செவ்வியல் மொழி-எழுத்து:

மனித வரலாற்றின் தொடக்ககாலத்தில் ஒரு மொழி என்பது உருவாகி, மிக நீண்டகாலங்கள் பேச்சு வழக்கில் இருந்த பின்னரே, அதற்கான எழுத்து உருவாகிறது. தொடக்ககாலத்தில் ஒரு மொழிக்கான எழுத்து உருவாக மிக நீண்ட நெடியகாலம் ஆகிறது. ஆக தொடக்க காலத்தில் மொழிகளுக்கு எழுத்து உருவாகும் முன்னரே, பாடல் வடிவில் பழமொழிகளும், கதைகளும், புராணங்களும், தொன்மங்களும், மதம் சார்ந்த புனிதப் பாடல்களும், ஓரளவு இலக்கியங்களும் கூட உருவாகி, மொழி ஓரளவு முழு வடிவம் பெற்று விடுகின்றது.  எனினும் எழுத்து உருவான பின்னரே ஒரு மொழி முழுமை அடைகிறது எனலாம். அதன் பின்னரே அது வளர்ச்சி அடைந்து செழுமை அடைந்து செவ்வியல் இலக்கியங்களைப் படைக்கும் திறன் பெறுகிறது.

எழுத்து வடிவம் இன்றி ஒரு மொழி செவ்வியல் இலக்கியங்களை படைக்க இயலாது. கிரேக்கம், இலத்தீன், சீனம் போன்ற  செவ்வியல் மொழிகள் அனைத்துமே எழுத்து வடிவத்தைப் பெற்ற பின்னரே செவ்வியல் இலக்கியங்களை உருவாக்கின. ஒரு மொழி செவ்வியல் இல்க்கியங்களை படைக்க எழுத்து உருவாவது ஒரு அடிப்படைத் தேவை. ஆனால் அது மட்டும் போதுமானதல்ல. வேறு பல பின்புலங்கள் வேண்டும்.

செவ்வியல் இலக்கிய காலகட்டமே பொற்காலம்:

மொழிக்கான சமூகம் ஒரு உயர் வள்ர்ச்சியை எட்டியிருக்க வேண்டும். அரசியல், பொருளாதாரம், வணிகம், தொழில், கலை, பண்பாடு ஆகிய பல துறைகளிலும் அச்சமூகம் ஒரு உயர் வளர்ச்சியை எட்டிய சமூகமாக இருக்கவேண்டும். ஒரு சமூகத்தின் அது போன்ற உயர் வளர்ச்சியடைந்த ஒரு காலகட்டத்தை பொற்காலகட்டம் என்று வரலாற்றில் குறிப்பிடுவர். அதுபோன்ற ஒரு வரலாற்று பொற்கால கட்டத்தில் பல துறைகளோடு இலக்கியமும் வளர்ச்சியடைந்து செவ்வியல் தரத்தை அடைகிறது. இதையே வேறு விதத்திலும் குறிப்பிடலாம். ஒரு மொழியின் இலக்கியம் செவ்வியல் தரத்தை எட்டியுள்ளது என்றாலே, அக்காலகட்டத்தில் அம்மொழிக்கான சமூகம், அரசியல், பொருளாதாரம், வணிகம், தொழில், கலை, பண்பாடு ஆகிய பல துறைகளிலும் ஒரு உயர் வளர்ச்சியை எட்டிய, ஒரு வரலாற்று பொற்காலகட்ட சமூகமாக இருந்துள்ளது என்பதாகிவிடும்.

செவ்வியல் இலக்கியங்களைப் படைத்த வரலாற்று பொற்கால கட்டங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

வரலாற்று எடுத்துகாட்டுக்கள்:

கிரேக்க மொழியின் செவ்வியல் இலக்கிய காலகட்டம் என்பது கிரேக்க நகர அரசுகளின் வரலாற்றுப் பொற்கால கட்டமாகக் கருதப்படும் கி.மு. 5ம், 4ம் நுற்றாண்டுகளாகும். இலத்தீன் மொழியின் செவ்வியல் இலக்கிய காலகட்டம் என்பது உரோமப் பேரரசின்  வரலாற்றுப் பொற்கால கட்டமாகக் கருதப்படும் (சீசர் முதல் மார்க்கஸ் அரேலியஸ் காலம் வரை) கி.மு. 1ம் நுற்றாண்டு முதல் கி.பி. 2ம் நூற்றாண்டு வரையான காலகட்டமாகும். சமற்கிருத மொழியின் செவ்வியல் இலக்கிய காலகட்டம் என்பது வைதீக இந்துக்களாலும் இந்திய வரலாற்று அறிஞர்களாலும் வரலாற்றுப் பொற்கால கட்டமாகக் கருதப்படும் குப்தர்கள் மற்றும் அவர்களுக்குப் பின் வந்தவர்களின் காலமான கி.பி. 4ம் நுற்றாண்டு முதல் கி.பி. 8ம் நூற்றாண்டு வரையான காலமாகும். சீன மொழியின் செவ்வியல் இலக்கிய காலகட்டம் என்பது “சௌ” பரம்பரை ஆண்ட சீனாவின் வரலாற்றுப் பொற்கால கட்டமாகக் கருதப்படும் கி.மு. 8ம் நுற்றாண்டு முதல் கி.மு. 3ம் நூற்றாண்டு வரையான காலகட்டமாகும். (ஆதாரம்: 1. விக்கிபீடியா-Ancient_ reek_language,  Classical_Latin,  Sanskrit_literature, 2. கிரீஸ் வாழ்ந்த வரலாறு, சீன வரலாறு-சாமிநாத சர்மா)

ஆக மேற்கத்திய கிரேக்க, உரோமப் பேரரசுகளின் வரலாற்றுப் பொற்கால கட்டத்தில் படைக்கப்பட்டவைகளே கிரேக்க, இலத்தீன் செவ்வியல் இலக்கியங்களாகும். சீனாவின் சௌ பேரரசின் வரலாற்றுப் பொற்கால கட்டத்தில் படைக்கப்பட்டவைகளே சீன செவ்வியல் இல்க்கியங்களாகும். இந்திய குப்தர்கால வரலாற்றுப் பொற்கால கட்டத்தில் படைக்கப்பட்டவைகளே சமற்கிருத செவ்வியல் இலக்கியங்களாகும்.

வரலாற்றுப் படிப்பினை:

மேற்கண்ட வரலாற்று எடுத்துக்காட்டுகள் நடந்து முடிந்த உண்மைகள் ஆகும். ஆகவே அவைகள், “பல துறைகளிலும் உயர் வளர்ச்சியடைந்த, ஒரு வரலாற்று பொற்காலகட்ட சமூகமே, ஒரு செவ்வியல் இலக்கிய காலகட்டத்தை படைக்க முடியும்” என்ற ஒரு வரலாற்று விதியினை, ஒரு வரலாற்று படிப்பினையை உறுதி செய்கின்றன.

தமிழ் - ஒரு செவ்வியல் மொழி:

இந்த வரலாற்று விதியினை, இந்த வரலாற்றுப் படிப்பினையை, நமது தமிழ் மொழியின் செவ்வியில் இலக்கிய காலகட்டமான நமது சங்ககால கட்ட சமுதாயத்துக்குப் பொருத்திப் பார்ப்போம். உலக மொழியியல் அறிஞர்கள் அனைவரும், சங்ககால இலக்கியங்களை செவ்வியல் இலக்கியங்களாக ஏற்று அங்கீகரித்துள்ளனர். ஒரு சில மொழியியல் அறிஞர்களுடைய, தமிழின் சங்ககால இலக்கியம் குறித்த கருத்துக்களைக் காண்போம்.

இந்த அறிஞர்கள் அனைவரும் தமிழ், சமற்கிருதம், போன்ற செவ்வியல் இலக்கியங்களையும் ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற நவீன இலக்கியங்களையும் கற்றுத்தேர்ந்த உலகப் புகழ்பெற்ற மொழியியல் அறிஞர்கள் ஆவர்.

ஜியார்ஜ் எல் ஹார்ட்:

உதாரணமாக இங்கு ஆறாவது மதிப்புரையை வழங்கிய திரு ஜியார்ஜ் எல் ஹார்ட் அவர்கள் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் சமற்கிருதம் படித்து விட்டு, விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் சமற்கிருத பேராசிரியராகப் பணியாற்றியவர். காளிதாசர், மாகா, பாரவி, சிரி ஹர்சர், ஆதிசங்கரர் ஆகியவர்களின் நூல்களையும், ரிக்வேதம், உபநிடதங்கள், மகாபாரதம் போன்றவைகளையும் சமற்கிருத மூலத்திலேயே படித்தவர். 1963 முதல் சமற்கிருத மூல நூல்களைப் படிக்கத் தனது நேரத்தில் பெரும்பகுதியை செலவிட்டவர். அது போன்றே கிரேக்க, இலத்தீன் செவ்வியல் நூல்களை, அவைகளின் மூலத்திலேயே நிறைய படித்தவர். இரசியன், பிரெஞ்சு, ஜெர்மனி போன்ற நவீன மேற்கத்திய மொழிகளைப் படித்தறிந்து, அவைகளின் நூல்களையும் விரிவாகப் படித்தவர். நவீன இந்திய மொழிகளான தெலுங்கு, இந்தி மொழி நூல்களை மொழிபெயர்ப்பு மூலம் விரிவாகப் படித்தவர். தற்பொழுது கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராசிரியராக பணியாற்றி வருபவர். (ஆதாரம்: www.karkanirka.org/2008/09/18/tamil_classical). இனி கருத்துரைகளுக்கு வருவோம்.

1. 1 பெஞ்சமின் கை பாயிங்டன்.

“பழந்தமிழ் எழுத்துக்களைப் பற்றிக் கூறும்பொழுது அவற்றின் மிகுந்த எளிமையைத்தான் நான் முதலில் குறிப்பிட வேண்டும்.அந்த எளிமையும் வேறு சில தன்மைகளும் தாம் தமிழ்மொழி அளவிறந்த தொன்மை வாய்ந்தது என்பதை நிறுவுகின்றன. தமிழி வரிவடிவத்திலிருந்து (லிபியிலிருந்து) உருவாக்கப்பட்ட கிரந்த லிபியில் தான் தென்னிந்தியாவில் சமற்கிருதம் எழுதப்படுகிறது. தமிழ்மொழி சமற்கிருதத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட மொழி அமைப்பைக் கொண்டது. சமற்கிருதம் உருவான காலகட்டத்திலேயே உருவான தொன்மை உடையது.” என்கிறார் பெஞ்சமின் கை பாயிங்டன். Benjamin Guy Baprngton(1830),An account of the sculptures and inscriptions at Mahamalaipur. TRANSACTIONS OF THE ROYALASIATIC SOCIETY. VOL  2.(paper  read on 12.07.1828)

2. கென்றி கொய்சிங்டன்.

“செந்தமிழைவிடச் செறிவு, சொல்வளம், எக்கருத்தையும் வெளியிடும் ஆற்றல், இனிமை ஆகிய தன்மைகளைக் கொண்ட மொழி வேறு எதுவும் இருக்க இயலாது. தென்னிந்தியாவில் மொத்தம் ஏறத்தாழ இரண்டு மூன்று கோடி பேர் பேசும் தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவம் மற்றும் சில மொழிகளைத் தோற்றுவித்தது தமிழே என்று கருதப்படுகிறது. ஆகவே தமிழைத் தென்னிந்தியத்(தொன்) மொழியாகவே கருதலாம்.” என்கிறார். கென்றி கொய்சிங்டன். Reverend Henry Hoisington(1853); Brief notes on the Tamil Language . JOURNAL OF THE AMERICAN ORIEANTAL SOCIETY III Article(ix) (paper read on 9.05.1852)

3. ஆர்.ஈ. ஆஷர்

“இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உடைய மிகச்சில மொழிகளில் தமிழ் ஒன்று. தமிழ் இலக்கியச் செல்வத்தை விட வளமான இலக்கியம் உலகில் வேறு எம்மொழியிலும் இல்லை. எனவே தமிழ் இலக்கியச் சிறப்பை உலகம் அறிந்துகொள்ள மொழிபெயர்ப்பு பணி தேவை. சங்க இலக்கியம் முதல் கம்பராமாயணம் வரை உள்ள செவ்வியல் தமிழ் இலக்கியம், மனித இனச்சாதனைகளுள் மிகச்சிறந்தவைகளுள் ஒன்று. கருத்துக்கள், இலக்கிய அமைப்பு, சொற்களஞ்சியம் ஆகியவைகளுள் சங்க இலக்கியம், இன்றைய தமிழ் படைப்புலகத்துக்கு ஒரு வற்றாத கருவூலமாக உள்ளது. தங்கள் படைப்பாற்றலை வியக்கத்தக்க அளவுக்கு மேம்படுத்தக் கூடிய செழுமையான பல்துறை வளங்கள் சங்க இலக்கியக் கருவூலத்தில் உள்ளன என்பதை இன்றைய தமிழ் படைப்பாளிகள் உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை.” என்கிறார் ஆர்.ஈ. ஆஷர் (2004). (NEGOTIATIONS  WITH  THE  PAST:   CLASSICAL TAMIL  IN  CONTEMPORARY  TAMIL;  Edrs Kannan M and carlos  Mena Institute Francais  de  Pondichery.)

4. ஏ.கே. இராமானுசன்.

“தொன்மையானவையே எனினும் இன்றும் உயிரூட்டம் உள்ளவையாய் இலங்கும் இந்த(சங்க இலக்கியம்) அகப்பாடல்களைப் போன்ற நயம் வாய்ந்தவை இந்திய இலக்கியங்கள் வேறு எவற்றிலும் இல்லை. அப்பாடல்கள் கூறும் வாழ்க்கை நெறியிலும், விளக்கும் நிகழ்ச்சிகளிலும் சிறந்த செம்மொழி இலக்கியத்தின் பின்வரும் கூறுகள் உள்ளன: காதலோடு கனிவும் பண்பாடும்; வெளிப்படைக் கூற்றுக்களோடு உள்ளுறை இறைச்சி, அங்கதம் ஆகியவையும்; தலைவன், தலைவி பெயர் சுட்டப்படாவிடினும் ஓவியம் போன்ற வர்ணணை; அடிகள் சில, அவை சுட்டும் பொருளோ பெரிது. தமிழர் அறிவுத்திறனின் மிகத் தொன்மையான எடுத்துக்காட்டு இவ்வகப் பாடல்கள்; அது மட்டுமன்று கடந்த ஈராயிரம் ஆண்டு தமிழ் இலக்கியப் படைப்பில் இவற்றை விஞ்சுவன இல்லை.” என்கிறார் உலகப் புகழ் பெற்ற மொழியியல் அறிஞர், இலக்கிய ஆய்வாளர் ஏ.கே. இராமானுசன்.

5. டாக்டர் கபில் சுவெலபில்

தொல்காப்பியம் “மனித அறிவாற்றல் எவ்வளவு வியத்தகு உச்சநிலை எய்தக்கூடும் என்பதைக் காட்டும் சிறந்த சான்றுகளுள் ஒன்று” one  of  the finest   monuments  of human intelligence. இலக்கியக் கொள்கையில் வேறு எந்த பண்டைய மொழிகளிலும் இல்லாத சிறந்த கருத்துக்களைத் தொல் பொருள் செய்யுளில் கூறுகிற்து.

எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்கள் (மொத்தம் 2300 பாடல்கள்) அச்சிட்டு உலகின் பார்வைக்கு முதலில் 1880-1910 காலஅளவில் வந்தது. அவை வெளிவந்த அக்கணமே உலகின் சிறந்த செம்மொழிகளில் ஒன்றாகத் தமிழ் ஆகிவிட்டது. பிரெஞ்சு ஆசியவியல் அறிஞர் “பியர் மெய்ல்”அவர்கள், “கிரேக்க உணர்ச்சிப் பாடல்களில் தலைசிறந்த நவ மணிகளுக்கு இணையானவை இச்சங்க இலக்கியப் பாடல்கள்; இந்தியாவில், ஏன் உலகில் இலக்கியப் படைப்புக்களின் சிகரங்களில் ஒன்று சங்க இலக்கியம்” என்று செய்துள்ள மதிப்பீட்டை சங்க இலக்கிய பாடல்களை ஆழ்ந்து பயின்றுள்ள எவரும் ஏற்றுக் கொள்வர்.

இந்தியாவின் பிற எந்த மொழி இலக்கியத்திலும் இல்லாத சிறப்புக் கூறுகளைக் கொண்டது என்பது மட்டுமின்றி பண்டையத் தமிழ் இலக்கியம் உயரிய இல்க்கிய நயமும் வாய்ந்தது.

இந்திய மொழி இலக்கியங்களிலேயே தமிழ் இலக்கியம் மட்டுமே செவ்விலக்கியமாகவும், நிகழ்கால இலக்கியமாகவும் ஒரே நேரத்தில் இலங்கும் சிறப்பு வாய்ந்தது; அது சமற்கிருத இலக்கியம் அளவு தொன்மை வாய்ந்தது; பண்டைய கிரேக்க மொழி செய்யுள்களை எப்படிச் செவ்வியல் இலக்கியம் என உலகம் கருதுகிறதோ அதே தன்மை வாய்ந்தது தமிழ் கழக இலக்கியம்.

தமிழ்ச் செவ்விலக்கியம்(சங்க இலக்கியம்) மக்களைப் பற்றிய இலக்கியம்; மக்கள் உருவாக்கியது. ஆனால் “நாட்டுபுற” இலக்கியமன்று. கழக இலக்கியங்கள் எக்காலத்துக்கும் பொருந்தும் அழகியல் கூறுகள் விழுமியங்கள் ஆகியவற்றை நிரம்பக்கொண்டவை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் யாத்த அவ்விலக்கியங்கள், பிற்காலத்தில் (அண்மைக்காலத் திறனாய்வாளர்) வகுத்துள்ள இலக்கியநயக் கோட்பாடுகளின் படியும் உயர்நிலையில் ஏற்கப்படுபவனவாக உள்ளன. பழந்தமிழ் இலக்கியமும் பண்பாடும் படைத்த, “அகம்-புறம்” கோட்பாடுகள் உலகிலேயே தனித்தன்மையும் சிறப்பும் வாய்ந்தவை.

6. ஜார்ஜ் எல். ஹார்ட்.

முதலாவதாக தமிழின் தொன்மை குறிப்பிடத்தக்கது. இக்காலத்திய பிற இந்திய மொழி இலக்கியங்களுக்கு ஓராயிரம் ஆண்டு முன்னர் உருவான இலக்கியத்தைக் கொண்டது தமிழ்.

இரண்டாவதாக தமிழ் இலக்கிய மரபு மட்டும் தான்(சமற்கிருதத்திலிருந்து பெறப்படாத) இந்திய மண்ணுக்குரிய இலக்கிய மரபு ஆகும். தமிழ் தனக்கு எனத்தனி, இலக்கியக்கொள்கை, இலக்கண மரபு, முருகியல்(aesthetics) உடையது; இவைகளின் அடிப்படையைக் கொண்ட தமிழ் செம்மொழி இலக்கியம், வேறு எம்மொழி இலக்கியத்துக்கும் இல்லாத தனித்தன்மைகளை (unique) கொண்டது.

மூன்றாவதாக சமற்கிருதம், சீனம், பாரசீகம், அரபு ஆகிய மொழிகளின் இலக்கியங்களில் சிறந்தவற்றுக்கு இணையான தரம் வாய்ந்தது தமிழ் செம்மொழி இலக்கியம். அது நுண்மாண் நுழைபுலம் மிக்கது; பல்வேறு பாடுபொருள் கொண்டது (முற்கால இந்திய இலக்கியங்களில் பொது மக்களைப் பற்றி நிறையப் பாடியது தமிழிலக்கியம் மட்டுமே); மாந்த இனத்துக்கு பொதுமையான விழுமியங்களைக் கூறியது. அவ்விலக்கியம் பாடித்துலக்கம் தராத மாந்த இனப்பட்டறிவு ஒன்றும் இல்லை.

இறுதியாக இக்கால இந்திய பண்பாட்டையும் மரபையும் உணர்வதற்கு பயிலவேண்டிய இலக்கியங்களில் தமிழ் இலக்கியம் முதன்மை வாய்ந்தது. உலகத்தின் சிறந்த செம்மொழிகளில் தமிழும் ஒன்று என்பது இத்துறையில் வல்ல அறிஞருக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெரிந்த உண்மை ஆகும் என்கிறார் ஜார்ஜ் எல்.ஹார்ட். ஆதாரம்; உலக அறிஞர்கள் பார்வையில் தமிழ்-பி.இராமநாதன். பக்கங்கள் முறையே, 1.(7,8). 2.(8,9). 3.(16,74). 4.(75). 5.(64,68,69,70,71).  6.(72,7)

தமிழ் மொழி ஒரு செவ்வியல் மொழி என்பதற்கு, சங்ககால இலக்கியம் ஒரு சான்றாதாரமாக திகழ்கிறது என்பதற்கு மேலே தரப்பட்ட மொழியியல் அறிஞர்களின் மதிப்புரைகளே போதுமானவைகளாகும். தமிழின் சங்க காலம் என்பது கி.மு 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 2 ஆம் நூற்றாண்டு வரையான 5 நூற்றாண்டுகள் ஆகும். இக்கால கட்டத்தில் 473 கவிஞர்களால் படைக்கப்பட்ட, 2381 செய்யுள்களை (102 செய்யுள்களுக்கு கவிஞர்கள் பெயர் இல்லை),  கொண்ட தமிழ் இலக்கியங்களே சங்க கால இலக்கியங்களாகக் கருதப்படுகின்றன( தமிழ் இலக்கிய வரலாறு-மு. வரதராசன், பக்: 48 ).

செவ்வியல் மொழிகளும் எழுத்தும்:

ஒரு மொழியில் செவ்வியல் இலக்கியங்கள் உருவாவதற்கு இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே அம்மொழிக்கான எழுத்து முறை உருவாகி இருக்க வேண்டும் என்பதை பிற செவ்வியல் இலக்கியங்களின் வரலாறுகள் நமக்கு கற்பிக்கின்றன. கிரேக்க செவ்வியல் இலக்கியங்களின் கால கட்டம் கி.மு 5 ம், 4 ம் நூற்றாண்டு என்றால், அதன் எழுத்து கி.மு 8 ம் நூற்றாண்டில் தோன்றிவிட்டது. இலத்தீன் செவ்வியல் இலக்கியங்களின் கால கட்டம் கி.மு முதல் நூற்றாண்டு முதல் கி.பி 2 ம் நூற்றாண்டு வரை என்றால், அதன் எழுத்து கி.மு 6 ம் நூற்றாண்டில் தோன்றிவிட்டது.(விக்கி: Greek_alphabet,  Latin_alphabet)

சீன செவ்வியல் இலக்கியங்களின் கால கட்டம் கி.மு 8 ம் நூற்றாண்டு முதல் கி.மு 3 ம் நூற்றாண்டு வரை என்றால், அதன் எழுத்து கி.மு 15 ம் நூற்றாண்டிற்கு முன்பே தோன்றிவிட்டது. சமற்கிருத செவ்வியல் இலக்கியங்களின் கால கட்டம் கி.பி 4 ம் நூற்றாண்டு முதல் கி.பி 8 ம் நூற்றாண்டு வரை என்றால், அதற்கான எழுத்தான அசோகன் பிராமியை, கி.பி 2 ம் நூற்றாண்டின் நடுவிலேயே பயன்படுத்துவது துவங்கி விட்டது. (அசோகன் பிராமி என்பது மௌரிய அரசர் அசோகரின் கல்வெட்டுகளில் பயன்படுத்தப்பட்ட எழுத்து முறை ஆகும். இதன் காலம் கி.மு 3 ம் நூற்றாண்டு ஆகும். இதற்கு முன் இந்திய மொழிகளுக்கு வேறு எழுத்து முறை இல்லை என கருதப்படுகிறது.)

தமிழி-பழந்தமிழ் எழுத்து:

ஆக சங்க கால செவ்வியல் இலக்கியங்களின் கால கட்டம் கி.மு 3 ம் நூற்றாண்டு முதல் கி.பி 2 ம் நூற்றாண்டு வரை(சங்க கால வரலாற்றுக் கவிஞர்களான மாமூலனார், பரணர் போன்றவர்களின் காலம் கி.மு 3 ம் நூற்றாண்டு ஆகும்) என்றால் தமிழ் மொழிக்கான எழுத்து முறை கி.மு 3 ம் நூற்றாண்டுக்கு, இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே தோன்றி இருக்க வேண்டும். நமது பழைய தமிழ் எழுத்து முறைக்கு தமிழி என்று பெயர். இவ்வெழுத்து முறை கி.மு 500க்கு முன்பே தோன்றி இருக்க வேண்டும் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் பல கிடைத்துள்ளன.

தமிழி எனப்படும் தமிழ் பிராமி எழுத்து கி.மு 500க்கு முற்பட்டது என்கிறார் ஆதிச்சநல்லூர் அகழாய்வு இயக்குநர் டாக்டர்.சத்தியமூர்த்தி அவர்கள். ஆதிச்சநல்லூரில் கிடைத்த தமிழி எழுத்து கி.மு 1500 முதல் கி.மு 500 வரையான கால கட்டத்தை சார்ந்தது என்றும், கண்டிப்பாக கி.மு 500 க்கு முற்பட்டது என்றும் (சுமார் கி.மு 8 ம் நூற்றாண்டு) டாக்டர். சத்தியமூர்த்தி அவர்கள் தெரிவித்துள்ளார் (ஆதாரம் 17.2.2005 இந்து நாளிதழ், preliminary   thermoluminescence   dating படி.) தொல்லியல் அறிஞர்களான திரு.இராஜன், திரு.நடனகாசிநாதன் போன்றவர்களும் இக்கருத்தினை ஆதாரங்களுடன் உறுதி செய்துள்ளனர். (Source: Tamils Heritage-Natana. Kasinathan, pages – 23 to 35)

செவ்வியல் இலக்கியங்களின் வரலாற்று படிப்பினைகளின் படியும், ஆதிச்சநல்லூர் அகழாய்வு இயக்குனர் டாக்டர்.சத்தியமூர்த்தி, தொல்லியல் அறிஞர்களான திரு.இராஜன், திரு.நடனகாசிநாதன் போன்றவர்களின் ஆய்வு முடிவுப்படியும், தமிழ் மொழியின் பழைய எழுத்தான தமிழி எழுத்து கி.மு 500 க்கு முற்பட்டது என்பது உறுதி ஆகிறது.

இந்திய மொழிகளில் தமிழ் மொழியில் மட்டுமே கி.மு 3 ம் நூற்றாண்டு முதல் உன்னதமான, உலகத்தரமான, உலகளாவிய மனித விழுமியங்களைக் கொண்ட செவ்வியல் இலக்கியங்கள் படைக்கப்பட்டன என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழில் செவ்வியல் இலக்கியங்கள் படைக்கத் துவங்கிய பின்னர், 600 ஆண்டுகள் கழித்து தான் சமற்கிருத்தத்தில் செவ்வியல் இலக்கியங்கள் படைக்கப்பட்டன.

சமற்கிருதமும் எழுத்தும்:

கி.பி 2 ம் நூற்றாண்டுக்கு முன் சமற்கிருத மொழிக்கு எழுத்து இல்லை என்றும், கி.பி 2ம் நூற்றாண்டுக்கு முந்தைய இந்தியாவில் உள்ள கல்வெட்டுகள், நாணயங்கள், செப்பேடுகள், இன்ன பிற எழுத்துச் சான்றுகள் ஆகிய அனைத்திலும் சமற்கிருதம் இல்லை என்பதும்தான் வரலாற்று ஆய்வு முடிவு ஆகும். இந்தியாவெங்கும் தமிழ், பாலி, பிராகிருதம் ஆகிய மொழிகளே அரசு மொழிகளாக, மக்கள் மொழிகளாக இருந்தன. ஆனால் சமற்கிருதம், அன்றைய காலகட்டத்தில் அரசு மொழியாகவோ, மக்கள் மொழியாகவோ இருக்கவில்லை.

கி.பி 150ல் தான் முதல் முதலாக சமற்கிருத மொழி எழுதப்பட்ட கல்வெட்டுகள் கிடைப்பதாக இந்திய வரலாற்று அறிஞர் டி.டி.கோசாம்பி அவர்கள் தனது பண்டைய இந்தியா என்ற நூலில் குறிப்பிடுகிறார். (பக்.350, தமிழ் பதிப்பு.) அந்த சமற்கிருத எழுத்தும் அசோகன் பிராமியில் தான் எழுதப்பட்டது. சமற்கிருதத்திற்கான தென்னிந்திய எழுத்து முறையான கிரந்த எழுத்து கி.பி. 3 ஆம் நூற்றாண்டில் உருவானது. அதுபோன்றே சமற்கிருதத்திற்கான வட இந்திய எழுத்து முறையான தேவநாகிரி என்பது அதற்குப் பின் நான்கைந்து நூற்றாண்டு கழித்துத் தான் உருவாகியது.

முதல் இந்திய செவ்வியல் மொழி:

பண்டைய கால கட்டத்தில், வட இந்தியாவில் பிராகிருதம், பாலி ஆகிய இரு மொழிகள் செல்வாக்கு பெற்றிருந்தன. தக்காண பகுதியில் தமிழும் பிராகிருதமும் செல்வாக்கு பெற்றிருந்தன. பண்டைய இந்தியாவில் மகத அரசுகளில் உயர் தரமான இலக்கியம் எதுவும் படைக்கப்படவில்லை என்பதைக் கூற வந்த டி.டி.கோசாம்பி அவர்கள், “சிசுநாகர் அல்லது மௌரியருடைய சமயச் சார்பற்ற படைப்பிலக்கியம் என்று ஏதும் ஒன்று அப்போது இருந்ததாக தெரியவில்லை” என்கிறார். (பண்டைய இந்தியா, தமிழ் பதிப்பு, பக்.410.) இந்தியா முழுவதும் தமிழ் மொழியைத் தவிர பிற மொழிகளில் செவ்வியல் தரமுள்ள இலக்கிய படைப்புகள் எதுவும் அன்று படைக்கப்படவில்லை என்பதை இக்கூற்று உறுதி செய்கிறது.

எனவே அக்காலகட்டத்தில், இந்தியாவில்,  செவ்வியல் தரமுடைய இலக்கியங்களைப் படைத்த தமிழ் மொழியில்தான்  முதன் முதலாக எழுத்து முறை உருவாகி இருக்க வேண்டும். பண்டைக் காலம் முதல் கி.பி 2 ஆம் நூற்றாண்டு வரையான பண்டைய இந்தியாவில் தக்காண பகுதி முழுவதும் தமிழ் மொழி தனியாகவும் பிராகிருதத்தோடும் இணைந்து ஆட்சி மொழியாகவும் மக்கள் மொழியாகவும் செல்வாக்கு பெற்றிருந்ததோடு உன்னதமான, உலகத்தரமான, உலகளாவிய மனித விழுமியங்களைக் கொண்ட செவ்வியல் இலக்கியங்களை படைத்த மொழியாகவும் இருந்தது. அதே சமயம் வட இந்தியப் பகுதிகளில் பிராகிருதம் பாலி முதலிய மொழிகள் மக்கள் மொழிகளாக அரசு மொழிகளாக இருந்த பொழுதிலும் செவ்வியல் இலக்கியங்கள் எதையும் படைக்கும் அளவு அவை வளர்ச்சி பெற்றிருக்கவில்லை.

சமற்கிருத மொழி கி.பி 2 அம் நூற்றாண்டு வாக்கில் தான் முதன் முதலாக கல்வெட்டுகளில் பயன்படுத்தப்பட்டது. அதன் செவ்வியல் படைப்பிலக்கியங்கள் கி.பி 4 ஆம் நூற்றாண்டு வாக்கில் தான் உருவாகின. பண்டைய இந்தியவில் சமற்கிருதம் வரலாற்றளவில் மக்கள் மொழியாகவோ அரசு மொழியாகவோ கி.பி 2 ஆம் நூற்றாண்டு வரை இருக்கவில்லை. ஆகவே பாலி, பிராகிருதம், சமற்கிருதம் போன்ற வட இந்திய மொழிகளில் முதன் முதலாக எழுத்து முறை உருவாகியிருக்க வாய்ப்பில்லை. (ஆகவே வரலாற்றுப் படிப்பினையின்படி முதல் செவ்வியல் இலக்கியங்களைத் தோற்றுவித்த தமிழ் மொழியில் மட்டுமே முதல் இந்திய எழுத்து முறை உருவாகியிருக்க வேண்டும். தொல்லியல் கல்வெட்டியல் சான்றுகளும் அதனை உறுதிப் படுத்துகின்றன.)

ஆக தமிழ் மொழி மட்டுமே கி.மு.3 ஆம் நூற்றாண்டு முதலே செவ்வியல் இலக்கியங்களை படைக்கும் திறன் கொண்டதாக வளர்ச்சி பெற்றிருந்தது என்பதால் அன்றைய தமிழ் சமூகம் அரசியல், பொருளாதாரம், தொழில், வணிகம், கலை, பண்பாடு, இலக்கியம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் பிற இந்திய சமூகங்களை விட ஒரு உயர் வளர்ச்சி பெற்ற சமூகமாக இருந்திருக்க வேண்டும்.

இந்திய அரசு 4 மொழிகளை செவ்வியல் மொழிகள் என அங்கீகரித்து உள்ளது. முதலில் தமிழ் மொழியும் பின் சமற்கிருதமும் அதற்குப் பின் கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளும் செவ்வியல் மொழிகளாக இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டன. இதில் தமிழ் மொழியின் செவ்வியல் இலக்கியக் காலகட்டம் என்பது கி.மு. 3 முதல் கி.பி. 2 ம் நூற்றாண்டு வரையாகும். சமற்கிருத மொழியின் செவ்வியல் இலக்கிய காலகட்டம் என்பது கி.பி. 4 முதல் கி.பி. 8 ஆம் நூற்றாண்டு வரையான குப்தர் காலமும் அதற்குப் பிந்தைய காலமும் ஆகும்.

கன்னட, தெலுங்கு மொழிகள்:

இரேனாதி சோழர்களால் (Renati Cholas), கி.பி 6 ஆம் நூற்றாண்டில்  வெட்டப்பட்ட தெலுங்கு மொழியின் முதல் கல்வெட்டு இராயல் சீமாவில் கிடைத்துள்ளது. தெலுங்கு மொழியின் முதல் இலக்கிய நூலான நன்னய்யாவின் மகாபாரதம் கி.பி 11 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது ஆகும். தெலுங்கு மொழியின் பொற்காலமோ விஜய நகர அரசர்களின் காலம் ஆன கி.பி 15 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 17 அம் நூற்றாண்டு வரையான காலகட்டம் ஆகும்.

கன்னட மொழியின் முதல் கல்வெட்டு கடம்ப மன்னர்களால் வெட்டப்பட்ட கி.பி 5 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கல்மிதி கல்வெட்டாகும் (Halmidi  Inscription). கன்னட மொழியின் முதல் இலக்கியம் கி.பி 9 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கவிராஜ மார்க்கம் (Kaviraja maarga) என்பதாகும். அதன் பொற்காலம் கி.பி. 10 முதல் கி.பி. 12 ம் நூற்றாண்டு ஆகும். ஆக தெலுங்கு கன்னட ஆகிய இரு மொழிகளின் இலக்கியங்களும் தமிழ் மொழியில் செவ்வியல் இலக்கியப் படைப்புகள் தோன்றிய பின் 1000 ஆண்டுகள் கழித்து தோன்றியவைகள் ஆகும். (ஆதாரம்: 1. இன்றைய இந்திய இலக்கியம்-சாகித்திய அக்காதெமி வெளியீடு, பக்; 87,185. 2. விக்கிபீடியா; Telugu_language, kannada_language.)

மேலும் தெலுங்கு மொழியின் முதல் கல்வெட்டை வெட்டிய இரேனாதி சோழர்களும், கன்னட மொழியின் முதல் கல்வெட்டை வெட்டிய கடம்ப அரசர்களும் தமிழ் வழி வந்த அரச வம்சங்களாகவே தெரிகிறது. கடம்ப மன்னர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுகின்றனர். இரேனாதி சோழர்களோ, தமிழக சோழ அரச வம்சத்தோடு தொடர்பு கொண்டவர்கள்.

தற்பொழுது தெலுங்கு, கன்னட மொழி பேசும் பகுதிகளில் சங்க காலத்தில் கொடுந்தமிழே பேசப்பட்டது என சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. வடக்கே செல்லச் செல்ல தமிழ் மொழி திரிந்து, தேய்ந்து கொண்டிருந்ததால் அப்பகுதியை மொழி பெயர் தேயம் என சங்க இலக்கியம் கூறுகிறது. சங்க இலக்கியம் உருவாகி, பல நூற்றாண்டுகள் கழித்து சமற்கிருத, பிராகிருத, பாலி மொழி கலப்புகளால் கன்னட, தெலுங்கு மொழிகள் உருவாகின. ஆனால் அம்மொழிகளுக்கான அடிப்படை தமிழே. அதனால் தான் கென்றி கெய்சிங்டன் 1853 லேயே, “தமிழ் மொழியிலிருந்து உருவான மொழிகளாக, கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு ஆகிய மொழிகள் கருதப்படுகின்றன” எனக் குறிப்பிட்டார்.

ஆக, உலக செவ்வியல் இலக்கியங்களுக்கு உரிய வரையறைகளைக் கொண்டு நோக்கினால் தமிழ், சமற்கிருதம் ஆகிய இரு மொழிகள் மட்டுமே செவ்வியல் மொழிகளாகும் தகுதி உடையன. ஆனால் அரசியல் காரணங்களால் தெலுங்கு, கன்னட மொழிகளும் செவ்வியல் மொழிகளாக மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் கன்னட தெலுங்கு மொழிகளை செவ்வியல் மொழிகளாக உலக அறிஞர்கள் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.

ஜப்பான் மொழி:

ஜப்பான் மொழி கி.பி.5 ஆம் நூற்றாண்டில் சீன எழுத்தைக் கொண்டு எழுதப்பட்டது. அதற்கு முன் அதற்கு எழுத்து இல்லை. கி.பி. 712 இல் எழுதப்பட்ட ஜப்பான் மொழியின் kojiki (Records of ancient matter) என்ற நூல்தான் தற்பொழுது கிடைக்கும் முதல் ஜப்பான் நூலாகும். கி.பி.5 முதல் கி.பி.8 ஆம் நூற்றாண்டு வரையான பழைமையான கவிதைகளின் தொகுப்பு நூல் “1000 இலைகளின் தொகுப்பு“ ( Manyoshiu ) என்ற பெயரில் கி.பி 759 இல் தொகுக்கப்பட்ட நூல் ஆகும்.  இதில் 4000 பழைமையான கவிதைகள் உள்ளன. இதுவே ஜப்பான் மொழியின் மிக மிக பழமையான கவிதைகளின் தொகுப்பு ஆகும். ஜப்பான்  மொழியின் பொற்காலகட்டமாகக் கருதப்படுவது கி.பி.9 முதல் கி.பி.12 ஆம் நூற்றாண்டு வரையான ஹியான் ( Heian period ) கால கட்டம் ஆகும். இக்காலகட்டத்தில் ஒப்பீட்டளவில் ஜப்பான் ஒரு வளர்ச்சி பெற்ற சமூகமாக இருந்தது. (Source; A History of Japanese Literature – By William  George  Aston,  pages; 18,34,35,54.)

ஆக ஜப்பான் இலக்கியம் கி.பி.5 ம் நூற்றாண்டில் துவங்கிவிட்டது. அதன் பொற்காலமோ கி.பி.9 முதல் கி.பி.12 ஆம் நூற்றாண்டு ஆகும். எனவே ஜப்பான் மொழி பல விதத்திலும் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளுக்கு சமமானது அல்லது அவைகளைவிடப் பழைமையானது. மிகச் சிறந்த இலக்கியங்களை கொண்டது. எனினும் உலக அறிஞர்கள் ஜப்பான் மொழியை ஒரு செவ்வியல் மொழியாக அங்கீகரிக்கவில்லை. ஜப்பானியர்களும் தங்கள் மொழி ஒரு செவ்வியல் மொழி எனக் கூறிக் கொள்வதில்லை. செவ்வியல் மொழிகளாக உலக அறிஞர்களால் அங்கீகரிக்கப்பட்ட கிரேக்கம், இலத்தீன், சீனம், அரபி, ஹிப்ரூ, சமற்கிருதம், தமிழ் போன்ற மொழிகள் அனைத்துமே 2000 ஆண்டுகள் பழைமையானவை; தனித்தன்மை மிக்கவை; உயர்தரமான உன்னதமான இலக்கியங்களைக் கொண்டவை; உலகளாவிய மனித விழுமியங்களை பேசுபவை; பல கிளை மொழிகளை உருவாக்கியவை ஆகும்.

சங்க இலக்கியம் - ஒரு பக்கமே:

சங்க இலக்கியங்கள் குறித்துப் பேசும்பொழுது அதன் கால கட்டத்தையும், அவை தொகுக்கப்பட்டவை தான் என்பதையும், பெரும்பகுதி அழிந்ததுபோக எஞ்சியது ஒரு சிறு பகுதி மட்டுமே தற்பொழுது உள்ளன என்பதையும், அவை வரலாற்று ஆவணங்கள் அல்ல! இலக்கியங்களே என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். இவைகளை கவனத்தில் கொள்ளும்பொழுது மட்டுமே சங்க இலக்கியம் அக்கால தமிழ் சமூகத்தின் அனைத்துத் துறைகளும் குறித்தோ அல்லது அனைத்து தரவுகளும் குறித்தோ பேசியிருக்க வாய்ப்பில்லை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள முடியும். தமிழ் சமூகத்தின் ஒரு பக்கத்தை மட்டுமே சங்க இலக்கியங்கள் காட்ட வல்லன என்பதும், அதுவும் தொகுத்தவரின் கண்ணோட்டத்திற்குட்பட்டே அவை நிகழும் என்பதும் தான் உண்மை.

இவை பற்றிய தெளிவு இருக்குமானால், சங்க இலக்கியத்தில் சொல்லப்படாத ஒன்று என்பதால் சங்க கால சமூகத்தில் அந்த ஒன்று இல்லை என முடிவு செய்ய முடியாது என்பதை உணர இயலும். (உதாரணமாக தமிழர்கள் உலகம் முழுவதும் தங்கள் சொந்தக் கப்பலில் சென்று, தங்கி வணிகம் புரிந்து வந்துள்ளனர். அதற்கான சான்றுகள் மேற்கில் எகிப்திலும், கிழக்கில் தாய்லாந்திலும் கிடைத்துள்ளன. (ஆதாரம்: 1. தமிழகக் கடல்சார் வரலாறு-தமிழ் பல்கலைகழகம், பக்; 36, 68. 2. கடல்வழி வணிகம்-நரசய்யா, பக்; 48-65&120-138) ஆனால் இதுபற்றிய தரவுகள் எதுவும் சங்க இலக்கியத்தில் இல்லை. வெளிநாட்டினர் தமிழகத்திற்கு வந்து வணிகம் புரிந்ததகவல்களே உள்ளன.)

முன்பு குறிப்பிட்ட பல்வேறு வரையறைகளுக்கு உட்பட்டதாக சங்க இலக்கியம் இருந்த போதிலும், சாதாரண மனிதர்கள் முதல் மன்னர்கள் வரையான கவிஞர்களைக் கொண்ட இந்த சங்க இலக்கியம், மிகச் சாதாரண கீழ்நிலை மனிதனின் வாழ்க்கை முதல் உயர்குல வேளிர்களின் வாழ்க்கை வரை பேசுகிறது; இயற்கையை பாடுகிறது, நேசிக்கிறது; மதச் சார்பற்றதாகவும் அறிவியல் கண்ணோட்டத்தோடும், பொருள் முதல்வாத மெய்யியலை கொண்டதாகவும் இருக்கிறது. ஒட்டு மொத்தமாக சொல்லப்போனால் மனிதம் குறித்த நவீன சிந்தனையின் சாயல் சங்க இலக்கியத்தில் இருக்கிறது.

சங்க காலக் கல்வி:

இதுபோன்ற ஓர் உயர்தரமான உன்னதமான இலக்கியங்களைப் படைத்த சங்க கால கவிஞர்கள், அரசன் முதல் ஆண்டி வரையான அன்றைய தமிழ்ச் சமூகத்தின் பரவலான அனைத்து தரப்பிலும் இருந்து, இலக்கியங்களை படைத்துள்ளனர். இச்செய்தி அன்றைய தமிழ் சமூகத்தில், பரந்துபட்ட அளவில் அனைத்து தரப்பு மக்களும் கல்வி அறிவு கொண்டிருந்தனர் என்பதை உறுதி செய்கிறது. தற்காலத் தொல்லியல் சான்றுகளும் அதை உறுதி செய்கின்றன.

இந்து நாளிதழ், 24.6.2010 இல் புகழ்பெற்ற தொல்லியல் கல்வெட்டியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள், சங்க கால தமிழகத்தில், மிகப் பரந்த அளவில், சாதாரண மக்கள் வரை கல்வி அறிவு கொண்டிருந்தனர் என்பதை உறுதி செய்கிறார். ஒதுக்குப் புற கிராமப் பகுதியில் வாழும் கள் விற்பவர்கள் கூட தனது பானையில் தனது பெயரை எழுதி வைக்கும் அளவு தமிழகம் பரந்த அளவிலான கல்வி அறிவை சங்க காலத்தில் கொண்டிருந்தது என்பதை எடுத்துக்காட்டுகளோடு அவர் விளக்குகிறார். (Source : An epigraphic perspective on the antiquity of Tamil – Iravatham Mahadevan, dt 24.6.2010, The Hindu)

தென்னிந்திய தொல் பொருள் ஆய்வுக்கழகம் 22.11.2005 இந்து நாளிதழில் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பது சம்பந்தமாக வெளியிட்ட ஒரு செய்தியில், இந்தியாவில் மொத்தம் சுமார் 1,00,000 கல்வெட்டுகள் கிடைத்துள்ளன என்றும், அதில் தமிழகத்தில் மட்டும் 60,000 கல்வெட்டுகள் உள்ளன என்றும், அந்த 60,000ல், 5% மட்டுமே பிறமொழிக் கல்வெட்டுகள் என்றும், மீதி உள்ள கல்வெட்டுகள் அனைத்தும் தமிழ் கல்வெட்டுகளே என்றும் குறிபிட்டுள்ளது. இந்த எண்ணிக்கையும், இந்தியாவில், ஒப்பீட்டளவில் பண்டைய தமிழகம் பரந்த அளவில் கல்வி அறிவு பெற்றதாக இருந்தது என்பதைத் தெரிவிக்கிறது.

ஆக சங்க கால தமிழ் சமூகத்தில் அனைத்துத் தரப்பினரும், பரந்து பட்ட அளவில் கல்வி அறிவு கொண்டிருந்தனர் என்பதோடு சங்க இலக்கியம் போன்ற உயர்தரமான உன்னதமான இலக்கியங்களை படைத்தனர் என்பது, அன்றைய தமிழ் சமூகம், பல துறைகளிலும் பரவலான அளவில், உயர் வளர்ச்சியை அடைந்திருந்தது என்பதற்கு ஒரு சான்றாக அமைகிறது.

டி.டி.கோசாம்பி:

தமிழின் வரலாற்றை, தமிழர்களின் வரலாற்றை இரண்டாம் நிலைக்கு உந்தித் தள்ளும் சிந்தனை இந்திய அறிஞர்களிடம் இருக்கிறது. இதற்கு  பண்டைய இந்தியா என்ற நூலை எழுதிய வரலாற்று அறிஞர் டி.டி.கோசாம்பி அவர்களே ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறார். அவர் ஒரு மார்க்சிய அறிஞர் எனவும் அறியப்படுகிறார். பண்டைக் கால தென்னிந்திய வரலாற்றை பேச வந்த அவர், “வரலாற்றைத் தொழிலாகக் கொண்டவர்களுக்கு தெற்கில் உள்ள அரச வம்சப் பட்டியல் ஒரு இன்பமான பொழுபோக்கு; இட்சுவாகு, பல்லவர்......... சேர, சோழ, பாண்டியர் மற்றும் வேறு பல மன்னர்கள் கொண்ட பட்டியல் கவர்ச்சியாக இருந்தாலும் பொதுவாக அவை அர்த்தமற்றவை” என்கிறார். (பக்கம் : 396 – பணடைய இந்தியா, தமிழ் பதிப்பு)

பின் சமற்கிருத இலக்கியங்கள் குறித்து பேச வந்த அவர், “ ....... அவ்வாறே பணடைய தமிழ் இலக்கியத்தையும் இந்த ஆய்விலிருந்து நான் விலக்க வேண்டி இருக்கிறது" எனச் கொல்லிவிட்டு பெரும்பாலான சமயச் சார்பான சமற்கிருத இலக்கியம் குறித்து நிறைய பேசுகிறார். (பக்கம் : 410 –பண்டைய இந்தியா). 550 பக்கம் கொண்ட அந்த நூலில் மதச் சார்பற்ற, அறிவியல் கண்ணோட்டம் உடைய, பொருள் முதல்வாத மெய்யியலைக் கொண்ட, உயர் வளர்ச்சி அடைந்த சங்க கால சமூகம் குறித்தோ அதன் இலக்கியம் குறித்தோ எதுவுமே பேசப்படவில்லை. உயர் வளர்ச்சி அடைந்த தமிழ் சங்க கால சமூகம் குறித்து எதுவுமே பேசாத அவர், அந்நிய வரலாற்று ஆசிரியர்கள் அலெக்சாந்தரின் படையெடுப்பை மட்டும் ஒரு மாபெரும் சம்பவமாக சித்தரிப்பது குறித்து வருத்தப்படுகிறார். (பக்கம் : 293 – பண்டைய இந்தியா)

தமிழின் சங்க கால இலக்கியம் குறித்து அறிந்தவர், மார்க்சியவாதி, பண்டைய வட இந்திய நூல்கள், கல்வெட்டுகள் அனைத்துமே சேர, சோழ, பாண்டிய அரசுகள் குறித்து குறிப்பிடுவதை அறிந்தே இருப்பார். ஆனால் அவைகளை அர்த்தமற்றவை என ஒதுக்கிவிட்டு, தமிழ் சங்க கால இலக்கியங்களை ஆய்வில் இருந்து விலக்கிவிட்டு, வரலாறு எழுதுகிற ஒரு வட இந்திய மார்க்சிய வரலாற்று அறிஞர் குறித்து என்ன சொல்வது? வட இந்திய வரலாறுகள் குறித்து என்ன சான்றுகள் உள்ளன? சமயம் சார்ந்த புனிதப் பாடல்களும் புராணங்களும் தான் அதிகம். நம்பத் தகுந்த சான்றுகளாக உள்ள அசோகர் மற்றும் கலிங்க மன்னன் காரவேலனின் கல்வெட்டுகள், மெகஸ்தனிஸ் மற்றும் சாணக்கியரின் நூல்கள் ஆகிய அனைத்துமே தமிழக அரசுகள் குறித்துப் பேசுகின்றன. மிகப்பெரிய அளவிலான உயர்தரமிக்க சங்க இலக்கியம் இருக்கிறது. எனினும் தமிழர் வரலாறு குறித்து அறிந்து கொள்ள அல்லது அது குறித்து பேச அவர் விரும்பவில்லை. அது முக்கியமற்றது என அவர் கருதுகிறார்.

இந்தியக் கண்ணோட்டம்:

இங்கு நான் முன்பு குறிப்பிட்ட வரலாற்று விதியினை, வரலாற்றுப் படிப்பினையை நினைவு கூற விரும்புகிறேன். ஒரு மார்க்சியவாதியாக அறியப்படும் டி.டி.கோசாம்பி அவர்கள் செவ்வியல் தரமிக்க சங்க இலக்கியங்களை படைத்த தமிழ் சமூக வரலாற்றை, அதன் அரசுகளை அர்த்தமற்றவை என ஒதுக்குவது, பொதுவாக வட இந்திய வரலாற்று அறிஞர்களின் ஒரு சார்பு மனப்பான்மையையே காட்டுகிறது. இந்த ஒரு சார்பு மனப்பான்மை வட இந்திய அறிஞர்களிடம் மட்டுமல்ல, தமிழ் அறிஞர்கள் உட்பட பல தென்னிந்திய அறிஞர்களிடமும் இருக்கிறது. இதுவே வருத்தத்திற்குரிய விடயம். பொதுப்படையான இந்தியக் கண்ணோட்டதில் இருந்து விலகிப் பேசுவது, உண்மையைப் பேசுவது, தன்னைத் தனிமைப் படுத்தி தனது வளர்ச்சியை சிதைத்து விடும் என்ற பயமும் பலருக்கு இருப்பதாகத் தெரிகிறது. (இங்கு இந்தியக் கண்ணோட்டம் என்பதுவே ஒரு சார்பான தமிழக வரலாற்றை ஒதுக்குகிற, விலக்குகிற, மறுக்குகிற கண்ணோட்டம் ஆகும்.) இந்நிலை மாறும்பொழுது மட்டுமே உண்மையான வரலாறு வெளிப்படும். தமிழக வரலாற்றின் தனித் தன்மையும், இந்திய வரலாற்றில் தமிழர்கள் ஆற்றிய பங்கும் நிலை நாட்டப்படும்.

-   கணியன் பாலன்

Pin It