இலங்கை ஒரு அழகான தீவு தேசம். பாதத்தை பின்பற்றும் சிங்களர்கள், தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லிம்கள் என மூன்று தேசிய இனங்கள் அங்கே வாழ்கிறார்கள்.

எந்த ஒரு உயிருக்கும் துன்பம் தரக்கூடாது என்ற புத்த மதமே பெரும்பான்மையினரின் மதமாகும். அஹிம்சையைப் போதித்த புத்தரை வழிகாட்டியாகக் கொண்ட சிங்களர்கள், உலகின் மிகப்பெரிய மதவெறி சக்தியாக அறியப்படும் அளவுக்கு தங்களின் நடவடிக்கைகளை செயல்படுத்துவது ஒரு விந்தைதான். அங்குள்ள சிங்கள மக்களில் பெரும்பான்மையினர் நல்லவர்களே. ஆனால் அவர்களின் மத குருக்களான புத்த பிட்சுகள் அம்மக்களை இனவெறி-மதவெறியோடு வழி நடத்துவதுதான் இலங்கை இன சிக்கலுக்கு மிகப்பெரிய காரணியாகும். அறிவுத் திறன் கொண்ட தமிழர்களையும், வணிகத் திறனும் உழைப்பும் கொண்ட தமிழ் பேசும் முஸ்லிம்களையும் திறமையால் சமாளிக்க முடியாத சிங்களர்களை, தவறாகத் தூண்டுவது புத்த பிட்சுக்களின் தலைமைதான் என்பது கசப்பான உண்மை.

1980களில் தமிழ் இளைஞர்கள் ஆயுதப் பாதைக்கு சென்றது இலங்கை சிங்களப் பேரினவாதத்தின் பயங்கர நடவடிக்கைகளால்தான் என்பதை வரலாறு மறக்காது.

நீண்ட நெடிய தியாகங்களோடு நடைபெற்ற தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மே 17, 2009 அன்று முடிவுக்கு வந்தது. அதன்பிறகு ஈழத்தமிழர்களின் தலைமை திறன் வலிமை குன்றிய நிலையில் அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி வருகிறது சிங்கள அரசு!

சிங்களர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் சமாதானக் குழுவாக செயல்படும் வாய்ப்பு இருந்தும் அதை இலங்கை முஸ்லிம்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதற்கு புலிகளின் சில தவறுதான் காரணம் என்று கூறப்படுகிறது. புலிகளுக்கும், இலங்கை முஸ்லிம்களுக்கும் இடையே நிலவிய கடந்த கால கசப்புகளால், ஈழத்தமிழர்களின் மீதான கொடுமைகள் குறித்து இலங்கை முஸ்லிம்கள் தரப்பில் வெளிப்படையான கண்டனங்கள் எழவில்லை. ஆனால், இது ஆரோக்கியமற்ற போக்கு மட்டுமல்ல; ஒருவர் மீதான கோபம், அச்சமூகத்தின் மீதான நியாயங்களை மறுத்து விடுவதாக இருக்கக் கூடாது என்பது திருக்குரானின் (5:8) அறிவுரையாகும்.

பாலஸ்தீனம், கொசவோ, செசன்யா, ஈராக், ஆப்கான் போன்ற நாடுகளில் நடைபெறும் மனிதஉரிமை மீறல்களையும், சுதந்திரப் போராட்டத்திற்கு எதிரான அடக்குமுறைகளையும் கண்டித்த இலங்கை முஸ்லிம் அறிவுஜீவிகள், முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற மோசமான இனப்படுகொலை குறித்து தங்களுக்குள் கவலையுடன் விவாதித்துக் கொண்டாலும் வெளிப்படையாக ஏன் கண்டிக்கவில்லை? இது நியாயமா? என பலரும் கேட்டார்கள்.

ஈழத்தமிழர்களை ஒடுக்கிய சிங்களப் பேரினவாதம் அடுத்து தமிழ் பேசும் முஸ்லிம்களைத்தான் ஒடுக்கும் என பலரும் கவலைப்பட்டார்கள். அதுதான் இப்போது நடந்திருக்கிறது! ஏப்ரல் 20ம் தேதி கொழும்புவிலிருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மத்திய மாகாணத்தின் மாத்தளை மாவட்டத்தில் தம்புல்லா என்ற இடத்தில உள்ள பள்ளிவாசலில் முஸ்லிம்கள் ஜும்மா சிறப்பு தொலுகையிலே ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்த மத குருமார்கள் சிங்கள காவலர்களின் துணையுடன் பள்ளிவாசலை சுற்றி வளைத்து, முஸ்லிம்களை வெளியேற்றியுள்ளனர். கடப்பாறைகளால் தாக்கியதில் பள்ளிவாசலின் சில பகுதிகள் சேதமடைந்தன. கடும் எதிர்ப்பு காரணமாக அவர்களால் பள்ளிவாசலை முழுமையாக சேதப்படுத்த முடியவில்லை.

dambulla_500

இச்சம்பவம் இலங்கையில் கொந்தளிப்பைக் கிளப்பியுள்ளது. கடந்த 26.4.12 அன்று முஸ்லிம்கள் அம்பாறை மாவட்டத்தில் கடையடைப்பை நடத்தியுள்ளனர். கொழும்புவிலும் 27.4.2012 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இச்சம்பவம் இலங்கை அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிவாசல் இருக்கும் அப்பகுதியை பௌத்தர்களின் புனித பூமி என இலங்கை அரசு அறிவித்து, அங்குள்ள பள்ளிவாசல் அகற்றப்படும் என கொக்கரித்ததுதான் பிரச்சனைக்கு மூலக் காரணம்.

ஆளும் கூட்டணியிலும், அமைச்சரவையிலும் அங்கம் பெற்றிருக்கும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள், பள்ளிவாசலை இடிக்க அனுமதிக்க முடியாது என முஸ்லிம் சமூகத்தின் குரலாக எச்சரித்திருக்கிறார். பல முஸ்லிம் தலைவர்களின் கருத்தும் அதுதான்.

முக்கிய திருப்பமாக நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தின் பிரதம தலைவர் திரு, ருத்ரகுமாரன் தன் கடும் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். இதன் மூலம் உலகமெங்கும் தேசத்தை தாண்டிய நதிகளாய் வாழும் ஈழத்தமிழர்களின் ஆதரவை இலங்கை முஸ்லிம்களின் பக்கம் திருப்பியிருக்கிறார். கடந்தகால கசப்பான நிகழ்வுகளை சரி செய்யும் ஒரு வாய்ப்பு இதன் மூலம் உருவாகியுள்ளது.

காத்தான்குடி படுகொலைகளை யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாதுதான். பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் அதன் வலி புரியும். ஆனால் பாதிப்பை ஏற்படுத்திய புலிகள் அமைப்பு இப்போது இல்லை. அவர்கள் செய்த தவறுக்காக முழு ஈழத் தமிழர்களையும் குற்றவாளிகளாகக் கருதுவது இஸ்லாத்தின் மனிதநேய கொள்கைகளுக்கு எதிரானதாகும்.

முற்றிலுமாக பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களும், மூன்றாவது தேசிய இனமான இலங்கை முஸ்லிம்களும் தங்களின் எதிர்கால வாழ்வுரிமைகளுக்காகவும், வழிபாட்டுரிமைக்காகவும் கசப்புகளை மறந்து கை கோர்க்க வேண்டிய முக்கிய கட்டம் வந்திருக்கின்றது. இரு சமூக தலைமைகளும் பொறுப்புணர்வோடு சிந்திப்பதும், தங்களின் பொது பிரச்சனைகளை விவாதிப்பதும் காலத்தின் கட்டாயமாகும்.

காரணம், பொருளாதாரத் தேடலும், கூர்மையான வணிக அறிவும் கொண்ட இலங்கை முஸ்லிம்களின் உழைப்பையும், முன்னேற்றத்தையும் ஆரோக்கியமாக எதிர்கொள்ள சிங்களர்களால் முடியவில்லை. அந்தப் பொறாமையும், நீண்டகால எரிச்சலும் இப்போது வெடித்துள்ளது. தம்புள்ள பள்ளிவாசல் இடிப்பு முயற்சி என்பது ஒரு தொடக்கம்தான்.

முன்பு ஈழத்தமிழர்களின் மீதான இனவெறியில் கவனம் செலுத்தியதால், முஸ்லிம்களை பகைக்காமல் விட்டு வைத்திருந்தனர். ஒரே நேரத்தில் இரு பெரும் தேசிய இனங்களை பகைப்பது நல்லதல்ல என்ற தந்திரமே அவர்களின் காத்திருப்பிற்குக் காரணமாக இருந்தது.

ஐ.நா. மனித உரிமை அவையில் தமிழர்களின் இனப்படுகொலைக்கு எதிரான அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தபோது, பல முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக முடிவை எடுத்தன. இப்போது அந்த நாடுகள் இலங்கையை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றன என்பது தெற்காசிய சர்வதேச அரசியலில் கூர்ந்து கவனிக்கப்படும்.

இனி இலங்கை அரசு புதிய நாடகத்தை அரங்கேற்றக் கூடும். உலகமெங்கும் எழுந்திருக்கும் கடும் எதிர்ப்பு காரணமாக, பள்ளிவாசல் இடிப்பை ஒருவேளை சிங்கள அரசை தற்காலிகமாக கைவிடக் கூடும். ஆனாலும் நிச்சயம் தங்கள் மனதில் உள்ள வன்மங்களை கைவிட மாட்டார்கள். இலங்கை முஸ்லிம்களை சாந்தப்படுத்தும் நோக்கிலும், உலக நாடுகளிடம் நற்பெயரை ஈட்டும் விதமாகவும் சில சலுகைகளை கூட அறிவிக்கக் கூடும். இதில் இலங்கை முஸ்லிம்களும், அரசியல் தலைமைகளும் ஏமாறாமல் கவனமாக சிந்திக்க வேண்டும். தங்களின் எதிர்கால அரசியல், பொருளாதார, சமய உரிமைகளை எத்தகைய நடவடிக்கைகளின் மூலம் பாதுகாக்க முடியும் என்பது குறித்தான ஆரோக்கியமான விவாதங்களைத் தொடங்க வேண்டும்.

தமிழ் ஈழத் தலைவர்களோடும், தமிழ் மக்களோடும் 1980-களுக்கு முந்தய சகோதரத்துவ உறவை பாதுகாத்துக் கொள்ளும் முயற்சியில் இறங்க வேண்டும். அதுபோல் ஈழத்தமிழர் தரப்பிலும் புதிய அணுகுமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நல்லெண்ண நடவடிக்கையாக, புலிகளால் முன்பு விரட்டப்பட்ட முஸ்லிம்களை மீண்டும் வடக்குப் பகுதிகளில் அவர்களுக்குரிய வாழிடங்களில் வாழவும், அவர்களது அனைத்து வாழ்வுரிமைகளையும் பின்பற்றவும் ஈழத் தமிழர்களும், தமிழ் அரசியல் தலைமைகளும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தம்புள்ள பள்ளிவாசல் சம்பவம் தமிழகத்திலும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திலும் இதுகுறித்து புதிய புரிதல்கள் மலர வேண்டும்.

திரு. வைகோ அவர்களிடம் நான் பேசிய உடன், இலங்கை முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும், இலங்கை அரசைக் கண்டித்தும் அறிக்கை விட்டதோடு, தமுமுக, இலங்கை தூதரகத்திற்கு எதிராக நடத்திய முற்றுகை போராட்டத்தில் தங்கள் கட்சியின் சார்பில் பிரதிநிதிகளையும் அனுப்பி வைத்தார். வைகோவைத் தொடர்ந்து, கலைஞர் அவர்களும் 'இலங்கையில் பள்ளிவாசலை இடித்து நாசப்படுத்துவதை நாகரீக உலகம் நிச்சயம் ஏற்றுக்கொள்ளாது' என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஏப்ரல் 29 அன்று கோவையில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டதின்போது திரு. தொல் திருமாவளவனிடமும் இதுகுறித்து பேசினேன். அவரும் கவனமாக கேட்டுக்கொண்டார்.

தமிழகத்தில் தமிழ் ஈழ ஆதரவாளர் கூட்டமைப்பான 'டெஸோ' வை தி.க. தலைவர் கீ. வீரமணியின் வேண்டுகோளின்படி கலைஞர் மீண்டும் தொடங்கியிருக்கிறார். அது அரசியலுக்கு அப்பாற்பட்டு விரிவுபடுத்தப்பட வேண்டும். 'டெஸோ' குழுவினரும் நமது கருத்தை பரிசீலிக்க வேண்டும். இதுகுறித்து 'டெஸோ'வில் அங்கம் வகிக்கும் திரு. சுப. வீரபாண்டியனிடமும் பேசியுள்ளேன்.

மே 17 இயக்கம், SAVE TAMIL இயக்கம், நாம் தமிழர், அய்யா பழ. நெடுமாறனின் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம், பெரியார் திராவிடர் கழகம் போன்ற சக்திகள் எமது கருத்தை பரிசீலிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

எனது எண்ணம் என்னவெனில், இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய சூழலை கருத்தில் கொண்டு, இலங்கை தமிழ்ப் பிரதிநிதிகள், இலங்கை முஸ்லிம் பிரதிநிதிகள் மற்றும் தமிழகத்தில் உள்ள ஈழப் போராட்ட ஆதரவு பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தை முதல் கட்டமாக நடத்தப்பட வேண்டும் என்பதுதான்.

இதன் மூலம் இலங்கைத் தமிழர் மற்றும் முஸ்லிம்கள் சந்திக்கும் பிரச்சனைகளை எதிர்கொள்ள புதிய ஆதரவு அலையை உருவாக்க முடியும். இதற்கு திரு. தமிழருவி மணியன், இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் போன்றோர் ஏற்பாடு செய்யலாம். தமுமுகவும் இதற்கு துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை.

நமது கருத்தை இலங்கை தமிழர் தலைமையும், இலங்கை முஸ்லிம் தலைமையும் பரிசீலிக்க வேண்டும். எதிர்கால பாதுகாப்பு மற்றும் நன்மைக்காக, கடந்தகால கசப்புகளை மறந்து, புதிய திசையில் பயணிப்பதுதான் சரியான முடிவாக இருக்க முடியும்.

- தமிமுன் அன்சாரி, பொதுச் செயலாளர், மனிதநேய மக்கள் கட்சி

Pin It