புவிக் கோளின் சூழல் மண்டலங்களுக்கு சத்தமில்லாமல் சேவை செய்துவரும் நிலத்தடி பூஞ்சைகள் அரசியல்வாதிகளால் உடனே காப்பாற்றப்பட வேண்டிய நிலையில் உள்ளன. பூமிக்கடியில் வாழும் பூஞ்சை வலையமைப்புகளை பாதுகாக்கும் சங்கத்தை (Society for the Protection of Underground Networks (Spun)) சேர்ந்த விஞ்ஞானிகள் வேர்ப் பூஞ்சைகளின் சூழல் மண்டலங்களின் உயிர்ப் பன்முகத்தன்மை வரைபடத்தை முதல்முறையாக உயர் தொழில்நுட்பத்துடன் உருவாக்கியுள்ளனர்.
இருட்டில் வாழ்ந்தாலும்…
இது பற்றிய ஆய்வுக் கட்டுரை நேச்சர் (Nature) என்ற இதழில் வெளிவந்துள்ளது. வேர்ப் பூஞ்சைகள் (Mycorrhizal fungi) செழுமையாக உள்ள 90% பகுதிகளும் பாதுகாக்கப்படாத இடங்களிலேயே வாழ்கின்றன. இச்சூழல் மண்டலங்களின் இழப்பு கார்பன் ஓட்டம், பயிர் உற்பத்தி மற்றும் அதி தீவிர காலநிலை மாற்றத்தை சமாளித்து வாழும் சூழல் மண்டலங்களின் திறனைக் குறைக்கும்.
“வேர்ப் பூஞ்சைகள் இருட்டில் வாழ்ந்தாலும் நிலப் பகுதியில் நீடித்த வாழ்விற்கு அசாதாரணமான சேவைகளை செய்துவருகின்றன. அவை சத்துக்களின் சுழற்சி மற்றும் கார்பன் சேமிப்புக்கு உதவுகின்றன. தாவரங்களின் ஆரோக்கியத்திற்கு ஆதரவாக செயல்படுகின்றன. மண்ணின் மிக முக்கிய சூழல் மண்டலப் பொறியியலாளர்களாக உள்ளன. இவை இல்லாவிட்டால் காடுகளின் மீள் உருவாக்கம் மெதுவாக நடைபெறும். பயிர்கள் விளையாது.
நிலப் பரப்பிற்கு மேல் இருக்கும் உயிர்ப் பன்முகத் தன்மை 450 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் தாவரங்கள் எதுவும் இல்லை என்ற தகவலைக் கூறுகிறது. ஆனால் இந்த வேர்ப் பூஞ்சைகளின் வலையமைப்புகளால் மட்டுமே தாவரங்கள் புவிக் கோளை காலனித்துவப்படுத்தின. மனித வாழ்விற்கு ஆதரவாக செயல்பட ஆரம்பித்தன. ஆரோக்கியமான பூஞ்சைகளின் வலையமைப்புகள் இருந்தால் மகத்தான வேளாண் உற்பத்தியையும் பெரிய, அழகழகான மலர்களையும் நாம் பெறலாம். தாவரங்களை நோய்க் கிருமிகளில் இருந்து பாதுகாக்க முடியும்” என்று ஸ்பன் அமைப்பின் செயல் அலுவல் இயக்குனர் டாக்டர் டோபி கியர்ஸ் (Dr Toby Kiers) கூறுகிறார்.
தாவர வேர்களில் காணப்படும் இந்தப் பூஞ்சைகள் பூமியின் காலநிலை மற்றும் சூழல் மண்டலங்களை ஒழுங்குபடுத்த உதவுகின்றன.
இந்த நிலத்தடி வலையமைப்புகள் தாவரங்களுக்கு அவசியமான சத்துக்களை தருகின்றன. ஆண்டுதோறும் 13 பில்லியன் டன்களுக்கும் கூடுதலான கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி மண்ணிற்கு அளிக்கின்றன. இது உலகளவில் புதைபடிவ எரிபொருட்கள் எரிக்கப்படுவதால் ஏற்படும் சுமார் மூன்றில் ஒரு பங்கு உமிழ்விற்கு சமமானது.
ஸ்பன் அமைப்பு வேர்ப் பூஞ்சைகள் பாதுகாப்பு திட்டத்தை உலகளவிலான பூஞ்சை (GlobalFungi), பூஞ்சை அறக்கட்டளை (Fungi Foundation) மற்றும் உலக மண் நுண் உயிர்ம கூட்டமைப்பு (the Global Soil Mycobiome consortium) உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகளுடன் இணைந்து மிகக் குறைவாக ஆராயப்பட்டுள்ள வேர்ப் பூஞ்சை வலையமைப்புகளின் வரைபடத்தை உருவாக்கும் பணிகளை 2021-ல் தொடங்கியது.
வேர்ப் பூஞ்சைகளின் வரைபடம்
இயந்திரக் கற்றல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி 130 நாடுகளின் மாதிரிகளைக் கொண்ட 2.8 பில்லியனுக்கும் மேற்பட்ட பூஞ்சைகளின் வரிசைகள் அடங்கிய தரவுத்தளம் உருவாக்கப்பட்டது. ஒன்றுக்கு இரண்டு (1km2 scale) என்ற விகிதத்தில் அமைந்த அளவுகோலைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் பூமியின் வேர்ப் பூஞ்சைகளின் உயிர்ப் பன்முகத் தன்மையை கணித்துக் கூறுகின்றனர்.
இவற்றின் உயிர்ப் பன்முகத் தன்மை செழுமையாக உள்ள 9.5% இடங்கள் மட்டுமே தற்போது நடைமுறையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இங்கு மட்டுமே இவை வாழ்கின்றன என்பது இந்த வரைபடத்தின் மூலம் விஞ்ஞானிகளுக்குத் தெரியவந்தது. இவற்றின் பாதுகாப்பில் உள்ள மிகப் பெரிய இடைவெளியை இது எடுத்துக்காட்டுகிறது. கானாவின் கடலோரப் பகுதிகள் உலகளவில் பூஞ்சைகளுக்கான செழுமை மிகுந்த இடமாகக் கருதப்படுகிறது.
ஆனால் இங்கு கடலோரப் பகுதிகளில் மண் அரிப்பு ஆண்டிற்கு 2 மீட்டர் என்ற அளவில் நிகழ்வதால் இந்த முக்கிய உயிர்ப் பன்முகத் தன்மையுள்ள இடம் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டுவிடும் என்று விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர். “அறிவியல்பூர்வ செயலியின் பயன்பாட்டுடன் கூடிய பரந்த உலகளவிலான முதல் வரைபட முன்முயற்சியை (global mapping initiative) இந்த ஆய்வு குறிக்கிறது. இது வெறும் அறிவியல் கருவிகளுக்கும் அப்பாற்பட்டது. வருங்கால சூழல் பாதுகாப்பிற்கு இது உதவும்.
சூழல் மண்டல பாதுகாப்பிற்கும் செயல்பாட்டிற்கும் இந்தப் பூஞ்சைகளின் கூட்டு வாழ்க்கை ஏற்படுத்தும் தாக்கத்தை தொடர்ந்து புறக்கணிப்பது பூமியைக் காப்பதில் கை தவறவிட்ட மிகப் பெரிய வாய்ப்பாக அமையும். பூஞ்சைகள் மனிதனால் ஏற்படுத்தப்படும் அழுத்தங்களுக்கு எதிர்மறையாக வினை புரிகின்றன.
இவற்றின் இழப்பை சரிசெய்யாவிட்டால் காலநிலை மாற்றத்தை சமாளிக்க உதவும் உன்னதமான இயற்கைத் தீர்வுகளை நம்மால் உருவாக்க முடியாது” என்று ஆய்வின் முன்னணி ஆசிரியர் டாக்டர் மைக்கேல் வாண் ந்யுலன்ட் (Dr Michael Van Nuland) கூறுகிறார்.
“நிலப் பகுதியின் தவறான பயன்பாடு இவ்வகைப் பூஞ்சைகள் வளமிழப்பதற்கு ஒரு முக்கியக் காரணம். இவற்றின் பாதுகாப்பில் முன்னுரிமை கொடுக்கப்படாமல் இருப்பது விரக்தியை ஏற்படுத்துகிறது.
வேர்ப் பூஞ்சைகளின் நிலத்தடி அட்லஸ்
இவை விவசாய உற்பத்திக்கும் மனித ஆரோக்கியத்திற்கும் அவசியமானவை” என்று கியர்ஸ் கூறுகிறார். “இப்பூஞ்சை சூழல் மண்டலங்கள் பெருவாரியாக சட்டத்திலும் கொள்கைகளிலும் புலப்படுவதில்லை. இதனால் காலநிலை மாற்றம், பூமியின் எல்லா நிலத்தடி சூழல் மண்டலங்களிலும் உயிர்ப் பன்முகத் தன்மையின் இழப்பு ஏற்படுகிறது.
இதை சட்டம் மற்றும் கொள்கை ரீதியாக சமாளித்து வலுப்படுத்த இந்த தரவு மிக முக்கியமானது” என்று நியூயார்க் பல்கலைக்கழக சட்டப் பள்ளியின் சட்டத் துறைப் பேராசிரியரும் மனித வாழ்விற்கும் மேலான திட்டத்தின் (the More-Than-Human Life (Moth) programme) இயக்குனருமான சேசார் ரோட்ரிக்ஸ் காரா-விடோ (César Rodríguez-Garavito) கூறுகிறார்.
பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டிய செழுமையிழந்த இடங்களை பாதுகாப்பு குழுக்கள், ஆய்வாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பவர்கள் அடையாளம் காண உதவும் விவரங்களை ஸ்பன் அமைப்பின் நிலத்தடி அட்லஸ் இடைநிலைக் கருவிகள் மூலம் பெறலாம். ஸ்பன் பன்னாட்டு அமைப்பின் 79 நாடுகளைச் சேர்ந்த நாநூற்றிற்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், 96 நிலத்தடி ஆய்வாளர்கள் ஒன்றிணைந்து இந்தப் பணிகளில் ஈடுபட்டனர்.
பூமியில் சென்றடைய மிகக் கடினமான, தனித்து விடப்பட்ட மங்கோலியா, பூட்டான், பாகிஸ்தான் மற்றும் உக்ரைன் போன்ற இடங்களில் உள்ள நிலத்தடி சூழல் மண்டலங்களின் மாதிரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. புதிய ஒத்துழைப்பாளர்களையும் வேர்ப் பூஞ்சைகளின் வரைபடத்தை விரிவாக்க நிதியுதவி அளிக்கும் கொடையாளர்களையும் ஸ்பன் அமைப்பு தேடிவருகிறது. இப்போது உருவாக்கப்பட்டுள்ள வரைபடம் பூமியின் பரப்பில் 0.001% பகுதியை மட்டுமே கொண்டதாக உள்ளது.
“இந்த வரைபடத்தின் விரிவாக்கம் இப்பூஞ்சைகளின் செயல்முறைகளை சிறந்த முறையில் பயன்படுத்த உதவும். இருக்கும் பூஞ்சைகளை அழியாமல் வைத்திருந்து பாதுகாத்தால் உலகின் சில மிகப் பெரிய சவால்களைத் தீர்க்க, உயிர்ப் பன்முகத் தன்மை குறைவை சரிசெய்ய, காலநிலை மாற்றத்தை சமாளிக்க மற்றும் குறையும் உணவு உற்பத்தியை அதிகரிக்க அது உதவும். இது நேரடி பயன்களை மக்களுக்கு தரும்” என்று உலக வன நிதியத்தின் (World Wide Fund for Nature) தலைமை விஞ்ஞானி ரெபெக்கா ஷா (Dr Rebecca Shaw) கூறுகிறார்.
இனி நாம் பூமியில் கால் பதித்து நடக்கும்போது கண்ணுக்குப் புலப்படும் தாவரங்கள், விலங்குகள் போல மண்ணிற்கு அடியிலும் வேர்களில் வாழும் பூஞ்சைகளைப் பற்றி சிறிது சிந்திப்போம்!
- சிதம்பரம் இரவிச்சந்திரன்