கெடுவான் கேடு நினைப்பான் என்பது ஒரு பழமொழியாகும். இது இரு கக்ஷியாரும் ஒப்புக் கொள்ளக் கூடிய பழமொழியாகும்.

எந்தெந்த இரு கக்ஷியார் என்றால் பஞ்சேந்திரியங்களுக்குப் புலனாவதைத்தவிர வேறு வஸ்து கிடையாது என்கின்ற முடிவைக் கொண்ட “மெடீரியலிஸ்டு” (Materialist) என்னும் கக்ஷியாரும், பஞ்சேந்திரியங்களுக்கும் எட்டாத ஒரு வஸ்து இருக்கிறது என்கின்ற முடிவைக் கொண்ட “ஸ்பிரிச்சுவலிஸ்ட்டு” (Sprituvalist) என்னும் கக்ஷியாரும் ஆகிய இரு கக்ஷிக்காரர்களும், அதாவது “நாஸ்திகர்களும்” “ஆஸ்திகர்களும்” ஆகிய இரு கக்ஷிக்காரர்களும் ஒப்புக் கொள்ளக்கூடிய பழமொழியாகும்.

இந்தப் பழமொழியின் கருத்து என்னவென்று தெரிந்திருக்கின்றோ மென்றால், அன்னியருக்குக் கேடு செய்ய வேண்டுமென்றோ, கேடு உண்டாக வேண்டும்மென்றோ நினைப்பவன் கெட்டுப் போவான் என்பதாகும்.

இதை ஆஸ்திகர்கள் எந்த முறையில் ஒப்புக்கொள்ளுகின்றார்கள் என்றால், மனிதர்களில் ஒவ்வொருவருடைய நடவடிக்கைகளையும், எண்ணங்களையும் தனித்தனியே கவனித்து அந்தந்த நடவடிக்கைக்கும், எண்ணத்துக்கும் தகுந்த பலனைக் கொடுப்பதற்கு சர்வ சக்தியும், சர்வ வியாபகமும் உள்ள கடவுள் என்பதாக ஒரு ஜீவனோ ஒரு சக்தியோ உண்டு என்றும், அது பிறருக்குக் கேடு செய்தவனையும், கேடு நினைத்தவனையும் அறிந்து அப்படிப்பட்டவனுக்குத் தண்டனையாக கெடுதி செய்வதனால் அவன் கெடுவான், கெட்டுப்போவான் என்றும் கருதுகின்றார்கள்.

periyar 392நாஸ்திகர்கள் அதாவது சர்வ சக்தியும், சர்வ வியாபகமும் உள்ள கடவுள் என்பதாக ஒரு ஜீவனோ, அல்லது ஒருவஸ்துவோ, ஒரு ஆவியோ இருந்து கொண்டு மனித சமூகத்தின் ஒவ்வொரு மனிதனின் நடவடிக்கைகளையும், எண்ணங்களையும் கவனித்து அதற்கேற்ற பலன்களை அவரவர்களுக்குக் கொடுத்து வருகிறார் என்பதை முழுதும் நம்பாதவர்களின் வர்க்கம் இந்த கெடுவான் கேடுநினைப்பான் என்கின்ற பழமொழியை எப்படி ஒப்புக் கொள்ளுகின்றார்கள் என்றால், சமூக வாழ்வில் பிறருக்குக் கேடு செய்கின்ற மனிதனும் கேடு நினைக்கின்ற மனிதனும் பிற மனிதர்களால் கேடு செய்யப்படுவதும் மற்றும் இவனது கெட்ட செய்கையைக் கண்ட கேட்ட பிறரால் வெறுக்கப்படுவதும், துவேஷிக்கப்படுவதும் பெரிதும் சகஜமான சம்பவங்களல்லவா? ஆகவே பிறருக்குக் கேடு செய்ய நினைத்து, பிறரால் வெறுக்கப் படவும் துவேஷிக்கப்படவும் ஆன மனிதன் கேட்டிற்கு ஆளாவதும் சகஜமாகும்.

“பெருமையும் சிறுமையும் தான் தர வருமே” என்ற பிரத்தியக்ஷ பழமொழிப்படியே “நன்மையும் தீமையும் தான் தர வருமே” என்பதும் யாவராலும் ஒப்ப முடிந்த விஷயமாகும்.

ஆனால் இந்த வியாசத்தில், இப்பழமொழிக்கு நாஸ்திக சம்பிரதாய மானகருத்தை ஆதாரமாய் எடுத்து கொள்ளாமல் ஆஸ்திக சம்பிரதாயமான கருத்தை ஆஸ்திகர்கள் என்பவர்களே சரியானபடி ஏற்றுக் கொள்ளுகின்றார்களா என்ற பிரச்சனையை முக்கியமாய் வைத்து வேடிக்கை முறையில், இராமாயணத்தின் நடவடிக்கை எப்படிப்பட்டது; அதைப் பிறர் எப்படி மதிக்கிறார்கள் என்கின்றவைகளை எடுத்துக் காட்டவும், இந்தப் பழமொழி ஆஸ்திக சம்பிரதாயப்படி பார்ப்பவருக்கு இராமாயணம் என்பது ஒரு படிப்பினையாகும் என்பதைக் காட்டவும் எழுதப்பட்டதாகும்.

“கெடுவான் கேடு நினைப்பான்”

இராமாயண புராணத்தின் கதைப்படி “தசரதனும், இராமனும், பரதனுக்குக் கேடு நினைத்ததால் கெட்டார்கள்” என்பது இவ்வியாசத்தின் கருத்தாகும்.

இராமாயணக் கதைப்படிக்கு தசரதனுக்கு நான்கு ஆண்பிள்ளைகள். இவற்றுள் ராஜ்ஜியப் பட்டமானது பரதனுக்குச் சொந்தமானது. எப்படி எனில் பரதனுடைய தாயாராகிய கைகேயியை தசரதன் மணக்க ஆசைப்பட்டு, கேகய ராஜனிடம் சென்று அவனது பெண்ணான கைகேயியை தனக்குத் தரும்படி கேழ்க்க கேகய மன்னன், தசரதனின் யோக்கியதையையும் நடத்தையையும் தெரிந்து “உனக்கு ஏற்கனவே பல ஆயிரக்கணக்கான மனைவிகள் இருப்பதால் நான் என் மகளை உனக்குக் கொடுக்கமுடியாது” என்று மறுத்து விட்டான். இதற்குத் தசரதன், அந்தப்பெண்ணின்மேல் உள்ள ஆசையால் கேகய மன்னனிடம் வணங்கி “அய்யா எனக்கு எத்தணை மனைவி கள் இருந்தாலும் உனது மகளையே நான் பிரதான மனைவியாய்க் கொள்வேன். உனது மகள் வயிற்றில் பிறக்கும் பிள்ளைக்கே ராஜ்ஜிய பட்டாபிஷேகம் செய்வேன்” என்று வாக்குத் தத்தம் செய்துகொடுத்து கைகேயியை மணந்து கொண்டான்.

அந்தப்படி மணந்துகொண்ட தசரதன் கைகேயியையே பிரதான நாயகியாக அனுபவித்து வந்து அவள் மூலம் ஒரு ஆண் குழந்தையையும் (பரதனை) பெற்று, அது வளர்ந்து பெரியதாகி பட்டத்துக்கு யோக்கியமானவுடன் தசரதன் கெட்ட எண்ணங்கொண்டு, அதாவது ராஜ்ஜிய பட்டாபிஷேகத்தைப் பரதனுக்குக் கொடுக்காமல் இராமனுக்குக் கொடுக்க வேண்டுமென்று நினைத்து விட்டான்.

இந்தவிதமான கெட்ட எண்ணம் தசரதனுக்கு உண்டாகும் படியாகவே இராமனும், மிக்க தந்தரமாக யோக்கியன் போலவும், தகப்பனாருக்கு மிகவும் வேண்டியவன் போலவும் நடந்து வந்ததுடன், தகப்பனாரின் ஆசைக்கு ஏற்ற வண்ணமாகவும் நடந்து வந்திருக்கிறான்.

இருவரின் கெட்ட எண்ணமும் முதிர்ந்து, கடைசியாக ஒருநாள், பட்டத்துக்கு (பரதன் வாக்குறிதிப்படி) உரியவனாகிய பரதனை அவனது பாட்டனார் ஊருக்கு அனுப்பிவிட்டு, அவன் இல்லாத சமயம் பார்த்து திடீரென்று ஒரேநாளில் இராமனுக்கு பட்டாபிஷேகம் செய்வதாய் ஏற்பாடு செய்து அவசர அவசரமாய் (திருட்டுத்தனமாய்) பட்டாபிஷேக காரியங்கள் செய்ய சூக்ஷிசெய்துவிட்டான்.

ராஜ்ஜிய பட்டமானது பரதனுக்கு வெகு காலத்துக்கு முந்தியே தன் தகப்பனால் வாக்குக் கொடுக்கப்பட்டு விட்டாய் விட்டது என்பது இராமனுக்கு தெரிந்திருந்தும் அதைச் சிறிதாவது இராமன் லக்ஷியம் செய்து தகப்பனிடம் மறுத்துக் கூறாமலும், அதுதான் போகட்டுமென்றாலும், சரி யொத்த சகோதரனான பரதன் ஊரில் இல்லாத போது இப்படிப் பட்டதொரு முக்கியமான காரியத்தைச் செய்வது யோக்கியமான காரியமாகாது என்றாவது தகப்பனுக்கு புத்திகூறாமலும், தான் புத்தி கூறியும் தகப்பன் ஒரு சமயம் இராமனின் யோசனையை ஒப்புக்கொள்ளமாட்டேன் என்று சொல்லி இருந்த போதிலும் கூட “பட்டத்துக்கு உரியவனும் எனது அன்புள்ளவனு மான சகோதரன் பரதன் இல்லாமல் இப்படிப்பட்ட காரியத்திற்கு நான் சம்மதிக்க மாட்டேன்” என்று ராமன் ஒரு வார்த்தையாவது சொல்லாமலும், ஆளில்லாத சமயம் பார்த்து திடிரென்று தகப்பன் சொன்னவுடன் தானும் சம்மதித்து பேராசையுடன் பட்டம் கட்டிக்கொள்ள இசைந்தான் என்றால், இவ்விருவரும், அதாவது தசரதனும் ராமனும் பரதனுக்குக் கேடு நினைத்தார் கள் என்ற முடிவின் பேரில் ஆஸ்திகர்கள் கொள்கைப் படியே, கேடு நினைத்தவர்கள் கெடாமல் இருக்க முடியாது என்பதை ஆஸ்திகர்கள் எல்லோரும் ஒப்புக் கொண்டு தான் ஆகவேண்டும்.

அன்றியும் இந்த சூக்ஷியை அறிந்த கைகேயியானவள், அதாவது பரதனுடைய தாயாரானவள், தன் புருஷனான தசரதனுக்கு பல விதத்தில் எடுத்துச் சொல்லியும், பிடிவாதம் செய்தும், ஒன்றும் கேழ்க்காமல் தசரதன் இவ்வுண்மைகளை மறைத்துக் கைகேயியைக் கெட்டவளாக்கி உலகம் முழுவதும் கைகேயியை நிந்திக்கும்படி செய்து தன் காரியத்தைச் சாதித்துக் கெள்ள முயற்சிக்கிறான்.

இச்சூக்ஷியும் பிடிவாதமும் எல்லாம் இராமன் அறிந்திருந்தும், பட்டா பிஷேகத்தை ஒத்தி வைக்கக்கூட தகப்பனுக்கு யோசனை சொல்லாததால் கடைசியாக, கேடு நினைத்தவர்கள் கெட வேண்டியதாகவே நேர்ந்து விட்டது.

அதாவது எவ்விதம் என்றால் தசரதன் தனது சூக்ஷி வெளிப் பட்டு விட்டதால் இனி தான் அரசனாய் இருந்து ஆக்ஷி புரிவதில் உலகம் தன்னை மதிக்காது என்றும் இகழும் என்றும் கருதி தற்கொலை செய்து கொண்டு இறக்க வேண்டியவனேயாகி விட்டான்.

இராமனுடைய பேராசையையும் சூக்ஷியையும் நன்றாய் அறிந்த கைகேயி இராமனை ராஜ்ஜியத்திற்குள் இருக்க விட்டால் பரதனுக்கு ஏதாவது கேடுசெய்துவிடுவான் என்று கருதி ராஜ்ஜியத்தை விட்டு வெளியேறும்படி செய்துவிட்டாள். ஆனால் இராமன் இந்தப் பழியுடன் வேறு எங்கும் போய் வாழ்வதற்கு முடியாமல் காட்டிற்குப் போக வேண்டியதாய் முடிந்து விட்டது. காட்டிற்குப் போனவனும் அங்கும் சும்மா இராமல், மறுபடியும் எப்படியாவது, அயோத்திக்கு வந்து அரசாள வேண்டும் என்கின்ற ஆசையை வைத்துக் கொண்டு அதற்கு வேண்டிய சூக்ஷிகளை எல்லாம் செய்து பரதனையும் மோசம் செய்து தனது செருப்பைக் கொடுத்தனுப்பி அந்த செருப்பை வைத்து தன் பேரால் அரசாள வேண்டும் என்று சொல்லி ராஜ்ஜிய சுதந்திரத்தை தனக்கு ஆக்கிக் கொள்ள நினைத்ததால் காட்டிலும் இராமனுக்குப் பல தொந்திரவுகள் ஏற்பட்டதோடு, இராமனால் கைகேயிக்கு எவ்வளவு கெட்ட பேர் ஏற்பட்டதோ அதைவிட அதிகக் கெட்ட பேரும் இழிவும் இராமன் பெண்ஜாதியான சீதைக்கும் ஏற்பட்டது.

சீதையை இராவணன் தூக்கிகொண்டுபோனதும், இராமன் இராவணனை சூழ்சியாய்க் கொன்றதும், எப்படியென்னால், இராவணனைக் கொன்றுவிட்டால் அந்தப் பட்டம் இராவணன் தம்பியாகிய விபீஷணனுக்குக் கொடுப்பதாகவும், வாலியைக் கொன்று அந்தப் பட்டத்தை வாலியின் தம்பி சுக்ரீவனுக்குக் கொடுப்பதாகவும் இப்படியெல்லாம் தில்லுமல்லும் செய்து ஜெயித்துத் தன் பெண்ஜாதியை (சீதையை) அழைத்துவந்ததும், அவளை இராமன் வைத்து வாழ முடியாமல் இராமனாலேயே சீதைக்கு விபசார தோஷம் கற்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டும், பிறகு அதைக்கூட லக்ஷியம் செய்யாமல் சேர்த்துக் கொண்டும், அப்படி சேர்த்துக் கொண்டதும் விபசார தோஷத்தைப் பொருட்படுத்தாமலோ, அல்லது விபசார தோஷத்துக்கு சீதை ஆளாகவில்லை என்ற பரிசுத்த எண்ணத்தோடோ அல்லாமல், தான் பட்டாபிஷேகம் செய்து கொள்ளும்போது பெண்ஜாதி இல்லாமலும், அல்லது பெண்ஜாதியை விபசார தோஷத்திற்காக வெளிப்படுத்திவிட்ட இராமன் என்கின்ற பழியுடன் இருக்ககூடாது என்றும் கருதித் தனக்குப் பட்டாபிஷேகம் ஆகும்வரை, கூட வைத்திருப்பதுபோல் பாசாங்கு செய்து, பட்டாபிஷேகம் ஆனபின் சீதையினது கர்ப்பத்தைச் சந்தேகப்பட்டு தானாய் தள்ளினதாய் இருக்கக் கூடாது என்று கருதி அதற்கும் ஒரு சூழ்ச்சி செய்து, அதாவது சீதையின் கர்ப்பத்தைப் பற்றி ஏதோ ஓர் வண்ணான் குற்றம் சொன்னதாக ஏற்பாடு செய்து, ஏனென்றால் அந்தப்புரத்தில் ஸ்திரீகள் கர்ப்பவதியாய் இருக்கும் சேதி வெளியில் முதல் முதல் வண்ணார்களுக்குத் தான் தெரியுமாதலால் அந்த வண்ணான்தான் சொன்னான் என்றால் உல கோரும் சீதையும் நம்புவார்கள் என்று அவன் மீது பழிபோட்டு, பெண் ஜாதியை கர்ப்பத்துடன் காட்டுக்கு அனுப்ப வேண்டியதாகி, காட்டில் அந்தம்மாள், (சீதை) இராமன் இல்லாமலேயே “ஒட்டைக்கூத்தன் பாட்டிற்கு இரட்டைத் தாப்பாள்” என்பதுபோல் மற்றொரு பிள்ளையும் பெற்றுக் கொள்ள நேர்ந்து, அந்த இரண்டு பிள்ளைகளாலேயே இராமன் யுத்தத்தில் தோல்வி அடைந்து, கடைசியாக இவ்வளவு வியாகூலங்களுடனும், கஷ்டங்களுடனும், பழிகளுடனும் இராமன் சாக வேண்டியதாக ஏற்பட்டது.

இராமன் என்றையதினம் பரதனை ஏய்த்து ராஜ்ஜியப் பட்டாபிஷேகம் பெற வேண்டுமென்று நினைத்தானோ, அன்றுமுதல் சாகும்வரை துக்கத்தையும், அவமானத்தையும், கஷ்டத்தையுமே அதிகமாய் அடைந்தானென்றுதான் சொல்ல வேண்டும்.

ஆகவே “கெடுவான் கேடு நினைப்பான்;” என்னும் பழமொழியை ஆஸ்திக தர்மப்படி நம்புகின்றவர்கள், இராமாயணக் கதையை இப் பழமொழிக்கு ஒரு உதாரணமாய்க் கொள்ள ஒப்புக் கொள்ள வேண்டும். அப்படிக் கில்லாவிட்டால் இக்கேடு நினைத்த தசரதன், இராமன் இருவர்களும் ஏன் கேடு அடையவில்லை என்பதற்குச் சமாதானம் சொல்ல வேண்டும். தசரதனும் இராமனும் கேடு நினைக்கவில்லையென்றால், கதையில் உள்ளபடியான கேடுகளும், துன்பங்களும், தொல்லைகளும் அவர்களுக்கு ஏன் ஏற்பட்டன வென்பதற்காவது சமாதானம் சொல்லியாக வேண்டும்.

(குடி அரசு - கட்டுரை - 12.11.1933)

Pin It