சொற்றொடரிலிருந்து
ஒலிக்குறிப்பாகி
ஒலிக்குறிப்பிலிருந்து
மெளனமாகி
மௌனம் திறக்கும்
மகா சந்நிதானத்தில்
இதயத்தின் துடிப்போசையாகி
துடிப்போசையைத் தவிர
கேட்பதற்கு வேறு ஏதுமில்லை என்றாகி
முடிகிறது இந்தக் கவிதை
சிவப்பு தீற்றல் கொண்ட
விண்வெளியின் பிண்ணனியில்
இருசிறகுகளையும் முற்றாக விரித்த
வெண்பறவையின் காட்சிப் படிமத்தை
நீங்கள் கண்கள் மூடி
கண்டு கொண்டால் போதும்
அதன் ஆகப் பெரும் நிழல்
உங்கள் ஆன்மாவின் மீது
அசைய ஆரம்பித்துவிடும்
சலனமற்று பாவி வரும் நதியில்
நனைந்த உங்கள் விரல்களை
கரையோர மணலில் புதைத்து விட்டு
காத்திருந்தால்
விரலிடுக்குகளில் உருளும்
மணல்துகள்களோடு
மேவிப்போகும் நதிநீர்
உங்கள் பெயரை உச்சரித்தபடியே
கடலில் கலந்துவிடும்
ஓர் நாள்
- தங்கேஸ்