மனித வாழ்வோடு கதைகள் பிணைந்திருப்பதைப் போல செல்லப் பிராணிகளும் பிணைந்து விட்டன. நாம் வேட்டைச் சமூகத்தினராக இருந்த காலகட்டத்தில் இருந்தே சில விலங்குகளை வீட்டு விலங்குகளாகப் பழக்கி வைத்திருந்தோம். அதில் முக்கியமான விலங்காக நாய் இருந்தது. பிற்காலத்தில் பூனையும் நம்பிக்கைக்குரிய வீட்டு விலங்கானது. இந்திய தொன்மக் கதைகளில் நாயும் பூனையும் முக்கிய கதாபாத்திரங்களாக உள்ளன. பெருமாள்முருகன் ‘போண்டு’ என்றொரு சிறுகதைத் தொகுப்பைச் சமீபத்தில் வெளியிட்டுள்ளார். அதில் நாய்களையும் பூனைகளையுயே கதாபாத்திரங்களாக்கி எழுதியுள்ளார். இச்சிறுகதைத் தொகுப்பைப் பார்ப்பதற்குமுன், மரபிலக்கியத்தில் உள்ள ஒரு குறிப்பை இங்கு நினைவுகூர்வது சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன்.

perumal murugan novel‘மெய்யதா வால்குழைக்கும் நாய்’ (213 பாடல்) எனும் நாலடியாரின் பாடல், யானைக்கு ஒப்பானவர் சிநேகத்தைவிட்டு நாய்க்கு ஒப்பானவர் சிநேகத்தைக் கொள்ளவேண்டும் என்னும்படி அந்தப் பாடல் அமைந்துள்ளது. ‘யானை நன்றாக அறிந்திருந்தும் அதனைப் பேணும் பாகனையே கொல்லும் இயல்பினை உடையது; வேல் தவறுதலாகத் தன்மீது பாய்ந்தபோதும் தன்னை வளர்ப்பனைப் பார்த்துத் தன் வாலைக் குழைத்துக்கொண்டு சுற்றித்திரியும் குணம் கொண்டது நாய்’ என்று யானையின் குணத்தைத் தாழ்த்தியும் நாயின் குணத்தை உயர்த்தியும் அன்றே சமணப் புலவர்கள் பாடியுள்ளனர்.

நாய் ஒருவர் வீட்டிற்கு வந்த சூழல், பெயர் சூட்டப்பட்ட காரணம், வீட்டாரின் எதிர்ப்பு, வந்ததற்குப் பிறகான வீட்டுச்சூழல், அவற்றின் பிரிவு போன்றவற்றை நாயை வளர்ப்பவர்களிடம் கேட்கும்போது வெவ்வேறு விதமான காரணங்களைப் பகிர்ந்து கொள்வர். கேட்பதற்கும் வியப்பாக இருக்கும். பெருமாள்முருகனின் ‘போண்டு’ சிறுகதைத் தொகுப்பை வாசிப்பவர்கள், இதற்குச் சற்றும் குறைவில்லாத வியப்பை அடைவர். பெருமாள்முருகன் நூலின் முன்னுரையில், “இவை வளர்ப்பு விலங்குகளைப் பற்றிய கதைகள்போலத் தோற்றம் தரும். ஒவ்வொரு கதையிலும் அவற்றின் சித்திரத்தை வேறுபடுத்திக் காட்ட முயன்றிருக்கிறேன். அவற்றின் குணாம்சங்களையும் வெளிப்படுத்தியிருக்கிறேன். அவற்றின் நடவடிக்கைகளை ஆழ்ந்து நோக்கியிருக்கிறேன். அவற்றோடு ஊடாடிச் சென்றிருக்கிறேன். எனினும் வியப்புத் தருபவை அவை அல்ல. மனிதர்கள்தான்” என்று கூறியுளார். ஒவ்வொரு சிறுகதையையும் வாசிக்கும்போது, மனிதர்கள் எப்போதும் வியப்புக்குரியர்களே என்பதும் நாம் மிக நேசித்த ஒன்று எப்போது வேண்டுமானாலும் நம் சிநேகத்தை இழந்து நமக்கு பிடிக்காமல் போகலாம் என்பதையும் உள்வாங்க முடிந்தது. அதேபோன்று, நாம் வெறுக்கக்கூடிய ஒன்று நம் சிநேகத்தைப் பெறவும் செய்யும் என்பதையும் ‘குர்குர்’ மற்றும் ‘போண்டு’ ஆகிய சிறுகதைகளின் மூலமாக நுட்பமாகச் சித்திரித்துள்ளார்.

‘மனிதர்கள் தனிமையில் இருக்க முடியாது’ என்ற கருத்தாடலை மையமாக வைத்து இந்நூலை வாசிக்கும்போது, முற்றிலும் வேறொரு மனநிலைக்கு நூல் நம்மை அழைத்துச் சென்றுவிடுகிறது. திவ்யா, சுடர், செல்வி, வசந்தி, மஞ்சு, பாலன், பாலனின் அத்தை, கபிலன், பூவாசுரி போன்றோரின் தனிமைச்சூழல் வெவ்வேறாக இருபினும், அவர்களின் தனிமையைப் போக்கியதும், ‘இவற்றின் துணையாவது நமக்கு உள்ளதே!’ என்ற நிலையை உருவாக்கியதும் வளர்ப்புப் பிராணிகள்தான் என்று பொதுவாகச் சொல்லிவிட முடியாது. ஏனெனில் எப்போதும் மஞ்சுவிற்குப் பாதுகாவலனாக இருப்பது ‘செம்மி’ ஒரு தெருநாய். நாய்களில் விளிம்பு நிலையில் இருப்பது தெருநாய்கள். ஒரு காலத்தில் நாய்களென்றால் அது தெரு நாய்கள் மட்டும்தான் குறிக்கும் என்ற நினைவையும் பெருமாள்முருகன் இக்கதையில் மீட்டெடுக்கிறார்.

‘போண்டு’ சிறுகதையில் செல்வி, முருகேசு ஆகியோரின் ஒரே மகள் சுடர். ஒற்றை பிள்ளையாகச் சுடர் இருக்கிறாள். அவளுக்குத் துணையாக பீம் (நாய்) இருக்கட்டும் என்று முருகேசு கூறுகிறான். அதன்மீது ஈடுபாடில்லாத செல்வி மறுப்புத் தெரிவிக்கிறாள். ‘சுடருக்குத் துணையாக ஒரு பிள்ளையைப் பெற்றுக்கொடு’ என்று தன் விருப்பத்தை முருகேசு தெரிவிக்கிறான். ‘ஒரு குழந்தையே போதும்’ என்று செல்வி பிடிவாதமாக இருந்தது முருகேசுவுக்குப் பிடிக்கவில்லை; என்றாலும் செல்விதான் இதில் வெற்றி பெறுகிறாள். நாய் வளர்ப்பில் முருகேசு வெற்றி பெறுகிறான். பீமின் வருகைக்குப் பிறகு அவனைத் தன் மகனாகவே முருகேசு பார்த்தான்; வளர்த்தான். ‘பதிமூன்று வருசம் வீட்டில் வாழ்ந்தாலும் பீமோடு செல்விக்கு எந்த நெருக்கமும் இல்லை’ என்ற வரிகளை வாசிக்கும்போது செல்வி மீதான நம் பார்வை வேறுமாதிரி இருக்கும். பீமின் மரணம் செல்விக்கு நிம்மதியைக் கொடுக்கிறது. ஆனால் அது நீடிக்கவில்லை. தந்தையும் மகளும் வெவ்வேறு காரணத்தினால் வெளியே தங்கியிருக்கும் சூழலில், சுடர் வாங்கிய நாய்க்குட்டி வேறு ஒருவரால் வீட்டிற்கு வரவழைக்கப்படுகிறது. ‘தொல்லை வரப் போகிறதே’ என்ற துயரத்துடன் செல்வி வேலை செய்து கொண்டிருக்கிறாள். ஆனால், கதையின் முடிவில் செல்வி போண்டுவை ஆசையோடு தூக்கி வீட்டினுள்ளே அழைத்துச் செல்கிறாள்; அதனுடன் பேசுகிறாள். யாருமற்ற தனிமையைப் போக்கிய போண்டின்மீது செல்விக்கு விருப்பம் ஏற்படுகிறது. பீம் இருந்தபோது செல்வி தனித்து இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. போண்டா மாதிரி இருந்த இந்த நாய்க்குட்டிக்குச் செல்விதான் ‘போண்டு’ என்ற பெயரும் வைக்கிறாள். மனிதர்கள் நிகழ்காலத்தில் நாய்களையும் பூனைகளையும் வளர்ப்பதற்குப் பின்னாலுள்ள காரணங்கள் மிக முக்கியமானவை. சக மனிதர்களிடம் உரையாடவே நேரமற்ற இச்சூழலில், தம் தனிமையைப் போக்கிக்கொள்ள செல்லப் பிராணிகளையே நாட வேண்டியுள்ளது. இந்தப் பின்புலத்திலிருந்து இந்தக் கதையை வாசிக்கும்போது ‘போண்டு’ முக்கியமான கதையாக இருக்கிறது.

‘பீம் + சுட்கி’ என்ற கதையில், மலரும் குமாரும் பாட்டி வீட்டிற்குச் சென்று வரும்போது ‘சுட்கி’ என்ற பூனையை அழைத்து வருகின்றனர். ‘சுட்கி’யைக் குமாருக்குப் பிடிக்கவில்லை. வீட்டில் ‘பீம்’ (நாய்) இருப்பதால் பூனைக்கும் நாய்க்கும் ஆகாது என்று குமார் எச்சரித்தும் அக்காவான மலர் கேட்கவில்லை. இவர்களின் அம்மா முதலில் கோபம் கொண்டாலும் ‘பீமை’யும் ‘சுட்கி’யையும் ஒன்றாகவே பார்க்கிறாள். வீடு யாருக்குச் சொந்தம் என்று கேட்டு குமார் சண்டையிடும்போது, ‘உனக்குதான், அவள் வேறு வீட்டிற்குச் செல்லக்கூடியவள்’ எனும்போது மலர் அப்பாவிடம் முறையிடுகிறாள். ஒருநாள் ‘பீம்’ ‘சுட்கி’யைக் கடித்துவிடுகிறது. மலர் தன் அருகில் இருந்த அம்மிக்குழவியைத் தூக்கி ‘பீம்’மீது வீசுகிறாள். நாயும் பூனையும் இறந்து விடுகின்றன. இக்கதையில் நாய் என்பது ஆணுக்கான குறியீடாகவும் பூனையைப் பெண்ணுக்கான குறியீடாகவும் மாற்றி வாசிக்க வேண்டும். வீடு என்பது யாருக்கானது; வயதில் சிறியவனாக இருந்தாலும் ஆண் என்ற அதிகார மையம் மலரிடம் எப்படிச் செயல்படுகிறது. வீடு யாருக்குப் பணிந்து போகிறது போன்ற விவாதங்களுக்கு இக்கதை அழைத்துச் செல்கிறது.

‘இளன்’ சிறுகதையின் கபிலன், வீட்டுக்காவலுக்குச் செல்லும் கல்லூரி மாணவன். தனக்குப் பழக்கம் இல்லாத பூனையையும் பார்த்துக்கொள்ளவேண்டிய சூழல் அவனுக்கு ஏற்படுகிறது. பிடிக்கவில்லை என்றாலும் கூடுதல் பணம் கிடைப்பதால் பூனையைப் பார்த்துக்கொள்ள சம்மதிக்கிறான். இறுதியில், ‘போகும் இடங்களில் எல்லாம் இப்படியொரு பிராணி இருந்தால் நன்றாக இருக்குமே’ என்ற எண்ணம் வரும் அளவுக்குக் கபிலன் இளனுடன் நெருக்கமாகிவிடுகிறான். இளன் ஒருநாள் காணாமல் போய்விடுகிறது. இந்த இடத்தில் வெளிப்படும் கபிலனின் துயரங்களைப் பெருமாள்முருகன் மிகுந்த படைப்பூக்கத்துடன் எழுதியிருக்கிறார். சிறுதெய்வ வழிபாடு தோற்றப் பின்புலத்திற்கான காரணங்களின் ஒரு பகுதியை ஆராயும் ‘பொங்கி’ என்ற சிறுகதையும் வாசிக்கத் தகுந்தவை. மேலதிகாரியைப் பழிவாங்க நினைக்கும் ஒருவர், தன் வீட்டு நாய்க்குட்டிக்கு அந்த அதிகாரியின் பெயரை வைத்துத் தன் வன்மத்தைத் தீர்த்துக் கொள்கிறார். அதேநேரத்தில் அந்தரங்க விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளும் இடத்திற்கும் சிலர் செல்லப் பிராணிகளை நகர்த்தி வைத்திருக்கின்றனர். இதுபோன்ற பல தன்மைகள் இந்தத் தொகுப்பிற்குள் உள்ளன.

‘எண்ணிப் பார்த்தால் எல்லாக் கஷ்டங்களும் இப்போது கதை போலத் தோன்றுகின்றன’ என்ற வரி ‘மதி’ சிறுகதையில் வருகிறது. பெருமாள்முருகன் தன் வாழ்நாளில் எதிர்கொண்ட கசப்புகளையும் துயரங்களையும் வெவ்வேறு தன்மைகளில் தொடர்ந்து புனைவுகளாக எழுதி வருகிறார். கொங்கு வட்டார வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே இவரது கதைகள் இருக்கின்றன. அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை ‘போண்டு’ சிறுகதைத் தொகுப்பு. மனிதர்களைக் கடந்து அஃறிணை உயிர்களையும் பொருட்படுத்திப் புனைவுகளாக்கும் பண்பு குறிப்பிடத் தக்கது. நம்மைச் சுற்றியுள்ள நாய்களுக்கும் பூனைகளுக்கும்கூட ஒரு வாழ்க்கை இருக்கிறது. அந்த வாழ்க்கையையும் படைபாளர்கள்தாம் பதிவு செய்ய வேண்டும். அதனைக் கடந்த சில வருடங்களாகப் பெருமாள்முருகன் கவனித்து எழுதி வருகிறார். இத்தொகுப்பின் கதைகள் வாசிப்பவர்களை மென்மையாக்குகிறது. இந்தத் தொகுப்பை வாசிப்பவர்களுக்குப் பெருமாள்முருகனின் இன்னொரு பரிமாணம் பிடிபடும். அந்தப் பரிமாணத்தில் அன்பும் கருணையும் கொண்ட நாய், பூனைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.

- சு.தீபிகா, உதவிப் பேராசிரியர், தருமமூர்த்தி இராவ்பகதூர் கலவல கண்ணன்செட்டி இந்துக்கல்லூரி, பட்டாபிராம், சென்னை.