நான் அவரை சிறந்த நிர்வாகியாக மட்டும் பார்க்கவில்லை. தனது அரசியல் செல்வாக்கை, பதவியைக் கொண்டு சாதாரண மக்களுக்கு தொண்டு செய்யும் மனிதநேயம் மிக்கவராகவும் பார்த்தேன். அவர் சிறந்த நீதிபதி, நிர்வாகி, அரசியல் செயல்பாட்டாளர் என குறிப்பிட்ட இ.எம்.எஸ் சின் மதிப்பிற்குரிய வார்த்தைகள் அனைத்திற்கும் சொந்தக்காரர் நீதியரசர் கிருஷ்ணய்யர் அவர்கள் ஆவார். அம் மகத்தான மனிதனின் வாழ்க்கையை படிக்க மிகவும் அருமையான வாய்ப்பாக இப்புத்தகம் வெளிவந்துள்ளது.

இந்திய நீதித்துறை வரலாற்றிலும் அரசியல் வரலாற்றிலும் மிகவும் குறிப்பிடத்தக்கவர் வி.ஆர். கிருஷ்ணய்யர் அடிமைப்பட்டுத் கிடந்த பிரிட்டிஷ்  இந்தியாவில் 1915 நவ 15ந் தேதி புதிய விடியலுக்காக அவர் உதயமானது முதல் தொடர்ந்து வீரநடைபோட்டு எழுகிறது அவர் வரலாறு.

தன்னுடைய பள்ளி மாணவப் பருவத்தில் துவங்கி கல்லூரி சட்ட மாணவராக, வழக்கறிஞராக, nithi_00மக்கள் சேவகராக சிறந்த அமைச்சராக, உயர்நீதி மன்ற நீதிபதியாக, சட்டக்கமிஷன் உறுப்பினராக, உச்சநீதிமன்ற நீதிபதியாக பணி நிறைவு பெற்ற பின்னர் அவர் ஆற்றிய பணிகளை இந்நூல் விரிவாக குறிப்பிட்டுள்ளது. அதே சமயத்தில் அவர் வாழ்கையில் கிடைத்த அத்துனை தருணங்களின் போதும் ஏழை எளிய உழைப்பாளி மக்களின் வாழ்வுக்காக,  உரிமைக்காக வாதாடியும், போராடியும் வந்துள்ளதை இந்நூல் உரிய முறையில் குறிப்பிடுகிறது.

வி.ஆர். கிருஷ்ணய்யர் தன்னுடைய மக்களின் உரிமைக்காக போராட்டத்தில தன்னை ஈடுபடுத்திக் கொண்டதோடு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு அக்கொடுமையையும் அனுபவித்துள்ளார். 1957ஆம் ஆண்டு வாக்குசீட்டு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் அமைச்சரவையில் உள்துறை, சிறைத்துறை, பாசனத்துறை அமைச்சராக பதவி வகித்த பின்னரும் கூட லட்சாதிபதியாக இருந்த அவர் சில ஆயிரம் ரூபாய்களோடு ஊர் திரும்பினார் என்பதை அறியும் போது அவரின் தியாகம், எளிமை போன்ற உயரிய பண்பு அவருக்கேயுரியது. இன்றைய அரசியலில் அத்தகைய பண்புகள் மங்கிப்போய் கொண்டிருக்கும் சூழலில் அதனை உயர்த்திப் பிடிக்கும் பணியை செய்பவர்களின் கரத்தை வலுப்படுத்துவது அவசியமாகும்.

மனிதர்களை நேசித்த அந்த மாமனிதன் வாயில்லா ஜீவன்கள் மீதும் தம்முடைய பறிவைக்காட்டத் தவறவில்லை. நோயாளிகள், அடித்தட்டு மக்களின் துன்பங்களில் உடன் நின்று பாதுகாத்தவர் ஆவார்.

காங்கிரசின் சிறுபிள்ளைத் தனம்:

கிருஷ்ணய்யரை நேரடியாக அரசியலில் சந்திக்க முடியாதகாங்கிரஸ் தனக்கே உரித்தான சிறுபிள்ளைத்தனமான முயற்சியில் இறங்கி அவரை தங்கள் கட்சியில் சேர்க்க முயற்சி மேற்கொண்டது. மக்களுக்கு துரோகம் என்பதை தம் கனவில் கூட நினைக்காத கிருஷ்ணய்யரிடம் அம்முயற்சி தோல்வியுற்றது என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.

வாழ்க்கை போகும் பக்கம் வளைந்து வாழும் மனிதர்களை உருவாக்கும் சமூகத்தில் தன்னுடைய லட்சியத்தை தீர்மானித்து வாழ்ந்தவர் வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர் தன்னுடைய நீதிபதி பதவி ஏற்கும் உறுதி மொழியில் அதனை வெளிப் படுத்தியது பற்றி இந்நூல் மிகச்சரியாகக் குறிப்பிட்டுள்ளது.

நாட்டை கலக்கிய தீர்ப்பு

அலகாபாத் தீர்ப்புக்குப் பின் இந்திரா அம்மையார்  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவ்வழக்கு நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் முன் விசாரனைக்கு வந்தது. முழுமையான தடைக்குப் பதிலாக குறிப்பிட்டகாலத்திற்கான நிபந்தனையுடன் கூடிய இடைக்காலத் தடையை வழங்கினார். அவ்வழக்கு, அதன் சூழ்நிலைகளையும் படம் பிடித்துகாட்டுவதைப் போன்று  அற்புதமாக காட்சிப்படுத்தி உள்ளார் நூலாசிரியர்.

வேட்டி, சட்டையில் எளிய மனிதராக அங்கு சென்ற போது அவரின் பெருமை அறியாத மூடர்களின், கோட்பாட்டை விமர்சித்துவிட்டு அங்கிருந்து சுயமரியாதையுள்ள பெருமைக்குரிய இந்தியனாக கம்பீரமாகத்  திரும்பினார். இச்செயலுக்குகாரணமான சென்னை கிரிக்கெட் கிளப்பை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் (எஸ்.எப்.ஐ) தொழிற்சங்க இயக்கமும் ஆர்ப்பாட்டம் செய்தது என்ற தகவலும் இந்நூலில் உரிய முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இப்படி வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்களின் வாழ்க்கை சம்பவங்களை அதில் அவரின் வார்த்தைகளைக் கொண்டே மிக நேர்த்தியாக அடுக்கி அற்புதமாக நூல் எழுதப்பட்டுள்ளது.

அதேபோல் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் ஒன்றுபட்ட போராட்டத்தில் ஈடுபட்ட அவர் குடியரசுத் தலைவர் தேர்தல் துவங்கி குஜராத் இனப் படுக்கொலை என தொடர்ந்து அக்கோட்பாட்டை உயர்த்திப் பிடித்துள்ளார் என்பதும், இந்திய சமூகத்தின் அவமான சின்னமான சாதிய முறையும், அதற்கு எதிரான போராட்டம் பற்றியும், அவர்மீதான அவமதிப்பு வழக்குகளையும் மிகுந்த அக்கறையோடு சுட்டிக்காட்டி விளக்கி உள்ளது இப்புத்தகம்.

ஏழை எளிய உழைப்பாளி மக்களின் மனித உரிமையை பாதுகாத்து நீதிமன்றத்தை நீதியின் ஆலயங்களாக மாற்றும் மிக முக்கிய வரலாற்றுக் கடமையை ஆற்றியவர் என்பதை இந்நூலில் அறியமுடிகிறது.

அதே போல கேரளா முதல்வர் அச்சுதானந்தன் தலைமையிலான இடது முன்னணி அரசு கடந்த 2009 குடியரசு தினத்தன்று அரசிடம் எந்த ஒரு பலனும் பெறாமல் கடும் உழைப்பால் உருவாக்கப்பட்ட சட்ட சீர்திருத்த கமிஷன் பரிந்துரையை அதன் தலைவர் கிருஷ்ணய்யர் சட்ட அமைச்சர்களிடம் வழங்கினார். 65 புதிய சட்ட மசோதா, 30 சட்ட திருத்த மசோதா, விதிகள், நடைமுறைகள் என 104 மசோதாவை வடிவமைத்து  சாதனையைத் தொடர்ந்தார் அச்சிற்பி.

நீதியரசர் கிருஷ்ணய்யர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை உலக அரசியல், இந்திய அரசியல், கேரள அரசியல் பின்னணியுடன் அலசி மிகவும் அற்புதமான முறையில் இந்நூலை  எழுதியுள்ள நூலாசிரியர் அ. மகபூப்பாட்சா அவர்கள் நம் அன்பிற்கும், பாராட்டிற்கும் உரியவர்.

உலகமய சூழ்ச்சியால் ஏகாதிபத்திய, முதலாளித்துவ, மதவெறி அரசியல் மக்களை மேலும், மேலும் பிளவுபடுத்திக் கொண்டிருக்கும்  சூழலில் நீதியரசர் கிருஷ்ணய்யரின் வாழ்க்கை, வரலாறு அதனை முறியடிக்கும் அற்புதமான ஆயுதமாக  திகழும். இந்நூலின் தத்துவப்பார்வை இந்திய மக்களின் சமூக பொருளாதார விடுதலைக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்காக உள்ளது சிறப்பம்சம்.

இத்துடன் கிருஷ்ணய்யரின் தாத்தா, அப்பா, தாய், உடன் பிறந்தவர்கள், மனைவி வாரிசு என அவர்களின் உயரிய பங்குகள் இந்நூலில் மிகவும் அற்புதமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய முக்கியமான அம்சங்களை பல இந்நூலை நாம் படிக்கும் போது உள்வாங்கிட முடியும்.

இந்நூல் அறிமுகத்தில் வி.ஆர். கிருஷ்ணய்யர் போன்ற உயர்ந்த மனிதர்களின் வாழ்க்கை வரலாறு இன்றைய இளைஞர்கள் படிக்க வேண்டிய வரலாறாக உள்ளது. அவர் நடந்துகாட்டிய பாதையில் அடியெடுத்து நாமும் பின் செல்ல வேண்டியது அவசியம். அவரின் வாழ்க்கை நாம் அனைவரும்  பின்பற்ற வேண்டிய வரலாறாகவும் உள்ளது. அத்துடன் அவர் பாடுபட்ட தொழிலாளி, விவசாயி, ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட  மக்களின் மனித உரிமைகளை வாழ்வாதாரங்களை பெற்றுத்தர பாடுபடுவது அவரின் உயர்ந்த லட்சியத்திற்கு செய்யும்காணிக்கையாக இருக்கும்.

அவரின் பன்முகத் திறன் இளைஞர்களுக்கு முன்மாதிரியான ஒன்றாக உள்ளது. கிருஷ்ணய்யர் வாழ்க்கை ஒரு வரலாறாக உள்ளது.  இவ்வரலாற்று நூலை இளைஞர்கள் அவசியம் படித்து  பயன்பெற்றிட வேண்டும்.

நீதிவானில் ஒரு செந்தாரகை

ஆசிரியர், அ. மகபூப் பாட்சா

வெளியீடு:

சோக்கோ அறக்கட்டளை

கே.கே. நகர், மதுரை 20

ரு. 200

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.