மனிதப்பிறவி

பிறப்புரிமை என்பது யாருடைய பிறப்புரிமை என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். நான் எடுத்துக்கொண்டது மனிதனுடைய பிறப்புரிமை என்பது தான். தடைகள் என்பன மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட தடைகளைத்தான் “அரிது அரிது மானிடராய்ப் பிறத்தலரிது”  என்று பெரியோர்கள் சொன்னதாகச் சொல்வார்கள்.  நான் அதை ஒப்புக்கொள்ள முடியாததற்கு என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும்.  “கொடுமை கொடுமை மனிதராகப் பிறப்பது மிகக் கொடுமை” என்பது எனது தாழ்மையான அபிப் ராயம்.  உலகில் உள்ள ஜீவகோடிகளில் எல்லாவற்றினும் மனிதப்பிறப்பே மிகத் தாழ்ந்த பிறப்பு என்பதும் மனிதராகப் பிறப்பது மிகவும் கொடியது என்பதும் மனிதனைப்போல் அடிமை, உலகில் வேறு ஜீவன்கள் இல்லை என்பதும் என் அபிப்பிராயம்.  மனிதனைத் தவிர மற்ற ஜீவகோடிகள் எவ்வ ளவோ சந்தோஷத்துடனும் அடிமை உணர்வில்லாமலும் சுதந்திரமாய் வாழ்வதை நாம் பார்க்கிறோம். அவைகளில்  சிலவற்றிற்கு கஷ்டமும் அந்நியரால் கஷ்டப்படுத்தத் தக்க நிலைமையும் ஏற்பட்டு இருந்தாலும் மனிதனைப் போல் உணர்ந்து துக்கிக்கிற சக்தியாகிய கொடுமை அவற்றிற்கு இல்லை.

periyar 745

பகுத்தறிவு

ஏனெனில், பகுத்தறிவு என்கிற ஒரு உபத்திரவம் கொடுக்கத் தக்க குணம் அவைகளுக்கில்லாததால்தான். உதாரணமாக குதிரைகளை ஜட்கா வண்டியில் பூட்டி ஒரு முரட்டு நூல் கயிற்றை மடித்துக்கொண்டு ஓட ஓட அதனின் மிகு மெல்லியதும் அதிக உபத்திரவம் கொடுக்கத்தக்க இடமுமாகிய மர்ம ஸ்தானத்தில் அடித்தாலும், நல்ல வாலிபமுள்ள காளை மாடுகளைக் கட்டித்தள்ளி அதன் விதர்களை மரக்கட்டையின் மேல் வைத்து மரக்கொட் டாப் பிடியினால் தண்ணீர் போல் கரையும்படி தட்டினாலும் அவைகளுக்கு கஷ்ட மாத்திரம் தோன்றுமே அல்லாமல் அதற்கு தன் பிறப்புரிமை இழந்து இப்படி கஷ்டமனுபவிக்கிறோமே என்கிற உணர்ச்சி இருக்காது. தவிரவும்  அதற்கு மானம், அவமானம் என்கிற உணர்ச்சியும் இல்லை. இதோடு நாளைக்கு வேண்டுமே என்கிற கவலையும் இல்லை. எவ்வளவு கிடைத் தாலும் போதாது என்கிற ஆசை என்னும் அடிமைத் தன்மையும் இல்லை.  ஆகவே, மனிதன் மற்ற ஜீவராசிகளைவிட மானம், அவமானம் என்கிற உணர்ச்சியும், நாளைக்கு என்ன செய்வது என்கிற தன்னம்பிக்கையற்ற தன்மையும், எவ்வளவு கிடைத்தாலும் திருப்தியடைய முடியாத ஆசை என்னும் அடிமைத் தன்மையும், உடைத்தாயிருப்பதால் மனித ஜன்மமானது பிறவியிலேயே மிகுதியும், இழிவானதும் கொடுமையானதும் அடிமைத் தன்மை கொண்டதானதுமாய் இருக்கிறது என்பது நான் கொண்ட கருத்து.

பிறப்புரிமை

இப்படிப்பட்ட மனித ஜீவனுக்கு எல்லாவற்றையும் விட முக்கியமான உணர்ச்சியாக மான, அவமானம் என்னும் தன்மானமாகிய சுயமரியாதை யைத்தான் பிறப்புரிமையாகக் கொள்ள  வேண்டியிருக்கிறது. ஏனெனில் மனிதன், மானிடன் என்கிற பதங்களே மானத்தை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட மொழிகள்.  ஆதலின், மனிதன் என்பவன் மானமுடையோன். எனவே,  மனிதனுக்கு மனிதத் தன்மையைக் காட்டும் உரிமையுடையது மானம்தான்.  அத் தன்மானமாகிய சுயமரியாதையைத்தான் மனிதன் பிறப்பு ரிமையாக கொண்டிருக்கிறான்.  இது ஒவ்வொரு மனித ஜீவனுக்கும் உரிமை யுடையது.  திலகர் பெருமான் “சுயராஜ்ஜியம் பிறப்புரிமை” என்று சொன்னா ரென்றால் அவரும் வருணாசிரம தர்மப் பார்ப்பனராதலால் பார்ப்பனர்க ளுக்கு பிறரை தாழ்வாய்க் கருதுவதே பிறப்புரிமை என்று நினைக்கிற முறையில் பொருளில்லாததும் அனுபவத்தில் பெரிதும் ஏமாற்றமே பொருளா கக் கொண்ட அரசியல் சம்பந்தமான சுயராஜ்ஜியம் என்னும் வார்த்தையை அவர் பிறப்புரிமைக்கு உபயோகிக்க வேண்டியவரானார்.  நாம் யாரையும் ஏமாற்றிப் பிழைக்க வேண்டியவர்கள் அல்லோம்.  உண்மையான மானிடத் தன்மையை அறிய வேண்டியவர்களாயிருக்கிறோம்.  ஆதலால், மனிதனுக்கு பிறப்புரிமை தன்மானம்தான்.

தடைகள்

அதற்கு நம் முன் நிற்கும் தடைகள் என்ன என்பது இரண்டாவது விஷயம்.  தடைகள் இரண்டு விதம். ஒன்று இயற்கையாய் ஏற்பட்ட தடை. மற்றொன்று மற்றவர்களால் ஏற்பட்ட செயற்கைத் தடை. 

இயற்கைத்தடை

நாளைக்கு வேண்டும் என்று தேடும் தன்னம்பிக்கையற்றதன்மையும், எவ்வளவு கிடைத்தாலும் போதாது என்கிற ஆசை அடிமைத்தன்மையும் மனிதனின் பிறப்புரிமையாகிய தன்மானத்திற்கு இயற்கைத் தடைகள். இத் தடைகள் நீங்குவதென்பது முற்றும் துறந்த துறவிகளுக்கே முடியக் கூடியது.

செயற்கைத்தடை

ஆதலால், நான் செயற்கைத் தடைகளைப் பற்றியே பேசப் போகிறேன்.  இந்தச் செயற்கைத் தடையென்பது ஒவ்வொரு தேசத்திற்கு ஒவ்வொரு மாதிரியாகக் காணப்படுகிறது.  நமது நாட்டில் நமது பிறப்புரிமையாகிய சுயமரியாதைக்கு முக்கியமாய் இரண்டு விதமான செயற்கைத் தடைகளைச் சொல்லலாம்.  ஒன்று அரசியல் சம்பந்தமாக பார்ப்பனர் என்னும் வகுப்பார் நம்மை ஏமாற்றி நமது சுயமரியாதையைக்  கெடுத்திருப்பது.  மற்றொன்று அதே வகுப்பார் பரமார்த்திகத்திற்கு என்று மதம் என்கிற பெயரால் நம்மை ஏமாற்றி நிரந்திர அடிமையாக்கி நமது சுயமரியாதையை அடியோடு களைந்து வருவது. ஆகிய இந்த இரண்டு விஷயத்திலும் நமது மக்கள் ஏறக்குறைய எல்லோருமே - சிலர் ஏதாவது ஒன்றில் - சிலர் இரண்டிலும் மயங்கி அவ் வகுப்பாருக்கு அடிமையாகி மொத்தத்தில் சுயமரியாதையற்று இருக்கிறோம்.  அன்றியும் அவ்வகுப்பாரைப் பின்பற்றி நம்மவருட் சிலரும் வயிறு வளர்ப்ப தன் மூலமும் நமது சுயமரியாதைக்கு தடைகளாக இருக்கிறார்கள்.  ஆயினும், இந்த சமயத்தில் அரசியல் என்பதின் மூலமாயுள்ள தடையை விட்டு பரமார்த்தம் என்னும் பேரால் உண்டாக்கிய தடைகளைப் பற்றியே இங்கு பேச எண்ணி இருக்கிறேன்.

இந்து மதம்

நமது ஆத்மார்த்தத்திற்கென்றும் பரமார்த்தத்திற்கென்றும் இந்து  மதம் என்பதாக ஒரு கற்பனையை இப்பார்ப்பனர்கள் நமது  தலையில் சுமத்தி இருக் கிறார்கள்.  இந்துமதம் என்கிற இவ்வார்த்தைக்குப் பொருளே காண முடிய வில்லை.  இந்து என்கிற வார்த்தையே      தமிழ் வார்த்தையல்ல என்பதை நீங்கள் முதலில் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.  இது பார்ப்பன பாஷை (ஒலி). பார்ப்பன பாஷையிலாவது இந்து என்பதற்குப் பொருளுண்டா என்று பார்த்தால் மதத்திற்கு பொருத்தமானதாக ஒரு பொருளும் இல்லை.  வேறு ஏதாவது பாஷையில் இருக்கிறதா என்று பார்த்தால் பார்சி பாஷையிலோ அரபி பாஷையிலோ இந்து என்பதற்கு திருடன் என்கிற பொருள்தான் இருக்கிறது.  சிலர் சிந்து நதிக்கரையில் இருந்ததால் சிந்து என்பது இந்து என்பதாக மருவி அது ஒரு கூட்டத்தினருக்குபெயராகிப் பிறகு மதமாகி விட்டதாகவும் சொல்கிறார்கள்.  அது எப்படியோ இருக்கட்டும் இந்து மதம் என்றால் என்னவென்பதையாவது கவனிப்போம். கிறிஸ்துமதம் என்றால் கிறிஸ்து மகான் கட்டளையை அடிப்படையாகக்கொண்டது. மகமதிய மதம் என்றால் மகமது நபியின் கட்டளைகளை அடிப்படையாகக் கொண்டது. பௌத்தமதம் என்றால் புத்த பகவானின் கட்டளையை அடிப்படையாகக் கொண்டத. இது போல் மதம் என்று சொல்லக்கூடியவை ஒவ்வொன்றுக்கும் மத கர்த்தா இன்னார் அவரது கொள்கை கட்டளை இன்னது; இன்ன காலத்தில் ஏற்பட்டது; என்கற உண்மைகள் உண்டு. அப்படி இந்து மதத்திற்கு யார் கர்த்தா? என்ன கொள்கை? எந்தக் காலம்? என்று சொல்வதற்கு என்ன ஆதாரமிருக்கிறது.

வேதம்

“அநாதி காலம் தொட்டு இருப்பது வேதம்”  “அது கடவுள்சொன்னது” என்று சொல்லி ஏய்த்து விடுவதாயிருந்தால் அது பொருத்தமாயிருக்க வேண்டாமா? அநாதியும் கடவுள் சொன்னதாயுமிருந்தால் கடவுளால் உண் டாக்கப்பட்ட எல்லா தேசத்திற்கும் கண்டத்திற்கும் இதுவே வேதமும் மதமு மாய் அல்லவா இருக்க வேண்டும்.  பல்வேறு மதங்கள் இருப்பானேன்? கடவுளால் சொல்லப்பட்ட வேதம் எல்லோரும் ஒப்புக்கொள்ளக் கூடியதா யல்லவா இருக்க வேண்டும்?  உலகத்தில் உள்ள கடவுளின் மக்களிலும் முக்காலே அரைக் கால்வாசிப் பேர்களுக்கு இவ்வேத சம்பந்தமே இல்லாமல் வேறு வேறு வேதம் இருப்பானேன்?  இந்து மதஸ்தர்கள் என்று சொல்லிக் கொள்பவருக்குள்ளாகவே சிலர் இவ்வேதத்தைப் படித்தால் கண்ணைக் குத்த வேண்டியதும், சிலர் காதினால் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டியதும் எதற்காக?  கிறிஸ்தவருக்கும், மகமதியருக்கும் முறையே ஞாயிற்றுக் கிழமையும், வெள்ளிக் கிழமையும் மத சம்பந்தமான விசேஷ நாட்களாயிருக்கும் போது இந்துக்கள் என்பவர்களுக்குள்ளாகவே ஒருவ ருக்கு திங்கட் கிழமை, ஒருவருக்கு சனிக் கிழமை, ஒருவருக்கு வெள்ளிக் கிழமை இப்படியாக ஒரு வாரத்திலுள்ள 7 நாட்களுக்கும் வெவ்வேறு மனிதர் களாகவும் இன்னும் சிலருக்கு நாள்கள் போதாமலும் போவானேன்? 

மதக் குறி

மத சின்னங்கள் விஷயத்தில் ஒருவர் நாமம், ஒருவர் விபூதி, ஒருவர் கருப்பு பொட்டு, ஒருவர் சந்தனக் கீரல், ஒருவர் முத்திரை, ஒருவர் நெடுக்கு, ஒருவர் குறுக்கு இப்படியாக பல மாறுதல்கள் ஏற்படுவானேன்?  இந்த மாறுதல் களோடு இதற்குக் காரணங்கள் ஆளுக்கு ஒரு விதமாய்ச் சொல்லுவானேன்? இந்த வித்தியாசங்களை சுவாமிகளுக்கும் புகுத்துவானேன்?  நாமம் என்பது என்ன என்று கேட்டால் சிலர் சுவாமியின் பாதம் என்கிறார்கள்.  வெள்ளை நாமம் இரண்டும் பாதமானால் நடுவில் உள்ள சிவப்பு நாமத்திற்கு பெயர் என்ன? அப்படியே சுவாமியின் பாதம் என்பதாகவே ஒப்புக்கொள்ளு வோமேயானால் சுவாமியின் பாதத்தையே சுவாமியின் நெற்றியில் கொண்டு போய் வைப்பானேன் ? இந்த நாமத்திற்கும் பாதம்வைத்த நாமம், பாதமில்லாத நாமம் என்பதாக வடகலை தென்கலை என்று ஒருவருக்கொருவர் உதை போட்டுக் கொள்வானேன்? இவைகளில் ஒரு நாமம் 3 நாமம் பதினோரு நாமம் என்கிற கணக்குச் சண்டை எதற்கு? இந்துக்களிலேயே ஒரு சாரார் இந்த நாமத்தைப்பற்றி கேவலமாகப் பேசுவானேன்? இதுபோலவே விபூதி, பொட்டு, முத்திரை இதுகளுக்குப் பல பல மாதிரி வியாக்கியானங்கள் இருப்பானேன்? இதை மற்ற தேசத்தாரும் ஒப்புக்கொள்ளாததேன்? 

சுவாமி

லிங்கத்தைப் பற்றியும் ஆவுடையாரைப் பற்றியும் பலவிதமாகப் பேசுவானேன்? நமது சுவாமிகளுடைய பெயரெல்லாம் குறிகளெல்லாம் நமது தமிழ் பாஷையில் இல்லாமல் அன்னிய பாஷையாகிய ஆரிய பாஷையில் இருப்பானேன்?  சுவாமியை பூஜிப்பதற்கு நமக்கும் சுவாமிக்கும் மத்தியில் ஒரு அன்னியன் இருப்பானேன்?  அன்னிய பாஷையில் மந்திரங்களும் தோத்திரங்களும் இருப்பானேன்?  ஆளுக்கு ஒரு விதமாக பூசை செய்வா னேன்?  இதற்காக நாம் பணம் கொடுப்பானேன்?  ஒவ்வொரு சுவாமிக்கும் ஒவ்வொரு வித வாகனங்கள் ஏற்படுத்துவானேன்?   சுவாமிக்கு பெண்டு பிள்ளைகள், வைப்பாட்டிகள், தாசிகள், விபச்சாரத் தன்மைகள் ஆகியவை களை கற்பிப்பானேன்? சிலர் சுவாமியைப் பார்த்தால் சுவாமி சக்தி ஓடிப் போவானேன்? சிலர்  கோவிலுக்குள் வந்தால் கோவிலும்  சுவாமியும் தீட் டாய்ப் போவானேன்?  சிலர் சுவாமியைத் தொட்டால் சுவாமி இறந்து போவா னேன்?  ஒரே பெயரும் ரூபமும் உள்ள சுவாமிகளுக்கு ஊருக்கு ஒரு வித மாய் சக்திகள் ஏற்பட்டிருப்பானேன்?  காசி, ஜகந்நாதம், பண்டரிபுரம் முதலிய ஊர்களில் உள்ள சுவாமிகள் யார் தொட்டாலும் சாவதில்லை.  கோவிலுக்குப் போகிறவர்கள் எல்லாம் தாங்களே நேரில் சுவாமியைத் தொட்டு தலையில் தண்ணீர் விட்டு புஷ்பம் போட்டு கும்பிடுகிறார்கள்.  அதே பெயருள்ள சுவாமிகள் நமது நாட்டில் நாம் தொட்டால் செத்துப் போய்விடுகிறது.  சீரங்கம், சிதம்பரம், பேரூர், பவானி, கொடுமுடி, திருச்செங்கோடு, கரூர் முதலிய முக்கிய nக்ஷத்திரங்களில் உள்ள சுவாமிகள் நாடார்கள் கோவிலுக்குள் போய் கும்பிட்டால் அக்கோவில்களும் சாமிகளும் சாவதில்லை. மதுரை, திருநெல் வேலி,  ராமநாதபுரம் ஜில்லாக்களில் உள்ள கோவில்களும் சுவாமிகளும் மாத்திரம் நாடார்கள் போய் கும்பிட்டால் உடனே செத்துப் போய் விடுகின் றன.  இப்படி சுவாமிகளின் சக்தியும் உயிரும் கோவில்களின் யோக்கிய தையும் ஊருக்கு ஒரு விதமாய் இருப்பானேன்? பிறகு பார்ப்பனருக்கு மாத்திரம் அந்த சுவாமியை உயிர்ப்பிக்கும் சக்தி இருப்பானேன்?

செலவு

நமது வேதம், சுவாமி பூஜை வணக்கம் முதலியன சம்பந்தமான விஷயங்கள் இப்படி இருக்கிறதென்றால், இந்த லக்ஷணத்தில் இம்மாதிரி சுவாமியினாலும், கோவிலினாலும்  நமது சுயமரியாதை எவ்வளவு தூரம் பாதிக்கப்படுகிறது என்பதோடு நமது பணம் எவ்வளவு செலவு ஆகிறது என்பதையும் கவனித்துப் பாருங்கள்.  சென்னை மாகாணத்தில் மாத்திரம் இந்து  மத சம்பிரதாயப்படிக்கு ஏற்பட்ட கோவில்களுக்கும் மடங்களுக்கும் வருஷம் ஒன்றுக்கு “ 2 ” கோடி ரூபாய் வரும்படி வருகிறது.  2 கோடி ரூபாய் வரும்படி வந்தால் மக்களுக்கு எத்தனை கோடி ரூபாய் செலவு ஆகும்.  சாதார ணமாக திருப்பதிக்கு மாத்திரம் சர்க்கார் கணக்குப்படி வருஷம் ஒன்றுக்கு 20 லக்ஷம் வரும்படி வருகிறதாக ஏற்படுகிறது. கணக்குக்கு வராமல் மகந்து களுக்கும், கோவில் அதிகாரிகளுக்கும், பூஜாரிகளுக்கும் போகும் பணங் களுக்கு அளவேயில்லை.  யாத்திரைக்காரர்கள் காணிக்கையாகக் கொண்டு வரும் தொகைகளை அறிந்த மகந்து, கோவில் அதிகாரிகள் முதலியவர்கள் யாத்திரைக்காரர்களைக் கூப்பிட்டு “கோவில் கடாரத்தில் காணிக்கையைப் போட்டால் சர்க்காரார் எடுத்து ஜர்மன் யுத்தத்திற்கு வாங்கிய கடனுக்கு வட்டி கட்டி விடுவார்கள்; மகந்துவிடம் கொடுத்தால்தான் சுவாமிக்குப் போய்ச் சேரும்; நீர் இவ்வளவு ரூபாய், இவ்வளவு நகை கொண்டு வருவதாக சுவாமி எனது சொப்பனத்தில் சொல்லிற்று” என்று ஏமாற்றி வழிப்பறி செய்வதில் கொள்ளை போகும் பணம் இந்த 20 லக்ஷத்தில் சேர்ந்ததல்ல.  இன்னமும் யாத்திரைக்காரன் ரயில் சார்ஜ் சில்லரைச் செலவு மெனக்கேடு தேங்காய் பழம் முதலிய செலவுகள் எத்தனை லட்சமாகும் என்று கணக்குப் பாருங்கள். 

திருவிழா

இன்னும் உற்சவாதிகள், சுவாமிக்கும் அம்மனுக்கும் கலியாணம், சுவாமி தாசி வீட்டுக்குப் போதல், ஒரு காலைத் தூக்கி ஆடுதல், நரியை குதிரையாக்குதல் முதலிய திருவிழாக்களும் 10 மனுவு இடையுள்ள சுவாமியை 200 டன் இடையுள்ள தேரில் வைத்து 10,000 பேர் இழுப்பதும், அதற்கு 50,000 பேர் வேடிக்கை பார்க்க பல இடங்களிலிருந்து வருவதும் ஆகிய காரியங்களுக்கு ஆகும் செலவுகளும் சுவாமிகளுக்கு அபிஷேகம், பூஜை, சதிர், பாட்டுக் கச்சேரி, நகை, பட்டுப் பாவாடை, புனுகு, ஜவ்வாது, பச்சைக் கற்பூரம் குங்குமப்பூ முதலியவைகளின் செலவுகளும் எல்லாம் சேர்த்து இந்துமத சாமிகளின் பூஜைக்கும் உற்சவங்களுக்கும் மாத்திரம் தென் இந்தியாவில் வருஷத்திற்கு 25 கோடி ரூபாய்க்குக் குறைவில்லாமல் செலவா கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.  இந்த 25 கோடி ரூபாயும் நாம் சுயமரியாதை அற்றுக் கிடக்கின்றோம் என்பதை உறுதிப்படுத்துவதற்கும் தினம் தினம் நமக்கு ஞாபகப்படுத்துவதற்கும் செய்யும் செலவே அல்லாமல் இதனால் வேறு என்ன பலனை அடைகிறோம்?  இப்பேர்ப்பட்ட “இந்துமதம்” தான் சென்னை சட்டசபையில் இந்த பணங்களுக்கு கணக்கு கேட்க ஏற்படுத் திய இந்து மதபரிபாலன மசோதாவினால் அடியோடு பாதிக்கப்பட்டுப்போய் விட்டதாம்.  இம் மாதிரி நமது சுயமரியாதையை ஒழிக்கும் “இந்துக்கள்” தான் “மதம் போச்சுது”, “மதம் போச்சுது” என்று மாயக் கண்ணீர் விடுகிறார்கள்.  சாமி பூஜை, உற்சவம் முதலியதுகளில் நமது யோக்கியதையையும், சுயமரியாதைக்கேடும் இப்படி இருப்பதோடு இந்துமதச் சடங்கு என்னும் பேரால் நமது தலையில் எவ்வளவு பளுவைச் சுமத்தி நமது பணம் எவ்வளவு கொள்ளை கொண்டு நமது பிறப்புரிமையான சுயமரியாதையை எவ்வளவு தூரம் நசுக்கி இருக்கிறார்களென்பதை கவனிப்போம். 

இந்துமதச் சடங்கு

இந்துமதம் என்பதாக ஒன்றை நாம் ஒப்புக்கொள்வதால் நமது நிலை பிறவியிலேயே இழிவானதாகவும், இந்து மதஸ்தர்கள் என்று சொல்லிக் கொள்வோரிலேயே ஒரு வகுப்பாருக்கு  நாம் அடிமைகளாகவும் வைப்பாட்டி மக்களாகவும் கடவுளாலேயே உண்டாக்கப்பட்டவர்கள் ஆகிறோம்.  நம்மை இழிவாய்க் கருதுபவர்கள் காலிலேயே விழுந்து கும்பிட வேண்டியவர்களாகி றோம்.  இன்னும் நமது வாழ்நாள் முழுவதும் அதாவது தாய் வயிற்றில் கருத்த ரித்த நிமிட முதற்கொண்டு நமது மதச்சடங்கு செலவைப் பாருங்கள். சர்க்கார் நம்மிடம் வரி வசூல் செய்கிறார்கள்;  இதை அதிகமென்கிறோம்.  தவிர நம்மிடம் வசூலிக்கும் வரியை நமக்காக செலவு செய்வதில்லை என்றும், இது நமது சுயமரியாதைக்கு ஈனம் என்று சொல்லி சர்க்காருடன் சண்டை செய்கிறோம்.  பாமர ஜனங்களை சர்க்காருக்கு விரோதமாய் கிளப்பிவிட்டு பெரிய பெரிய சர்க்கார் உத்தியோகங்களைப் பார்ப்பனர்கள் பெற்று நமது சுயமரியாதைக்கும் அவ்வுத்தியோகங்கள் மூலமாய் இழிவை ஏற்படுத்திக் கொள்கிறோம்.

பார்ப்பன வரி

ஆனால், மதத்தின் பேரால் பார்ப்பனர் நம்மிடம் வசூலிக்கும் வரி யைப்பற்றி நாம் ஒரு சிறிதும் கவலைப்படுவதில்லை. சர்க்கார் வரிக்காவது ஒரு கணக்கு வைத்திருக்கிறார்கள்.  அதாவது பூமி வரி, வருமான வரி, ஸ்டாம்பு வரி என்பதாக குறிப்பு இருக்கிறது.  இதுகளுக்கு பூமி உள்ளவர்கள், இவ்வளவு ரூபாய் வரும்படி உள்ளவர்கள்,  பிராது உள்ளவர்கள் முதலிய வர்கள்தான் இந்த வரிகள் கொடுக்கக் கட்டுப்பட்டவர்கள் வரிகொடுக்க கட்டுப்படாதவர்கள் 100-க்கு 90 பேர்கள் இருக்கிறார்கள்.  இந்த வரியையும் நமக்காக ஏதோ செலவு செய்வதாய் கணக்கும் காட்டுகிறார்கள்.  ஆனால், மதச் சடங்குகளின் பேரால் பார்ப்பனர் வசூல் செய்யும் வரிக்கு அளவே இல்லை. மனிதனாகப் பிறந்தவன் எல்லாம் அதாவது தன்னை எவனாவது இந்து என்று சொல்லிக்கொண்டால் அவனை உடனே பார்ப்பன வரி சனியன் பிடித்துக் கொண்டது என்பது போல்  காலவரையறை ஒன்றுமே இல்லாமல் கர்ப்பந் தரித்தது முதல் சாகும் வரை - செத்தும் விடாமல் அதாவது கர்ப்பதான வரி, சீமந்த வரி, பிள்ளைப் பேறுகால வரி, தீட்டுக்கழித்தல் வரி, தொட்டி லிடல்வரி, பேர் வைத்தல் வரி,  ஆயுசு ஓம வரி, சோறூட்டல் வரி, கிரக தோச வரி, வித்தியாப்பியாச வரி, கல்யாண வரி, சாந்தி முகூர்த்த வரி, தாசி வைத்தால் அதற்கு ஒரு சாந்தி முகூர்த்த வரி, சாவு வரி, சாக 10 நாழிகை வரி, செத்த பின்னும் வரி, செத்தவர் மக்களைப் பிடித்து வருஷா வருஷம் வரி ஆகிய பல துறைகளில் (இவற்றைப் பற்றி மதுரை மகாநாட்டில்  ஸ்ரீமான்                                  மு.ஏ. ரெட்டி நாயுடுகாரு , அன்னிய வகுப்புப் புரோகிதரை விலக்க கொண்டு வந்த தீர்மானத்தில் பேசியவைகளை அனுசரித்ததாகவே பேசினார்.  ஆதலால் அதைப்பார்த்து கொள்ளலாம் ( 2. 1. 27 “குடிஅரசு” 7 ம் பக்கம் பார்க்க ) காலாவதி இல்லாமலும் ஒரு நபரைக்கூட விடாமல் 100 -க்கு 100  பேரிடம் பணக்காரன் ஏழை என்கிற பாகுபாடே இல்லாமல் கொடுப்போர் முட்டாள்தனத்துக்கும், களிமண் மூளைக்கும் தகுந்தபடி வரி கறந்து விடுகிறார்கள்.

வரியுங் கொடுத்து காலிலும் விழுவது

இந்த வரி வசூலுக்கு ஏதாவது பலன் உண்டா என்று பார்த்தால் இதை விட முட்டாள்தனமான காரியம் உலகில் வேறொன்றுமில்லை என்று சொல்லத்தக்கமாதிரி அதாவது  “சுவாமிகளே! நான் கொஞ்சமாகச் செய்திருந் தாலும் என்னுடைய பக்தி சிரத்தையை மதித்து அதை பெரிதாக எண்ணி காசி கங்கையில் செய்தது போலவும் பிரயாகை வடவால விருக்ஷத்தின் கீழ் செய்தது போலவும் ஆகும்படி செய்து எனது பெற்றோர்களுக்கு மோக்ஷமும் திருப்தியும் உண்டாகும்படி அருளுவதுடன் என்னையும் சிரஞ்சீவியாக்கி எனது பாவங்களை மன்னித்து மோக்ஷம் லபிக்கும்படி கிருபை செய்ய வேண்டியது” என்று சொல்லி பார்ப்பனர் காலில் நமது தலை முட்டும்படி விழுந்து கும்பிட்டு ஆசீர்வாதம் பெறுவதுமாய் நடந்து வருகிறோம்.  இவ்வித சடங்குக்குச் செலவாகும் பணம் எத்தனை கோடி, தங்கச் சொம்பு, வெள்ளிச் சொம்பு, வீடு, பூமி, கன்னிகை முதலிய தானங்கள் சமாராதனைகள், சாந்திகள் முதலிய காரியங்களில் ஆகும் செலவுகள் இதுகள் எத்தனை கோடி ஆகும் என்பதை கவனித்துப் பாருங்கள்.  இதற்கு ஏதாவது பிரயோஜனமுண்டா என்பதை யோசியுங்கள்.  இந்தச் செலவுகள் ஒருபுறம் நம்மை பிச்சு பிடுங்கித் தின்னவும் இதன் மூலம் நமது பிறப்புரிமையாகிய சுயமரியாதை எவ்வளவு பாதிக்கப்பட்டு அடிமையாகி வாழுகிறோம் என்பதையும் யோசியுங்கள்.  இப்படி எத்துணையோ விதமான தடைகள் செயற்கையிலேயே அதாவது நமது அறிவீனத்தினாலேயே நம்மைச் சூழ்ந்து கொண்டு வாட்டுகின்றன.  இவைகளைக் களைந்தெறிய வழிதேடுங்கள்.  பிறகு சுயராஜ்ஜியம் தானாக வந்துவிடும். பார்ப்பானுக்குப் பணம் கொடுத்து அவன் காலில் விழுந்தால் நமது பெற்றோர்கள் மோக்ஷத்திற்கு போவார்கள், நமது பாவம் தீரும் என்று நினைத்துக்கொண்டிருக்கும் ஜன சமூகத்திற்கு சுயராஜ்ஜியம் வேண்டு மென்பது யாராவது நம்பக்கூடிய காரியமா? வீணாக அதாவது சில பார்ப்பனர் கள் பிழைக்க இந்துக்களாக இருப்பது போலவே சில புரட்டுக்காரர்களும் பித்தலாட்டக்காரர்களும், அயோக்கியர்களும் பிழைக்க சுயராஜ்ஜியம், சுயராஜ்ஜியம் என்று கத்தி ஏமாறாதீர்கள்.

உண்மை சுயராஜ்யம் காணுமிடம்

சுயமரியாதை கண்டவிடம்தான் சுயராஜ்ஜியமே தவிர சுயராஜ்ஜியம் என்று ஒரு தனி வஸ்துவில்லை என்பதை உணர வேண்டும். ஆதலால் பிறப்புரிமை இன்னது என்பதும் அது இன்ன விஷயங்களால் தடைப் பட்டிருக்கிறது என்பதும் அத்தடைகளிலிருந்து விலக இன்னின்னது செய்ய வேண்டும் என்பதும் சுயராஜ்ஜியம் என்பது இதுபோலவே மக்களை ஏமாற் றும் ஒரு புரட்டான மார்க்கமென்பதும் சுயமரியாதை கண்டவிடத்தில் உண்மையான சுயராஜ்ஜியம் என்பது துலங்கும் என்பதும் விளங்கி இருக்கு மென்று நினைக்கிறேன்.

(29.12.26 இல் சென்னிமலையில் பாப்பாரப்பட்டி žயூனியன் சேர்மேன் ஸ்ரீமான் சின்னமுத்து முதலியார் அவர்கள் தலைமையின் கீழ் கூடிய கோய முத்தூர் ஜில்லா 14 -வது செங்குந்தர் மாநாட்டில் ஆற்றிய சொற்பொழிவு.

குடி அரசு - சொற்பொழிவு - 09.01.1927)

Pin It