கதைப்பாடல் என்பது ஒரு இனத்தின் உயிரோட்டத்தில் ஊடுருவி அவர்களது மரபு, கலாச்சாரம், பக்தி, சமூக உறவுகள் போன்ற அனைத்துப் பரிமாணங்களிலும் ஆளுமை செலுத்துகிற ஒருநிகழ்கலையாக மாறியிருக்கிறது என்றால் அது மதுரைவீரன் கதையாகத்தான் இருக்கமுடியும்.

நீண்ட பாரம்பரியம் கொண்ட தலித்துகளில் ஒரு பிரிவினரான அருந்ததியரின் வாழ்வோடு இரண்டறப் பின்னிப் பிணைந்துள்ள இக்கதைப் பாடலைக் கூர்ந்து நோக்கும் பொழுது இதிலுள்ள ஆதிக்க சாதியினரின் சரித்திரத் திரிப்புகளை உணரலாம்.

இக்கதையாடலின் போக்கு அடித்தட்டு மக்களின் வீரச் செழிப்பை உத்வேகத்துடன் வெளிச்சமிட்டுக் காட்டுவதுபோல் தெரிந்தாலும், இதனுள் மறைந்திருக்கும் இன்னொரு புதிர் அந்தக் கருத்தை இருட்டடிப்பு செய்துவிடுகிறது.

மிகவும் சாமர்த்தியமாக இடைச்செருகல் செய்யப்பட்டிருக்கும் அந்த நுட்பத்தை உணரவேண்டுமெனில், புழக்கத்திலுள்ள மதுரைவீரன் கதைப்பிரதியைப் பார்க்கலாம்.

காசி மன்னருக்கு ஒரு ஆண்குழந்தை பிறக்கிறது. கழுத்தில் மாலை சுற்றிப் பிறந்ததால் அப்பாவுக்கு ஆகாது என்று குழந்தையைக் கொண்டுபோய் காட்டில் விட்டுவிட்டு வந்துவிடுகின்றனர். அருந்ததியத் தம்பதிகளான சின்னான் - செல்லி என்பவர்கள் அந்தக் குழந்தையை எடுத்துவந்து வீரன் என்று பெயரிட்டு வளர்க்கிறார்கள். அந்தக் குழந்தை அழகாகவும், வீரத்தோடும் வளர்கிறது.

அந்தக் கட்டத்தில், திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு பாளையத்தை ஆட்சி செய்து வந்த பொம்ம நாயக்கன் என்கிற பாளையக்காரரின் மகளான பொம்மி பூப்படைகிறாள். அவர்களது சாதிசடங்குக்கு ஏற்ப ஊருக்கு வெளியே குடிசையமைத்து பதினொரு நாள் விரதம் இருக்கிறாள் பொம்மி. இந்தத் தனிமை விரதத்தில் பூப்படைந்த பெண்ணைப் பாதுகாக்க வேண்டியது அருந்ததியரின் கடமை. இந்தச் சூழலில் வீரன் அங்கு காவலுக்கு வருகின்றார். காதல் அவர்களைப் பார்த்துக் கண்சிமிட்டிச் சிரிக்கிறது. இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ சாதி என்கிற இரும்புத்திரை குறுக்கே நிற்கிறது. அதிலிருந்து மீண்டு வாழ இருவரும் அங்கிருந்து வெளியேறும்போது, பொம்மணனின் படை துரத்துகிறது. அதை வென்று இருவரும் திருச்சிக்குப் போய்விடுகின்றனர்.

திருச்சி மன்னரிடம் படைவீரராகச் சேருகிறார் வீரன். தனது திறமையால் அந்த மன்னருக்குப் புகழ் சேர்க்கிறார். இந்தக் கட்டத்தில் மதுரையில் கள்ளர்களின் கொட்டம் தாங்கமுடியாமல், மதுரை மன்னர் திருமலை நாயக்கர், திருச்சி மன்னரிடம் ஒரு திறமையான வீரன் வேண்டுமெனக் கேட்க,வீரனை அங்கு அனுப்பி வைக்கிறார் திருச்சி மன்னர்.

மதுரையில் அவரது வீரத்துக்கேற்ப பதவியும் பாராட்டும் குவிகிறது. விரைவிலேயே படைத்தளபதி ஆகிறார். இதுவரை அடக்கமுடியாத மதுரைக் கள்ளர்களை அடக்குகிறார். அந்தச்சூழலில், மன்னரின் காதலியான ஆடலரசி வெள்ளையம்மாள் மீது அன்பு ஏற்படுகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் நேசிக்கின்றனர். மன்னருக்குச் சேதி தெரிந்து வீரன் மீது ஆத்திரம் வருகிறது. இச்சமயத்தில், வீரனுக்கும் கள்ளருக்கும் உறவு இருப்பதாக ஒரு சூழ்ச்சி வலை பின்னப்படுகிறது. மன்னர் அதைப் பயன்படுத்தி வீரன் குற்றவாளி என்று தீர்ப்புச் சொல்லி மாறுகால் மாறுகை வாங்க உத்தரவு பிறப்பிக்கிறார். இந்த அநியாயமான தீர்ப்பினால் மதுரை வீரன் கொல்லப் பட்டார். மக்கள் அவரைத் தெய்வமாக வணங்க ஆரம்பித்தனர்.

அனைவராலும் பாடப்பட்டும், தெருக்கூத்துகளாக நடிக்கப்பட்டும் வருவது இந்தப்பிரதிதான். எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்து வெளிவந்த திரைப்படமும் இதேபாணியிலானதுதான்.

இந்தக் கதையாடலை நாம் நுட்பமாகக் கூர்ந்து நோக்கும்போது இதில் புதைந்திருக்கிற ஆதிக்கத் தன்மையின் அடையாளத்தை உய்த்துணரலாம். புகழ் பெற்ற ஒரு மனிதனின் வீரம் தாழ்த்தப்பட்ட சாதியினருக்குச் சொந்தமாகக் கூடாது, வீரம் விளைந்த நிலம் எங்களுடைய நிலம் என்று மார்தட்ட வேண்டும் என்கிற ஆதிக்க சாதியினரின் குயுக்தி இங்கு செயல் பட்டிருப்பதைப் புரிந்து கொள்ளலாம்.

வீரன் என்கிற ஒரு தலித், தன் உயர்சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணமுடித்து விட்டது அவர்களுக்கு கடுஞ்சினத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அதுமட்டுமல்லாமல், யாராலும் அடக்கமுடியாத கள்ளர் கூட்டத்தை அடக்கிய அவரது ஒப்புயர்வற்ற வீரமும் அவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியிருக்கலாம்.

அந்தக் காலகட்டத்தில் நாயக்கர்கள் மிகுந்த செல்வாக்கும் அரசியல் பலமும் பெற்று மன்னர்களாக விளங்கினார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. தங்களுக்கு ஏற்பட்ட களங்கத்தைத் துடைக்கவும், அவரது வீரத்தின் புகழை தங்களுக்குச் சாதகமாக்கவும் மன்னரின் குழந்தை என்ற இடைச்செருகலை செருகியிருக்கலாம். சரித்திரத்தைத் திரிக்கின்ற நுட்பத்தை, தங்களுக்குக் கீழ் அண்டிப் பிழைக்கின்ற புலவர்களிடம் சொல்லி ஆணையிட்டிருக்கலாம். இந்தச் சரித்திரத் திரிப்புதான் இன்றைய கதைப் பாடலின் வடிவமாக இருக்குமென்பது இந்த ஆய்வின் முடிந்த முடிபு.

‘குழந்தை மாலை சுற்றிப் பிறந்து விட்டால் மாமனுக்கு ஆகாது’ என்றுதான் காலங்காலமாகச் சொல்வார்களே தவிற, ‘அப்பாவிற்கு ஆகாது’ என்று யாரும் சொல்வது கிடையாது. இந்த எளிமையான ஐதீகமே இந்த கதைப்பாடலின் முடிச்சை அனாயசமாக அவிழ்த்து விடுகிறது.

அது மட்டுமல்ல இந்தக் கதைப்பாட்டில், வீரன் பொம்மியை கூட்டிக் கொண்டு போகும் நிகழ்ச்சியை, ‘வீரன் பொம்மியை கூட்டிக் கொண்டு ஓடினார்’ என்கிற சொல்லாடலாக இல்லாமல், ‘வீரன் பொம்மியை சிறை எடுத்தார்’ என்ற சொல்லாடலாக ஒலிப்பதின் கருத்தை மிக நுட்பமாகச் சீர்தூக்கிப் பார்க்கும்போது, அற்புதமான பார்வை புலனாகும்.

சாதி, ஆதிக்கம், தன் ஆசையைத் தெரிவிக்க முடியாத ஏக்கம், அரச வாழ்வின் துக்கம் போன்ற சிறையிலிருந்த பொம்மியை, ‘வீரன் சிறையெடுத்தார்’ என்கிற தரிசனத்தில் சுழல்வு கொள்கிறது இச்சொல்லாடல்.

சரித்திரத் திரிப்பு வாய்ந்த இப்பிரதியை, திரைப் படமாக்கி மதுரை வீரனாக நடித்த ஒரே காரணத்திற்காக எம்.ஜி.ஆர் என்கிற பிம்பம் அருந்ததியரின் வீரனாக உருமாறிய சரித்திர அவலத்தையும் நாம் ஆய்வு செய்து பார்க்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

சின்னான் செல்லி என்கிற தலித் தம்பதியினருக்குப் பிறந்தவர்தான் வீரன் என்பதை மறைத்துத் திரித்திருக்கின்ற இக்கதையாடலை மறு உருவாக்கம் செய்யும் போது, இக் கதையாடலின் வீரியம் காலங்களைக் கடந்து நிற்கும் என்பதில் அய்யமில்லை.

Comments

5 comments

5
Guest
சரியான உண்மை தேவை. திருமலை நாயக்கர் மதுரைவீரனை வெட்டக் காரணம் என்ன?
பொம்மியைக் காதலித்து மணந்ததாலா? இல்லை மற்ற சூழ்ச்சிகளின் காரணமாகவா?
Ganapathi
very usefully
Thamizhan
mannikkavum kathai paadalai apdiye pathivu seiya mudiyuma.... madurai veeran madurai thirumalai nayakkarin aranmanaiyil pathavi irunthathirkana aatharangal kathai padalil illai... Bommiyin kanavan endru arintha pinnare avan uyir vinnulagamum, mathi saya seitha ungal oppanai abaram... Jathi veriyoda paadalai thiruthi eluthum Kozh oru naal Udaiyum.

Arasu Thadai seitha "Madurai Veeranin Unmai Varalaru" puthagathil Kilintha sila pakkangal peasappadum... Oru Naal
madeswaran
வரலாற்றில் மாவீரர்களாக திகழ்ந்த அருந்ததிய ஆதித்தமிழர்கள்.
கொள்ளையர்களையும் , ஆதிக்க சாதி வெறியர்களாயும் அடக்கி , சாதியம் ஒழித்து சமூக விடுதலைக்கு அடித்தளமிட்டு சாதிமறுப்பு திருமணம் செய்து மறைந்த உலகம் போற்றும் மாவீரன் மதுரைவீரன்

அண்ணல் அம்பேத்கர் 1956 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14 ஆம் நாள் இந்து மதத்தை விட்டுப் பவுத்த மார்க்கத்தைத் தழுவினார். அவரைப் பின்பற்றி 5 இலட்சத்திற்கும் மேலானோர் பவுத்த மார்க்கத்தைத் தழுவினார்கள். அப்பொழுது 22 அம்சங்கள் அடங்கிய உறுதிமொழியை எடுத்துக் கொண்டார்கள். அதில் ஒன்று "பகவான் புத்தர் மகாவிஷ்ணுவின் அவதாரம் என்பதை நான் நம்பமாட்டேன். இது மக்களைத் திசை திருப்பும் செயலாகும். இத்தகைய பிரச்சாரம் விஷமத்தனமானது, தவறானது என நம்புகிறேன்" என்பதாகும். வரலாற்றை மாற்றி, திருத்தி எழுதி நம்ப வைக்கும் ஆரியரின், ஆதிக்கவர்க்கத்தினரின் சூழ்ச்சிகள் அன்று முதல் இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வரலாற்று ஆசிரியர்கள் பெரும்பாலும் ஆரியர்களாகவும், ஆதிக்க வர்க்கத்தினராகவும் இருந்ததால் தாழ்த்தப்பட்டோரின் வீர வரலாறுகளை மறைத்தும், திரித்தும் எழுதியதோடு வாய்மொழிக் கதைகள் மூலமும் மக்களை நம்ப வைத்து வந்துள்ளனர்.
மாவீரர் மதுரைவீரன் வரலாற்றையும் ஆதிக்க வர்க்கத்தினருக்கு சாதகமான கருத்துக்களை வாய்மொழிக் கதைகள், நாடகங்கள் மூலம் பரப்பி அனைவரையும் நம்ப வைத்து விட்டனர். அருந்ததியர் இனத்தில் அழகும், அறிவும், ஆற்றலும் நிறைந்த நல்ல உடல் வலிமையும், நற்பண்புகளும், சமயோகித புத்திக் கூர்மையும் உடைய வீரத்தளபதிகள் பலர் இருந்துள்ளனர். பூலித்தேவர் காலத்தில் ஒண்டி வீரன் தளபதியாகவும், பளையத்துத் தலைவராகவும், கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியில் ஆட்சி செய்தபோது முத்தன் பகடை, பொட்டிப் பகடை, கந்தன் பகடை, தாமன் பகடை ஆகியோர் படைத் தளபதிகளாகவும், பளையத்துத் தலைவர்களாகவும் இருந்துள்ளனர். இவர்கள் அஞ்சா நெஞ்சம் கொண்டவர்களாக, வாள், சிலம்புச் சண்டைகளில் கை தேர்ந்தவர்களாகவும், கொரில்லாப் போர் முறையில் எதிராளிகளை எளிதில் தாக்கும் வலிமை பெற்றவர்களாகவும் திகழ்ந்துள்ளனர். கூத்து என்ற நாடகக் கலையில் சிறந்தவர்களாகவும், காடு, தோட்டம் கொண்டு செல்வாக்குமிக்கவர்களாக வாழ்ந்திருக்கிறார்கள். இதுபோன்ற ஆற்றல் மிக்கவர்கள் அருந்ததியர் இனத்தவருள் இன்றும் கூட பல மாவட்டங்களில் சிலம்பு போன்ற வீர விளையாட்டுகள், நாடகக்கலைகள் போன்றவற்றில் சிறந்து விளங்குபவர்கள் ஏராளமாய் உள்ளனர்.
இன்று நிலவும் தாழ்ந்த நிலைக்கு காரணம் என்ன? அருந்ததியர் இனமக்களிடையே நிலவிய, இன்றும் நிலவும் ஒற்றுமையின்மை, தன்னைத்தான் உணராதது, தனக்குள் உள்ள ஆற்றலை உணராதது, அதற்கும் மேலாக ஆதிக்க சாதியினர் தனது பண்ணை, காடு, தோட்டங்களைக் கவனிக்கும் முழுப்பொறுப்பை இவர்களிடம் ஒப்படைத்திருந்ததால் ஆதிக்க வர்க்கத்தின் சேவைக்காக முழுக் குடும்பத்தினரின் உழைப்பை ஆண்டு முழுதும் அர்ப்பணித்து இறுதியில் கிடைக்கும் தாணியம், கொஞ்சம் பணம் இவற்றிலேயே மனநிறைவு கொண்டவர்களாக வாழ்ந்து விட்ட பழக்கம். குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிக் கல்வி கற்க வைக்கும் எண்ணம் உருவாகாமலேயே வாழ்ந்து விட்டனர். அந்த எண்ணம் தோன்றும் சிலரையும் உன் பையன் படித்து என்ன கலெக்டராகவா போகப் போகிறான், பேசாம பண்ணையில் ஒழுங்கா வேலை பார்க்கச் சொல்லு என அடிமைப்படித்தி வைத்திருந்ததால் இன்றும் சிலர் அடிமைத்தனத்திலிருந்து மீள முடியாத நிலையில் சில ஊர்களில் உள்ளனர். கடவுளின் பெயரால் சொல்லப்படும் கருத்துகளை எளிதில் நம்பி ஏமாறுபவர்களாக, மீற மனம் இல்லாதவர்களாக, துணிவில்லாதவர்களாக மாறி, கடவுள் விட்ட வழி, விதி என்ற மனப்போக்கில் வாழ்வது. தனது முன்னோர்களின் வீர வரலாறுகளை அறிய முற்படாதது, அறிந்தவர்கள் வருங்கால சந்ததிகளுக்கு உணர்த்தாதது இவைகள் தான் அருந்ததியர் இனவீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாகும்.
கதிரவன் மறைவதும் பின் தன் கதிர்களைத் பரப்பி உலகம் ஒளி பெறச்செய்வதும் இயற்கையின் நியதி. அதேபோல் வாழ்ந்தவர் வீழ்வதும், வீழ்ந்தவர் மீண்டும் எழ, வாழ முயல்வதும் உலக நியதி. அருந்ததியர் அடிமைக் குணத்திலிருந்து மீண்டு, தன்னை உணர வேண்டிய நிலையில் இன்றும் உள்ளனர். உலக மாற்றங்களுக்கு தகுந்தாற்போல் கல்வியில், பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் கொண்டு வாழ்வில் எதிர் நீச்சல் போட்டு வாழ வேண்டிய அவசியத்தில் உள்ளனர். தனது முன்னோர்களின் வீர வரலாறுகளை அறிந்து துணிவும், போராட்ட குணமும் கொண்டு உறுதியுடன் செயலாற்ற வேண்டும். அருந்ததியர் இனம் காத்த மாவீரர் மதுரைவீரன் பற்றி அறிவோம்.
மாவீரர் மதுரை வீரன் காசி மன்னன் துளசிராயன் மகனாகவோ, வேறு எந்த அரசருக்கோ பிறக்கவில்லை. கழுத்தில் கொடி சுற்றியும் பிறக்கவில்லை. கழுத்தில் கொடி சுற்றிப் பிறந்ததால் குலத்திற்கு ஆகாது என சோதிடர் சொல்ல, பிறந்த குழந்தையைக் காட்டில் போட்டார்கள் என்பதோ, ஓடும் ஆற்றில் விட்டார்கள் என்பதோ எல்லாம் கட்டுக்கதை. காசியில் ஓடும் கங்கையும், திருச்சியில் ஓடும் காவிரியும் இன்றும் ஒன்றாக இணையவில்லை, சங்கமமாகவில்லை. பின் எப்படி காசியில் ஆற்றில் விட்ட குழந்தை, மூன்று நாட்களுக்குப் பின் சின்னான் கையில் கிடைக்கும். மற்றொரு கதையாய் காட்டில் கண்டெடுக்கப்பட்டதாய் சொல்வதும் பொய்யே. இவையெல்லாம் மதுரை வீரன் பிறப்பால் அரச குலத்தவன் என்பதால் தான் அவருக்கு வீரம், விவேகம், நல்ல குணம் இருந்தது என்பது போல் காட்ட ஆதிக்க சாதியினரால் புணைந்துரைக்கப்பட்ட கட்டுக் கதைகளேயாகும்.
மதுரை வீரன் 1608 ஆம் ஆண்டில் திருச்சி மாவட்டத்தில் பொம்மண்ணன் என்பவர் ஆட்சி செய்த பாளையத்தில் பணி புரிந்த சின்னான் செல்லி என்ற அருந்ததியர் தம்பதிகளுக்கு மகனாய் பிறந்து வீரய்யன் எனப் பெற்றோரால் பெயர் சூட்டப்பட்டவர். நல்ல அழகும், இளம் வயதிலேயே வீர விளையாட்டுகளில் ஆர்வம் காட்டுபவராகவும், புத்திக் கூர்மையுள்ளவராகவும் இருந்து, வளர்ந்து வாலிபனாக மாறும் போது அறிவும், ஆற்றலும், பிறர் நலன் நாடும் நல்ல பண்பும், உரிமைக்குரல் எழுப்பும் உயரிய சிந்தனையுள்ளவராகவும் இருந்தார்.
பொம்மண்ணன் மகள் பொம்மி பருவமடைகிறாள். அன்றைய வழக்கப்படி பெண்கள் பூப்படைந்து விட்டால் வீட்டில் அனுமதிக்காமல் தனியாக வைக்கப்பட வேண்டும் அப்படி தனியாக வைக்கப்பட்டிருந்த பொம்மியை காவல் காக்கும் பொறுப்பு அருந்ததியர் சின்னான் அவர்கள் கடமையாகிறது. சின்னான் உடல் நலக்குறைவால் அவர் மகன் வீரய்யன் அப்பொறுப்பை ஏற்று காவல் காக்கிறார். இளமை உணர்வின் உந்துதலால் இருவர் உள்ளத்திலும் காதல் அரும்புகிறது. இருமனம் இணைந்து திருமணம் செய்ய இசைகிறது. கடுமையான சாதிக்கட்டுப்பாடுகள் இவர்கள் இணைவதைத் தடுக்கிறது. காதலை அறிந்த பொம்மண்ணன் கடுந்கோபம் கொண்டு வீரய்யனைக் கொல்ல திட்டமிடுகிறார். இதயறிந்த காதலர் இருவரும் வெளியேறுகின்றனர். இதனால் பொம்மண்ணன் வீரய்யன் இருவருக்கு மிடையே நடந்த கடும் சண்டையில் பொம்மண்ணன் மரணமடைகிறார். வீரய்யன் பொம்மியுடன் திருச்சி சென்று அங்கு ஆட்சி செய்து வந்த விஜய ரங்க நாயக்கர் படையில் சேர்ந்து தனது வீரத்தால், திறமையால் முன்னேறி மன்னரின் நன்மதிப்பைப் பெறுகிறார்.
மதுரையை ஆண்ட பிற்காலப் பாண்டிய மன்னர்களிடையே ஏற்பட்ட அரசுரிமைப் போராட்டத்தைப் பயன்படுத்தி டில்லி சுல்தான் அலாவுதின் கில்ஜியின் படைத்தலைவன் மாலிக்காபூர் மதுரையின் மீது போர் தொடுத்து பாண்டிய சகோதரர்களின் ஆட்சியை இழக்கச்செய்கிறார். இதைத் தொடர்ந்து இஸ்லாமியர்களை விரட்டியடுத்து விஜய நகரப் பேரரசை நிறுவுகிறார்கள். தொடர்ந்து ஏற்பட்ட ஆட்சி மாற்றங்களினால் கிருஷ்ண தேவராயர் வலிமைகிக்க நாயக்கர் மன்னராகிறார். பாண்டியர்கள் ஆட்சியின்போது பெருமளவில் போர் வீரர்களாய் இருந்த கள்ளர்கள் மாலிக்காபூரின் படையெடுப்பு, பின் வந்த நாயக்கர் ஆட்சிகளினால் கள்ளர்கள் படைப் பிரிவிலிருந்து ஒதுக்கப்படுகிறார்கள். இந்நிலைகளினால் வாழ்க்கையில் மிகமோசமாக பாதிக்கப்பட்டு கள்ளர்கள் கொள்ளையடிக்கவும், வழிப்பறி செய்யவும் முற்படுகின்றனர். மதுரையில் ஆட்சி செய்த திருமலை நாயக்கரின் ஆட்சியின் போது பிறமலைக் கள்ளர்கள் அட்டகாசம் அதிகரிக்கிறது. அதை அடக்க ஏற்ற தளபதி தேவை என திருச்சி மன்னர் விஜய ரங்க நாயக்கரிடம் உதவி வேண்டினார். வீரய்யன் தான் இப்பணிக்கு ஏற்றவன் என திருச்சி மன்னர் வீரய்யனை மதுரைக்கு அனுப்புகிறார். வீரய்யன் தன் மனைவி பொம்மியுடன் மதுரையை அடைந்த பின் திருமலை நாயக்கர் வீரய்யனிடம் கள்ளர்களை அடக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். யாராலும் வெல்லமுடியாத, மதுரை மக்களை பயமுறுத்திக் கொண்டிருந்த சங்கிலி கருப்பன் என்ற கொள்ளையனை வென்று கொன்றதால் மகிழ்வுற்ற மன்னன் திருமலை நாயக்கன் வீரய்யனை படைபிரிவின் தலைவனாக நியமிக்கிறார். வீரனும் மிகத் திறமையாக இரவு பகலாக மதுரைக்கு பலத்த காவலை ஏற்படுத்திக் கிட்டத்தட்ட 4000 கொள்ளையர்களின் கொட்டத்தை அடக்கி மதுரையில் அமைதியை நிலவச் செய்கிறார். இதனால் மகிழ்ந்த திருமலை நாயக்கர் வீரய்யனை"மதுரை வீரன்" எனச் சிறப்பித்து பெருமைப்படுத்துகிறார்.
1634 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் படையெடுப்பு, 1635 ஆம் ஆண்டில் இராமநாதபுரம் சேதுபதி மன்னர் சமஸ்தானத்தின் மீது போர் தொடுப்பு, நாஞ்சில் நாட்டைக் கைப்பற்ற ஆரல்வாய்க்மொழிக் கணவாய் வழியாக மலையாள மன்னர்கள் படையெடுப்பின் போதும் படைத்தலைவனாகப் பொறுப்பேற்று திருமலை நாயக்கருக்கு மகத்தான வெற்றியை பெற்றுத் தந்தார் மதுரை வீரன்.
இத்தகைய மாவீரர் மதுரைவீரனை தண்டிக்கும் அளவு திருமலை நாயக்கருக்கு கடுங்கோபத்தை உருவாக்கிய நிகழ்ச்சி தான் என்ன? ஆராய்வோம். திருமலை நாயக்கர் அவர் நினைவாக திருமலை நாயக்கர் மகால் கட்ட தீவிர முயற்சியில் ஈடுபடுகிறார். மகால், மண்டபங்கள் கட்டும் போது கட்டக் கட்ட இடிந்து கொண்டேயிருந்ததால் ஒரு சக்தி வாய்ந்த முனியின் வேலையென்றும் அதை விரட்ட வேண்டுமாயின் அம்முனி திருப்தியடையும் வரை நரபலியிட்டு விரட்டுவதைத் தவிர வேறு வழியில்லை என சோதிடர் கூறியதை நம்பி மூட நம்பிக்கையில் மூழ்கிப்போன திருமலை நாயக்கர் ஆணையின் பேரில் நரபலி கொடுப்பதற்காக அருந்ததிய இனமக்களை கூட்டம் கூட்டமக சிறையிலடைத்து தூண்களை நிறுவும் போது நரபலி கொடுத்து வந்தனர். தூண்கள் உறுதியுடன் நின்று மண்டபங்கள் சாயாமல் இருக்க தொடர்ந்து நரபலி கொடுத்தபடி இருந்தனர். உயிருக்குப் பயந்து இவ்வினமக்களும் ஓரிடத்தில் தங்காமல் பல்வேறு இடங்களில் பாதுகாப்புத் தேடி சிதறினார்கள்.
அருந்ததியர் இனமக்களை அநியாயமாக நரபலியிடும் செய்தி அறிய நேர்ந்த மதுரைவீரன் துடித்துப் போனார். படைத்தலைவன் என்ற அதிகாரத்தால் அக்கொடுஞ்செயலை தடுத்து நிறுத்துகிறார். நரபலி தடுக்கப்பட்டு தனது பெயரால் கட்டப்படும் திருமலை நாயக்கர் மகால் பணியை நிறுத்தப்படும் செய்தி மன்னன் அறிகிறார். மன்னனின் மறைமுக ஆணை ஒரு படைத் தலைவனால் அதுவும் அருந்ததியரால் நிறுத்தப்படுவதா? பெருத்த அவமானமாக மன்னன் கருதுகிறார். எரிமலையாய்க் கொதிக்கிறது திருமலை நாயக்கர் உள்ளம்.
திருமலை நாயக்கர் சாதி ஆதிக்கத்தை, கொடுஞ்செயலை கண்டித்து உரிமைக்குரல் எழுப்புகிறார் மதுரைவீரன். மக்கள் செல்வாக்கும், படை வீரர்களின் ஆதரவும் மதுரைவீரரின் நியாயமான நிலைக்கு பக்கபலமாய் இருப்பதைக் கண்டு திருமலை மன்னன் திகைக்கிறார். மதுரைவீரரின் இன உணர்வோடு கூடியதும், சோதிடரின் சொல்படி யாரும் அறியாமல் மறைத்து செய்யப்பட்ட நரபலியை மக்களுக்கு வெட்ட வெளிச்சமாக்கி விட்டானே என்ற ஆத்திரம். இச்செயலை காரணக்காட்டித் தண்டிக்கப்பட்டால் மதுரைவீரன் பேரும் புகழும் அடைவதோடு தனது பெருமைக்குச் சிறுமையுமாகும் என்பதை எண்ணிப் பார்க்கிறான். தனது ஆணையை எதிர்த்து போராடத் துணிந்தவனை இனியும் விட்டு வைக்கக் கூடாது எனப் பொருமுகிறான் மன்னன். இச்சூழலில் மதுரை வீரனை பழி வாங்க துடித்துக் கொண்டிருந்த பிறமலை கள்ளர்களால் மிகைபடுத்திக் கூறப்பட்ட மதுரை வீரன் மீது வெள்ளையம்மாள் கொண்ட காதல் விவகாரத்தை மனதில் கொள்கிறான்.
திருமலை நாயக்கர் சதித் திட்டத்தால் மதுரை வீரன் கைது செய்யப்படுகிறார். வஞ்சக எண்ணம் கொண்ட மன்னனால் நீதி விசாரணை எதுவுமின்றி இரவோடு இரவாக மாறுகால் மாறுகை வெட்டி மதுரை வீரன் கொலை செய்யப்படுகிறார். வெள்ளையம்மாளைக் கடத்திய குற்றத்திற்காக மதுரை வீரன் தண்டிக்கப்பட்டதாக மன்னரால் கதை கட்டப்பட்டு மக்களிடம் பரப்பப்படுகிறது. மதுரைவீரன் கொலை செய்யப்பட்டதை அறிந்த அவர் மனைவி பொம்மியும், அவரை இதயத்தில் ஏந்திய வெள்ளையம்மாளும் உடன் உயிர்துறந்தனர். தான் விரும்பிய வெள்ளையம்மாள், தன்னை விரும்பவில்லை மதுரை வீரனைத் தான் விரும்பியுள்ளாள் என்ற உண்மையும் தீர விசாரிக்காமல் தான் செய்த தவறையும் திருமலை நாயக்கர் உணர்கிறார். வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதைப்போல மதுரை வீரன் மரணத்தை எதிரொலிக்கும் விதமாக திருமலை நாயக்கர் ஒரு நாள் இரவு நகர்வலம் சென்றவர் சாமியார் மனைவியின் சதித்திட்டத்தால் எதிர்பாராதவிதமாக மன்னரின் உடல் ஒர் ஆழ்கிணற்றிலிருந்து கண்டெடுக்கப்படுகிறது.
திருமலை நாயக்கர் மகாலில் 5 அடி விட்டத்தோடு 58 அடி உயரமுள்ள 248 தூண்களாகட்டும், அரண்மனை, நாடகச்சாலை கொண்ட சுவர்க்க விலாசம், ரங்க விலாசம், மண்டபங்கள் அனைத்திலும் அருந்ததியர்களின் ரத்தமும், வியர்வையும் நீராகப் பயன்பட்டுள்ளன. திருமலை நாயக்கர் மகால் என்பதை விட அருந்ததியர் நினைவாலயம் என்பதே சரியாகும்.
1608 ஆம் ஆண்டு பிறந்த மதுரை வீரன் தனது 21 வது வயது முதல் மன்னனால் அநியாயமாகக் கொல்லப்பட்ட 33 வயது வரை திருமலை நாயக்கருக்காக களம் பல கண்டு வெற்றி வாகை சூடித் தந்தவர். பிறமலைக் கள்ளர்களின் அட்டகாசங்களை அடக்கி மதுரையில் அமைதியை நிலவச் செய்தவர். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நுழை வாயிலில் காவல் தெய்வமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளார் எனில் மதுரை வீரரின் வீரமும், புகழும் என்றென்றும் மறுக்க, மறைக்க, மறக்க முடியாத ஒன்று என்பது மிகத் தெளிவானதாகும். பொம்மியைத் திருமணம் செய்து கலப்பு மணத்திற்கு வித்திட்டவர். சாதிப் பாகுபாட்டை எதிர்த்து, சமத்துவத்தை நிலை நாட்ட விரும்பியவர். ஆதிக்க சக்திகளை எதிர்த்து போராடி வெற்றி கண்டவர். சாதி அடக்குமுறை, அடிமைத்தனத்தை எதிர்த்து புரட்சி செய்தவர். அருந்ததியர் இனத்தில் மாவீரர்கள் உண்டு என்பதையும், இன்று வரை வீரத்திற்க்கு எடுத்துக்காட்டாக அனைத்து மக்கள் மனதில் நின்று நிலைபெற்று இருப்பவர். அருந்ததியர்கள் நம் முன்னோர் பற்றிய வீர வரலாறுகளை உணர வேண்டும்.. மாவீரர் மதுரைவீரன் நினைவைப் போற்றி வீர வரலாறுகள் படைப்போம்.
அறிவால் உயர்வோம்! ஒற்றுமை காப்போம்!!
Blossom
திருமலை நாயக்கர் சக்கிலியர்களை நரபலி கொடுத்தார் என்றும் அதை அறிந்த மதுரைவீரன் மன்னரிடம் எதிர்த்து கேள்வி கேட்டதால் மன்னர் ககோவப்பட்டதாகவும் இந்த பகையை மனதில் வைத்துருந்து வாய்ப்பு கிடைத்ததும் அவரை பழி தீர்க்க சூழ்ச்சி செய்து மாறுகால் மாறுகை வாங்கி கொலை செய்ததாக கூறுகிறார்கள் மதுைரை வீரன் கொல்லப்பட சிறிது நாட்களிலே திருமலை நாயக்கர் சக்கிலியர் இளைஞர்களில் கொல்லப்பட்டு அவர் உடலை கிணற்றில் வீசி சென்றார்கள் என்ற கதையும் சொல்லப்படுகிறது இது உண்மையா என்று ஆய்வுசெய்து ஆசிரியர் பதிவிட வேண்டும்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.