சூழலைப் பேணுவதற்குரிய புதுப் பொருளாதார ஒழுங்கினை உலகலாவிய ரீதியில் கடைப்பிடிக்க வேண்டுமென்பது அண்மைக்காலத்தில் சூழலியலாளர்கள் வலியுறுத்தும் சிந்தனையாக உள்ளது. இச்சிந்தனைக்கான அடிப்படைக் காரணிகளையும், புதுப்பொருளாதார ஒழுங்கமைப்பில் விவசாயத்துறையிலே இயற்கை வேளாண்மை முறையைப் பின்பற்றக்கூடிய சாத்தியப்பாட்டையும் எமது பிரதேச சூழலில் இதனைப் பின்பற்றும் ஏதுநிலை பற்றியும் இக்கட்டுரை ஆராய்கிறது.

உலக சூழல் பிரச்சனைகள் எனும் போது பொதுவாக சுற்றுப்புறம் பற்றியும், சுற்றுப்புற சுகாதாரம் பற்றியும் பலர் பேசுவதுண்டு. ஆனால் சூழல் பிரச்சனைகளை புவிக்கோளம் சார்ந்த உலகளாவிய ரீதியில் அணுகுதல் வேண்டும். இவற்றைத் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கு புவிக்கோளம் சார்ந்த சூழல் அம்சங்கள் பற்றிய விளக்கங்கள் முதற்கண் அவசியம்.

சூழற்பாகுபாடும் பிரச்சனைகளும்.

புவிச்சூழலை கற்கும் வசதிகருதி நான்கு பெரும் பிரிவாக வகைப்படுத்தலாம் நிலமண்டலம் (Lithosphere)> நீர்மண்டலம் (Hydrosphere), வளிமண்டலம் (Atmosphre), உயிரியல் மண்டலம் (Bioshpre) என்பன அவையாகும். இவை ஒவ்வொன்றும் சில துணைப்பிரிவுகளையும் கொண்டுள்ளன. நிலமண்டலத்தினுள் புவிச்சரிதம்(Relief), மண்(Soil), ஆகியனவும், நீர்மண்டலத்தில் மேற்பரப்பு நீர்(Surface water), தரைக்கீழ் நீர்(Under ground water), சமுத்திரங்கள்(Oceans) ஆகியனவும் அடங்கும். வளிமண்டலம் எனும்போது அதனுள் வானிலை காரணிகளும் (Climate) அடங்கும். உயிரியல் மண்டலத்தினுள் இயற்கைத்தாவரம் (Natural Vegetation), விலங்கினங்கள், பறவையினங்களின் வாழ்க்கை (Animals life) ஆகியனவும் மனிதனின் வாழ்வும் அடங்கும்.

உயிரினப் பாரம்பரியத்தின் பரிணாமத்தில் இன்றைய நிலையில் உள்ள மனிதன் தோற்றம் பெற்று மனித வாழ்வை ஆரம்பித்ததிலிருந்து புவித்தொகுதியின் சகல கூறுகளின் மேலும் அவன் தன் ஆதிக்கத்தைச் செலுத்திவருகின்றான். மனித வாழ்வின் வரலாற்றுப் போக்கில் ஒவ்வொரு காலகட்டத்திலும் அவன் வெவ்வேறுபட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியே புவித்தொகுதிக் கூறுகளை தன் தேவைக்குரிய வளங்களாக மாற்றிப் பயன்படுத்தி வந்தமையை அறியமுடிகின்றது. புவித்தொகுதியும் மனித தேவைக்குரிய வளங்களை நீண்ட நெடுங்காலமாக அவனது வாழ்வுக்காக எப்பிரச்சனையுமின்றி வழங்கி வந்தது. மனித குலத்தின் இயற்கைக்கு மாறான அதிகரிப்பும் அவனது பேராசைக்குரிய தொழில்நுட்ப வளர்ச்சியும் புவித்தொகுதி வளங்களை பெருமளவு சுரண்டின. வீண்விரயமாக்கின. இதனால் வளங்கள் அழிந்தன. தேவைக்கு அதிகமாக வளங்கள் பயன்படுத்தப்பட்டதால் வளப்பற்றாக்குறை ஏற்பட்டது.

முறையற்ற வளப்பாவனையும் வீண் விரயமும் புவித்தொகுதிகளின் சகல கூறுகளையும் சிறிதுசிறிதாகப் பாதித்து புவித்தொகுதிச் சூழல் மாசடையும் நிலையை தோற்றிவித்தது. இம் மாசடைபு நிலை கி.பி 1700 முதல் கி.பி 1900வரை மேற்குலகில் ஏற்பட்ட கைத்தொழில் புரட்சிக்காலத்தே துரித கதியில் அதிகரித்தது. நவீனயுகத்தின் ஆரம்பம் என பலராலும் கூறப்படும் கைத்தொழில் புரட்சிக்காலத்திலே தான் சூழல் மாசடைதல் மனித வரலாற்றில் என்றுமில்லாத வகையில் துரிதப்பட்டதென்பதிலிருந்து நவீனயுகத் தொழில்நுட்பத்தின் பல்வேறு கூறுகள் சூழலின் எதிரி என்பது புலனாகும். இதனால் அண்மைய சூழலியல் வாதிகள் சூழலுக்கு ஊறுவிளைவிக்காத சூழல் நட்பார்ந்த தொழில்நுட்பமே எதிர்கால உலகிற்கு அவசியம் என வலியுறுத்தி வருகின்றார்கள். குறிபப்பாக மனித வாழ்வை மாத்திரமல்ல, உயிரின வாழ்வையே நிலைநிறுத்துவதற்கான 21ஆம் நூற்றாண்டிற்கான தொழில்நுட்பம், சூழலைப் பேணுகின்ற அதனைப் பெருமளவு பாதிக்காத தொழில்நுட்பமாக விளங்கவேண்டுமென உலக சமூகத்திடம் விண்ணப்பித்து வருகின்றார்கள். இக் கோரிக்கைகள் உலக சூழல்மாநாடுகள் ஊடாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.

புவிஉச்சி மாநாடு

சூழல் பற்றிய பன்முகப்பார்வையை ஜ.நாவின் கிளை நிறுவனங்கள் பல உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தி வருகின்றன. இந்தவகையில் 1992இல் இடம்பெற்ற புவிஉச்சி மாநாடு முக்கியத்துவம் பெறுகின்றது. இம்மாநாடு 1992 ஆம் ஆண்டு ஜுன் மாதம் பிறேசில் நாட்டின் றியோடிஜெனிரோ நகரில் இடம்பெற்றது. இவ் உச்சி மாநாட்டிற்கு முன்னோடியாக சுவீடன் தலைநகரான ஸ்ரொக்காமில் 1972இல் ஒரு மாநாடு இடம்பெற்றது. இதிலே 113 நாடுகள் பங்குகொண்டன. 1992இல் இடம்பெற்ற றியோ மாநாட்டில் 160 உலகநாடுகள் பங்குகொண்டன. 18.000 இற்கு மேற்பட்டோர் பங்குபற்றுனர்களாக கலந்துகொண்ட இம் மாநாட்டில் ஏறத்தாழ 400.000 பேர் பல்வேறு நவீன தொலைத்தொடர்பு ஊடகங்கள் வழியாக பார்வையாளர்களாகப் பங்கு கொண்டனர். 8000ற்கு மேற்பட்ட பத்திரிகைகள் இம்மாநாடு பற்றி எழுதின. இம்மாநாட்டின் இறுதியில் செயற்றிட்டம் -21 (Agenda-21)  எனும் நிகழ்ச்சித்திட்டம் முன்வைக்கப்பட்டது.

21ஆம் நூற்றாண்டில் உலக சூழலைப் பேணுவதற்கு உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் பற்றி இது விரிவாக குறிப்பிடுகின்றது. மேற்படி மாநாடு வலியறுத்திப் பல்வேறு விடயங்களைச் சுருக்கமாக தொகுத்து நான்கு தலைப்புகளின் கீழ் ஆராயலாம்.

01. உயிரியல் பன்முகத் தன்மையைப் பேணுதல்

02. உயிரினங்களுக்கு ஆதாரமான காடுகளைப் பேணுதல்

03. பச்சைவீட்டுத் தாக்கமுள்ள வாயுக்களின் வெளியேற்றத்தைத் தடுப்பதற்கான சர்வதேச சட்டங்களை இயற்றுதலும் அவற்றை நடைமறைப்படுத்துதலும்.

04. உலகில் புதிய பொருளாதார ஒழுங்கை உருவாக்குதல்.

உயிரியல் பன்முகத் தன்மையைப் பேணுதல் எனும் போது விரைவாக அழிவடைந்துவரும் புவியிலுள்ள விலங்குகளை மற்றும் தாவர ஜீவராசிகளை அழியவிடாது பேணிப்பாதுகாப்பதை வலியுறுத்துவதாக அமைகின்றது. உலகின் ஏறத்தாழ 50-100 இலட்சம் வரையிலான உயிரின வகைகள் உள்ளனவெனக் கணிப்பிடப்பட்டுள்ளது. இன்றைய விஞ்ஞானயுகத்துள் இவற்றுள் 10 வீதமான உயிரினவகைகளே ஆய்வுக்குட்பட்டுள்ளன.  இவற்றுள் 1 வீதமானவையே நுண்ணாய்வுக்குட்பட்டவை.  ஏனையவை மறைவளங்களாக (Latent Resource) உள்ளன. எதிர்கால சந்ததியினர் இவற்றை முறையாக ஆராய்ந்து பல்வேறு பயன்பாட்டிற்கு உட்படுத்த முடியம். ஆய்விற்குட்படாமலேயே இவை அழிவடைந்துவிடின் எதிர்கால மனித குலத்திற்கு இன்றைய மனிதன் துரோகமிழைத்தவனாவான். மேலும் உயிரினங்களின் பாரம்பரிய மரபுக்கூறுகளைப் பிரித்தெடுத்து தேவையான வகையில் வளர்க்கும் மரபுக்கூற்றுப் பொறியியல் அண்மைக்காலங்களில் துரிதமாக வளர்ச்சியடைந்து வருகின்றது. உலகம் எதிர்நோக்கும் உணவு நெருக்கடிக்கு இத்துறை வளர்ச்சி தீர்வாக அமையுமென விஞ்ஞானிகள் நம்புகின்றார்கள். உயிரினப் பன்முகத் தன்மையை இன்றைய மனிதகுலம் பேணிக்காத்திடல் இன்றியமையாத தேவை எனலாம்.

புவிஉச்சி மாநாடு வலியுறுத்திய இரண்டாவது அம்சம் உலகின் காடுகளைப் பேணுவதாகும். உலகை பசுமையாக வைத்திருப்பது: மழையை வருவிப்பதற்கும் வெப்பத்தை மட்டுப்படுத்தி புவியை பாலைவனமாகாது பாதுகாப்பதற்கும் உயிர்மண்டலத்தை பேணுவதற்கும் அவசியமாகும். மண்-தாவரம் ஏனைய உயிரினவாழ்வு என சூழலியல் முறைமை செயற்படுகின்றது. உலகில் காடுகள் இயற்கையாகவும், செயற்கையாகவும் தினம் தினம் பெருமளவு அழிவடைந்து வருகின்றன. மேலும் உலக நிலப்பரப்பில் இன்று 6வீத பரப்பளவில் பரந்துள்ள அயனக்காடுகளில் உலகின் மொத்த உயிரின வகைகளில் 60 வீதமானவை காணப்படகின்றன. இத்தரவுகள் காடுகளைப் பேணவேண்டிய தன் அவசியத்தை உணர்த்தப் போதுமானவை.

பச்சைவீட்டுத் தாக்கமுள்ள வாயுக்களின் வெளியேற்றம், கைத்தொழில் புரட்சியை தொடர்ந்து அதிகரித்துவந்து இன்று புவியை ஒரு ஆபத்தான கட்டத்திற்கு இட்டுச் சென்றுள்ளது. புவியின் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. எடுத்துக்காட்டாக குளோரோ புளோரோ காபன் எனும் வாயு வெளியேற்றத்தால் வளிமண்டலத்தில் 15 -30 மைல் உயரத்திலுள்ள ஓசோன் வாயுப்படையில் துவாரங்கள் உருவாகியுள்ளன. புவியில் தீங்குவிளைவிக்குமென கருதப்படுகின்ற புறஊதாக் கதிர்வீச்சுத் தாக்கத்தை ஓசோன் படையே பாதுகாக்கின்றது. புவியில் தற்போது புறஊதாக் கதிர்த்தாக்கம் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் தான் சருமநோய்கள், புற்றுநோய்கள் என்பனவும் இனம்காணமுடியாத வேறுநோய்களும் அதிகளவில் காணப்படுகின்றன என மருத்துவவியலாளர்கள் எச்சரிக்கை செய்கின்றார்கள். பச்சைவீட்டுத் தாக்கமுள்ள நச்சுத்தன்மை வாய்ந்த 85வீத வாயுக்களை கைத்தொழில் நாடுகளே வளியில் பரவவிடுகின்றன. உலகில் 30வீதக் குடித்தொகையைக் கொண்ட இந்நாடுகளின் வர்த்தக நோக்கம் கொண்ட அபரிமிதமான தொழில் உற்பத்திகளின் விளைவாக புவியின் வளிமண்டலம் முழுவதும் நச்சுப்புகையால் கனத்துவருகின்றதெனலாம்.

விவசாயம், கைத்தொழில் சேவைகள் எனும் பொருளாதார உற்பத்தி துறைகளில் சூழல் நட்பார்ந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எதிர்கால அபிவிருத்தியை மேற்கொள்ளவேண்டுமென்பதே சுருக்கமாகப் புதுப் பொருளாதார ஒழுங்கின் அடிப்படை எனலாம். இவை பொதுவாக நிலைத்துநிற்கக்கூடிய அல்லது பேண்தகு அபிவிருத்தியாக (Sustainable Development) விளங்கவேண்டுமென்பதே சூழலியலாளர்களின் எதிர்பார்ப்பாகும். இவர்கள் கைத்தொழில்துறையின் எரிசக்தியாக சூழலைப் பேணுவதும் நிலைத்துநிற்கக்கூடியதுமான ஞாயிற்றுச் சக்தி, காற்றுச்சக்தி, அலைசக்தி போன்றவற்றைப் பயன்படுத்துவதை விரும்புகின்றார்கள். விவசாயத்துறையைப் பொறுத்தவரையில் இரசாயன உள்ளீடுகளைத் தவிர்த்து நிலைத்து நிற்கும் வேளாண்மை அபிவிருத்தியை அல்லது இயற்கை வேளாண்மை அபிவிருத்தியை வேண்டிநிற்கின்றார்கள்.

இயற்கை வேளாண்மை

பசுமைப்புரட்சியால் விவசாயத்துறையில் துரிதஎழுச்சி ஏற்பட்டுக்கொண்டிருக்க அதன் எதிர் விளைவாக உயிர் சூழல்மண்டலம் நஞ்சாகிக் கொண்டிருந்தது. பசி பட்டினியால் உலகில் சிவப்புப்புரட்சி ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் நிலவியபோது மூன்றாம் உலகின் உணவு உற்பத்தியை அதிகரிக்க மேற்குலகத்தால் பசுமைப்புரட்சி அவசரமாக புகுத்தப்பட்டது எனவும் விமர்சிப்பர். றொக்பெல்லர் போட் ஆகிய பல்தேசிய நிறுவனங்கள் பசுமைப்புரட்சி என்ற நடவடிக்கைகளுக்கு உதவிவந்தமை இவ் ஜயுறவை வலியுறுத்தும். இவ் ஆய்வின் பெறுபேறான பசுமைப்புரட்சியின் வித்தான புதிய இனவிதைகளைக் கண்டுபிடித்தமைக்காக 1970 ஆம் ஆண்டில் நோர்மன் போர்லாங் அவர்களுக்கு நோபல்பரிசு கிடைத்தது.

பசுமைப்புரட்சி நடவடிக்கைகள் விவசாயத்துறையில் இரசாயனத்தொழில்நுட்ப மாற்றங்களையும் பொறிமுறைத் தொழில்நுட்ப மாற்றங்களையும் புகுத்தின. இவை மூன்றாம் உலக நாடுகளுக்குப் புதியன என்பதோடு இந்நாடுகளின் பாரம்பரிய விவசாயத்துறையை மேற்கு நாடுகளின் நவீன உற்பத்திகளின்றி வெற்றிகரமாக மேற்கொள்ளமுடியாத நிலைமைகளையும் தோற்றுவித்தன. இரசாயன உரப்பாவனை, களைகொல்லிப் பாவனை, கிருமிநாசினிப் பாவனை என்பன மண், நீர் நிலைகள், தாவரம் என்பனவற்றையும் நஞ்சாக்கிற்று. இதனால் எழுபதுகளில் உச்சம்பெற்றிருந்த பசுமைப்புரட்சி நடவடிக்கைகள் எண்பதுகளில் விமர்சனத்தை எதிர்நோக்கி தொண்ணூறுகளில் மாற்றத்தை வலியுறுத்தி நிற்கின்றன. இதனாலேயே இன்று உலகம் மீண்டும் இயற்கைவேளாண்மை பற்றி சிந்திக்கத் தலைப்பட்டுள்ளது.

இயற்கைவேளாண்மையை நிலைத்துநிற்கக்கூடிய வேளாண்மை, நிலையான வேளாண்மை, பேண்தகு வேளாண்மை என்று பலவாறு வழங்குவர். இயற்கை வேளாண்மை பழமைக்குத் திரும்புதல் எனப் பொதுவாக கூறப்பட்டாலும் இன்றைய உலக நிலவரங்களை அதாவது குடித்தொகை அதிகரிப்பு, உணவுப் பற்றாக்குறை, சூழல் நெருக்கடி என்பனவற்றை மனங்கொண்டு புதுப்பொருளாதார ஒழுங்கின் அடியாகச் சிந்தித்ததன் விளைவே இது எனலாம். இயற்கை வேளாண்மையின் தந்தை என ஜப்பானியக் காந்தி மாசானபு ஃபுகாகோ (Masanabu Fukuoka)வைத் தரிசிக்கலாம். இவர் இயற்கைவேளாண்மையை வலியுறுத்தி எழுதிய “ஒற்றை வைக்கோல் புரட்சி” (One Straw Revolution -1975) என்ற நூலும் “இயற்கைக்கான வழி” (The road to nature – 1977) என்ற நூலும் மிகவும் பிரபலமானவை. இந்நூல்கள் பலமான ஆதரவையும் கடும் விமர்சனத்தையும் எதிர்கொண்டவை. இவர் வழியில் இன்றும் பலர் சிந்தித்து வருகின்ற போதிலும் பில் மோலீசின் (Bill Mollision) டேவிட் ஹம்ரன் (David Homton) ஜே.ஜே றோடேல் (J.J.Rodale) என்பவர்களும் மூன்றாம் உலகைச் சேர்ந்த இன்னும் சிலரும் முக்கியமானவர்களாகக் கருதப்படுகின்றனர்.

மாசானபு ஃபுகாகோ இயற்கை வேளாண்மை பற்றி வெறும் போதனை செய்யவில்லை. அதன் சிறப்பை செயல்முறையூடாகக் காட்டுகின்றார். ஜப்பானில் ஹிகோதீவின் மலைச்சாரலில் இவரது 15 ஏக்கரளவான விவசாயப் பண்ணை அமைந்துள்ளது. இது முற்றுமுழுதான இயற்கை விவசாயப் பண்ணையாக விளங்குகின்றது. நுண் உயிரியலாளராகவும் விவசாய சுங்க அதிகாரியாகவும் பணியாற்றி இவர், 25 வயதில் அவற்றைத் துறந்து இயற்கை வழி விசாயத்தில் நாட்டம் கொண்டார். இவர் ஒரு பொளத்த மதத்தினராக விளங்கியமையும் இயற்கையில் அதிகம் நாட்டம் கொள்ள வைத்ததெனலாம். அவரது இயற்கை நேசிப்பினை அவரது நூலில் விரவிவரும் பின்வரும் கூற்றுக்களால் உணர்ந்து கொள்ளமுடியும்.

மனிதர்களால் எதையும் அறிந்துகொள்ளமுடியாது என்பதையும் இயற்கையைப் புரிதல் மனித அறிவிற்கு அப்பாற்பட்ட விடயம் என்பதையும் இறுதியில் அறிவதற்காகவே நாம் கடினமாக கற்கவேண்டியுள்ளது,

வாழ்க்கை என்பது இயற்கையிலிருந்து விலகிய ஒன்றாக இருக்கக்கூடாது. வேளாண்மையின் இறுதி இலட்சியம் பயிர்களை வளர்ப்பதல்ல. மனித இனத்தை வளர்த்து முழுமையடையச் செய்வதே….

மனிதன் தனது சொந்த விருப்பத்தைவிட்டு, இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தால் இயற்கை அவனுக்குச் சகலதையும் அளிக்கும். மக்கள் இயற்கை உணவை விட்டு எப்போது செயற்கை உணவைத் தேர்ந்தெடுத்தார்களோ அன்றே அவர்கள் தம் அழிவுக்கான தேதியைக் குறித்துவிட்டார்கள்.

Masanobu Fukuoka,(1975) one straw Revolution.

இயற்கை வேளாண்மையை ‘ஒன்றும் செய்யாமல் ஒரு வேளாண்மை’ என்று குறிப்பிடும் மாசானபு ஃபுகாகோ தான் தன் வயலில் வேலை செய்யும் போது ‘இதனையும் செய்யாமல் இருந்தால் என்ன?’ என்ற கேள்வியைத் தன் மனதில் கேட்டுக்கொண்டே செய்வதால் இயற்கை வழியில் அனைத்தையும் விட்டுவிட முடிகின்றது என்கிறார். தன் பண்ணையில் உலாவரும் போது இயற்கையாக வளர்ந்த நெற்கதிர் ஒன்று நவீமுறையில் பயிராகும் நெல்லைவிட மிக்க ஆரோக்கியமாகவும், அதிக கதிர்களைக் கொண்டதாகவும் விளங்கியதைக் கண்டே தான் இயற்கைவழி விவசாயத்தின்பால் அக்கறை கொண்டதாக கூறும் இவர், புவியிலிருந்து வரும் அனைத்தும் புவிக்கே திரும்பிவிட வேண்டும். நெற்கதிர்களை எடுத்துக்கொண்டு ஏனையவற்றை அப்படியே விட்டுவிட வேண்டும் எனக் கூறுகின்றார். அவர் முன்வைக்கும் இயற்கை வேளாண்முறையில் நான்கு அம்சங்கள் முக்கியமானவை.

மண்வளம் பேணுதல் பற்றிக் கூறும் போது பயிர்வளர்ச்சிக்கு பண்ணையை உழ வேண்டியதில்லை. தாவரங்களின் வேர்களும், மண் புழுக்கள், முயல் மற்றும் ஏனைய சிறு விலங்கினங்கள் என்பன இயற்கையாகவே மண்ணை உழுகின்றன. உக்கவைக்கும் நுண்ணங்கிகளின் பெருக்கம் மண் வளத்தையும் பெருக்கும் என்கின்றார்.

பயிர் வளர்ச்சிக்குரிய உரம் பற்றிக் குறிப்பிடும் போது நிலத்தை அதன் போக்கில் விடுவோமாயின் இயற்கையாகவே அது மண்ணில் உரச்சத்தை நிர்வகித்துக்கொள்ளும். பண்ணையில் வளரும் மிருகங்களும், பறவையினங்களும் இயற்கையாக உரத்தை வழங்கும். வைக்கோலை வெளியேற்றாது விட்டால் அது உக்கி உரத்தை வழங்கும் எனக் கூறும் அவர், காட்டில் செழித்து வளரும் மரங்களுக்கு நாம் உரமிடுகின்றோமா? என்ற கேள்வியையும் எழுப்புகின்றார்.

களைகளின் வளர்ச்சி இயற்கை சமச்சீர்த்தன்மையைப் பேணும் ஒரு நடவடிக்கையே. அதனை உழுது அழிக்க எண்ணினால் அது பெருகுமேயன்றிக் குறையாது. பருவப்பயிர்களுக்கிடையே ஊடுபயிர்களை வளர்ப்பது வைக்கோலால் நீண்டகாலம் வயல் பரப்பை மூடிவைத்துக் கொள்வது போன்ற நடவடிக்கைகள் களையைக் கட்டுப்படுத்தும் என்கின்றார்.

பூச்சிக்கட்டுப்பாடு பற்றிக் குறிப்பிடும் போது மாசானபு ஃபுகாகோ இயற்கையான சுற்றுச் சூழலில் வளரும் பயிர்க்ள் ஆரோக்கியமானவையே. இயற்கையில் பூச்சிகளுக்கு எதிர்ப் பூச்சிகள் உண்டு. நாம் கிருமிநாசினி தெளிப்பதால் அனைத்துப் பூச்சிகளும் அழிந்து இயற்கைச்சமநிலை அற்றுப்போகின்றது. சிலந்திவலை பின்னி என் பண்ணை முழுவதையும் பாதுகாப்பதை நீங்கள் நேரில் வந்தால் பார்க்க முடியம். எனது பண்ணை சிலந்திவலைப் பரவலால் மின்னிக்கொண்டிருப்பதை பார்ப்பீர்கள். மயிர் கொட்டிகளை செம்பகம் அழிக்கும். எலிகளை ஆந்தைகள் அழிக்கும். தவளை, தேரை என்பனவும் பூச்சிகளிலிருந்து பயிர்களைக் காக்கும். இயற்கையின் விந்தைகளை எம்மால் பூரணமாக விளக்க முடியாது என்று வலியுறுத்துகின்றார்.

மாசானபு ஃபுகாகோவின் பண்ணையின் பெரும்பரப்பு பல்வகை பழ மரங்களைக் கொண்டதே. இவை ஒன்றுடன் ஒன்று இயற்கையாக இணைந்து அற்புதமாக வளர்ந்துள்ளன. இங்கு உற்பத்தியாகும் பழங்கள் இயற்கையாக ஒழுங்கற்ற வடிவங்களில் காணப்படும். சில சுருக்கம் விழுந்தும் வாடியும் இருக்கும். இவ் இயற்கைப்பழங்களுக்கு நவீனமுறையில் உற்பத்தியாகும் பழங்களைவிட ஜப்பானில் நல்ல சந்தை வாய்ப்புகள் உண்டு. நவீமுறையில் உற்பத்தியாகும் பழங்கள் கவர்ச்சியாக இருப்பதற்காக மெழுகு கூடப் பூசுகின்றார்கள். வாடாது இருக்க இரசாயன கலவைகளைத் தெளிக்கின்றார்கள். இவை எல்லாம் மக்களின் உணவை நஞ்சாக்கும் நடத்தைகள் என மாசானபு ஃபுகாகோ சாடுகிறார்.

இவரது பொருளாதார சிந்தனைகள் நவீனபொருளிளயலாளரது சிந்தனையிலிருந்து மாறுபட்டவை.   விவசாய நடவடிக்கைகளில் குறைந்தளவு மக்கள் இருப்பது ஒரு அபிவிருத்தி குறிகாட்டியென நவீன பொருளியலாளர் கூற இவர் 80-90 வீத மக்கள் விவசாயத்தில் ஈடுபட வேண்டுமெனக் கூறுகின்றார். பொருளாதார வளர்ச்சி வீத அதிகரிப்பைப் பற்றி அலட்சியப்படுத்தும் இவர் வளர்ச்சி வீதம் 0 ஆக இருப்பதே நிலையான பொருளாதார வளர்ச்சி என வாதிடுகின்றார். மாசானபு ஃபுகாகோ நவீன உலகில் பழமையைப் பேணுவதன் மூலம் புதுப்பொருளாதார ஒழுங்கை உருவாக்கமுடியுமென்று சொல்லாலல்ல செயல்மூலம் நிரூபித்து வருகின்றார்.

சூழலுக்கு ஊறுவிளைவிக்காத நிலைத்து நிற்கும் வேளாண்மை பற்றிய கருத்துக்களை உலகிற்கு பரப்பி வரும் இன்னொரு முக்கியமானவர் பில் மோலீசன் (Bill Mollisipon) ஆவார் இவரும் டேவிட் ஹோம்ரன் என்பவரும் இணைந்து ‘ஃபோமா கல்சர்’ என்ற நூலை 1978 இல் வெளியிட்டனர்.  இதன் அர்த்தம் நிலைத்துநிற்கும் பயிர்ச்செய்கை (Permnanent Culture) என்பதாகும். இவர்கள் இந்நூலில் மாசானபு ஃபுகாகோ சிந்தனைகளால் கவரப்பட்டுள்ளமை நன்கு வெளிப்படுகின்றது. ஆஸ்திரேலியாவில் நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தில் டயால்கம் (Taylgum) என்ற இடத்தில் நிலைக்கும் பயிர்ச்செய்கை நிறுவனம் (Perma Culture Institute) என்ற அமைப்பினை நிறுவி அதனூடாக மேற்படி வேளாண் முறைகளை உலகிற்குப் பரப்பி வருகின்றார்கள். உலகில் இவர்களுக்கு 54 நாடுகளில் கிளை நிறுவனங்கள் உண்டு. இந் நிறுவனங்களின் மூலம் நிலைக்கும் வேளாண்மையை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. முறையான பாடத்திட்டம் மூலம் வழங்கப்படும் இப்பயிற்சியில் விவசாயச் செய்முறை அத்துடன் இணைந்த தோட்டக்கலை, கட்டிடக்கலை, போக்குவரத்து, நிதி, சமூக அபிவிருத்தி திட்டங்கள், விரயமற்ற உற்பத்தி, சுற்றுவட்ட முறையில் வளங்களைப் பயன்படுத்துதல். உள்ளுர் பாரம்பரிய தாவர வித்துக்களை மீண்டும் அறிமுகப்படுத்துதல், தரிசான நிலங்களை வேளாண்மைச்செய்கை மூலம் சீர்செய்தல் என்பன அடங்கும். இவற்றை ஒழுக்கநெறியுள்ள திட்டமிட்ட விஞ்ஞானமாகக் கொண்டே பயிற்றிவிக்கின்றார்கள்.

நிலைக்கும் பண்பு புவியின் பாதுகாப்புக் குறித்த ஒழுக்கநெறி மாத்திரமன்றி மனிதபாதுகாப்புக்குறித்த ஒழுக்கநெறியுமாகும். இவர்களது போதனையில் நுகர்வது போக எஞ்சிய அனைத்தும் மறுமுதலீடாக புவிக்கே திரும்பி விடவேண்டும். புவியைப் பேணும் ஒழுக்க நெறி தார்மீக நெறியாகவும் கல்வி நெறியாகவும் போற்றப்படவேண்டும் என்பது இவர்களது வேண்டுகோளாகும். எந்த ஒரு அரசுக்கும் அல்லது அரசியல் அமைப்புக்கும் அழிந்துவரும் புவிபற்றி அக்கறையே இல்லை. நிலம் என்றால் அதில் எந்தளவு பணம் பெறலாமென்றே திட்டமிடுகின்றார்கள் என இவர்கள் சாடுகின்றார்கள்.

பில் மோலீசின் நவீன விவசாயத்தை இறந்து கொண்டிருக்கும் விவசாய முறை என சாடுவதோடு நவீன விவசாயம் வர்த்தக நோக்கத்தைக்கொண்ட, அழிவுக்கு வழிகோலும் முறைகளை உள்ளடக்கிய, எரிபொருளை வீணடிக்கின்ற விவசாயம் என்கின்றார். மேலும் அவர் நவீன விவசாயம் முட்டாள் தனமான நோக்கங்களுக்காக தேவையற்ற பயிர்களை வளர்க்கின்றது. சோயா பயிர் உற்பத்தி கால்நடைக்கு உணவாகின்றது. மீனைப் பொடிசெய்து பன்றிகளை வளர்க்கின்றார்கள். மாட்டிறச்சி வர்த்தகத்தால் உலகின் புல் நிலங்கள் அழிந்து பாலைநிலம் பரவி வருகின்றது என்கிறார். மேலும் நவீன விவசாயச் செய்கை தொழிற்சாலை உற்பத்திக்கான மூலப்பொருளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டதே தவிர மக்களுக்கு உணவு வழங்குவதையல்ல. புவியின் மொத்த நிலப்பரப்பில் 4வீத பரப்பளவில் உணவு உற்பத்தி முறையாகச் செய்யப்பட்டாலே உலகில் உணவுப் பஞ்சம் ஏற்படமாட்டாது என உறுதிபடக் கூறுகின்றார்.

நவீன முறையில் விவசாயம் செய்தவர்கள் இம் மாற்றுமுறைக்கு வரும் போது ஆரம்பத்தில் உற்பத்தி குறையும் என்றாலும் பின்னர் உற்பத்தி படிப்படியாக அதிகரிக்கும். நவீனமுறையில் இரசாயனப் பொருட்களை அதிகளவில் பயன்படுத்தி வந்ததன் காரணமாக 5 ஆண்டுகள் நிலைமாறும் நிலை நிலவும். ஆறாவது ஆண்டிலிருந்து உற்பத்தி இருமடங்காக உயரும். வேளாண்மையுடன் காடுவளர்ப்பும் இணைந்துள்ளதால் நைட்ரசன் சத்து நிலங்களுக்கு ஊட்டத்தை வழங்கும். தானியங்கள், பழங்கள், காய்கறிகள், கூடவே மரக்கறிகள் நிறைந்த வேளாண்பண்ணை முறைகளையே பில் மோவீசின் குழுவினர் வலியுறுத்துகின்றனர். இவர்களது பண்ணை சுயநிறைவு கொண்டது. உரத்தின் தேவையோ, களை பூச்சி நாசினிகளின் தேவையோ எழுவதில்லை. இவர்களது பயிர்ச்செய்கை முறை பரந்துபட்டு பயிர்ச்செய்கை முறை (Extensive Agriculture) ஆகும்.

எவ்வளவு மோசமான தரிசு நிலம் என்றாலும் அந்நிலத்தை பசுமையாக்கக்கூடும் என கூறும் இவர்கள் பாறை நிலம், அதிக ஈரம் கொண்டநிலம், உவர்நிலம், வரண்ட பாலைநிலம், என்பனவற்றில் வேளாண் பண்ணைகளை உருவாக்கி வெற்றி கண்டுள்ளனர். ஜ.நாவின் உணவு விவசாய நிறுவனத்தின்( F.A.O) பயிற்சியாளர் தொகையைவிட தங்கள் நிறுவனத்தின் பயிற்சியாளர் தொகை அதிகமென பெருமைப்படும் பில் மோலீசன் இந்தியாவில் மட்டும் ஏறத்தாழ 1000 கிராமங்களில் ஃபேமாகல்சர் பயிற்சியாளர்கள் பணியாற்றி வருகின்றார்கள் என்கின்றார். ஏறத்தாழ ஒரு இலட்சம் இந்திய விவசாயிகள் பில் மோலிசனின் பண்ணைத்திட்ட முறைகளைப் பின்பற்றி பயனடைந்து வருகின்றார்கள். மூன்றாம் உலக நாடுகளுக்கு இவரது வேளாண் முறைகள் பொருத்தமானவை என கருதப்படுகின்றது. நிலைத்து நிற்கக்கூடிய  இவ்வகை வேளாண்முறைகள் மீது நிஜமான அக்கறை செலுத்தும் காலம் வருமெனக்கூறும் இவர் 2000 ஆம் ஆண்டின் பின் நவீன விவசாய முறை மெல்லமெல்ல இறந்து நிலைத்துநிற்கும் விவசாயமே நிலைபெறும் என சூளுரைக்கின்றார்.

அமெரிக்காவிலிருந்தும் ஒரு குரல் இயற்கை வேளாண்மையில் அக்கறை கொண்ட ஒலிப்பு ஆச்சரியத்தை அளிப்பதே. அக்குரல் “றோடேல் நிறுவனத்தின்” குரலாகும். ஜே.ஜே. றோடேல் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்நிறுவனத்தை அவரது மகன் ஜோன் றோடேல் தற்போது நடத்தி வருகின்றார். அமெரிக்காவில் பென்சில்வேனியா மாநிலத்தில் எம்மாமவுஸ் என்ற இடத்தில் இத்தொண்டு நிறுவனம் அமைந்துள்ளது. இயற்கை வேளாண்மையின் சிறப்பை உலகிற்கு பரப்புவது மாத்திரமன்றி மூன்றாம் உலக வசதிகுறைந்த ஏழைமக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கான சமூகநலத் திட்டங்களையும் இந்நிறுவனம் நடைமுறைப்படுத்தி வருகின்றது.

சூழலுக்கு ஊறுவிளைவிக்காத வேளாண் செய்கையை அடிப்படையாகக்கொண்ட சுயநிறைவு பெறத்தக்க அபிவிருத்தித்திட்டங்களிற்கு இந்நிறுவனம் உதவி வழங்கி வருகின்றது. மூன்றாம் உலகநாடுகளில் உள்ள வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்துவரும் மக்கள் பயன்பெறும் பொருட்டே பெரும்பாலும் இவ் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

றோடேல் நிறுவனத்தினர் உலகில் பரப்பிவரும் வேளாண்முறைக்கு “புனர் ஜென்ம வேளாண்மை” (Rebirth Agriculture) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.  இவர்களது நிறுவனமே மாசானபு ஃபுகாகோவின் ஒரு வைக்கோல் புரட்சி ( One Straw Revolution) என்ற நூலையும் இயற்கைக்கான வழி (The Road to nature) என்ற நூலையும் ஆங்கில மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டதன் மூலம் நூலாசிரியரை அனைத்துலகத்திற்கும் அறிமுகமாக்கியது.

றோடேல் நிறுவனம் நிலைத்து நிற்கும் வேளாண்மைப் பண்புகளை உலகத்தவர் அறிதல் பொருட்டு “உயிர்ப்பு வேளாண்மை” (Organic Farming) என்ற சஞ்சிகையினையும், புதிய பண்ணை (New Farm) என்ற செய்திப்பத்திரிகையையும் வெளியிட்டு வருகின்றது. மேலும் இயற்கை வேளாண்மையை மேம்படுத்தத்தக்க பல்வேறு நூல்களையும் இந்நிறுவனம் காலத்துக்கு காலம் வெளியிட்டு வருவதோடு சர்வதேச கருத்தரங்குகளையும் ஒழுங்கு செய்து வருகின்றது.

இயற்கை வேளாண்மை பற்றி முதலாம் உலக நாட்டைச் சேர்ந்தவர்களைவிட மூன்றாம் உலகநாட்டினரே கூடிய அக்கறை கொள்ளவேண்டும். யதார்த்த நிலை கவலை தருவதாக உள்ளது. அரசாங்க மட்டத்தில் திட்டமிடுவோரும் இதுபற்றி அலட்சியமாகவே இருக்கின்றார்கள். இங்குள்ள அரசசார்பற்ற நிறுவனங்களும் நிதி நெருக்கடியாலும் நிபுணத்துவக் குறைபாட்டாலும் இவ்விடயம் தொடர்பாக அதிகளவில் அக்கறை செலுத்த முடியாதுள்ளது. இருப்பினும் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் நிலைத்து நிற்கும் வேளாண்மையால் சில நிறுவனங்கள் கவனம் கொள்கின்றன.

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் அகமதபாத் நகரில் கலாநிதி அனில்குப்தாவின் நிறுவனம் குறிப்பிடத்தக்க பணியாற்றி வருகின்றது. இவர்கள் ‘நம்வழி வேளாண்மை’ என்ற மகுடவாசகத்தை முன்வைத்து சூழல்பேண் வேளாண் அபிவிருத்தியை முன்னெடுத்து வருகின்றார்கள். இந்நிறுவனத்தின் கிளைகள் தமிழ்நாட்டில் மதுரை, ஒரிஸ்ஸாவில் புவனேஸ்வர், கேரளாவில் கோட்டயம், பூட்டானில் திம்பு, உத்தரப்பிரதேசத்தில் சஹாரன்பூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. இவர்கள் காந்திய நிறுவனங்களுடனும் இணைந்தும் பணியாற்றி வருகின்றார்கள். அனில் குப்தாவின் நிறுவனத்தினர் நம்வழி வேளாண்மை பற்றி பிரசாரம் செய்யும் அளவிற்கு மாதிரிப்பண்ணைகளை அமைத்து செயல்முறையில் காட்டும் தன்மை குறைவாகவே உள்ளது.

தமிழ்நாட்டில் மனீந்தர்பால் என்பவர் பாண்டிச்சேரியில் அரவிந்தர் ஆசிரமத்தின் துணையுடன் நடத்தும் 100 ஏக்கர் பரப்பளவுள்ள குளோரியாப்பண்ணை, புதுவையில் அமைந்துள்ள ஏ.எஸ் சட்டார்ஜியின் இயற்கைப்பண்ணை, கீரானூரில் நாம்மாழ்வார் நடத்தும் லெய்சா (Leisa) பண்ணை, உடுமலைப்பேட்டையில் சி.ஆர் ராமநாதனின் விவசாய காட்டியல் (Agro Forestry) பண்ணை, எம்.எஸ் சுவாமிநாதன்ஆராய்ச்சி நிறுவனத்தினர் நடத்தும் சில பண்ணைகள், வீரனூர் சுற்றுச்சூழல் சங்கப் பண்ணை என்பன இந்தியாவில் இயற்கை வேளாண்முறைகளை முன்னெடுப்போருக்க வழிகாட்டும் பண்ணைகளாக விளங்குகின்றன.

இலங்கையில் கலாநிதி ஆரியரத்தினாவின் சர்வோதய இயக்கம் நடத்தும் சில விவசாயப் பண்ணைகளும் மன்னாரிலுள்ள “ஸ்கந்தபாம்” எனும் பண்ணையும் இயற்கை வேளாண்வழியை பின்பற்றத் தூண்டுதலளிக்கும் எம்மவரின் முயற்சியெனக் குறிப்பிடலாம்.

முடிவுரை

எமது பிரதேசத்தில் கடந்த மூன்று தசாப்தங்களாக நிலவிவந்த யுத்த நெருக்கடியால் நாம் பல இன்னல்களை எதிர்நோக்கினாலும் சில நன்மைகளும் விளைந்துள்ளன. எரிபொருள் உரம், களை நாசினி, கிருமிநாசினி என்பவற்றின் தட்டுப்பாட்டால் எமது விவசாய நிலங்கள் நஞ்சாகாது பேணப்பட்டு வந்துள்ளமை குறித்துரைக்கத்தக்க நல்விளைவுகளாகும். இந்நிலங்கள் நிலைத்துநிற்கும் பண்பு கொண்ட இயற்கை வேளாண்மைக்குரிய அடிப்படைகளை கொண்டுள்ளன. வலிகாமத்தில் வடபகுதிச்செம்மண் வலயம், தீவுப்பகுதி பிரதேசம் என்பன மக்கள் புலம்பெயர்ந்ததால் இரு தசாப்தங்களாக பலவழிகளில் இயற்கைவழி மாற்றத்தி;றகுள்ளாகி சீர்பெற்றுள்ளன. இவ் இடங்களில் புனர்வாழ்வு, புனர்நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளும்  இக்காலகட்டத்தில் அரசும், அரசசார்பற்ற நிறுவனங்களும் 21ஆம் நூற்றாண்டுக்குரிய சூழல்பேண் இயற்கைவேளாண் வழிமுறைகளை மேற்குறித்த பகுதிகளில் அறிமுகப்படுத்துதல் அறிவுடைமையாகும்.

பொதுவாக யாழ்ப்பாண விவசாய மக்கள் மூன்று தசாப்தங்களாக நீடித்த யுத்தகாலத்தில் உரம், நாசினிப்பாவனையின்றி அதிகளவு விவசாய உற்பத்திகளைப் பெற்றமை கவனத்திற்குரியது. தீவுப்பகுதியை பொறுத்தவரையில் மீள்குடியமர்ந்தோர் குறைவு. ஆனால் விவசாய நிலங்கள் அதிகம் உள. இச்சூழ்நிலையைப் பயன்படுத்தி சூழல்பேண் இயற்கை வேளாண் பண்ணைகளையும், விலங்கு வளர்ப்பு பண்ணைகளையும் அங்கு உருவாக்குதல் சாத்தியமே. இக்கட்டுரையாளர் தீவுப்பகுதியை சேர்ந்த வேலணைக்கிராமத்தில் “இராசரத்தினம் உருக்குமணி” பசுமைக்கிராமம் ஒன்றை உருவாக்கி வருவதையும, அங்கு இயற்கை வேளாண்மை முறையில் உபஉணவு உற்பத்தியில் ஈடுபட்டு வருவதையும் முன்னுதாரணமாக கொள்ளலாம்.

யாழ்ப்பாண நகரச்சந்தையில் உடன் விற்பனை செய்யக்கூடிய காய்கறி உற்பத்தி, விலங்கு வேளாண் உற்பத்தி, மீன்பிடி உற்பத்தி என்பனவற்றை தீவுப்பகுதியில் மேற்கொள்ள உதவி வழங்குவதன் மூலம் தீவுப்பகுதியை அபிவிருத்தி செய்வதோடு யாழ்ப்பாண நகர மக்களில் ஒருபகுதியினரின் உணவுத் தேவையினையும் பூர்த்தி செய்ய முடியும்.

பொதுவாக வடகீழ் மாகாண புனர்வாழ்வு, புனர்நிர்மாணம் என்பவற்றிற்காகத் திட்டமிடுவோரும் ஆலோசனை வழங்குவோரும் இப்பிரதேசங்களில் நிலைத்து நிற்கும் பண்பு கொண்ட 21ஆம் நூற்றாண்டிற்குரிய சூழல் பேண் வேளாண் அபிவிருத்தியை முன்னெடுத்தல் பயன்தருமா என்பது பற்றியும் எவ்வெவ் இடங்களில் எந்தெந்த வழிகளில் இதனை அமுல் நடத்த முடியுமென்பது பற்றியும் ஆய்வுகளை மேற்கொண்டு தெளிந்த நல்லறிவைப் பெறுதல் வேண்டும்.

ஆக்கம்:- பேராசிரியர் இரா.சிவசந்திரன்

E mailஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pin It

 

விவசாயத் தொழிற்றுறை எனும் போது, அது ஒரு பக்கத்தில் விவசாய உற்பத்திக்கு அடிப்படையான (உள்ளீடுகள், உழவு இயந்திரங்கள், களஞ்சியம் போன்றன) கைத்தொழில்களையும் மறுபக்கத்தில் விவசாய உற்பத்திகளை மூலப்பொருளாகக் கொண்ட கைத்தொழில்களையும் குறிக்கும். இவ் ஆய்வு விவசாய உற்பத்தியை மூலப்பொருளாக கொண்ட கைத்தொழில்கள் பற்றியே ஆராய்கிறது.

வடக்கு, கிழக்கு மாகாணத்தின் பொருளாதாரம் நீண்டகால பாரம்பரியம் மிக்க விவசாயத்தையே அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது. ஆயினும் ஒரு விவசாய தொழிற்றுறை நோக்கிய விரிவாக்கம் இங்கு குறிப்பிடும் படியாக அபிவிருத்தியுறவில்லை எனலாம். அதாவது, விவசாய உற்பத்தி மூலப்பொருளானது அதிக வருமானந்தரத்தக்க விவசாய அடிப்படையிலான கைத்தொழில் துறை நோக்கி இன்றுவரை சரியாகத் திசை திருப்பப்படவில்லை என்பதே இதன் கருத்தாகும். இலங்கையில் நூற்றாண்டிற்கு மேற்பட்ட வளர்ச்சியைக் கண்ட பெருந்தோட்ட விவசாயத்துறை கூட பண்ட உற்பத்திக்  கண்டத்திலிருந்து பதனிடுதல் கட்டத்திற்குக் கூட இங்கு முறையாக அபிவிருத்தி பெறவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.

இப்பிரதேசத்தில் அதிகம் பரந்துள்ள விவசாயக் கைத்தொழில் நெல்லரைக்கும் ஆலைத்தொழிலாகும். பாரம்பரியவகை ஆலை, ஓரளவு நவீனவகை ஆலை, நவீன வகை ஆலை என இவை கிராமம் தொட்டு நகரம் வரை பரந்துள்ளன. மொத்த நெல் ஆலைகளில் 80 வீதமானவை பாரம்பரிய ஆலைகளே. நெல்லை அரிசியாக மாற்றும் ஒரு சிறுபதனிடல் முயற்சியை மேற்கொள்ளும் இப்பாரம்பரிய ஆலைகள் அதிக தீமையையே விளைவிக்கின்றன. அவையாவன:

அரிசி அதிகளவுக்கு உடைக்கப்படுகின்றது.

அரிசியில் அசுத்தங்கள் காணப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

தவிடு சரியாக நீக்கப்படுவதில்லை.

பெருமளவு புழுங்கல் அரிசியை மட்டுமே இவை அரைக்கின்றன.

ஆலையை இயக்கும் வலு நுகர்வில் சிக்கனம் இல்லை.

நவீன வகை ஆலைகள் மேற்படி குறைகளை நிவர்த்திக்கவல்லன. எனவே இங்கு நெல்லரைக்கும் ஆலைகள் நவீனமயப்படுத்துதல் அவசியமாகும். தமிழர் பாரம்பரியப் பிரதேசமாகிய வடகீழ் மாகாணத்தில் நெல் 202977 கெக்டர் பரப்பில் (2007) விளைவிக்கப்படுகின்றது. இது இலங்கையின் மொத்த நெல்விளைபரப்பில் 24.8 வீதமாகும். (மொத்தம் 100 எனில் 68 வீதம் கிழக்கு மாகாணம் 32 வீதம் வடமாகாணம்) இதனால் நெல்லரைக்கும் ஆலைகளை எவ்வகையிலே விரைவாக நவீன மயப்படுத்தலாம் என்பது பற்றி நாம் அதிக கவனமெடுத்தல் வேண்டும்.

அரிசியை எவ்வாறு அதிகலாபம் தரும் கைத்தொழிலாக மாற்றலாம் என்பதற்கு “நெசில்ஸ்” உற்பத்திகளாக வரும் நெஸ்டம்; (Nestum) பாளின்;(Forline) ஆகிய குழந்தை உணவுப்பொருட்களே தகுந்த எடுத்துக்காட்டுகளாகும். மேற்படி உணவுப்பொருட்களில் இருகைப்பிடியளவான அரிசியோ, கோதுமையோ தான் மூலப்பொருளாக உள்ளது. அத்துடன் சில ஊட்டச்சத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் அதனைப் பெறுவதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளது. இவ் அதிக மதிப்பை அப் பொருள் பெறுவதற்கு அது கைத்தொழில் மயப்படுத்தப்பட்டு பொதியிலடைக்கப்பட்டு சந்தைக்கு வருவதே காரணமாக அமைகின்றது. எனவே விவசாய உற்பத்திகளை கைத்தொழில் மயப்படுத்தும்போது நாம் அதிக வருமானம் பெறமுடியும்.

தெங்குத் தொழில் ஒப்பீட்டளவில் கைத்தொழில் மயமாக்கப்பட்டுள்ளதெனலாம். தேங்காய்த் துருவல், தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெய், சவர்க்காரம், மாஜரீன், வினாகிரி போன்ற உற்பத்திகளும், தும்புத் தொழில் பேன்ற தொழில் மயமாக்கப்பட்ட உற்பத்திகளும் தேசிய மட்டத்திலே ஓரளவு அபிவிருத்தியை எய்தியுள்ளன. ஆனால் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் இவை குறிப்பிடும்படியான அபிவிருத்தியை இன்னும் எட்டவில்லை. தெங்குத்தொழில் அபிவிருத்தியானது கிராம மட்டங்களிலே இடம்பெறுவதால் அதிக பயனை விளைவிக்கத்தக்கவை. முக்கியமாக கிராம மட்டத்தில் பலருக்கு வேலை வாய்ப்புகளை அளிக்க முடியும். தெங்கு உற்பத்தியினைத் தொழில் மயப்படுத்துவதோடு அதனை நவீனமுறைக் கைத்தொழில் உற்பத்திகளாக மாற்றுதலும் அவசியமாகும்.

இப்பிரதேசத்தில் உற்பத்தி செய்யத்தக்க இன்னோர் முக்கிய விவசாய அடிப்படையிலான தொழிற்றுறை சீனி உற்பத்தியாகும். கரும்பு, சில கிழங்கு வகைகள், பனை ஆகிய வளங்களிலிருந்து சீனி உற்பத்தி செய்யப்படலாம். இப்பிரதேசத்தில் காணப்படும் கந்தளாய், கல்லோயா கரும்புச்சீனி உற்பத்தியாலைகளை புனருத்தாரணம் செய்து உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. தேசிய மட்டத்தில் இறக்குமதியாகும் சீனியை இவ் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் குறைக்க முடியும். பொதுவாக வறண்ட வலயத்தில் கரும்புச் செய்கையினை நல்லமுறையில் மேற்கொள்ளக்கூடிய வசதிகள் உள்ளன. இப்பிரதேசங்களில் பாசன வசதிகள் அமைக்கப்பெற்றால் வருடம் முழுவதும் கரும்பு பயிரிடப்படலாம். அத்துடன் இப்பிரதேசத்தில் சீனி உற்பத்திக்கான பொருத்தமான கிழங்கு வகைகள் எவையென ஆராய்ந்து அறிந்து அவற்றினைப் பயிரிட்டு சீனி உற்பத்தியை அதிகரிக்க முடியும். மேலும் இப்பிரதேசத்தின் முக்கிய பாரம்பரிய வளமான பனை வளத்தைச் சீனி உற்பத்திக்கு பயன்படுத்துவோமாயின் அதிக வருமானமும் வேலை வாய்ப்பும் ஏற்படுமென கருதுகின்றனர்.

பனஞ்சீனி உற்பத்தியானது அதிக உற்பத்திச் செலவை வேண்டுகின்றது. முக்கியமாக எரிபொருட் செலவே அதிகமாக உள்ளது. சூரிய சக்தியை பயன்படுத்துவதன் மூலம் இச்செலவைக் குறைக்கமுடியுமாயின் உற்பத்திச் செலவு குறைத்து பனை வளத்திலிருந்து இலாபகரமான முறையில் சீனியை உற்பத்தி செய்தல் சாத்தியமே. சீனி உற்பத்தியுடன் இணைவாக மதுபான உற்பத்தியும் அதிகரிக்கப்படலாம், குறிப்பாக ஏற்றுமதிக்கேற்ற தரத்தில் சாராய உற்பத்தியை அதிகரிக்கலாம்;. பனைவள அபிவிருத்திச் சபை போன்ற அமைப்புகளும், சமூக நலன் விரும்பிகள் சிலரும் பனைவள உற்பத்திகளை அபிவிருத்தி செய்வதற்கு அண்மைக்காலங்களில் அதிக முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி கண்டு வருகின்றனர். பனைவளத்திலிருந்து பல வகையான அழகுப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. வளர்ந்து வரும் சுற்றுலா தொழில் வளரும் போது இவ்வாறான உற்பத்திகள் அதிக வருமானத்தை ஈட்டித் தருமென நம்பலாம்.

எமது பிரதேசத்தில் அதிகளவு அபிவிருத்தி வாய்ப்பைக் கொண்ட இன்னோர் தொழிற்றுறை விலங்கு வேளாண்மையாகும். வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் நல்ல முறையில் திட்டமிட்டு இவை மேற்கொள்ளப்படலாம். புல்லினங்களை வளர்த்து அதனை விலங்குகளுக்கு கொடுத்து பாலாக, இறைச்சியாகப் பெறுவதில் அதிக வருமானம் உண்டு. திணை வகைகளை கோழிகளுக்குக் கொடுத்து முட்டையாக, இறைச்சியாக நுகர்வதில் அதிக பயன் உண்டு. புல்லும் திணை வகைகளுமே மேற்படி உற்பத்திகளின் விவசாய மூலவளங்களாகும். ஆடு, எருமை,பன்றி,முயல், இறைச்சிக்கான மாடு போன்றனவும் நல்ல முறையிலே எமது பிரதேசங்களில் விரிவாக்கம் செய்யப்படலாம். கிராமம் ஒன்றில் மந்தை வளர்ப்பில் ஈடுபடும் ஒரு நவீன விவசாயி அதன்மூலம் பல நன்மைகளைப் பெறலாம். அவர் தனது வீட்டுத் தேவைக்கான உயிர் வாயுவை (Biogas) உற்பத்தி செய்யலாம். பயிர்களுக்கு உரம் பெறலாம், பால், இறைச்சி பெறலாம். இப்படி ஒன்றுடன் ஒன்று இணைவாக அபிவிருத்தியுறத்தக்க வகையில் ஒருங்கிணைக்கப்பட்ட கிராமப் பண்ணைத்திட்ட விருத்தியின் மூலம் அதிக பயன்பெற முடியும்.

இதற்கு சிறந்த உதாரணமாக மன்னார் வவுனியா போன்ற பிரதேசங்களில் அமைந்துள்ள தனி நபர் விவசாய பண்ணைகள் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். இவை ஒருங்கிணைக்கப்பட்ட விவசாய பண்ணைகளாக இயங்கிவருகின்றன. மேற்படி ஒருங்கிணைப்புப் பண்ணை அபிவிருத்தியானது பலருக்கு வழிகாட்ட வல்லது. விலங்கு வேளாண்மை எமது பிரதேசத்தில் இன்று வரை மிகவும் குறைந்த கவனிப்பையே பெற்றுள்ளது. இதனை ஒவ்வொரு கிராமமட்டத்திலும் அபிவிருத்தி செய்ய உழைத்தல் வேண்டும். வீட்டுக்கு ஒரு மாடு, சிறு கோழிப்பண்ணை, ஆடு என்பன வளர்க்க ஊக்கமளிக்கப்படுதல் வேண்டும்.  நல்ல தரமான இனங்களை அறிமுகம் செய்தல் வேண்டும். எமது கிராமங்களில் உள்ள வேலிகளை மதில்களாக மாற்றுவதை விடுத்து குழைதரக்கூடிய மரங்களை வேலிகளில் நாட்டி அதன்மூலம் விலங்கு வேளாண்மையை அதிகரிக்கச் செய்ய வேண்டும். ஒவ்வொரு கிராமங்களிலும் சுயநிறைவுப் பொருளாதார வளமுள்ள கிராமக் குடும்ப அலகுகளை ஏற்படுத்துவதற்கு இவை பெரிதும் உதவும்.

பால் உற்பத்தியை இன்னும் நவீன தொழிற்றுறை உற்பத்தியாக மாற்ற வேண்டுமாயின் அதனைப் புட்டிப்பால், பால்மா, பட்டர், சீஸ், ஜஸ்கிறீம், யோக்கட், போன்றனவாக மாற்றி உற்பத்தி செய்யலாம். இவை அதிக வருமானத்தை அளிக்கவல்ல உற்பத்திகளாகும். புல் வளர்ப்பில் இருந்து ஆரம்பமாகும் இத் தொழிற்றுறையின் விரிவாக்கமானது சந்தையின் விரிவுக்கேற்ப அதிக வருமானம் தரும் உற்பத்திகளாக வளர்ச்சி பெறத் தக்கவையாகும்.

வடகீழ் மாகாணத்திலே 6.1 வீத நிலப்பரப்பைக் கொண்டதும், அப்பிரதேச மொத்தக்குடித்தொகையில் 36 வீதத்தை உள்ளடக்கியதுமான யாழ்ப்பாணக்குடாநாட்டுப் பகுதியே தோட்டச் செய்கை நன்கு வளர்ச்சியடைந்துள்ள பகுதியாக அமைந்துள்ளது. இப்பகுதியில் இலங்கையில் வேறு எப்பாகத்திலும் இல்லாதவாறு செறிந்தமுறைப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. இங்குள்ளோர் நவீன விவசாயிகள் என கூறத்தக்கவர்கள். யாழ்ப்பாணக்குடாநாட்டு விவசாயிகளைப்போல் நாட்டின் வேறு எங்கும் மிக விரைவாக நவீன அம்சங்களை பின்பற்றும் விவசாயிகளைக் காண்பதரிது. பாரம்பரிய முறையை உடனடியாக விட்டு நவீனமுறையை பின்பற்றக் கூடிய மனப்பாங்கு இங்குள்ள பெரும்பாலான விவசாயிகளிடம் காணப்படுகின்றது. இதனால் நவீனத்துவ முறைகள் இங்கு புகுத்துதல் எளிதாகும்.

யாழ்ப்பாணக் குடாநாட்டிலே உள்ள தோட்டங்களில் புகையிலை, மிளகாய், வெங்காயம், உருளைக்கிழங்கு, காய்கறிகள், பழங்கள், திணை வகைகள் என்பன பெருமளவில் விளைவிக்கப்படுகின்றன. இலங்கையின் உப உணவு உற்பத்தியில் கணிசமான பங்கினை யாழ் குடாநாட்டு விவசாயிகளே உற்பத்தி செய்கின்றனர். எடுத்துக்காட்டாக இலங்கையில் வெங்காயச் செய்கைக்கு உட்பட்ட பரப்பளவில் 38 வீதமும், மிளகாய்ச் செய்கைப் பரப்பளவில் 15 வீதமும் யாழ் குடாநாட்டிற்குள் அடங்குகின்றது. எனவே இவ் உற்பத்திகளை விவசாய அடிப்படையிலான கைத்தொழில் உற்பத்திகளாக விரிவாக்கம் செய்வது பற்றி நன்கு சிந்தித்து திட்டமிடதல் இம் மண்ணை நேசிக்கும் அனைவரினதும் கடமையாகும். எடுத்துக்காட்டாக புகையிலை மூலவளத்தைக் கொண்டு சுருட்டுக் கைத்தொழில் விரிவாக்கத்துடன் மாத்திரம் நின்றுவிடாது, அதனை நவீன முறையிலே சிகரெட் உற்பத்தியாக மாற்றி ஏற்றுமதி செய்ய முடியும். இதற்கான நவீன இயந்திரங்களைத் தருவித்து, சிகரெட், புகையிலை உற்பத்தியையும் ஊக்குவித்து விவசாய தொழிற்றுறை விரிவாக்கம் செய்யப்படலாம்.

இப் பிரதேச விவசாய உற்பத்தியில் குறிப்பாக யாழ்குடாநாட்டு உற்பத்தியில் உணவு பதனிடுதல் தொழிற்றுறை நல்ல பயனை நல்குமெனலாம். இவற்றில் முக்கியமாக பழங்கள் காய்கறிகளை பதனிடல், தகரத்திலடைத்தல், பொதிசெய்தல்; என்பனவற்றின் விரிவாக்கம் பற்றி அதிகம் சிந்திக்கலாம். சில பருவ காலங்களிலேயே சில பழங்களும், காய்கறிகளும் அதிகம் விளைகின்றன. அக்காலத்தில் இவற்றின் உற்பத்திகள் அதிக நிரம்பலை ஏற்படுத்துகின்றன. இதனால் அவற்றின் கேள்வி குறைந்து பழங்கள், காய்கறிகள் பெருமளவு பழுதடையும் நிலையும் தோன்றுகின்றது. எனவே பழங்களையும் காய்கறிகளையும் பாதுகாப்பாக வைப்பதற்கும், நீண்ட நாட்களுக்கு இன்னோர் வழியில் காப்புச்செய்து வைத்து பயன்படுத்துவதற்கும் சிறப்பான சில தொழில்நுட்ப உத்திகள் பயன்படுத்தப்படலாம். அவற்றுள் சில பின்வருமாறு.

01. பாதுகாப்பாக நீண்டகாலம் வைத்திருக்கக் கூடிய களஞ்சியங்களை உருவாக்குதல்.   (மெழுகு பூசுதல் போன்ற நுட்பங்கள் மூலம் பாதுகாப்பளித்தல்)

02. உறையச் செய்வது அல்லது இரசாயனப் பாதுகாப்புச் செய்வது.(உ- ம்: பழங்கள், பழச்சாறு, பழக்கூழ் வடிவிலோ, பல்வேறு வகைப் பழம் பானங்களாக உருமாற்றியோ பாதுகாக்கலாம்)

03. ஊறவைக்கும் பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்துதல்.(ஊறுகாய்)

04. உலர்த்துவதன் மூலம் பாதுகாத்தல்.(வற்றல் போடுதல்)

மேற்படி பாதுகாப்புமுறைத் தொழில்நுட்பங்கள் பல்வேறு நாடுகளில் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளன. அவற்றினைப் பின்பற்றி எமது பிரதேசத்திற்கு ஏற்றதான பொருத்தமான தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்றி உணவுபதனிடுதல் தொழிற்றுறையை விரிவாக்குதல் வேண்டும். எமது பிரதேசத்தில் பேணிப்பாதுகாத்து சந்தைப்படுத்தக்கூடிய பழங்களென மாம்பழம்,பலாப்பழம், தக்காளி, பப்பாசி, எலுமிச்சை, தோடை, முந்திரிகை, விளாம்பழம், வாழைப்பழம், அன்னாசி, பனம்பழம் என்பனவற்றை குறிப்பிடலாம். இவற்றை எவ்வழிகளில் பாதுகாத்தல் லாபகரமானது என்பதற்கு ஆய்வுகள் அவசியம். ஒவ்வொரு பழவகையின் பாதுகாப்புப் பற்றியும் தனித்தனி ஆய்வுகள் நிகழ்த்தப்படவேண்டும். பாதுகாத்து பயன்படுத்துவது லாபம் தரத்தக்கது என்பதை நிச்சயித்த பின்னரே இம் முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

பழச்சாற்றினை அடிப்படையாகக் கொண்ட விவசாயத்தொழிற்றுறை உற்பத்திகளில் பானங்கள், தகரத்தில் அடைக்கப்பட்ட பழச்சாறுகள், நெக்டர் போன்றன உடனடியாகப் புருகத்தக்கவையாகும். பழக்கூழினை அடிப்படையாகக் கொண்டவற்றில் ஜாம், ஜெலி, சட்னி, பழக்குழம்பு என்பனவும் முழுதாக அல்லது வெட்டப்பட்ட பழங்களை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திகளில் தகரத்தில் அடைக்கப்பட்ட பழவகைககள், ஊறுகாய் வகைகள் என்பனவும் அடங்கும். எமது பிரதேசத்திலுள்ள பல கிராமங்களிலே சில பருவங்களின் போது பழங்கள், காய்கறிகள் பெருமளவில் உற்பத்தியாகின்றன. தேவைக்கதிகமான இப்பருவகால உற்பத்திகளின் பெரும் பங்கின வீணடிக்கப்படுகின்றன. பருவகாலமற்ற காலங்களில் இவை அருமையாகவுள்ளதால் அதிக விலையாக உள்ளன. எனவே மேற்படி உற்பத்திகளின் நிரம்பலை ஒழுங்குபடுத்துவதற்கு, பாதுகாப்பு முறைகளை பயன்படுத்துவது இன்றியமையாததாகும். இதற்குப் பொருத்தமான, மலிவான பாதுகாப்புத் தொழில்நுட்ப முறைகளை விருத்தி செய்தல் அவசியம். இதற்கான பல ஆய்வுகளும், செய்திட்டங்களும் விரைவில் மேற்கொள்ளப்படுதல் நற்பலனை விளைவிக்கும் எனலாம்.

பொதுவாக எமது பிரதேச விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் அதே நேரத்தில், அவ் உற்பத்திகளை அதிக வருமானம் தரத்தக்கவையாக நவீனத்துவம் கொண்டவையாக மாற்றுவதற்கு விவசாய தொழிற்றுறை விரிவாக்கம் பற்றி நாம் அதிகம் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம். ஒரு நாடோ ஒரு பிரதேசமோ ஒரு கிராமமோ அபிவிருத்தியுறுவதற்கு மேற்படி அபிவிருத்திக்குரிய வழிமுறை சுருக்கமான தந்திரோபமாயமாகும். ஒரு விவசாய உற்பத்தியை சில செயன்முறைக்கு உட்படுத்தி வேறோர் உற்பத்தியாக அல்லது பலவாக மாற்றுதல், அவ் உற்பத்திகளை இன்னமும் சில செயன்முறைக்கு உட்படுத்தி இன்னும் பலவாக மாற்றுதல் போன்ற தொழில்நுட்ப நடவடிக்கைகளே விவசாயத் தொழிற்றுறை விரிவாக்கத்தின் பரிணாமமாகும். இதன் விளைவாக அதிக வருமானம் லாபம் கிடைப்பதோடு வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும். எனவே விவசாயப் பொருளாதார அடிப்படையை கொண்ட நம் பிரதேசமும் நாடும் எம் போன்ற நாடுகளும் விருத்தியுற மேற்படி அபிவிருத்தித் திறமுறையின்பால் அதிக அக்கறையும், ஆர்வமும் காட்டவேண்டும்.

- பேராசிரியர் இரா.சிவசந்திரன் (புவியியற் பேராசிரியர்)

Pin It

 

முகவுரை:-

தமிழர் பாரம்பரியப் பிரதேசம் வரலாற்று ஆதாரங்களின் படி இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாண எல்லைப்பரப்பை விடப் பரந்ததெனினும் இங்கு ஆய்வு நோக்கம் கருதி இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணம் என்றே கொள்ளப்படுகின்றது. வடகீழ் மாகாணம் 18,333 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பையும் 558 சதுரகிலோமீற்றர் உள்நாட்டு நீர்ப்பரப்பையும் உள்ளடக்கிய பிரதேசமாகும். இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் இது 28.8 வீதமாக அமைகின்றது. இவை எட்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு என்பன வடமாகாணத்தினுள்ளும், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை என்பன கிழக்கு மாகாணத்தினுள்ளும் அமைகின்றன.

தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தின் உழைக்கும் மக்களில் 60 வீதத்தினர் விவசாயத்தையே பிரதான தொழிலாகக் கொண்டுள்ளனர். இப்பிரதேசத்தில் விவசாயமே பாரம்பரியப் பொருளாதார நடவடிக்கையாக, நீண்டகாலமாக பெரு மாற்றங்கள் எதுவுமின்றி இருந்து வருகிறது. பிற்காலத்தில்; விவசாயத்துறையில் புகுத்தப்பட்ட புதிய நுட்ப முறைகள் இப்பகுதி விவசாயிகளிடையே வேகமாகப் பரவி உள்ளன. இதில் மாற்றுவிவசாயம், விவசாய உள்ளீடுகள், நீர்ப்பாசனம், நீர் முகாமைத்துவம் தொடர்பான நுட்ப முறைகள் குறிப்பிடத்தக்கவை.

நிலப்பயன்பாடு:-

தமிழர் பாரம்பரியப் பிரதேசம் அடக்கியுள்ள வடக்கு – கிழக்கு மாகாணங்களின் விவசாய நிலப்பயன்பாட்டை இரு பெரும் பிரிவாக வகைப்படுத்தலாம்.

01) தோட்டச்செய்கையோடு தொடர்பான விவசாய நிலப்பயன்பாடு

02) நெற்செய்கையோடு தொடர்பான விவசாய நிலப்பயன்பாடு

இப் பிரதேசத்தின் மொத்த நிலப்பரப்பில் 5.43 வீதத்தையும் மொத்தக் குடித்தொகையில் 35.4 வீதத்தையும் உள்ளடக்கிய யாழ்ப்பாணக்குடாநாட்டுப் பகுதியே தோட்டச் செய்கை அதிகளவுக்கு வளர்ச்சி பெற்ற பகுதியாக உள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் கிடைக்கப்பெறும் தரைக்கீழ் நீர்வளத்தைப் பயன்படுத்தி இப்பகுதி வாழ் மக்கள் வருடம் முழுவதும் பயிர் செய்கின்றார்கள். மிகவும் சிறிய அளவினதான துண்டு நிலங்களில் செறிவான முறையில் தோட்டப் பயிரச்செய்கை இங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இலங்கையின் வேறு எப்பாகத்திலும் இவ்வகையான செறிந்த பயிரச்செய்கை முறை மேற்கொள்ளப்படுவதில்லை. இதன் காரணமாக யாழ்ப்பாணக்குடாநாட்டுப் பகுதி செறிவான குடித்தொகையை கொண்டுள்ளது. தோட்ட நிலங்கள் அதிகளவு கொண்ட பகுதிகளில் சதுர மைலுக்கு 3000க்கு மேற்பட்டோர் வாழ்கி;ன்றனர்.

யாழ்ப்பாண குடாநாடு 1025 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டது. இதில் 60 வீதமான பகுதியே மக்கட் பயன்பாட்டிற்கு ஏற்றதாக அமைகின்றது. ஏனைய 40 வீதமான பகுதி மணல், பாறை ஆகியவற்றையும் சதுப்பு நிலங்களையும் கொண்டுள்ளதால் பயன்பாட்டிற்கு ஏற்றதாக அமையவில்லை. மக்களுக்கு பயன்படுகின்ற 60 வீதமான நிலப்பகுதியில் மூன்றிலொரு பகுதி குடியிருப்பு நிலங்களாக உள்ளன. பனை, தென்னை ஆகிய மரப்பயிர்கள் மற்றொரு மூன்றிலொரு பகுதியிற் காணப்படுகின்றன. எஞ்சிய பகுதியே நெற்பயிரும், தோட்டப்பயிரும் செய்கை பண்ணப்படும் விவசாயப்பகுதியாகும். அண்மைக்காலங்களில் நெல்வயல் நிலங்கள் தோட்டநிலங்களாக மாற்றப்பட்டு வருகின்ற போக்கினையும் தோட்ட நிலங்கள் குடியிருப்பு நிலங்களாக மாற்றப்பட்டு வருகின்ற போக்கினையும் அவதானிக்க முடிகின்றது.

இப்பகுதித் தோட்டங்களில் புகையிலை, மிளகாய், வெங்காயம், உருளைக்கிழங்கு, காய்கறிகள், திணை வகைகள், பழ வகைகள் என்பன பெருந்தொகையாக விளைவிக்கப்படுகின்றன. இலங்கையின் உப உணவுத்தேவையின் கணிசமான பங்கு யாழ்ப்பாணக்குடாநாட்டு உற்பத்தியாலேயே யுத்தத்திற்கு முன்னர்  பூர்த்தி செய்யப்பட்டது. உதாரணமாக இலங்கையில் வெங்காயச் செய்கைக்கு உட்பட்ட பரப்பளவில் 38 வீதத்தையும், மிளகாய்ச் செய்கைக்குட்பட்ட பரப்பளவில் 15 வீதத்தையும் யாழ்ப்பாணக் குடாநாடே அடக்கியிருந்தது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் விவசாயிகள் புதிய தொழில் நுட்பமுறையினை புகுத்துவதில் பேரார்வம் கொண்டவர்கள். தோட்டச்செய்கைக்கு நீர் இறைக்கும் இயந்திரம், செயற்கை உரம், களைநாசினி, கிருமி நாசினி என்பன பெருமளவு பயன்படுத்தப்பட்டு விவசாய உற்பத்தி உயர்வடைந்த நிலை காணப்பட்டது.

யாழ்ப்பாணக் குடாநாடு தவிர்ந்த பிரதான நிலப்பகுதியின் நிலப்பயன்பாட்டை தாழ்நிலப்பயன்பாடு, மேட்டு நிலப்பயன்பாடு என வகைப்படுத்தலாம். மேட்டு நிலப் பயன்பாடு இப்பகுதியில் அதிகம் விருத்தி அடையவில்லை. தாழ்நிலப் பயன்பாட்டில் நெற்செய்கையே முக்கிய இடத்தை வகிக்கின்றது. ஆற்று வடிநிலப் பகுதிகளிலும் நீர்த்தேக்கத்தினை அண்டிய பகுதிகளிலும் வண்டல்மண், களிமண் படிவுகள் காணப்படும் தாழ்வான பகுதிகளிலும் நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. இப்பகுதிகளில் பழைய பாரம்பரிய கிராமிய விவசாய நிலப்பயன்பாடும் புதிய குடியேற்றத்திட்ட நிலப்பயன்பாடும் வௌ;வேறான பண்புகளைக் கொண்டமைந்துள்ளன. மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு பகுதிகளின் கரையோரமாகப் பழைய விவசாய நிலப்பரப்புகள் பரந்துள்ளன. முன் காடுகளாக இருந்து தற்போது நில அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் உள்ளமைந்த பகுதிகளில் குடியேற்றத்திட்டங்கள் அமைக்கப்பட்டன.

1935 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட நில அபிவிருத்திச் சட்டத்தின் பின்னர் இப்பகுதிகளில் குடியேற்றத்திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. பல நோக்கு குடியேற்றத்திட்டம், பாரிய குடியேற்றத்திட்டம், கிராம விஸ்தரிப்புத் திட்டம், மத்திய வகுப்பார் குடியேற்றத்திட்டம், இளைஞர் திட்டம் ஆகியனவாக இவை அமைக்கப்பட்டுள்ளன. குடியடர்த்தி மிக்க பகுதிகளில் இருந்து மக்களை நகர்த்தவும், நிலமற்றோருக்கு நிலமளிக்கவும், வேலையற்றிருந்தோருக்கு வேலை வாய்ப்பு வழங்கவும், குடியேற்றத்திட்ட உருவாக்கம் ஓரளவு உதவியுள்ளது. கிளிநெச்சியில் இரணைமடுக்குளத்திட்டம், மன்னாரில் கட்டுக்கரைக்குளத்திட்டம், வவுனியாவில் பாவற்குளத்திட்டம், திருகோணமலையில் கந்தளாய் குளத்திட்டம், மட்டக்களப்பில் உன்னிசசைக்குளத்திட்டம், அம்பாறையில் கல்லோயாத்திட்டம் என்பன மாவட்டத்திற்கொன்றான உதாரணங்களாகும். பிற்;காலங்களில் இப்பகுதிகளிலே படித்த இளைஞர்களுக்கென உபஉணவு உற்பத்தித் திட்டங்கள் பல ஏற்படுத்தப்பட்டு வந்துள்ளன. இவை மேட்டு நிலப்பயிர்களை ஊக்குவிப்பனவாகவும், ஏற்று நீர்ப்பாசன வசதியுடன் கூடிய விவசாய அபிவிருத்தி திட்டங்களாகவும் அமைந்தன.

இவற்றில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்த முத்தையன் கட்டு இளைஞர் திட்டம், கிளிநெச்சி மாவட்டத்தில் அமைந்த விஸ்வமடு, திருவையாறு, இளைஞர் திட்டங்கள் என்பன குறிப்பிடத்தக்கன. ஏனைய குடியேற்றத்திட்டங்கள் போலன்றி இளைஞர் திட்டங்கள் பொருளாதார ரீதியில் திருப்தியைத் தருவனவாக விருத்தியடைந்திருந்தன. வடக்கு கிழக்கு மாகாணங்களில் நெற்செய்கை மேற்கொள்ளப்படும் மொத்த நிலம் ஏறத்தாழ 156692 ஹெக்டேயர் ஆகும். இது இலங்கையின் மொத்த நெல் விளைபரப்பில் பரப்பில் 31.3 வீதமாக அமைகின்றது. இப் பிரதேசத்தின் மொத்த நெல் விளை பரப்பில் 62 வீதத்தைக் கிழக்கு மாகாணம் உள்ளடக்கியுள்ளது. மொத்த நெல் விளை நிலத்தில் 33 வீதம் பருவ கால மழையை நம்பிய மானாவாரி நிலங்களாக உள்ளன. ஏனையவை நீர்ப்பாசன வசதியுடைய குளங்களை அடுத்துள்ளன. பாசன வசதியுடைய நிலங்கள் சிலவற்றிலே வருடத்திற்கு இருதடவை நெல் விளைவிக்கப்படுகின்றது. வருடத்திற்கு இரு தடைவ நெல் விளைவிக்கப்படும் விளைபரப்பு 28 வீதமாக அமைகின்றது.

பொதுவாக இப்பிரதேசத்தில் அதிகளவு நெல் விளைபரப்பு பருவ மழையை நம்பியதாகையால் பருவமழை பெய்துவரும்; காலங்களில் நெல் விளைச்சல் பெரிதும் பாதிக்கப்படுகின்றது. நெற்செய்கையில் நிலவும் இந் நம்பிக்கையற்ற நிலையை மாற்றவும் மிகுதி 72 வீதமான நிலப்பரப்பில் இருபோகச் செய்கையை மேற்கொள்ளவும் ஏற்கனவே பயிர்செய் பரப்பாகப் பயன்பட்டு வரும் நிலப்பரப்பிற்கு நீர்ப்பாசன வசதியை அதிகரித்தல் வேண்டும். இவற்றில் தெளிவு பெறுவதற்கு இப்பிரதேசத்திலுள்ள நீர்வளம், பாசன வாய்ப்புகள் பற்றி தெளிவு அவசியமாகும்.

நீர்வளமும் நீர்ப்பாசனமும்

தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தின் விவசாயச் செய்கை பெருமளவுக்கு மழை வீழ்ச்சியை நம்பியதாகவே அமைந்துள்ளது. வருடம் 2000 மில்லி மீற்றருக்கு (75 அங்குலம்) குறைந்த மழைவீழ்ச்சி பெறும் இலங்கையின் வரண்ட வலயத்தின் பெரும்பாகத்தை உள்ளடக்கியுள்ள தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தின் வருடச் சராசரி மழைவீழ்ச்சி 1250 மி.மீ ஆகும். மழைவீழ்ச்சிப் பரம்பலில் பிரதேச வேறுபாடுகள் உள்ளன. மன்னார், அம்பாறை மாவட்டங்களின் தென் பகுதிகள் குறைந்தளவான 750 மி.மீ முதல் 1000 மி.மீ வரை மழை பெற, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் மேற்குப் பகுதிகள்  உயர்ந்தளவான 2000 மி.மீ மேற்பட்ட மழைவீழ்ச்சியை பெறுகின்றன. எனினும் 1000-2000 மி;மீ வரை (50- 75 அங்குலம்) மழை பெறும் பரப்பளவே தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தில் அதிகமாகும். அதாவது யாழ்ப்பாணம், கிளிநெச்சி, வவுனியா, திருகோணமலை மாவட்டங்கள் முழுவதும் மன்னார், அம்பாறை ,மட்டக்களப்பு  மாவட்டங்களின் பெரும் பாகமும் 1000 மி.மீ முதல் 2000 மி.மீ வரை மழை பெறும் பகுதிகளாக அமைகின்றன.

இப்பகுதி வடகீழ் மொன்சூன் காற்றினாலும், சூறாவளி நடவடிக்கைகளினாலும் ஒக்டோபர், முதல் ஜனவரி வரையிலான காலப்பகுதியிலேயே அதிகளவு மழைவீழ்ச்சியைப் பெறுகின்றது. இப்பகுதியில் வருடம் முழுவதும் கிடைக்கப்பெறும் மொத்த மழைவீழ்ச்சியின் 70 வீதம் மேற்படி நான்கு மாத காலத்திற்குள்ளாகவே பெறப்படுகின்றது. இவ்வாறு பெறப்படும் மழை நீரில் 20-25 வீதம் புவி மேற்பரப்பு ஓடு நீராகக் கடலையடைகின்றதெனவும் 40–45 வீத நீர் ஆவியாக்கம், ஆவியுயிர்ப்பினால் இழக்கப்படுகின்றதெனவும், எஞ்சிய நீரே பயன்பாட்டிற்குரியதாக அமைகின்றதெனவும் சில கணிப்பீடுகளிலிருந்து தெரிகின்றது. இவ்வளவு குறைந்த காலத்தில் மழைவீழ்ச்சியினால் மாத்திரம் கிடைக்கும் நீர் வளத்தைப் புவி மேற்பரப்பு நீராகவும் தரைக்கீழ் நீராகவும் சேமித்துப் பாசனப் பயன்பாட்டிற்கு உட்படுத்தும் போதே இப்பிரதேசத்தின் விவசாய உற்பத்தியை அதிகரிக்க முடியும்.

தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தில் பாசனத்திற்குக் கிடைக்கக் கூடிய நீர் வளங்களை இரு பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.

01) புவி மேற்பரப்பு நீர்வளம்

02) தரைக்கீழ் நீர்வளம்

புவி மேற்பரப்பு நீர்வளம்

புவி மேற்பரப்பு நீர் வளமே யாழ்ப்பாணக்குடாநாடு தவிர்ந்த பிரதான நிலப்பகுதியில் பாசனத்திற்குப் பயன்படும் வளமாய் உள்ளது. தரைக்கீழ் நீர்வளம் முக்கியமாக யாழ்ப்பாணக் குடாநாட்டின் பாசனத்திற்குப் பயன்படுகின்றது.

புவிமேற்பரப்பு நீர்வளம் என்னும் போது ஆறுகள், குளங்கள் என்பவற்றில் தேக்கப்படும் நீரினைக் குறிக்கும். இப்பிரதேசத்தில் மகாவலி தவிர ஏனையவை வறண்ட பிரதேசத்தில் ஊற்றெடுக்கும் ஆறுகளேயாகும். பருவ காலங்களில் மழை வீழ்ச்சியால் கிடைக்கும் நீர் வளத்தையே இவை கொண்டுள்ளன. இவ்வகை ஆறுகளையோ கிளை ஆறுகளையோ அவற்றின் வடிநிலப்பரப்பில் தடுத்து அணைகட்டி குளங்களாக உருவாக்கியுள்ளனர். ஒரு சில ஆறுகள் திசைதிருப்ப்பட்டிருக்கின்றன. இவ்வாறான பாசன நாகரிகம் கிறீஸ்து காலத்திற்கு முன்பாகவே தமிழர் பிரதேசங்களில் பரவியிருந்தமையை மகாவம்சமே குறிப்பிடுகின்றது. குவேனி விஜயனைச் சந்தித்தபோது இவ்வாறான குளமொன்றின்  அணைக்கட்டில் நூல்நூற்றுக் கொண்டிருந்தாள். எனவும், அக்குளம் மன்னார் பிரதேசத்தில் அமைந்திருந்ததெனவும் மகாவம்சத்தில் காணப்படும் குறிப்புகள் சிலவற்றிலிருந்து தெரிய வருகின்றது.

தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தின் பிரதான நிலப்பகுதியிற் காணப்படும் குளங்களை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.

01) சிறு குளங்கள்( இவை 200ஏக்கர் பரப்பளவுக்கு உட்பட்டவை)

02) நடுத்தரக் குளங்கள்(200-1500 ஏக்கர் பரப்பளவுக்கு இடைப்பட்டவை)

03) பாரிய குளங்கள் ( 1500 ஏக்கர் பரப்பளவுக்கு மேற்பட்டவை)

இவற்றுள் சிறு குளங்களின் பராமரிப்பு அவ்வப்பிரதேச கமநல சேவை நிலையத்திடம் உள்ளது. ஏனையவை நேரடியாக நீர்ப்பாசனத்திணைக்களத்தின் பொறுப்பில் உள்ளவையாகும். 1900 ஆண்டில் இலங்கையில் நிறுவப்பட்ட நீர்ப்பாசனத் திணைக்களமே இந் நாட்டின் விவசாய அபிவிருத்திக்கு உதவும் பொருட்டு நீர்ப்பாசனத்திட்டங்கள் பலவற்றை உருவாக்கி வருகின்றது.

1959 இல் நீர்ப்பாசனத்திணைக்களம் இலங்கைத்தீவின் உள்ளார்ந்த நீர்வளம் பற்றிய குறிப்புகளுடன் படம் ஒன்றினை வெளியிட்டது. இதில் இலங்கையிலுள்ள 103 ஆற்று வடிநிலங்கள் பலவற்றில் பெருந்தொகையான நீர்த்தேக்கங்கள், கால்வாய்கள், அமைத்து பாசன அபிவிருத்தி செய்யக்கூடிய சாத்தியக் கூறுகள் விபரமாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. மேற்படி 103 ஆற்று வடிநிலங்களில் 61 வடிநிலங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணப்படுவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

நீர்ப்பாசனத்திணைக்களம், வடிகால் விருத்தியையும் நீர் வெளியேறும் அளவையையும் கருத்தில் கொண்டு ஒரு சதுரமைல் பிரதேசத்தில் கிடைக்கப்பெறும் நீரின் ஆண்டுச் சராசரி அளவை மதிப்பிட்டுப் படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி வவுனியாவையும் ஆனையிறவையும் இணைக்கும் கோட்டிற்கு மேற்காக ஒரு சதுரமைல் பிரதேசத்தில் கிடைக்கும் நீரின் அளவானது 500 ஏக்கர் அடி நீரில் இருந்து 300 ஏக்கர் அடி நீராகக் குறைந்து செல்வதையும் கோட்டிற்கு கிழக்காக முல்லைத்தீவு, கொக்கிளாய்ப் பிரதேசம் வரை 500 முதல் 650 ஏக்கர் அடியாக அதிகரித்துச் செல்வதையும் படம் காட்டுகின்றது. கிழக்கு மாகாணத்தில் ஒரு சதுரமைல் பிரதேசத்தில் கிடைக்கும் நீரின் ஆண்டுச் சராசரி அளவு 1000 முதல் 1500 ஏக்கர் அடியாக அதிகரித்துக் காணப்படுகின்றது. இதிலிருந்து வடமாகாணத்தை வடகிழக்கு மாகாணம் நீர்வளம் அதிகம் கொண்ட பிரதேசமாக அமைந்துள்ளதைக் காணலாம். இவ்வாறு பெறக்கூடிய நீரின் அளவும், பல்வேறு விதமாக இழக்கப்படும் நீரின் அளவும் கணிக்கப்படின், தேக்கிப் பயனபடுத்தத்தக்க நீர்வளத்தின் அளவை மதிப்பிட்டு பாசனத்தை அபிவிருத்தி செய்தல் இலகுவானதாகும்.

பொதுவாக தமிழர் பாரம்பரியப் பிரதேசம் பாசன அபிவிருத்திக்கு உள்ளார்ந்த நீர் வளங்களைப் பெருமளவு கொண்டுள்ளது. இவ்வடிகால் வளங்களில் சிலவற்றிலேயே நீர்த்தேக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இன்னும் அபிவிருத்தியை வேண்டியிருக்கும் சிறு, நடுத்தரக் குளங்கள் தவிர பாரிய குளங்களின் எண்ணிக்கை வட மாகாணத்தில் 10 ஆகவும், கிழக்கு மாகாணத்தில் 15 ஆகவும் அமைந்துள்ளது. இப்பாரிய குளங்களில் பல இன்னும் பெருப்பிக்கக் கூடியனவாயும் பல குளங்கள் ஒன்றுடன் ஒன்றை இணைந்து நீர் கொள்ளளவை அதிகரிக்கக்கூடிய அமைப்புக்களுடனும் காணப்படுகின்றன. இவ் இணைப்பானது ஒரு வடிகாலுடன் இன்னோர் வடிகால் இணைக்கும் வகையிலும் அமைக்கப்படலாம். இப்பிரதேசத்தின் தரைத்தோற்றம் பரந்த தாழ்நிலத்தையும் அலைவடிவான தரைத்தோற்ற அமைப்பினையும் கொண்டுள்ளதால் இங்கு இவ்வாறான அபிவிருத்திக்குரிய வாய்ப்புகள் உள்ளன.

தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தின் பிரதான நிலப்பகுதியிலேயே எதிர்காலத்தில் விவசாய அபிவிருத்தி செய்யக்கூடிய உள்ளார்ந்த வாய்ப்புகள் நிறைய உண்டு. இங்கு இரு வழிகளில் விவசாய அபிவிருத்தியை முன்னெடுக்கலாம்.

01) ஏலவேயுள்ள விளை நிலங்களில் விளைவை அதிகரித்தல்

02) புதிய நிலங்களை விளை நிலங்களாக மாற்றுதல்

ஏலவேயுள்ள விளைநிலங்களின் விளைவை அதிகரிப்பதற்கு பசுமைப்புரட்சி அளித்த நவீன விவசாய அபிவிருத்தி செய்முறையினை நல்ல முறையில் பரவச் செய்தல் வேண்டும் நவீன விவசாய முறைகள் வெற்றியளிக்க வேண்டுமாயின் பாசன வசதி பெறத்தக்க நிலங்களாக விளைநிலங்கள் மாற்றப்படுதல் அவசியம். புதிய உயர் விளைச்சல் தரும் நெல்லினங்களின் அக்கறையான விஞ்ஞானப+ர்வமான முறையிலான கவனிப்புகளுக்கு பாசன வசதியுடன் கூடிய நிலங்களே அவசியமானவை.

விளைவை அதிகரிப்பதற்கு இன்னோர் வழி வருடத்தில் இரண்டு அல்லது மூன்று போகங்கள் நெற்செய்கை மேற்கொள்வதாகும். இது நீர்ப்பாசன வசதிகள் அதிகரிக்கப்பட்டால் சாத்தியமாகும். பெரும்போகம், சிறு போகம், இடைப்போகம் என வருடத்தில் மூன்று போகங்கள் நெற்பயிர் செய்து இப்பகுதியில் பலர் வெற்றி கண்டுள்ளனர்.

புதிய நிலங்களை விளைநிலங்களாக மாற்றுவதற்குரிய நிலவளம் யாழ்ப்பாணக் குடாநாடு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் நிறையவே உண்டு. ஒரு நாட்டின் மொத்த நிலத்தில் 25 வீதம் காடாக இருக்கவேண்டும் என்ற கருத்தை மனதிற் கொண்டு திட்டமிட்ட முறையில் புதிய விவசாய குடியேற்றத்திட்டங்களை இப் பகுதிகளில் ஏற்படுத்தலாம். ஏலவேயுள்ள குடியேற்றத்திட்டப் பகுதிகளை விஸ்தரித்தலிலும் சாத்தியமே. இந் நடவடிக்கைகளுக்கு நீர்ப்பாசன வசதிகளைத் திட்டமிட்ட முறையில் விருத்தி செய்தல் வேண்டும். இப்பிரதேசத்தில் ஏலவே அபிவிருத்தி செய்யப்பட்ட நீர்ப்பாசனக்குளங்களின் கொள்ளளவை அதிகரிப்பதன் மூலமும், வடிநிலத்திலுள்ள பாரிய, நடுத்தர, சிறு குளங்களை இணைப்பதன் மூலமும், முடிந்தால் வடிநிலத் திசைதிருப்பத்தை ஏற்படுத்துவதன் மூலமும் நீர்ப்பாசன வளங்களை அதிகரித்து விவசாய நிலப்பரப்புகளை அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. மேலும் இங்குள்ள 60 வடிநிலங்களில் சிலவே இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ளன. பல பயனபடுத்தக்கூடிய உள்ளார்ந்த வளங்களைக் கொண்டுள்ளன.

எடுத்துக்காட்டாக வவுனியாவில் ஊற்றெடுத்து மன்னார் இலுப்பைக் கடவையில் சங்கமமாகும் பறங்கியாறு இதுவரை பாசன வசதிக்காக  முறையாகப் பயனபடுத்தப்படவில்லை. இவ் வடிநிலத்தில் இரணைமடு நீர்த்தேக்கம் போன்ற பாரிய இன்னோர் நீர்த்தேக்கத்தை அமைக்கலாம் என நீர்ப்பாசனவியலாளர்கள் கருத்துகின்றனர். இதுபோன்றே வவுனிக்குளத்திட்டத்தின் கீழ் உள்ள பாலியாற்றிலும் இன்னோர் நீர்த்தேக்கத்தை அமைக்கலாம் எனவும் கருத்துத் தெரிவிக்கப்படுகின்றது. எனவே தமிழர் பாரம்பரியப் பிரதேச பிரதான நிலப்பகுதியில் முறையான திட்டமிடல் நடவடிக்கைகள் மூலம் பாரம்பரிய நீர்ப்பாசனத் திட்டங்களை அமைத்து விவசாய அபிவிருத்தி செய்தல் சாத்தியமே.

தரைக்கீழ் நீர்வளம்

தரைக்கீழ் நீர்வளம் யாழ்ப்பாணக் குடாநாட்டின் மனித வாழ்வுக்கும் வளத்திற்கும் வரலாற்றுக்காலம் முதல் அடிப்படையாக இருந்து வருகின்றது. வட மாகாணத்தின் மொத்தக் குடித்தொகையில் 70 வீதத்தினர் யாழ்.குடாநாட்டில் செறிந்திருப்பதற்கும் குடாநாடு செறிந்த பயிர்ச்செய்கைப் பிரதேசமாக விளங்குவதற்கும் இங்கு கிடைக்கும் தரைக்கீழ் நீர்வளமே காரணமாகும்.

புத்தளத்தில் இருந்து பரந்தன், முல்லைத்தீவை இணைத்து வரையப்படும் கோட்டிற்கு வடமேற்காகவுள்ள பகுதிகள் மயோசின்காலச் சுண்ணாம்பு பாறையமைப்பைக் கொண்டுள்ளன. இப்படிவுகள் தரைக்கீழ் நீரைப் பெருமளவு சேமித்து வைக்கக் கூடிய தன்மை வாய்ந்தவையாகும். சுண்ணக்கல்லை அடிப்படையாகக் கொண்ட செம்மண், செம்மஞ்சள் மண்கள் நீரை உட்புகவிடும் இயல்பை அதிகளவு கொண்டவையாகவும் அமைந்துள்ளன. மழையால் பெறப்படும் நீர் இப்பகுதிகளில் இலகுவாக உட்புகுந்து தரைக்கீழ் நீராகத் தேங்குகின்றது. உண்மையில் இவ்வாறு செல்லும் நீர் நன்னீர் வில்லையாக உவர்நீரின் மேல் மிதந்து கொண்டிருக்கின்றது. குடாநாட்டின் கரையோரப் பகுதிகளிலிருந்து மையப் பகுதியை நோக்கிச் செல்லும் போது இவ் வில்லையின் தடிப்பு அதிகரித்துச் செல்லுகின்றது. ஆகக்கூடிய தடிப்பு 100 அடி முதல் 110 அடி வரை உள்ளது. இந்த வில்லையானது யாழ்ப்பாணக் குடாநாட்டின் நடுவேயுள்ள உவர் நீர் ஏரிகளினால் துண்டுகளாக்கப்பட்டுள்ளன. இந்த உவர்நீர் ஏரிகளை நன்னீர் ஏரிகளாக மாற்றினால் துண்டுபடும் நன்னீர் வில்லை துண்டுபடாது தொடராக அமையும்.

சுண்ணக்கற் பாறைப் படிவுகள் பிரதான நிலப்பகுதியில் ஆழமாகக் கீழ் பாகத்திலும் யாழ்ப்பாணக் குடாநாட்டுப் பகுதியில் ஆழமற்று மேற்பாகப் பகுதியிலும் காணப்படுகின்றன. இதனால் அதிகம் ஆழமற்ற கிணறுகளை தோண்டுவதன் மூலம் யாழ்ப்பாணப் பகுதியில் நீரைப் பயன்பாட்டிற்காக இலகுவாக மேலே கொண்டுவர முடிகின்றது. மாறாக புத்தளம், பரந்தன், முல்லைத்தீவை இணைக்கும் கோட்டிற்கு தெற்காக உள்ள பிரதான நிலப்பகுதியில் சுண்ணக்கற்படை ஆழமானதாகக் காணப்படுகின்றது. இதனால் இப்பகுதிகளில் அதிக செலவில் குழாய்க் கிணறுகள் அமைத்தே தரைக்கீழ் நீரைப் பாசனத்திற்கு பயன்படுத்த முடியும்.

கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலத்திலேயே யாழ்ப்பாணத்தில் கிணறுகள் தோண்டப்பட்டன. யாழ்ப்பாணத்தில் மனித குடியிருப்பின் வரலாறு கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே ஆரம்பமாகிறது. அக்காலத்தில் இருந்தே கிணறுகள் தோண்டி தரைக்கீழ் நீரைக் குடிப்பதற்காகவும், விவசாயத்திற்காகவும் மக்கள் பயன்படுத்தி வந்துள்ளமைக்கான சான்றுகள் நிறைய உண்டு. கிணறுகளில் இருந்து மனித சக்தியால் குறிப்பாக துலா மூலமும், உள்ளுர் சூத்திர முறையாலும் நீரானது பாசனத்திற்குப் பெறப்பட்டு வந்துள்ளது. இவ்வாறு வளர்ச்சியடைந்துள்ள பாசன முறையிலான விவசாயச் செய்கை பிற்பட்ட கால கட்டங்களில் உப உணவுச் செய்கை எனும் சிறப்பானதும் செறிவானதும் நவீனத்துவமானதுமான பயிர்ச்செய்கை முறையாக மாறிய பின்னர் நீர் இறைக்கும் இயந்திரத்தின் பாவனை யாழ் குடாநாட்டின் சகல கிராமங்களிலும் அதிகரித்து வந்துள்ளது.

இவற்றினால் அண்மைக் காலங்களில் குடாநாட்டின் பல பகுதிகளில் தரைக்கீழ்நீர் உவர்நீராதல் போன்ற பிரச்சனைகள் தோன்றியுள்ளன. இது அபாயகரமானதோர் நிலைமை என்பதில் சந்தேகமில்லை. இச்சவாலை நல்லமுறையில் எதிர்கொள்வதற்கு யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ளார்ந்த தரைக்கீழ் நீர்வளம், அதன் பாவனை, அவற்றின் முகாமைத்துவம், அபிவிருத்தி என்பவைகள் பற்றி நுண்ணாய்வுகள் பல செய்யப்படுதல் வேண்டும். 1965 இல் இங்கு அமைக்கப்பட்ட நீர்வளசபை வடபகுதி தரைக்கீழ் நீர் உவர் நீராதல் பற்றியும் குழாய்க்கிணறு தோண்டி பாசன விருத்தி செய்யும் வாய்ப்புகள் பற்றியும் சில ஆய்வுகளை மேற்கொண்ட போதிலும் இன்றுவரை அவை முறையாக வெளியிடப்படவில்லை. யாழ்ப்பாணக் குடாநாட்டின் நீர்வளம் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் முன்னெப்போதுமி;ல்லாதவாறு இன்றைய காலகட்டத்தில் மிக அக்கறையுடன் சிந்திக்க வேண்டியவர்களாகவுள்ளோம். திட்டமிட்ட முறையில் அபிவிருத்தியை மேற்கொள்ள வேண்டிய தேவையும் உண்டு. மேல் விபரித்த அம்சங்கள் அனைத்தையும் மனங்கொண்டு நாம் செய்ய வேண்டிய பணிகள், ஆலோசனைகள் என்பன இங்கு அனைவரதும் அக்கறையான கவனத்திற்கு முன்வைக்கப்படுகிறது.

சில அபிவிருத்தி ஆலோசனைகள்

யாழ்ப்பாணத்தில் விவசாயமும் நீர்ப்பாசனமும் எனும் போது அவற்றின் அபிவிருத்தி அம்சமே முன்னுரிமை பெறுகின்றது. யாழ்ப்பாணக்குடாநாட்டில், இனிமேலும் நாம் விவசாய விரிவாக்கத்தை: முக்கியமாக விளைபரப்பை அதிகரித்து மேற்கொள்ள வேண்டுமென்று எண்ணுவது தவறாகும். இது “உள்ளதையும் கெடுக்கும்” ஆபத்தான நிலையை உருவாக்கக் கூடும். இங்கு தற்போது காணப்படும் விவசாயச் செய்கையை மிகவும் நவீன முறையிலானதாக மாற்றுவதோடு நீர்ப்பாசன முறைகளிலும் நவீனத்துவத்தை கையாண்டு நல்ல முறையில் பாசன முகாமைத்துவத்தைப்  பேணி வீண் விரயமாதலைத் தடுத்து ஏலவே உள்ள விவசாய நிலப்பயன்பாட்டை உச்ச வருமானம் தரத்தக்கதாக மாற்றி அமைப்பதே சிறந்த வழியாகும்.

யாழ்ப்பாணக் குடாநாட்டின் நிலப்பயன்பாடு சிறப்புத்தேர்ச்சி பெற்றதாக மாற்றப்பட வேண்டும். அதிக செலவில் விவசாயம் செய்யும் இப்பகுதியில் ஒவ்வொரு அங்குல நிலமும் உச்ச பயன் தரத்தக்கதாக அமைதல் வேண்டும். விவசாய அபிவிருத்தி விவசாய வர்த்தக முறையிலமைந்ததாக அமையப்பெற வேண்டும். யாழ்ப்பாணக் குடாநாட்டுப் பகுதிகளில் நெற்பயிர்ச்செய்கை தவிர்க்கப்பட்டு அதிக வருமானம் தரத்தக்க பணப்பயிர்ச்செய்கை விருத்தி செய்யப்பட வேண்டும். உப உணவு, காய்கறி, பழச்செய்கை, பானப்பயிர் செய்கை, எண்ணை வித்துப் பயிரச்;செய்கை போன்றனவாக இவை அமைய வேண்டும். உற்பத்திகளில் சில விவசாய கைத்தொழில்துறை விருத்திக்கு மூலப்பொருள்களை வழங்குபவையாகவும் இருக்கவேண்டும். உண்மையில் இப்பகுதியில் புகையிலை செய்கை, காய்கறி செய்கை, திராட்சைப் பழச்செய்கை என்பன ஊக்குவிக்கப்படுதல் வேண்டும். ஏனெனில் இவை செய்கையாளருக்கு குறைந்த நிலத்தில், குறைந்த நீர் வளத்தைப் பயன்படுத்தி அதிக லாபம் தருவதோடு விவசாய கைத்தொழில் விரிவாக்கத்திற்;கும்  உதவுவதாகும். தேயிலை, இறப்பர் ஏற்றுமதியில் இலங்கை அந்நியச்செலாவணி பெறுவது போல் நாம் இவற்றால் அந்நியச்செலாவணியை பெறலாம்.

நகரங்களைச் சூழவுள்ள கிராமப் பகுதிகளில் விவசாயச் செய்கை நகரச் சந்தையின் தேவைக்குரியவற்றை உற்பத்தி செய்யக்கூடிய வகையில் ஒழுங்குபடுத்தப்படுதல் வேண்டும். சந்தை நிலமைக்கேற்பவும் யாழ்ப்பாண விவசாயம் மாற்றமுறுதல் வேண்டும். இவ்வகையான நிலப்பயன்பாட்டு மாற்றமே யாழ்ப்பாண பகுதியில் வேண்டப்படுவதாகும்

மழை நீரை தேக்குதலும் குளங்களின் தூர் அகற்றுவதும்.

யாழ்ப்பாணக் குடாநாடு தரைக்கீழ் நீரின் மீள்நிரப்பும் தன்மையை அதிகரிக்க வேண்டும் என்பதில் பலர் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளனர். இங்கு குறுகிய காலத்திற் கிடைக்கப்பெறும் ஒரே ஒரு மீள் நிரப்பியான மழை வீழ்ச்சியால் கிடைக்கும் நீரை மேற்பரப்பில் ஓடி வீணே கடலை சென்றடைய விடாது தடுத்து அவற்றைத் தரைக்கீழ் நீராகச் சேமிப்பதற்கு சகல வழிகளிலும் நாம் முயலுதல் வேண்டும். யாழ்ப்பாணக் குடிhநாட்டின் சுண்ணக்கற் புவியமைப்பின் காரணமாக சுண்ணக்கற் கரைசலால் ஏற்பட்ட 1050 குளங்கள் காணப்படுகின்றன. இக்குளங்களில் நிறையும் தண்ணீரில் பெரும்பகுதி தரையின் கீழ்ச் சென்று நீர்வளத்தை அதிகரிக்கச் செய்கின்றது. இவ்வாறான குளங்கள் குப்பை, கூழங்கள் கொட்டப்படுவதாலும் தூர் சேர்ந்தமையாலும் நீரினை உட்செலுத்தும் தன்மையில் குறைவடைந்து காணப்படுகின்றன. இவ்வாறான குளங்களைத் துப்புரவு செய்தலும் தூர் அகற்றுதலும் அவசியம.; இங்கு இவ்வறான முயற்சிகள் அரிதாகவே இடம்பெறுகின்றன.

தோட்டங்களை இணக்குவதற்கு குளங்களின் மண், மக்கி, எடுக்க அனுமதிக்கும் முறை இங்கு உண்டு. இதில் மிக்க அவதானம் தேவை. குளங்களைத் தரைக்கீழ் நீர்ப்பீடம் வெளித்தெரியக் கூடியளவிற்கு ஆழமாக்க விடுதல் கூடாது. இவ்வாறு நிகழின் குளங்கள் மூலம் தரைக்கீழ் நீர் பெருமளவு ஆவியாக வெளியேறிவிடும். எனவே குறிப்பிட்ட ஆழம் வரையே மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் சில பகுதிகளில் சுண்ணக்கல் நிலத்தோற்றத்தில் ஒன்றாக தரைக்கீழ் நீர் ஓடும். குகைகள் சில மேற்பரப்பு இடிந்த நிலையில் காணப்படுகின்றன. நிலாவரைக்கிணறு, குரும்பசிட்டி பேய்க்கிணறு, புன்னாலைக்கட்டுவன் குளக்கிணறு, கீரிமலைக் கேணி, அல்வாய் மாயக்கைக் குளம், கரவெட்டி குளக்கிணறு, ஊறணிக்கிணறுகள், யமுனா ஏரி என்பன இவ்வகையில் அமைந்த குகைப் பள்ளங்கள் ஆகும். இவற்றில் சில பாசனத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன. இன்னும் சில ஆய்வுகள் மேற்கொண்ட பின் பயன்படுத்தத்தக்க வாய்ப்புகளைக் கொண்டுள்ளன.

நிலாவரைக்கிணற்றில் மேற்கொண்ட ஒரு ஆய்வின்படி நாள் ஒன்றிற்கு  10 மணித்தியாலங்களில் 30,000 – 40,000 கலன் நீர் தோட்டப் பாசனத்திற்காக அக் கிணற்றில் இருந்து எடுக்கக்கூடிய தன்மை தெரிய வந்தது. இவற்றைப் பாசனத்திற்காக மாத்திரமன்றி, மழைக்காலங்களில் பெருமளவு நீரைத் திட்டமிட்ட அடிப்படையில் தரைக்கீழ்நீர் மீள் நிரப்பியாக உட்செலுத்துவதற்கும் பயன்படுத்த இயலும். இது இப்பகுதிகளின் தரைக்கீழ் நீர்வளத்தை பெரிதும் அதிகரிக்கக்கூடியதாக அமையும் என துணியலாம்.

தரைக்கீழ் நீர் குகைவழிகள் மூலம் நீரானது கடலைச் சென்றடையும் நிலையும் இங்கு காணப்படுகின்றது. கீரிமலைக் கேணிக்கு குகை ஊடாக வரும்  நீர் இதற்கு உதாரணம் ஆகும். தரைக்கீழ் நீரைக் கடலில் கலக்க வைக்கும் குகை வழிகள் எல்லாப் பகுதிகளிலும் கண்டறியப்பட்டு அவற்றை நிலத்தின் கீழாக அணைகட்டித் தடுக்கவேண்டும். இவ்வாறான முயற்சிக்கான ஆலோசனைகள் ஏலவே முன்வைக்கப்பட்டிருப்பினும் செயல்முறையில் இவ்வகை முயற்சிகள் ஒன்றும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

நன்னீர் ஏரித்திட்டம்

யாழ்ப்பாணக் குடாநாட்டின் எதிர்கால வாழ்வுக்கும் வளத்திற்கும் இன்றியமையாத திட்டம் பற்றி அக்கறையுடன் நோக்கும் எவரும் இங்குள்ள கடல் நீரேரிகளை நன்னீர் ஏரிகளாக மாற்றும் திட்டம் பற்றிச்  சிந்திக்காதிருக்க முடியாது. நன்னீரேரித் திட்டங்களால் யாழ்ப்பாணத்தின் தரைக்கீழ் நீர்வள சேமிப்பு அதிகரிப்பதோடு வீணே கடலை அடையும் நீர் தரைக்கீழ் நீரின் மீள் நிரம்பியாக மாறும். குடாநாட்டுத் தரைக்கீழ் நீர் வில்லைகள் துண்டுபடாது தொடராகவே இருக்கும். குடாநாட்டின் உவர்நீராதல் பிரச்சனைகள் கணிசமான அளவு குறையும். உவர் நிலங்கள் வளமுள்ள விளை நிலங்களாக மாறும். குடாநாட்டின் நிலப்பரப்பும் நன்னீர் பரப்பும் அதிகரிக்கும். இவ்வாறு பல நன்மைகள் நன்னீர் ஏரியாக்கும் திட்டம் எமக்கு வழங்குமெனத் துணியலாம். உண்மையில் இப்பகுதிக் கடல்நீரேரிகளை  நன்னீரேரியாக்கும் திட்டம் பற்றிய சிந்தனை நூறு வருடம் பழமை வாய்ந்தது. 1922இல் இரணைமடுக் குளத்தேக்கம் பாரிய அணை கட்டி உருவாக்கப்பட்டபோது ஆனையிறவுக் கடல் நீரேரியை நன்னீரேரியாக்கும் திட்டம் பற்றியும் கூறப்பட்டிருந்தமை மனங்கொள்ளத்தக்கது.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் நீண்டகாலத் திட்டத்தின் அடிப்படையில் நன்னீரேரிகளாக மாற்றப்படக்கூடிய 13 கடனீரேரிகளும் நடைமுறையிலுள்ள 33 உவர்நீர்த்தடுப்புத் திட்டங்களும் உள்ளன. மேற்படி 13 கடனீரேரிகளில் நான்கு கடனீரேரிகளை அதிக செலவின்றி நன்னீரேரிகளாக மாற்றமுடியும். அவையாவன.

01) ஆனையிறவு மேற்கு கடனீரேரி

02) ஆனையிறவு கிழக்கு கடனீரேரி

03) உப்பாறு மற்றும் தொண்டைமானாறு கடனீரேரி

மேற்படி கடனீரேரிகளை நன்னீரேரிகளாக  மாற்றும் திட்டங்கள் பல உருவாக்கப்பட்டு அவற்றில் சில பகுதிகள் செயற்படுத்தப்பட்டுமுள்ளன. உப்புநீர் மீன்பிடிக்கு உதவுமென்று எண்ணும் மக்கள் ஏதோ வழிகளில் கடல்நீரை உள்ளே வர விடுவதனால் இத்திட்டங்கள் பூரண வெற்றியை அளிக்காதுள்ளன. இத் திட்டங்களை நல்ல முறையில் செயற்படுத்துதல் இன்றியமையாததாகும். அத்துடன் குடாநாட்டைச் சூழவுள்ள ஏனைய சில கடனீரேரிகளையும் அதிக பொருள் செலவின்றி நன்னீரேரியாகக் கூடிய வாய்ப்பு உண்டு. உதாரணமாக மண்டை தீவையும் வேலணையையும் பிரிக்கும் கடனீரேரியை சுலபமாக நன்னீரேரியாக மாற்றலாம். மற்றும் பண்ணைத் தாம்போதியையும் அராலித் தாம்போதியையும் முற்றாக மூடுவதன் மூலம் யாழ்.நகரத்தின் தென்மேற்குப் பகுதியில் பாரிய நன்னீரேரித் தேக்கத்தை ஏற்படுத்தலாம். இவ்வாறான திட்டங்களால் நன்னீர் வளம் பெருகுவதோடு நிலப்பரப்புகளில் உவர்த்தன்மை நீக்கப்பட்டு அவற்றை வளமான விளைநிலங்களாக மாற்றமுடியும். இது நில, நீர் பற்றாக்குறையால் அல்லல்படும் யாழ்ப்பாணத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக அமையுமெனலாம்.

கடல் நீரேரிகளை நன்னீரேரிகளாக மாற்றும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் முக்கியமாக இரு பிரச்சினைகளை முன்வைக்கின்றனர்.

01) சூழல் மாசடைதல் தொடர்பானது

கடல் நீரேரிகளில் நீர்வரத்து தடைப்பட்டு நீரேரிகள் முற்றாக வற்றும் காலங்களில் குடியிருப்புப் பகுதிகள் மீது வேகமாக வீசும் காற்றினால் (சோழக்காற்று) புழுதி வாரி வீசப்படுமென்றும் இதனால் இத்திட்டம் சுற்றுப்புறச் சூழல்மாசடையும் அபாயத்தை கொண்டுள்ளதெனவும் சுட்டிக்காட்டுகின்றார்கள். இந்த அபாயத்தை இலகுவாக சமாளிக்கலாம். நன்னீரை வற்றாத அளவுக்கு தேக்கி வைப்பதன் மூலமாகவும் முற்றாக நீர்வற்றும் பகுதிகளைக் கண்டறிந்து அப்பகுதிகளில் திட்டமிட்ட அடிப்படையில் புல் வளர்ப்பதன் மூலமாகவும் இம் மாசடைதல் பிரச்சனையைச் சமாளிக்கலாம். ஒல்லாந்து தேசத்தில் கடல் நீரேரிப் பரப்புகள் பெருமளவு மீட்கப்பட்டு புல் வளர்ப்பிற்கு உட்படுத்தப்பட்டு விலங்கு வேளாண்மை விருத்திக்குப் பயன்படுத்தப்பட்டு வருவதை இதற்கு உதாரணமாகக் காட்டலாம்.

02) கடல் நீரேரிகளில்  மீன்பிடித் தொழில் மேற்கொள்ளும் மக்களின் தொழிற்துறை பாதிப்புறும் என்ற கருத்து

இத்திட்டத்தால் பாதிப்புறும் மக்களைக் கண்டறிந்து அவர்களுக்குப் பொருத்தமான வேறு கரையோரப்பகுதிகளில் குடியிருப்புகளை அமைத்துக் கொடுப்பது இயலக்கூடியதே. குடாநாட்டு பரவைக் கடற்பரப்புகளில் மீன்பிடித் தொழில் ஈடுபடுவதைவிட ஆழ்கடல் மீன்பிடியில் அவர்களை ஈடுபட வைப்பது பொருளாதார அபிவிருத்தி நோக்கில் அதிக நன்மை விளைவிப்பதாக அமையும். எனவே பாதிப்புறும் மக்களை குடாநாட்டின் அல்லது பிரதான நிலப்பகுதியின் கிழக்கு கரையோரமாகக் குடியேற்றி ஆழ்கடல் மீன்பிடியை ஊக்குவிக்கலாம். இம்மாற்றமானது குறுங்கால நோக்கில் கடினமாக அமைந்தாலும் நீண்ட கால பிரதேச அபிவிருத்தி நோக்கில் அதிக நன்மை பயக்குமென நம்பலாம்.

பயிர்களுக்கு மிதமிஞ்சிய நீர்ப்பாவனை

யாழ்ப்பாணப் பகுதிகளில்  நீரிறைப்பு இயந்திரமயப்படுத்தப்பட்ட பின்னர் பயிர்களுக்கு மிதமிஞ்சிய நீர் பாய்ச்சப்படுவதாக கருதப்படுகின்றது. உவர்நீராதல் பிரச்சனைக்கு இதுவும் ஒரு காரணமாகும். உண்மையில் இன்ன பயிருக்கு இன்ன பிரதேசத்தில் இன்ன காலத்திற்கு இவ்வளவு நீர் தேவை என்பதை விவசாயிகளுக்கு நல்ல முறையில் அறிவுறுத்தல் வேண்டும். மேலும் இங்கு காணப்படும் பாசன முறைமை நீர் ஆவியாக்கத்தைக் அதிகரிக்கச்செய்கின்றது. இதனை தடுப்பதற்கு இஸ்ரேல் நாட்டில் காணப்படும் பாசன முறைகளான விசிறல் பாசன முறைமை, பல குழாய் வழி இணைப்புகள் மூலம் பயிருக்கு அடியில் நீரைச் செலுத்துதல், ஆவியாக்கம், ஆவியுயிர்ப்பை தடுப்பதற்கு சில இரசாயணங்களை நீரில் மிதக்கவிடல் போன்ற முறைகளைப் பின்பற்றி ஒருதுளி நீரும் வீணாகாமல் பாசன முகாமைத்துவ முறைகளை மக்கள் பின்பற்றும்படி செய்தல் வேண்டும்.

நீர்வள அபிவிருத்தி தொடர்பான திட்டமிடலுக்கு பல்வேறு தரவுகள் தேவை. இதற்கு புவியியல், பொருளியல், புவிச்சரிதவியல், மண்ணியல், பொறியியல், விவசாய அறிவயல் போன்ற துறை சார் அறிஞர்கள் ஒன்று சேர்ந்து ஒரு அமைப்பாக இயங்க வேண்டும். தமிழர் பாரம்பரிய பிரதேசங்கள் நீர்வள நிலையங்களாக முதலில் வகுக்கப்படுதல் வேண்டும். ஆறுகள், குளங்கள், கிணறுகள் என்பவற்றை அவதானித்து நீர்ப்பீட ஆய்வு செய்து அவற்றின் உவர்த்தன்மை, ஆவியாக்கம், ஆவியுயிர்ப்பு, ஊடுவடித்தல், போன்ற அம்சங்கள் யாவும் கணிக்கப்பட்டு நீர் வள வலயங்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும். இந்த அடிப்படைத் தரவுகளின் துணையுடனேயே அபிவிருத்தித் திட்டங்கள் உருவாக்கப்படுதல் வேண்டும். இந்த அடிப்படைகளைக் கொண்டு ஆரம்பிக்கப்படும் திட்டங்கள் வெற்றி பெறுமென நம்பலாம்.

பிரதான நிலப்பகுதி நீர்வள ஆய்வுகள் இன்னும் சரியாக ஆராயப்படவில்லை. இப்பகுதிக் காடுகளிலே பழைய குளங்கள் பல தூர்ந்த நிலையில் காணப்படுகின்றன. இவை புனருத்தாரணம் செய்யப்படுதல் வேண்டும். பயன்பாட்டிலுள்ள குளங்களின் கொள்ளளவைக் கூட்டலாம். தெளிவான ஆய்வுகள் மேற்கொண்டு சூழல் நிலமைகள் பாதிக்கப்படாதவகையில் புதிய நீர்த்தேக்கங்களை உருவாக்கலாம். 1980-81 இல் கனகாம்பிகைக் குளம், பிரமந்தலாறு, புதுமுறிப்புக் குளம், போன்றவற்றின் கொள்ளளவை அதிகரிக்கும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. பறங்கியாறு, பாலியாறு, என்பவற்றைப் பொருத்தமான இடத்தில் மறித்துக் கட்டி புதிய நீர்த்தேக்கங்கள் நிர்மாணிக்கக்கூடிய வளவாய்ப்புகள் பற்றி நீரியலாளர்களால் ஆராயப்பட்டுள்ளது.

பிரதான நிலப்பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட குளங்களில் ஏற்று நீர்ப்பாசன வளங்களை அதிகரிப்பதன் மூலம் அங்கு உபஉணவுச் செய்கையை ஊக்குவிக்கலாம். வடபகுதிக் குடியேற்றத் திட்டங்களில் ஏற்று நீர்ப்பாசன வசதிகளுடன் உப உணவு உற்பத்திக்கு முதலிடம் வழங்கிய இளைஞர் திட்டங்களே பெருமளவுக்கு வெற்றியைத் தந்த திட்டங்களாக உள. (உ.ம் முத்தையன் கட்டு, விசுவமடு, வவுனிக்குளம்) இவ்வாறான ஏற்று நீர்ப்பாசன திட்டங்களில் பணப்பயிர் செய்கைகளே ஊக்குவிக்கப்படுதல் வேண்டும்.  ஏற்று பாசனமுறை அதிக செலவிலமைக்கப்படுவதால் பணப்பயிர்ச் செய்கையே அதிக வருமானத்தை தரத்தக்கதாக அமையும்.

முடிவுரை

தமிழரின் பாரம்பரியப் பிரதேச நீர்வள அபிவிருத்தியை எமக்கு வேண்டுவதான அபிவிருத்தியாக முன்னெடுத்துச் செல்வதற்கும் இவ்வள அபிவிருத்தி தொடர்பான கொள்கைகள், திட்டங்களை உருவாக்குவதற்கும் அவற்றை நிர்வகிப்பதற்கும் அப்பிரதேசங்கள் அவ்வப் பகுதி வாழ் மக்களின் நிர்வாகத்தினுள் வருதல் வேண்டும். அப்போது தான் தங்கு தடையின்றி உள்நோக்கம் எதுவும் அற்ற விவசாய பாசனஅபிவிருத்தி திட்டங்களை உருவாக்கலாம். இதனால் விவசாய உற்பத்தியில் நாம் தன்னிறைவு பெறுவது மாத்திரமன்றி மிகை உற்பத்தி செய்தலும் சாத்தியமாகும்.

Pin It

அறிமுகம்

இலங்கையின் வடகீழ் மாகாணம் தமிழரின் பாரம்பரிய பிரதேசமெனக் கொள்ளப்படுகின்றது. தமிழர் பாரம்பரியப் பிரதேசம் பரந்த பிரதேசமெனவும் இது மேற்கே மகா ஒயா (வாய்க்கால் ஆறு) தொடக்கம் தென்கிழக்கே கும்புக்கன் ஆறுவரை பரந்துள்ள கரையோர நிலப்பகுதி என்றும் பல்வேறு தகவல்களிலிருந்து தெரியவருகின்றது. எனினும் இவ் ஆய்வு வடகீழ்மாகாணமே தமிழர் பாரம்பரியப் பிரதேசமெனக் கொள்கிறது.

தமிழர் இலங்கையில் ஒரு தனித்தேசிய இனம். அவ் இனத்துக்கு சுய நிர்ணய உரிமை உண்டு. அவர்களுக்கொரு பாரம்பரியத் தாயகம் உண்டு. எனவே எமது பிரதேசத்தை நாமே அபிவிருத்தி செய்யவேண்டிய பொறுப்பும் கடமைப்பாடும் நம்மவர்களுக்கு குறிப்பாக அறிவுப்புலத்தினுள்ளோர்க்கு உண்டு. வடகீழ் மாகாணத்தை தன்நிறைவான நிலைத்து நிற்கத்தக்க அபிவிருத்திக்கு இட்டுச்செல்லும் பல்வேறு கூறுகளில் மாற்றுச் சக்தி வளம் பற்றி இவ் ஆய்வு பேசுகின்றது. இவ் ஆய்வின் நோக்கம் நிறைவான மாற்றுச் சக்திவளம் எமது பிரதேசத்தில. உண்டு என்பதை நிரூபிப்பதும் அது பற்றிய சிந்தனையை பல்வேறு துறைசார் புலமையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஏற்படுத்துவதுமாகும்.

வடகீழ் மாகாணம் 18,323 சதுர கிலேமீற்றர் (7157சதுரமைல்) பரப்பளவு கொண்ட பிரதேசமாகும். இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் இது 28.4 வீதமாக உள்ளது. இப்பிரதேசம் நிர்வாக வசதிக்காக இரு மாகாணங்களாகவும் எட்டு மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. வடகீழ்மாகணத்தின் மொத்த குடித்தொகை 1981இல் 21இலட்சம் பேராகக் காணப்பட்டது. (20,87,943). இலங்கையின் மொத்தக்குடித்தொகையில் இது 14.1 வீதமாகும். வடகீழ் மாகாணத்தின் மொத்தக்குடித்தொகையில் வடமாகாணம் 53.2 வீதத்தையம் கிழக்கு மாகாணம் 46.8 வீதத்தையும் கொண்டுள்ளது. வடமாகாணத்தின் மொத்தக்குடித்தொகையின் 74.8 வீதத்தினர் யாழ்ப்பாண மாவட்டத்தில் காணப்படுகின்றனர். வடகீழ் மாகாணத்தின் மொத்த நிலப்பரப்பில் 6.1 வீதத்தையும் கொண்ட யாழ்ப்பாணக்குடாநாடு வடகீழ்மாகாணக் குடித்தொகையின் 35 வீதத்தினரைக் கெண்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். பொதுவாக தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தின் குடியடர்த்திப் பண்பானது கடற்கரையோரம் சார்ந்ததாகவே காணப்படுகின்றது. கிழக்குப் பிரதேசத்தில் இப்பண்பினைத் துல்லியமாக அவதானிக்க முடிகின்றது.

சக்திவளங்கள் (Energy Resources)

1.1 சக்தியை வழங்கும் மரபுரீதியான வளங்கள் அதிவிரைவாக அழிவடைந்து செல்லும் தன்மை கொண்டவை. ஆதி காலம் முதல் இன்று வரை உலகத்திலே பரவலாகத் தாவரங்களே பெருமளவுக்கு எரிபொருட்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இடைக்கால கண்டுபிடிப்பான நிலக்கரி, பெற்றோலியம் என்பன கைத்தொழில் புரட்சியை ஏற்படுத்தியது மட்டுமன்றி, நவீன உலகின் எரிபொருட் தேவையின் பெரும்பங்கை வழங்கின. அதிக பயன்பாட்டின் காரணமாக இவை படிப்படியாக அழிவடைந்து சென்று இன்னும் 50-75 வருடங்களில் முற்றாக அற்றுப்போய் விடும்நிலை காணப்படுவதாக ஆய்வாளர் கருதுகின்றார்.

1.2 எதிர்கால உலகின் சக்திவளத் தேவைகள் அழிவடையாத அல்லது குறைவுபடாத சக்திவளங்களான சூரியசக்தி, காற்றுச்சக்தி, உயிர்ச்சுவட்டு எரிபொருள் சக்தி, கடல் சக்தி, புவி வெப்பசக்தி என்பன மூலமாகவே பெறப்பட முடியுமென விஞ்ஞானிகள் கருதுகின்றனர். மேற்படி மாற்றுச் சக்திவளங்கள் பலவற்றினை வடகீழ் மாகாணத்தில் பயன்படுத்க்கூடிய வாய்ப்புகள் நிறைய உள்ளன.

வடகீழ் மாகாணத்தில் வருடத்துக்கு சராசரியாக 55-60 நாட்களே மழை நாட்கள். எனவே சூரிய சக்தியை பயன்படுத்தும் வாய்ப்பு இங்கு அதிகம்.  சோளக்காற்றும் வாடைக்காற்றும் வருடத்தின் நீண்டகாலத்திற்கு காற்றுவீச்சுச் சக்தியைப் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பை அளிக்கவல்லன. இங்கு பெருமளவு கால்நடை வளம் காணப்படுவதால் அவற்றின கழிவுகளிலிருந்து உயிர்வாயுச்சக்தி பெறப்படலாம். வற்றுப் பெருக்குத்தன்மை கொண்டதும் நுழைகழிப்பகுதிகளை பெருமளவு கொண்டதுமான இப்பிரதேசத்தின் நீண்டகடற்கரையோரப் பகுதிகளிலே சில அணைத்தடுப்புகளை அமைப்பதன் மூலம் கடல்வற்றுப்பெருக்கு நிகழ்வை சக்தி பெறுவதற்குப் பயன்படுத்தமுடியும். கடல் நீரோட்டமுள்ள பகுதிகளைக் கண்டறிந்து நீரோட்ட விசையிலிருந்தும், கடலினுள் காணப்படும் வெப்ப மாறுபாட்டிலிருந்தும் சக்தி பெற்றுப் பயன்படுத்தக்கூடிய சாத்தியம் உண்டு. மேலும் அண்மைய ஆய்வு ஒன்று கடற்சேற்றுப்பகுதிகளில் பொதுவாகக் காணப்படும் ‘மீத்தேன்’ வாயுப்படிவுகள், சில கடலடித்தளங்களில்  பெருமளவு படிந்துள்ளது என்றும் அமுக்க, வெப்ப நிலைகளில் மாறுபாடுகளை ஏற்படுத்துவதன் மூலம் பெருமளவு சக்தி பெறப்படலாமென்றும் கூறுகின்றது. இவை தவிர கிழக்கு கரையோரப் பிரதேசங்களில் பரந்து காணப்படும் இல்மனைற், மொனோசைட் படிவுகளைப் பயன்படுத்தி அணுசக்தியை உருவாக்க முடியுமென விஞ்ஞானிகள் உறுதிப்படுத்துகின்றனர். திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கன்னியா, றன்கிரியா, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலுள்ள கப்பூரல்ல, மகாஒயா, கிவுலகம போன்ற இடங்களில் காணப்படும் வெப்பநீருற்றுக்களிலிருந்து புவிவெப்ப சக்தியைப் பயன்படுத்தக்கூடிய வாய்ப்புகள் பற்றியும் ஆராயப்படலாம்.

மேற்படி மாற்றுச்சக்தி வளங்களிலே

01 சூரியசக்தி

02 காற்றுச்சக்தி

03 உயிர்ச்சுவட்டு எரிபொருள் சக்தி

04 கடற்சக்தி

05 புவிவெப்ப சக்தி

போன்றவற்றை எமக்குப் பொருத்தமான வழிமுறையில் எவ்வகையில் பயன்படுத்தலாமெனப் பார்ப்போம்.

 சூரிய சக்திவளம் (Solar Energy Resource)

சூரியனே சக்தியின் ஆதாரம். சூரிய ஒளியில் இருந்து சக்தியைப் பெறவதற்கு இன்று புத்தம் புதிய தொழில் நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 20 ஆம் நூற்றாண்டில் சூரிய சக்தியை உலகம் பெருமளவு பயன்படுத்துமென விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள். மரபு ரீதியான சக்திவளப்பயன்பாட்டால் ஏற்படும் சூழல் மாசுபடும் பிரச்சனை இவ் வளப்பயன்பாட்டால் இல்லாதொழிந்துவிடும். சூரிய சக்தியை இரு வகைகளில் பயன்படுத்தலாம்.

01. சூரிய வெப்பத்தை நேரடியாகப் பயன்படுத்துவது.

02. சூரிய சக்தியை மின்சக்தியாக மாற்றிப் பயன்படுத்துவது.

சூரிய வெப்பத்தை நேரடியாகப் பயன்படுத்தும் முறை எமக்கு பழக்கமான பாரம்பரிய முறையே. உணவுப்பொருட்களை உலர வைத்துப் பயன்படுத்தும் முறையை நீண்டகாலமாகவே நாம் அறிவோம். ஆனால் சிறிது தொழில்நுட்ப அறிவை புகுத்துவதன் முலம் சூரிய வெப்பத்தைப் பல்வேறு வழிகளில் பயன்படுத்தமுடியும். ‘கருமையாக்கப்பட்ட பொருளின் மீது சூரிய வெப்பம்  பெருமளவு ஈர்க்கப்படும்’ என்ற விஞ்ஞான மெய்மையைப் பயன்படுத்தி பெருமளவு பயன்பாட்டை பெற்றுக்கொள்ளலாமெனினும் குறைந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எமக்கு பொருத்தமான சூரிய அடுப்புக்களையாவது நாம் தயாரித்துக்கொள்ளமுடியும். இந்தியாவிலே இவ்வகை அடுப்புகள் கூடை போன்ற வடிவத்திலும் இன்னும் சில பெட்டி போன்ற வடிவத்திலும் தயாரிக்கப்படுகின்றன. கண்ணாடிகளையும் கண்ணாடி வில்லைகளையும் பயன்படுத்தி சூரிய வெப்பத்தை குறிப்பிட்ட இடத்தில் குவியச்செய்யும் வகையில் இவ் வகை அடுப்புகள் தயாரிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் ஆவடி முருகப்பா தொழில்நுட்ப கல்லூரியிலும் சிந்தாமணிக் கூட்டுறவு அங்காடியிலும் சூரிய அடுப்புகள் தயாரிக்கப்பட்டு மலிவான விலையில் விற்கப்படுகின்றன. இவ்வகை அடுப்புகள் மூலம் அரைமணி நேரத்தில் 1350C வரை வெப்பத்தை ஈர்க்க முடிகின்றது. இவ்வகை மாதிரிகளைப்பெற்று எமக்குப் பொருத்தமான சூரிய அடுப்புகளை நாம் தயாரித்துக் கொள்ள முடியும். எமக்குப் பெரும் பிரச்சனையாகவுள்ள எரிபொருட்பற்றாக்குறையை ஓரளவுக்கு இதன் மூலம் நிவர்த்திக்க முடியும்.

சில பொருட்களின் மீது சூரிய ஒளி படும் போது ஒரு வகை மின்னோட்டம் உண்டாகின்றது என பிரான்சிய விஞ்ஞானி எட்மண்ட் பெக்கல் என்பவர், 1839 இல் கண்டுபிடித்தார். இக்கண்டுபிடிப்பை தொடர்ந்து ‘செலினியம்’ என்ற கனிமத்திலிருந்து திருத்தமற்ற சூரிய மின்கலங்கள் தயாரிக்கப்பட்டன. இவ்வாய்வுப்பணி மேலும் தொடர்ந்தது. 1954 இல் நியுஜேர்சியிலுள்ள பெல் ஆய்வுகூடத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ‘சிலிக்கன்’ எனும் கனிமத்தைப் பயன்படுத்தி சூரியமின்கலம் தயாரிக்க முயன்று வெற்றி பெற்றனர். 1960களில் சோவியத் ஒன்றியத்திற்கும் அமெரிக்காவுக்குமிடையே ஏற்பட்ட விண்வெளிப்பயணம் தொடர்பான போட்டி நிலை சூரியமின்கலத்தயாரிப்பை ஊக்கப்படுத்தியது. ஏனெனில் செயற்கைக்கோள்கள் இயங்குவதற்கு சூரிய மின்கலங்களே தேவைப்பட்டன.

‘சிலிக்கன்’ என்பது உலகில் மிகவும் மலிவாகவும் அதிகமாகவும் கிடைக்கும் கனியமாகும். இது புவியில் மண்ணுடன் கலந்துள்ளது. இக்கனிமம் 14000Cஅளவுக்கு வெப்பமேற்றுவதான் மூலம் உருக்கப்பட்டு படிகவார்ப்புகள் பெறப்படுகின்றன. இவற்றிலிருந்து தனித்தனிச் சில்லுகளாக சிலிக்கன் சீவி எடுக்கப்பட்டு சூரிய மின்கலங்கள் தயாரிக்கப்படுகின்றன. சூரிய மின்கலங்களின் உற்பத்திச் செலவு இன்றும் அதிகமாகவே உள்ளது. ஆனால் எதிர் காலத்தில் குறைந்த விலையில் இவற்றை உற்பத்தி செய்யமுடியுமென விஞ்ஞானிகள் நம்புகின்றனர். 1973 இல் ஏற்பட்ட பெற்றோலிய நெருக்கடிக்கு பின்னர் சூரிய மின்கலங்களின உற்பத்தியில் உலக நாடுகள் பெரிதும் அக்கறை கொண்டுள்ளன. 1990 ஆம் ஆண்டுகளில் அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, அவுஸ்ரேலியா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் சூரியமின்கலங்களை உற்பத்தி செய்வதில் தீவிர அக்கறை காட்டிவருகின்றன. பல தனியார் கம்பனிகள் இவ் உற்பத்தியை சர்வதேச வர்த்தகமாக மாற்றியுள்ளன. இதனால் எதிர்காலத்தில் சூரிய மின்கலங்களின் விலை கணிசமாக குறையக்கூடிய சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. மரபுரீதியாக சக்தியைப் பயன்படுத்தி மின்சாரமயமாக்கப்பட்ட கைத்தொழில் நாடுகளையும், நகரங்களையும் சார்ந்த மக்களைவிட மூன்றாம் உலக கிராமிய மக்களே சூரிய மின்கலங்களால் அதிக பயனை பெற்றுக்கொள்ளமுடியும். மூன்றாம் உலக கிராமமக்கள் சூரியமின்கலங்கள் மூலம் பின்வரும் பயன்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

வீட்டுப்பாவனைக்கு மட்டுப்படுத்தப்பட்;ட மின்சாரத்தைப் பெறல்.

சிறிய அளவிலான விவசாய நிலங்களுக்கு நீரிறைத்தல்.

கிராமிய வைத்தியசாலைகளில் குளிரூட்டிகளை இயங்கச் செய்தல்.

கலங்கரை விளக்குகள், வீதி விளக்குகள் பொருத்துவதற்கு பயன்படல.;

கிராமத்திற்குத் தேவையான நீரை வெப்பமேற்றிச் சுத்திகரித்தல்.

தொலைத்தொடர்புச் சாதனங்களை இயங்கச்செய்தல்.

வாகனங்கள், படகுகளிற்குரிய மின்கலங்களிற்கு மின்ஏற்றம் செய்தல்.

 

தற்பொழுது நாம் எதிர்நோக்குகின்ற எரிபொருள் விலையேற்றத்தின் பாதிப்பிலிருந்து ஒரளவு விடுபடுவதற்கு சூரிய மின்கலங்களைப் பாவிக்க முடியும். வீட்டுப் பாவனைக்கேற்ற சூரியமின்கலங்கள் பல்வேறு அளவுகளில் எமது வர்த்தகநிலையங்களில் கிடைக்கின்றன. (இவை 10w முதல் 120wவரையான மின்சக்தியை வழங்ககூடியன) ஒரு சூரியமின்கலத்தினை 15 வருடங்களுக்கு பாவிக்கமுடியும். இவற்றில் ஒன்றைப் பெற்று சூரிய ஒளிபடும் கூரையின் மீது வைத்து கார் பற்றறி (12V) ஒன்றுடன் அதனை இணைத்துவிடுவோமாயின் பகலில் மின் ஏறும். பற்றறியில் இருந்து பெறப்படும் மின்சாரத்தை எமது தேவைக்கு ஏற்ப பகலிலும் இரவிலும் பயன்படுத்தமுடியும். சிறிய அளவிலான மின்குமிழைப் பொருத்துவதன் மூலம் வீட்டிற்கு தேவையான மின் ஒளியை நாம் பெற்றுக்கொள்ளமுடியும். வானொலி, தொலைக்காட்சி, சிறிய மின்விசிறி, ஓடியோ, வீடியோசாதனங்கள் என்பவற்றையும் இயக்கமுடியும். மீள் மின்னேற்றம் பெறத்தக்க டோர்ச் பற்றறி, பென்டோர்ச் பற்றறிகளிற்கும் மின் ஏற்ற முடியும். சிறிய அளவிலான குளிர்சாதனப்பெட்டிகளையும் இயங்கவைக்க முடியும்.

சூரியமின்கலங்களின் பாவனை பற்றிய விழிப்புணர்வை எமது மக்களுக்கு ஏற்படுத்துவதன் மூலம் வீட்டை ஒளி பெறச்செய்யமுடியும். எமது மாநகரசபை, கிராமசபைகளும் ஏனைய மக்கள் நிறுவனங்களும் வீதிகளில் சூரிய மின்கல விளக்குகளைப் பொருத்தும் வாய்ப்புகள் பற்றி சிந்திக்கலாம். எமது பிதேசத்தில் பரந்துள்ள வெண் மணல் குறிப்பாக மணற்காட்டுமண் சூரிய மின்கலங்கள் தயாரிக்கக்கூடிய ‘சிலிக்கா’ கனிமத்தைப் பெருமளவு கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் மக்கள் தொகையில் 48 வீதத்தினர் முக்கியமாக கிராமப்புற மக்கள் இதுவரை மின் இணைபபை பெறவில்லை. எனவே சூரியமின்கலங்களை குறைந்த விலையில் அல்லது தவணை முறையில் பணம் செலுத்தும் வசதியை ஏற்படுத்தி அறிமுகப்படுத்துவதில் ‘செல்கம்பனி’ உதவி வழங்கிவருகின்றது. இதற்கு திருவாளர்கள் விவின் பெரேரா, லலித் குணவர்த்தனா, பிரதீப் ஜெயவர்த்தனா (ஜே.ஆர் இன் பேரன்) போன்றோர் 1986 முதல் ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்கி வருகின்றார்கள்.

காற்றுச் சக்திவளம் (wind Energy Resource)

பல ஆண்டுகளுக்கு முன்னரேயே குறிப்பாக ஜரோப்பிய நாடுகளில் காற்றாடியின இயக்க சக்தியினால் ஆறு, குளம் கிணறுகளில் இருந்து வயல் நிலங்களுக்கு நீரிறைக்கும் வழக்கம் இருந்துவந்துள்ளது. அண்மைக்காலங்களில் புகுத்தப்பட்ட புதிய தொழில் நுட்பங்களில் காற்றாடியினை இலகுவாகச் சுழலச் செய்தல் சாத்தியமாகி உள்ளது. இதனால் மெல்லிய காற்று விசையிலும் காற்றாடியை இலகுவாக சுழலச் செய்ய முடிவதோடு மின்சாரத்தைப் பெறுவதற்குரிய ஜெனரேட்டர்களையும் இயங்கச் செய்ய முடியும். வீடுகள் கட்டிடங்களை விட உயரமாக கற்றாலைகளை அமைப்பதற்கு உலோகச் சட்டங்கள் பயன்படுத்த வேண்டுமாகையால் ஆரம்பச்செலவு அதிகமாக உள்ளது. ஆனால் நீண்ட காலத்திற்கு எந்தச்செலவுமின்றி பயனை நுகரக்கூடியதாக உள்ளது. கடலால் சூழப்பட்டு சமவெளிகளைக் கொண்ட நாடுகளில் காற்று சக்தியினைப்பயன்படுத்தும் வாய்ப்புகள் அதிகமாகும்.

டென்மார்க், நெதர்லாந்து ஜேர்மனி, சுவீடன், பிரித்தானியா போன்ற ஜரோப்பிய நாடுகளிலும் சோமாலியா, இந்தியா, சீனா போன்ற மூன்றாம் உலக நாடுகளிலும் காற்றுச்சக்திவளம் கணிசமான அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதனைப் பரவலாகவும் மலிவாகவும் பயன்படத்த வழிகாணும் ஆய்வுகளும் தொடர்கின்றன.  உலகில் 2001 ஆம் ஆண்டில் காற்றலை மூலம23,300 மெ.வாட்ஸ் மின்சாரசக்தி உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. இன்று காற்றலைச்சக்தி வளப்பாவனையில் ஜேர்மனி முதலிடம் வகிக்கின்றது. 2003ஆம் ஆண்டில் 12500 மெ.வா உற்பத்தியை பெறுவதற்கான திட்டம் தீவிரமாக இங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதில் எழுபது நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. டென்மார்க்கில் தேசிய மொத்த சக்தி நுகர்வில் 18 வீதம் காற்றலை மூலம் பெறப்படுகின்றது. ஸ்பெயின் நாட்டில் தேசிய மொத்த சக்தி நுகர்வில் 2010 ஆம் ஆண்டில் 12 வீதம் காற்றலை சக்தி மூலம் பெறப்படவுள்ளதாக கணிப்பிட்டுள்ளார்கள்.

காற்றலைகளை நிறுவக்கூடிய உள்ளார்ந்த வளங்களை உலகிலேயே அதிகளவு கொண்ட நாடாக ஜக்கிய அமெரிக்காவே விளங்குகின்றது. ஜக்கிய அமெரிக்காவின் மூன்று மாநிலங்களான வடடகோட்டா, கன்சாஸ், ரெக்ஸாஸ் என்பவற்றில் காற்றலை அமைத்துப் பெறக்கூடிய சக்திவளம் ஜக்கிய அமெரிக்கா முழுமைக்கும் மின்சார சக்தியை வழங்கப் போதுமானது என கணிப்பிட்டுள்ளார்கள். இந்தியாவும் காற்றாலைகளை நிறுவி சக்திவளம் பெறத்தக்க பல திட்டங்களை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு, கேரளா, கன்னடம், ஆந்திரா ஆகிய மாநிலங்கள் காற்றாலைகளை உருவாக்கப் பொருத்தமான பகுதிகளை கொண்டுள்ளதோடு இம் முயற்சியில் பெரிதும் ஈடுபாடும் காட்டிவருகின்றன. நாடொன்றின் காற்றுச்சக்திவளப்பயன்பாட்டுத் திட்டத்திற்கு உள்ளுர் காற்றின் தன்மை, வேகம், காற்று வீசும் திசை, உயரம் போன்றன துல்லியமாக அளவிடப்படுதல் வேண்டும். இவை காற்றுப் பற்றிய தரவுகளாக அமையும். இத் தரவுகளைக் கொண்டு காற்றுக்காலநிலைத் தேசப்படம் உருவாக்கப்படுதல் இன்றியமையாததாகும். எமது பிரதேசத்தில் அமைநதுள்ள வளிமண்டலவியல் நிலையங்கள் இத்தரவுகளையும் முறையாகத் திரட்டி வருதல் வேண்டும்.

எமது பிரதேசத்தில் பெரும் பரப்பு சம தரையாக விளங்குகின்றது. கடற்கரையோரப் பகுதிகளிலேயே பெருமளவு குடித்தொகை செறிந்துள்ளதோடு குறிப்பிடக்கூடிய நகரங்கள் பலவும் கடற்கரையோரமாகவே பரந்துள்ளதை அவதானிக்கலாம். இவ் அம்சங்கள் காற்றாலைகளை அமைப்பதற்குச் சாதகமானவையாக உள. மேலும் வடகீழ் மாகாணங்களில் மே முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு மொன்சூன் காற்று வேகம் கொண்ட வரண்ட காற்றாக வீசுகின்றது. இது வடக்கே சோளக் காற்று என்றும் கிழக்கே கச்சான் காற்று என்றும் வழங்கப்படுகின்றது. டிசெம்பர் முதல் பெப்ரவரி வரை இப் பிரதேசங்களில் வடகீழ் மொன்சூன் காற்று வீசுகின்றது. இவற்றுக்கு இடைப்பட்ட மாதங்களாகிய ஒக்டோபர், நவம்பர், மார்ச், ஏப்ரல் மாதங்களில் காற்று வீச்சு குறைவு எனினும் இம் மாதங்களில் சூறாவளிக்காற்றும் கடற்கரையோரப் பகுதிகளில் ‘கொண்டல்’ காற்றும் இடை இடையே வீசுகின்றன.

மேற்படி காற்றுவீச்சைப் பயன்படுத்தி எமது பிரதேசத்தில் ஆங்காங்கே காற்றாலைகளை அமைக்க முடியும். இதனைத் தேச சக்திவள நிர்மாணத்திட்டத்துடன் இணைந்து உருவாக்குதல் நல்ல பயன் தருமென துணிந்து கூறலாம். குளங்கள், கிணறுகளிலிருந்து விவசாய நிலங்களுக்கு நீரிறைப்பதற்கும், நகர கிராம மின்சார உற்பத்திக்கும் காற்றலை அமைப்புக்கள் உதவிட முடியும். முயற்சியுள்ளோர் தனிப்பட்ட வீடுகளில் கூட சிறிய காற்றாலைகளை அமைத்து நீரிறைப்பதோடு மட்டுப்படுத்தப்பட்டளவில் வீட்டு மின்சார தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும்.

உயிர்ச்சுவட்டு(திணிவு) எரிசக்தி வளம் (Biomass,Biogas Energy Resources)

 

நறேசா (NARESA) ) நிறுவன ஆய்வொன்றின்படி இலங்கையில் அடிப்படை எரிசக்தி நுகர்வில் 70 வீதம் உயிர்ச்சுவட்டு (திணிவு) எரிசக்தி (விறகு)மூலமே பெறப்படுவதாக தெரியவருகின்றது. கிராமிய, தோட்டத் துறையில் 90 வீதம் உயிர்ச்சுவட்டுத் திணிவே எரிசக்தித் தேவையை நிறைவு செய்கின்றது. பொதுவாக சூழலியலாளர் குற்றம் சுமத்துவது போல் மேற்படி எரிபொருள் பாவனைக்காக காடுகள் அழிக்கப்படுவது அரிதே. அவ் அப் பிரதேசங்களில் பயிராகும் பயன்தரு தாவரங்களின் உப உற்பத்திகளே விறகுக்காக பெருமளவு பயன்படுத்தப்பட்டு வருவதை அவதானிக்கலாம். எடுத்துக்காட்டாக பெருந்தோட்டப் பகுதிகளில் தேயிலைச் செடியின் காய்ந்த தடிகள், இறப்பர் மரத்தின் எச்சங்கள் என்பனவும் யாழ்ப்பாணப்பிரதேசத்தில் பனை மரத்தின் உப உற்பத்திகளான ஓலை, மட்டை, ஊமல், போன்றனவும் எரிபொருளாக அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. தென்னை மரத்தின் உப உற்பத்திகள் கறுவா, கரும்பத்தடி என்பனவும் அவை பெருமளவு காணபபபடும் பிரதேசங்களில் விறகுக்காகப் பயன்படுத்தப்படுவதைக் காணலாம்.

காட்டுத்தாவரங்களை விறகுக்காக உற்பத்தி செய்து எரிபொருளாகப் பயன்படுத்தும் வழிமுறைகளையும் பல நாடுகளில் பின்பற்றப்படுகின்றன. இதற்காக ஆமணக்கு, சூரியகாந்திச்செடி, போன்றன பெருமளவு உதவுகின்றன. எண்ணெய் தாவரங்களிலிருந்து உயிரியல் டீசல் உற்பத்தி செய்யக்கூடிய சாத்தியக் கூறுகளும் உள்ளன. உயிரியல் தொழிலநுட்ப அறிஞர்கள் பிரதேச ரீதியாக இவை உற்பத்தி செய்யப்படும் சாத்தியம் பற்றி சிந்திக்கலாம்.

ஓப்பீட்டளவில் எம்மால் குறைந்த செலவில் பெறக்கூடிய சக்திவளமாக உயிர்வாயுச் சக்தி விளங்குகின்றது. பொதுவாக தாவர, மனித, மிருக கழிவுகளிலிருந்து உயிர்வாயு பெறப்படலாம். இவ்வகை கழிவுச் சேதனப் பொருட்கள் காற்றில்லாத சூழ்நிலையில் சில நுண் உயிர்களின் (மீதேனிக் பக்ரீறியா) தாக்கத்தினால் பிரிகையடைந்து நொதிக்கும் போது உண்டாகும் வாயுவே உயிர் வாயு ஆகும். பொதுவாக மீதேன்வாயு என வழங்கப்படும் இவ் வாயு ஒரு வாயுக்கலவையாகும். இதிலே மிதேன் ;(Methane CH4) 55-65 வீதமும், காபனீரொட்சைட்;(Co2) 35-45 வீதமும், நைதரசன் ((N2)3 வீதமும், ஜதரசன் (H2)ஒடசிசன்(O2) ஜதரசன் சல்பைட்;(H2S) என்பன ஒவ்வொரு வீதத்திலும் அடங்கியுள்ளன.

உயிர்வாயுவை மிருகக்களிவுகளிலிருந்து, குறிப்பாக சாணத்திலிருந்து பெற்றுக்கொள்வது எமக்குப் பொருத்தமானதாகவும் இலகுவானதாகவும் அமையும். இதனால் இவ்வாயுவை கிராமிய விவசாய மக்கள் சாண எரிவாயு என வழங்குகின்றனர். இந்தியாவிலும், சீனாவிலும் இதன் பயனபாடு பழைய காலம் முதலாக இருந்து வருகின்றது. பிலிப்பைன்ஸ், கொரியா, ஆகிய நாடுகளிலும் இவை குறிப்பிடத்தக்க வகையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவில் சமயலுக்காக சாணவிறாட்டியைப் பயன்படுத்தும் வழக்கம் நீண்டகாலமாக இடம்பெற்று வருவதாகும். விறகுத்தட்டுப்பாடே அங்கு இதனை ஊக்குவித்துள்ளது. இந்தியக்கிராமங்களில் குறிப்பாக தமிழ் நாட்டுக்கிராமங்களில் சாண எரிவாயுச்சக்திப் பயன்பாடு ஆனது அரசினால் திட்டமிடப்பட்ட முறையில் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது. பெரும் தொகையான கிராமிய மக்கள் இதன் பாவனையால் பெருமளவு பயன் பெற்றுவருகின்றார்கள். எமது கிராமிய விவசாய மக்களும் தமது அன்றாட வீட்டுத் தேவைக்கான எரிசக்தியைச் சாண எரிவாயுவிலிருந்து பெற்றுக்கொள்வதற்கு சாண எரிவாயுவை உற்பத்தி செய்யக்கூடிய வழி பற்றிய தொழில்நுட்ப அறிவை அவர்களுக்கு நாம் வழங்கவேண்டும்.

பொதுவாக எமது வீடுகளிலே ஒளி பெறுவதற்கும் சமையல் செய்வதற்குமே கூடுதலான எரிபொருள் தேவைப்படுகின்றது. எரி பொருட்களின விலையேற்றம் விறகுப் பற்றாக்குறை என்பன தீராத பிரச்சினைகளாகத் தொடரவுள்ளன. இப்பிரச்சனைக்குரிய பொருத்தமான மாற்று வழிகளில் ஒன்று கிராமம் தோறும் சாண எரிவாயுவை வீட்டிற்கு ஒளியேற்றவும் சமையல் செய்வதற்கும் பெருமளவு பயன்படுத்தும் வழியைக் காண்பதேயாகும். சிலிண்டர்களில் நிரப்பப்பட்டு விற்பனையாகும் எல்.பி வாயுவை நகரப்புற மக்கள் சமையலுக்காகப் பெருமளவு பயன்படுத்தி வருகின்றார்கள். சாண எரிவாயு எல்.பி வாயுவுக்கு நிகரான எரிச்சக்தியை வழங்கவல்லதாகும். அத்துடன் பெற்றோல்மக்ஸ் விளக்கை இவ் வாயுவைப் பயன்படுத்தி எரியச்செய்ய முடியும். இவை தவிர இவ் வாயுவின் துணையுடன் இயந்திர மோட்டர்களை இயங்கச்செய்ய முடியுமாகையால் ஒளியேற்றவும், நீர் இறைக்கவும், மின்சாரம் பெறவும் இதனைப் பயன்படுத்தமுடியும்.

சாண எரிவாயு எரியும் போது கரி படியாத சுவாலை வெளிவருவதால் சமையல் பாத்திரங்களில் கரி படிவதில்லை. புகை குறைவாகையால் வளி மாசடைவதில்லை. மேலும் எரிவாயு பெற்றபின் எஞ்சும் சாணம் கூடுதலான பயிர் போசனையைக் கொண்டது. இது கிருமிகள் களைகள் அற்றதாகவும் காணப்படுகின்றது. இச் சாணத்தை உரமாக பயன்படுத்தும் போது விவசாய உற்பத்தி அதிகரிப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

நாம் பின்பற்றத்தக்க சாண எரிவாயு உற்பத்திச் சாதனங்கள் இரு வகைப்படும்.

1. மிதக்கும் வாயுக் கொள்கலனுடன் கூடிய இந்திய முறைச்சாதனம்

2. அமுக்க கொள்கலனுடன் கூடிய சீன முறைச்சாதனம்.

இந்தியமுறை ‘ஹேபர்காஸ்’ முறையெனவும் இந்தியாவில் ஏழுபேர் கொண்ட ஒரு குடும்பத்தின் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய சாண எரிவாயுச் சாதனத்தை 20,000 ரூபா செலவில் அமைத்துக்கொள்ள முடியுமென்கின்றனர்.

சீன முறையிலான எரிவாயுச் சாதனம் இந்திய முறையை விட சிக்கனமானதும் சுலபமாக அமைக்கக்கூடியதுமாகும். இந்தியச் சாண எரிவாயுச் சாதனத்தை விட அரைப்பங்கு செலவில் இதனை அமைத்துக்கொள்ளலாம். ஆண்டுக்கு ஒரு முறை துப்பரவுப் பராமரிப்புப் பணியை மேற்கொண்டால் போதுமானது.

இரண்டு அல்லது மூன்று மாடுகளிலிருந்து நாளொன்றிற்கு 15 கிலோ சாணம் பெறப்படுகின்றதெனக் கொள்வோம். இதிலிருந்து பெறப்படும் எரிவாயுவானது ஒரு கன மீற்றராக (2.4 கன அடியாக) இருக்கும். ஒரு கன மீற்றர் எரிவாயுவின் பெறுமதி பின்வருமாறு.

2.0 கிலோகிறாம் விறகு

0.6 லீற்றர் மண்ணெண்ணெய்

0.5 லீற்றர் பெற்றோல்

0.4 லீற்றர் டீசல்

3 பேருக்கு 3 வேளை சமைப்பதற்கான எரிசக்தி

ஒரு மணித்தியாலத்திற்கு 6 ‘பெற்றோல்மக்ஸ்’ விளக்குகளை  எரிவூட்டுவதற்குப் போதுமான வலு.

ஒரு மணித்தியாலத்திற்கு 40W ஒளிசக்தி கொண்ட 25 மின்குமிழ்களை ஒளிவூட்டுவதற்கு போதுமான வலு.

ஆகிய சக்திக்குச் சமனானதெனக் கணிக்கப்பட்டுள்ளது.

எமது பிரதேசத்தின் விவசாய உற்பத்தியானது பயிர்ச்செய்கையுடனும் விலங்கு வளர்ப்புடனும் ஒன்றிணைந்து மேற்கொள்ளப்படும் பண்பு கொண்டதாக பாரம்பரியமாகவே இருந்து வருகின்றது. எமது பாரம்பரியத்தில் மாடுகளை செல்வ வளமாகக் கொள்ளும் வழக்கம் உள்ளது. இதனால் எமது பிரதேசத்தில் வாழ்கின்ற கிராமிய விவசாய குடும்பங்கள் ஒவ்வொன்றும் மாட்டு வளர்ப்பில் அக்கறை கொண்டுள்ளன. பலர் பட்டிமாடுகளைக் கொண்டவர்களாகவும் உள்ளனர்.  எனவே சாண எரிவாயுச் சக்தியை கிராமத்தின் ஒவ்வொரு வீட்டிலும் பெறச் செய்வது இலகுவாக நடைமுறைப்படுத்தக்கூடிய திட்டமேயாகும்.

கடல் சக்தி வளம் ( Oceanic Energy)

புவிக்கோளத்தின் 70 வீதம் கடல் பரப்பாக காணப்படுகின்றபோதிலும் மனிதன் கடல்வளத்தை இன்றுவரை முறையாகவும் திறமையாகவும் பயன்படுத்தவில்லை என்பது நிதர்சனம். உணவின்றி மனித உயிர்கள் மடியும் வறுமைநிலை பரவலாக உலகெங்கும் காணப்படும் நிலையிற் கூட கடல்வளத்தை உணவுத்தேவைக்காகப் பயன்படுத்தும் அபிவிருத்தி நுட்பம் அரிதாகவே வளர்ந்துள்ளது. புவியில் பரந்துள்ள கடல் பரப்பிலிருந்து உணவாகப் பெறத்தக்க உள்ளார்ந்த வளம் 100 எனக் கொண்டால் மனிதன் இன்றுவரை அதில் 1 வீதத்தையே பயன்படுத்துகின்றான் என்பது வியப்பளிக்கும் தகவலாகும். இது போன்றே கடலினைச் சக்தி தரும் வளமாக பயன்படுவதும் மிக அரிதாகவே உள்ளது. ஆனால் இதற்கான வாய்ப்புகளோ அதிகம்.

கடலில் இருந்து நான்கு வழிகளில் சக்தி பெறப்படலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

1. கடல்வற்றுப் பெருக்கு நிகழ்வுகளை பயன்படுத்தி சக்திபெறும் வழி.

2.கடல் அலைகளில் இருந்து சக்தி பெறும் வழி

3.ஆழ் கடலில் காணப்படும் நீரோட்டத்தைப் பயன்படுத்தி சக்தி பெறும்வழி

4.கடல் ‘மீதேன்’ வாயுப் படிவுகளிலிருந்து சக்தி பெறப்படும் வழி

கடல் வளத்திலிருந்து மேற்படி நான்கு வழிகளிலும் சக்தி பெறும் வாய்ப்புகள் எமது பிரதேசத்தில் சாதகமாக உள்ளன. உதாரணமாக யாழ்ப்பாணக் குடாக்கடலை நோக்கும் போது இங்கு சுண்டிக்குளம் முதல் ஆனையிறவு, பூநகரி, கச்சாய், குருநகர், பண்ணை, அராலி, ஊர்காவற்றுறை ஆகிய பகுதிகளை உள்ளடக்கும் குடாக்கடற்பரப்பு வாய்ப்பான கடல் நீரோட்டத்தைக் கொண்ட பகுதியாக காணப்படுகின்றது. இப் பகுதிகளில் பருவகாலத்திற்குரிய வற்றுப் பெருக்கு, நாளாந்த வற்றுப்பெருக்கு என்பவற்றை அடையாளம் காணலாம். இங்கு வற்றுப் பெருக்கு காலம், உயரம் என்பன நன்கு அவதானிக்கப்பட்டு சக்திபெறும் வழிகள் கண்டறியப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக யாழ்ப்பாணத்தையும் தீவுப்பகுதியையும் இணைக்கும் யாழ்ப்பாணக் குடாக்கடலை மேவி அமைக்கப்பட்ட பண்ணைப் பாலத்தை அவதானிக்கும் போது பாலத்திற்கு மேற்கே கடல்நீர் ஓடி மேற்குப்பகுதி பெருகிக் காணப்படுவதையும் வற்றும் போது கிழக்குப் பகுதி நோக்கி கடல் நீர் வடிந்து வருவதையும் ஒரு நாள் பொழுதில் அவதானிக்க முடியும். இவ்வாறு கடல் பெருகும் போது கடல்நீரை மறித்துத் தேக்கமாக உருவாக்கி பின்னர் வற்றும் போது சிறிய துரிசுகள் மூலம் நீரை வடியவிடும் அமைப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம். துரிசுப்பகுதிகளில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சுழலிகளைப் பொருத்தி விடுவோமாயின் அதில் இருந்து மின்சக்தியைப் பெறமுடியும்.

இவ்வாறு பொருத்தமான கடலை அண்மித்த பல பிரதேசங்கள் இங்கு உள்ளன. இவற்றை நன்கு ஆராய்ந்து கண்டறிந்து கடற்பெருக்கு நீர்த்தேக்கங்களை உருவாக்கமுடியும். எமது பிரதேசத்தை நேசிக்கும் பொறியியலாளர்கள் இவ் வழிமுறைபற்றிச் சிந்திக்கவேண்டும்.

கடல் அலைச் சக்தியைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நுட்பம் சிங்கப்பூரில் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது. சிங்கப்பூரைச் சுற்றியுள்ள கடற்பரப்புகள், துறைமுகப் பிரதேசங்களில் மிதக்கவிடப்பட்டுள்ளன. சிறிய மின் உற்பத்திச் சாதனங்கள் அப் பிரதேசத்தின் கடல்பரப்பை ஒளியூட்டிக்கொண்டிருப்பதை காணக்கூடியதாக உள்ளது. அலையின் வீச்சில் கடலில் மிதக்கும் மின் உற்பத்தி சாதனத்தின் சுழலி சுழற்றப்பட்டு மின் உற்பத்தி கிடைக்கின்றது.

யாழ்ப்பாணக் குடாக்கடலில் அலைகள் குறைவு, ஆனால் வடமராட்சிப் பகுதி திருகோணமலை உள்ளிட்ட கிழக்குப் பகுதிகளில் பாரிய அலைகள் தோன்றுகின்றன. இப் பகுதிகளில் மேல் விபரித்த வகையான சாதனங்களைப் பொருத்துவது பற்றி ஆராயலாம்.

ஆழ்கடல் நீரோட்டம் என்பது கடல்நீரில் ஏற்படும் அடர்த்தி மாறுபாட்டால் நிகழ்வது. குளிர்ந்த கடின உப்புநீர் கீழேயும், வெப்பமான உவர்நீர் மேலேயும் காணப்படும் கடல் நீர்ப்பரப்புகளில் ஆழ்கடல் நீரோட்டங்கள் காணப்படுகின்றன. கடல் மேல் நீரை காற்று அடித்துச் செல்லுமாயின் கீழ் இருக்கும் குளிர் நீர் வேகமாக மேற்பரப்புக்கு வருகின்றது. இந் நிகழ்வு சில கடற்பரப்புகளில் அதிகமாக இடம் பெறுகின்றது. பேரு நாட்டின் கடல் பரப்பில் ‘எல்நினோ’ தோன்றுவதற்கு இவ்வாறான கடல் நீரோட்டமே காரணமாக அமைகின்றதெனத் தெரிகிறது. எமது பிரதேசத்தில் குறிப்பாக திருகோணமலை கடற்பரப்பில் ஆழ்கடல் நீரோட்டம் உள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. இவை இன்னமும் நன்கு ஆராயப்படவில்லை. அவை ஆராயப்பட்டு நன்கு திட்டமிடப்பட்டு பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படுமாயின் எமது பிரதேசத்திற்கு சக்தி வழங்கக்கூடிய இலகுவான வழியைக் கண்டறிந்தவர்களாவோம்.

அண்மைக்கால ஆய்வு ஒன்று பொதுவாக, கடற்கரைகளில் ஆழமற்ற சேற்றுப்பகுதிகளில் ‘மீத்தேன்’ வாயுப் படிவுகள் பெருமளவிற்கு படிந்துள்ளதாக தெரிவிக்கின்றன. கடலோரங்களில் ‘மீத்தேன்’  வாயு வெளியேறி சில சமயங்களில் தீப்பிழம்புகளை உருவாக்குவதை நாம் அறிவோம். அதுபோன்று கடற்கரையோரங்களில் மாத்திரமன்றி ஆழமற்ற கடலடித் தளங்களிலும் இப்படிவுகள் பெருமளவிற்கு படிந்துள்ளன. ஒரு குறிப்பிட்ட அமுக்க, வெப்ப நிலைகளில் இவை இயங்காமல் உள. இவ் அமுக்க வெப்பங்களில் சில மாறுபாடுகளை உருவாக்குவதன் மூலம் இவற்றிலிருந்து பெருமளவு ‘மீத்தேன்’ வாயு பெறப்படலாமென அண்மைய ஆய்வு வெளிப்படுத்துகின்றது. மேற்படி வாயு பெறப்படும் வழிமுறை - நுட்பம் எமக்கு கிடைக்கும் பட்சத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் தெற்குப் பகுதிகளில் இதனைப் பெருமளவு பெற்றுக்கொள்ள முடியுமென நம்பலாம்.

புவி வெப்பசக்தி ((Geo Thermal Energy)

தரைக்கீழ் நீரானது புவியின் உட்பாகத்தில் கொதிக்கும் நிலையிலுள்ள ‘மக்மா’(magma) படையின் வெப்பத்தால் வெப்மூட்டப்படுவதனால் ஏற்படும் சக்தி வெளிப்பாட்டையே புவிவெப்பசக்தி என வழங்குகின்றோம். பெரும்பாலும் இவ்வகை சக்தி வெளிப்பாடுகள் எரிமலை வலயங்களிலே காணப்படுகின்றன. சக்தியை வெளிவிடும் வழிமுறையைக் கொண்டு இவற்றை இரு பிரிவாக வகைப்படுத்துவர்.

1. நீராவியை வெளியேற்றும் மையங்கள(Geyser

2. வெப்ப நீரூற்றுக்கள்(Hot Springs)

 

புவியிலுள்ள சில துவாரங்கள் ஊடாக வெப்பநீரும் நீராவியும் அடிக்கடி வெளிவரும் மையத்தையே கீசர்(geyser) என வழங்குவர். இதனை நீராவியை வெளியேற்றும் மையங்கள் என தமிழில் கூறலாம். புவியின் கீழ் உள்ள பாறைகுகைகளில் சிக்கியுள்ள தரைக்கீழ் நீர் மக்மாப்படை வெப்பத்தால் வெப்பமேற்றப்பட அங்கு வெப்பமும் அமுக்கமும் அதிகரிக்கினறது. இதனால்  புவி மேலோட்டையும் உட்பாகத்தையும் இணைக்கும் துவாரத்தின் ஊடாக மிகவும்  வேகமாக கொதிக்கும் நீராவி வெளியேறுகின்றது. நீராவி வெளியேற தரைக்கீழ்நீர் குகைக்குள் வருகின்றது. இது மீண்டும் வெப்பமேற்றப்படுகிறது. இதனால் மீண்டும் நீராவி வெளியேற்றப்படுகின்றது. இந் நிகழ்வு சுழற்சி முறையிலே இவ் வகையான அமைப்புக் காணப்படும் பிரதேசங்களில் செயற்படுகின்றது. இச் செயற்பாட்டினை புவி வெப்பசக்திப் பயன்பாடாக மாற்றி மனிதன் பயன்படுத்தமுடியும்.. 1965 இல் ஜக்கிய அமெரிக்கா கலிபோணிய மாநிலத்தில் மேற்படி சக்தியை பயன்படுத்தத்தக்க வகையில் வலுவழங்கும் சாதனம் உருவாக்கப்பட்டது. இதிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. ஜஸ்லாந்து குளிர்கால நிலை நிலவும் நாடாகையால் அங்கு வீடுகள், கட்டிடங்களுக்கு வெப்பமேற்றுவதற்கு  இந்த புவி வெப்பசக்தியை பெருமளவு பயன்படுத்துகின்றார்கள். இவ்வாறு பெறப்படும் வெப்பமேற்றுகையைப் பயன்படுத்தி ‘பச்சைவீட்டு விளைவு’ முறையில் காய்கறி, பழவகை, என்பன உற்பத்தி செய்யப்படுகின்றன. எதிர்காலத்தில் பனிமூடியுள்ள புவிப்பகுதிகள் புவி வெப்பசக்திப் பாவனையால் குடியிருப்பு பகுதிகளாக மாற்றப்படலாம் என அறிஞர்கள் கூறுகின்றார்கள்.

வெப்ப நீருற்றுக்கள் புவியின் எரிமலை வலயப்பகுதிகளில் மாத்திரமன்றி புவி மேற்பரப்பில் பல்வேறு பகுதிகளிலும் காணப்படுகின்றன. இவையும் புவிவெப்ப சக்திவளங்களே.

இலங்கையில் 225 மேற்பட்ட வெப்ப நீரூற்று மையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதிலே 120 இற்கு மேற்பட்டவை மலைநாட்டுப் பகுதிகளில் பரந்துள்ளன. வடகீழ் மாகாணத்திலும் வெப்ப நீரூற்று மையங்கள் பரந்துள்ளன. திருமலையில் உள்ள கன்னியாநீருற்று பிரசித்தி பெற்றதாகும். மட்டக்களப்பு, அம்பாறை, மாவட்டங்களில் கப்பூரல்ல, மகாஒயா, கல்லோயா, கிவுலகம, போன்ற இடங்களில் வெப்ப நீரூற்றுக்கள் காணப்படுகின்றன. இவை பற்றிச் புவிச்சரிதவியலாளர்கள் ஆய்வு செய்தமை குறைவே. இவை நன்கு ஆராயப்பட்டு புவி வெப்ப சக்தியைப் பயன் தரும் வளமாக மாற்றக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.

ஏனைய சக்திவளங்கள்

அணுசக்தி மூலம் மின்சாரம் பெறும் நோக்கில் தமிழ்நாட்டில் கால்பாக்கம், கூடங்குளம் போன்ற பகுதிகளில் அணுஉலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இன்றைய நிலையில் அணு உலைகளால் இந்தியாவில் 2700மெ.வாட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. அணு உலைகளின் உருவாக்கம் ஆபத்து நிறைந்தது எனவும் மிக அதிக செலவிலேயே இதனை அமைக்க முடியுமெனவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்ற போதிலும் உலகில் பல நாடுகள் அணுசக்தியை தனது சக்தித்தேவைக்காக எதிர்காலத்திலே பெருமளவு பயன்படுத்தவுள்ளன என அறிஞர்கள் அபிப்பிராயப்படுகின்றார்கள்.

எமது பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் குறிப்பாக கொக்கிளாய், புல்மோட்டைப்பகுதிகளில் ஆறு கிலோமீற்றர் நீளத்துக்குப் பரந்துள்ள இல்மனைற் மொனோசைட் படிவுகளில் அணு உற்பத்தி செய்யத்தக்க கனிமங்கள் காணப்படுவதாக தெரிகின்றது. இவை ரேடியோ கதிர்வீச்சைக் கொண்ட கனிமங்களாகும். கடந்த பல வருடங்களாக ஜப்பான் மேற்படி கனிமத்தை மேலே குறிப்பிட்ட பிரதேசங்களில் இருந்து பெற்றுவருகின்றது. இதன் முழுமையான பயன்பற்றி எமது புவிச்சரிதவியலாளர்கள் முறையாக ஆராயவில்லை. ஆனால் அணுசக்தியை இக் கனிமத்திலிருந்து பெருமளவு பெறலாம் எனக் கூறுகின்றனர். எமது இவ் வளத்தை நாமே பயன்படுத்தத் தக்க வழிமுறைகள் விரைவில் எய்தப்பட வேண்டும்.

வடமாகாணத்தில் மன்னார், பரந்தன், முல்லைத்தீவு, இணைக்கும் கோட்டிற்கு வடக்கே உள்ள பகுதிகள் மயோசின் சுண்ணாம்புப் பாறைகளை அடித்தளப் பாறைகளாக கொண்டவையாகும். இவ்வாறான அமைப்புள்ள புவிப்பரப்புகளில் பெற்றோலிய வளம் காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. எனவே இப் பகுதிகளிலும் பெற்றோலிய வளம் காணக்கூடிய வாய்ப்புகள் உள. 25-30 ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணக் குடாநாட்டு பகுதிகளில் வெளிநாட்டு புவிச்சரிதவியலாளர்கள் புவியதிர்வு ஆய்வுகள் பலவற்றை மேற்கொண்டமையும் நாம் அறிந்த செய்தியே. இவற்றையெல்லாம் மனங்கொண்டு நாம் மீண்டும் புவிஅதிர்வு ஆய்வுகள் மூலம் பெற்றோலிய வளத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கவேண்டும். சில சமயங்களில் இவ் ஆய்வின் பெறுபேறாக எமது சக்திவளத் தேவையை நிறைவு செய்வது மாத்திரமல்ல சக்திவள ஏற்றுமதி பிரதேசமாக எமது பிரதேசம் மாறக்கூடிய நிலமை தோன்றக்கூடும் என்ற நம்பிக்கையை நிராகரிக்க முடியாது.

முடிவுரை

வடகீழ் மாகாணம் மாற்றுச் சக்திப்பயன்பாட்டிற்கு ஏற்ற பலவளங்களைத் தன்னகத்தே கொண்ட பகுதியே, இவ்வளங்கள் பற்றிய விபரங்கள் விஞ்ஞான முறையில் திரட்டப்படுதல் வேண்டும். அவற்றின் வகை, பிரதேசப்பரம்பல் உள்ளார்ந்ததன்மை, பயன்படுத்துவதற்கான மதிப்பீடு போன்றவை தரவுகளாகப் பெறப்பட்டு மாற்றுச்சக்திவள தேசப்படம் தயாரிக்கப்படுதல் அடிப்படை முதற் தேவையாகும். இவற்றின் அடிப்படையில் துறைசார் அறிஞர்களால் நுண்ணாய்வுகள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும். பின்னர் அவை முறையாகத் திட்டமிடப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு உட்படும் போது எமது பிரதேசம் மாற்றுச்சக்தி வளத்திலும் தன்னிறைவு கொண்ட பூமி என்ற மெய்மை உறுதிப்படும்.

உசாத்துணை:

01)Cleard, Seamus (1998) Renewing the Earth: London: CAFOD.

 

02)Erie W.Danielson and Edward J.Deneeka, JR, Earth Science, London: Macmillan.

 

03) FAO (1990) Sustainable Development and Natural Resource Management, Rome Food and agricultiur organization of United Nations.

 

04)Government of Sri Lanks, (1991) Natural Resource of Sri Lanka: Conciliation and trendsa report prepared for the Natural Resource, and science Authority of Srilanka, Colombo: Government press. (1998) the National Atlas of Sri Lanka Colombo: Survey Department.Department of census and statistics-ministry of plan Implementation, (1998) census of population and Housing Colombo: Government press.

(1985) statistical abstract of the demorcratic socialist republic of Srilanka, Colombo:GovernmentPress.

05) ILO (1987) Linking energy with survival, Geneva ILO.

06) John E Permick and john R stilen(Ed), (1990) sustainable development for a new world agenda, proceeding of a conference, Canada: UNESCO

07) Kathleen Courrierr, (1992) Renewable energy in cities, New York: van Notstand Reinhold Company.

08) Robert L.Lottness (1992), Energy Handbook, New York: van Nostrand Reinhold Company.

09) இரா.சிவசந்திரன், (1976) இலங்கையில் தமிழர் பாரம்பரிய பிரதேசத்தின் குடித்தொகைப் பண்புகளும் பொருளாதார வளங்களும், யாழ்ப்பாணம்:அகிலம் சமூக அறிவியலாய்வு வெளியீடு.

Pin It