சொற்களைக் கடந்தவன்
என் கவிதைகளை
ஒரு முறை
வாசிக்க நேர்ந்தது
வெள்ளைக் காகிதங்களில்
வார்த்தை சடலங்களாய்
குவிந்து கிடக்கின்றன என்றான்
வார்த்தைகளற்று நீ எவ்விதம்
கவிதை இயற்றுவாய் என்றேன்
வார்த்தைகளனைத்தும்
உன்னை கைவிட்டுப் போன நாளில்
உன் உள்ளங்கையில் வந்தமரும்
அந்த வண்ணத்துப்பூச்சியை
பார்த்துக் கொண்டிரு
அது போதும் என்றான்

- தங்கேஸ்