம் என்றே நான் நினைக்கிறேன்.

இது பற்றி எங்களுக்குச் சொல்ல நீங்கள் என்ன பதிலை வைத்திருக்கிறீர்கள்?

மற்றபடி என்றும் போல அன்புடன்,
அசோக் யோகன்.

Comments

14 comments

14
தமிழன்
ஜேவிபி - என்ற இனவாத அமைப்போடு மார்க்சிஸ்ட் கட்சி கைகோர்த்திருப்பதாக கூசாமால் பொய் கூறும் அறிவு ஜீவியே ... கோவையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் மாநாட்டிற்கு ஜேவிபி அழைக்கப்படவில்லை என்பதும், அவர்களின் இனவாத செயல்பாட்டை வெளிப்படையாகவே மார்க்சிஸ்ட் கட்சி கண்டித்திருப்பதும் உங்கள் செவிட்டுக் காதுகளுக்கு கேட்கவில்லையா?.

"காமாலைக் காரன் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்" உங்கள் கண்ணுக்கும் அதுமாதிரி வியாதி இருக்கலாம், ஆனால் அது எல்லோருக்கும் இருக்காது நண்பரே ...

மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை தெரியாத அல்லது தெரிந்தும் அதனை திரிக்கும் உள்நோக்கத்துடன் கடிதம் எழுதியுள்ள அசோக் யோகன் அவர்களே,

இலங்கையில் இனப் படுகொலை நடந்தது என்பதில் மாற்றுகருத்து இல்லை, ஆனால் விடுதலைப் புலிகள் 1990 களுக்கு பின்னால் மாறிவந்த உலக சூழலை கணக்கில் கொள்ளாமல் தனது சொந்த சகோதர அமைப்புகளையே அழித்து ஒழித்த ஒரு பாசிச பயங்கரவாத அமைப்பாக மாறிப்போனது தெரியாததா?

1980 - 90 வரை ஒட்டுமொத்த தமிழகமே விடுதலைக்காக போராடிய இலங்கை போராளிகளின் பின்னால் நின்றது. ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின்னால் ஒட்டுமொத்த தமிழகமே விடுதலைப் புலிகளை நிராகரிக்கும் நிலைக்குச் சென்றது.

உலகின் 40 க்கும் மேற்பட்ட நாடுகள் விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பு என தடை செய்துள்ளது. எந்த மக்களுக்காக போராட அவர்கள் விரும்பினார்களோ அந்த மக்களை அரசியல் ரீதியாக திரட்ட தவறியதொடு மட்டுமில்லாமல் இதர போராளிகளையெல்லாம் அழித்து ஒலிக்கும் நடவடிக்கையிலும் அது ஈடுபட்டது. இதனால் அந்த அமைப்பு தனிமைப்பட்டது.

2001 செப் 11 கு பின்னால் அமேரிக்கா பயங்கரவாதத்திற்கு எதிராக எடுத்த நடவடிக்கை, 40 நாடுகள் தடை, உலக பொருளாதார நெருக்கடி, எல்டிடிஇ தனிமைப்பட்டது, ஆகியவற்றை கணக்கில் கொள்ளாமல் இலங்கை ராணுவத்தை எதிர்த்த விடாப்பிடியான போர் என்ற அறிவிப்பின் காரணமாக அவர்கள் தோல்விக்கு காரணமானது. இந்தத் தோல்விக்கு லட்சக்கணக்கான அப்பாவி இலங்கை தமிழர்களின் உயிரை நாம் விலையாக தர நேர்ந்தது.

இலங்கை அரசு வெற்றிபெற்றுவிட்டோம் என்ற மமதையில் ஆடாமல் 3 லட்சம் தமிழ் மக்களை பாதுகாக்கவும், தமிழர்கள் தங்கள் சொந்த பகுதியில் குடியேறவும், அடிப்படை தேவைகள் பூர்த்தியடையவும், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச குழுக்களின் நேரடி கண்காணிப்பில் தேவையான உதவிகள் செய்ய நடவடிக்கை எடுப்பதே தற்போதைய தேவை. ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு சுயாட்சி அதிகாரம் கொண்ட மாநிலம் அமைக்கப்படுவதே ஒரு சரியான தீர்வை நோக்கிய பயணமாக இருக்கும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்திய மக்கள் போராட்டங்களும், ஜனநாயக எண்ணம் கொண்டோரின் நடவடிக்கைகளுக்கும் இலங்கை தமிழ் மக்கள் நல வாழ்க்கைக்கு உதவி செய்யும்.
ஏகாந்தன்
//...."காமாலைக் காரன் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்" உங்கள் கண்ணுக்கும் அதுமாதிரி வியாதி இருக்கலாம், ஆனால் அது எல்லோருக்கும் இருக்காது நண்பரே ...//

ஆமாம் ,அவருக்காவது மஞ்சளாகவது தெரிகிறது.ஆனால் உங்களுக்கு, பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகமே இருண்டு விட்டதாக நினைக்குமாம். அந்த நினைப்பல்லவா உங்களுக்கு இருக்கிறது. கொஞ்சம் கண்ணை திறந்துகொண்டு பார்க்க முயற்ச்சி செய்யுங்கள்.

//... கோவையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் மாநாட்டிற்கு ஜேவிபி அழைக்கப்படவில்லை என்பதும், அவர்களின் இனவாத செயல்பாட்டை வெளிப்படையாகவே மார்க்சிஸ்ட் கட்சி கண்டித்திருப்பதும் உங்கள் செவிட்டுக் காதுகளுக்கு கேட்கவில்லையா?.//...

கோவை மாநாட்டுக்கு ஜெ.வி.பி.. என்ற இனவாத இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியை அழைக்கவில்லை என்று கூறுக்கிறீகள். ஏன் தெரியுமா?.. மாநாடு நடந்தது தமிழ்நாட்டிலுள்ள கோவையில். இந்த மாநாடு திருவனந்தபுரத்திலோ கல்கத்தாவிலோ, டெல்லியிலோ அல்லது அகர்தலவிலோ நடந்திருந்தால் நிச்சயம் அழைத்திருப்பீர்கள். இதுதான் உண்மை. மேலும் கோவையில் நடந்த மாநாட்டில் ஜெ.வி.பி. யின் இனவாதசெயல்பாட்டைக் கண்டித்து ஒரு வரி தீர்மானமாவது போட்டிருப்பீர்களா? அப்படி போட்டிருந்தால் அந்த நகலைக் காட்டமுடியுமா?

//.. மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை தெரியாத அல்லது தெரிந்தும் அதனை திரிக்கும் உள்நோக்கத்துடன் கடிதம் எழுதியுள்ள //..

அவர் உள்நோக்கத்தோடு கடிதம் எழுதவில்லை மிகமிகச்சரியாகவே எழுதியுள்ளார். உங்கள்கட்சியின் நிலைப்பாடு ஏட்டிலும் எழுத்திலும் மிகச்சரியாக இருக்கும். ஆனால் செயல்பாட்டிலும், நடைமுறையிலும் முற்றிலும் முரணானதாகவே இருக்கும் என்பது உங்களுக்கும் உங்கள் கட்சியினருக்கும் தவிர எல்லோருக்கும் நன்கு தெரியும்.

”... இலங்கை பற்றிய, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியலுக்குகந்த வகையிலான சுசீந்திரன் போன்றவர்களின் நேர்முகங்களையும், இவர்களுக்கு ஆதரவாக அ.மார்க்ஸ் எழுதிய கட்டுரையையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினது ஆதவன் தீட்சண்யா அங்கம் வகிக்கிற புதுவிசையில் அவர்தம் கட்சியினது அரசியல் பிரச்சாரத்தின் பகுதியாக வெளியிட்டார்கள் என்பதனையும் தாங்கள் அறிந்தே இருப்பீர்கள்
சரியான சான்றாகத்தான் அசோக் யோகன் அவர்கள் மிகச்சரியாக கூறியுள்ளார்கள்.
Kathiravan
எஸ்.வி.ஆரிடம் அசோக் யோகன் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு எஸ்.வி.ஆர் பதில் அளிப்பது அவரது முக்கிய கடமை என நினைக்கிறேன் எஸ்.வி.ஆர் தன்னை ஒரு மாக்ஸ்சியவாதியாக எண்ணுவராக இருந்தால் அவருடைய பதில் அவசியமாகும். இல்லாவிட்டால் வழமையான பாணியில் நக்கலோடு ஒதுக்கி தள்ளவேண்டியதுதான்.
ஏகாந்தன்
//.... ஆதவன்: இலங்கைத் தமிழருக்காக தீக்குளிப்பு போன்ற உணர்ச்சிமய மான சுயபலிகளையும், இலக்கியவாதிகளும் சினிமாக் கலைஞர்களும் காட்டும் கூடுதல் ஈடுபாட்டையும் எப்படி பார்க்கிறீர்கள்?

சுசீந்திரன்: இவர்களுக்கு கிடைக்கும் தகவல்கள் ஒருதலை பட்சமானவை. ஆகவே அங்கு இனஅழிப்பு நடக்கிறதாக கருதறாங்க. ஆனால் என் பார்வையில் அங்கு இன அழிப்பு நடைபெறவில்லை. ஏன்னா, அரச கட்டுப்பாட்டில் வாழ் கிற தமிழர்களின் தொகை வன்னிக்குள் அடைபட்டிருக்கிற தமிழர்களை விட கூடுதலானது. அங்கு தமிழர்கள் பாது காப்பாக வாழுகிறார்கள். புலிகளின் பிரதேசங்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிற மக்கள் மீது இலங்கை அரசு தாக்குதல் நடத்துவது உண்மை. ஆனால் அதை இன அழிப்பாக சொல்ல முடியாது. மிகைப்படுத்திச் சொல்லி- மிகைப் படுத்தலையே உண்மை என்று சர்வதேசத்தை நம்பவைக்க லாம் என்ற நப்பாசை எந்த லாபத்தையும் கவன ஈர்ப்பையும் ஏற்படுத்தப்போவதில்லை. மற்றது, மனிதாபிமான உணர் வோடு இருக்கிற கலைஞர்கள் அல்லது இலக்கியவாதிகள், நண்பர்கள் மிகவும் மேலோட்டமான தகவல்களை மட்டும் பெற்றுக்கொண்டு, ஒரு குற்றவுணர்வில் இலங்கை அரசாங் கத்துக்கு எதிராக செயல்படனும்கிற நிலைமைக்குத் தள்ளப் படறாங்க. இலங்கை அரசாங்கத்தின் தாக்குதலை கண்டிக் கிற அதேநேரம் புலிகள் மீதான விமர்சனத்தையும் தமிழர்கள் மீது யார் எந்தவகையில் தாக்குதல் நடத்தினாலும் அதற்கு எதிராக கிளர்ந்து எழணும்கிற உணர்வு இங்கு இருக்குமென்றால் அதை முற்போக்கானதாகத்தான் பார்க்க வேண்டும். புலிகள் அங்கே தமிழர்களை எவ்வாறு நடத்து கிறார்கள்- துப்பாக்கிகளுக்கு இரையாக்கிக் கொண்டிருக் கிறார்கள் என்பதை எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை என் போன்ற ஆட்களுக்கு இருப்பதாக நம்புகிறேன்.//...

அய்யா தமி., தமி.., தமி... (. இங்கே நிறைய தமிழ்,தமிழர், தமிழன் என்று பல்வேறு வகையான தமிழ்கள் வருவதால் கொஞ்சம் குழப்பம்.இந்தப் பகுதியில் திரு. தமிழன் என்பவர்தான் எதிர்வினை எழுதியிருக்கிறார்.)
தமிழன் அவர்களே உங்கள் ஆஆதவன் தீ..தீட்சண்யா--சுசீந்திரன் நேர்காணலை புதுவிசையில் படித்தபிறகு மார்க்ஸிஸ்ட் கட்சியின் நிலை என்ன என்பதை
அரசியல் அடிப்படை தெரியாதவர்கள் கூட எளிதில் புரிந்து கொள்வார்கள்.நிற்க.

//.. இலங்கையில் இனப் படுகொலை நடந்தது என்பதில் மாற்றுகருத்து இல்லை,//...

என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் திரு. சுசீந்திரன் அவர்கள் இன்ப்படுகொலை எதுவும் நடக்கவில்லை என்கிறார்.இப்போது என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள். நீங்கள் சொல்வது உண்மையா?அல்லது சுசீந்திரன் சொல்வது உண்மையா?
நீங்கள் சொல்வது உண்மை என்றால் சுசீந்திரன் சொல்வது பொய் அல்லது சுசீந்திரன் சொல்வது உண்மை என்றால் நீங்கள் சொல்வது பொய்.இதில்யார் சொல்வது பொய் யார்சொல்வது உண்மை. இதில் பொய் எது? மெய் எது? அய்யோ இதற்கே தலை சுற்றுகிறது
இப்படித்தான் இருக்கிறது உங்கள் மார்க்ஸிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு.
suyanirnayam
Clearly marxist cadres internationally never came out of stalinist tradition/brand of politicking. But to claim CPM is even a marxit/ communist/ socialist party is ridiculous. CPM leadership (which has been long hijacked by brahmins) which forces us to believe and trust in concept of India and stone walls all discussions which questions the utility a current nation-state boundaries in South Asia. Till 2007 JVP have been consistently invited and included in any South asian communist solidarity meetings organised by CPM. Whereas JVP have been ultra sinhala racist for past 3 decades. The ease with which JVP members shift allegiance from JVP to JHU should put brahminical CPM leaders to shame. It is equivalent to CPM leaders going to RSS and taking orders and decisions with RSS leaders and co-ordinated a national political strategy with them. All these support to JVP by CPM started to change only Vickramabahu karunaratne through CPI tamil leaders forced to moderate CPM's romance with JVP.
இளங்கோவன்
சி.பி.எம் கட்சிக்கு என்று தனித்த, துணிந்த தத்துவப் பார்வை உண்டு. அதன் நிழலில் வளர்க்கப்படும் ஆதவன் தீட்சண்யா போன்ற தொண்டர்களுக்கு அதில் எப்போதும் குழப்பமோ தடுமாற்றமோ ஏற்பட்டதில்லை.
அதனை வெறும் இடதுசாரி இயக்கமாகப் குருட்டுப் பார்வை பார்க்கும் நம்மிடம் தான் கோளாறு.
சிபிஎம் புலிகளை, தமிழீழத்தை ஆதரிக்காத ஓரே காரணத்தைக் கொண்டே நாம் புலிகளையும் தமிழீழத்தையும் இறுதிவரை ஆதரிக்கலாம். அவ்வளவு நல்லவர்கள் சிபிஎம்காரர்கள்.
பெரியார் ஒரு தீர்க்கதரிசி. எதிர்காலத்தில் புற்றீசலாய் பெருக்கெடுக்கும் 'மலத்தில் அரிசி தேடும் அறிவுஜீவி'களை முன்னூகித்து சொன்னதை பின்பற்றுவோம்.
'' பார்ப்பான் பாராட்டினால் எச்சரிக்கைகொள். ஏசினால் தொடர்ந்துசெல்''
இளஞ்செழியன்
உண்மையில் களம் கண்டவர்களுக்கும், ஏட்டுச்சுரைக்காயில் ஊறியவர்களுக்கும் உள்ள வேறுபாடுதான் மார்க்சியர்களுக்கும், மார்க்சிஸ்ட் கோஷ்டி தோழர்களுக்கும் உள்ள வேறுபாடு. தமிழர்கள் அங்கே களத்தில் விடுதலைப்புலிகளோடு நின்று கொண்டிருந்தா போதும், மாண்டுகொண்டிருந்தபோதும் வராத பாசம் தற்போது வந்து இலங்கைத்(ஈழம்?!!)தமிழர்களுக்காக போராட்டங்கள் நடத்துவதாக அறிகிறேன். அங்கு, என்.ராம்...மன்னிக்கவும். உன்.ராம் தெரிவித்த கருத்துகளுக்காக எதிர்ப்பு தெரிவிக்கப்படுமா? அல்லது இனப்போராட்டமே நிகழவில்லை என்று சுசீந்திரன் போன்றவர்களுக்காக வக்காலத்து வாங்கப்படுமா? அல்லது முன்னால் கம்யுனிச நாடுகளான சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் கொடுத்த பேரழிவு ஆயுதங்களுக்காக அவர்களை கண்டிப்பார்களா... என்னங்க செய்யப்போறீங்க? சரி தோழர். நிலைப்பாடு.. நிலைப்படுன்னா என்ன அர்த்தம்?
shanthan
நண்பர் அசோக் யோகன் கேட்டதுபோல் எஸ்.வி.ராஜதுரையிடம் கேட்பதற்கு அடியேனிடம் பல கேள்விகள் இருக்கிறது. அதில் ஒன்று:- பேர்லீன் சுசீந்திரன் உலகறிந்த **** பேர்வழி. புலிகள் எப்படி தமிழ் மக்களை வைத்து பிழைப்பு நடாத்தியதோ அதே மாதிரி சுசீந்தரன் அன்கோ இலங்கை அரசாங்கத்தையும் தன்னார்வ நிதி நிறுவனங்களையும் வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். முற்போக்கு பேசும் எஸ்.வி.ராஜதுரை எப்படி இவரோடு இந்தவகையில் உறவுகளை வைத்திருக்கிறார்?. சுசீந்திரனுக்கும் எஸ்.வி.ராஜதுரைக்கும் இருக்கும் உறவு மிக நெருக்கமானது. எஸ்.வி.ராஜதுரை எழுதி வெளியிட்ட நுhல் ஒன்றை இந்த மோசடிப்பேர்வழி சுசீந்திரன் பெயருக்கு அர்ப்பணித்துள்ளார். இப்படியான உறவு பற்றி வெளிப்படையாக எஸ்.வி.ராஜதுரை பேசுவாரா?
stalinguru
தோழர் எஸ்வி ஆருக்கு மறுப்பு - ஒரு அவசியமான மீள்பதிவு

புலிகள்.புரட்சி.புத்திஜீவிகள்.

மனித உயிர்களுக்கு இழைக்கப்படும் அவலங்களையும், பெண் உடல் மீதான காலம் காலமான ஆணிய தாக்குதல் போரின் ஊடாக எட்டும் அதிபயங்கர வக்கிரத்தையும், சிறுவர்கள், பெண்கள், முதியோர்கள், தாயின் சிசுவில் இருக்கும் சிசு கூட பீரங்கி குண்டுகளால் பிளக்கப்படும் ஈழ மண்ணின் அவலம் தமிழக மண்ணில் எழுப்பியிருக்கும் உணர்வுபூர்வமான மனித நேயத்தையும், வெவ்வேறு நிலைகளில் வெளிப்படும் அதன் வடிவங்களையும் கணக்கில் கொள்ளாத, அல்லது முற்றாகவே புறக்கணிக்கிற, உணர்வுகளே இல்லாத தமிழக மேட்டிமைத்தன அறிவுஜீவித்தனத்தின் இயல்பை மே மாத உயிரெழுத்து இதழில் தோழர் எஸ் வி ராஜதுரை அவர்கள் எழுதியிருக்கும் தமிழ் ஈழம் பற்றிய கட்டுரையினூடாக நாம் பரிசீலிக்க முயலலாம்.

புலம் பெயர்ந்த ஈழ தமிழர்களாலும், இந்தியா மற்றும் தமிழகத்தில் வாழும் தமிழர்களாலும் முன்னெடுக்கப்பட்ட ஒபாமாவுக்கான தமிழர்கள் என்கிற ஈழப் பிரச்சனையில் ஒபாமாவின் தலையீட்டைக் கோருகிற விண்ணப்பத்தில் கையெழுத்திடாமலும், அதை மின்னஞ்சல் வழியாக தனக்கும், தன்னை ஒத்த கருத்துடையவர்களுக்கும், அனுப்புபவர்கள் மீது விமர்சனத்தை மேற்கொள்வதன் மூலம் தங்கள் ஏகாதிபத்திய எதிர்புணர்வை தக்க வைத்துக்கொள்ள விரும்புவதாகவும் கூறும் எஸ்,வி,ஆர். அவர்களின் கட்டுரை, தமிழகத்தில், ஈழ பிரச்சனையை வைத்து சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுக்கும் ஒட்டு கட்சிகளின் மீதான விமர்சனமாக, திமுக, மற்றும் அதிமுக ஆகிய கூட்டணிகளில் இடம்பெற்றுள்ள கட்சிகளின், அவர்களின் நிலைப்பாடுகளை, முரண்பாடுகளை வெளிக்கொணர்வதாக தொடங்கி, அதன் போக்கில், சி.பி.எம்., சி.பி.அய். ஆகிய கட்சிகள் பற்றிய மார்க்சிய ரீதியிலான விமர்சனத்தில் அவர் பயன்படுத்தியுள்ள வார்த்தைகளை அப்படியே கீழே தருகிறேன்.

''மாவோவின் தலைமையில் சீனா மாபெரும் புரட்சிகர மாற்றங்களை அடைந்து வந்தபோது, மாவோவின் தலைமையை, அவரது புரட்சிகர கருத்துக்களை விமர்சித்து வந்தவைதான் சிபிஎம், சிபிஅய் கட்சிகள். சிபிஎம் இன் பொலிட் பீரோ உறுப்பினராக இருந்த பசவபுன்னையா, மாவோவிற்கு இயங்கியல் என்பதே தெரியாது என்று கூறும் மகத்தான கட்டுரை ஒன்றையும் எழுதினார். மாவோ காலத்தில் அதனுடைய அயல் உறவுக் கொள்கைகள் அணைத்தும் சோசலிச தன்மை வாய்ந்தவையாக இருந்தன என்று கூற முடியாது, உலகம் முழுவதிலும் முதலாளிய கட்டமைப்பு இருந்த சூழலில், அந்த கட்டமைப்புக்குள் சில சமரசங்களை செய்துகொண்டுதான் சீனா தனது நாட்டில் சோசலித்தை உருவாக்க வேண்டியிருந்தது ....... ''

என்று தொடரும் இந்த விமர்சனத்தில் இயல்பாக ஒரு கேள்வி எழுவதை நம்மால் தவிர்க்க இயலவில்லை, உலகம் முழுவதிலும் இருக்கும் முதலாளிய கட்டமைப்பை பகைத்துக்கொண்டு சோசலிசத்தை உருவாக்க இயலாத நிலையில், மாவோவின் செஞ்சீனம் செய்துகொண்ட சமரசங்களை புரிந்துகொள்ளும் எஸ்,வி,ஆர் அவர்களால், எவ்வாறு அதே நிலையை எதிர்கொண்டு தங்கள் தேசிய விடுதலை போராட்டத்தை முன்னெடுத்து செல்ல முனையும் விடுதலை புலிகளின் நடவடிக்கைகளை புரிந்துகொள்ள இயலாமல் போனது என்று நமக்கு புரியவில்லை.

இன்றைக்கு இருக்கும் ஏகாதிபத்திய காலகட்டத்தில் தேசிய இன விடுதலையை அடிப்படையாக கொண்ட போராட்டங்களின் முக்கியத்துவத்தையும், அதன் முற்போக்கு அம்சங்களையும் முற்றாக புறக்கணிக்கும் அலட்சிய மனப்பாங்குதான் இதற்கு காரணம் என்று கருதலாமா?

இரண்டு தேசிய இனங்களோ அல்லது பல் தேசிய இனங்களோ ஒரு அரச எல்லைக்குள் வாழ்ந்துகொண்டிருக்கும் நிலையில், பெயரளவிலான ஜனநாயத்தை கொண்ட ஒரு அரசு, ஏகாதிபத்தியங்களுக்கு தனது மண்ணையும், மக்களையும், அடிமைகளாக்க முயற்சி செய்கையில், இறையாண்மையை தாரைவார்க்க முனைகையில், அதை எதிர்த்து தனது தேசிய இன இறையாண்மைக்கான போராட்டத்ததை முன்னெடுக்கும் ஒரு தேசிய இனத்தின் விடுதலை கோரிக்கை என்பது அடிப்படையிலேயே புரட்சிகரமானது என்பது இயங்கியலை நன்கு அறிந்த தோழர் எஸ்.வி,ஆர் அவர்களால் கூட அவதானிக்கப்பட முடியாததாக போய்விட்டது வருத்தம் அளிக்கிறது.

மேலும் தங்கள் மக்களின் மீது நிகழ்த்தப்படும் இத்தனை கொடுமைகளையும், அவலங்களையும் தாண்டி, பெரும்பாலான சிங்கள உழைக்கும் வர்க்கத்தின் சமூக, அரசியல், விடுதலைக்கான போராட்டத்தின் சுமையையும், அந்த சிங்கள மக்களுகானதானதாகவும் இல்லாத, அப்பட்டமான ஏகாதிபத்திய அடிவருடிதனத்தால் பாசிச தன்மையை அடைந்துவிட்ட இலங்கை அரசை எதிர்பதன் மூலம், தங்கள் தோளில் தூக்கி சுமக்கும் விடுதலை புலிகள், உலகின் மிக சிறந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகளுக்கு தாங்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதை இந்த மூன்று ஆண்டுகளாக தொடரும் போரில் எந்த சமரசத்துக்கும் இடம் கொடாது அர்பணிப்பு மிக்க போராட்டத்தின் மூலம் நிருபித்துக்கொண்டு விட்டார்கள்.

இன்றைக்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது இலங்கையில்?

புலிகளையும் ஈழ விடுதலை போரையும் காரணமாக காட்டி, சிங்கள பகுதிகளின் வளங்களையும், பிராந்தியங்களையும், மேற்கு உலகு, அமெரிக்க, இந்திய, ஜப்பான், சீன ஏகாதிபத்தியங்களுக்கு திறந்து விடும் வேலையை இலங்கை அரசு செய்துகொண்டிருக்கும் நிலையில், ஈழ தேசியத்தின் இறையாண்மையை முன்னிறுத்தி நடத்தப்படும் தமிழ் ஈழ விடுதலை போராட்டம் என்பது, அதன் இயல்பிலேயே இந்த ஏகாதிபத்திய சார்பு நிலையை மேற்கொள்ளும் நடவடிக்கையை விடுதலை புலிகளுக்கு மறுத்துவிட்டதை ஏன் நம்மால் புரிந்துகொள்ள இயலவில்லை.

மட்டுமல்லாமல் ஒரு தேசிய விடுதலை போராளிகள், தங்களோடு சமரத்துக்கு வந்தாலும் தங்கள் பொருளாதார ராணுவ நலன்களை பாதுகாக்கும் கூலிக்காரர்களாக அவர்களை பயன்படுத்த முடியாது என்பதையும், விடுதலை பெற்ற தேசத்து மக்கள் நல் வாழ்வுக்கான செயல்பாடுகளும், தேச பொருளாதார கட்டமைப்புக்கான பணிகளும் மட்டுமே அவர்களால் முக்கியத்துவம் கொடுத்து நிறைவேற்றப்படும் என்பதையும் புரிந்துகொண்ட உலக வல்லாதிக்கங்கள் இந்த நிமிடம்வரை பெரும் மனித அவலத்தை சந்தித்துக்கொண்டிருக்கும் பசியோடும், படுகாயங்களோடும், போராடிகொண்டிருக்கும் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை செய்ய கூட முன்வராமல் இழுத்து அடிப்பதன் மூலம் ஈழ விடுதலை போர் மீண்டும் எழக்கூடாது என்கிற அவர்களின் உள்நோக்கம் பட்டவர்த்தனமாக தெரிகிறது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், அமெரிக்க, இந்திய அரசுகள் ஆகியவைகளோடு அரசியல் ரீதியாக இந்த நாடுகளின் அங்கீகாரத்தை ஈழ தேசத்துக்கு பெற வேண்டும் என்பதற்காக விடுதலை புலிகள் மேற்கொண்ட நகர்வுகளை மட்டுமே முன்னெடுத்து அவர்களை ஏகாதிபத்திய ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்துபவர்கள் வசதியாக மறந்துவிட்ட விஷயம் ஒன்று உள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளாக ஏழு ஏகாதிபத்திய நாடுகள் இலங்கை அரசுக்கு அளித்துவந்த ஆயுத, ராணுவ, பொருளாதார உதவிகள் எல்லாம் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசால் பயன்படுத்தப்பட்டபோது, இந்த ஏகாதிபத்தியங்களோடு சமரசம் செய்துகொண்டு ஈழ மண்ணையும், மக்களையும், தேசிய விடுதலை போரையும் கைவிடாமல் செயல் மூலம் அவர்கள் தாங்கள் ஈழ மக்களுக்கு கடைசிவரை நேர்மையாக இருப்போம் என்பதை காட்டிவிட்டார்கள்.

புலிகளையும், நேபாள மாவோயிஸ்டுகளையும் ஒப்பிடுதன் மூலம் நாம் நமது புரிதலை மேலும் விரிவாக்கி கொள்ள முடியும்.

பத்தாண்டு கால ஆயுத போராட்டத்துக்கு பிறகு அரசியல் அணிதிரட்டல் உத்தியாக முதலாளித்துவ ஜனநாயக அரசில் பங்கேற்க முன்வந்தபோது, அந்நிய முதலீடுகள் உடனான உறவுகள் பற்றி மாவோயிஸ்ட் தலைவர் பாபுராம் பட்ராயிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது மிக சரியான ஒரு கருத்தை அவர் முன்வைத்தார்.

நூறாண்டுகால பழமைத்தனத்திலிருந்து, பின்தங்கிய உற்பத்தி உறவுகளிலிருந்து எங்கள் சமூகத்தை மீட்க அந்நிய முதலீடுகள் தொழில் துவங்க நாங்கள் அனுமதிப்போம் ஆனால் எங்கள் நிபந்தனைகளையும் கண்காணிப்பையும் அந்த நிறுவனங்கள் ஒப்புகொண்டாக வேண்டும் என்று.

முப்பது ஆண்டுகால ஆயுத போராட்டத்துக்கு பின் புலிகள் முன் வைத்ததும் அதுதானே, எங்கள் தேசத்தை அங்கீகரியுங்கள், எங்கள் தேசிய பொருளாதாரத்துக்கும், மக்கள் வாழ்வுக்கும், பங்கம் விளைவிக்காத வகையில் எங்கள் மண்ணில் இயங்க நாங்கள் அனுமதிக்கிறோம் என்று. மாறாக மக்களை பற்றியும், தேசத்தை பற்றியும் கவலை கொள்ளாத மகிந்த ராஜ பக்ச மற்றும் சிங்கள அதிகார வர்க்கத்துக்கு ஒத்துழைப்பதன் மூலம் ஈவு இரக்கமற்ற சுரண்டலையும், பொருளாதார, ராணுவ மேலாதிக்க நோக்கங்களையும், நிறைவேற்றிக்கொள்ள உலக ஏகாதிபத்தியங்கள் மேற்கொண்ட சதிதான் இன்றைய ஈழ போராட்டத்தின் பின்னடைவுக்கு அடிப்படையான காரணம்.

புறநிலை யதார்த்தம் பற்றிய புரிதலும் ஆய்வும் இல்லாமலும் மனித அவலங்களின் மீதான் உணர்வுபூர்வமான கோபம் இல்லாமலும், தத்துவார்த்த ரீதியாக மட்டுமே மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் தோழர் எஸ்,வி,ஆர் போன்றவர்களையும் கூட கொண்டு வந்து விட்டிருக்கும் இடம் நமக்கு வியப்பளிக்கவில்லை.

தவிர்க்க இயலாத சூழ்நிலைகளில், தேசத்தையும் புரட்சியையும் மக்களையும் பாதுகாக்க தோழர் லெனின் ஜெர்மன் அரசோடு செய்துகொண்ட உடன்படிக்கையையும், தோழர் ஸ்டாலின் பாசிஸ்ட் ஹிட்லரோடு செய்துகொண்ட உடன்படிக்கைகளையும் விமர்சிப்பதன் மூலமும் அவர்களை நிராகரிப்பதன் மூலமும் தங்களை மார்க்சியவாதிகள் என்று அடையாளப்படுத்த வேண்டிய தேவை தமிழக அறிவுத்துறையினருக்கு வராது என்றே நம்புவோம்.

கடந்த அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஆசிய, ஆப்பிரிக்க, மூன்றாம் உலக நாடுகளை சுரண்டியதன் மூலம் தாங்கள் பெற்ற லாபத்தில், முதலாளித்துவ ஜனநாயக புரட்சி முற்று பெற்ற ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு அளித்துவந்த வாழ்க்கை வசதிகளும், ஜனநாயகமும் இன்றைக்கு தீவிரமடைய தொடங்கியிருக்கும் உலக பொருளாதார நெருக்கடியால் கேள்விக்குள்ளாக்கப்படும் நிலையில், அந்த சமூகங்களில் வளரத் துவங்கும் இனவெறிக்கும், பாசிச கூறுக்கும் எதிராக தங்கள் ஈழ மக்கள் இனவெறியால் அனுபவிக்கும் கொடூரங்களை காட்சிப்படுத்துவதன் மூலம் அந்த நாடுகளில் உள்ள மக்களோடு மனிதத்துவத்தோடு உரையாடல்களை துவக்கியிருக்கும் புலம் பெயர் தமிழர்களின் போராட்டம் உலக அரங்கில் நிகழ்த்தியிருக்கும் தாக்கம் சமூக யதார்த்தம் பற்றிய புறநிலை பார்வை இல்லா குறுகிய மனதுக்கு சொந்தகாரர்களால் திட்டமிட்டு இருட்டடிக்கப்படுவதை நாம் அம்பலபடுத்துவோம்.

அன்றாட வாழ்கையின் அவதிகளூடாக சில நிமிடங்கள் மனித நேயத்தை பற்றிய உணர்வுகளை கொடுப்பதாக, இந்தியா, இந்திய தேசியம் ஆகிய கண்ணோட்டங்களால் தங்கள் அடையாளத்தை இழந்த தாய் தமிழர்கள், தமிழ்த் தேசிய இனத்துக்கு அவர்களின் இன அடையாளம் பற்றிய தன்னுணர்வை வளர்ப்பதாக, பல்வேறு ஒட்டு கட்சிகளின் தலைமைத்துவங்களின் நடவடிக்கைகளையும் போலித்தனத்தையும் தோலுரிப்பதாக, போலிதனமாகவேனும் தேசிய இன அடையாளத்தை முன்னிருத்துபவர்களின் தேர்தல் தோல்வியாக, ஒட்டுமொத்தமாகவே அரசியல் உணர்வு வட்டத்துக்குள் கொண்டு வரப்படாத பெரும்பாலான தமிழக மக்களின் மீது அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியதாக தமிழகத்தில் ஈழமும், ஈழ விடுதலை போரும் ஏற்படுத்திய அதிர்வுகளும், பரிணாமங்களும், புறக்கணிக்கப்படவே முடியாத நிதர்சனமான விசயங்களாக மக்கள் மத்தியில் கலந்துவிட்டன இன்று.

வன்முறை பற்றிய கருத்து கேட்கப்பட்டபோது ஓஷோ மிக அழகாக சொல்வார்.

''உங்களுக்கு இது சிக்கலாக தோன்றலாம் நீங்கள் என்னை அடிக்கிறீர்கள், நான் உங்களை திருப்பி அடிப்பதில்லை என் மறு கன்னத்தை காட்டுகிறேன் என்ன அர்த்தம்? தயவு செய்து என்னை அடியுங்கள் என்று அர்த்தம். நான் அதிமனிதன் ஆவதற்காக உங்களை மனித தன்மைக்கு கீழே தாழ்த்தி விடுகிறேன்” என்று

சாதிய மத இன தேசிய கட்சி வர்க்க அடையாளங்களின் கீழ் நம்மை சுரண்டிக்கொண்டு இருப்பவர்களை நமக்கு தலைமை தாங்க அனுமதித்து, நம்மை அதிமானுடர்களாக அகிம்சாவாதிகளாக பாவித்துக்கொண்டு, சக மனித உயிர்களுக்கு இழைக்கப்படும் கொடூரங்களை சகித்துக்கொண்டு, நம் எதிரிகளையும் மனித நிலைலையிலிருந்து தாழ்த்திக்கொள்ள அனுமதித்துக்கொண்டு சராசரி வாழ்வில் தொடர்ந்து கொண்டிருக்க போகிறோமா நாம்?
Dr. V. Pandian
மிகச்செரிவான கருத்துக்களை வைத்த ஸ்டாலின்குரு அவர்களுக்கு நன்றிகளும், வாழத்துக்களும்.

அமார்க்ஸ்களையும், ராஜதுறைகளையும் நாம், பொது விவாதத்திற்கு அழைத்து, அந்த வாவாதத்தை வீடியோ பதிவு செய்து, அந்தப் பச்சையானப் பதிவுகளை அப்படியே நாம் மக்களிடம் காண்பித்தால் போதும். மக்களும் உண்மைகளைத் தெரிந்து கொள்வார்கள், இந்த "அறிவு" ஜிவிகளும், தங்களது "அறிவை" அதன் முழுப்பரிமானத்திற்குப் பயன்படுத்த வேண்டிய "காட்டாயத்தை" உணர்வார்கள்.

அறிவுஜீவிகள் என்று பட்டம் கட்டிக் கொண்ட இவர்களின் "தத்துவார்த்த" (அரைகுறை) ஆய்வுகளை நாம் வௌிச்சம் போட்டுக் காட்டவேண்டும். தன் இனமக்களின் சிக்கலையே, அதன் உண்மையான பரிமானத்தில் உணரமுடியாத இவர்கள், புகழாசை மட்டும் கொண்ட "ஷோக்காளி"களா?

தமிழத்தேசியர்களான நாம் அப்படி ஒரு உண்மையான பட்டிமன்ற அமைப்பை உருவாக்க வேண்டும். இதில் பங்கு கொள்ளாதவர்களை மக்கள் புறக்கனிக்கும் நிலை வரவேண்டும். இந்த விவாதங்களில் தமிழத்தேசியர்களும் தங்களிடம் சுட்டிக் காட்டப்படும் தவறுகளையும் பரிசீலிக்க வாய்ப்பு ஏற்படும். மார்க்ஸியர்களுக்கு ஒரு "நேர்மை" உண்டு. அது தன்னால் பதில் சொல்ல முடியாமல் போகும் போது, சம்பந்தா சம்பந்தமில்லாமல் எதை ஏதையோ கதையளக்கத் தொடங்கி விடுவார்கள். இதை மட்டும் நேர் செய்ய ஒரு நடுவர் இருந்தால் போதும். நடுவர், தீர்ப்பேதும் சொல்ல வேண்டியதில்லை. அப்படி ஒரு அமைப்பை நாம் உருவாக்க வேண்டும். ஒளிப்பட ஆதாரங்களோடு இவர்களைத் தோலுரிக்க அது உதவும். இவர்களும் பிதற்றித் திரிய முடியாது!

எனது குருகிய கால அனுபவத்திலேயே நான் உணர்ந்த ஒரு விடயம் இது தான். எவன் ஒருவன் தன்னை மார்க்ஸியவாதி என்று நொடிக்கொரு முறை சொல்லிக் கொண்டு வாதமிடுகிறானோ, அவன் ஒரு பச்சை ******. இது எனது சொந்த அனுபவத்தில் நான் உணர்ந்தது. இவர்களுக்கு மார்க்ஸ் என்ற "முகமூடி" தேவைப்படுகிறது. மார்க்ஸியத்தை தனக்கு சாதகமான ஒரு முகமூடியாகத்தான் பயன்படுத்துகின்றனரே தவிற, இவர்கள் உண்மையான மார்க்ஸியர்கள் அல்லர்.

மணியரசன் அவர்கள் ஒன்று கேட்பார் "தத்துவங்களுக்காக மக்களா, மக்களுக்காக தத்துவங்களா?".
Dr. V. Pandian
C.P.M. ன் யோக்கிய சிகாமணி வரதராஜனார், ராஜபக்ஷேவுக்கு கொடும்பாவி எரித்ததை இன்றய செய்தியில் பார்த்து வியந்தேன். முள்வேலிக்குள் உள்ள மக்களை விடுவிக்க வேண்டுமாம்!

இலங்கைக்கு இந்தியா ஆயுதம் வழங்கியதைக் கண்டிக்காத வரதராஜன், முல்லிவாய்க்காலில் ஒரே நாளில் 20,000 பொது மக்கள் அன்று படுகொலை செய்யப்பட்டதைக் கண்டிக்காத வரதராஜன், இன்று ராஜபக்ஷவுக்கு கொடும்பாவி எரிப்பதன் காரணமென்ன?

இன்று அந்த அளவுக்கு இந்த கூட்டம் அம்பலப்பட்டுள்ளது. ஏதாவது செய்தாக வேண்டிய காட்டாயம். இப்படியெல்லாம் நடக்கும் என்று நாம் அன்றே கூவிக்கூவி அழுததை அறியாதவர்களா இந்த சிகாமணிகள்? தெரிந்தே தவறு செய்தவர்களை நாம் என்ன செய்வது?

இன்றய செய்தியில், தமிழர்களுக்கு சம உரிமை வழங்க முடியாதென்று, ஹம்பந்தோட்டாவில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியில் ராஜபக்ஷ திட்டவட்டமாகச் சொல்லியுள்ளான்.

இன்றாவது தனியீழம் தான் தீர்வென்று சொல்லுவாரா இந்த யோக்கிய சிகாமணி?

தமிழர் தாயகத்தை விழுங்குவது தான் சிங்களனின் ஒரே குறிக்கோள்.

அதற்கு துனைநின்று தமிழர்களின் ஒரே அரணாக இருந்த புலிகளின் அழிவுக்குக் காரணமாயிருந்த C.P.M. போன்ற இயக்கங்களை நாம் என்ன செய்யவேண்டும்?
Guest
dear mr. tamilan, dont act on behalf of rajabhkshe in the name of tamilan. please come out with your original name.
பாவண்ணன்
தன் பெயரைக் கூட தமிழ்ல எழுத முடியாத பாண்டியனெல்லாம், தான்தான் பச்சைத் தமிழன்னு படம் காட்டுறத பாத்தா, ஒரே சிரிப்பாணியா வருது....

இத ஏற்கெனவே, சுட்டிக்காட்டியும் கூட பாண்டியன் திருந்துனதா இல்லை... ஆனா, நீ தமிழ்ப் பேரு வச்சிருக்கியா, நீ என்ன இந்த பேரு வச்சிருக்க, என்று இந்த பாண்டியன் அடுத்தவர்களை நொனநாட்டியம் சொல்வதில் ஒண்ணும் குறைச்சல் இருக்காது.

எல்லாம், காலக் கொடுமடா சாமி...!
kathiresan
I saw one article in inioru.com. Aadhavan attended one function with srilankan minister. These people are ready to go beyond any level. Very soon we can expect aadhavan be a brand ambassador for srilankan govt.

ஆதவன் தீட்சன்யா அரசின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகை!

தமிழ்நாட்டின் பிரபல எழுத்தாளரும், புதுவிசை என்ற இலக்கிய சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும், தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினருமான திரு ஆதவன் தீட்சன்யா அவர்கள் அரசின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

இவர் இங்குள்ள எழுத்தாளாகள், கலைஞர்கள்,மற்றும் இலங்கைத் தமிழ் அமைச்சர்களை சந்தித்து உரையாடினார். கொழும்பிலும் மலையகத்திலும் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு உரையாற்றினார்.
குறிப்பாக October மாதம் 10, 11 ஆகிய தினங்களில் மாத்தளையில் மத்திய மாகாண அமைச்சர் தலைமையில் நடைபெற்ற மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாவில் கலந்து கொண்டார்.

இவ்விழாவில் மத்திய மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். காலாச்சார ஊர்வலம் காட்சிக்கூடம் கலைநிகழ்ச்சிகள் என்பன இடம்பெற்றன.

இம் முறை இவ் சாகித்திய விழாவில் மலையத் தமிழ் எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்காது அவர்கள் புறக்கணிக்கப்ட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.