கைது செய்வது எப்படி?

     வாய்ச்சொல் அல்லது செயல்மூலம் காவலுக்கு உட்படும்போது கைது முழுமைபெற்று விடுகிறது. இது போன்ற சமயங்களில், அந்த நபரைத் தொடுவதோ, உடம்பைச் சுற்றிப் பிடித்துக் கொள்வதோ தேவையில்லை. ஆனால் காவலர்கள் ஒரு நபரைச் சூழ்ந்து கொண்டு நிற்பது மட்டும் கைது செய்யப்பட்டதாக ஆகாது. (குற்றவியல் நடைமுறைச்சட்டப் பிரிவு 46)

கைது செய்வதை எதிர்த்தால் என்ன நடக்கும்?

     கைது செய்வதை நீங்கள் பலவந்தமாகத் தடுத்தால், கைது செய்வதற்குத் தேவையான அனைத்தையும் காவல்துறை அதிகாரி பயன்படுத்தலாம். (பிரிவு – 46) மரண தண்டனை, ஆயுள் தண்டனை விதிக்கக் கூடிய குற்றம் சுமத்தப்பட்டவராக இருந்தால், அந்த நபரின் உயிரையும் பறிக்கலாம். ஆனாலும் கைது செய்வதற்கு வேண்டிய அளவுக்கு மீறி பலாத்காரத்தைப் பயன்படுத்துவதை அவர் நியாயப்படுத்த முடியாது (பிரிவு – 46). எனவே தேவைப்படாத நிலையில் தேவையற்ற கட்டுப்பாடு அல்லது உடல் அசௌகரியத்தை ஏற்படுத்துதல், கால் களையும் கைகளையும் கட்டி வைத்தல் போன்றவற்றைச் செய்வதற்கு அனுமதிக்கப் படவில்லை.

நீங்கள் கைது செய்யப்பட்டு விட்டால், உங்கள் உரிமைகள் என்ன?

  • உங்கள் கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்பட வேண்டும் (அடிப்படை உரிமைகள் அரசியல் சாசனம் பிரிவு 22 மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 50).
  • பிடிப்பாணையின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தால், பிடிப்பாணையைப் பார்க்க உங்களுக்கு உரிமை உண்டு (குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 75).
  • உங்கள் விருப்பத்திற்கேற்ப வழக்கறிஞரைக் கலந்தாலோசிக்க உரிமை உண்டு. (அடிப்படை உரிமைகள் அரசியல் சாசனம் பிரிவு 22)
  • 24 மணி நேரத்திற்குள்ளாக, அருகில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பாக நீங்கள் கொண்டு செல்லப்பட வேண்டும். (அடிப்படை உரிமைகள் அரசியல் சாசனம் 22)
  • பிணையில் விடுவிக்கப்படக் கூடியவரா என்பது உங்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். (குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 50)

உங்களுக்கு விலங்கிடலாமா?

இந்திய உச்ச நீதிமன்றத்தின் (சுப்ரீம் கோர்ட்) தீர்ப்பின்படி, ஒருவர் வன்முறையாளராகவோ அல்லது மூர்க்கமான குண இயல்புடையவராகவோ அல்லது தப்பி ஓட முயற்சிப்பவராகவோ அல்லது தற்கொலைக்கு முயல்பவராகவோ இருந்தாலன்றி, கைது செய்யப்பட்ட நபருக்கு விலங்கிடக் கூடாது. கைது என்பது தண்டனையல்ல. எனவே, தேவைப்படாத நிலையில், தேவையற்ற கட்டுப்பாடுகள் அனுமதிக்கப்படுவதில்லை.

Pin It