அன்றந்த இராசாசி கொண்டு வந்த
அழிவுதரும் குலக்கல்வித் திட்டத் தைத்தான்
இன்றதையே புதுமொந்தைக் குள்ளே வைத்து
இழிவுதரும் பழங்கள்ளைக் கொடுக்கின் றார்கள்
நன்றிகெட்டு மாநிலத்து உரிமை தன்னை
நரிக்கண்ணன் போல்பறித்து ஆட்சி செய்வோர்
இன்றேதான் ஆலவட்டம் போடு கின்றார்
இதைத்தடுக்க பெரியாராய் எழுந்து வாரீர்!
பள்ளியிலே பகுதிநேரம் படித்து விட்டு
பகுதிநேரம் தொழிற்கல்வி படிக்கச் சொல்லி
மல்லுக்கட்டி புதுக்கல்வி நுழைக்கின் றார்கள்
மான்துள்ளும் மீன்துள்ளும் இயற்கை! ஆனால்
துள்ளுகிறார் மடயரெல்லாம் இந்த நாட்டில்
தஞ்சையிலே தமிழ்நீக்கி இந்தி கொண்டு
கல்வெட்டை மாற்றுகிறார் இதைத்த டுக்க
காளையரே பெரியாராய் எழுந்து வாரீர்!
இந்தியொடு சமற்கிருதம் தூக்கி வந்து
இந்நாட்டில் நடமாட விடுவ தற்கே
தொந்திபெரு பார்ப்பனர்கள் துடிக்கின் றார்கள்
தேவரடி கூட்டமல்ல இந்த நாடு
வந்ததெல்லாம் பாய்விரித்துப் படுப்ப தற்கு!
வளமான என்தமிழை நீப டித்தால்
இந்தியினை நாங்களுந்தான் படிப்போம் என்று
இப்பொழுதே பெரியாராய் எழுந்து வாரீர்!
தனியார்கள் கட்டணத்தை பாடத் திட்டம்
தாம்வகுக்கும் புதுக்கல்வி தேவை தானா?
தனியாரே மாணவரைத் தரம்பி ரித்து
தனியார்தம் மயமாக்கல் தேவை தானா?
மனிதநேயம் அற்றவர்கள் பலஅ டுக்கு
முறைகல்வி புகுத்துகிறார் தேவை தானா?
இனிப்புரட்சி வெடிக்குமென சொல்லிச் சொல்லி
இப்பொழுதே பெரியாராய் எழுந்து வாரீர்!
பணக்காரர் மட்டுந்தான் படிக்கும் வண்ணம்
பண்பாடு அற்றகல்வி தேவை தானா?
இனம்அழித்து மொழியழிக்கும் இந்தத் திட்டம்
இடைவேட்டி உருவிவிடும் தேவை தானா?
மனமின்றி மதச்சார்பு இன்மை நீக்கும்
மதம்பிடித்த ஆட்சியாளர் தேவை தானா?
இனம்பொங்கி சமூகத்தின் நீதி பொங்க
இப்பொழுதே பெரியாராய் எழுந்து வாரீர்!
- கவிஞர் முத்தரசன், பெரம்பலூர்.