இராசராச சோழனைப் பற்றி இயக்குனர் பா.ரஞ்சித் விமர்சித்துப் பேசிய காணொளியில், திராவிடர் இயக்கத்தையும், நீதிக்கட்சியையும் விமர்சித்தே பேசியிருக்கிறார்;

ஆனால் இராசராசனுக்கு ஆதரவாக நின்று, வலதுசாரி தமிழ்த் தேசியக் குழுக்களும், காவிக் கும்பல்களும், சாதியக் கூட்டமும் இரஞ்சித்தைக் கடுமையாக எதிர்த்து வந்த காரணத்தால், இந்த விடயத்தை வைத்து தற்போது இரஞ்சித்தின் திராவிடர் இயக்க எதிர்ப்பு பேச்சைப் பற்றி பேச வேண்டாம் என பொறுமை காத்தோம்; இப்போது இராசராசன் விவகாரம் சற்று ஓய்ந்த காரணத்தால் இரஞ்சித்தின் திராவிடர் இயக்க ஒவ்வாமை குறித்துப் பேசுவோம்.

pa ranjith 370இரஞ்சித் வரலாற்று அறிவின்றி திராவிடர் இயக்கத்தை விமர்சிப்பது இது முதல் முறையல்ல; இதற்கு முன்பே பல முறை விமர்சித்துள்ளார்; அனைத்து விமர்சனமும் அரசியல் அறிவின்றி, கள நிலவரம் தெரியாமல், தனக்குப் பயிற்றுவித்தவர்களின் வார்த்தைகளை அப்படியே வாந்தி எடுக்கும் ஆர்வக்கோளாறு வேலையாகவே இருந்த‌து.

அதன் தொடர்ச்சியாக தான் இந்தக் காணொளியிலும் உளறியுள்ளார்; அதாவது பார்ப்பனிய எதிர்ப்பு மட்டும் தலித் ஆதரவு ஆகாது என்கிறார். அதாவது அவர் கூற வருவதை நான் எப்படி புரிந்து கொள்கிறேன் என்றால், 'திராவிடர் இயக்கத்தினர் பார்ப்பன எதிர்ப்பை பிரதானமாக வைத்துள்ளனர், இடைநிலை சாதி எதிர்ப்பை முன்னிலைப்படுத்துவதில்லை என்கிறார்' என.

சென்ற ஆண்டு 'சேரிகளில் பெரியார் சிலை இருக்கு, ஊர்த் தெருக்களில் அம்பேத்கர் சிலை இருக்கா?' எனப் பேசினார்; இந்தப் பேச்சும், தற்போது பேசியுள்ள பேச்சின் மூலமும் இரஞ்சித் கூற வருவது இதைத் தான்:

1) திராவிடர் இயக்கம் தலித்துகளுக்கானது அல்ல;
2) பெரியார் தலித்துகளுக்கான தலைவர் அல்ல;
3) தலித்துகளின் தலைவரான அம்பேத்கரை இடைநிலைச் சாதிகள் ஏற்பதில்லை, எனவே இடைநிலை சாதிகளின் தலைவரான பெரியாரை தலித்துகள் புறக்கணிக்க வேண்டும்
4) பார்ப்பனிய எதிர்ப்பைப் போல, இடைநிலை சாதிகளையும் எதிரிகளாகத் தான் அணுக வேண்டும்.

( அண்ணன் திருமாவின் வெற்றியை ஒவ்வொரு திராவிடர் இயக்கத்தினரும் எதற்காக மனதாரக் கொண்டாடினர் என்ற ஒற்றைத் தேடுதல் உங்களுக்கான அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்கும் திரு. இரஞ்சித் அவர்களே !!)

இவை தான் இரஞ்சித்தின் மிக முக்கிய கோரிக்கைளும், கொள்கைகளும், சுருக்கமாகச் சொல்வதென்றால், திராவிடர் இயக்கத்தையும், பெரியாரையும் தலித் மக்களிடமிருந்து அந்நியப்படுத்துவது தான் ஒற்றை அஜெண்டா. வேறு வரிகளில் சொல்வதென்றால் தலித் மக்களை பொது நீரோட்டத்திலிருந்து தனிமைப்படுத்துவது.

இதிலிருந்து இரஞ்சித் பெயருக்குக் கூட அம்பேத்கரை வாசித்தது இல்லை எனத் தெளிவாகிறது; அம்பேத்கர் சித்தாந்த ரீதியாக எந்த இடத்திலாவது இடைநிலைச் சாதி எதிர்ப்பை முன்மொழிந்துள்ளார் என இரஞ்சித் காட்டட்டும்; அப்படிக் காட்டினால் இன்றே அரசியலில் இருந்து விலகத் தயார்.

(தலித்துகளுக்கு எதிராக இடைநிலைச் சாதியினர் செயல்படுகையில், இடைநிலைச் சாதிகளுக்கு எதிராகத் தான் திராவிடர் இயக்கம் நின்றிருக்கிறது; விசிக போன்ற அமைப்புகளும் எதிராகத் தான் நிற்கும். ஆனால் அது அந்த விடயத்திற்காக உடனடி எதிர்வினையேயின்றி சித்தாந்த ரீதியான எதிர்ப்பில்லை)

இந்த சமூகத்தில் பார்ப்பனியத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது அடிமட்டத்தில் இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களான நாமாகத் தானே இருக்க முடியும்!!

காரணம், பார்ப்பனியத்தை, வர்ணாசிரமத்தை எதிர்த்து நின்ற மக்கள் என்பதாலேயே பார்ப்பனக் கூட்டத்தால் சேரியிலும், ஊருக்கு வெளியேயும் ஒதுக்கப்பட்டோம்!!

அதே போல ஏனைய சூத்திர மக்களையும் பல்வேறு சாதிகளாகப் பிரித்து, உண்மை எதிரியான பார்ப்பனியத்திற்கு எதிராக அணிதிரள விடாமல் பிரித்தாண்டு, இரண்டாயிரம் ஆண்டுகளாக பார்ப்பனியம் வெற்றி பெற்று வருகிறது!!

ஆக பார்ப்பனியத்தின் சூட்சுமம் என்பது பிரித்தாளும் சூழ்ச்சி என்றால், நம்மை ஒடுக்கிய பார்ப்பனியத்தை வீழ்த்தும் சூட்சுமம் என்பது ஏனைய மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பார்ப்பனியத்தை தனிமைப்படுத்துவது தான்!!

அதனால் தான் பெரியார், பார்ப்பனர்கள் யாரை வைத்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக காய் நகர்த்துகின்றனரோ, அந்த இடைநிலை சாதி மக்களிடையேயே சென்று, "நீயே பார்ப்பானுக்கு அடிமை, உனக்கு என்ன தகுதி இருக்கு தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்க?" எனப் பரப்புரை செய்து, அந்த மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, எந்த வேறுபாட்டை ஊதி ஊதி வளர்த்து பார்ப்பனர்கள் குளிர் காய்ந்தனரோ, அதை உடைக்கும் அரசியலை முன் வைத்தார்.

அதையே தான் அண்ணல் அம்பேத்கரும் முன் வைத்தார்.

"தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலை என்பது, பார்ப்பனியத்தின் சூழ்ச்சியைப் புரிந்து கொண்டு இடைநிலை சாதிகள் விழிப்புணர்வடையும் நாளே" என்றார்.

"அம்பேத்கர்கள் தாழ்த்தப்பட்ட மக்களில் இருந்து மட்டும் வந்தால் போதாது, அம்பேத்கர்கள் இடைநிலை சாதிகளில் இருந்து உதிக்க வேண்டும்" என அதே பொருளில் தான் அண்ணன் திருமாவும் தொடர்ந்து முன் வைக்கிறார்.

சரி விசயத்துக்கு வருவோம்!!

அண்ணலும், பெரியாரும் நமக்கு எதிராக உள்ள இடைநிலைச் சாதி மக்களைக் கூட நம் பக்கம் இழுக்க வேண்டும், அது தான் நம் விடுதலைக்கான அச்சாரம் என தங்களின் அரசியல் கோட்பாடாக முன்வைத்துச் சென்றனர்.

ஆனால் இரஞ்சித்தோ, நமக்கு ஆதரவாக உள்ள திராவிடர் இயக்கத்தினரைக் கூட, "நீ அந்தப் பக்கம் போ!" என விரட்டும் அரசியலை இளைஞர்களின் உணர்வுகளோடு விளையாடி கனகச்சிதமாகச் செய்கிறார்.

பார்ப்பான் எந்தப் பிரித்தாளும் சூழ்ச்சியைப் பயன்படுத்தி இரண்டாயிரம் ஆண்டுகளாக நம்மை அடிமையாக வைத்தானோ, அதே வேலையை ரஞ்சித்தும் செய்கிறார் என்றால்...

பிறகு அம்பேத்கரின் கருத்தியலில் இருந்து ‘நீங்க என்னத்த கத்துக்கிட்டீங்க’ என்று இரஞ்சித்தைப் பார்த்து கேட்கத் தான் வேண்டும்.

இரண்டாயிரம் வருடமா என்ன நிலையோ, அதே நிலை தான் தொடர வேண்டும் என்பது தான் உங்கள் ஆசையா, இரஞ்சித் அவர்களே!!

- மனோஜ் குமார், தந்தை பெரியார் திராவிடர் கழகம்

Comments

4 comments

4
PRADEEBAN R
What has been transformed after 2000 years bro...
I thing that span 2000 years it has got more severe for, am I right?
amuthan
#"தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலை என்பது, பார்ப்பனியத்தின் சூழ்ச்சியைப் புரிந்து கொண்டு இடைநிலை சாதிகள் விழிப்புணர்வடையும் நாளே"# -- இந்த விழிப்புணர்வு எப்ப சாத்தியம் தோழர்

"பார்ப்பனியத்தை, வர்ணாசிரமத்தை எதிர்த்து நின்ற மக்கள் என்பதாலேயே பார்ப்பனக் கூட்டத்தால் சேரியிலும், ஊருக்கு வெளியேயும் ஒதுக்கப்பட்டோம்!!"# - பார்ப்பான் இல்லாத ஊர்லயும் நாங்க சேரில தான் வாழறோம் , இது எப்படி தோழர் ..

"தலித்துகளுக்கு எதிராக இடைநிலைச் சாதியினர் செயல்படுகையில், இடைநிலைச் சாதிகளுக்கு எதிராகத் தான் திராவிடர் இயக்கம் நின்றிருக்கிறது;"## - தலித்துகளுக்கு எதிராக செயல் படுகிறவர்கள் இடைநிலைச் சாதியினர்தான், வேறு யார் ??
Vinayagam
இரஞ்சித் சொல்பவைகளை தமிழ்நாடடுச் சூழ்நிலைகளை வைத்துதான் பார்க்க வேண்டும். அம்பேத்கர் தமிழ்நாட்டில் வாழவில்லை. அவர் தமிழ்நாட்டின் சாதி அமைப்புகளைப்பற்றியும் ஒரு தமிழ் தலித்தின் வாழ்க்கையைப்பற்றியும் நேரடியாக பார்க்கவில்லை. அவர் ஒரு தியரிஸ்ட். தலித்துகள் என்று இந்திய ஒற்றை மட்டுமே பார்த்து அவர் கருத்துக்கள் அமைகின்றன. அதன்படி அவர் ஆற்றிய தொண்டுகள், தமிழ் தலித், யு பி தலித் என்று பிரிக்காது. எனவே ஒட்டுமொத்த இந்திய தலித்துக்கள் அவரைத் தங்கள் ஒரே தலைவராக நினைக்க முடிந்தது. ஒவ்வொரு மாநிலத்தில் வாழம் அந்தந்த மாநில தலித்துக்களின் வாழ்க்கை மற்றவர்களிடமிருந்து சிற்சில அல்லத் பெரும் வேறுபாடுகள் கொண்டுதான் என்பது தமிழகத்தை விட்டு நகராமல் இருப்போருக்குத் தெரியாது. இரஞிச்த்தை நான் ஒரு தமிழ்தலித்தாகத்தான் பார்க்கிறோம். திருமாவின் செயல்கள் அரசியல்வாதியின் செயல்கள். நிலையில்லாதது; சந்தப்பர்ப்ப‌ வாதம் அதனால் வரும் பலன்களுமே ஓர் அரசிய்வல்வாதியின் வாழ்க்கை. எனவே இரஞ்சித் அரசிய்லுக்குள் நுழையாதவரை, திருமாவையும் இரஞித்தையும் ஒப்பிட்டுப் பேசமுடியாது.

திராவிட இயக்கத்தின் குறையோ, நிறையோ, அவர்கள் அஜண்டா பார்ப்பன எதிர்ப்பே. மற்ற அஜென்டாக்கள் உள, ஆனால், முக்கியமில்லாதவை. அப்பார்ப்பன எதிர்ப்புக்கு இடைநிலை ஜாதியினர் சேர்க்கும் வலுதான் அவர்களுக்கு வேண்டும். தலித்துகள் மேல் காட்டப்படும் தீண்டாமை நிலையும், இடைநிலை ஜாதியினர் பார்ப்பனரால் இழந்தவையும் வெவ்வேறு தளத்தைக் கொண்டவை. இடைநிலை ஜாதியினருக்கு பொருளுநாதார, அரசியல் பங்கீட்டு பிரச்சினை இருந்தது. பார்ப்பனரை நகட்டினால், நந்தியை நகட்டியது போல: சிவனை வணங்க முடியும். தலித்துக்கள் உதவி தேவையேயில்லை. தலித்துக்களையும் இழுத்ததாகச் சொன்னது மெகா கூட்டணியில் லெட்டர் பேட் கட்\சிகளையும் வைத்துக்கொள்வது போல. உப்புக்குச் சப்பை. ஆயினும் என்னோடு இருந்துகொள். எண்ணிக்கை கூடிய மாயைக்கு உதவுவாய்!!

தலித்துகளுக்கு அன்று திராவிட இயக்கத்தின் ஆதரவு தேவைப்பட்டது. காரணம் கம்யூனிஸ்ட்கள் ஏண்ணிக்கை குறைவு. பரவலான ஆன்டி எஸ்டாப்லிஸ்மென்ட் திராவிட இயக்கத்திலிருந்தே பரலாக கிடைத்தது. . இன்று கம்யூனிஸ்டுகளும் தேவையில்லை; திராவிட இயக்கமும் தேவையில்லை. தலித்துக்களுக்குத் தலைவர்கள் அவர்கள் ஜாதியிலிருந்தே வரும்படி கல்வி பெருகி விட்டது.

எனவே, மனோஜ், இன்றைய உலக்குக்கு வந்து இரஞ்சித் என்ற தமிழ் தலிதத்தைப் பாருங்கள்.
வெற்றி செல்வன்
மிக சரியான பதிவு ... வாழ்த்துகள்... ஆம் இடை நிலை சாதிகளும் ( அதில் சமூகத்தை நேசிப்பவர்கள்... சமூக மாற்றத்தை நேசிப்பவர்கள் ) சாதி ஒழிய வேண்டும் என விரும்பும் யதார்த்தமான நிலையில் அதுபற்றி எவ்வித அக்கறையும் பொறுப்பும் இன்றி தான் தோன்றி தனமாக ... ஒடுக்கப்பட்ட மக்கள் பிற்படுத்தப்பட்ட மக்களை காலம் பூராவும் எதிரியாகவே பார்க்க வைக்க ரஞ்சித் போன்றவர்கள் தனி அரசியலை முன் வைக்கின்றனர் ... இங்கு பார்ப்பனியம் என்பது வெறுமனே ஊரு சேரி என மக்களை பிரிப்பதோடு நில்லாமல் இந்திய ஏகாதிபத்திய கட்டமைப்பாக னின்றும் நம்மை ஒடுக்குகிறது ...இதுபற்றி வாய் திறக்காமல் வெறுமனே இடைநிலை சாதிகளை எதிரிகளாக காட்டுவது பொது எதிரியான பார்ப்பனியத்தின் பங்களிப்பை மறுப்பதே ! ரஞ்சித் அரசியலை படிக்கட்டும்..பிறகு பேசட்டும்...

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.