கடந்த மூன்று இதழ்களில் வெளிவந்த பேராசிரியர் காஞ்சா அய்லைய்யா அவர்களின் பேட்டி, இந்த இதழிலும் தொடர்கிறது

நீங்கள் பல தடைகளைக் கடந்து, உலக அளவில் உங்களை நிரூபித்திருக்கிறீர்கள். இளம் ஆய்வாளர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் முன்மாதிரியாகவும் திகழ்கிறீர்கள். அவர்கள் அறிவுத்தளத்தில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து என்ன கூற விரும்புகிறீர்கள்?

இந்தியாவில் உள்ள பெரும்பான்மை மக்களின் வாழ்க்கை என்பது, இன்னமும் உலகத்தால் விளங்கிக் கொள்ளப்படாத, அறியப்படாத ஓர் அறிவுக் களஞ்சியமாகவே இருக்கிறது. இந்திய மக்களின் மனங்களில் உலகத்திற்கான அறிவு கொட்டிக் கிடக்கிறது. நான் கிராமங்களை கூறுகிறேன். அறிவியல், தொழில்நுட்பம், உற்பத்தி, இந்து மத எதிர்ப்பு ஆகியவை நூல்களில் கொண்டுவரப் படுவதில்லை; பதிவு செய்யப்படுவதில்லை. என்னைப் பொருத்தவரை, அய்ரோப்பா, சீனா போன்றவை சோர்ந்து விட்டன. நல்லவேளையாக சுயநலமிக்க பார்ப்பனியத்தால் - படைப்பாற்றலையும், அறிவாற்றலையும் தரமுடியாமல் போனதால், இன்னும் இந்தியாவின் கிராமங்களிலுள்ள தலித் - பெரும்பான்மை சமூகங்களில் அறிவுச் சுரங்கங்கள் இருக்கின்றன. பார்ப்பனியத்தையும், இந்து மதத்தையும் வென்று விட்டால் மிஞ்சுவது எதிர்காலத்தில் அறிவியலே. உங்கள் கிராமத்தில் அமர்ந்தோ, அறிவியல் சோதனைக்கூடத்தில் அமர்ந்தோ இவ்வுலகை மாற்ற முடியும். இதைத்தான் இணையம் சாத்தியமாக்கியிருக்கிறது. இருப்பினும், உலக அறிவியலின் பார்வையில் படாமல் இன்னமும் மறைவாக இருக்கும் ஒரு பகுதி இருக்கிறது. அதுதான் இந்தியா. தலித் - பெரும்பான்மை இந்தியா! இதைத்தான் நான் இந்நூலில் சொல்லியிருக்கிறேன். 

kancha_anchalaiah_341நாம் நம் மக்களின் மனங்களிலிருந்து பார்ப்பனியத்தை களைந்தெறிய வேண்டி இருக்கிறது. பார்ப்பனியத்தைவிட, இந்து மதத்தையே தூக்கியெறிய வேண்டியிருக்கிறது. நம் நாட்டை இந்து மதத்திலிருந்து விடுவிக்க வேண்டும். இதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். இந்தியா ஒரு கிறித்துவ நாடாகவோ, பவுத்த நாடாகவோ, இஸ்லாமிய நாடாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். எனக்குக் கவலையில்லை. ஆனால், அது ஓர் இந்து நாடாக மட்டும் இருக்கக் கூடாது என்பதே முக்கியமானது. ஏனெனில், இந்து மதம் அறிவியலுக்கெதிரானது. மனித இனத்திற்கெதிரானது. உற்பத்திக்கெதிரானது.

மதச்சார்பற்ற இந்துக்களையும் நாம் கையாள வேண்டியிருக்கிறது. வகுப்புவாத இந்துக்களிடம்கூட அத்தனை பிரச்சனையில்லை. ஆனால், மதச்சார்பற்ற இந்துக்கள்தான் இந்து மதத்தை காப்பாற்றுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ இந்து பரிஷத்காரர்கள் கூட இந்து மதத்தைக் காப்பாற்ற முடியாது. எடுத்துக்காட்டாக, "தேசிய இந்து மதசார்பற்ற உதவித் தொகை'யை எடுத்துக் கொள்ளுங்கள். அவை மேற்கு வங்கத்திலிருந்து, மகாராட்டிராவிலிருந்து, தமிழ் நாட்டிலிருந்து வருகின்றன. மகாராட்டிரா பவுத்தத்தோடு தொடர்புடையது. தமிழ் நாடு பெரியாரோடு தொடர்புடையது. மேற்கு வங்கம் கம்யூனிஸ்டுகளோடு தொடர்புடையது. ஆனால், வங்கம் இன்று உலகின் மிக ஏழ்மையான பகுதியாகிவிட்டது. ஆப்பிரிக்காவிலுள்ள நாடுகளை விட வங்கம் இன்று ஏழ்மையான இடமாகிவிட்டது. வங்கத்தில் தலித் அறிவுஜீவி என்று எவரும் கிடையாது. பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்துகூட ஓர் அறிவுஜீவிகூட இல்லை. இந்த மதச்சார்பற்ற இந்துக்களை, மிதவாத இந்துக்களை கையாளாமல் விட்டால், இந்து மதத்தை ஒழிக்க முடியாது. அவர்கள் இந்து மதத்தை காப்பவர்களாக மாறிவிட்டனர். “வகுப்புவாத இந்து மதம் நல்லதல்ல. ஆனால், இதற்கு இந்து மதத்தை குற்றம் சொல்ல முடியாது’ என்கின்றனர்.

இந்து மதத்தில் உள்ளவற்றைப் பாருங்கள். கொலை செய்யும் தெய்வங்களெல்லாம்கூட இருக்கின்றன. தெய்வீகம் என்று சொல்லப்படக்கூடிய இடத்திலிருந்து வரும் நேர்மறையான அன்பைக்கூட புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஒழுக்கத்தை அறிவுறுத்துபவையாக அவை மாறும்போது - நான் இந்த இந்து தெய்வங்களைவிட புத்தர், ஏசு, நபிகள் ஆகியோர் அறிவுறுத்திய ஒழுக்கங்களையே பரிந்துரைப்பேன். நிச்சயமாக பிரம்மன், இந்திரன், ராமன், கிருஷ்ணன் ஆகியோர் செய்த கொலைகள், பாலியல் வன்முறைகள், திருட்டுத்தனங்கள் ஆகியவற்றை அல்ல. நான் வாத்சாயனாரின் காமசூத்திரத்தை பரிந்துரைக்க மாட்டேன். 64 வகைகளில் பாலியல் தொழிலாளியுடன் பாலுறவு கொள்வது எப்படி என்பதை விளக்கும் இவைகளை கற்றுக் கொடுத்தால், எய்ட்ஸ்தான் பரவும். ஆண் - பெண் உறவு நிலைமைகள் ஏசு கூறியதைப் போல இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். புத்தரைப் பொருத்தவரை, இந்த விஷயத்தில் அவருடைய கருத்து என்னவாக இருந்தது என்பது குறித்து போதுமான தகவல்கள் இல்லை. ஆனால், ஏசு என்ன சொல்கிறார் என்றால், “கடவுள் கணவனையும் மனைவியையும் சரிபாதியாக ஓருடலில் படைத்தார்’ என்கிறார். இதில் ஒரு நீதி இருக்கிறது. அதனால்தான் அய்ரோப்பாவிலும், அமெரிக்காவிலும் தங்கள் துணையை தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் முறையுள்ளது.

ஆனால், இந்தியாவில் உள்ள இந்து மதத்தில், சாதியை அடிப்படையாகக் கொண்டு நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள்தான் நடக் கின்றன. காதல் திருமணங்களும், இந்து மதமும் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்க முடியாது. என்னுடைய போர், இனி மதச்சார்பற்ற இந்துக்களிடம்தான். இந்து மதத்தை தோற்கடிக்கவில்லையெனில், அதை அழிக்க முடியாது. கிறித்துவத்தைப் பரப்புவதை சுதந்திரமான மனித உரிமையாக விரிவுபடுத்த வேண்டும். நல்ல மதங்கள் மக்களிடையே போட்டி போட வேண்டும். போட்டி என்பது அடிப்படை உரிமை. இந்த இடத்தில் மார்க்சிஸ்டுகளோடு நான் ஒத்துப்போகவில்லை. நமக்கு இந்தியாவில் உலகளாவிய ஆன்மிகப் போட்டி ஒன்று தேவை.

உங்களுடைய இந்தக் கூற்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. கொஞ்சம் விளக்குவீர்களா?

நான் ஓர் எடுத்துக்காட்டு தருகிறேன். இந்தியாவிலும், இந்தியாவிற்கு வெளியிலும் மக்களை பணம் கொடுத்து கிறித்துவத்திற்கு மதமாற்றம் செய்வதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. மதம் பரப்புதல் என்றாலே கிறித்துவம் மட்டும்தான் செய்கிறது என்று நினைக்கிறார்கள். முஸ்லிம்கள் தங்கள் மதத்தைப் பரப்புவதில்லை. சூபி இனத்தவரே தங்கள் மதத்தைப் பரப்புகிறார்கள். பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் உள்ள தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் அனைவரும் மதத்தைப் பரப்புவதில் ஈடுபட்ட சூபியிஸத்தினால் இஸ்லாமுக்கு மாறினார்கள். அவர்கள் குரானோடு மக்களிடம் போனார்கள். அதனால்தான் மக்கள் மதம் மாறினார்கள். ஆனால் எங்கே முதலில் மதப் பரப்புரை நடந்திருக்கும்? உலகின் முதல் மதப்பரப்புரையாளர் அசோகர்தான். தன் மகனை, மகளை, தன் படைகளை புத்த மதத்திற்கு மாற்ற - அவர்களை சீனாவுக்கும், இலங்கைக்கும் அனுப்பவில்லையா? ஆகவே, கிறித்துவம் தான் முதலில் மதப் பரப்புரை செய்யப்பட்ட மதம் என்று ஏன் நினைக்க வேண்டும்? இந்தியாவில் வாழும் மதச்சார்பற்ற இந்துக்கள், இந்திய வரலாற்றை சரியாகத் தெரிந்து கொள்ள விரும்பவில்லை.

அசோகரின் மதம் பரப்பும் நடவடிக்கைகள் குறித்து ஒரு முழுநீளப் படம் எடுக்க வேண்டும். வெகுமக்கள் ரசனைக்கேற்ற வகையில் ஒரு நல்ல படம் அசோகரைப் பற்றி எடுக்க வேண்டும். ஹாலிவுட் ஆட்களிடம் இந்த கோரிக்கையை வைக்கப் போகிறேன். ஹாலிவுட் ஆட்கள் எடுத்தால் அது ஹிட் தான். சீனா, இலங்கை, ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் உள்ள மக்களை யார் புத்த மதத்திற்கு மாற்றியது? அசோகர்தான். பார்ப்பனியத்திற்கு படைப்பாற்றால் கொண்ட மூளை கிடையாது. பார்ப்பானின் மூளை பாறை போன்றது. அதிலிருந்து படைப்பாற்றல் வராது. தலித் - பெரும்பான்மை மக்களின் மூளை பச்சை மண் போன்றது. அதிலிருந்து என்ன வேண்டுமானாலும் விளையும்.

புத்த மதம், கிறித்துவ மதம், சூபியிசம் ஆகியவை போட்டியில் இருக்கட்டும். மக்கள் தேர்ந்தெடுக்கட்டும் தங்கள் மதத்தை. சந்தையில் நல்ல பொருளை வாங்குவதை மார்க்சியம் ஆதரிக்கிறது. பின் ஏன் அது மத விஷயத்திலும் நடக்கக் கூடாது? இந்து மதம் தோற்றுப் போய் நிற்கிறது. அது தலித்துகளையோ, பிற்படுத்தப்பட்டவர்களையோ கவரவில்லை. நேர்மறையான பிரதிகளே அதில் இல்லை. மனிதத் தன்மையுடைய கடவுள்களே இந்து மதத்தில் இல்லை. இருக்கும் எல்லா கடவுளர்களும் - பெண்ணை பாலியல் வன்முறை செய்பவர்களாகவும், கொலை செய்பவர்களாகவும்தான் இருக்கிறார்கள்.

ஆகவே என் மக்கள் ஏசு, புத்தர், நபிகள், மார்க்ஸ், அம்பேத்கர் ஆகியோரில் ஒருவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இந்தத் தேர்வின் மூலம் மார்க்சிஸ்டுகளாக சிலர் மாறலாம். அவர்களுக்கு மதமில்லை. பெரியார் இருந்தார். நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால், பெரும்பான்மையான மக்கள் மதத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இது, மதங்களின் காலம். முதலாளித்துவமும், முதலாளித்துவத்திற்குப் பிந்தைய காலகட்டமும் மதங்களை அழிக்கவில்லை. இன்னமும் இஸ்லாமும் கிறித்துவமும் தங்கள் மதத்தை விரிவாக்கம் செய்ய வும், ஜனநாயகப்படுத்தவும் போட்டியிடுகின்றன. புத்த மதமும் போட்டியில் இருக்கிறது. ஆகவே, இளம் ஆய்வாளர்களுக்கு நான் கூற விரும்புவதெல்லாம் இந்தியா மற்றும் இந்திய கிராமங்களில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் ஆன்மிகம் இவற்றை அடிப்படையாகக் கொண்டு கவனம் செலுத்துங்கள் என்பதே.

இந்திய மக்களிடையே போதுமான வாசிப்புத் திறன் இல்லை. பார்ப்பனியம் மக்களுக்கு வாசிப்பை மறைத்தும் மறுத்தும் வைத்திருந்தது. அதோடு பார்ப்பனியம் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும். ஒருபோதும் வாசிக்காது. திருமணமாக இருந்தாலும், ஏரோபிளேன் முதன்முதலில் விடும் பூஜையாக இருந்தாலும் சரி, அங்கே போய் மந்திரங்களை ஒப்பித்துவிட்டு வருவார்கள் புரோகிதர்கள். பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் இவர் என்ன சொல்கிறார் என்றே தெரியாது. "சமர்ப்பயாமே' என்றும் "ஸ்வாகா' என்றும் சொல்லி, அவர்களின் சொத்தை சுருட்டிக் கொள்வார்கள். அவர்களை ஒன்றாக வாழச் சொல்கிறாரா அல்லது நாளைக்கே விவாகரத்து பெற்றுக் கொள்ளச் சொல்கிறாரா அல்லது குழந்தை பெற்றுக் கொள்ளச் சொல்கிறாரா என்றுகூட நமக்குத் தெரியாது.

பவுத்தத்திலும்கூட பெரிதாக வாசிக்கும் பழக்கம் இருப்பதாக சொல்ல முடியாது. கிறித்துவமும், இஸ்லாமும் அப்படியல்ல. வாசிக்க வைப்பவை. அதனால்தான் கிறித்துவ உலகத்தில் கல்வி பரவுகிறது. அரசாங்கங்களால் அல்ல, தேவாலயங்களால் பரவுகிறது. சொல்லப் போனால், அரசைவிட தேவாலயங்கள்தான் அதிக மக்களுக்கு கல்வியறிவு அளித்திருக்கிறது. இஸ்லாமில் மதரசாக்கள் மசூதிகளால் கட்டப்பட்டன. ஆனால் நாம் இதில் கோட்டை விட்டோம். வாசிப்பதில் உள்ள முக்கியத்துவத்தை உணரத் தவறினோம். இன்றைக்கு இந்தியாவில் யாரும் வாசிப்பதேயில்லை. இது, மிகவும் வருத்தத்திற்குரியது. எனவே, வாசிப்புப் பழக்கத்தை மக்களிடையே அதிகரிப்பதற்கான செயலில் ஈடுபட வேண்டும். பைபிள் அனுபவங்கள் வழி நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. முதல் அச்சு எந்திரம் உருவானதே பைபிளை அச்சிடுவதற்காகத்தான். அச்சுத் தொழில்நுட்பம் வளர்ந்ததே பைபிள்களை வெவ்வேறு முறைகளில் அச்சிடுவதற்காகத்தான். கத்தோலிக்க பெண் துறவிகளும், அருட்தந்தைகளும் மதவுணர்வினால் செய்த தியாகத்தில் விளைந்தவைதான் இவையெல்லாம். எழுதுபவர் ஒருவராக இருக்கலாம்; ஆனால் விநியோகித்தவர்கள் பலர்.

நான், "போஸ்ட் இந்து இந்தியா' (இந்து இந்தியாவுக்குப் பிறகு) அல்லது "நான் ஏன் இந்து அல்ல' போன்ற நூல்களை எழுதும்போது, அதை வாசிக்க ஆளில்லையென்றால் நான் எழுதி என்ன பயன்? மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த ஊழியர்களை நியமித்தால் மட்டும் போதாது. வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டுவதற்கான பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும். அம்பேத்கரின் "சாதி ஒழிப்பு', புலேவின் "குலாம்கிரி', "நான் ஏன் இந்து அல்ல', "போஸ்ட் இந்து இந்தியா' போன்ற சில குறிப்பிட்ட நூல்களை எடுத்து, ஒரு பத்து லட்சம் மக்களையாவது வாசிக்க வைக்க வேண்டும். இதோடு சேர்த்து தலித் - பெரும்பான்மை மக்களில் ஒரு பகுதியினரை ஆங்கிலம் வாசிக்கவும், எழுதவும் கற்றுக் கொடுக்க வேண்டும். பிராந்திய மொழிகளில் உள்ள அறிவு என்பது ஒரு பகுதி அறிவுதான். காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை உள்ள மக்களுக்கு இது பயனளிக்காது. இந்தியாவை ஆங்கிலமயப்படுத்த வேண்டும்.

பிராந்திய மொழிகளின் ஆதிக்கத்தைப் பார்த்தோ, பார்ப்பனியத்தைப் பார்த்தோ நாம் அச்சப்படத் தேவையில்லை. ஏனெனில், அவை ஏற்கனவே சமஸ்கிருதமயமாகி இருக்கின்றன. நாம் நம்முடைய இந்திய ஆங்கிலத்தை வளர்ப்போம். அமெரிக்க ஆங்கிலமும் அய்ரோப்பிய ஆங்கிலமும் வெவ்வேறானவை. ஆங்கிலம் ஏற்கனவே நம்முடைய தேசிய மொழி. ஆகவே, ஆங்கிலத்தை நமது தேசிய மொழியாக ஏற்றுக்கொள்ள நாம் அச்சப்படக் கூடாது. நம் பழங்குடியின மக்களின் மொழிக்கு மீண்டும் நாம் போவது என்பது சாத்தியப்படாது. நாம் முற்போக்காகவும், உலக நடப்புகளை, அறிவியல் வளர்ச்சிகளை அறிந்து கொள்ளவும் ஆங்கிலத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டும். ஆங்கிலம் மட்டும் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான சொற்களைக் கொண்டுள்ளது. வருங்காலத்தில் குழந்தைகள், அரசுப் பள்ளிகளில் ஏன் ஆங்கில வழிக் கல்வி கற்றுக் கொடுக்கப்படவில்லை என்று கேள்வி கேட்கத் தொடங்குவார்கள்.

kancha_anchalaiya_331ஆகவே "பாம்செப்' போன்ற அமைப்புகள் பிரச்சாரம் செய்தால், 25 ஆண்டுகளில் இந்தியாவை தலித் மயமாக்கலாம். ஆங்கிலமயமாக்கலாம். எந்த மாதிரியான அறிவாளிகள் உலகில் உருவாவார்கள் என்று யாரும் முன்கூட்டியே கணிக்க முடியாது. ஒரு குக்கிராமத்திலிருந்து ஒரு காஞ்சா அய்லைய்யா இதுபோன்றதொரு ஆங்கிலப் புலமையையும், எழுத்துத் திறனும் கொண்டு உருவாவாரென்று அம்பேத்கர் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார். மார்டின் லூதர் கிங், ஒபாமாவைப் பற்றி நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். ஆனால், அவர்கள் அடித்தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். கல்வித் துறையில் பாடத் திட்டத்தில் நம்முடையவை வரவேண்டும். அதனால்தான் கல்வியில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்கிறேன். என்னுடைய Turning the pot tilling the land என்ற நூல்தான் இலக்கியப் பின்னணியில் வந்த கல்வி தொடர்பான நூல். நம்மிடம் நிறைய நூல்கள் வேண்டும். கதை நூல்கள் வேண்டும். அதன்பிறகுதான் நாம் பாடத்திட்டத்தில் நம்மைப் பற்றிய பாடங்களை சேர்க்க முடியும். எல்.கே.ஜி. முதல் சொல்லித்தரப்படும் A for applie கதை, A for ant என்றாக வேண்டும். B for buffalo, C for cattle என்றாக வேண்டும். C for cow நீக்கப்பட வேண்டும். நமக்கான சொற்களை அந்த கட்டத்திலிருந்தே உருவாக்க வேண்டும்.

பார்ப்பன இலக்கணங்களை ஒழிக்க வேண்டும். அவை Subject, object, predication என்று தான் இலக்கணத்தைக் கற்றுக் கொடுக்கின்றன. அதை எப்படி சொல்லித் தருகிறார்கள் என்று பாருங்கள். Rama killed Ravana இதில் ராமன் Object, ராவணன் Subject. செய்யும் செயல் கொல்வது இளம் வயதிலேயே கொலை செய்வதையா சொல்லித் தருவார்கள்? அதற்கு பதில், அவை இப்படி மாற்றப்பட வேண்டும். Farmer is tilling the land அல்லது Mother is cooking the food, Father is looking after the cattle என்பது இப்படி மாற வேண்டும் : Father should also cook the food and Mother should also look after the cattle. நாம் இப்போது ஆண் இருக்கும் இடத்தில் பெண்ணையும், பெண் இருக்கும் இடத்தில் ஆணையும் மாற்றிக் கற்றுக் கொடுக்க வேண்டும். இது, மிகவும் முக்கியம். Rama killed Ravana என்று இலக்கணத்தைக் கற்றுக் கொடுக்கும் இந்த தேசம் மாற வேண்டும். Krishna has stolen the butter. ஆக, கடவுளே திருடுகிறார் என்று தொடக்கத்திலேயே சொல்லிக் கொடுக்கிறார்கள். இதுவா தேவை? இல்லை. இந்தியாவிலிருந்து இந்த கடவுளர்களை முற்றாக நீக்க வேண்டும்.

வாத்சாயனாரின் காமசூத்திரத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட சிலைகளைக் கொண்ட கோயில்களை தரைமட்டமாக்க வேண்டும். இது, நமது குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டிய பண்பாடு அல்ல. பாலுறவு என்பது இயல்பானதாக இருக்க வேண்டும். இந்த பாழாய்ப்போன வாத்சாயனாருக்கு முன்பிருந்தே தலித் - பெரும்பான்மையினர் மத்தியில் மகிழ்ச்சியான பாலுறவு வாழ்க்கை பல நூற்றாண்டுகளாக நீடித்து இருந்து வந்தது தானே? நாம் பாலுறவை அறிவியலாகக் கற்றுக் கொள்ளலாம். அதை எதற்கு வாத்சாயனாரிடம் கற்றுக் கொள்ள வேண்டும்? பாலுறவு குறித்த நமது பிரதிநிதிகளை நாம் உருவாக்குவோம். அம்பேத்கரை மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். காந்தி இளம் பெண்களுடன் ஆடையின்றி நிர்வாணமாக உறங்கினார். அம்பேத்கரோ இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அதுதான் இயல்பான வாழ்க்கை. ஆக, ஒவ் வொரு விஷயத்திலும் நாம் சாத்தியமான மாற்று ஒன்றை உருவாக்க வேண்டி இருக்கிறது.

ஆன்மிகப் பாசிசத்தின் (இந்து மதம்) உருவாக்கம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. நான் பின்னோக்கிப் பார்க்கிறேன். பாசிசம் என்றால் என்ன? ஒடுக்கும் தன்மை யுடைய, அழிக்கக்கூடியது, உலகளாவிய அளவில் எடுத்துக் கொண்டால், போருக்கு இட்டுச் செல்வது பாசிசம் என்று பிரதிகள் நமக்கு பாசிசம் பற்றிக் கூறுகின்றன. ஜெர்மனியிலிருந்தும், இத்தாலியிலிருந்தும் இது தோன்றியதாக நாம் அறிகிறோம். ஹிட்லரும், முசோலினியும் எடுத்துக்காட்டுகள். உற்று நோக்கினால், இந்து மதத்திற்கும் நாஜிக்களின் தத்துவத்திற்கும் "ஸ்வஸ்திக்' சின்னம் உட்பட நிறைய தொடர்பிருக்கிறது.

ஹிட்லரே நாஜிக்களை ஆரியர்கள் என்றுதான் குறிப்பிட்டார். நான் இந்திய ஆரியர்களை நாஜிக்களோடு பொருத்திப் பார்த்தேன். ஜெர்மனியில் ஆரியர்களுக்கு தொன்மையான வேர்கள் கிடையாது. ஆனால், இந்தியாவில் உள்ளது. பார்ப்பனர்கள் ஜெர்மனியிலிருந்து வந்தார்களா அல்லது ஈரானிலிருந்தா என்பது குறித்து குழப்பம் நிலவுகிறது. பாசிசத்தின் தன்மைகளாக அடக்குவதையும் ஒடுக்குவதையும், போருக்கு இட்டுச் செல்வதையும், பாலியல் வல்லாங்கு செய்வதையும் வைத்துப் பார்க்கும்போது, இவையெல்லாம் ரிக் வேதத்திலும் இருக்கின்றன. "ஏற்றத்தாழ்வுகளோடு மனிதர்களைப் படைக்கிறார் கடவுள்' என்கிறது ரிக்வேதம். இது எல்லா காலத்திற்கும் பொருந்தும் என்றும் சொல்கிறது வேதம். அதுமட்டுமல்ல, சிலர் காலில் பிறந்தார்களாம். சிலர் தலையில் பிறந்தார்களாம். சிலர் பிறக்கவேயில்லையாம்! ஆகவே மதத்தின் பெயரால், ஆன்மிகத்தின் பெயரால் கடவுளே ஒரு பெரிய ஒடுக்குமுறையை கடைப்பிடிக்கிறார்.

புருஷசுத்தம் என்பது சமமற்ற தன்மை எனும்போது, அது எப்படியெல்லாம் இந்து மதத்தோடு பொருந்திப் போகிறது என்பது மிகவும் முக்கியம். ஆகவே, இந்து மதத்தின் இந்தத் தன்மையை எப்படி விளக்குவது என்று நான் யோசித்தேன். அப்போது ஒரு விஷயம் புரிந்தது. நாஜியிசமோ, பாசிசமோ அரசியலோடு தொடர்புடையது என்பது புரிந்தது. அங்கே ஆன்மிகமோ, மதமோ வரவேயில்லை. ஏனெனில், அங்கு கிறித்துவப் பின்னணி இருந்தது. இது குறித்து ஆழ்ந்து யோசிக்கையில் இங்கிருப்பது ஆன்மிகப் பாசிசம் என்று புலப்பட்டது. பாசிசத்தின் மீது ஆன்மிகத்தை கட்டியெழுப்பினால், அதற்கு வலிமை அதிகமாகி, நீண்டகாலம் நீடிக்கும். இந்த ஆன்மிக பாசிசத்தன்மையினால் தான் இந்து மதம் இத்தனை காலம் தாக்குப்பிடித்து வந்திருக்கிறது. பெரிய அளவு இழப்புகளோடு குறுகிய காலத்தில் அய்ரோப்பாவில் அரசியல் ரீதியான பாசிசத்தை ஒழித்துவிட முடியும்.

ஆனால் ஆன்மிகப் பாசிசத்தை அழித்துவிட முடியாது. அதன் முக்கியமான பரிமாணங்களை மக்கள் புரிந்து கொள்வதும் கடினம்தான். ஒரு மதத்தை அல்லது அரசை புரிந்து கொள்ள ஒரு காலகட்டம் தேவை. நமது காலத்தில்தான் இந்த ஆன்மிகப் பாசிசம் என்கிற சொல் பிடிபட்டிருக்கிறது. ஏனெனில், பாசிசத்தின் பல கோணங்களை நாம் உணர்ந்திருக்கிறோம். அன்று தேசியம், காலனித்துவம் போன்றவை முக்கியப் பங்கு வகித்தன. காலனியாதிக்கத்திற்கெதிரான போராட்ட காலத்தில் அம்பேத்கரால் கிறித்துவம் குறித்த ஒரு சாதகமான பார்வையை வைத்திருக்க முடியாது. இப்போது செய்தாலே குற்றவாளியாக்குகிறார்கள். அன்றைக்கு அப்படி அவர் செய்திருந்தால், அவரை யும் குற்றவாளியாக்கி இருப்பார்கள்.

ஆனால் எந்த விருப்பு வெறுப்புமின்றி, என்னால் பவுத்தத்தை வெளியிலிருந்து ஆராய முடிகிறது. ஆனால், நான் அம்பேத்கரின் தோள்களில் நின்று கொண்டு பார்க்கிறேன் என்பதுதான் முக்கியமானது. ஒவ்வொரு காலகட்டமும் அந்த காலத்திற்கேற்ப ஒரு சிந்தனையாளரை உருவாக்குகிறது. அம்பேத்கரின் "நவயான' பவுத்தத்திற்குப் பிறகு, இந்து மதத்திற்கு சவாலாக கிறித்துவமும், இஸ்லாமும்தான் இருக்கின்றன. இஸ்லாத்தைப் பொருத்தவரை சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நஸ்ரின் போல விமர்சிப்பவர்களும் உண்டு. ஆனால் இந்து மதத்திற்கு சவால் விட ஒரே ஒரு நூல் "நான் ஏன் இந்து அல்ல' மட்டுமே வந்திருக்கிறது. ஆனால், இஸ்லாத்திற்குள்ளேயே அதற்கு சாவல் விட்டு நிறைய நூல்கள் வந்திருக்கின்றன. கிறித்துவத்திற்கும் இது பொருந்தும். இந்த நிலைமையில்தான் ஒரு கருத்தியல் ரீதியான முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது. ஆன்மிக ஜனநாயகம் என்கிற புதிய சொல்லாடல் இங்கே சாத்தியமாகிறது. பவுத்தம், கிறித்துவம், இஸ்லாம் ஆகியவற்றை ஒரு செவ்வகத்திற்குள் அடைக்கலாம். இவற்றுக்கிடையே வேறுபாடுகளும் உண்டு. அது குறித்த விவாதங்களும் உண்டு. இந்த விவாதங்கள் தொடர வேண்டியது அவசியம்.

- அடுத்த இதழிலும்

சந்திப்பு : டாக்டர் பி.டி. சத்யபால், ஆர்.ஆர். சீனிவாசன்

தமிழில் : கவின் மலர்

Pin It