இந்திய இலக்கியங்களிலும் இரு நாடுகளின் எல்லைப் பிரிவினை மற்றும் அதனால் சீரழிவுகளுக்கு உள்ளான பெண்கள் குறித்து ஆக்கபூர்வமாக சித்தரித்த எழுத்தாளர்கள் பலர் உள்ளனர். இருப்பினும் சாதத் ஹசன் மண்ட்டோ படைப்புகள் வாழ்க்கையின் யதார்த்தங்களை சித்தரிப்பதற்காக அறியப்பட்டவை. அவரது கதைகளின் சூழ்நிலைகள் மற்றும் அமைப்புகள் மட்டுமல்ல, கதாபாத்திரங்களும் அவர் அறிந்த சந்தித்த நபர்கள். அவர் படைப்பின் கருப்பொருள்களாகத் திகழ்கின்றன. அவற்றை மையமாகக் கொண்ட பெண்கள் குறித்த கொலை, கடத்தல், கற்பழிப்பு, பழிவாங்குதல் தூண்டுதல் பாதிக்கப்பட்ட பெண்களின் நிகழ்வுகளை கதைக்களமாகக் கொண்டுள்ளது.

Saadat Hasan Mantoதெற்காசிய இலக்கியத்தின் தலை சிறந்த சிறுகதைகள் உட்பட 1947இல் இந்தியப் பிரிவினையைத் தொடர்ந்து நடந்த வகுப்புவாதக் கலவரங்களின் போது பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் துயரங்களை வெளிப்படுத்துகிறது. பிரிவினையின் போது பெண்கள் விளிம்புநிலை வாழ்க்கை, அடிபணிதல் போன்ற உண்மையான துன்பங்களின் நிகழ்வுகள் மண்ட்டோ கதையின் மையமாக இருக்கிறது. ஆணாதிக்க அமைப்பில் வேரூன்றிய ஒரு சமூகத்தால் பெண் பாலினம் ஒடுக்கப்பட்ட விதத்தையும் பெண்கள் பாலின அடிப்படையில் அடிமைகளாக ஒடுக்கப்படுகிறார்கள். ஒரு இன சமூகம் அல்லது தேசிய அரசு அதன் உயர்வையும் மேன்மையையும் மற்றும் வெளிப்படுத்துவது பெண்கள் மூலமாக மட்டுமே. இதன் விளைவாக, பெண்கள் தனிப்பட்ட சுயாட்சி, அவர்களின் உடல்கள் மற்றும் வாழ்க்கையின் மீதான கட்டுப்பாட்டை இழந்த ஊமைப் பொருட்களாக மாறுகிறார்கள் என்பதை சாதத் ஹசன் மண்ட்டோவின் சிறுகதைகளான திற, மோஸல், ஷரிஃபான், சில்லிட்டுப் போன சதைப்பிண்டம், நான் கடவுளின் மீது சத்தியம் செய்கிறேன், ஒருநாள் போன்ற சிறுகதைகளில் பெண்கதைமாந்தர்கள் படுகொலையாதல், ஒடுக்கப்படுதல், சீரழிவுக்கு உள்ளாக்கப்படுதல் போன்ற எண்ணற்ற துயரநிலைகளுக்கு உள்ளாவதைக் காணமுடிகிறது.

பாத்திரப் படைப்பு

நாவல் என்பது விரிந்த களம், சிறுகதை குறுகிய களமுடையது. பாத்திரத்தின் வளர்ச்சி மாற்றங்கள் அனைத்தையும் சிறுகதைகளில் கொண்டு வரமுடியாது. பாத்திரத்தின் ஓர் உணர்ச்சியையோ, செயலையோ, மையமிட்டுக் குணப்பண்புகளை விளக்குவதற்காகவே கதைமாந்தர் படைப்பு அமையும்,

“பாத்திரப்படைப்பு என்பது பெயர் சூட்டி விடுவதோ அங்க வருணனை நடத்திவிடுவதோ அல்ல, மனம், சிந்தனை, குணஇயல்பு, சூழ்நிலைகளின் போது வெளிப்படும் உணர்ச்சிகள் இவற்றையெல்லாம் கூர்ந்து அனுபவமாக வெளிப்படுவதைத் தீட்டுவதாகும் எனக் கோ.வே.கீதா எடுத்துரைக்கிறார்.”1

கதைக்களத்திற்கு ஏற்ப பாத்திரங்கள் படைக்கப்பட வேண்டும்.

“கதை நிகழ்ச்சிகள் யாவும் பாத்திரங்களின் இயக்கத்தால் விளைவது, பாத்திரங்கள் கதை நடக்கிற கால, இட, சமூக இயல்புகளுக்கு இயையவும் தங்கள் குணப்பண்புகளுக்கு ஏற்பவும் இயங்க வேண்டும்.”2 என்று அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஒரு நாள்

பெண்கள் இருமடங்காக தாழ்த்தப்பட்டுள்ளனர். முதலில் ஆணாதிக்கத்தால் அவர்கள் உடமைப் பொருளாகக் கருதப்பட்டனர் மற்றும் பிரிவினையின் போது இந்தப் பொருட்கள் முதல் சமூகத்தை பழிவாங்குவதற்காக மற்ற சமூகங்களைச் சேர்ந்த ஆண்களால் சூறையாடப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டன.

“என் அன்புச் சகோதரர்களே, நம்முடைய தலையாய பிரச்சனை என்னவென்றால் நம்முடைய பெண்கள், எதிரிகளால் எல்லைக்கு அந்தப் பக்கத்திற்குக் கடத்திச் செல்லப்பட்டிருக்கிறார்கள். நாம் ஏதேனும் செய்யவில்லை என்றால் அவர்கள் எல்லோரும் விபச்சார விடுதியில் கொண்டு விடப்படுவார்கள் என்று எனக்குப் பயமாக இருக்கிறது. நாம் அவர்களை இதிலிருந்து காப்பாற்றியாக வேண்டும்.”3 என்று குறிப்பிடுகிறார்.

இனப்படுகொலை காலத்தின் கொடூரமான முறையில் பெண்களை சகிக்க முடியாத உடல் ரீதியாக துன்புறுத்துகிறது. ‘துன்புறுத்தல் மற்றும் கற்பழிப்பு மனிதனிடமிருந்து மனிதனுக்கு மாற்றப்பட்டது’. வேறு மதங்களைச் சேர்ந்த ஆண்களால் பெண்களை கடத்தப்பட்டு விபச்சார தொழிலுக்கு ஈடுபடுத்தவோ, கற்பழிப்பவர்களை கணவனாக எற்றுக்கொள்ளவோ அல்லது வாழ்நாள் முழுவதும் மன உளைச்சலில் இருக்கவோ கட்டாயப்படுத்துகிறது. இவ்வாறு பெண்களின் மீதுள்ள வன்முறைகளை விவரித்துள்ளார்.

திற

பிரிவினைக் கலவரத்தின் போது தனது தந்தை சிராஜுதீனிடமிருந்து பிரிந்த பதினாறு அல்லது பதினெட்டு வயது சிறுமி சகீனாவின் கதையை விவரிக்கிறது. அவர் அவளைத் தேடத் தொடங்கினார். பிறகு ஒரு நாள் அவளை மருத்துவமனையில் காண்கின்றனர். “டாக்டர் ஸ்ட்ரெச்சரில் கிடந்த அந்த உடலைப் பார்த்து, அதன் நாடித்துடிப்பைப் பரிசோதித்தார். பிறகு சிராஜுதினிடம் ஜன்னலைக் காண்பித்துச் சொன்னார், “திற”!4

ஸ்ட்ரெச்சரில் இருந்த உடல் சில அசைவுகளைக் காட்டியது. செயலற்றுக் கிடந்த அதன் கைகள், இடுப்பில் கட்டியிருந்த நாடாவை அவிழ்த்தன. பிறகு சல்வாரைக் கீழே இறக்கி விட்டது.”5 இது மருத்துவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மருத்துவரின் வார்த்தைகளுக்கு சகீனாவின் மயக்கமான பதில், பிரிவினையின் போது அவள் பாதிக்கப்பட்ட முழு நிகழ்வையும் விவரிக்கிறது. தந்தையைப் பிரிந்த பிறகு அவள் அனுபவித்த அவலத்தையும் அவள் எதிர்கொண்ட பாலியல் துயரங்களை வெளிப்படுத்தியது. மேலும் சகீனா அனுபவித்த துன்பங்களை மண்ட்டோ காட்டவில்லை. சகீனா முற்றிலும் செயலற்ற பாத்திரமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

ஷரிஃபான்

‘ஷரிஃபான்’ சிறுகதையில் பிரிவினையின் போது வாழ வேண்டிய உண்மையான சூழ்நிலைகளையும் நரகத்தையும் வெளிப்படுத்திய மண்ட்டோ, பழிவாங்கும் எண்ணத்தால் வன்முறை வெளிப்படுகிறது. காசிம் மூலம் ஒட்டுமொத்த ஆண்மைய சூழலை உருவாக்குகிறது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் தான், மனிதர்களை பைத்தியக்காரத்தனமாக மாற்றி, அப்பாவிகளை கொன்று குவித்த இந்த பழிவாங்கலின் தோற்றத்திற்கான காரணத்தையும் இந்தக் கதைமாந்தர்களின் மூலம் அறிய முடிகிறது.

“இந்து’ அவனின் கண்கள் கனலைக் கக்கிக் கொண்டிருந்தன. அவன் அந்தப் பெண்ணைப் பார்த்தான். அவளின் வயது பதினைந்து கடந்திருக்காது. பிடித்திருந்த கோடாளியைக் கீழே போட்டுவிட்டு அந்தப் பெண் மீது கழுகு போல் பாய்ந்து, அவளை உள்ளே இழுத்துச் சென்றான். இரண்டு கைகளாலும் அவளின் ஆடைகளைக் கிழித்தெறியத் தொடங்கினான். கிழிக்கப்பட்ட துண்டுத் துணிகள், தீ வைக்கப்பட்ட பஞ்சு போல் எங்கும் பறந்து கொண்டிருந்தன. காசிம் ஏறக்குறைய அரைமணி நேரம் எடுத்துக்கொண்டான். பழி வாங்குவதற்கு அந்தப் பெண் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. அவள் தரையில் விழுந்த உடனேயே தன் நினைவுகளை இழந்துவிட்டாள்.”6 பிரிவினையின் கலவரத்தின் போது அனுபவித்த வன்முறையின் பக்கத்தைக் காணமுடிகிறது.

வகுப்புவாத வன்முறை

சிறுகதைகளில் பாத்திரப் பெயர் இல்லாமலும் கதைகள் இடம்பெறுகிறது. அவ்வாறு ‘சில்லிட்டுப் போன சதைப் பிண்டம்’ கதையில் பெண் கதைமாந்தரின் பெயர் இடம்பெறவில்லை. கலவரத்தின் போது ஐஷர்சிங் தனது மிருகத்தனத்தால் ஆண்மைக்குறைவாக மாறுவதை அடிப்படையாகக் கொண்டது. ஒரு கொள்ளையின் போது அவனது கொடுமைக்கு பலியாகக் கொண்டு வந்த ஒரு அழகான பெண், பயங்கரத்தால் இறந்துவிடுகிறாள். ஐஷர்சிங் அவளை பாலியல் பலாத்காரம் செய்யும் போது, அவள் உடல் முற்றிலும் குளிர்ச்சியாக இருப்பதைக் காண்கிறான். அவன் பிணத்துடன் உடலுறவு கொள்ள முயல்கிறான் என்று தெரிந்ததும், அந்த நொடியே அவனது சுயநினைவு செயலிழந்து, அவனது தவறான செயலால் அவன் ஆண்மை இழக்கிறான். ‘வன்முறையும் சிற்றின்பமும் இரண்டும் ஒரே உற்சாகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன’. இரண்டுமே வெறித்தனமான வடிவம் அந்தப் பெண் பயங்கரத்தின் எல்லையைத் தாண்டிவிட்டாள். பாலியல் தூண்டுதலின் தருணத்தில், இந்த அதிர்ச்சி ஐஷர்சிங்கை கூட குளிரூட்டுகிறது. அப்படி ஒரு அசாதாரண அனுபவம், மனிதனுக்குள் பல அடுக்குகளை வெளிப்படுத்தி, சூழ்நிலைகளின் பகுத்தறிவின்மையை உடைத்தெறிந்தது. ஒரு அனுபவம் இது போன்ற ஆழமான மனித உறவுகளை வேறு எந்தக் கதையிலும் காணமுடியாது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு ஐஷர்சிங் தனது மனைவியுடன் கூட உறவு கொள்ள முடியவில்லை. அவனுடைய மனைவி காரணத்தைத் தெரிந்து கொள்ள விரும்பும்போது, அன்று நடந்ததைச் சொல்கிறான். “அவள் இறந்துவிட்டாள். பிணமாகக் கூட குளிர்ந்த இறைச்சி தான்”7 என்று பயங்கரவாதத்தால் ஏற்படும் மரணம் இந்தக் கதையின் சோகமான பகுதியாகும். குல்வந்த் கௌர் அதைக் கேட்கிறார். ஆனால் அந்த மரத்தின் மீது அவளுக்கு எந்த அனுதாபமும் ஏற்படவில்லை. அவள் தன் கணவனின் தவறான செயலை தன் பாலினத்தின் மீது களங்கமாக ஏற்றுக்கொள்கிறாள் மற்றும் வன்முறை எதிர்ப்பில் அவன் கழுத்தில் வாள் முனையை வைத்து அவனைக் கொன்றாள்.

‘சில்லிட்டுப் போன சதைப் பிண்டம்’ வகுப்புவாத வெறி மற்றும் மனித உணர்வுகளின் பின்னிப்பிணைந்த ஒரு தீண்டத்தகாத அத்தியாயத்தை முன்வைக்கிறது. இது வாசகரை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. இந்த வழியில் இந்த கதை கலவரங்களின் கொடூரமான மனிதனின் மிருகத்தனமான தன்மையைப் பற்றியது. இது ஆண்மையின்மையை பிரதிபலிக்கிறது. ஒருவருக்கு எதிராக செய்த தவறான செயலின் விளைவு.

தாயின் மனநிலை

‘கடவுள் மீது ஆணையாக’ என்ற கதையில் தனது மகள் காணாமல் போன செய்தியைக் கேட்ட தாய் உணர்வைக் காட்டுகிறது. தாய் பாத்திரத்தின் முக்கியமான தருணத்தை இவ்வாறு சித்தரித்துள்ளார்.

“வயதான முஸ்லீம் பெண்மணி ரொம்ப வயதானவர். ஜலந்தருக்கு வெளிப்புறத்தில் நான் அவரை முதல் முறையாகச் சந்தித்தேன். அந்தச் சகோதரி என்னிடம் சொன்னாள். அவர் பாட்டியாலாவைச் சேர்ந்தவர். அங்கு நடந்த கலவரத்தின் போது அவரின் ஒரே மகள் கடத்தப்பட்டுள்ளாள். அம்மா உங்களின் பெண் கொல்லப்பட்டு விட்டாள் என்றேன். அந்தப் பைத்தியக்காரப் பெண்மணி என்னைக் கூர்ந்து பார்த்து,கொல்லப்பட்டு விட்டாளா… இருக்காது! என்றார். அவரின் குரல் இரும்பு போல திடமாக இருந்தது. யாராலும் என்னுடைய மகளைக் கொலை செய்ய முடியாது. யாராலும் முடியாது’ என்று சொல்லி மீண்டும் அந்தப் பயனற்ற தேடலைத் தொடங்கினார். கடைசியில் அம்மா அரை நிர்வாணமாகவும் பைத்தியமாகவும் ஆனார்.”8

என்பதை இக்கதாபாத்திரத்தின் மூலம் படைப்பாசிரியர் சிந்தித்ததை இக்கதை பிரதிபலிக்கிறது. பிரிவினையின் வன்முறையைக் கூட்டுப் பைத்தியக்காரத்தனமான செயலாக இவர் குறிப்பிடுகிறார்.

பொருளாதார நெருக்கடி

இந்தியப் பிரிவினையின் விளைவாக நாட்டில் உறுதியற்ற சூழல் உருவானது. எல்லா இடங்களிலும் கலவரங்கள் நடக்க ஆரம்பித்தன. இதனால் மக்களுக்கும், உடமைகளுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டது. வீட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்ட ஒரு நடுத்தரக் குடும்பத்தின் பொருளாதார நெருக்கடி நிலையைப், பிரிவினை நிகழ்ந்த விதத்தினை ‘மிருகத்தனம்’ எனும் கதைக்கருவில் வெளிப்படுகிறது.

“மிகுந்த சிரமத்தோடு கணவனும் மனைவியும் வீட்டில் உள்ள சில மதிப்புள்ள பொருட்களோடு தங்களை காப்பாற்றிக் கொண்டார்கள். வயது வந்த மகளைக் காணவில்லை. அந்தத் தாய் தன்னுடைய, பெண் கைக்குழந்தையை நெஞ்சோடு இறுக்க அணைத்துக் கொண்டாள். எருமை மாடு ஒன்று அவர்களிடம் இருந்தது. கலகக்காரர்கள் பார்வையிலிருந்து எப்படியோ தப்பித்தது. ஆனால் அதன் கன்றுக்குட்டியைக் காணவில்லை.

கணவனும், மனைவியும், கைக்குழந்தையும், பசுமாடும் ஓர் மறைவிடத்தில் பத்திரமாக இருந்தார்கள். அப்போது இருட்டு மிக மோசமாகக் கறுத்துக் கிடந்தது…”9

எனும் வரிகளின் மூலம் கலகக்காரர்கள் அவர்களை எப்படி நடத்தியிருப்பார்கள். என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. மதம், ஒழுக்கம், மனிதநேயம் ஆகியவற்றைத் தாக்கும் எண்ணற்ற நிகழ்வுகள் அந்தக் காலகட்டததை பிரதிபலிக்கின்றன.

முடிவுரை

இந்திய துணைக்கண்டத்தின் வரலாற்றில் இந்தியப் பிரிவினை குறிப்பிடத்தக்கதாகும் மற்றும் முக்கியமான நிகழ்வு ஆகும். சாதத் ஹசன் மண்ட்டோ தனது சிறுகதைகள் மூலம் படுகொலையின் போது ஒவ்வொரு சமூகத்தையும் முன்வைக்கிறார். இக்கதைகளில் பெண்கள் தான் பிரிவினையில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளாள். சகினா போன்ற சிறுமிகள் எல்லாவிதமான அவமானங்களை, வன்முறைகளை சித்திரவதைகளை, அனுபவித்ததையும், மற்ற சமூகத்தினரால் அவர்கள் துன்புறுத்தப்பட்டதையும் காட்டுகிறார். எதிர் சமூகத்தினரை பழிவாங்கும் விதமாக பேசுவதற்கான எளிதான வழி அவர்களின் பெண்களை அவமானப்படுத்துவதும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குவதை வெளிப்படுத்துகிறது. இவர் தனது கதைகளில் பெண்களை பழிவாங்குவதில் பெரும் பங்கு வகிக்கும் ஆணாதிக்க அமைப்பின் சித்தாந்தத்தையும் வலியுறுத்தும் மண்ட்டோவின் படைப்புகள் சபிக்கப்பட்டிருப்பது அவரது கதைகளில் வழக்கமானதாக அமைந்துள்ளது. மனித மனங்களில் ஏற்கனவே எத்தனை அழுக்குகள் குவிந்து கிடக்கின்றன.              

அடிக்குறிப்புகள்

கோ.வே.கீதா, தமிழ் நாவல் ஓர் அறிமுகம்,ப. 136, முதற் பதிப்பு, 1976, அணியகம், சென்னை

மேலது.,ப.43

சாதத் ஹசன் மண்ட்டோ படைப்புகள், இராமாநுஜம்,ப. 124, மூன்றாம் பதிப்பு ஜுன், 2020, பாரதி புத்தகாலயம், சென்னை, 600 018.

மேலது.,ப.270

மேலது.,ப.142

சிவப்புநிற மழைக்கோட்டில் ஒரு பெண், தொகுப்பும் மொழிபெயர்ப்பும், உதயசங்கர், ப.40, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை – 600 050

சாதத் ஹசன் மண்ட்டோ படைப்புகள், இராமாநுஜம்,ப.204, மூன்றாம் பதிப்பு ஜுன், 2020,பாரதி புத்தகாலயம், சென்னை,600 018.

சாதத் ஹசன் மண்ட்டோ கதைகள்,தொகுப்பு ரவி இளங்கோவன், ப.42, கிராபிக் நெட்வொர்க், சென்னை – 600 014.

சாதத் ஹசன் மண்ட்டோ படைப்புகள், இராமாநுஜம், ப.285, மூன்றாம் பதிப்பு ஜுன், 2020, பாரதி புத்தகாலயம், சென்னை.

கட்டுரையாளர்கள்:

ஆய்வாளர்: மா.ஆர்த்தி, தமிழ்த்துறை, முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாப்பிரெட்டிப்பட்டி.

நெறியாளர்: முனைவர் அ.சுபா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,பாப்பிரெட்டிப்பட்டி