ஒருவரது தனிப்பட்ட அனுபவத்தில், அவலங்களிலேயே பெரிய அவலம் தனது நம்பிக்கைகள் சிதைந்து செல்வதற்கு தானே சாட்சியாக இருப்பதுதான். நாம் ஒன்றை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்க நாம் கனவிலும் நினைத்துப் பார்க்காத பல விடயங்கள் நம் முன் நிஜமாகியிருக்கும் சூழலில் சில நாட்களாகவே சில கேள்விகள் மனதை அரித்துக் கொண்டிருந்தன. புரட்சிகர அரசியலின் தார்மீக நியாயம் என்ன? அப்படி ஏதாவது இருக்கிறதா? உண்மையிலேயே மார்க்சியம், புரட்சிகர அரசியல் மற்றும் விடுதலை அரசியல் என்ற சொற்களுடன் தமது வாழ்வையே நகர்த்திக் கொண்டிருப்பவர்களுக்கு இது ஒரு வகையான அதிர்ச்சிக்கும் விரக்திக்கும் உரிய காலமாகத்தான் இருக்க முடியும் ஆனால் அதிர்ச்சி, விரக்திக்கு அப்பால் விடயங்களை பாசீலிக்க வேண்டிய தேவை நமக்குண்டு என்ற அடிப்படையில்தான் இந்த கட்டுரையை எழுதுகின்றேன்.

ஹூயுகோ சாவேஸ் & பிடல் காஸ்ட்ரோ

நான் எனது பாடசாலைக்காலத்தில் பிடெல் காஸ்ரோவின் வரலாறு ‘என்னை விடுதலை செய்யும்’ என்ற நூலைப் படித்ததிலிருந்து அவரின் எழுத்துக்களுக்காக ஏங்கித் திரிந்த காலத்தை இன்றைய சூழலுடன் பொருத்திப் பார்க்கும்போது கவலைப்படுவதைத் தவிர வேறு என்னதான் செய்ய முடியும்? ஆனால் மேற்படி நிலைமைகள் ஏற்படுத்தியிருக்கும் சோர்வுக்கு அப்பால் இன்றைய காலத்தின் பின்புல அரசியல் குறித்து பார்ப்பதே எனது நோக்கம். அவ்வாறு பார்ப்பதுதான் அடுத்த தலைமுறை மத்தியில் ஆரோக்கியமான உரையாடல்களுக்கு வழிவகுக்கும். அது வெற்று சுலோக அரசியலையும் வெறும் உணர்ச்சிவசப்படுதல்களையும் கடந்து செல்லக் கூடியதொரு சிந்தனைப் பாராம்பரியத்திற்கு வழிசமைக்கும். கடந்த மாதம் வரை உலக புரட்சிகர அரசியலில் ஆதர்ஸ்மம் கியூபா என்றும் புரட்சிகர அரசியலின் விழைநிலம் லத்தீன் அமெரிக்கா என்றும் என்னிடம் ஒரு நம்பிக்கையிருந்தது. இப்பொழுது அந்த நம்பிக்கையை நிரந்தரமாக நிறுத்திவிட்ட ஒரு முற்றுப்புள்ளி மட்டும்தான் துருத்திக் கொண்டு தெரிகிறது.

2

உலகின் பல பாகங்களிலும் கிறிக்கட், புட்வோல் இன்னும் என்னென்னவோ கேளிக்கைகள் அரங்கேறிக் கொண்டிருக்க மனித குலமே வெட்கித் தலைகுனியும் வகையில் ஈழத் தமிழர்களின் போராட்டம் பயங்கரவாத சுலோகத்தின் கீழ் மிக நுட்பமாக அழித்தொழிக்கப்பட்டது, பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். ஒரு தேசிய இனம் தனது அடிப்படைகளை இழந்து நடு வீதிக்கு வந்தது. இது ஒரு பக்கமென்றால் அடுத்தது இந்த வரலாற்று காலம் நமக்குத் தந்திருக்கும் படிப்பினைகள். என்னைப் பொருத்தவரையில் இந்தச் சூழல் தரும் மிகமுக்கிய படிப்பினை என நான் பார்ப்பது இன்றைய அரசியலின் அரசியலை விளங்கிக் கொள்வதற்கு கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தைத்தான்.

ஒரு வெற்றி தரும் படிப்பினைகளை விட ஒரு தோல்வி தரும் படிப்பினைகள் அதிக கனதியுடையவை. ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டம் இன்று கண்டிருக்கும் தோல்வி நமக்கு முன் நிறுத்தியிருக்கும் அடிப்படைக் கேள்வி அறவழியற்ற உலக அரசியலை நாம் எவ்வாறு அறவழியில் எதிர்கொள்வது? அடிப்படையில் அரசியல் என்பதே நலன்களை கையாளும் கலையாக இருக்கும் போது அரசுகளுக்கிடையிலான உறவில் புரட்சி, விடுதலை மற்றும் தார்மீக நியாயம் இப்படியான சொற்களுக்கு ஏதாவது உயிர்ப் பெறுமதி இருக்க முடியுமா? அப்படியிருப்பதாக நம்பியது நமது முட்டாள்தனமா? நாம் அரசியலின் அரசியலை விளங்கிக் கொள்ள முடியாதவர்களாக இருந்திருக்கிறோமா?

3

இது இடது – வலது என்ற அரசியல் பிரிவு நிலைகள் அர்த்தமிழந்து கிடக்கும் காலம். நான் இதனை அரசியல் அர்த்தத்தில் இடதில் வலதும், வலதில் இடதும் கலந்து பின்னிப் பிணைந்து கிடக்கும் இடவலக் கலவிக் காலம் என்பேன். குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் கெட்டித்தனத்தில்தான் ஒருவரது அல்லது ஒரு சமூகத்தினது வெற்றி தங்கியருக்கிறதே தவிர இங்கு இடது வலது என்றவாறான அரசியல் பிரிவுநிலைகளிலல்ல.

90களில் சரியத் தொடங்கிய சோவியத்தின் சிகப்புநிற அரசியல் செல்வாக்கு படிப்படியாக உலக சோசலிச முகாம்களை தேசியவாத அரசியல் நோக்கி நகர்த்தியது, அதுவரை சோவியத்தின் இராட்சத பலத்தின் நிழலில் தமது இருப்பை உறுதிப்படுத்திவந்த தேசங்கள் போக்கிடமற்று புதிதாக உருவெடுத்த அமெரிக்கா தலைமையிலான ஒற்றை ஒழுங்கில் கலந்தன. பொதுவாக இந்த பின்சோவியத் காலத்தை அமெரிக்க மேலாதிக்க அரசியல் காலம் என பலர் கணித்தாலும் அது முற்றிலும் சரியானதொரு கணிப்புத்தானா என்பது பிறிதொரு விவாதத்திற்குரியதாகும். ஏனென்றால் இந்த காலத்தில் அமெரிக்க தலைமையிலான அரசியல் ஒழுங்கொன்று உருவாகியிருந்தாலும் அதன் எதிர் அணியில் நிறங்களற்ற அரசியல் கூட்டுக்களும் உருவாகின. குறிப்பாக சீனா, ரஷ்யா சார்ந்து அவ்வாறான நாடுகள் தமது இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ள முயன்றன. கியூபா, பொலிவியா, நிக்கரகுவா போன்ற நாடுகளும் அமெரிக்க எதிர்நிலையில் தமது இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் சீனா மற்றும் ரஷ்ய அணியில் கைகோர்த்துக் கொண்டன.

இங்கு கவனிக்க வேண்டிய விடயம், இந்த கூட்டுக்கள் கொள்கை சார்ந்தல்லாமல் அரசியல் நலன்கள் சார்ந்ததாகவே அமைந்திருந்தன என்பதே. குறிப்பாக சோவியத்தின் சிதைவிற்குப் பின்னர் உருவெடுத்த புதிய அரசியல் சூழலில் அரசியல் கோட்பாடு, புரட்சிகர இலக்கு என்றவாறான அர்த்தத்தில் தேசங்களுக்கு இடையிலான கூட்டுக்கள் உருவாகியிருக்கவில்லை. இருவேறுபட்ட நம்பிக்கைகள் சார்ந்த சீனாவிற்கும் ஈரானுக்கும் இடையில் நிலவும் உறவிற்கு என்ன அர்த்தத்தை நாம் கற்பிக்க முடியும்? நலன்கள் என்ற ஒன்றைத்தவிர வேறு என்ன விளக்கத்தைச் சொல்ல முடியும்? ரஷ்யாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையில் நிலவும் உறவை எந்த கருத்தியல் கொண்டு விளக்க முடியும்? எனவே இந்த பின்புலத்தில் கவனம் கொண்டால் ஒரு உண்மை நமக்கு வெள்ளிடைமலையாகும். அதாவது பின் சோவியத் காலத்தில் அமெரிக்க தலைமைலான வலுவான அரசியல் தளம் ஒன்று உருவாகியிருந்தாலும் அது ஒன்று மட்டுமே அரசியல் தளமல்ல. சீனா சார்ந்தும், ரஷ்யா சார்ந்தும், லத்தீனமெரிக்க கண்டம் சார்ந்தும் பல அரசியல் தளங்கள் உருவெடுத்தன. இவைகள் தத்தமது நலன்கள் சார்ந்து தமக்குள் உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டன.

இவ்வாறு ஏற்படும் அரசியல் கூட்டுக்கள் அனைத்தும் பெரும்பாலும் அமெரிக்கா தலைமையிலான அரசியல் அணிக்கு எதிர்நிலையில் இருப்பதால் இவைகள் ஏதோ புரட்சிகரமான முற்போக்கான அணிகள் போன்ற மாயைகள் நிலவியது ஆனால் உண்மையில் அப்படியொன்றும் கிடையாது. குறிப்பாக சீனா, மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக நடைமுறைகள் குறித்த விவாதங்களுக்கு இடமற்ற எதேச்சாதிகார அரசியல் ஒழுங்கையே இன்றுவரை கொண்டிருக்கிறது. ரஷ்யா செச்னியா விடயத்தில் தனது கோர முகத்தை தெளிவாக நிரூபித்திருக்கிறது. பாக்கிஸ்தான் போன்ற நாடுகளின் எதேச்சாதிகார பிற்போக்குத் தனம் பற்றி நாம் விவாதிக்க வேண்டிய தேவையே இல்லை. எனவே பின்சோவியத் கால அரசியல் ஒழுங்கை பலவாறான நலன்கள் சார்ந்த அரசியல் சக்திகளின் போட்டிவாத அரசியலின் காலமென்றே நாம் வரையறுக்கலாம். இங்கு அரசியல் குழம்பிக் கிடக்கின்றது. குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் போட்டியில் ஒவ்வொருவரும் தமது பங்கிற்காக இயங்குகின்றனர்.

4

மீண்டும் லத்தீனமெரிக்க அரசியலுக்கு வருகிறேன். இங்கும் நான் மேலே குறிப்பிட்டது போன்றுதான் நிலைமைகள் இருக்கின்றன. இன்றைய லத்தீனமெரிக்க அரசியல் என்பது இரண்டாக பிரிந்து கிடக்கிறது. அமெரிக்க கொள்கையுடன் இணைந்து பயணிக்கும் நாடுகள் ஒரு புறமாகவும், எதிர்நிலையில் நிற்கும் நாடுகள் இன்னொரு புறமாகவும் இருக்கின்றன. இதில்தான் கியூபா, பொலிவியா, வெனிசுவேலா போன்ற நாடுகள் முன்னணி வகிக்கின்றன. காஸ்ரோ தலைமையிலான கியூபா கடந்த 50 வருடங்களுக்கு மேலாக அமெரிக்காவிற்கு வளைந்து கொடுக்காத ஒரு அரசியல் வரலாற்றைக் கொண்டிருக்கிறது என்பதை எவரும் மறுக்க முடியாதுதான். இந்த வளைந்து கொடுக்காத பண்புதான் இடதுசாரி அரசியல் செயற்பாட்டாளர்கள் மத்தியில் அது ஒரு ஆதர்ஸம நாடாக மாறியதற்குக் காரணம். சோவியத்தின் வீழ்ச்சி, சீனா தேசியத்திற்கு மாறியமை போன்றவற்றின் பின்புலத்தில், மொஸ்கோவிற்கும் பீங்கிங்கிற்கும் கொள்கைப் பயணம் செய்துகொண்டிருந்த இடதுசாரிகள் போக்கிடமற்று கியூபாவை வலம்வரத் தொடங்கினர் ஆரம்பத்தில் லத்தீனமெரிக்க மார்க்சிய அனுபத்தை அலட்சியம் செய்த மரபுவழி மார்க்சியர்களும் பின்னர் அதனை நோக்கி நகர்ந்தனர்.

லத்தீனமெரிக்க புரட்சிகர அரசியல் என்பது பொதுவாக இடதுசாரி அரசியலாக கணிக்கப்பட்டாலும் அடிப்படையில் அவைகள் தேசிவாதத்திற்கு முதன்மையளிக்கும் அரசியலாகவே இருக்கின்றன. சோவியத்தின் வீழ்ச்சி மற்றும் சீனத்தின் தேசியவாதம் நோக்கிய திருப்பம் ஆகியவற்றின் பின்புலத்திலேயே இதனை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். சேகுவேராவுடன் இணைந்திருந்தவரும் கியூப புரட்சியின் ஆதரவாளருமான பிரஞ்சு மார்க்சியர் ரெஜி ரெப்கே இனி தேசியத்துடன் இணையாத சோசலிசம் உயிர்வாழ முடியாது என்று குறிப்பிட்டதை இந்த பின்புலத்தில் வைத்துத்தான் நாம் விளங்கிக் கொள்ள முயல வேண்டும். எனவே இங்கு புரட்சிகர அரசியல் ஒழுங்கு என்பது அந்தந்த குறிப்பிட்ட நாடுகளின் நலன்களுடன் மட்டுப்பட்டிருந்ததேயன்றி உலகளாவிய புரட்சிகர அரசியல் ஆதரவு என்ற ஒழுங்கில் ஆரம்பத்திலிருந்தே இணைந்திருக்கிவில்லை. அவ்வாறானதொரு பண்பு சேகுவேராவிடம் மட்டுமே இருந்தது எனலாம். அந்தவகையில் சேயை லத்தீனமெரிக்காவின் இறுதிப் புரட்சியாளர் என நாம் கணிக்கலாம். ஆரம்பத்தில் லத்தீனமெரிக்க கண்டம் தழுவியதாக இருந்த புரட்சிகர அரசியல் ஆதரவு கூட படிப்படியாக மங்கத் தொடங்கியது. சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவுடனான உடன்பாடுகளுக்கமைய கொலம்பியாவுடனான உறவுகளை துண்டிக்கும் முடிவை நோக்கி ஈவேசாவேஸ் சென்றிருப்பதை நாம் இந்த பின்னணியில் லைவத்துத்தான் விளங்கிக் கொள்ள வேண்டும்.

கடந்த பலதசாப்தங்களாக பல்வேறு போராடும் சக்திகளுக்கும் கியூப எழுச்சியும் அமெரிக்க எதிர்ப்பு நிலையில் கியூபா கடைபிடித்துவரும் உறுதிப்பாடும் ஒரு வகையான ஈர்ப்புக் கவர்ச்சியைக் கொடுத்தது உண்மைதான். இதில் தமிழகம் மற்றும் ஈழத்தில் இயங்கிய இடதுசாரி நம்பிக்கையாளர்களும் அடங்குவர். அவ்வாறானவர்கள்தான் கியூபா ஜ.நாவில் மனிஉரிமைகள் கழகத்தில் சிறிலங்காவிற்கு ஆதரவாக வாக்களித்து தனது நிஜ முகத்தை காட்டியபோது அதிர்ச்சிக்குள்ளாகினர். இது குறித்து லத்தீனமெரிக்க சிந்தனைகளை பரப்புவதை தனது இலக்காகக் கொண்டு இயங்கிவரும் எழுத்தாளர் அமரந்தா கியூப அதிகாரிகள் மற்றும் புத்திஜீவிகள் குழுவிற்கு ஒரு அதிருப்தி கடிதத்தையும் எழுதியிருந்தார். (அது குறித்து தோழர் ஷோபாசக்தி வெளிப்படுத்திய எதிர் கருத்துக்களை நான் இங்கு கருத்தில் எடுக்கவில்லை) அமரந்தாவின் கடிதத்திற்கு பதிலளித்திருக்கும் மார்க்சிய எழுத்தாளரும் தற்போது கியூபாவில் தங்கியிருந்து இயங்கிவருபவருமான ராண் ரெட்நூர் அழித்திருக்கும் பதில் கருத்தில் கொள்ளத்தக்கது.

“மார்ச் மாதத்தில் கொலம்பிய ஆயுதப் போராட்டக் குழுவின் பின்னடைவிற்கு பிடெலும் சாவேசும் என்ன எதிர்வினையாற்றினார்கள் என்பதை நினைவுபடுத்திப் பாருங்கள். இன்றைய லத்தீன் அமெரிக்காவில் மீதியிருக்கும் ஒரே ஆயுதப் போராட்ட இயக்கம் கொலம்பிய குழு மட்டுமே. இந்நாளில் கியூபாவும் அதன் நேசநாடுகள் இரத்தம் சிந்தாமல் வெற்றி பெறுவதையே விரும்புகிறார்கள். அதுபோன்ற தியாகங்களுக்கு மக்கள் தயாராக இல்லாதபோது அவ்வாறு முடிவு செய்வதும் சரியே.

உங்களது (ஆசிய கண்டத்தில்) பெரும்பான்மை மக்களின் முன்னேற்றத்திற்கும் நல்வாழ்விற்குமான சாத்தியபாடுகள் முற்றிலும் வேறானவை. கியூபாவின் வெளியுறவுக் கொள்கை சந்தர்ப்பவசமானது என்று வருத்தத்துடன் தெரிவிக்கும் இவ்வேளையில், அதன் சில உள்நாட்டுக் கொள்கைகளும் கூட அவ்வாறானவை என்பதை தெரிவிக்கிறேன் இதில் நாம் என்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை”

அமரந்தாவிற்கு பதிலளித்திருக்கும் பிறிதொரு மார்க்சியரும் அவுஸ்திரேலிய சோசலிச கூட்டணியைச் சேர்ந்தவருமான க்ரிஸ் ஸ்லீ நாம் கவனம் கொள்ள வேண்டிய முக்கியமானதொரு விடயத்தை அடிக்கோடிட்டிருக்கிறார்:

“கியூபாவுக்கும் தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கும் ஆதரவாளன் என்றளவில் நான் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளேன். ஆனால் இதில் ஆச்சரியமடையவில்லை. இயன்றளவு பல நாடுகளுடன் நட்புறவு கொள்ள எண்ணும் கியூப வெளியுறவுக் கொள்கை, இந்த நாடுகளிலுள்ள அரசின் தன்மையை கணக்கில் கொள்ளவில்லை.”

இந்த இடத்தில் க்ரிஸ் ஸ்லீ குறிப்பிட்டிருப்பது போன்று கியூபாவின் நட்புறவுக் கொள்கையானது குறிப்பிட்ட நாடுகளின் உள்ளக நிலைமைகளை கருத்தில் கொண்டல்லாமல் அதன் தேசிய நலன்கள் சார்ந்ததாகவே இருக்கின்றது என்பதே துலாம்பரமானது. என்னளவில் இது ஒன்றும் ஆச்சரியமான உண்மையல்ல. கியூபா மட்டுமல்ல அனைத்து நாடுகளும் தத்தமது நலன்கள் சார்ந்தே வெளியுறவுக் கொள்கைகளை பேணிவருகின்றன. இங்கு லத்தீன் அமெரிக்காவின் சில நாடுகளை நாம் தனித்து பார்க்க முற்பட்டதே கியூபாவின் முடிவு நமக்கு அதிர்ச்சிக்குரியதாக இருக்கக் காரணம். இப்பொழுது எல்லாம் தெளிவாகியிருக்கும் என்றே நம்புகிறேன்.

5

இங்கு நாம் ஒரு விடயத்தை தெளிவாக குறித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது நன்பர்களே! அதாவது அரசினையும் புரட்சிகர அரசியலையும் பகுத்துப் பார்க்கும் அரசியல் பார்வை நமக்கு தேவை என்பதுதான் அது. அவ்வாறானதொரு பார்வை நம்மிடம் இல்லாததால்தான் கியூபாவின் முடிவு நமக்கு அதிர்ச்சியளிப்பதாக இருந்திருக்கிறது என்றே நான் எண்ணுகிறேன். நாம் பொதுவாகவே கியூபா, வெனிசுவேலா, பொலிவியா போன்ற நாடுகளையும், புரட்சிகர அரசியலையும் இணைத்து புரிந்து வந்திருக்கிறோம். நாடுகள் என்ற ரீதியில் அவற்றின் தேசிய நலன்கள் சார்ந்த இயக்கத்திற்கும் அதில் புரட்சிகர அரசியலின் இயங்குநிலை குறித்தம் நாம் கணிக்கவில்லை. இதுதான் நமது பார்வைக் குறைபாட்டிற்கு காரணம். நமது பார்வைகள் குறைபாடுடையதாக இருப்பது ஒரு பிழையல்ல, திறந்த கலந்துரையாடல், கருத்தாக்கம் பின்னர் விவாதம் இப்படியாகத்தான் நமது உரையாடல் வளர்ந்து சென்றிருக்கிறது, அதுதான் இயங்கியலும் கூட.

இங்கு நான் அழுத்திச் சொல்ல முயல்வது என்னவென்றால் நான் மார்க்சியத்தையோ அல்லது விடுதலைசார் அரசியலையோ நிராகரிக்கவில்லை, ஆனால் அவைகள் நமது சூழல் மற்றும் தேவைகளிலிருந்து நோக்கப்பட வேண்டுமென்றே வாதிடுகிறேன். தேவையில்லாமல் அன்னிய அரசுகளின் நிகழ்ச்சிநிரல்களுக்குள் மூக்கை நுழைக்க வேண்டிய தேவை இனியும் நமக்குத் தேவையில்லை என்றும் அவர்களது நிகழ்ச்சிநிரலை நமது சூழலுக்குள் திணிக்க வேண்டியதில்லை என்றும்தான் நான் வாதிட முயல்கிறேன். பிடெல் அமெரிக்காவை எதிர்க்கிறார் என்பதற்காக மட்டுமே நாம் இங்கு எதிர்க்கத் தேவையில்லை, பிடெல் எதிர்ப்பது தனது தேசிய நலன்களிலிருந்தே அன்றி உலகளாவிய நன்மைக்காகவல்ல என்ற உண்மையை உணர்ந்து நாம் நமது செயற்பாடுகளை வடிவமைத்துக் கொள்ள வேண்டும் என்றே வாதிடுகிறேன். 

நமது சூழலில் அவ்வாறான தேவை இருக்குமாயின் அது குறித்து நமது சூழலுக்கு ஏற்ப நடவடிக்கைளை எடுக்கலாம். இப்படியொரு பார்வைதான் நமது தமிழ்ச் சூழலுக்கு தேவை என்றே குறிப்பிடுகிறேன். ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அதிர்ச்சியடைந்த இந்திய மாவோயிஸ்ட் அமைப்பு அந்த தோல்வியில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டுமென்ற அர்த்தத்தில் இருபது பக்க அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கின்றது. என்னளவில் சொல்வேன் புலிகளின் தோல்வியில் இருந்து கற்றுக் கொள்வதற்கு முன்னர் அவர்கள் தங்களை மாவோயிஸ்ட் என்று அழைக்கும் நடைமுறையை மாற்றி இந்திய சூழலுக்கு அமைவாக பிறிதொரு பெயரில் இயங்குவது அவசரமானது. இந்தியாவை பலவீனப்படுத்துவதை குறியாகக் கொண்டியங்கும் ஒரு நாட்டின் தலைவரான மாவோவின் சிந்தனைகளின் நீட்சியாக தம்மை அப்பட்டமாக அடையாளப்படுத்திக் கொள்வதானது ஒருபோதுமே அவர்களுக்கு இந்திய மத்தியதர வர்க்கத்தின் மத்தியில் ஆதரவை பெற்றுக் கொடுக்கப் போவதில்லை. மாவோவிடமிருந்து கற்றுக் கொள்ளலாம் ஆனால் இந்தியச் சூழலில் மாவோ ஒரு போதும் தலைவராக முடியாது. இவ்வாறான பார்வைகளை உள்ளடக்கி புதிய சிந்தனைகளே இன்று நமக்குத் தேவை என நான் கருதுகிறேன்.

இங்கு பிடெல் மற்றும் பல லத்தீனமெரிக்க அரசிலாளர்களுக்கு, தமிழர் அரசியல் பற்றி தெரியாது, அது குறித்து நாம் அவர்களது கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை என்றவாறான அர்த்தமற்ற உரையாடல்கள் பயனற்றது நண்பர்களே! ஒரு புரட்சிகர அரசு என்று தன்னை நிறுவிக் கொள்ள முயலும் அமைப்பு அல்லது நாடு தான் எடுக்கும் முடிவு தனது புரட்சிகர அரசியலின் தார்மீக நியாயத்திற்கு ஏற்புடையதுதானா என்பதைப் பரிசீலித்தே முடிவுகளை எடுக்க வேண்டும். கியூபா அவ்வாறு நடந்து கொள்ளவில்லை, அது தனது அமெரிக்க எதிர்ப்பு என்ற தன்னல அரசியலில் கவனம் கொண்டிருந்ததேயன்றி ஒட்டுமொத்த மானுட நீதி தழுவிச் சிந்திக்கவில்லை. சில தசாப்தங்களாக நமக்கு ஆதர்ஸ்மாக இருந்து கியூபா ஏன் அவ்வாறு சிந்திக்கவில்லை என்றால் இன்றைய உலக அரசியல் சூழலில் அப்படியொன்று இல்லை என்பதால்தான். ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் இருக்கும் வரை மார்க்சியம், புரட்சிகர அரசியல் செயற்பாடுகள் குறித்த உரையாடல்களும் இருக்கவே செய்யும் ஆனால் அந்த புரட்சிகர அரசியல் செயற்பாடுகளுக்கு எல்லைகள் தாண்டிய பெறுமதி இருக்கப்போவதில்லை என்பதே எனது வாதம்.

விவாதங்கள் தொடரட்டும்…

- யதீந்திரா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It