திரு. சத்தியமூர்த்தி சாஸ்திரி அவர்கள் தற்காலம் ஆலோசனையிலும் கமிட்டி விசாரணையிலும் இருந்து வரும் குழந்தை விவாகத் தடை மசோதாவைக் கண்டித்து ஒரு “ஸ்ரீமுகம்” வெளியிட்டிருக்கின்றார். அதை “சுதேசமித்திரன்” பிரசுரித்துள்ளபடி மற்றொரு பக்கத்தில் எடுத்துப் போட்டிருக்கின்றோம். அதன் காரண காரியங்களைப் பற்றி ஆராயுமுன் திரு. சத்தியமூர்த்தி யார் என்பதையும், அவர் எந்த முறையில் வெளிப்படுத்தியிருக்கின்றார் என்பதையும் முதலில் கவனிப்போம்.

periyar at his last speechதிரு. சத்தியமூர்த்தியை அவருடைய தனித்த ஹோதாவில் ஒரு சாதாரண மனிதர் என்பதாகச் சொல்லிவிடலாமானாலும் அவருக்கு இம் மாதிரியான ஸ்ரீமுகங்கள் வெளியிட சந்தர்ப்பங்கள் அளித்ததும் அந்த ஸ்ரீமுகங்களை மக்கள் கவனிக்க நேர்ந்ததும், சில விஷயங்களிலாவது அவர் இந்திய மக்கள் பிரதிநிதி என்கின்ற தன்மை அடைந்திருக்கிறார் என்பதே. அதாவது “தேசீய அரசியல்” இயக்கம் என்று சொல்லப்படுவதில் ஒரு குறிப் பிட்ட மனிதராகவும், சென்னை சட்டசபை என்பதில் ஜனப்பிரதிநிதி அங்கத்தினராகவும், அதிலும் படித்த மக்களின் பிரதிநிதியாகவும், அதாவது யூனிவர்சிட்டி பிரதிநிதியாகவும், சென்னை முனிசிபாலிட்டியின் ஒரு அங்கத்தினராகவும், மற்றும் பொது ஜனசேவை செய்கின்றவர் என்று சொல்லிக் கொள்ளும் கூட்டத்தில் சேர்ந்தவராகவும் இருக்கின்றார் என்பதே. அன்றியும், தன்னை ஒரு சீர்திருத்தக்காரர் என்றும் மதம், சமூகம் முதலிய வைகளில் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டியது அவசியம்தான் என்றும் சொல்லிக் கொள்பவர்.

எனவே, இப்படிப்பட்ட ஒருவர், குழந்தைகள் புருஷன் பெண்ஜாதியான வாழ்வு நடத்தாதிருப்பதற்கும், குழந்தைகள் தங்கள் குழந்தைப் பருவம் மாறாததற்கு முன்பே பிள்ளை பெறும்படியான நிலைமையை உண்டாக்காமல் இருப்பதற்கும், மற்றும் மனித சமூகத்தின் அறிவு, சரீர வளர்ச்சி, பலம் முதலியவைகள் விர்த்தி அடைவதற்கும் அவசியமானதான மேல்கண்ட குழந்தை விவாகத் தடுப்பு மசோதா என்பதை எதிர்த்து போராட முன்வந்து அதற்கு ஆதாரமாக பெரிதும் மதசம்மந்தமான ஆnக்ஷபனைகளையே எடுத்துக்காட்டி இருக்கிறார்.

இது மாத்திரமல்லாமல், மற்றும் இதுபோன்ற பல சீர்திருத்தங்களையும், மதத்தை சாக்காகக் கொண்டே ஆnக்ஷபித்து வந்திருக்கின்றார். இதற்கு உதாரணமாக இரண்டொன்றைக் குறிப்பிடுகின்றோம்.

அதாவது கொஞ்ச நாளைக்கு முன் சென்னை சட்டசபையில் திரு. முத்துலக்ஷிமி அம்மாளால் கொண்டுவரப்பட்ட சாமி பேரால் விபசாரத்திற்கு பொட்டுக் கட்டும் வழக்கத் தடுப்பு மசோதாவையும் மதத்தை சாக்காகக் கொண்டே தடுத்து நின்றதும் யாவருக்கும் தெரிந்ததாகும். அந்த சமயத்தில் திரு. சத்தியமூர்த்தி அய்யர் சொன்ன ஆnக்ஷபனை என்னவென்றால் பொட்டுகட்டுகின்ற வழக்கம் கேட்டைத் தரத்தக்க தானாலும் அதை நிறுத்தச் சம்மதிப்பது மதத்தில் பிரவேசிப்பதாகும் என்றும், இன்று பொட்டுக் கட்டுவதை நிறுத்த ஒப்புக்கொண்டால் நாளை மற்றொரு சீர்திருத்தம் வரும் என்றும், ஆதலால் அதற்கு சம்மதிக்க முடியாதென்றும் சொல்லி விட்டார்.

பிறகு சென்ற வாரத்தில், சென்னையில் நடைபெற்றுவரும் விபசாரங்களை தடுக்க ஒரு மசோதா கொண்டுவர முயற்சித்த போதும் இதுபோலவே தடைகல்லாய் நின்றதுடன் அவர் சொன்ன சமாதானம் என்னவென்றால், “விபசாரிகள் எவ்வளவுதான் ஒழுக்க ஈனமாக நடந்து கொண்டாலும் அவர்களும் நமது சமூகத்தார் அல்லவா? அப்படியிருக்க அவர்களின் விபசாரத் தொழிலை நிறுத்தி விட்டால் பிறகு அவர்கள் ஜீவனத்திற்கு என்ன செய்வார்கள்” என்று சொல்லி ஆட்சேபித்தாராம்.

இம்மாதிரியாகவே எவ்விதமான சீர்திருத்தங்கள் வந்த போதிலும் மதத்தின் பேராலும் சமூகத்தின் பேராலும் ஆnக்ஷபித்து அவைகள் நிறைவேற்றப்படாமல் போவதாயிருந்தால் பிறகு எந்த விதத்தில் தான் நமக்கு கதிமோட்சம் ஏற்படக்கூடும்? அன்றியும் பராசர் ஸ்மிருதியும் மனு ஸ்மிருதியும் நமது வாழ்க்கைக்கும் மதத்திற்கும் ஆதாரமென்பதை நாம் சகித்துக் கொண்டு அதைப் பின்பற்றுவதென்றால், அதை விட ஈன வாழ்க்கை வேறு எங்காவது ஏதாவது உண்டா என்று கேட்கின்றோம். இப்பேர்ப்பட்ட இந்துமதம் என்பதும் அதனுட்பிரிவுகள் என்பதான சைவ வைணவ முதலிய சமயங்கள் என்பதும், அதன் ஆதாரங்களான வேதம், சாஸ்திரம், ஸ்மிருதி, ஆகமங்கள் என்பவைகளும், நமது மோக்ஷ சாதனத்திற்கு ஏற்பட்டவை என்றும், உலகத்திலுள்ள மற்ற மதங்களுக்கெல்லாம் சிறந்தது என்றும் சொல்லிக்கொண்டு அச்சமயங்களைக் காப்பாற்ற வெளி வந்திருக்கும் வீரர்கள், ‘சுயமரியாதை இயக்கம் இந்து மதத்தைக் கெடுக்கின்றது, வைணவ மதத்தை வைகின்றது, சைவ சமயத்தை ஒழிக்கின்றது’ என்று ஊளையிட்டு கொண்டிருக்கின்றார்களே ஒழிய இம்மாதிரி சீர்திருத்தத்தைப் பற்றியாவது இதை எதிர்க்கும் ஆதாரங்களைப் பற்றியாவது கடுகளவு கவலையாவது கொள்ளுகின்றார்களா என்பதை பொது ஜனங்களை யோசித்துக் கொள்ளும் படி வேண்டிக் கொள்ளுகின்றோம்.

அன்றியும் மத சமயக்காரர்கள் என்பவர்கள் “சம்மந்தன் சமணர்களைக் கழுவேற்றினது பொய்யா மெய்யா? முதலைதான் உண்ட பாலகனை 14 வருஷம் வரை வயிற்றில் வளர்த்து வெளியில் கக்கினதை ஒப்புக் கொள் ளுவாயா? மாட்டாயா?” “ ராமன் கடவுளா மனிதனா” “ராவணன் யோக்கியனா? ராமன் யோக்கியனா?” “சிவன் பெரியவனா, விஷ்ணு பெரியவனா?” “விஷ்ணுவுக்கு வடகலை ராமமா, தென்கலை ராமமா?” “சூரியனுடைய ரதத்திற்கு எட்டு குதிரையா பதினாறு குதிரையா?” “விதி பெரியதா மதி பெரியதா?” இதுபோன்ற விசயங்களில் ‘மதபக்தி’யையும் அறிவு சக்தியையும் காண்பித்துக் கொண்டு “சமயத் தொண்டையும், தெய்வத் தொண்டையும்” செய்துகொண்டும், இம்மாதிரியான விஷயங்களிலெல்லாம் பார்ப்பனர்கள் சொன்னதே ‘தெய்வாக்கு’ என்பதாகவும், அதை மறுத்தால் தங்களுக்கு எந்தவித யோக்கியதையும் இல்லாமல் போய்விடும் என்று பயந்துகொண்டும் பாமர மக்களை மிருகங்களாக்கி விடுகின்றார்கள். ஆதலால் இம்மாதிரி மதமும் சமயமும் நமக்கு எதற்காக வேண்டும்? இவை மக்களுக்கு நன்மையளிக்கும் சமயமாகுமா? என்பதாக கேட்க ஆரம்பித்தால் அதை நாஸ்திகம் என்று சொல்லிவிரட்டியடிக்கப் பார்க்கின்றார்களே யொழிய மனிதத் தன்மை அறிவுத் தன்மை என்பதை ஒரு சிறிதும் காட்டுவதே கிடையாது.

தவிர திரு. சத்தியமூர்த்தி, “பால்ய விதவைகளின் கொடுமையையும் சிறு குழந்தைகள் பிள்ளை பெற்று தாயாகி விடுவதால் நேரிடும் கெடுதியை யும் நான் அறிவேன்” என்று கொடுமைகளையும் கஷ்டங்களையும் ஒப்புக் கொள்ளுகின்றார்.

ஆனால் கூடவே அதன் கீழ் “12 வயதுக்குள் பெண்களுக்கு கல்யாணம் செய்யாவிட்டால் பாபம் வரும் என்று பராசர் ஸ்மிருதியில் சொல்லி இருக்கின்றது” என்கின்றார். கொடுமையையும் கெடுதியையும் நீக்குவது பாபமாகுமானால் அந்தப் பாபத்திற்கு பயப்படவேண்டுமா? என்றுதான் கேட்கின்றோம்,.

அன்றியும் திரு. சத்தியமூர்த்தி ஆதாரம் காட்டும் பராசர் ஸ்மிருதியின் விவாகப் பிரகரணத்தில், “8 வயதுப் பெண்ணை விவாகம் செய்து கொடுத்தவன் சுவர்க்க லோகத்தையும், 9 வயதுப் பெண்ணை விவாகம் செய்து கொடுத்தவன் வைகுண்டத்தையும், 10 வயதுப் பெண்ணை விவாகம் செய்து கொடுத்தவன் பிரம்மலோகத்தையும் அடைகிறான்; அதற்கு மேற்பட்டு பெண்ணை விவாகம் செய்து கொடுப்பவன் ரௌரவாதி நரகத்தை அடைகின்றான்” என்று எழுதியிருக்கின்றது.

ஆனால், திரு. சத்தியமூர்த்தி “10 வயதுக்கு முன் கல்யாணம் செய்யும் வழக்கம் இப்போது நின்றுபோய்விட்டது” என்று சொல்லுகின்றார். இந்தப்படி, பார்த்தால் இப்போது பெண் பெற்றவர்கள் எல்லோரும் ரௌரவாதி நரகத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்று தானே சொல்லவேண்டும். எனவே இனி 16 வயதில் கலியாணம் செய்பவர்களுக்கு புதிதாக பாவம் ஏது என்று கேட்கின்றோம்.

தவிர திரு. சத்தியமூர்த்தி பயப்படுவதாக வேஷம் போடும் பராசர் ஸ்மிருதியின் யோக்கியதையை கவனிப்போம்.

“10 வயதுக்கு மேல்பட்ட பெண்ணுக்கு கலியாணம் செய்யாவிட்டால் ரௌரவாதி நரகத்தை அடைய வேண்டும்” என்று சொல்லும் அதே ஸ்மிருதியானது அதே ஸ்திரீகள் விஷயத்தில் சொல்லுவதென்னவென்றால், “ஸ்திரிகள் பூமிக்கு சமானமானவர்கள்; அவர்கள் குற்றம் செய்தால் தூஷிக் கக் கூடாது. அவர்கள் என்ன தவறுதல் செய்தாலும் அவர்களை விலக்கி விடக் கூடாது. சண்டாளன் வசித்த பூமியை எப்படி சில சுத்திகள் செய்து அதில் நாம் வசிக்கின்றோமோ, அது போல் ஸ்திரீகள் சண்டாள சம்பந்தம் வைத்துக் கொண்டாலும் அவர்களை சுத்தி பிராயச்சித்தம் செய்து ஏற்றுக் கொள்ளவேண்டும்” என்று சொல்லியிருக்கின்றது. அந்த பிராயச்சித்தம் என்னவென்று பார்ப்போனால் அதாவது “ஒரு பிராமண ஸ்திரீ தன் மனதறிந்து ஒரு சண்டாளனுடன் சம்மந்தம் வைத்துக் கொண்டால் சாந்திராயண கிருச்சிரம் செய்துவிட்டால் சுத்தியாகிறாள்” என்று சொல்லியிருக்கின்றது. இது பராசர் ஸ்மிருதி பிராயச்சித்த காண்டம் 7-வது அத்தியாயம் 23-வது சுலோகம்.

சாந்திராயண கிருச்சிரம் என்பது “கிருஷ்ண பட்சம் முதல் அமா வாசை வரையில் தினம் ஒரு பிடி சாதமாக குறைத்துக் கொண்டு வந்து ஒரு நாள் பட்டினி விரதமிருந்து, மறுபடியும் ஒவ்வொரு பிடி விருத்தி செய்து சாப்பிட வேண்டியது” இது 7-வது காண்டம் 2- வது சுலோகம்.

“ஒரு பிராமண ஸ்திரீ பாவசீலர்களான சூத்திரர்களால் அனுபவிக்கப்பட்டால் அவள் பிரஜாபத்திய கிருச்சிரம் செய்வதாலும் ருது ஆவதாலும் சுத்தி அடைகின்றாள்” என்று சொல்லுகின்றது (இது மேல்படி காண்டம் மேல்படி அத்தியாயம் 24-வது சுலோகம்)

பிரஜாபத்திய கிருச்சிரம் என்பது 3 நாள் காலையிலும் 3 நாள் மாலையிலும் புசித்து 3 நாள் யாசிக்காமல் வந்ததை புசித்து 3 நாள் உபவாச மிருத்தல். (இது பராசர் ஸ்மிருதி 7-வது காண்டத்தில் 9-வது அத்தியாயத்தில் சொல்லப்படுகின்றது.)

இதுவும் செய்வதற்கு கஷ்டமாயிருக்குமானால் 12 பிராமணர்களுக்கு சாப்பாடுபோட்டால் போதும். (இதுவும் மேற்படி அத்தியாயம்)

இன்னும் இதுபோலவே மகாபாதகம் என்று சொல்லும்படியான “குருபத்தினியைப் புணர்ந்தவன் ஒரு பசுவையும் எருதையும் பிராமண னுக்குக் கொடுத்தால் சுத்தனாகிறான்” (காண்டம் அ. சு. 13)

இன்னும் இதைவிட மகாபாதகமான அனேக காரியங்களுக்கும் ஒரு வேளை இரண்டு வேளை பட்டினி கிடப்பதும் பிராமணனுக்குக் கொடுப்ப துமே பிராயச்சித்தமாய்ச் சொல்லப்படுகிறது. அதிலும் பிராமணன் சூத்திரன் என்பதாகப் பிரித்து அதற்குத் தகுந்தபடி பிராயச்சித்தம் சொல்லப்பட்டி ருக்கின்றது. அதாவது “ஒரு வேதம் ஓதின ஒரு பிராமணன் ஒரு பசுவைப் புணர்ந்தால் ஒரு பசுவை பிராமணனுக்கு கொடுத்தால் சுத்தனாகிறான். இதே காரியத்தை ஒரு சூத்திரன் செய்தால் 4 பசுவையும், 4 எருதையும் பிராமணனுக்குக் கொடுத்தால் சுத்தனாகிறான்” என்று சொல்லுகிறது. ( ³ அத்தியாயம் 14வது சுலோகம் )

எனவே இப்பேர்ப்பட்ட காரியங்களுக்கெல்லாம் இவ்வளவு சுலபமாக பிராயச்சித்தம் சொல்லி இருக்கும்போது ஒரு பெண்ணை 12 வயது ஆண் பிறந்து கலியாணம் செய்வதால் ஏற்படும் பாபத்திற்கு மிகவும் சுலபமான பிராயச்சித்தம் தானே இருக்கக்கூடும். ஆதலால் பராசர் ஸ்மிருதியை கடவுள் வாக்கு என்றே நம்புகின்றவர்களுக்குக் கூட குழந்தை விவாகத்தடுப்பு மசோதாவில் பிரமாதமான கெடுதி ஒன்றும் வந்துவிடாது என்றே சொல்லுவோம். அதிகமான தண்டனை விதித்திருந்தாலும் அது ‘பாலும் பழமும் மாத்திரம் சாப்பிட்டுக் கொண்டு ஒரு வேளை பட்டினி கிடக்க வேண்டும்’ என்றுதான் இருக்கக் கூடும். ஆதலால் உண்மையானதும் அவசியமானதுமான சீர்திருத்தங்களை விரும்புகிறவர்கள் மதம், சமயம், சாஸ்திரம், சாமி என்கின்ற பூச்சாண்டிகளுக்கு ஒரு சிறிதும் பயப்படக் கூடாது என்பதற்காகவே இதை எழுதுகிறோம்.

(குடி அரசு - தலையங்கம் - 21.10.1928)

Pin It