'எனக்குச் சிரிப்பு வருவதேயில்லை. உண்மையாகச் சிரிக்கமுடியவில்லை, சிரிப்பினால் வரும் உடல் ஆரோக்கியத்தை நான் எப்படிப் பெறுவது?" என்று கவலைப்படுபவர்களே! கவலையை விடுங்கள். உங்களைப் போன்றவர்களுக்கு மேனாட்டு மருத்துவ விஞ்ஞானி குட் ஹார்ட் (Good Heart) கூறும் ஐடியா இது.

'உண்மையாகச் சிரிக்க முடியவில்லையே என்று கவலைப்படவேண்டாம். சிரிப்பதுபோல நடியுங்கள்.அதாவது பொய்ச் சிரிப்பு. அது உங்கள் தசைகளை இயங்கவைத்து உதரவிதானப் பகுதியை உசுப்பிவிட்டு, உண்மையான சிரிப்பு தரக்கூடிய அத்தனை பலன்களையும் உங்களுக்கு அளிக்கும்.

ஏனென்றால் உங்கள் உடலின் பாகங்கள் மெய்ச் சிரிப்பு - பொய்ச் சிரிப்பு என்ற வித்தியாசத்தை அறிந்துகொள்ளும் ஆற்றல் அற்றவை. சிரிக்கும்போது ஏற்படும் தசைகளின் இயக்கமே அவற்றுக்கு சிக்னல்! காலப் போக்கில் உங்களுக்கு மெய்ச்சிரிப்பு உருவாகும் ஆற்றலும் விரைவில் வந்துவிடும்!"

('Laugh and Health' நூலிலிருந்து) - கிரிஜா மணாளன்.

ஜோக்:

'கல்யாணத்துக்கு முந்தி நம்ம கேசவன் எப்பவும் சிரிப்பாவே இருப்பானே.....இப்ப எப்படி இருக்கான்?"

'சிரிப்பு இரட்டிப்பு ஆயிடுச்சுடா......"

'அப்படின்னா......?"

'பெண்டாட்டியால தெருவுல ~சிரிப்பாச் சிரிக்கறான்!|"


பிரபலங்களின் நகைச்சுவை!

பிறர் நம் வாயைக் கிளறும்; விதமாக ஒரு கேள்வியைக் கேட்கும்போது நமது பதில் அவர்களின் முகத்திலடித்தாற்போல இருப்பதைவிட நகைச்சுவையோடு இருக்குமானால் அவர்கள் மனமும் புண்படாது. அத்தகைய கேள்வியை மீண்டும்; நம்மிடம் கேட்கமாட்டார்கள். இதற்கு உதாரணமாக மகாத்மா காந்தியைப் பார்த்து ஒருவர் கேட்ட இந்தக் கேள்வியைக் குறிப்பிடலாம்.

'எப்போதும் நீங்கள் ரெயிலில் மூன்றாவது வகுப்புப் பெட்டியிலேயே பயணம் செய்கிறீர்களே ஏன்?"

அதற்கு காந்திஜியின் பதில்: 'நான்காவது வகுப்பென்று ஒன்று இல்லையே... அதனால்தான்!"

பிறர் மனத்தைப் புண்படுத்த விரும்பாத, அஹிம்சையின் நாயகரான மகாத்மா காந்தியடிகள் இவ்வாறென்றால், நகைச்சுவையுணர்வு மேனாட்டு அறிஞர்கள் இருவர் ஒருவரையொருவர் மூக்கை உடைத்துக் கொண்டதில் நமக்குக் கிடைத்துள்ள நகைச்சுவையைப் பாருங்கள்!

அறிஞர் பெர்னார்ட்ஷாவும், வின்ஸ்டன் சர்ச்சிலும் எப்போதும் தமது கௌரவத்தை விட்டுக் கொடுக்காதவர்கள். ஒரு சமயம் அறிஞர் பெர்னார்ட்ஷா வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு கடிதம் அனுப்பியிருந்தார் இப்படி:

'இன்று ஒரு பெரிய விழாவில் நான் உரையாற்றவிருக்கிறேன். நீங்கள் உங்கள் நண்பர்களோடு வந்து கலந்துகொள்ளுங்கள் - அப்படி யாராவது உங்களுக்கு இருந்தால்."

சர்ச்சில் அனுப்பிய பதில்: 'இன்று எனக்கு வேறு ஒரு முக்கியமான நிகழ்ச்சி இருக்கிறது. உங்களது அடுத்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேன் - இனிமேல் அப்படி எதுவும் நடந்தால்."

இரு அறிஞர்கள் ஒருவரையொருவர் வாரிக் கொண்டதன் மூலம் உலகத்துக்கு, சிந்தித்துச் சிரிக்கத்தக்க ஓர் அரிய நகைச்சுவை கிடைத்துவிட்டது!


-கிரிஜா மணாளன், திருச்சிராப்பள்ளி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.