நாடு முழுவதும் மூடப்பட்டுள்ள அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை குறித்து கேரளத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி ஜான் பிரிட்டஸ் கேள்வி எழுப்பியிருந்தார். இந்தக் கேள்விக்கு மத்திய கல்வி அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் சுமார் 18, 727 பள்ளிகள் மூடப்பட்டிருப்பதாகவும் அதிலும் பாஜக ஆளும் மாநிலங்களில் அதிகமான அளவில் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் பள்ளிக் கல்வி முறையில் ஒரு பெரும் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 18, 727 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஒராண்டிலேயே சுமார் 8475 தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இது கல்விக்கான அணுகல், கிராமப்புற வாய்ப்புகள் மற்றும் கல்வி சமத்துவம் குறித்து பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது, நாட்டின் பொதுக் கல்வி அமைப்பில் அடிப்படை மாற்றங்களை இது சுட்டிக்காட்டுகிறது.

அரசிதழ் தரவுகளின்படி, பொதுப் பள்ளிகளின் வீழ்ச்சியையும், தனியார் சுயநிதிக் கல்வி நிறுவனங்களின் எழுச்சியையும் மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. ஜான் பிரிட்டாஸ் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த 5ஆண்டுகளில் 18, 000க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதை அவர் கவலையுடன் குறிப்பிட்டார். இந்த நிலை நாட்டின் பொதுக் கல்வி முறைக்கு ஆபத்தானது என்று x தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அரசு புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் அரசுப் பள்ளிகளின் மொத்த எண்ணிக்கை 2020-21ம் ஆண்டில் 10, 32, 049 ஆக இருந்தது, இது 2024-25ம் ஆண்டில் 10, 13, 322 ஆகக் குறைந்துள்ளது. இதன் மூலம், 5 ஆண்டு காலத்தில் 18, 727 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது. இது பொதுக் கல்விப் பின்னணியில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை பிரதிபலிக்கிறது.

இந்தக் குறைவு நாடு தழுவிய அரசு பள்ளி நெட்வொர்க்கின் சுருக்கத்தைக் காட்டுகிறது. இலவச கல்விக்காக அரசுப் பள்ளிகளை நம்பியிருக்கும் கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இது கவலைகளை எழுப்புகிறது. பள்ளிகள் மூடுவிழாவுக்கு குறைந்த மாணவர் சேர்க்கை போன்ற காரணங்கள் கூறப்பட்டாலும், இந்த வீழ்ச்சி பொதுக் கல்வி அமைப்பில் பெரிய கட்டமைப்பு மாற்றங்களைக் குறிக்கிறது.

அதே நேரம், தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 37 அரசுப் பள்ளிகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் 512 தனியார் பள்ளிகள் தமிழ்நாட்டில் மூடப்பட்டுள்ளன என்பதை குறிப்பிட வேண்டும். தமிழ்நாட்டில் கல்வி நிலையங்களின் எண்ணிக்கை கூடியது மட்டுமல்லாமல், உயர்கல்வி விழுக்காடும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அதிலும் பெண்களின் பங்கு, தனிச்சிறப்பிற்குரிய இடத்தைப் பெற்று வருகிறது.

விடுதலை இராசேந்திரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.