தேர்தல் அரசியலில் ஈடுபடாத மக்கள் விடுதலைக்கு மக்களோடு மக்களாக இணைந்து செயல்படும் இயக்கங்களைக் குறி வைக்கிறது - நடுவண் ஆட்சி.

தமிர்நாட்டில் 11 இயக்கங்களைத் தடை செய்வது குறித்து பரிசீலிக்கிறார்களாம். அவர்களைப் பற்றிய தகவல்களை உளவுத் துறை சேகரித்து வருகிறதாம். ‘தமிழ் இந்து’ நாளேடு இப்படி ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறது.

தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை சீரழித்து சுற்றுச் சூழலை - மண் வளத்தைப் பாழக்கி வருகின்றன பன்னாட்டு நிறுவனங்கள். பார்ப்பனர்களின் அதிகாரக் கட்டுப்பாட்டில் செயல்படும் ஓ.என்.ஜி. நிறுவனம் ஆபத்தான திட்டங்களை அதிகாரத் திமிரோடு மக்களிடம் திணிக்கிறது.

மீத்தேன், ஹைடிரோ கார்பன், ஸ்டெர்லைட், அணுமின் நிலையம் என்று பல்வேறு பெயர்களில் திணிக்கப்படும் இந்தத் திட்டங்களின் ஆபத்துகளை அறிவியல் பார்வையில் - அதன் சுரண்டல் மோசடிகளை மக்களிடம் எடுத்துக் கூறி விழிப் புணர்வை ஏற்படுத்தும் இயக்கங்கள்தான் - தங்களின் உண்மையான எதிரிகள் என்ற நினைக்கிறது. பார்பபன - பனியா - பன்னாட்டுக் கூட்டுக் கொள்ளைக்காக அதிகாரத்தைப் பயன்படுத்தும் ‘இந்துத்துவா’ நடுவண் ஆட்சி.

தடை செய்யப்பட வேண்டியது மக்ககளின் வாழ்வுரிமைக்கு எதிரான ஆபத்தான திட்டங்களையா? அல்லது அதை மக்களிடம் எடுத்துச் சொல்லி விழிப்புணர்வூட்டும் இயக்கங்களையா? தமிழ்நாட்டில் தொலைக்காட்சிகளில் பாதுகாப்பாக அமர்ந்து கொண்டு திமிர் நிறைந்த சொற்கள் - உடல்மொழிகளோடு பா.ஜ.க. பேச்சாளர்கள் மோடி ஆட்சியின் ஒவ்வொருமக்கள் விரோத செயல் பாட்டையும் நியாயப்படுத்துகிறார்கள். எதிர்த்துப் பேசுவோரை மிரட்டுகிறார்கள்.

அதே திமிர்ப் பேச்சுக்களை ‘அவாள்’களால் தமிழ்நாட்டில் எந்த ஊரிலும் மேடைப் போட்டுப் பேச முடியுமா என்று சவால் விட்டுக் கேட்கிறோம். இவர்கள் மக்களின் சமூகத் தடைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள்.

மக்களால் அன்னியப்பட்டு, அவர்களின் கொதிப்புக்கு உள்ளாகியிருக்கும் கூட்டம், தமிழ்நாட்டில் மக்களுக்காகக் களத்தில் நிற்கும் இயக்கங்களைத் தடை செய்தால், பா.ஜ.க.வின் மீதான மக்கள் விதித்துள்ள சமூகத் தடை மேலும் வலிமைப் பெறவே செய்யும்.

Pin It