ஜாதி ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்த தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசை வலி யுறுத்தி, திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சென்னை மற்றும் திருப்பூரில் காவல்துறையின் தீண்டாமை ஒழிப்பு அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தி தோழர்கள் கைதானார்கள். வேலூரில் கழக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உடுமலையில் சங்கர் - கவுசல்யா ஜாதி மறுப்பு இணையரை குறிவைத்து பொது மக்கள் முன்னிலையில் தேவர் ஜாதியைச் சார்ந்த சில வெறியர்கள் படுகொலை நடத்தினர். தலித் பொறி யாளர் சங்கர் பலியாகி விட்டார். கவுசல்யா பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். தமிழ்நாட்டில் ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுக்காமல் குறட்டை விட்டு உறங்கும் காவல் துறையின் தீண்டாமை ஒழிப்புப் பிரிவை சம்பவம் நடந்த இரண்டு நாள்களிலேயே முற்றுகையிடும் போராட்டத்தை கழகம் நடத்தியது.

திருப்பூரில் : 16.3.2016 அன்று கழக பரப்புரை செயலாளர் தூத்துக்குடி பால்.பிரபாகரன் தலைமையில் திருப்பூரில் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. காவல்துறை முற்றுகைக்கு அனுமதி மறுத்துவிட்ட நிலையிலும் முற்றுகைப் போராட்டம் தடையை மீறி எழுச்சியுடன் நடைபெற்றது.

திருப்பூர் துரைசாமி (பொருளாளர்), இரத்தினசாமி (அமைப்புச் செயலாளர்), முகில்ராசு (மாவட்ட செயலாளர்), நீதிராசு, (மாவட்ட தலைவர்), கோவிந்தராசு  (பல்லடம் நகரத் தலைவர்), திருப்பூர் அகிலன்,  சூரிய குமார் (சேலம் மேற்கு மாவட்டத் தலைவர்), வைரம் (நாமக்கல் மாவட்ட அமைப்பாளர்), சாமிநாதன் (நாமக்கல் மாவட்ட தலைவர்), சண்முகபிரியன் (ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர்), செல்வராஜ் (ஈரோடு மாவட்ட அமைப்பாளர்), குமார் (ஈரோடு புறநகர் மாவட்ட தலைவர்), வேணுகோபால் (ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர்), நேருதாஸ் (கோவை மாநகர செயலாளர்), நிர்மல்குமார் (கோவை மாவட்டச் செயலாளர்), ராமச்சந்திரன் (கோவை மாவட்டத் தலைவர்),  பன்னீர் செல்வம் (சூலூர் ஒன்றியத்தலைவர்), அன்னூர் முருகேசன் (திவிக), கிருஷ்ணன் (கோவை மாவட்ட பொருளாளர்), ரமேஷ் (நம்பியூர் ஒன்றியத் தலைவர்), மூர்த்தி (சத்தியமங்கலம் ஒன்றிய செயலாளர்), சரவணன் (நாமக்கல் மாவட்டசெயலாளர்), முத்துப்பாண்டி (நாமக்கல் மாவட்ட பொருளாளர்), அருண் (திருவள்ளுவர் நற்பணி மன்றம்), அருளானந்தம் (கோபி ஒன்றிய செயலாளர்), அரிதாசு (ஆனைமலை ஒன்றிய அமைப்பாளர்), ஆனந்த், விவேக் சமரன் (திவிக ஆனைமலை) ஆகிய 7 பெண்கள் உள்ளிட்ட 84 பேர் கைது செய்யப்பட்டு செங்குந்தர் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டு மாலை 7 மணிக்கு விடுவிக்கப் பட்டனர்.

சென்னையில் : சென்னையில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் மார்ச் 16 பகல் 11 மணிக்கு கடற்கரைச் சாலையில் கலங்கரை விளக்கம் அருகே முற்றுகைப் போராட்டத்துக்கு தோழர்கள் திரண்டனர். ஜாதி வெறிக்கு எதிராகவும், ஜாதிய அரசியலுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 100க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

50 பேர் கைதானார்கள். மாவட்ட தலைவர் ஈழவேந்தன், மாவட்ட செயலாளர் உமாபதி, நாகை மாவட்ட கழக செயலாளர் மகேஷ் உள்ளிட்ட கழகத் தோழர்களோடு இளம் தமிழகம் அமைப்பைச் சார்ந்த செந்தில், பரிமளா, ஜார்ஜ், அம்பேத்கர் சிறுத்தைகள் அமைப்பு சார்பில் ஜெயமணி, எம்.ஆர்.எப். தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த சேகர் ஆகியோரும் கைதானார்கள்.

மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த தோழர்களை ஒடுக்கப்பட்டோர் உரிமை இயக்கத்தைச் சார்ந்த தோழர்கள் சிவா தலைமையிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தோழர்கள் மாவட்ட துணைத் தலைவர் பகலவன் தலைமையிலும் சந்தித்து பாராட்டுகளை தெரிவித்தனர்.

நெமிலியில் : வேலூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக 20.3.2016 அன்று காலை 10 மணிக்கு நெமிலியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்வில், தூத்துக்குடி பால். பிரபாகரன் (பரப்புரைச் செயலாளர்), நெமிலி திலீபன், இரா.பா. சிவா, விழுப்புரம் அய்யனார் சங்கர், எப்.டி.எல். செந்தில் மற்றும் தோழமை அமைப்புகளைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

Pin It