கேதார்நாத் - ருத்ரா மெடிடேசன் குகையில் இந்திய மக்களின் நன்மையின் பொருட்டு மோடி தியானம் செய்ததற்கு, ‘தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு’ என்ற வடிவில் வந்து கடவுள் அருள்புரிந்து இருக்கின்றார். கருத்துக்கணிப்பு நடத்திய முதலாளிகளின் மூளையில் நுழைந்த கடவுள் இந்த இந்து மண்ணை ஆளும் ஒரே தகுதி மோடிக்கு மட்டுமே உள்ளது என்றும், அவரால் மட்டுமே ராமராஜ்ஜியத்தை நடத்த முடியும் என்றும் சொல்லி மோடிக்கு சாதகமாக கருத்துக்கணிப்பை மாற்றி, அடுத்து மோடிதான் ஆட்சிக்கு வருவார் என்று வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்பே உலகிற்கு உண்மையை உரைத்திருக்கின்றார். நிரந்தரக் கடவுளின் இந்த வரத்திற்காகவே காத்திருந்த பங்குச்சந்தையின் தற்காலிகக் கடவுள்கள் தங்கள் பங்குக்கு வாமன அவதாரத்தைக் காட்டி மோடிக்கு வாழ்த்து சொல்லி இருக்கின்றார்கள்.

Modi Kedarnath caveஇப்போதே இந்திய மக்களுக்கு பேதி ஆக ஆரம்பித்து இருக்கின்றது. மோடியின் ஐந்தாண்டு ஆட்சியில் அவர் நடந்த அதிசய மாற்றங்கள் அவர்களின் மனக்கண்ணில் வந்து வந்து போகின்றது. ஏடிஎம் வாசலில் நின்று, மோடி இந்திய மக்களுக்கு பம்பர் பரிசாகக் கொடுத்த பதினைந்து லட்சத்தை எடுக்க இரவு பகல் பார்க்காமல் மணிக்கணக்கில் காத்துக்கிடந்த அந்த அற்புதத் தருணங்களும், ஜிஎஸ்டி மூலமாக கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு அவர்கள் நீண்ட காலமாக அனுபவித்து வந்த கடுமையான உழைப்பில் இருந்து விடுவித்து அனைவரையும் ஓய்வுகொள்ளச் செய்த அதிசய தருணத்தையும் நினைத்து உடல் முழுவதும் பரவச உணர்வு பரவ, அவர்களை அறியாமலேயே பேதி ஆகிக் கொண்டு இருக்கின்றது.

மோடி ஒரு கர்மயோகி என்று அவரது கட்சிக்காரர்களே தற்போது கண்டுபிடித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கின்றார்கள். கருமம் செய்ய வேண்டியது ஒருவனது கடமையும் தேவையும் ஆகும் என்று பகவத்கீதையில் உபதேசம் செய்யும் கிருஷ்ணன் “மேன்மையான மனிதன் எதைச் செய்கிறானோ அதையே பிறரும் செய்கின்றனர். அவன் எதைத் தகைமையானது என்று நிலை நிறுத்துகிறானோ அதையே உலகம் பின்பற்றுகிறது" என்று கூறுகின்றான்.

இதன் சாரமான பொருளை யார் அறிந்து கொள்கின்றார்களோ அவர்களால்தான் மோடியை அறிந்து கொள்ள முடியும். கீதை குறிப்பிடும் அச்சு அசலான மேன்மையான மனிதர் மோடிதான். அவர் சங்கிகளுக்கு ஒரு வழிகாட்டியாக தற்போது மாறி இருக்கின்றார். அரசியலில் வெற்றி பெற வெறும் வாய்ஜாலம் மட்டுமே போதாது என்பதை மோடி சங்கிகளுக்கு மட்டுமல்லாமல் அரசியலில் பல ஆண்டு காலமாக பழம் தின்னு கொட்டை போட்டவர்களுக்கே கற்றுக் கொடுத்து இருக்கின்றார். தியானத்தைக் கூட எப்படி செய்தால் கடவுள் வரம் கொடுப்பார் என்பதை மண்டையில் உரைத்தார்போல ஆன்மீக ஞானிகளுக்கே புரிய வைத்திருக்கின்றார். மின்சாரம், படுக்கை வசதி, தண்ணீர் வசதி, கழிப்பறை வசதி, மூன்று வேளையும் தரமான உணவு வகைகள் என்று சகல வசதிகளுடன் தியானம் செய்து தனது டிஜிட்டல் அறிவை ஆன்மீகத்திலும் புகுத்தி நவீன கர்மயோகியாக அவதாரம் எடுத்து இருக்கின்றார்.

மோடி எதைப் பற்றியும் கடைசி வரை கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. எதிர்க்கட்சிகளிடம் இருந்த பதற்றம் சிறிது கூட மோடியிடம் இல்லை. அவரால் இறுதிக் கட்டத்தில் கூட மிக நிதானமாக தனது பிம்பத்தை தக்க வைக்க முடிகின்றது. குகைக்குள் மோடி தியானம் செய்ததை எதிர்க்கட்சிகளும், அவரின் சித்தாந்தத்திற்கு நேர் எதிர் நிலையில் இருப்பவர்களும் கேலி செய்தாலும், மோடி அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவரைப் பொருத்தவரை தான் கடவுளை வேண்டி தியானம் இருப்பதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும் என்பது தெரியும். அதனால்தான் அவர் மிக இயல்பாக ஊடகங்களிடம் கூறினார்

“நாட்டில் நடப்பதில் இருந்து விலகி, ஆன்மீகப் பயணமாக உத்தரகாண்ட் வந்துள்ளேன். எனக்காக எதையும் கேட்டு கோவிலுக்குச் செல்வதில்லை. கேதார்நாத்தில் வழிபட்டதை நான் அதிர்ஷ்டமாக நினைக்கிறேன். எனக்கும் கேதார்நாத்துக்கும் ஒரு உணர்வுப்பூர்வான உறவு உள்ளது. கேதார்நாத் வளர்ச்சிக்காக நான் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். காணொளிக் காட்சி மூலம் எனக்கான தகவல்களை நான் சேகரித்து வருகிறேன்.மன அமைதி பெற கேதார்நாத்திற்கு மக்கள் பயணம் செய்ய வேண்டும். கொடுப்பதற்காக நாம் படைக்கப்பட்டுள்ளோம். எடுப்பதற்காக அல்ல” என்று.

மோடி இன்னும் மனம் தளராமல் இருக்கின்றார். அவர் இன்னும் இந்திய மக்களுக்கு நிறைய கொடுக்க விரும்புகின்றார். கரங்கள் கொள்ளாத அளவிற்கு கொடுக்க விரும்புகின்றார். இந்த ஐந்து ஆண்டுகளில் அவர் இந்திய மக்களுக்கு தன்னுடைய ஆட்சியின் மூலம் ஆன்மீக அனுபவத்தை கிடைக்கச் செய்திருக்கின்றார். அவர்களிடம் இருந்து உயிரை மட்டும் விட்டுவிட்டு மீதமுள்ள அனைத்தையும் பறித்து கடவுளுக்கு காணிக்கையாக்கி இருக்கின்றார். தற்போது அந்தக் கடவுள்கள்தான் மோடியின் பக்தியை மெச்சி தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு இருக்கின்றன.

தியானம் எல்லாம் பொய் என்று இனி யாரும் சொல்ல முடியாது, மோடியே அதற்கு சாட்சி. வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் நாட்கள் இருப்பதால் நீங்கள் நம்பாமல் கூட இருக்கலாம். ஆனால் கடவுளின் அறிவிப்புகள் ஒருநாளும் பொய்த்துப் போவது கிடையாது. காரணம் கடவுள் ஏற்கெனவே எல்லாவற்றையும் முடிவு செய்துவிட்டே நமக்கு சமிக்ஞை மூலம் தெரிவிக்கின்றார். அவர்தான் மோடியைக் கூட தியானம் இருக்கத் தூண்டியது. எல்லாமே ஒரு ரகசியக் குறியீடுகள்தான். காவி உடை, குகை, தியானம், கருத்துக்கணிப்பு முடிவுகள் ஏன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கூட ஒரு குறியீடுதான். கடவுள் அதன் மூலம் என்ன நடக்கப் போகின்றது என்பதைத் தெளிவாக ஆனால் மறைபொருளாக சொல்கின்றார். இன்னும் உங்கள் மரமண்டைக்குப் புரியவில்லை என்றால் நீங்களும் கேதார்நாத்- ருத்ரா மெடிடேசன் குகையில் தியானம் செய்ய முன்பதிவு செய்யுங்கள்.

- செ.கார்கி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.