“கருஞ்சட்டைக் கலைஞர்” என்ற தலைப்பில் திருச்செங்கோட்டில் 30.09.2018 ஞாயிறு அன்று நடந்த கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை.

தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு உருவான பிறகுதான் வங்காளத்தில் இந்தி எதிர்ப்பு பேசப்பட்டது. மராட்டியத்தில் பேசப்பட்டது. இன்னும் சொல்லப்போனால் ஒற்றுமையில் ஒரே இந்தியா பேசிய பல தலைவர்கள் இந்தியை எதிர்த்துப் பேசியிருக்கிறார்கள்.

அம்பேத்கர் கூட இதைத்தான் பேசி யிருக்கிறார். தென்னிந்தியாவும், வட இந்தியாவும் வேறு என்று அம்பேத்கர் பேசுகிறார். ஆரம்பத்தில் அரசியல் சட்டம் எழுதப்பட்டபோது ஒன்றுபட்ட இந்தியாவைப் பற்றி அவர் பேசியிருக்கலாம். அந்த அரசியல் சட்டம் அவர் மட்டுமே எழுதியதல்ல. எல்லோரும் இணைந்து எழுதியது. அதை சட்ட சொற்களால் வரைந்தவர் மட்டும்தான் அம்பேத்கர். சில கருத்து மாற்றங்களை அவரால் செய்திருக்க முடியும், அவ்வளவுதான். அதற்குமேல் எதுவும் பெரிதாக செய்திருக்க முடியாது. ஆனால் 1955ஆம் ஆண்டில் மொழிவழி மாநிலங்களைப் பற்றி அவர் எழுதுகிறபோது தென்னிந்தியாவும், வட இந்தியாவும் சேர்ந்தே இருக்க முடியாது என்றுதான் சொன்னார். எப்படி சேர்ந்திருக்க முடியும் என்ற கேள்வியையும் அவர் முன்வைத்தார்.

தென்னிந்தியாவுக்கும், வட இந்தியாவுக்கும் உள்ள வேறுபாடுகளை அவர் சொன்னார். 1.தென்னிந்தியர்கள் கல்வியில் முன்னேறியவர்கள். வட இந்தியர்கள் கல்வியில் பின்தங்கியவர்கள். 2 .வட இந்தியர்கள் பிற்போக்கான சிந்தனையாளர்கள், மூட நம்பிக்கையாளர்கள். ஆனால் தென்னிந்தி யர்கள் பகுத்தறிவுவாதிகள். 3. வட இந்திய ர்களின் பண்பாடு பழங்காலப் பண்பாடு. ஆனால் தென்னிந்தியர்கள் புதுமையை விரும்புபவர்கள். எனவே எப்படி இரண்டு பேரும் சேர்ந்திருக்க முடியும் என்று அம்பேத்கர் கேட்டார். அதற்கு தீர்வையும் அவரே சொன்னார்.

அதில் ஒரு தீர்வாக இந்தியைத் திணிக்காதீர்கள் என்று சொன்னார். இந்தி ஆட்சிமொழி என்று அரசியல் சட்டத்தில் எழுதியவரும் அவர்தான். 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியைத் திணிக்காதீர்கள் என்று பேசியவரும் அவர்தான். இந்திக்காரர்களே நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஒரு ஓட்டு வித்தியாசத்தில்தான் உங்கள் இந்தி ஆட்சிமொழியானது என்றும் சொன்னார். அரசியல் நிர்ணய சபையானாலும் சரி அல்லது ஆட்சிமொழிக் குழுவிலானாலும் சரி ஒரு ஒரே வாக்கில்தான் இந்தி வெற்றிபெற்றது. ஒரு ஓட்டில் வெற்றி பெற்ற நீங்கள் பெரும் வெற்றிடையந்ததாகக் கருதினீர்களேயானால் இந்தியாவை உடைப்பதற்கு நீங்கள் காரணமாக இருப்பீர்கள் என்று எழுதினார்.

அடுத்து, ராஜாஜியுடன் நடந்த விவாதத்தைக் குறிப்பிட்டு  மற்றொன்றையும் எழுதினார். “இந்தியா முழுவதும் ஒரே ஒன்றியமாக இருக்க முடியாது. தென்னிந்திய மாநிலங்களின் ஒன்றியம் என்று ஒன்று அமைக்கப்பட வேண்டும். வட இந்திய மாநிலங்களின் ஒன்றியம் என்று ஒன்று அமைக்கப்பட வேண்டும். தென்னிந்திய மாநிலங்கள் சேர்ந்து ஒரு கூட்டமைப்பாகவும் (Federation of Southern States), வட இந்திய மாநிலங்கள் சேர்ந்து கூட்டமைப்பாகவும் (Federation of Northern States) அமைத்து, இரண்டையும் சேர்த்து சம வாக்குரிமை அளித்து இந்திய பெருங் கூட்டமைப்பை (Confederation of India)  உருவாக்க வேண்டும்” என்றார் அம்பேத்கர்.

இதை 1955ஆம் ஆண்டு டிசம்பரில் எழுதினார். 1956ஆம் ஆண்டில்தான் மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. தென்னிந்தி யர்கள் மக்கள் தொகையில் குறைவாக இருக்கிறார்கள். வட இந்தியர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அதனால் இரண்டு பேருக்கும் சம வாக்குரிமை அளித்து இந்திய ஒன்றியத்தை அமைக்க வேண்டும் என்றார். ஆனால் இந்திய ஒன்றியம் அவ்வாறு அமைக்கப்படவில்லை. தென்னிந்திய மாநிலங் களுக்கு 120 இடங்கள்தான் இருக்கிறது. 534 இடங்களில் மீதம் இருக்கிற எல்லா இடங் களும் வட இந்திய மாநிலங்களுக்குத்தான் இருக்கிறது. நாடாளுமன்றம் அப்படியிருக்கக் கூடாது என்றார் அம்பேத்கர்.

அவர் சொன்ன Federation of Southern States என்பதைத்தான் அண்ணா அவர்கள் திராவிட நாடு என்று குறிப்பிட்டார். மொழிவழி பிரிந்து நிற்போம், இனவழி கூடியிருக்கிற, பிரிந்து செல்லும் உரிமையோடு கூடிய, சமதர்மக் கூட்டரசாக திராவிடக் கூட்டரசு இருக்கும் என்றார் அண்ணா. ஒரே நாடாக இருக்க வேண்டுமென்று அண்ணா கூறவில்லை. இதையேத்தான் அம்பேத்கரும் சொன்னார். அம்பேத்கர் சொன்னதற்கு எதுவும் பேசாதவர்கள் அண்ணா சொன்ன தற்கு மட்டும் குறுக்குசால் ஓட்டினார்கள். தெலுங்கர்கள், கன்னடர்கள் ஆட்சிக்கு வந்ததற்கு இவர்கள்தான் காரணம் என்று இப்போதும்கூட சொல்லுகிறார்கள். அவர்கள் அரசியல் புரிதலற்றவர்களாக இதைச் சொல்லுகிறார்கள்.

கலைஞரைப் பற்றி சொல்லும்போது, கருஞ்சட்டை என்பதைப்பற்றி சிலவற்றை சொல்லிவிட்டு நான் அடுத்ததற்கு போக வேண்டுமென்று விரும்புகிறேன். அண்ணா படைத்த இலக்கியங்களில் நாம் பேசாதது பல இருக்கிறது. இப்போது அரசியலைப் பற்றி, உலகமயத்தைப் பற்றி பேசிக் கொண் டிருப்பதைப் போல இந்திய மயத்தைப் பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்.

நம் தோழர்கள் உட்பட அனைவருக்கும் நான் பரிந்துரைப்பதும், கேட்டுக்கொள்வதும் அண்ணாவின் ’பணத்தோட்டம்’ என்ற நூலை நாம் படிக்க வேண்டும். அதற்கானத் தேவை இருக்கிறது. இப்பொழுது கூட தன்னாட்சி தமிழகம் என்ற அமைப்பு அந்த நூலை திரும்பவும் அச்சிட்டிருக்கிறார்கள். திராவிடர் கழகமும் அந்த நூலை வெளியிட் டிருக்கிறது. அந்த நூலில் இந்தியாவின் அரசியலை அண்ணா விளக்குகிற பாங்கு இன்றளவுக்கும் பொருத்தமாக இருக்கிறது என்பதைப் படித்தால் தெரியும். வங்கியின் பெயரால் வடவர்களால் சுரண்டப்படுகிற பணம், அரசின் பேரால் சுரண்டப்படுகிற பணம், சுரண்டப்படுகிற தமிழகத்தின் கனிம வளம் என எல்லாவற்றைப் பற்றியும் விவாதிக்கிற ஒரு நூல். இது பொருளாதார ரீதியாக விவாதிக்கிற நூல். பண்பு ரீதியாகத் தெரிந்துகொள்ள ’ஆரிய மாயை’ அவரிட மிருந்து நாம் படிக்க வேண்டிய நூலாகும்.

ஆரிய மாயை என்பதை அவர் தொடங்கு கிறபோதே சொல்லுவார். 150 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்சு நாட்டிலிருந்து ஒருவர் இங்கு வருகிறார். அவர் இந்த நாட்டுச் சூழலைப் பார்க்கிறார். இங்குள்ள சூழலைப் பார்த்த அவர், இந்த நாட்டில் இந்த மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று கண்டு அதிர்ச்சி யடைகிறார். ஒரு கூட்டம் இங்கு இருக்கிறது. அந்தக் கூட்டம் எந்த உற்பத்தித் தொழிலிலும் ஈடுபடாமல், உற்பத்தியில் ஈடுபட்ட மக்கள் சம்பாதிக்கிற பணத்தை தங்களுடையதாக ஆக்கிக்கொண்டது மட்டுமில்லை மேலாண்மையையும், ஆதிக்கத்தையும் வைத்திருக்கிற கூட்டமாக அவர்களே இருக்கிறார்கள் என்றார். பார்ப்பனர்களை அவர் பார்த்ததைத்தான் இவ்வாறு கூறுகிறார். அதற்கான சரியான ஆங்கில வார்த்தைகளைச் சொல்லி விளக்கியிருப்பார். அதை அண்ணா மொழிபெயர்த்து இருப்பார்.

பேராசைப் பெருந்தகையே போற்றி

பேச நா இரண்டுடையாய் போற்றி

வஞ்சக வேந்தே போற்றி

என்றெல்லாம் அந்த நூலிலுள்ள ஆங்கில சொற்களை மொழிபெயர்த்து தமிழில் எழுதியிருப்பார்.

அண்மையில் கூட தொலைக்காட்சிகளில் பார்த்தோம். காந்தியை ஜின்னா இந்து தலைவர் என்று

சொன்னார் என ஒரு விவாத நிகழ்ச்சியில் ஒருவர் சொன்னார். ஆனால் அப்போதே நான் சொல்லவே இல்லை என்பார். இப்போதுதான் சொன்னாய் என்றால் நான் சொல்லவே இல்லை என்பார். அதுதான் 'பேச நா இரண்டுடையாய் போற்றி’.

(தொடரும்)

தொகுப்பு: ர.பிரகாசு

Pin It