யுனெஸ்கோ என்ற உலக கல்வி நிறுவன அமைப்பு மக்களிடையே புத்தகங்கள் படிக்கும் வழக்கத்தை ஊக்குவிக்கவும், அதற்காக அதிக புத்தகங்களை

வெளியிடவும் முடிவு செய்தது. அதன் அடிப்படையில் தொடர்ந்து, உலகம் முழுவதும் 1995 முதல் ஏப்ரல் 23 உலக புத்தக தினமாக அனுசரிக்கப்படுகிறது.

ஐரோப்பாவில் வாழ்ந்த இலக்கியவாதியான வில்லியம் ஷேக்ஸ்பியர், உலக மக்கள் வியக்கும் ரசிக்கும் உலகின் தலைசிறந்த சோக காவியம் லியா அரசன், காதல் காவியம் ரோமியோ ஜீலியட்’ ஜுலீயஸ் சீசர், ஒத்தெல்லோ போன்றவையும் மச்சடோ அபட் நத்திங் என்ற நகைச்சுவை நாடகங்களையும் எழுதியவர். இவர் பிறந்ததும், உலகை விட்டு மறைந்ததும் ஏப்ரல் 23ல் தான்.

1923ல் ஸ்பெயின் நாட்டில் ஏப்ரல் 23-ம் நாள் இறந்த பிகுல்டி செர்வென்டிஸின் நினைவாகவும் புத்திகதினம் கொண்டாடுவதாக சொல்லப்படுகிறது. முதல் புத்தகம் குகையும் எலும்புகளும்! இன்றைய நவீன அறிவியல் யுகத்தில், வலைத்தளமும், தொலைபேசி, கைப்பேசிகளும், மின் அஞ்சலும் முக்கியமாக தொலைகாட்சியும், மக்களின் புத்தகம் படிக்கும் பழக்கத்தைப் குறைத்து விட்டன. ஆனால் புத்தகம்தான் நிரந்தரமாய் நிலைத்து நிற்கும் பொருள்.

வலைத்தளத்தில் என்னதான் படித்தாலும், புத்தகம் படிக்கும் சுவையும், இன்பமும், இரசனையும் நிச்சயமாக வலைத்தளத்தில் கிடைக்காது. புத்தகம் என்பது ஒருவரின் சொத்து. எழுத்துக்களின் முதல் பதிவு, குகைச் சுவர்களிலும், இஷாங்கோ எலும்புகளிலும் சுமார் 37,000 ஆண்டுகட்கு முன் நிகழ்ந்தன.பின்னர் களிமண் பலகைகளிலும், பாப்பிரஸ் மரப்பட்டைகளிலும் எழுதப்பட்டன. அவையனைத்துமே புத்தகங்கள்தான்!.

.எழுத்தாளர் தினம்... புத்தக தினம்..!

காதலர்கள் தமக்குத் தரும் ரோஜாப்பூக்களுக்குப் பதிலாக பெண்கள் அவர்களுக்கு புத்தகம் பரிசாகத் தந்தனராம். 1616ம் ஆண்டில், ஏப்ரல் 23 உலக இலக்கிய தினமாக்க் கருதப்பட்டு, ஒவ்வொரு புத்தகம் விற்கும் போதும் அதனுடன் ரோஜா பூ காட்டலோனியாவில் அன்பளிப்பாக தரப்பட்டதாம். 1616ம் ஆண்டு ஏப்ரல் 23ல் உலக எழுத்தாளர்களான செர்வெண்டிஸ், இன்னா, ஷேக்ஸ்யியர் போன்றோர் இறந்தனர். ஏப்ரல் 23ல்- மாரிஸ், ஹால்டோர் லேக்ஸனஸ், விளாதிமிர் நோபோகோவ்,ஜோசப் பிலா மற்றும் மானுவல் மெஜியா போன்ற எழுத்தாளர்கள் பிறந்தனர்.

புத்தக தினத்தில் அனுவரும் புத்தகம் வாங்க வேண்டும் என உறுதி மொழி எடுக்கவேண்டும். “மனிதனின் கண்டுபிடிப்புகளில் மிகச்சிறந்தது புத்தகமே” என இருபதாம் நூற்றாண்டின் சிறந்த விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறினார்..

நாகரிக வரலாறு..!

உலகின் வரலாறு சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது. உயிரினம் 350 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவானது. மனித இனத்தின் சரித்திரம் மற்றும் பரிணாமத்தின் வயது 50,00,000 ஆண்டுகள். நாம் பல நிலைகளைக் கடந்துதான இன்று ‘வெள்ளையும் சள்ளையுமான’ நாகரிக மனிதர்களாய் பரிணமித்துள்ளோம். ஆதி மனிதன் காடுகளிலும் மலைகளிலும் குகைகளிலும் வாழ்ந்திருக்கிறான். சக்கரம் சுழலத் துவங்கிய பின்தான், மனித தொழில்நுட்பத்தின் பரிணாமத்தின் முதல் அத்தியாயம் துவங்கியது.!. ஆனால் அதற்கு முன்பே, மனிதன் தன் கருத்துக்களை, எண்ணங்களைப் பதிவு செய்யத் துவங்கி விட்டான். எத்தனை ஆண்டுகளுக்கு முன் இருக்கலாம் என எண்ணுகிறீர்கள்? சுமார் 35,000 ஆண்டுகளுக்கு முன்பு!

முதல் பதிவு!

ஆதி மனிதன் குகைகளில் எழுதத்துவங்கு முன்பே, எலும்புகளில் எழுதி விட்டான். ஆம் பபூன் குரங்கின் கை எலும்பில், குறியீடாக மாதத்தின் நாட்களை பெண்கள் குறித்து வைத்துள்ளனர். “லெபோம்பா” என்ற இடத்தில் கிடைத்ததால், அதன் பெயர் “லெபோம்பா” எலும்பு. அதன் வயது 37;000 வருடங்கள் ஆகும். பெண் தன் மாதவிடாய் தின குறிப்பேடாக பயன்படுத்தியதுதான் “லெபோம்பா எலும்பு”. இதில் 29 பட்டைகள் உள்ளன. “இஷாங்கோ” என்ற இடத்தில் கிடைத்த எலும்பின் பெயா “இஷாங்கோ எலும்பு” இதன் வயது 20,000 முதல் 25,000 ஆண்டுகள் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 3 வரிசையில் எண்கள் பற்றி “டாலி” மார்க் செய்துள்ளனர் அக்கால மனிதர்கள்.!. இதில் 6 மாத சந்திர காலண்டர் பொறிக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் காய்கறி விற்கும் பெண்கள் நம் வீட்டு சுவரில் கரிக்கோடு போடும் விஷயங்கள் மண்டைக்குள் ஓடுகின்றதா?

பயம் வந்தது..!

எலும்பில் எழுதிய மனிதன், மலையின் குகைகளில் எழுதினான். பிறகு பாப்பிரஸ் மரப்பட்டைகள், ஆடு மற்றும் கன்றுக்குட்டியின் தோல்கள், மரப்பட்டைகள், களிமண், மண் ஓடுகள் மற்றும் பேப்பர்கள் என, எழுத்தின் பதிவு கொஞ்சம் கொஞ்சமாக பரிணாமம் பெற்று இன்று மின்னஞ்சலில் வலைத்தளத்தில் இ-எழுத்தாக மாறியுள்ளது. இதன் மூலம் எழுத்துக்கள் பதித்த புத்தகம் காணாமல் போய் விடுமோ என்ற அச்சம் பிறந்துள்ளது.

காலப்பதிவுகள் மனித பரிணாமத்தில்!

கி.மு 1,00,000 - 40,000: பேச்சு பிறந்தது.

கி.மு 30,000 - குகை ஓவியம்,கிறுக்கல்கள்: ஐரோப்பாவில்

கி.மு 20,000 - 6,500: விலங்குகளின் எலும்பில் எழுத்து பிரான்சில்

கி.மு 5,500 - 4,500: எழுத்துப் பதிவின் துவக்கம்:ஆப்பரிக்கா

கி.மு 3,500 - 3,000: சுமேரியா படப் பதிவுகள்

கி.மு 3,000 - 2,800: எகிப்தின் களிமண் பதிவுகள்

கி.மு 2,500 - உலகின் கிழக்கு நோக்கி கியூனிபாம் பரவுதல்

கி.மு 2500 - சிந்து சம வெளி நாகரிகம், எழுத்து, படப்பதிவுகள்

கி.மு 2100 - களிமண் எழுத்துக்கள்,எலும்பு எழுத்துக்கள் கண்டுபிடிப்பு

கி.மு 1500 - சீனர்கள் குறியீட்டு எழுத்துப்பதிவு

கி.மு 1400 - உகாரிட் பதிவுகள்

கி.மு 1100- 900: நவனீ எழுத்துக்கள்

கி.மு 800 - கிரேக்க நவீன எழுத்துக்கள்

நூலக பிறப்பு!

கி.மு 247ல் எகிப்தின் அலெக்சாண்டரியாவில், உலகின் மிகப் பெரிய நூலகம் இருந்தது. சுமார் 7,00,000க்கும் மேற்பட்ட ஆட்டுத்தோல் புத்தகங்கள் இருந்தன. இங்கு 5,000 மாணவர்கள் படித்தனர், நாம் பயன்படுத்தும் காகிதத்ததை சீனர்கள் கண்டுபிடித்தாலும் புத்தகப் புரட்சியை செய்தவர்கள் அரேபியர்கள்தான். இஸ்ஸாமியர்களிடமிருந்தோ பேப்பர் புத்தக பரிமாணம் துவங்கியது. 8ம் நூற்றாண்டில், மொராக்கோவில் 100 புத்தக கடைகள் இருந்தனவாம். இந்தியாவில் கி.பி. 2ம் நூற்றாண்டில் ஆந்திராவில் நாகார்ஜீன அரசன் உருவாக்கிய நூலகம் நாகார்ஜீன வித்தியா பீடம். இதில் பல விலங்குகளின் வடிவில் 5 மாடிகளும், 1500 அறைகளும், ஏராளமான புத்தகங்களும் இருந்தன. நாளந்தா பல்கலைக்கழகத்தில், 7ம் நூற்றாண்டில் 68,700 பனை ஓலை நூல்களும், 36,058 பாப்பிரஸ் சுருள் புத்தகங்களும் இருந்தன.

கருத்துக்களின் விதை நூலகம்!

தமிழ்நாட்டு நூலக வரலாற்றின் பிதாமகன் ராமாமிர்தம் ரங்கநாதன். இவர்தான் சென்னை மாநிலத்தின் நூலகத் தந்தை என்று அழைக்கப்பட்டவர், 1928 ஜனவரியில் சென்னை நூலக சங்கம் ரங்கநாதனால் உருவாக்கப்பட்டது. 1931ல் அக்டோபர் - 21ம் நாள் புதன் கிழமை மாலை 5 மணிக்கு மன்னார்குடிக்கு அருகில் உள்ள மேல வாசலில் நடமாடும் நூலக வண்டிப்பயணம் தொடங்கப்பட்டது. அங்கு 72 கிராமங்களில், 275 பயணங்கள் இந்த வண்டி மூலம் நடத்தப்பட்டது. இதில் 3782 புத்தங்கள்; 20,000 தடவைகளுக்கு மேல் மக்களுக்குப் கொடுக்கப்பட்டு, திரும்பப் பெறப்பட்டன!. ஆனால் இன்று அரசுப் பள்ளிகளில் கூட நூலகம் இல்லாத நிலைமை! மனித நாகரிக வளர்ச்சியின் பதிவு நூலகமே!

மனிதன் வரலாற்றுக்குரியவன். நேற்று, இன்று, நாளை என்ற மூன்றும் இவனுக்குரியவை. சமூகத்தில் நிலவும் கருத்தாக்கங்கள், நம்பிக்கைகள், சந்தேகங்கள்,சவால்கள், மதிப்பீடுகள், நுணுக்கமான கருத்துக்கள் அனைத்தும் கல்விப் பொருளாக புத்தங்களாக மாற வேண்டும். அத்தகைய உள்ளடக்கம் கொண்ட கல்விதான் மக்களை விடுதலை செய்யும.

“மனிதனின் இருப்பு மௌனத்தால் கட்டப்படவில்லை. அவன் வார்த்தைகளால்செயல்களால் எதிர்வினை தூண்டும் ஆழமான நடவடிக்கைகளால்

கட்டமைக்கப்படுகின்றன.”   பாவ்லோ பிரையர்.

இதனை செய்வது புத்தங்களே..! அனைவரும் மூளையை உரசிப் பார்க்கும் புத்தகங்களை வாங்குங்கள்..! குழந்தைகள், நண்பர்கள், நெருங்கியவர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் புத்தகங்கள் பரிசளியுங்கள்..! புத்தகம்தான் சமூக மாற்றத்திற்கான திறவுகோல்.;

-மோகன்காந்திஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pin It