ஒரு காலத்தில் தமிழ்த் திரையுலகைச் சொல்வார்கள், “கதையை நம்பிப் படமெடுக்காமல் சதையை நம்பி எடுக்கிறார்கள்” என்று. இன்று இந்த வருணனை அப்படியே பா.ஜ.க-வுக்குப் பொருந்துகிறது. “அறிவை நம்பி அரசியல் நடத்தாமல் கறியை நம்பி அரசியல் செய்கிறார்கள்!”

பா.ஜ.க., அரசின் இந்த மாடு வதைத் தடுப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் மாட்டினமும் உழவுத்தொழிலும் காக்கப்படும் என இந்து சமய அடிப்படைவாதிகள் பலர் இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறீர்கள். இது மிக மிகப் பரிதாபகரமானது! காரணம், இந்தச் சட்டத் திருத்தம் மாடுகளை மட்டுமல்லாமல் பார்ப்பனர்களையும் சேர்த்து அழிப்பதற்கானதுதானே தவிர யாரையும் எதையும் காப்பாற்றுவதற்கானது இல்லை.

நினைத்துப் பாருங்கள்! இந்தத் தடை வந்தவுடன் முதல் எதிர்ப்புக் குரல் கொடுத்தவர்கள் யார்? வேளாண் பெருமக்கள்! என்ன சொல்கிறார்கள் அவர்கள்?

“கறவை நின்று போன பழைய மாட்டை விற்றால்தானே நாங்கள் புதிய மாடு வாங்க முடியும்? மாட்டையே விற்க விடாமல் இவ்வளவு கெடுபிடிகளோடு ஒரு சட்டம் கொண்டு வந்தால் நாங்கள் எப்படிப் புது மாடு வாங்குவது?” எனக் கேட்கிறார்கள்.

நாட்டில் மாடு வளர்ப்பவர்களே பெரும்பாலும் உழவர்கள்தாம். அவர்களையே புது மாடு வாங்க விடாமல் ஒரு சட்டம் தடுக்கிறது என்றால், அதன் மூலம் மாடு வளர்ப்பு குறையுமா உயருமா?

மாடு வளர்ப்பது குறைந்தால் மாட்டினம் வாழுமா அழியுமா?

நாட்டின் பால் உற்பத்தியாளர்களான உழவர்களையே மாடு வளர்க்க விடாமல் செய்தால் நாட்டில் பால் உற்பத்தி என்னாகும்?

புரதத்துக்காகப் பாலையும் பால் பொருட்களையுமே சார்ந்திருக்கும் மரக்கறி (சைவம்) உணவாளர்கள் நிலைமை என்னாகும்?

எனில், இந்தச் சட்டம் உண்மையில் இசுலாமியர்களுக்கு எதிரானதா அல்லது பார்ப்பனர்களுக்கு எதிரானதா?

நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் முற்று முழுதான பா.ஜ.க., ஆதரவாளராக இருந்து கொள்ளுங்கள்! ஆனால், ஒரே ஒரு நிமிடம் உங்கள் அரசியல் சார்பு / எதிர்ப்பு மனநிலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு மேற்கண்ட கேள்விகளுக்கான விடைகளைச் சிந்தித்துப் பாருங்கள்!

உடனே, “ஏதோ தப்புக் கணக்குப் போட்டு விட்டார் மோடி” என ரூபாய்த்தாள் மதிப்பிழப்புப் பிரச்சினையின்பொழுது சொன்னது போலவே இதற்கும் சாக்குச் சொல்லாதீர்கள்! மாடுகளைக் கொல்வதைத் தடை செய்வதன் மூலம் அவற்றைக் காப்பாற்ற முடியும் என உண்மையிலேயே பா.ஜ.க., அரசு நம்புவதாயிருந்தால் அவர்கள் முதலில் தடை செய்திருக்க வேண்டியது மாட்டிறைச்சி, தோல் ஏற்றுமதியைத்தான். உழவர்கள் பணமுடை ஏற்படும்பொழுதோ கறவை நின்று விட்டாலோ மட்டும்தான் மாடுகளை விற்பார்கள். ஆனால், மாட்டு இறைச்சி / தோல் ஏற்றுமதியைப் பொறுத்த வரை, மாடுகளைக் கொல்வது என்பது அன்றாட வேலை. தொடர்ச்சியாக மாடுகளை அறுத்துத் தள்ளுவதுதான் அங்கு தொழிலே. அப்படிப்பட்ட தொழிலை விட்டுவிட்டு உழவர்கள் மீது மட்டும் குறி வைத்து அடிக்கும் இந்தத் துல்லியத் தாக்குதலுக்குப் (surgical strike) பெயர் தெரியாத்தனமா?

இது மட்டுமில்லை, இராமர் கோயில் பிரச்சினையும் இப்படித்தான். நன்றாக இருந்த பாபர் பள்ளிவாயிலை இடித்துத் தள்ளிவிட்டு அங்கே போய் மீண்டும் இராமர் கோயில் கட்டுகிறேன் என்கிறார்களே, அந்தளவுக்கு இவர்களுக்குக் கோயில்கள் மீது அக்கறை இருப்பது உண்மையானால், இலங்கையில் முந்நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்களை இடித்துத் தரைமட்டமாக்கியபொழுது இவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது ஏன்? ஒரு சொல், ஒரு முணுமுணுப்பு, ஒரு முகச்சுளிப்புக் கூட வெளிப்படுத்தாமல் இன்று வரை இலங்கை ஆட்சியாளர்களோடும் இராசபக்சவோடும் கொஞ்சிக் குலவிக் கொண்டிருக்கிறார்களே ஏன்?

புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே! பா.ஜ.க-வுக்கு மாட்டின் மீதோ கோயில்கள் மீதோ இன்ன பிற இந்து சமய அடையாளங்கள், கருத்தியல்கள் போன்றவற்றின் மீதோ எந்த ஒரு பிண்ணாக்கு அக்கறையும் கிடையாது. வெறுமே ஆட்சியைப் பிடிப்பதற்காக இந்து சமயத்தைக் காப்பாற்றுகிறோம், இந்துக்களைப் பாதுகாக்கிறோம் எனவெல்லாம் பேசி இந்துக்களுக்கும் இசுலாமியர்களுக்கும் இடையில் பகையை மூட்டிக் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்கள், அவ்வளவுதான். இப்பொழுதாவது இந்த உண்மையை உணருங்கள்!

இத்தனை காலமாக, இவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டு புலால் (அசைவம்) சாப்பிடுபவர்களை – குறிப்பாக, மாட்டுக்கறி சாப்பிடுபவர்களை - கீழ்த்தரமானவர்களாகவும் கொடுமைக்காரர்களாகவும் கருதினீர்கள். ஆனால், அந்த நினைப்பே எவ்வளவுக்கு எவ்வளவு கீழ்த்தரமானது என்பதும் இந்த மாடு வதைத் தடுப்புச் சட்டத்தின் மூலம் வெட்ட வெளிச்சமாகி விட்டது.

இறைச்சிக்காகப் பழைய மாட்டை விற்றால்தான் பாலுக்காகப் புது மாட்டை வாங்க முடியும் என உழவர்கள் கூறியிருப்பது, பால் உற்பத்தித் துறை இறைச்சித்துறையை எந்தளவுக்குச் சார்ந்திருக்கிறது என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது. மாட்டுக்கறி சாப்பிடுவதற்கு என ஒரு பிரிவினர் இங்கே இருப்பதால்தான், அவர்களுக்கு மாட்டை விற்று அந்தக் காசில் மாடு வாங்கிப் பால் கறந்து பருக முடிகிறது. பால், பால் பொருட்கள் ஆகியவற்றிலிருந்தே போதுமான புரதம் கிடைப்பதால்தான் புலால் உணவுகளை விலக்கி விட்டு வெறும் கறிகாய்களும் கீரைகளும் போதுமென வாழ முடிகிறது.

ஆக, இசுலாமியர்களும் தலித்துகளும் மாட்டிறைச்சி சாப்பிடுவதால்தான் பார்ப்பனர்களும், வெள்ளாள முதலியார்களும் தொடர்ந்து மரக்கறியாளர்களாக மறை ஓதிக் கொண்டிருக்க முடிகிறது. அவர்கள் மாட்டை உணவுப்பொருளாகப் பார்ப்பதால்தான் நீங்கள் தெய்வமாகப் பார்க்கவும் வழிபடவும் மாடு கிடைக்கிறது. புலால் உணவினர் மாடு கிடைக்காவிட்டால் கூட ஆடு, கோழி எனப் பிற புலால் உணவுகள் மூலம் தங்களுக்குத் தேவையான புரதத்தைப் பெற்றுக் கொள்ள இயலும். ஆனால், பால் இல்லாவிட்டால் மரக்கறி உணவினர் தொடர்ந்து மரக்கறியாளர்களாகவே வாழ இயலாது. அது மட்டுமில்லை, கோபூசை செய்யக் கூட ஒரு மாடு கிடைக்காது. வெறும் கோமாதா படத்தை மாட்டிச் சாம்பிராணிப் புகை போட வேண்டியதுதான்.

ஆக, இந்த அளவுக்கு புலால் உண்பவர்களைச் சார்ந்திருக்கும் நீங்கள், இத்தனை நாட்களாக ஏதோ நீங்களும் உங்கள் உணவுப் பழக்கமும்தான் உயர்ந்தவை, மற்றவர்களெல்லாரும் மனிதர்களே இல்லை என்பது போல் இறுமாந்து திரிந்தது எப்பேர்ப்பட்ட அடிமுட்டாள்தனம் என்பதை இப்பொழுதாவது உணர்கிறீர்களா? பொருளியல் சார்புத்தன்மை (Economical Dependency) பற்றிய இந்த அடிப்படைப் புரிதல் கூட இல்லாமல்தான் இத்தனை காலமாக மரக்கறி உணவுப் பழக்கத்தின் மேன்மை, உணவு நாகரிகம் பற்றியெல்லாம் அடுத்தவர்களுக்கு வகுப்பெடுத்துக் கொண்டிருந்தீர்கள் என்பது புரிகிறதா?

போகட்டும்! இப்படி, சிறுபான்மையினர் முதல் தங்கள் வாக்கு வங்கியான பார்ப்பனர்கள் வரை அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் விதமாய் இப்படி ஒரு சட்டத் திருத்தத்தை பா.ஜ.க., கொண்டு வர வேண்டிய தேவை என்ன? இங்குதான் ஒளிந்திருக்கின்றன பல கோடிக்கணக்கான பண மதிப்பு மிக்க பால் அரசியல், வேளாண் அரசியல் காரணிகள்.

உலகில் மிகுதியாகப் பால் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்று இந்தியா. இந்த மாபெரும் பால் சந்தையின் மீது பன்னாட்டுப் பெருநிறுவனங்களின் பார்வை விழுந்ததால் கொண்டு வரப்பட்டதுதான் ஏறு தழுவல் மீதான தடை. ஆனால், அதற்கு எதிரான தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்பாராப் புரட்சியைக் கண்ட நடுவண், மாநில அரசுகள் அதை அரசியலில் தங்களுக்கு ஏதுவாகப் பயன்படுத்திக் கொள்ள விரும்பி, வெளிநாட்டு நிறுவனங்களின் நலனைக் கூடக் கருத்தில் கொள்ளாமல் ஏறு தழுவல் தடையை நீக்கின. ஆனால், மூன்று புறமும் கடல் சூழ்ந்த, சுரணை மிக்க தமிழ்நாட்டுத் தண்ணீரில் வடநாட்டு அரசியல் பருப்பு வேகவில்லை. ஏறு தழுவல் தடையை நீக்கிய பின்னும் அதற்காக பா.ஜ.க., மீதோ மோதி மீதோ இங்கு யாரும் நேசம் கொள்ளவில்லை. எனவேதான் இப்படி ஒரு தடையைக் கொண்டு வருகிறார்கள். இதன் மூலம் ஒரே கல்லில் மூன்று மாங்காய்களை அடிக்கப் பார்க்கின்றனர் பா.ஜ.க-வினர்.

முன்பே பார்த்தது போல, நாட்டின் பால் உற்பத்தித் துறையே மாட்டிறைச்சி விற்பனையைத்தான் நம்பியிருக்கிறது என்பதால், இறைச்சிக்காக மாடு விற்பதைத் தனிமனித அளவில் தடை செய்தால் நாட்டில் பால் தட்டுப்பாடு ஏற்படும். அந்த நேரத்தில் உடனடியாகத் தட்டுப்பாட்டைப் போக்க வேறு வழியில்லை எனச் சொல்லிப் பன்னாட்டுப் பெருநிறுவனங்களிடமிருந்து பாலை இறக்குமதி செய்யலாம். பிறகு, மாடுகளையும் இறக்குமதி செய்யலாம். மாட்டுக்காகவும் பாலுக்காகவும் உழவர்கள் வெளிநாட்டு நிறுவனங்களையே சார்ந்திருக்கும்படி செய்யலாம். இது மாங்காய் எண் ௧!

அடுத்த மாங்காய் இதை விடப் பெரியது. கடந்த சில பதிற்றாண்டுகளாகவே (Decades) இந்திய ஆட்சியாளர்கள் கண்ணுக்கு இங்குள்ள உணவளிக்கும் நிலங்களெல்லாம் பணங்காய்ச்சி மரங்களாகக் காட்சியளிக்கத் தொடங்கி விட்டன. ஒரு துண்டு நிலம் கிடைத்தால் அங்கே வெளிநாட்டுக்காரனை அழைத்து வந்து தொழிற்சாலை தொடங்கலாம்; அல்லது, உள்நாட்டுப் பணமுதலைகளிடம் சொல்லி வணிக வளாகங்கள் கட்டலாம்; இல்லையேல், நீரகக் கரிமம் (Hydro Carbon) நீர்த்துப் போன கருமம் என எதையாவது தோண்டி எடுத்து ஆதாயம் பார்க்கலாம்; அட, எதுவுமே இல்லாவிட்டாலும் உள்ளூர்ச் சிறு நிறுவனங்களை விட்டு அடுக்குமாடிக் குடியிருப்புகளாவது கட்டலாம். இவையெல்லாம் செய்தால் ஆட்சியாளர்களுக்கு எல்லா வகையிலும், கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை பணம் கிடைக்கும்.

ஆனால், இவை எதற்குமே பயன்படாமல் உழவுத்தொழிலின் பெயரால் நாடெங்கும் கோடிக்கணக்கான ஏக்கர் நிலங்கள் சும்மாக் கிடக்கின்றன (அதாவது, ஆட்சியாளர்கள் பார்வையில்). அதனால்தான் உழவுத்தொழிலை முடக்கக் காங்கிரசு, பா.ஜ.க., ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சிக் காலங்களில் எத்தனையோ அரிய முயற்சிகளை மேற்கொண்டார்கள். உர விலையை ஏற்றினார்கள், விதை உரிமையைப் பறித்தார்கள், நீர்நிலைகளை அழித்தார்கள், இன்னும் என்னென்னவோ செய்தார்கள். ஆனாலும் உழவர்கள் தங்கள் உயிரை விட்டாலும் விட்டார்களே தவிர தொழிலை விடுவதாயில்லை. இவ்வளவு நெருக்கடிகளையும் தாங்கி அவர்கள் தொடர்ந்து இத்தொழிலில் நிலைத்திருக்கப் பொருளியல் முதுகெலும்பாக அவர்களின் கால்நடைச் செல்வங்கள் திகழ்ந்தன. அதனால்தான் அந்த முதுகெலும்பையும் முறிப்பதற்காக இப்படி ஒரு சட்டம்.

ஏற்கெனவே வேளாண் தொழிலில் ஆதாயம் இல்லாமல் வாடி வதங்கும் உழவர்கள் இந்தப் புதிய சட்டத்தின் மூலம் தங்கள் ஒரே பொருளியல் ஆதாரமான பால் விற்பனையையும் இழந்து ஒரேயடியாக முடங்குவார்கள். எதற்கெடுத்தாலும், “இது வேளாண் நிலம்! இந்த இடத்தில் அரசு இந்தத் திட்டத்தைக் கொண்டு வரக்கூடாது” எனப் போராடுபவர்களுக்கு இனி முழக்கம் எழுப்பத் தொண்டையில் ஈரம் கூட இருக்காது. கேட்ட விலைக்கு நிலத்தைக் கொடுத்து விட்டுப் போய்க் கொண்டே இருப்பார்கள். அரசின் எல்லா நலத்திட்டங்களையும் எவ்வித எதிர்ப்பும் இன்றிச் சீரும் சிறப்புமாகச் செயல்படுத்தலாம்! இது மாங்காய் எண் ௨!

இந்தச் சட்டத்தால் மாட்டுக்கறி சாப்பிடுபவர்களை விடப் பால் பொருட்களையே நம்பியிருக்கும் மரக்கறி உணவாளர்களான பா.ஜ.க., ஆதரவாளர்களுக்குத்தான் பாதிப்பு நிறைய என்பது வெளியில் தெரிய வரச் சில ஆண்டுகள் பிடிக்கும். அதுவரைக்கும் இந்தச் சட்டத்தால் இந்துக்களுக்குச் சார்பாகப் பெரிதாக ஏதோ ஒன்றைச் செய்து விட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வாக்கு வங்கியைப் பெருக்கலாம். தாங்கள் தெய்வமாகக் கருதும் மாட்டைக் காப்பாற்றச் சட்டப்படியே ஏற்பாடு செய்து விட்ட தனிப்பெரும் தலைவராக மோடியை உயர்த்திக் காட்டலாம். ‘மாட்டுப் பாதுகாப்புப் படை’ எனும் பெயரில் இயங்கி வரும் ஆர்.எஸ்.எஸ் வெறிக் கும்பல் இன்னும் முழு மூச்சாக இயங்க இதையே ஊக்க மருந்தாகப் பயன்படுத்தலாம். இவையெல்லாம் சேர்ந்து அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க., வெல்லவும் காரணமாக அமையலாம். இது மூன்றாவது பெரிய மாங்காய்!

ஆக, இந்தச் சட்டம் மாடுகளுக்கோ இந்துக்களுக்கோ வேளாண் தொழிலுக்கோ எந்த வகையிலும் நன்மை பயப்பதெல்லாம் கிடையாது. மாறாக மாடு (வயற்)காடு, மாட்டுக்கறியாளர்கள் மரக்கறியாளர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் உயர்த்தப்பட்டவர்கள், உழவர்கள் கிழவர்கள் என நாட்டிலுள்ள அத்தனை தரப்பினரையும் உணவுக்கும் பாலுக்கும் வழியில்லாமல் திண்டாடித் திரிய வைக்கப் போகிற திட்டம் இது!

இத்தனை காலமாகச் சிறுபான்மையினர் மீது வெறுப்பு வளர்த்துப் பெரும்பான்மையினரின் வாக்குகளைக் கவர்ந்து வந்த பா.ஜ.க., இன்று தன் அரசியல் எதிர்காலத்துக்காக, தங்களையே நம்பியிருந்த அந்தப் பெரும்பான்மையினர் நலனையும் காவு கொடுத்து விட்டது என்பதே இந்த இறைச்சி அரசியலின் பின்னிருக்கும் அரசியல் இறைச்சி (உட்பொருள்)!

Comments

9 comments

9
karthikeyan i
மிகச்சிறந்த நகைச்சுவை.
அப்படியா கார்த்திகேயன்? எனில், இதே நகைச்சுவையைத்தான் வெவ்வேறு சொற்களில் பிரபல எழுத்தாளர்கள், இதழாளர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் எழுதி வருகிறார்கள் என்பதையும் அறிக!
karthikeyan i
திரு. இ.பு.ஞானப்பிரகாசன் அவர்களே, நீங்கள் சொல்ல வருவது என்னவென்றால், பார்ப்பனர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்காக கீற்று கட்டுரை வெளியிடுகிறது, அப்படித்தானே?

நீங்கள் சொன்ன
பிரபல எழுத்தாளர்கள், இதழாளர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் பார்ப்பனர்களைப் பாதுகாக்கப் போராடுகிறார்கள், அப்படித்தானே?
என்னே அவர்கள் கருணை, போராடட்டும்.
திரு.கார்த்திகேயன் அவர்களே! நான் அப்படியெல்லாம் எதுவுமே சொல்லவில்லை. நான் சொல்ல வந்தது, இந்த மாட்டு வதைத் தடுப்புச் சட்டம் எனும் பெயரில் அமல்படுத்தப்பட்டிருக்கும் மாட்டிறைச்சித் தடைச் சட்டத்தால் மிகுதியாகப் பாதிக்கப்படப் போவது பார்ப்பனர்கள் முதலான சைவ உணவாளர்கள்தாம்; ஆனால், அவர்கள் அதைப் புரிந்து கொள்ளாமல் இந்தச் சட்டத்தின் மூலம் உண்மையாகவே மாடுகளையும் வேளாண்மையையும் காப்பாற்ற முடியும் என நினைத்துக் கொண்டு ஆதரவளிக்கிறார்கள்; அது தவறு என்பதைத்தான்.

மற்றபடி, பார்ப்பனர்கள் எனும் குறிப்பிட்ட சமூகத்தினரைக் காக்க எந்தப் போராட்டமும் இங்கு நடத்தப்படவில்லை என்றாலும், மக்களைக் காப்பாற்றுவதற்காக நடத்தப்படும் போராட்டங்கள் அனைத்தும் பார்ப்பனர்களையும் சேர்த்துத்தான் காப்பாற்றுகின்றன என்பதை அறிய வேண்டுகிறேன்!
ஆ.மகராஜன்
ஒரு பசுவின் சாபம்
=================
தான் பெற்ற பிள்ளைக்குத்தான்
பாலூட்டுவாள் தாய்
யார் பெற்ற பிள்ளைக்கும்
பாலூட்டினேன் நான்.
பயனற்றுப் போன
தாயை முதியோர் இல்லத்துக்கும்
பால்வற்றிப் போன என்னை
பசு வதைக்கூடத்திற்கும்
அனுப்பிய நீயும் ஒரு நாள்
உடல் வற்றி யாருக்கும்
உபயோகமுமற்றுப் போகும் போது,
கவலை வேண்டாம்..
உன் மகன் அனுப்பி வைக்க
ஒரு மனித வதைக்கூடத்திற்கு
எதிர்காலம் ஏற்பாடுகள்
செய்திருக்கும்..
– ஆ.மகராஜன்,திருச்சி.
karthikeyan i
Mr. Gnanaprakasan, though i do not agree with ur point and somewhat aware of the politics behind this issue, if not fully, i like ur way of argument.
In the article, you maintain the decency towards the political opponents except,in my point of view, in one place. Compared to other articles in keetru, you did not make any personal attack. I welcome this.
Thank you.
திரு.மகராஜன் அவர்களே! உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது. இது போல் நூறு கவிதைகள் எனக்கும் எழுதத் தெரியும். ஆனால், கவிதை மேகங்களில் கற்பனை நடை பழகாமல் மண்ணில் கால் வைத்து நடந்தால்தான் உழவர்களின் உண்மை வலி புரியும். நீங்கள் பசுக்கள் கொல்லப்படக்கூடாது என்பதற்காகக் கவிதை வடிக்கிறீர்கள். நான் அந்த இனமே அழியாமல் தடுக்க வேண்டும் என்கிறேன். இரண்டில் எது சரி என்பது யாருக்கும் இங்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
திரு.கார்த்திகேயன் அவர்களே உங்கள் தனிப்பட்ட பாராட்டுக்களுக்கு நன்றி!

இதன் பின்னுள்ள அரசியலை மரக்கறி உணவாளர்களும் விரைவில் பேசத்தான் போகிறார்கள். இப்பொழுது என் நாகரிகத்தை மட்டுமே பாராட்டிய நீங்கள் அப்பொழுது நான் எழுதிய இந்தக் கட்டுரையும் சரிதான் என்பதைக் கட்டாயம் ஏற்றுக் கொள்வீர்கள். காரணம், அந்த நாகரிகம் உங்களிடம் தென்படுகிறது.

கட்டுரை முழுக்க நாகரிகம் கடைப்பிடித்த நான் ஒரே ஓரிடத்தில் தவறி விட்டதாகக் குறிப்பிட்டிருந்தீர்கள். அது எந்த இடம் என்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. என்ன செய்ய, சில விதயங்களை உரைக்கும்படி சொன்னால்தான் மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். அதற்காகத்தான் அப்படி எழுதினேனே தவிர, குறிப்பிட்ட பிரிவினரைக் காயப்படுத்தும் நோக்கம் எனக்கு அறவே இல்லை. இதே கீற்றில் வெளியாகியுள்ள என் மற்ற கட்டுரைகளைப் படித்தால், நான் இதை உண்மையாகத்தான் சொல்கிறேன் என்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள்.

மேலும், நான் நாகரிகமாக வாதம் செய்யக் காரணம், வாதத்தைத் தொடங்கிய நீங்கள் அதை நாகரிகமாகத் தொடங்கியதுதான். நீங்கள் வேறு மாதிரி சொற்களில் உங்கள் கருத்தை முன்வைத்திருந்தால் நானும் வேறு மாதிரித்தான் எழுதியிருப்பேன். எனவே, இதற்கான பாராட்டு உங்களையே சாரும்.

நன்றி! வணக்கம்!

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.