1967 ஆம் ஆண்டு அண்ணா சட்டமன்றத்தில் சுயமரியாதை திருமணத்துக்கு சட்ட ஏற்பு வழங்கினார். அதற்கான மசோதா சட்டமாகும் முன்பு, தந்தை பெரியார் பார்வைக்கு அனுப்பி வைத்தார். மசோதாவைப் படித்த பெரியார், “மாலை மாற்றி தாலி கட்ட வேண்டும்” என்று மசோதாவில் இடம் பெற்றிருந்த பிரிவை சுட்டிக்காட்டி, “தாலியை கட்டாயமாக்கத் தேவையில்லை” என்று, ஆலோசனை வழங்கினார். முதல்வர் அண்ணாவும் மசோதாவில் தாம் கவனியாது விட்ட பிழையை பெரியார் கண்டுபிடித்து விட்டதைப் பாராட்டி, மகிழ்ந்து திருத்தத்தை ஏற்றுக் கொண்டார்.
ஆனால், ‘திராவிட’ கட்சிகளின் முக்கிய தலைவர்கள் வீட்டுத் திருமணங்கள்கூட தாலியுடன்தான் நடந்து வருகின்றன. தஞ்சையில் நடந்த திராவிடர் கழக மாநாட்டில், கலைஞர் பங்கேற்றபோது, மேடையில் திராவிடர் கழகத் தம்பியினர் அடிமைச் சின்னமான தாலியை அகற்றி, மேடையிலிருந்த கலைஞரிடம் தந்தபோது, அதை கையில் வாங்கிக் கொள்ளவே கலைஞர் மறுத்தார். தாலி - பெண்ணடிமையின் சின்னம் என்பதைவிட, தமிழர் பண்பாடு என்று ‘தமிழ்’ உணர்வாளர்கள் என்றே பலராலும் போற்றப்படுகிறது.
இந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்றத்தின் கிளை, கடந்த ஜூலை 17 ஆம் தேதி அளித்த ஒரு தீர்ப்பில், திருமணம் தாலி கட்டாமலே சட்டப்படி செல்லும். மாலை மாற்றிக் கொண்டாலே போதும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், இத் தீர்ப்பை வழங்கியுள்ளார். 1987 ஆம் ஆண்டு கோயில் ஒன்றில் காதலர்களான மாலதி-நாராயணன், மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். 1988 இல் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்தனர். தாலி கட்டாததால் திருமணம் செல்லாது என்பது கணவன் தரப்பு வாதம். மாலதி - இதை எதிர்த்து வழக்கை நடத்தினார். 1994 ஆம் ஆண்டு தீர்ப்பளித்த - கீழ் நீதிமன்றம், தாலி கட்டாமலே, மாலை மாற்றினாலே திருமணம் செல்லும் என்று தீர்ப்பளித்தது. மணமகன், உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்; உயர்நீதிமன்றமும் 21 ஆண்டுகால பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து, கீழ் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்துள்ளது.

Comments

2 comments

2
JANANI
thanks for useful message.very thanks
கி.பிரபா
பொய்யும் வழுவும் வந்த பின்னரே "தாலி" பெண்ணின் கழுத்தில் கட்டும் பழக்கம் வந்தது. ஓர் ஆண் தன் வீரத்தைக் காட்டிய நிலையில் அந்த அடிப்படையில் அவன் தனக்கு மனைவியாகப் போகின்றவளுக்கு ஒன்றைக் கட்டினான். அதுவே தாலி ஆயிற்று. ஒரு முறை தாலியைத் தொலைத்து விட்டேன்.அச்செய்தியை அறிந்தவர்கள் என்ன! தாலி தொலைந்துவிட்டதா? ச்ச! தங்கம் விற்கிற விலைக்கு என்ன பண்ணுவ? என்றுதான் கேட்டார்களே அன்றி உண்மையிலேயே தாலிக்கு மதிப்பு உண்டு என்ற சிந்தனையைத் தொடவில்லை. ஆக தாலி என்றால் அதன் விலைதான் மதிப்பு என அறிந்தேன். இந்த நிலையில் "தாலி" எதற்கு? என்றுதான் தோன்றியது. அதன் பின் சில மாதங்கள் கழித்து "தாலி" என்ற பதக்கதை அணிந்துக் கொண்டேன்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.