எனக்குத் தெரிந்து சில ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் இங்கே பெண்கள் தினம் என ஒன்று இருப்பது பரவலாகத் தெரிய வந்தது. அதிலிருந்து அன்றைய தினம் அலைபேசி குறுஞ்செய்திகளும் மின்மடல்களும் அழைப்புகளுமான வாழ்த்துக்களுடனே நன்றாகத் தான் செல்கின்றன. பெண்கள் தினத்திற்கென பிரத்யேக விற்பனைகளும் வந்தாயிற்று. ஆடைகளிலிருந்து கணிப்பொறி வரை. தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகள், அலுவலகத்தில் கொண்டாட்டங்கள், போட்டிகள் என அதற்கும் குறைவில்லை.

இதுவும் மேலை நாட்டுக் கலாச்சாரம் என கொடி பிடிப்பவர்களும், ந‌ம் நாட்டில் என‌ பெண்க‌ளுக்கு என்ன‌ ம‌ரியாதைக்குறைவு இருக்கிற‌து ? பிர‌தான‌ ந‌தியில் இருந்து பிர‌த‌ம‌ ம‌ந்திரியை இய‌க்குப‌வ‌ர் வ‌ரை பெண்க‌ள் தானே என‌ வாதிடுபவ‌ர்க‌ளும் இன்ன‌மும் என்ன‌ பெண்க‌ள், பெண்க‌ள் பிர‌ச்ச‌னை என்று பேச இருக்கிற‌து, இப்போது தான் எல்லாத் துறையிலும் வ‌ந்துவிட்டார்க‌ளே என‌ ச‌லித்துக்கொள்வ‌ர்க‌ளும் பெண்க‌ள் குறித்தான‌ பிர‌ச்ச‌னைக‌ளின் அல‌ச‌லை தொலைக்காட்சியில் எப்போதாவது காண‌ நேர்ந்தாலும் உடனே சான‌லை மாற்றிவிடுப‌வ‌ர்க‌ளும் இருந்துகொண்டு தான் இருக்கிறார்க‌ள்.

ஒரு புற‌ம், சென்ற நூற்றாண்டின் கடைசி பத்து இருபது வருடங்களுடன் ஒப்பிட்டாலே, மிக‌ மிக‌ அசாத‌ர‌ண‌மான‌ வ‌ள‌ர்ச்சியை காண‌முடிகிற‌து பெண்க‌ளிட‌ம். இன்னொருபுற‌ம், பெண்க‌ள் மீதான‌ வ‌ன்முறை நிகழ்வுகள் ஒவ்வொரு மூன்று நிமிட‌ங்க‌ளுக்கு ஒருமுறை நிக‌ழ்த்த‌ப்ப‌டுகிற‌து. ஏனிந்த‌ முர‌ண்பாடு. ந‌ட‌ப்ப‌தில் எதை ந‌ம்புவ‌து. எந்த செய்தித்தாளையேனும் எடுத்து வாசித்துப்பார்த்தால் எந்த மூலையிலேனும் பெண்கள் சாதித்த கதை தெரியலாம். பரவலாகத் தெரிவது என்ன என சற்றுப் பொறுமையாக புரட்டிப்பார்த்தால், எத்தனை எத்தனை சிக்கல்கள் பெண்ணாய் இருப்பது என்ற ஒரே காரணத்தினால்.

இன்று ஒரு நீதிமன்ற தீர்ப்பு. கோமாவில் இருக்கும் அறுபது வயதாகும் ஒரு மூதாட்டியை கருணைக்கொலை செய்ய நீதின்றம் மறுப்பு. அதிலென்ன சிக்கல்? நல்ல தீர்ப்பு தானே என யாரும் யோசிக்கும் முன்னரே தொடர்கிறது அவரின் கதை. நர்ஸ்‘ஆக வேலை செய்து வந்த அவர் இருபத்துமூன்று வயதில் ஒரு துப்புரவுத் தொழிலாளியால் பாலியல் வன்முறைக்கு ஆளாகினார்.அவர் எதிர்க்கக்கூடாது என்பதற்காக நாய்களை கட்டும் இரும்புச் சங்கிலியில் அவர் கழுத்தை நெரித்திருக்கிறான். மூளைக்குச் செல்லும் நரம்புகள் பாதிக்கப்பட்டு இத்தனை வருடங்களாக கோமாவில் கழிக்கும் அவரது வாழ்க்கையின் அவலம். கருணைக்கொலை செய்ய விண்ணப்பிக்கும் அளவு சென்றுவிட்ட அவரின் சுற்றுப்புறம். அவர் தொலைத்தது என்ன? இத்தனை வருட வாழ்க்கை. பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படும் பிஞ்சு பெண் குழந்தைகளைப் பற்றி சற்று சிந்தித்துப் பார்த்தால், அவர் வருங்காலம் எத்தனைக் கேள்விக்குறியானது எனப்புரியும். மனரீதியாக அவர்களின் பாதிப்புகள் மட்டுமே அதன்பின் அவர்களின் வாழ்க்கைமுறையை பெரிதும் பாதித்துவிடுகின்றன.

வெளியே தெரிவது மிகச்சில. யாரும் அறியாமல் நிகழ்த்தப்படும் கொடூரங்கள் பலப்பல. யாரும் அறியாமல் சிந்தப்படும் பெண்களின் கண்ணீர்த்துளிகளும் பல கோடி.மேற்கூறிய கடைநிலை வக்கிரங்கள் இல்லாமல், மிகச் சாதரணமாக நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகள் பற்றி தனியே சொல்லவேண்டுமா என்ன ? பொது இடங்களில் உரசும் உடல் ரீதியான செயல்களில் இருந்து மிக நுணுக்கமான உணர்வு ரீதியிலான செயல்கள் வரை, ஒன்றா இரண்டா ?

படித்தவர் படிக்காதவர் என்ற பாகுபாடே இல்லாமல் பொருந்தக்கூடிய சில விஷயங்கள் இவை. எத்தனைப் பெண்கள் “இதெல்லாம் தேவையில்லை உனக்கு” என்ற தன் குடும்பத்தின் கருத்துக்காக தங்கள் ஆசையை கனவுகளை நொறுங்கக்கொடுத்து வந்திருக்கிறார்கள். எத்தனைப் பெண்களின் நட்புவட்டங்கள் கணவனுக்குப் பிறகு காணாமலேயே போய்விடுகின்றன. எத்தனை பெண்களின் சின்ன சின்ன ஆசைகள் கூட அநாவசியமாய் அவசியமற்றதாய் ஒதுக்கப்படுகின்றன. பெண்களாய் இருப்பதன் ஒரே காரணத்தினால் இளக்காரமாகப் பார்க்கப்பட்ட தருணங்கள் எத்தனை. அவளை நோக்கி வீசப்படும் கேள்விகள் எத்தனை. துளைக்கும் பார்வைகள் எத்தனை. அத்தனையையும் விட்டுக்கொடுத்து அவர்களையும் புன்னகையுடன் அரவணைத்துச் செல்லும் பெண்கள் எத்தனை பேர்.

நேற்றுப்படித்த அஜயன்பாலாவின் கட்டுரை ஒன்று மிகப்பாதித்தது. ஆடை விஷயங்களில் இன்னமும் கட்டுப்பாடுகளைச் சந்திக்கும் பெண்களின் மனநிலை. அரைகுறையாய் செல்வது சுதந்திரமா என வாதிக்க நான் இங்கே விரும்பவில்லை. இது அதைப் பற்றினதும் இல்லை. மிகச்சாதாரண ஒரு விஷயத்திற்குக்கூட ஒரு வரைமுறைகளின் கீழ் அடக்கியே வைக்கப்பட்டிருக்கும் பெண்ணின் மனநிலையிலிருந்து படித்துப் பாருங்கள் புரியும்.

குளிரூட்டப்பட்ட எல்லா வசதியும் நிறைந்த ஒரு அலுவலகத்தின் கணினியில் இதனை தட்டச்சுவது மிகச்சுலபமானது தான். அத்தனையையும் அனுபவித்து/ அதையே  வாழ்க்கையாகக் கொண்டு/ அதிலிருந்து மீண்டு/ குடும்பத்திற்காக உழைத்து/ அதற்கு மேலும் ஒரு நிலையை அடைந்திருக்கும் பெண்கள் அனைவருக்கும் நெகிழ்ச்சியான பெருமிதமான பெண்கள் தின வாழ்த்துகள். இன்னமும் நாம் வாழும் சமுதாயம் பெண்களுக்கு என சில புரிதல்களைக் கொள்ளும் பெண்கள் தினமும் வருங்காலத்தில் வரும் என்ற நம்பிக்கையோடு.

வாழ்த்து தெரிவித்த‌ அனைத்து ந‌ண்ப‌ர்க‌ளுக்கும் ந‌ன்றிக‌ள். உங்க‌ள் வாழ்த்துக‌ளின் பின்னால் உள்ள‌ அன்பும் பெண்கள் மீதான மரியாதையும் வ‌ருங்கால‌த்தை ந‌ம்பிக்கையூட்டுவ‌தாய் ஆக்குகின்றன.

Comments

1 comment

1
sundaravalli
thangal katturai padiththeen makizhchi. innum niraiya vasippu thangalai, thangal ezhuththai kuurmai paduththum. matravarin anbum, mathippum mattum oru poothum penviduthalaiyai saaththiyap paduththa mudiyaathu. theevira vaasippum athai chaarnthau eyanguvathum mattume penviduthalaiyai saaththiyap paduththum

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.