55. தாழ்த்தப்பட்ட சாதியினர் சார்பில் சமர்ப்பிக்கப்படும் இந்தக் கோரிக்கை மனுவில் கொடுக்கப்பட்டுள்ள சில பரிந்துரைகள், குறிப்பாக அரசியல் குறைகளை அகற்றுவதற்காக முன்வைக்கப்பட்டவையாகும்; இவை பொது கஜானாவுக்கு எந்த நிதி பளுவையும் உட்படுத்த மாட்டா. இவை பரிந்துரைகள் என்பதைவிட அரசியல் கோரிக்கைகள் எனக் கூறலாம்; இவை மிகவும் நியாயமான, நேர்மையான கோரிக்கைகள்; ஆகவே, இவற்றை சர்க்கார் அவசியம் ஏற்க வேண்டும். இந்த ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வதில் உள்ள சிரமம் மத்திய சர்க்காரின் வருவாயில் இவை ஏற்படுத்தும் அதிக சுமைதான்.

ambedkar 250நிதிப் பளு இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் அதன் காரணமாகவே அவற்றை நிராகரிக்க முடியாது. காரணம், தாழ்த்தப்பட்ட சாதியினர்பால் சர்க்காருக்கு ஒரு கடமை உள்ளது என்பதில் சந்தேகம் எதுவும் இருக்க முடியாது. இது விஷயத்தில் தங்களுக்குள்ள கடமையை அவர்கள் உணர்ந்தால், பொதுப் பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை நிதிச் சுமையாக இருந்தாலும் கூட, அவர்கள் அவற்றை நிறைவேற்ற கடமைப்பட்டவர்களாவர்.

56. தாழ்த்தப்பட்ட சாதியினர்பால் பிரிட்டிஷ் சர்க்காரின் கொள்கை அவர்களை தொடர்ந்து முற்றிலும் புறக்கணிக்கும் கொள்கையாகவே இருந்து வந்துள்ளது. தங்கள் கடமை சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவது மட்டுமல்ல, மக்களுக்குக் கல்வி வசதி அளிப்பதும் அவர்களின் நலவாழ்வைக் கவனிப்பதும் தங்கள் கடமை என்று பிரிட்டிஷ் சர்க்கார் உணர்ந்த காலம் முதலே இந்தப் புறக்கணிப்பு இருந்து வருகிறது. 1850-51 ம் ஆண்டுக்கான பம்பாய் மாகாண கல்வி வாரிய அறிக்கையிலிருந்து தரப்படும் கீழ்க்கண்ட வாசகத்திலிருந்து இது தெளிவாகும்.

இந்தியாவின் மேல்தட்டு வர்க்கங்கள் பற்றிய ஆய்வு

“பத்தி 16. இந்தியாவில் அரசு வழங்கும் கல்வியின் செல்வாக்கின் கீழ் மக்கள் தொகையின் ஒரு சிறு பகுதியைத்தான் கொண்டு வர முடியும் என்பது நிரூபிக்கப்பட்டதால், இந்தப் பகுதி ‘மேல்தட்டு வர்க்கங்களை’ கொண்டதாக இருக்க வேண்டும் என்று மாட்சிமை தங்கிய மன்னர் பிரான் அரசு முடிவு செய்ததால், பின்னால் குறிப்பிடப்பட்டவர்கள் யார் யார் என்று உறுதிப்படுத்துவது அத்தியாவசியமாகும்.

இந்தியாவில் மேல்தட்டு வர்க்கங்கள்

“பத்தி 17. செல்வாக்குள்ளவை என்று கருதப்படும் இந்தியாவின் மேல்தட்டு வர்க்கங்களை பொறுத்தவரை, அவற்றை கீழ்க்கண்டவாறு வரிசைப்படுத்தலாம்:

1வது: நிலச்சுவான்தார்கள், ஜாகீர்தார்கள், முன்னாள் ஜமீன்தார்களின் பிரதிநிதிகள், குறுநில மன்னர்கள், படை வீரர்கள் வர்க்கம் என்று அழைக்கப்படுபவர்கள்.

2வது: தொழில்-வாணிகத்தில் சொத்துச் சேர்த்தவர்கள் அல்லது வாணிக வர்க்கத்தினர்.

3வது: உயர் அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவர்கள்.

4வது: பிராமணர்கள்; பேனாவினால் வாழ்கிற எழுத்தாளர்களையும் இவர்களுடன் சேர்த்துக் கொள்ளலாம்; பம்பாயின் பர்புக்கள், சீன்வீக்கள், வங்காளத்தின் காயஸ்தர்கள் – இவர்கள் கல்வியின் அல்லது சமுதாய படி நிலையில் உன்னத இடத்தை அடைந்திருந்தால்.

பிராமணர்கள் மிகுந்த செல்வாக்கு பெற்றவர்கள்

பத்தி18: இந்த நான்கு வர்க்கங்களில், ஒப்பிட முடியாத அளவில் மிகவும் செல்வாக்குள்ளவர்கள், மிக அதிக எண்ணிக்கையில் உள்ளவர்கள், மொத்தத்தில் மிக சுலபமாக சர்க்காரால் சமாளிக்கப்படக் கூடியவர்கள், பின்னால் சொல்லப்பட்டவர்களேயாவர். பண்டைய ஜாகீர்தார்கள் அல்லது போர் வீரர்கள் வர்க்கம் நமது ஆட்சியில் தினமும் சீரழிந்துக் கொண்டிருக்கிறது.

* * *

சில விதிவிலக்குகள் தவிர்த்து, வணிக வர்க்கத்தினருக்கும் உயர் கல்வியின் கதவுகள் மிகத் தாராளமாகத் திறந்துவிடப்பட்டிருக்கின்றன என்றும் கூற முடியாது.

* * *

கடைசியாக, சர்க்காரோடு தொடர்பு கொள்ள வரும் பெரும் எண்ணிக்கையானவர்களிடையே அரசு ஊழியர்கள் பெருமளவு செல்வாக்கைப் பெற்றிருந்தாலும், சர்க்காரிடமிருந்து சுதந்திரமாக உள்ள இன்னும் அதிக எண்ணிக்கையுள்ளவர்களிடையே இவர்களுக்குச் செல்வாக்கு எதுவும் இல்லை.

பிராமணர்களின் வறுமை

பத்தி 19: மேற்சொன்ன பரிசீலனை நீளமாக இருந்தாலும், சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு இது இன்றியமையாதது. முதலாவதாக, பல்வேறு வகையான கல்வியைப் பரப்புவதற்கு சர்க்கார் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய செல்வாக்குள்ள வர்க்கம் பிராமணர்களும் அவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ள மற்ற உயர் சாதியினரும் என்பதை இது நிரூபிக்கிறது.

கீழ்ச்சாதிகளுக்குக் கல்வி அளிக்கும் பிரச்சினை

“பத்தி 21: நம்மிடமிருந்து கல்வி வசதி பெற விரும்பும் உயர் சாதிகளைச் சேர்ந்த ஏழைகளின் குழந்தைகளுக்கு வெகு விரிவாக கதவு திறந்துவிடப்பட வேண்டுமென்பதே ஆண்டுக் கணக்கான அனுபவம் நம்மீது திணித்துள்ள உண்மைகளிலிருந்து நாம் பெறக்கூடிய நடைமுறை சாத்தியமான முடிவாகும். ஆனால் இங்கு வேறு ஒரு சங்கடமான பிரச்சினை எழுகிறது என்பதை கவனிப்பது அவசியம். அரசுக் கல்வி நிறுவனங்களில், ஏழைகளின் குழந்தைகளை இலவசமாகச் சேர்க்கும்போது இழிவாகக் கருதப்படும் தெட்கள், மகர்கள் முதலிய பல்வேறு சாதியினரும் பெரும் எண்ணிக்கையில் மந்தைக் கூட்டம் போல் வருவதை தடுப்பதற்கு என்ன இருக்கிறது?

இந்துக்களின் சமூக குரோதப் போக்குகள்

“பத்தி 22. பின் சொன்னவர்களுக்காக பம்பாயில் வகுப்பு அமைக்கப்பட்டால், வாரியத்தின் கீழ் பணிபுரியும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் வழிகாட்டுதலில் இந்த வகுப்பில் எவரையும் விட அறிவில் மிகச் சிறந்த மனிதர்களாக இவர்களை ஆக்க முடியும். அப்பொழுது இத்தகைய கல்வி தகுதியைப் பெற்றுள்ள அவர்கள் நீதிபதிகள், ஜூரிகள், மாட்சிமை தங்கிய மன்னரின் சமாதான ஆணையத்தின் உறுப்பினர்கள் போன்ற மிக உயர்ந்த பதவிகளில் சேர விரும்புவதிலிருந்து அவர்களை யாரும் தடுக்க முடியாது. இவ்வாறு அவர்களை உயர் உத்தியோகங்களில் அமர்த்தப்படுவது சாதி இந்துக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தும். இந்த விரோத குரோதங்களுக்கு பிரிட்டிஷ் சர்க்கார் பணிவதை பண்பற்ற குறுகிய மனோபாவத்தின் உச்சக்கட்டம் என்றும், பலவீனம் என்றும் தாராள மனப்பான்மை மீது பகிரங்கத் தாக்குதல் நடத்தப்பட வேண்டுமென்றும் அவர்கள் கருதுகிறார்கள்.

மதிப்பிற்குரிய மவுண்ட் ஸ்டூவர்ட் எல்பின்ஸ்டனின் கருத்துகள்

“பத்தி 23. இந்தியாவின் இந்தப் பகுதியினரை நன்கு அறிந்தவரும், பரந்த மனப்பான்மை கொண்ட நிர்வாகியுமான திரு.எலிபின்ஸ்டன் இத்துறையில் நாம் எத்தகைய நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றார். அவர் கூறுகிறார்:

அடிமட்டத்திலுள்ள சாதியினர் தான் சிறந்த மாணவர்களாகத் திகழ்கின்றனர் என்று மதபோதகர்கள் கூறுகிறார்கள்; ஆனால் இம்மாதிரியான மக்களுக்கு எவ்வாறு விசேட ஊக்கம் அளிக்க வேண்டும் என்பதில் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவர்கள் மிகவும் இழிவாகக் கருதப்படுபவர்கள் மட்டுமல்ல; சமுதாயத்திலுள்ள மாபெரும் பிரிவுகளில் மிகவும் குறைவான எண்ணிக்கை கொண்டவர்களும் ஆவர். நமது கல்வி முறை இவர்களிடம் முதலில் வேரூன்றினால், அது ஒரு போதும் மேலும் பரவாது என்று அஞ்சப்படுகிறது; பயனுள்ள ஞானத்தில் மற்றவர்களை விட அதிகம் உயர்வான ஒரு புதிய வர்க்கத்தின் தலைமையில் நலம் இருப்பதைக் காண்போம். வெறுக்கப்படும், கேவலமாகக் கருதப்படும் சாதியினருக்கு அவர்களின் இந்தப் புதிய ஆற்றல்களின் காரணமாக, முன்னுரிமை அளிக்க நாம் எப்பொழுதும் தூண்டப்படுவோம். நமது ராணுவத்தின்மீது அல்லது மக்களில் ஒரு பகுதியினரது பிணைப்பின் மீது நமது அதிகாரம் ஆதாரப்பட்டிருப்பதோடு நாம் திருப்தியடைவோமெனில் இத்தகைய ஒரு நிலவரம் விரும்பத்தக்கதே; ஆனால் மேலும் விரிவுபடுத்தப்பட்ட அடிப்படை மீது அதை நிலைநிறுத்தச் செய்யும் ஒவ்வொரு முயற்சிக்கும் அது முரணானது.”

* * *

57. தாழ்த்தப்பட்ட சாதிகள்பால் உள்ள பகைமை உணர்வு இத்தகையது; இந்தியர்களுக்கு கல்வி அளிக்கும் சர்க்கார் கொள்கை இவ்வாறுதான் துவங்கியது. இந்தக் கொள்கை உறுதியுடன் பின்பற்றப்பட்டது. இது சம்பந்தமாக ஒரு நிகழ்ச்சியைக் கூறுவது இங்கு உசிதமாக இருக்கும்; தார்வார் மாவட்டத்திலுள்ள ஒரு சர்க்கார் பள்ளியில் சேர்க்கப்படுவதற்காக 1856ல் ஒரு மகர் சாதிப் பையன் (தீண்டப்படாதவர்) சர்க்காருக்கு மனு செய்து கொண்டான். இந்த மனுவின் பேரில் சர்க்கார் வெளியிட்ட தீர்மானத்தின் வாசகம் வருமாறு:

“கடிதப் போக்குவரத்தில் விவாதிக்கப்பட்டுள்ள விஷயம் மிகுந்த நடைமுறைச் சிக்கலான ஒன்றாகும்.

“1.கோட்பாட்டளவில் பார்க்கும் போது மகர் மனிதர் பக்கம் நியாயம் உள்ளது எனபதில் சந்தேகம் எதுவும் இருக்க முடியாது. கார்வாரில் இன்று நிலவும் கல்வி வசதியை அவர் பயன்படுத்துவதற்கு தடையாக உள்ள பகைமை உணர்வு அகற்றப்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்று சர்க்கார் நம்புகிறது.

“2.ஆனால் காலம் காலமாக உள்ள குரோதங்களுக்கு எதிராக திடீர் தீர்வுமுறையில் ஒரு தனி நபருக்காக தலையிடுவது கல்வி லட்சியத்துக்கே பெரும் தீங்கை ஏற்படுத்தலாம் என்பதை சர்க்கார் கவனத்தில் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மனுதாருக்கு இன்று ஏற்பட்டுள்ள இந்தப் பாதகமான நிலைமை இந்த சர்க்காரிடமிருந்து தோன்றவில்லை. அவர் சர்க்கார் வேண்டி கேட்டுக் கொண்டுள்ளபடி, அவருக்கு சாதகமாக, தலையிட்டுத் தன்னிச்சையாகப் போக்கக்கூடிய ஒன்றல்ல அது.”

58. 1882ல் கல்விக் கொள்கையைப் பரிசீலிக்க ஹண்டர் ஆணையத்தை சர்க்கார் நியமித்து. முகமதியர்கள் மத்தியில் கல்வியைப் பரப்ப முக்கிய பல ஆலோசனைகளை ஆணையம் அளித்தது. தீண்டப்படாதவர்களைப் பொறுத்தவரை அது எதுவும் செய்யவில்லை. அது செய்தது எல்லாம் ஒரு கருத்தைத் தெரிவித்ததுதான்: “சர்க்கார் கல்லூரி அல்லது பள்ளியில் எவரையும் சேர்த்துக் கொள்ள சாதியைக் காரணம் காட்டி மறுக்கக் கூடாது என்ற கோட்பாட்டை அவசியம் சர்க்கார் ஏற்று கொள்ள வேண்டும்” என்பதேயாகும் அது; “ஆனால் இந்த கோட்பாடு போதுமான முன்னெச்சரிக்கையுடன் செயல்படுத்தப்பட வேண்டும்” என்று அதற்கு ஒரு வரையறையையும் வகுத்துத் தந்தது.

59. இந்தக் குரோத மனோபாவம் மறைந்தபோது, அதன் இடத்தை புறக்கணிப்பும் அக்கறையின்மையும் ஆக்கிரமித்துக் கொண்டது. இந்தப் புறக்கணிப்பும் அக்கறையின்மையும் கல்வித் துறையில் மட்டும் வெளிப்படவில்லை. அது மற்ற துறைகளிலும், குறிப்பாக ராணுவத்திலும் தோன்றியது. கிழக்கு இந்தியக் கம்பெனியின் ராணுவம் முழுவதும் தாழ்த்தப்பட்ட சாதியினரைக் கொண்டதாக இருந்தது. தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினரின் ராணுவம் மட்டும் இல்லையென்றால், இந்தியாவை பிரிட்டன் கீழ்ப்படுத்தியிருக்க முடியாது என்பது உண்மை. தீண்டப்படாதவர்கள் 1892 வரை தொடர்ந்து ராணுவத்தை நிரப்பிக் கொண்டிருந்தனர். 1892-ல் ராணுவத்தில் அவர்கள் சேர்க்கப்படுவது திடீரென்று நிறுத்தப்பட்டது; கல்வியையோ, கௌரவமாக வாழ்வதற்கு மற்ற வழிகளையோ தேடிக் கொள்வதற்கு வசதி எதுவும் இல்லாமல் அவர்கள் வெந்துயரில் வாடும்படி நடுத்தெருவில் விடப்பட்டனர்.

60. இப்பொழுது அவர்கள் உழன்று கொண்டிருக்கும் துயரிலிருந்து தாழ்த்தப்பட்ட சாதியினரை யார் கைதூக்கி விடமுடியும்? அவர்களின் சொந்த முயற்சியால் அவர்கள் இதைச் செய்ய முடியாது. தங்கள் சொந்தக் காலில் நிற்பதற்கு அவர்களுக்குள்ள ஆதார அடிப்படைகள் மிக மிகக் குறைவு. இந்துக்களின் அருளிரக்கத்தின் மீது அவர்கள் நம்பிக்கை வைக்க முடியாது. இந்துக்களின் தரும சிந்தனை வகுப்புவாதத் தன்மை கொண்டது; அதன் பலன்கள் தருமம் செய்பவர்களைச் சார்ந்தவர்க்கே சென்றடையும். தானம் செய்யும் இந்துக்கள் வியாபாரிகளாகவோ அல்லது உயர் அரசாங்க அதிகாரிகளாகவோ இருக்கிறார்கள். இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவெனில், அவர்கள் பொதுமக்களிடமிருந்தே தங்கள் பணத்தைச் சம்பாதிக்கிறார்கள். தருமம் செய்ய வேண்டுமென்ற விஷயம் வரும் போது, அவர்கள் பொதுமக்களை மறந்து விடுகின்றனர்; தங்கள் சாதி அல்லது வகுப்பை ஞாபகத்தில் கொள்கின்றனர்.

தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு இந்த ஆதாரங்கள் எதுவும் இல்லை; மேற்சொன்ன இரு பகுதியினர் நிறுவியுள்ள அறநிலையங்களிலிருந்து அவர்கள் பெருமளவுக்கு ஒதுக்கப்படுகிறார்கள். எனவே அவர்கள் நம்பி இருக்கக் கூடிய ஆதாரம் சர்க்காரிடமிருந்து வரக்கூடிய நிதி உதவிதான். தாழ்த்தப்பட்ட சாதியினரைப் போன்று துன்பத்தில் உழலும் மக்களின் உதவிக்கு வரவேண்டியது மத்திய சர்க்காரின் கடமை என்று துணிந்து கூறுவேன். தாழ்த்தப்பட்ட சாதியினரின் நியாயமான உரிமைகளை ஏற்றுக்கொண்டு தங்களுடன் போட்டி போடுபவர்களோடு சமமான நிலையிலிருந்து போட்டியிட அவர்களுக்கு உதவ மத்திய சர்க்கார் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. தாழ்த்தப்பட்ட சாதியினரின் நிலையை உயர்த்த விசேட கவனம் செலுத்த வேண்டுமென்று மத்திய சர்க்காரைக் கோருவதில் அசாதாரணமானது எதுவும் இல்லை. இம்மாதிரி நினைப்பவர்கள், ஆங்கிலோ-இந்திய சமூகத்தின் நல்வாழ்வை உத்திரவாதம் செய்ய இந்திய சர்க்கார் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி கருத்தில் கொள்ளட்டும்.

(1) உயர்வான சம்பளங்கள்

இந்தியனரை விட ஆங்கிலோ-இந்தியர்கள் அதிகமான சம்பளத்தைப் பெற்ற காலம் ஒன்று இருந்தது. இதை எடுத்துக்காட்ட மூன்று ரயில்வேக்களில் பொறுக்கி எடுக்கப்பட்ட ஒரு சில பதவிகள் பற்றிய புள்ளிவிவரங்களைக் கீழே உள்ள அட்டவணையில் காணலாம்; ஆங்கிலோ-இந்தியருக்கும் இந்தியருக்கும் இடையே சம்பளத்தில் எவ்வளவு வித்தியாசம் இருந்தது என்பது இதிலிருந்து தெளிவாகும்:

பதவி ஆங்கிலோ-இந்தியர்கள் இந்தியர்கள்
வடமேற்கு ரயில்வே:    
நிரந்தர பயண மேற்பார்வையாளர்கள்

625-25-675

550-25-600

475-25-500

400-25-450

இஞ்சின் ஓட்டுனர்கள் 260-10-220 நாள் ஒன்றுக்கு ரூ.1 முதல் 1 ரூபாய் 14 அணா வரை. விசேட விகிதம் நாள் ஒன்றுக்கு ரூ.2/-
கிழக்கு இந்திய ரயில்வே:    
பயணச்சீட்டுப் பரிசோதகர்கள்

300-25-400

200-20-280

125-15-180
ஜி.பி.ஐ. ரயில்வே    

தலைமை பயணச்சீட்டும் பரிசோதகர்கள்

சுத்தம் செய்யும் ஊழியர்கள்

275

315

365

145

125-275

115

சம்பளத்தில் உள்ள வித்தியாசம் 1920 வரை தொடர்ந்து இருந்தது. அதன் பின்பு அது நீக்கப்பட்டது. ஒரு வித்தியாசம் இன்னமும் இருக்கிறது. ஆங்கிலோ-இந்தியர் அடிப்படை சம்பளமாக மாதத்திற்கு ரூ.55 பெறுகிறார். ஆனால் இந்திய சப்ராசி ரூ.13-15 தான் பெறுகிறார். ஆங்கிலோ-இந்தியர்களுக்கு இவ்வாறு அளிக்கப்பட்ட சலுகையின் காரணமாக வருடந்தோறும் தபால் தந்தி துறையில் ரூ.10,000மும் சர்க்கார் பராமரிக்கும் ரயில்வேக்களில் 75,000மும் கம்பெனி பராமரிக்கும் ரெயில்வேக்களில் ரூ.75,000மும் அரசுக் கருவூலத்திலிருந்து செலவிட வேண்டி வந்தது. மொத்தத்தில் ரூ.1,50,000.

ஆங்கிலோ-இந்தியர்கள் போட்டிகளில் வெற்றிபெற உதவும் முறையில் தந்தி இலாகாத் தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் வெற்றி பெறுவதற்கான மதிப்பெண் 50லிருந்து 40ஆகக் குறைக்கப்பட்டது. மொத்தத்தில் 66 சதவிகிதத்திலிருந்து 60 ஆகக் குறைக்கப்பட்டது.

61. இந்தியர்களை விட மேலும் பல சலுகைகளை ஆங்கிலோ-இந்தியர்கள் பெறுவதற்கு ஸ்டூவர்ட் குழு இதர பல பரிந்துரைகளையும் செய்தது. இந்தக் கோரிக்கை மனுவை மேலும் பெரியதாக ஆக்க விரும்பாததால் அவற்றை நான் இங்கு குறிப்பிடவில்லை. ஆங்கிலோ-இந்தியர்களுக்கும் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கும் இடையே எடுக்கப்பட்ட நிலையிலுள்ள தெளிவான வித்தியாசத்தை எடுத்துக்காட்டவே அக்கறை கொண்டுள்ளேன். முந்தியவர்களுக்குக் காட்டப்பட்ட சலுகையும் பிந்தியவர்கள் பால் காட்டப்பட்ட புறக்கணிப்பும் மிகத் துலாம்பரமாக தெரிகின்றன.

இந்த வேறுபாட்டை எதனைக் கொண்டு நியாயப்படுத்த முடியும்? என் அபிப்பிராயத்தில் எதுவுமில்லை. தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு உதவ மத்திய அரசு எவ்வளவு விரைவில் நடவடிக்கை எடுக்கிறதோ அந்த அளவுக்கு நல்ல சர்க்கார் என்ற பெயரை அது எடுக்கும். ஆங்கிலோ-இந்தியர்களை உயர்த்த வருடத்திற்கு 1,5000ஐ உற்சாகத்துடன் ஏற்றுக் கொள்ளும். ஒரு சர்க்கார், அதற்கு மனமிருந்தால் தாழ்த்தப்பட்ட சாதியினருக்காக ஒரு சில லட்சங்களையாவது செலவிட முடியும்.

  (பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுதி 19, பாகம் IV)

Pin It