மழை சேரும் வான் வெளியில்

பறவைகளைக் கொன்று

ரத்தக்களரியில்  எருமைகளைப் பூட்டுகிறாய்

மரணங்களை  அறுவடை செய்த

கைகளில் வீசும் மாமிச வாடையுடன்

புரள்கிறது  உன் களவின் சிரிப்பு

நிலத்தை பலிபீடமாக்கி நடத்திய

கொலைகளின் இருட்பிரதேசங்களை

விழிகளுக்குள் அடைத்துக் கொண்டவன் நீ

யாருமற்ற  நிலமெங்கிலும் நீ நிகழ்த்திய

மரணங்கள்  அலையும்

கொடூரத்தின் கணம் கடக்க முடியாததாய்

உறைந்திருக்கின்றது

எண்ணிலடங்கா பெயர்களை

கொலைப் பட்டியலாக்கிவிட்டு

எதுவுமே நடவாததைப் போல

ஏர் பிடித்து மகிழ்கொண்டாடுகிறாய்

உயிர்களை  வாழ வைக்கும் உழவனின்

கலப்பை

உயிர்களை வீழ வைத்த உன்னிடம் ?

தார்க்குச்சியை  சுழற்றி

எருமைகளை  மிரட்டும் கொல்லேர்க்காரனே!

மிரண்ட எருமைகளும்

திரும்பும்  நாளொன்று மீளும்

சகதி பூசப்பட்ட  உன் திருமேனியை

அப்போது

யார் காணக்  கூடும்?

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.