“மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி” என்று அறிஞர்கள் கூறுவர். அப்படிப்பட்ட ஒரு மக்களாட்சி நாட்டில் மக்களுக்கான ஒரு திட்டம் நல்லதாக இருந்தாலும் கேடு பயப்பதாக இருந்தாலும் அதற்கு மக்களினுடைய கருத்துகளைக் கேட்க வேண்டும் என்பது நடைமுறை விதி. இப்போது நாம் இதன் வாயிலாக கூற வருவது மக்களாட்சி அரசு என்று சொல்லக்கூடிய நம் மத்திய மாநில அரசுகளின் மக்கள் நலத்திட்டம் என்ற பெயரில் அமைத்த கூடங்குளம் அணு உலையைப் பற்றித்தான்.

இந்த “அணு”, “உலை” என்கிற சொற்களைத் தனியே பிரித்துப் பொருள் தெரிய முற்படும்போது உலை என்ற சொல் நாம் பெரும்பாலும் அறிந்ததே. அதன் பொருள் “கொதிகலன்” (அ) “கொதிப்பான்”.  இச்சொற்றொடரில் முதலில் உள்ள அணு என்றால் என்ன?

“அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி குறுகத் தறித்த குறள்” என்றாள் ஒளவைப் பாட்டி. முற்காலத்தில் அணு என்பது மிகச் சிறிய, மிக மிக நுண்ணிய துகள் என்றே பொருள் கொள்ளப்பட்டது.

                koodankulam_371அணு என்பது நம் கண்ணால் நேரடியாகக் காண முடியாத, கூட்டு நுண்ணோக்கியின் உதவியாலும் அறிய முடியாத மிக மிகச் சிறிய,- மிக மிக நுண்மையான மிக மிக இலேசான ஒரு துகள். ஒரு மை எழுதுகோலின் மேல்பக்கத்தில் உள்ள “NIB” என்று சொல்லக்கூடிய அம்முனையில் மட்டும் இலட்சக்கணக்கான அணுக்கள் இருப்பதாக அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். இதிலிருந்தே நாம் அணு என்பது எவ்வளவு அளவில் இருக்கும் என அறிந்து கொள்ளலாம். இந்த அடிப்படைப் புரிதலில் அறிவியல் மொழியில், நம் கண்ணுக்குத் தெரியும் எந்த ஒரு பொருளையும் அடித்து உடைத்து, நொறுக்கி, தூளாக்கி, தூசாக்கி இப்படி மேலும் மேலும் பகுக்க முடியாத, அப்படிப் பகுத்தால் வேறு வேறு அணுக்களாக மாறிவிடுகின்ற கூறுள்ள ஒரு துகளையே அப்பொருளின் மூலக்கூறு என்கிறோம்.

                சான்றாக H2O என்பது நீரின் ஒரு மூலக்கூறு. அதாவது நீர் என்கிற ஒரு மூலக்கூறில் ஹைட்ரஜன் அணு இரண்டும், ஆக்ஸிஜன் அணு ஒன்றும் உள்ளன என்பது இதன் பொருள். அதாவது இப்படிப் பகுக்கும் சாத்தியமுள்ளதையே மூலக்கூறு என்பர். இப்படிப் பகுக்க சாத்தியமில்லாமல் அல்லது எத்தனை முறை பகுத்தாலும் எவ்வளவு சிறியதாகப் பகுத்தாலும் மீண்டும் மீண்டும் அதே பொருளே வருகிற வேறு ஒரு பொருளாய் மாறாத ஒரு துகளை தனிமம், தனிமத் துகள் என்கிறோம். எடுத்துக்காட்டாக இரும்பு, தாமிரம், வெள்ளி, தங்கம், பாதரசம், யுரேனியம் முதலானவை இப்பண்புகள் கொண்டவை. இப்படிப்பட்ட தனிமங்களின் மேலும் பகுக்க முடியாத மிகச் சிறிய மிக மிக நுண்ணிய துகளே அணு எனப்படுகிறது. இன்றைய சூழ்நிலையில் அணுவைப் பற்றிய விளக்கம் இவ்வளவு போதுமானதே.

                “கூடங்குளம் அணு உலையை எதிர்த்து மக்கள் ஏன் போராடுகிறார்கள்? அதனால் அவர்களுக்கு மட்டுமில்லாமல் நமக்கும் மின்சாரம் எனும் நன்மை தரக்கூடிய அடிப்படைப் பொருள்தானே கிடைக்கிறது?” என்று நம்மில் பலருக்கும் கேள்விகள் எழக் கூடும். கூடங்குளம் அணு உலையிலிருந்து மின்சாரம் மட்டும்தான் நமக்குக் கிடைக்குமா? என்பதை முதலில் நாம் தெளிவுபடுத்த வேண்டும். அணு உலை மூலமாக மின்சாரம் மட்டுமின்றி, புளுட்டோனியம் என்ற பொருளை வைத்து அணுகுண்டு மற்றும் அணு ஆயுதத்திற்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் செய்யலாம்.

                இந்தியா இப்போது அணு ஆயுதத்தில் வளர்ச்சி பெற வேண்டிய கட்டாயம் ஏன்? இந்த நாட்டைக் காப்பதற்காகத் தான் அணு ஆயுதம் என்று அரசு சொல்கிறது. உலகில் எத்தனையோ நாடுகள் அணு உலை இல்லாமலே ஆயுதத்தில் வளர்ச்சி பெற்றுள்ளது. சில நாடுகள் எங்களுக்கு அணு ஆயுதமே தேவையில்லை என்று எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கி நிற்கின்றன. அப்படியே இந்த உலையில் இருந்து புளுட்டோனியம் எடுக்காமல், மின்சாரத்தை மட்டும் உற்பத்தி செய்தால்கூட அவ்வுலையின் மொத்த உற்பத்தித் திறன் 1000 மெகாவாட். அதாவது ஒரு ஆண்டிற்கு 1000 மெகாவாட் வீதம் மின்சாரம் கிடைக்கும். இதில் ஏற்கனவே செய்யப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் அண்டை மாநிலங்களுக்குச் சிறிதும், மத்திய அரசுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் இவ்வுலையில் இருந்து மின்சாரம் அளிக்கப்படும். அதைத் தவிர கம்பிகளில் சிக்கி வீணாகும் மின் அளவும் சிறிது உள்ளது. நம் தமிழகத்தில் தற்போதைய சாராசரி மின் தேவை 4000 மெகா வாட். ஆனால் கூடங்கும் அணு உலையில் இருந்து, மின்சாரம் பிற மாநிலங்களுக்கும், நிறுவனங்களுக்கும் அளிக்கப்பட்டு நம் தமிழகத்திற்கு கிடைப்பதோ வெறும் 237 மெகாவாட் மட்டுமே. இந்த 237யை வைத்துக் சென்னை புறநகர் பகுதிகளுக்குக் கூட முழுமையாக மின்சாரம் அளிக்கமுடியாது என்கின்றனர் மின்வாரிய அதிகாரிகள். இவ்வெல்லாச் சிக்கல்களையும் தவிர்த்து பெரும்பான்மையான அளவு மின்சாரம் நமக்குத் தரப்பட்டாலும், அணு உலை தொடர்ந்து எவ்விதச் சிக்கலும் இன்றி இயங்கினாலும் அதிகபட்சமாக அவ்வுலையில் இருந்து 40 ஆண்டுகளுக்கு மட்டுமே மின்சாரம் பெறலாம். அதன்பின்பு 48,000 ஆண்டுகளுக்கு அவ்வுலையை அப்படியே மூடி வைக்க வேண்டும். உதாரணமாக 2011 முதல் 2050 வரை மின்சாரம் பெறலாம் என்றால் கி.பி.52,012ம் ஆண்டுவரை அவ்வுலையை மேற்கூறியவாறு மூடி வைக்க வேண்டும். அதில் ஏதேனும் சிறு பாதிப்புகள் ஏற்பட்டால் கூட கதிர்வீச்சு வெளிப்பட்டு விடும்.

                இப்பொழுது நாம் கதிர்வீச்சு என்றால் என்ன? அது எங்கே இருந்து வருகிறது? ஆதனால் விளையக் கூடிய தீங்கு என்ன என்பதை அறிவோம். கதிர்வீச்சின் அளவை “ராண்டஜன்” என்ற அலகால் குறிப்பிடுகின்றனர்.

                அதாவது 0-25 ராண்டஜன் (R) அளவு கதிர்வீச்சினால் குறிப்பிடத்தக்க விளைவு எதுவும் நமது உடலில் ஏற்படாது. 25-60R பாயும் போது இரத்தத்தில் சிறிது மாற்றம் ஏற்படும். 50–100R பாயும் தாக்கும்போது வாந்தியும் களைப்பும் ஏற்படும். 100-200R ல் இரத்தப்பெருக்கு ஏற்படும். 200-400R-ல் உடலில் நிரந்தர மாற்றம் ஏற்படும். 400R ல் 50% இறப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. 600R அளவு பாயும்போது 100R இறப்பு உறுதி. இந்த 600R அளவு கதிர்வீச்சு கூட நம் கண் இமைக்கும் நேரத்தில் நம்மைத் தாக்கிவிடும்.

                இதில் நாம் வருத்தப்படக்கூடிய செய்தி என்னவென்றால் அக்கதிர்வீச்சு நம் கண்ணுக்குத் தெரியாத காற்றில் பரவக்கூடிய ஒரு கதிர். நம் வழக்கமான முறைப்படி கூறினால் கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்ட ஆண்கள் ஆண்மையை இழக்க வாய்ப்புண்டு. அவர்களுடைய குழந்தைகள் மட்டுமில்லாது அக்கதிர்வீச்சின் பாதிப்பு அதாவது உடல் குறைபாடுகள், உறுப்புக் குறைபாடு, உறுப்புகள் சரியான இடத்தில் இல்லாமை, வளர்ச்சி இல்லாமை, சில இடங்களில் சதைகளின் மித மிஞ்சிய வளர்ச்சி போன்றவை அதன்பின்பு வரக்கூடிய மூன்று தலைமுறையினரையும் பாதிப்பிற்கு உள்ளாக்கும்.

                இவ்வளவு தீமைகள் உள்ள ஒரு திட்டத்தை அரசு எவ்வாறு அங்கீகரிக்கும் என நீங்கள் நினைக்கலாம். அரசைப் பொறுத்தமட்டில் நம் தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன இடையூறுகள், துன்பங்கள் ஏற்பட்டாலும், பல இலட்சம் மக்கள் அழிந்தாலும் கூட “அணுசக்தி நமக்குத் தேவை” என்று அச்சம்பவத்திற்கு “ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறோம்” என்று அறிக்கையை மட்டும் விட்டுவிட்டு கை கழுவி விடும்.

                1984 டிசம்பர் 2,3 தேதிகளில் போபாலில் யூனியன் கார்பைட் நிறுவனத்தில் இருந்து மித்தைல் ஐசோசயனைட் வாயு கசிந்து 20,000 மக்கள் இறந்தனர். இரவு உறங்கிய மக்கள் காலையில் கண் விழிக்கவேயில்லை. அந்த அளவிற்கு கதிர்வீச்சின் தாக்கம் அன்று இருந்தது. அந்த பலியான 20000 பேரைக் குறிப்பிடாமல் “வெறும் 4000 பேர்தான் இறந்தனர்” என வரலாற்றிலும் ஆவணத்திலும் பதிவு செய்திருக்கிறது அரசு. அது மட்டுமில்லாமல் அந்த விபத்து ஏற்படக் காரணமாக இருந்த யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவரான அமெரிக்காவைச் சேர்ந்த ஆண்டர்சனை மிகவும் பாதுகாப்பாக, மக்கள் எதிர்ப்பையும் மீறி, அப்போதைய பிரதமரின் உதவியால் அப்போதைய நிதி அமைச்சர் அவரை அமெரிக்கா கொண்டுபோய்ச் சேர்த்தார். இந்நிகழ்ச்சியால் பாதிப்படைந்த மக்கள், ஆண்டர்சனின் மீது 1985ம் ஆண்டு தொடுத்தனர். அவ்வழக்கின் தீர்ப்பு 2011ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஒரு கொடும் நிகழ்ச்சிக்குக் காரணமாக இருந்த ஒருவனுக்கு நீதித்துறையின் வாயிலாக நம் அரசு அளித்த அதிகபட்ச தண்டனை 2 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் அதுவும் கொடூரம் நடந்து 27 ஆண்டுகளுக்கு பிறகு அந்த தண்டனையை நிறைவேற்றக்கூட நம் அரசுக்கு கார்பைடு நிறுவனத்தைப் போல கூடங்குளத்திலும் விபத்து ஏற்பட்டால், மக்களை அரசு கவனிக்காது இரஷிய விஞ்ஞானிகளை மிகவும் பாதுகாப்பாக நம் அரசு அவர்களை இரஷியாவிற்கே கொண்டு சேர்த்து விடும். வழக்கம்போல் பாதிப்பிற்குள்ளாவது நம் மக்கள் மட்டுமே.

                கூடங்குளம் அணு உலையை அமைக்க நமக்கு உதவிய நாடு இரஷியா. இரஷியாவில் 1986ல் ஏப்ரல் 26ல் செர்னோபில் எனும் இடத்தில் மூடப்பட்டு இருந்த அணு உலையில் விபத்து ஏற்பட்டு கதிர்வீச்சு வெளிப்பட்டது. அதனால் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். பல பேர் இறந்தனர். அதன் பாதிப்பு கடல் கடந்து, கண்டம் கடந்து அதாவது 4000 கி.மீட்டருக்கு மேலும் உணரப்பட்டது. நம் கூடங்குளத்தில் இதைப் போன்று ஏதாவது ஒரு விபத்து ஏற்பட்டால் குறைந்தபட்சம் தமிழகம் முழுக்க பாதிப்புகள் இருக்கும். இலங்கையிலும் கூட பாதிப்பு இருக்கும் என்ற பீதிதான் இலங்கை அரசு அதனை எதிர்க்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியது. செர்னோபிலைப் போல 4000 கி.மீ வரை அதன் பாதிப்புகளும் இருக்கும். சென்ற ஆண்டு ஜப்பான் நாட்டின் புருஷிமா அணு உலையில் ஏற்பட்ட விபத்தின் கதிர்வீச்சு பாதிப்பு இன்றும் உள்ளது என்பது ஆய்வாளர்களால் நிரூபிக்கப்பட்டு உள்ளது. ஒரு உயிரைக் கொல்வதை விட 10 மடங்கு அதிக கதிர்வீச்சு அங்கே உள்ளது என்று சமீபத்திய ஆய்வில் ஜப்பான் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

                இரஷ்யாவில் செர்னோபில் விபத்து ஏற்பட்டு இன்று வரை 25 ஆண்டுகள் ஆகின்றன. இந்த இடைப்பட்ட 24 ஆண்டுகளில் அங்கே ஒரு அணு உலை கூட நிறுவப்படவில்லை. அதற்கு பதிலாக அவர்கள் தான் அணுசக்தி ஒப்பந்தம் செய்த நாடுகளுக்கு அணு உலை அமைக்க நிதியுதவி அளித்து நம்மிடமிருந்தே யுரேனியத்தைப் பெற்று அதன்மூலம் அவர்கள் அணுசக்தியில் வளர்ச்சி பெறுகிறார்கள்.

                உலகின் வல்லரசு என்று சொல்லி மார்தட்டிக்கொள்ளும் அமெரிக்கா கூட, அவர்களது நாட்டில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக ஒரு அணு உலையைக்கூட நிறுவவில்லை. அமெரிக்காவில் மொத்தம் 104 அணு உலைகள் உள்ளன. அதில் பெரும்பாலான உலைகளில் கதிர்வீச்சுக் கசிவு, விபத்து என பல நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. இதை அமெரிக்காவே ஒத்துக்கொண்டுள்ளது. அதனால் அமெரிக்கா தனது அணுசக்தி தொடர்பான பணிகளை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திவிட்டு, ரஷ்யாவைப் போல பிறநாடுகளுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்து அதன்மூலம் அணு ஆயுதத்தைப் பெறுகிறது.

                உலகில் ஏதாவது ஒரு நாட்டில் பிரச்சனை என்றால் நார்வேயிக்கு அடுத்தபடியாக உதவ ஓடிவரும் நாடு ஜெர்மனி. அந்த ஜெர்மனி தன் நாட்டில் உள்ள அணு உலைகளை 2022ம் ஆண்டிற்குள் மூடி விடுவதாக அறிவித்து உள்ளது. இத்தாலி 2020ம் ஆண்டிற்குள் தன் நாட்டு அணு உலைகளை மூடிவிடுவதாக அறிவித்துள்ளது. ஜப்பானும் தனது அணு உலைகளை படிப்படியாக மூடிவிடுவதாக தெரிவித்துள்ளது.

                இவ்வாறு உலகின் வளர்ச்சியடைந்த நாடுகள் பல அணு உலைகளைத் தவிர்த்து வருகிறது. இன்னும் சில நாடுகள் அணுசக்தி என்கிற அணு ஆயுதம் தேவையே இல்லை என கூறிக்கொண்டு இருக்கின்றன. இவ்வளவு வளர்ச்சியடைந்த நாடுகளே அணு ஆயுதம் தேவையில்லை என ஓதுக்கும்போது வளரும் நாடு என்று சொல்லக் கூடிய இந்தியா அதனைத் தவிர்த்து கூட இருக்கலாம். ஆனால் தெற்காசிய நாடுகள் மத்தியில் தான் “ஆயுதத்தில் வல்லவன்” என்று காட்டிக்கொள்ளத் துடிக்கிறது. இந்தியா இன்னும் முன்னேற வேண்டிய துறைகள், ஒழிக்க வேண்டிய செய்கைகள் பல.

                நம்மில் பல பேருக்கு கூடங்குளம் அணு உலையைப் பற்றி பரவலாக நிலவும் கருத்து இவ்வளவு பணம் செலவு செய்தபின் திடீரென்று அதை எப்படி நிறுத்த முடியும் என்று ஒரு மத்திய அமைச்சரால் 1.76 லட்சம் கோடி, பிரதமர் உட்பட கனிம வளத்துறை அமைச்சரால் 10.71 லட்சம் கோடி என இரண்டும் சேர்த்து 12.47 லட்சம் கோடி நாட்டுக்கு இழப்பு ஏற்படும்போது வெறும் 14,000 கோடி இழப்பு நம்மை எதுவும் செய்துவிடாது. இந்த அணு உலையை வேறு பல மாற்றுத் திட்டங்களுக்கும் பயன்படுத்தலாம். அணு உலையை அமைத்து விட்டாயிற்று இனிமேல் எதுவும் செய்ய இயலாது எனக் கூறுவோருக்கு இதோ சில செய்திகள் பின்வருகிறது. உலகில் பல நாடுகளில் அணு உலை கட்டமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டோ பணிகள் நிறைவுற்றோ பணிகள் நிறைவுற்று உலை செயல்பட்டோ நிறுத்தப்பட்டு என்பது வரலாற்று ஆவணச்செய்தி.

                இவ்வளவு சிறப்பான உலை என்று சொல்லக்கூடிய இந்த உலையை அமைக்க நம் இந்திய அரசும், ரஷிய அரசும் சேர்ந்து முதலில் கேரள அரசிடம் கேட்டனர். அணு உலைகளால் நன்மையைவிட தீமை மிக அதிகம் என்பதால் கேரளா மறுத்துவிட்டது. பிறகு தமிழ்நாட்டிடம் வந்து சேர்ந்தது. நம் அரசியல்வாதிகளுக்கு நம் மக்கள் நலனைவிட தம் குடும்ப நலனும், நண்பர்கள், சுற்றத்தார், உறவினர் நலனும் மிக முக்கியமானதுதானே, அவர்கள் உடனே இத்திட்டத்தை செயல்படுத்திவிட்டார்கள். நம்மிடமும் அவர்கள் “மின்சாரம் தயாரிக்கிறோம் என்று கூறி நம்மை முட்டாளாக்கிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் நம் தமிழ் நாட்டுக்குத் தேவையான 4000 MW மின்சாரத்திற்கு அதிகமான மின்சாரத்தை நாம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி தொழிற்சாலையிலும், கயத்தாறு காற்றாலையிலும், இன்னும் பிற வழிகளிலும் பெறுகிறோம். நமக்கு தேவையான மின்சாரத்தைப் பெறுகிறோம். இந்த மின்சாரத்தின் அளவு 4000 MWக்கும் அதிகமாக ஏறக்குறைய 6000 MW இருக்கலாம். இந்தியாவில் உள்ள மொத்த அணு உலைகள் 19. இதில் இருந்து நம் அரசும் அணுசக்தி கழகமும் இந்தியா முழுமையும் பெறும் மின்சார அளவு 4560MW. அணு உலைகளில் இருந்து நமது நாட்டிற்கு மொத்தம் 3% மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது. இந்த 4560MW யை வைத்து தமிழ்நாட்டிற்கு ஒரு ஆண்டிற்கு கூட முழுமையாக மின்சாரம் அளிக்க முடியாது. இவ்வளவு சிக்கல்களையும் தெரிந்து அதை எதிர்கொண்டு போராட்டத்தில் இறங்கியுள்ள கூடங்குளம் மற்றும் இடிந்தகரை மக்களுக்கு நாம் எந்த உதவியும் செய்ய வேண்டாம். ஆனால் அவர்களுடைய களங்கமற்ற, குற்றமற்ற மன உறுதி கொண்ட இப்போராட்டத்தை, “அந்நிய சக்திகளின் தூண்டுதல், அந்நிய சக்திகளிடம் இருந்து பணம் பெற்றுதான் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துகின்றனர்” என்று சொல்லி அவர்களைப் பழிக்காமலும் இழிவாகப் பேசாமலும் இருப்பதே தமிழ் குருதி உடலில் ஓடக்கூடிய உண்மையான தமிழனுக்கு அழகு.

                இத்திட்டத்தை நம்மிடம் சேர்க்காமல் பஞ்சாபிடம் சென்று சேர்க்க அரசு முயற்சித்தது என்றால் மானமுள்ள சீக்கியர்கள் அடிக்கல்லையே நாட்ட விடாமல் செய்திருப்பார்கள். மேலும் அவர்கள் பல நாராயணசாமிகளையும், சிதம்பரங்களையும் அடிக்கக்கூட தயங்கமாட்டார்கள். அத்தகைய இன உணர்வும் தன்மானமும் நமக்கு இல்லாமல் போனது ஏன்? அதே சீக்கியர்கள் அவர்கள் மக்கள் செய்யும் போராட்டங்கள் அனைத்திற்கும் ஒத்துழைப்பு அளிப்பார்கள். நம் தொப்புள்கொடி உறவான ஈழத்தமிழினம் பகைவர்களால் (சிங்களவர்களால்) அழிக்கப்படும்போது கைகட்டி, வேடிக்கை பார்த்த இழி பெருமை நமக்கு உண்டு. அந்தத் தவறை மீண்டும் நம் சொந்தத் தமிழினத்திற்கு செய்யாமல் இருந்தால்தான், தமிழனுக்கு உலக அளவில் இருக்கும் சிறு பெயராவது காப்பாற்றப்படும். மீண்டும் அந்த தவறை நாம் செய்தால், நாமக்கல் கவிஞர் கூறிய “தமிழன் என்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா என்ற வீரமொழி பின்பு “தமிழன் என்று சொல்லடா! தலை குனிந்து நில்லடா!” என்று மாறும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

                                நம் தலைமுறை வாழ்வதும் இதோடு செத்து மடிவதும் நம் கையில் தான் உள்ளது. இக்கட்டுரையில் நான் கூறிய செய்திகள் அணு அளவுதான். இன்னும் நம் அரசுகளின் ஊழலும், மக்கள் நலனுக்கு எதிரான மறைமுக நடவடிக்கைகள் ஏராளம். அவற்றை சொல்ல இன்னும் பல பக்கங்கள் தேவை. பெரும்பான்மை மக்களின் போராட்ட குணங்களையும், போராட்டத்திற்கான காரணங்களையும், அணு உலை பற்றிய உண்மையினையும் புரிந்து, கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து நம் தலைமுறையை வாழ வைக்க உதவுவீர்களாக.

- திருக்குறள் த.திலீபன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It