memories 500

ஒரு பூ காம்பிலிருந்து
உதிர்வது போல
விடைபெற நினைத்தவர்களை
வெண்புறாவின் கழுத்தை
சட்டென்று திருகி
எடுத்துவிடும் இரக்கமற்ற விரல்கள்
இரத்தம் கொப்புளிக்க கொப்புளிக்க
இந்தப் பிரிவு
நாம் ரோஜா விதைகளை
விண்ணிலே தூவுவோம்
நட்சத்திரங்களில் ஒன்றாகவாவது
அவர்கள் பிறப்பெடுக்கலாமில்லையா?
நம்மைச் சுமந்தவர்களை
ஒரு சுவாசமாக மாற்றி
வைத்துக் கொள்வதினால் தான்
இன்னும் இதயம்
துடித்துக் கொண்டிருக்கிறதா?
விடைபெறும் நாட்களில்
எந்தப் பெயர் தெரியாத பறவை வந்து
வழிகாட்டப் போகிறதோ நமக்கு
உள்ளே தேக்கி வைத்திருக்கும் சுவாசங்களை
எந்தப் பறவையின் சிறகிலேற்றி
அனுப்பப் போகிறோமோ அப்போது?
ஒரு நதியில் நாம் இருமுறை
மூழ்க முடியாதென்றாலும்
இதே நதி இன்னொருமுறை
இதே இடத்தில்
இதுபோலவே
ஓடக்கூடும் என்ற
நம்பிக்கையில் தானே
நதி முழுவதும் நினைவுகளை
தூவிவிட்டுச் செல்கிறோம்?

- தங்கேஸ்

More articles by தங்கேஸ்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.