mindஐம்புலன்களில் இருந்து வரும் உணர்வுகள் மூளையை அடைகின்றன. மூளை அவற்றை வகைப்படுத்தி உணர்ந்து கொள்கிறது. இந்த உணர்வுகள் மூளையிலேயே தங்கி இருந்தால் அவை நினைவுகளாக மாறிவிடுகின்றன. தேவை ஏற்படும்போது இந்த நினைவுகளை மீட்டெடுக்கமுடியும்.

நினைவாற்றலை குறுகிய கால நினைவாற்றல், நீண்டகால நினைவாற்றல் என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். நமது மூளை அன்றாடம் ஆயிரக்கணக்கான தகவல்களைப் பெறுகிறது. அத்தனை தகவல்களையும் மூளையிலேயே சேமித்து வைக்கவேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. அவசியமான காலத்திற்கு மட்டுமே அந்த தகவல்கள் மூளையில் சேமித்துவைக்கப்படுகின்றன. பணி முடிந்ததும் அந்த தகவல்கள் மறக்கப்பட்டு விடுகின்றன. இதுவே குறுகியகால நினைவாற்றல் என்று வகைப்படுத்தப்படுகிறது.

நாம் செய்யும் தொழிலுக்குத்தேவையானவை, நம்முடைய மனதை மிகவும் கவர்ந்தவை அல்லது பாதித்தவை, மீண்டும் மீண்டும் சொல்லிப்பார்த்தவை ஆகிய தகவல்கள் நம்முடைய மூளையில் நீண்டகால நினைவுகளாக தங்கிவிடுகின்றன. நீண்டகால நினைவுகளில் இருந்து தகவல்களை மீட்டெடுப்பதற்கு மூளை சிலநேரங்களில் சிரமப்படுவதை நாம் உணரமுடியும்.

மூளை பலசெய்திகளை ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்தி ஏற்கனவே பாதுகாக்கப்பட்ட தகவல்களுடன், புதிய தகவல்களையும் சேர்த்து பாதுகாக்கிறது. பலவருடங்கள் அந்த தகவல்களை வெளிக்கொணராமல் போனால் கோடிக்கணக்கான தகவல்களுக்கிடையில் அவை புதைந்து போகின்றன. இதனால்தான் நாம் சந்திக்கும் சிறுவயதுத் தோழரிடம், “உங்களுடைய பெயர் நாக்கில் இருக்கிறது; வரமாட்டேன் என்கிறது” என்று சொல்ல வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படுகிறது.

குழந்தை பிறந்து மூன்று வயது வரையில் தான் பார்ப்பது, கேட்பது அனைத்தையும் புகைப்படங்களாக தனித்தனியே மூளையில் பதிவு செய்துகொள்கிறது. அவற்றின் முழுப் பொருளும் குழந்தைகளுக்குப் புரிவதில்லை. மூன்றுவயதிற்கு மேல்தான் நீண்டகால நினைவுகள் படிப்படியாக உருவாகின்றன.

நன்றி: கலைக்கதிர்
அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி

Pin It

 

beachநீரிலும் நிலத்திலும் வசிப்பதால் தவளைகளை இருவாழ்விகள் என்றழைக்கிறோம். தவளைகளின் வாழ்க்கை பெரும்பாலும் நீர்நிலைகளின் அருகிலேயே இருப்பது கவனிக்கத்தக்கது. நீரில் தோன்றிய தவளை நிலத்தில் வாழ்வதற்கு பரிணாம வளர்ச்சியில் பல மாற்றங்களைப்பெற வேண்டியிருந்தது. மீன்களைப்போல செவுள்களால் சுவாசிக்காமல் நுரையீரல்களால் சுவாசிக்க வேண்டியிருந்தது. மேலும் தவளைகளின் முட்டைகள் காற்றிலோ, வெய்யிலிலோ அதிக நேரம் இருந்தால் நீர்ச்சத்து ஆவியாகி முட்டையில் உள்ள கரு இறந்துவிடும். தவளையின் தோல் மெல்லியதாகவும், நீர் புகக்கூடியதாகவும் இருக்கிறது. எனவே தவளைகள் அதிக காற்று உள்ள இடங்களையும், வெய்யில்படும் இடங்களையும் தவிர்த்துவிடும். தவளைகள் கடல்நீரில் வாழ்வது இல்லை. கடல்நீரில் இருக்கும் அதிகப்படியான உப்பு தவளையின் உடலுக்குள் சென்றால் தவளை இறந்துவிடும். ஆனால் கடல் நடுவே இருக்கும் தீவுகளில் தவளைகள் காணப்படுவது எப்படி? இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கடல்மட்டம் தாழ்வாக இருந்ததால் இரு சாத்தியமாகி இருக்கிறது.

தவளைகளுடன் ஒப்பிடும்போது பல்லிகள் சற்று முன்னேறிய இனம் என்பதை உணரலாம். காரணம் பல்லிகள் ஓடுடன் கூடிய முட்டைகளை இடுகின்றன. இதனால் நீர்நிலைகளின் அருகில்தான் முட்டையிடவேண்டும் என்கிற அவசியம் பல்லிகளுக்கு இல்லை. மேலும் பல்லிகள், ஓணான்கள் இவற்றின் உடல் செதில்களால் மூடப்பட்டுள்ளதால் நீர் இழப்பு தவிர்க்கப்படுகிறது. பல்லிகள் மற்றும் ஓணான்களின் கால்விரல்கள் மரக்கிளைகளைப் பற்றிக்கொள்ள முடியும். ஆனால் நீந்துவதற்கு ஏற்றவாறு கால்விரல்கள் இல்லை. ஆனால் தீவுகளில் பல்லிகளும், ஓணான்களும் காணப்படுவதற்குக் காரணம் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக கடல் மட்டம் தாழ்வாக இருந்ததுதான்.

மனிதர்கள் மூலமாக பல்லிகளும், ஓணான்களும், தவளைகளும் தீவுகளைச் சென்றடைந்திருக்கலாம் என்று கருதுவதற்கு இடமில்லை. ஏனெனில் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபடக்கூடிய பல்லிகள் காணப்படுகின்றன.

எனவே, பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக கடல்மட்டம் தாழ்வாக இருந்திருக்க வேண்டும் என்று கருத இடமிருக்கிறது.

நன்றி: தினமணி/04/01/2009
தகவல்: மு.குருமூர்த்தி

Pin It

காலநிலை மாற்றத்தால் உலக சுகாதாரம் ஆபத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக ஏழைகளுக்கு நெருக்கடி அதிகரிக்கும், ஊட்டச்சத்து குறைவு பரவலாகும். நில மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பதற்கு ஏற்ப மாரடைப்பு, சுவாசக் கோளாறுகளால் இறப்போர் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்கிறார் விஞ்ஞானி அந்தோனி மெக்மைக்கேல். ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் சர்வதேச தொற்றுநோய் மற்றும் மக்கள்தொகை சுகாதார மையத்தின் தலைவராகச் செயல்பட்டு வருகிறார் மெக்மைக்கேல். அத்துடன் காலநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக் குழுவின் இடம்பெற்றுள்ள முக்கிய உறுப்பினர்களில் ஒருவர். உலக சுற்றுச்சூழல் மாற்றங்களால் ஏற்படும் சுகாதார ஆபத்துகள் பற்றி பேசுகிறார்:

காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளால் உருவாகி வரும் நோய்களைப் பற்றி... கடந்த இருபது ஆண்டுகளில், உலகம் முழுவதும் நோய்களின் தோற்றத்தில் பல்வேறு மாறுபாடுகள் ஏற்பட்டு வருகின்றன. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளில் இவற்றின் வேர் அமைந்திருப்பது தெரிகிறது. உலகின் வெப்பமான பகுதிகளில் மட்டுமே பரவி வந்த மலேரியா தற்போது கிழக்கு ஆப்பிரிக்க மேட்டுப்பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சிஸ்டோசோமியாசிஸ் (Schistosomiasis) என்ற தண்ணீர் நத்தைகளால் தொற்றும் நோய் சீனாவின் வடக்குப் பகுதிக்கு பரவிவிட்டது. இந்த நத்தைகளை முன்பு இந்தப் பகுதியில் பார்க்க முடியாமல் இருந்தது.

உணவாகப் பயன்படும் சிப்பிமீன் நச்சாவது தொடர்பாகவும் தகவல்கள் வருகின்றன. அலாஸ்கா கடற்கரைப் பகுதியில் அவ்வப்போது தென்பட்டுக் கொண்டிருந்த இந்த சிப்பிமீன், தற்போது அப்பகுதியில் மிகச் சாதாரணமாக பார்க்கக் கிடைக்கிறது. அலாஸ்கா பகுதி கடல்நீரின் வெப்பநிலை கோடை காலத்தில் 15 டிகிரி செல்சியஸ் அதிகரித்துவிட்டால், சிப்பிமீன் வளரும் தளங்களில் நோய்த்தொற்று நீடித்திருப்பதற்கான உகந்த சூழ்நிலையை உருவாகும். வங்கதேசத்தில் சமீபத்தில் பரவிய காலரா நோய் தாக்குதலுக்கும், எல்நினோ சுழற்சியால் அந்த நாட்டின் கடற்கரை நீர் வெப்பமடைவதில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளுக்கும் தொடர்பு இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் வெப்பஅலைகள் காரணமாக நெருக்குதல்கள் அதிகரிக்குமா? வளர்ந்த நாடுகளில் இப்பிரச்சினை தொடர்பாக அதிகம் ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. வெப்பநிலை அதிகரித்தால், இறப்போரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். அன்றாட வெப்பநிலை அதிகரிப்பதன் காரணமாக, மாரடைப்பு மற்றும் சுவாசக் கோளாறுகளின் தாக்கம் உயர்வதன் காரணமாகவே இந்த இறப்புகள் பெருமளவு ஏற்படுகின்றன. வளரும் நாடுகளில் இப்பிரச்சினை தொடர்பாக இன்னும் அதிக ஆராய்ச்சிகள் நடக்கவில்லை.

இது போன்ற பிரச்சினைகளால் யார் அதிகம் பாதிக்கப்படுவார்கள்? முதியவர்கள், பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள், குறைந்த தரமுள்ள வீடுகளில் வாழும் ஏழைகள் ஆகியோர் வெப்பஅலைகளால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். 1995ம் ஆண்டு ஏற்பட்ட சிகாகோ வெப்பஅலையால் நூற்றுக்கணக்கானோர் இறந்தனர். அவர்களில் பெரும்பாலோர் ஏழைகள், சிறிய-காற்றோட்ட வசதிகள் இல்லாத அடுக்குமாடிகளில் வாழ்ந்தவர்கள்தான். கடுமையான வெப்பத்தால் சமூக அமைதி கெடும் என்பதாலும் மேலும் சிலர் இறந்ததாக தகவல்கள் வந்தன. வெப்பநிலை அதிகரிப்பால் பெரும்பாலோர் அடுக்குமாடிகளில் குடியிருப்பு வீடுகளுக்குள் அடைந்து கொண்டதால், நடத்தை சார்ந்த மனநோய் பாதிப்புகள் ஏற்பட்டது தொடர்பாகவும் தகவல்கள் வந்தன.

வேறு என்ன சுகாதார பிரச்சினைகள் ஏற்படும்? ஆர்டிக் பனிப்பிரதேசத்தில் வாழும் இனுயிட் மக்களிடம் ஏற்படும் உடல் பருத்தல் மற்றும் காலநிலை மாற்றம் இடையிலான சுவாரசியமான தொடர்பாகள் தொடர்பாக ஆராய்ச்சிகள் நடந்துள்ளன. வெப்பநிலை அதிகரிப்பால் ஆர்டிக் பகுதியில் உறைபனி, மிதக்கும் பனிப்பாறைகள் கண்மூடித்தனமாக உருகி வருகின்றன. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள பல்வேறு உயிரினங்கள் இடம்பெயர்ந்து வருகின்றன. இதனால் இனுயிட் மக்கள் தங்கள் பாரம்பரிய உணவு ஆதாரங்களைச் சார்ந்திருக்க முடியாமல் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர். இதற்கு பதிலாக பதப்படுத்தப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட உணவுப் பண்டங்களை அவர்கள் அதிகம் உண்ண ஆரம்பித்துள்ளனர். இதிலிருந்து காலநிலை மாற்றம் நமது உணவு சங்கலியையும் சீர்குலைக்கிறது என்பது தெரியவருகிறது.

இந்தியா எந்த மாதிரியான பிரச்சினைகளை எதிர்கொள்ளும்?

இந்தியாவின் பெருநகரங்களில் வெப்பஅலை வீசுவதன் கடுமையும், தாக்குதல் எண்ணிக்கையும் அதிகரிக்கும். கோடை காலங்களில் சுற்றியுள்ள கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில் இரவு நேர வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். இதனால் சேரிகள் மற்றும் தரமற்ற வீடுகளில் குடியிருக்கும் மக்கள் பாதிக்கப்படுவர். காலநிலை மாற்றம் பயிர் மகசூலை குறைக்கும், நீர்நிலைகள் வறண்டு போகும். இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் கிழக்கு மகாராஷ்டிராவில் வாழும் 20-30 லட்சம் மக்கள் வறட்சியால் இடம்பெயர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வயிற்றுப்போக்கு, காலரா, சிக்குன்குன்யா, டெங்கு போன்ற நோய்களின் தாக்குதல் பெருகிவிடும்.

காலநிலை மாற்றத்துக்கு தகவமைத்துக் கொள்ள எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்? 10 ஆண்டுகளுக்கு முன்பு கணிக்கப்பட்டதைவிட மாற்றங்கள் தற்போது அதிவேகமாக நடைபெற்று வருகின்றன. எதிர்கால ஆபத்துகள் தொடர்பாக நமக்கு முழுமையான புரிதல் இல்லை என்றாலும்கூட, ஆபத்துகளின் தாக்கத்தை குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற நெருக்கடி அதிகரித்து வருகிறது. அனைத்து ஆராய்ச்சிகளையும் நடத்துவதற்கு முன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று நெருக்கடியை உருவாக்குவது சாதகமான ஒரு சூழ்நிலை அல்ல.

குறிப்பாக தெற்கு ஆசியாவின் உணவுதானிய மகசூலில் காலநிலை மாற்றம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. மக்கள்தொகை அதிகரிப்பை கணக்கில் எடுத்துக் கொண்டால், நிலைமை இன்னும் மோசமாகி விடும். மண்வளம் அதிகமாக சுரண்டப்படும், நீர்நிலைகள், நன்னீர் ஆதாரங்கள் வறண்டு போகும். இந்தியா போன்ற நாடுகளில் ஏற்கெனவே பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலை நிலவுகிறது. காலநிலை மாற்றம் இப்பிரச்சினையை இன்னும் தீவிரமாக்கும். எனவே, ஊட்டச்சத்து குறைவு பிரச்சினையில் தகவமைப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தேவை இருக்கிறது.

காலநிலை மாற்றம் போன்ற பிரச்சினைகளில் உலக சுகாதார நிறுவனம் மற்றும் உலக வங்கி போன்ற நிறுவனங்களின் நிலை என்ன?

பொருளாதார வளர்ச்சி பிரச்சினைகள் தொடர்பாக மட்டுமே உலக வங்கி முதன்மை அக்கறை செலுத்தி வந்தது. மனிதர்கள் வாழும் சூழ்நிலைகள் மேம்பட வேண்டும் என்றால் கல்வி, சுகாதாரம் போன்ற விஷயங்களும் அதற்கு ஈடான முக்கியத்துவம் கொண்டவை என்று தற்போதுதான் உணர ஆரம்பித்திருக்கிறது. காலநிலை மாற்றத்தை உலக சுகாதார நிறுவனம் பழைமை மனப்பான்மையுடனே அணுகுகிறது. இந்த ஆண்டுதான் அதிலிருந்து விடுபட்டு வெளியே வந்து, காலநிலை மாற்றம் முக்கிய பிரச்சினை என்று முதன்முறையாக கூறியுள்ளது. இது மிகப் பெரிய முன்னெடுப்பு.

தமிழில் : ஆதி வள்ளியப்பன்
நன்றி: டவுன் டு எர்த்

Pin It

thirstyமனிதர்களிலும், விலங்குகளிலும் காணப்படும் இயல்பூக்கம் தாகம் எனப்படும். தாகத்தின் விளைவாக நாம் திரவங்களைத் தேடுகிறோம். உடலில் உள்ள திரவத்தின் சமநிலையை பராமரிப்பதற்கான கருவியாக தாக உணர்வு செயல்படுகிறது.

உடலில் திரவப்பொருட்கள் குறையும்போதோ, உப்பின் அடர்த்தி அதிகமாகும்போதோ தாக உணர்வு ஏற்படுகிறது. இதுபோன்ற நிகழ்வுகளின்போது மூளை வேகமாக செயல்பட்டு தாக உணர்வை ஏற்படுத்துகிறது.

உடலில் தொடர்ந்து நீரிழப்பு இருக்குமானால் அது பலவகையான சிக்கல்களின் அறிகுறியாக இருக்கலாம். மேலும் நரம்பியல் கோளாறுகளின் விளைவாக மூளையின் செயல்திறன் குறையும்; சிறுநீரக பாதிப்புகள் ஏற்படும். அளவுக்கதிகமான தாக உணர்வை polydipsia என்கிறோம். அதிகப்படியாக சிறுநீர் போதல் polyuria எனப்படும். இது நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

தாக உணர்வு மையநரம்பு மண்டலத்தினால் உணரப்படுகிறது. extracellular thirst என்பது உடலில் நீரின் அளவு குறைவதால் ஏற்படும் தாக உணர்வு ஆகும். intracellular thirst என்பது உடலில் உப்பின் அடர்த்தி அதிகரிப்பதால் ஏற்படும் தாக உணர்வு ஆகும்.

இரண்டுவகையான தாக உணர்வுகளுமே மூளையின் மைய நரம்புமண்டலத்தால்தான் உணரப்படுகின்றன.

அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி

Pin It