சூரியன் வாயுப் பொருள்களால் ஆன ஒரு நெருப்புக் கோளமாகும். சூரியனின் விட்டம் 14,00,000 கிலோ மீட்டர்களாகும். அதாவது புவியின் விட்டத்தைப் போல் 109 மடங்குகளாகும். சூரியனின் ஈர்ப்பு சக்தி, புவியின் ஈர்ப்பு சக்தியைப் போல் 28 மடங்கு அதிகமாகும். சூரியன் அது இருக்கும் அண்டத்தின் மையத்திலிருந்து சுமார் 32,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. (ஒரு ஒளி ஆண்டு = 5,88,00,00,000 மைல்கள்). இந்த அண்டத்தின் மையத்தைப் பற்றிக் கொண்டு வினாடிக்கு 250 கிலோமீட்டர்கள் வேகத்தில் ஒரு முறை சுற்றி வரச் சூரியனுக்கு சுமார் 225 மில்லியன் ஆண்டுகள் ஆகின்றது. இத்துடன் சூரியன் தனது அச்சைப் பற்றிக் கொண்டு ஒருமுறை சூழலத் துருவத்தில் (at the Poles) 24 முதல் 25 நாட்களும்; மைத்தில் 34 முதல் 37 நாட்களும் ஆகின்றது.

sun_370சூரியன், புவியிலிருந்து ஏறக்குறைய 150 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அளவில் சூரியன் புவியைப் போல் 13,00,000 மடங்கு பெரியது. சூரியன் வாயுவினா லான நெருப்புக் கோளமாக இருந்தாலும் இது நான்கு அடுக்குகளாக உள்ளது. சூரியனின் ஒளிமயமான மைய வட்டுப் பகுதி ஒளிக் கோசம் (Photo sphere) எனப்படும். இதில் வெப்பநிலை 14 மில்லியன் டிகிரி சென்டிகிரேட் அளவு இருக்கும். இது தொடர்நிற மாலையைக் (continuous spectrum) கொண்டது. இந்த ஒளிக் கோசத்தைச் சுற்றி அமைந்துள்ள பகுதி சூரியனின் (atmosphere) வளி மண்டலமாகும். இதன் மூடியுள்ள பகுதி வெவ்வளி வட்டம் (Chromosphere) எனப்படும். இதன் வெப்ப நிலை ஏறக்குறைய 6000 டிகிரி சென்டிகிரேட் அளவு காணப்படுகிறது. இப்பகுதியில் பல்வேறு தனிமங்கள் வாயு நிலையில் காணப்படுகின்றன. இவ்வெவ்வளிவட்டத்தைச் சூழ்ந்துள்ள பகுதி ஒளிவளையம் (carona) ஆகும். இந் ஒளி வளையத்தில் உள்ள வாயுக்களின் வெப்பநிலை வியக்கத்தக்க அளவில் சுமார் 2 மில்லியன் கெல்வின் அளவுக்குக் காணப்படும். இதற்குக் காரணம் ஒளிக்கோசம் மற்றும் வெவ்வளிவட்டம்.

சூரியனில் அணுவினை

சூரியனில் நடைபெறும் அணுவினையை மூன்று படிகளாகக் கருதலாம்.

படி 1. 1H 1Hfi 2H+e’+ நியூட்ரினோ

படி 2. 2H 1Hfi 3He+ ஃபோட்டான்

படி 3. 3He+ 3Hefi 4He+ 1H+ 1H+ ஃபோட்டான்

முதல் நிகழ்வில் இரண்டு புரோட்டான்கள் (Proton) ஒன்றோடு ஒன்று மோதி ஒன்றுபடுவதால் ஒருவித ஹைட்ரஜன் (H) அணு உருவாக்கப்படுகிறது. இத்துடன் ஒரு மிகச் சிறிய பாசிட்ரான் (Positron) துகளும், நியூட்ரினோ (Neutrino) என்ற ஒரு நிறையற்ற துகளும் வெளியேறுகின்றன. இரண்டாவது நிகழ்வில் இந்த ஹைட்ரஜன் மற்றொரு புரோட்டானுடன் மோதி ஒன்றிணைவதால் ஹீலீயம் -3 (3He) என்ற அணு உருவாகின்றது. இத்துடன் ஃபோட்டான் (Photon) ஆனது கதிர்வீச்சாக உமிழப்படுகின்றது. மூன்றாவது நிகழ்வில் இரண்டு ஹீலியம் 3 அணுக்கள் மோதி ஒன்றிணைந்து ஹீலியம் – 4 என்ற (4He) அணு உருவாகின்றது. இத்துடன் இரண்டு புரோட்டான் மற்றும் ஒரு ஃபோட்டான் ஆகியன வெளிப்படுகின்றன.

இந்நிகழ்வுகளின் போது ஆற்றலானது ஃபோட்டான்களாக வெளியேறுவதோடு மட்டுமின்றி, எடை குறைந்த தனிமமான ஹைடிரஜனிலிருந்து எடை மிகுந்த ஹீலியம் தனிமம் உருவாக்கப்படுகிறது. அத்துடன் துவகத்தில் இருந்த ஹைடிரஜன்களின்  மொத்த நிறையைக் காட்டிலும் நிகழ்வின் இறுதியில் பெறப்பட்ட தனிமங்களின் மொத்த நிறை குறைவாகும். அணுச் சேர்க்கையின் (Fusion) போது ஒரு சிறு பகுதி நிறை (m) ஆற்றலாக (E) மாற்றப்படுகிறது. சூரிய அணுச்சேர்க்கையின் போது, ஒவ்வொரு ஒரு கிலோ கிராம் எடையுடைய ஹைட்ரஜன் வினையின் போதும் 0.007 கிலோகிராம் அளவு ஆற்றலாக மாற்றப்படுகிறது.

இவ்வாற்றல் சூரியனுள் 4x1026 ஜூல்/வினாடி அளவு உண்டாகின்றது. தன் சமநிலையை பராமரிக்க இதே அளவு ஆற்றலைச் சூரியன் ஒவ்வொரு வினாடியும் கதிர்வீச்சாக வெளியிடுகின்றது. இதன் அளவு 400 டிரில்லின் டிரில்லியன் வாட்டுகள் ஆகும். (ஒரு டிரில்லியன் = 1012 ஆகும்). ஒவ்வொரு வினாடியின் போதும் சூரியனானது 4 மில்லியன் டன்கள் ஹைடிரஜனை ஆற்றலாக மாற்றி அண்ட வெளியில் கதிர் வீச்சாக உமிழ்கிறது. இவ்வாறு சூரியன் தனது ஆற்றலை இழந்து கொண்டே வருவதால் அதன் எடை குறைந்து வருகிறது. இதுவரை சூரியனின் வயது 500 கோடி ஆண்டுகள் எனக்கணக்கிட்டுள்ளனர். சூரியன் மேலும் சுமார் 700 கோடி ஆண்டுகள் வாழ்தற்கான ஆற்றலைப் பெற்றுள்ளதாகவும் அறிவியலார் கணக்கிட்டுள்ளனர்.

சூரியனது ஆற்றல் வெளியாகி எடை குறைந்து கொண்டே வருவதால், சூரியனின் உட்பகுதியில் உட்குழிவு ஏற்பட்டு மேற்பரப்பில் சுருக்கம் ஏற்படுகிறது. அதனால் உள்பகுதியை நோக்கி மேற்பரப்பு நெருக்கப்படுகிறது. இதனால் சூரியனில் வெப்பம் அதிகரிக்கிறது. இவ்வாறாக இன்னும் 100 கோடி ஆண்டுகளில் சூரியனின் வெப்பம் 50,000 டிகிரி ஃபாரன்ஹுட் அளவை எட்டும். அப்போது சூரியனிலிருந்து வெளிர்நீல நிறமுள்ள கதிர்கள் வெளியாகும். அடுத்து 300 கோடி ஆண்டுகளில் சூரியன் அதன் நடுத்தர வயதை எட்டிப் பிடிக்கும். இந்நிலையில் சூரியனில் ஹைட்டிரஜன் மற்றும் ஹீலியம் அணுக்கள் முழுக்கத் தீர்ந்த நிலையில் அது விரிவடையத் தொடங்கும். இவ்வாறு விரிவடையும் போது சூரியனுள் புதன், வெள்ளி, புவி ஆகிய கோள்மீன்கள் அடங்கி விடும்.

இந்நிலையில் சூரியன் சிவப்பு ராட்சசனாகிக் (Red Giant) காணப்படும். உட்புற நெருக்கம் காரணமாகச் சூரியனில் அழுத்தம் அதிகரிக்கும். இந்நிலையில் சிவப்பு நிறம் வெள்ளையாகிக் காணப்படும். மேலும் 50 கோடி வருடங்களில் சூரியனிலுள்ள எரி பொருள் முழுக்கத் தீர்ந்துபோன நிலையில், வெள்ளைக் குள்ள விண்மீனாகச் சூரியன் மாறிவிடும். அடுத்து 30 இலட்சம் வருடங்களில் ஆற்றல் முழுவதையும் இழந்த சூரியன் கருப்பாக மாறி விடும். இந்நிலையில் சிவப்பு ராட்சசனாக இருந்தபோது விழுங்காமல் விட்ட சில துணைக் கோள்மீன்களுடன் கருப்புக்குள்ளனாகக் (Black Dwarf) காணப்படும்.

சூரியக் கரும்புள்ளி (Sun Spot)

சூரியனின் மேற்பரப்பில் சில இடங்களில் சில வேளைகளில் பல கரும்புள்ளிகளைக் காணலாம். இக்கரும்புள்ளிகள் காந்த விசையின் பாதிப்பினால் ஏற்பட்டவையாகும். இப்புள்ளிகள் சூரியனின் மேற்பரப்பிலுள்ள ஏனைய பகுதிகளாகக் காட்டிலும் வெப்பம் குறைந்தவையாகக் காணப்படுகின்றன. சூரியப் புள்ளிப் பகுதியைச் சுற்றியுள்ள வாயுக்கள் வெளியிடும். 5700 டிகிரி கெல்வின் வெப்பத்தைக் காட்டிலும், சூரியப் புள்ளிப் பகுதியிலுள்ள வாயுக்கள் வெளியிடும் வெப்பம் குறைவாக 4000 முதல் 4500 டிகிரி கெல்வின் அளவில் இருப்பதுதான் அது கருமையாகக் காணப்படுவதற்குக் காரணமாகும். கரும்புள்ளிக்கு அருகிலுள்ள சூரிய வாயு காந்தப் புலத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. சூரியனிலுள்ள அயனிகள் காந்தப் புலத்தில் தன்னிச்சையாகச் செல்லாமல் காந்தப் புல திசையிலேயே ஒருங்கிணைந்து காணப்படும். இக்காரணத்தால் சூரியக் கரும்புள்ளியிலுள்ள அயனியாக்கமடைந்த வாயுவும், ஏனைய சூரிய வளி மண்டலத்திலுள்ள வாயுவும் வேறுபட்ட வடிவங்களில் காணப்படுகின்றன. அயனியாக்கமடைந்த வாயு பல ஆயிரம் கி.மீக்கு அனற் பிழம்பு போன்று சுவாலைகளாகக் (Prominences) கிளம்பும். கரும்புள்ளிகள் தோன்றும் கால அளவு சில மணி நேரங்களிலிருந்து பல வாரங்கள் வரையானதாகவும் காணப்படுகிறது. நீண்ட கால அளவைப் பெற்றிருப்பின் புவியின் அயனி மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் வானொலித் தகவல் தொடர்பில் பாதிப்பு ஏற்படுகிறது.

புவியை நோக்கி வரும் மின்னூட்டப்பட்ட துகள்களை மின்காந்தப் புலம் விலக்கித் தள்ளும். இதனால் அத்துகள்கள் புவியின் இருதுருவங்களை நோக்கி ஈர்க்கப்படும். இவ்வாறு துருவங்களை நோக்கி மின் துகள்கள் ஈர்க்கப்படுவதால் வடக்கு மற்றும் தெற்கு துருவம் நோக்கி பேரொளி (அ) அறோறா பொறியாலிஸ் (Aurara Borealis) எனப்படும் விந்தைக் காட்சிகள் அதிகமாகக் காணப்படும்.

சூரியனில் ஏற்டும் இந்த மாற்றம் 22 ஆண்டுகாலச் சுழற்சியை உடையது. இதுவும் இந்த 11 ஆண்டுகாலத் துணைச் சுழற்சியைக் கொண்டதாகக் காணப்படுகிறது. இந்த 11 ஆண்டுத் துணைச் சுழற்சியில் மிகவும் குறைவாகக் காணப்படும் காலத்திலிருந்து ஏறக்குறைய 4½ ஆண்டுகளுக்குப் பின் இக் கரும்புள்ளிகள் மிகவும் அதிகமாகவும், பின்னர்  6½ வருடங்களில் மீண்டும் குறைவாகவும் காணப்படும். மேலும் ஒவ்வொரு 11 ஆண்டுகாலத் துணைச் சுழற்சியின் போதும் சூரியனின் காந்தப் புலத்தின் திசை முழுவதுமாக எதிராக மாறுபடுகிறது.

சூரியனிலிருந்து வெளிப்படும் தீ நாக்குகளிலிருந்து துகள்கள் விண்வெளியில் எறியப்படுகின்றன. இது சூரியப் புயல் எனப்படும் இப்புயல் புவியையும் கடந்து வெளிக் கோள் மீன்கள் வரையும் பரவுகின்றது. புவிக்கு அருகில் இப்புயல் வினாடிக்கு 600 கிலோ மீட்டர் வேகத்தில் கடக்கிறது. இந்த வாயுத் துகள்கள் மிகவும் நுண்மையாக இருப்பதால் புவி எந்த வித வெப்பப் பாதிப்பையும் பெறுவதில்லை. விண்வெளிக் கலங்களைக் கொண்டு திரட்டப்பட்ட தகவல்களிலிருந்து இப்புயல் சனிக் கோள் மீனின் சுற்றுப் பாதை வரை காணப்படுவதாக தெரிகிறது.

2000-ஆம் ஆண்டு ஜூலை 14, வெள்ளிக் கிழமை கிரீன்விச் நேரம் 10.24 மணிக்கு சூரியனின் பரப்பிலிருந்து மாபெரும் தீப் பிழம்பு வெடித்து வெளிச்சிதறியது. இதனால் பல நூறு கோடிக்கணக்கான பிளாஸ்மாக்களும் மின்னூட்டப்பட்ட துகள்களும் (Charged Particles) அண்டவெளியில் வீசியெறியப்பட்டன. அவற்றில் சில மணிக்கு 48 இலட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் புவியை நோக்கி வரத் தொடங்கின. இவை புவியின் மின்காந்தப் புலத்தை அடுத்தநாள் தாக்கியது. இதனால் மின்காந்தப் புயல் ஏற்பட்டது.

பொதுவாக மின்னூட்டப்பட்ட துகள்கள் வந்து தாக்காத வண்ணம் புவியின் மின்; காந்தப் புலம் பாதுகாப்பு அளித்து வருகிறது. எனினும் சூரியனில் ஏற்படும் இது போன்ற ஆற்றல் மிக்க வெடிப்பால் வானொலி சமிக்ஞை, தகவல் தொடர்பு பரிமாற்றங்கள், செயற்கைக்கோள் தொடர்பு, மின்விநியோகம் ஆகியவை பாதிக்கப்படுகின்றன.

(நன்றி – மனோரமா இயர்புக்)

Pin It

solarsystem

சூரியக் குடும்பம் எவ்வாறு தோன்றியது? இதற்கு உறுதிப் பூர்வமான கொள்கையோ, பதிலோ இதுவரை கண்டறியப் படவில்லை. சூரியக் குடும்பம் தோன்றியது குறித்து இதுவரை பல்வேறான கருத்துக்கள் கூறப் பட்டு வந்துள்ளன. தொடக்கத் தில் 18-ஆம் நூற்றாண்டில் புகையுருக் கோட்பாடு என்ற தத்துவம் ஒன்று கூறப்பட்டது. பல வாயுக்களால் அமைந்த பெரும் தொகுதி ஒன்று, சுழற்சியினால் மெதுவாகக் குளிர்ந்து சுருங்கத் தொடங் கியது. அச்சுருக்கத்தின் காரண மாக, அந்தத் தொகுதி முழுவ தும் ஈர்ப்பு-சக்தியின் அணைப்பினால் சுழற்சி வேகம் மேலும் அதிகரித்தது; அதனால் அத்தொகுதியின் வெளிப்பரப்பின் வேகம்  மிகவும் அதிகமாக, ஈர்ப்பை மீறத் தொடங்கியது. இதிலிருந்து சிறு சிறு துண்டுகள் விடுபட்டுக் கோள்கள் உருவாயின. நடுப்பகுதி மட்டும் சூரியனாக ஒளியையும், வெப்பத்தையும் அளித்துக் கொண்டுள்ளது. இவ்வாறு புகையுருக் கோட்பாடு, சூரியக் குடும்பத்தின்  தோற்றம் பற்றிக் கூறுகிறது.

பின்னாட்களில் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சியால் தொலைநோக்கி கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் ஈர்ப்பு விசையை மீறி இடைப்பட்ட துண்டுகள் வெளியேற முடியாது என்று அறியப்பட்டது. இவற்றின் காரணமாக இக்கொள்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

18 ஆம் நூற்றாண்டில் சூரியக் குடும்பத் தோற்றம் பற்றிய கொள்கை உருவானது. விண்வெளியில் திரியும் மற்றொரு விண்மீன் சூரியனின் அருகே வர நேர்ந்தபோது, ஈர்ப்பின் காரணமாக, சூரியனது வாயுக்களை விண்வெளியில் அது கவர்ந்து ஈர்த்தது;  அவ்வாறு சூரியனிலிருந்து பிரிந்த வாயுக்கள் குளிர்ந்து கோள்களாக உருவாயின என்று அக்கொள்கை விளக்கமளிக்கிறது. இரு விண்மீன்களுக்கு இடையேயுள்ள தூரம் மிக அதிகமாகையால் சூரியனை நோக்கி அதன் அருகே மற்றொரு விண்மீன் வந்திருக்கும் என்பது ஏற்புடையதாக இல்லை.

இறுதியாகத் தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள கொள்கை ஒன்று உள்ளது. அது பின்வருமாறு விளக்கமளிக்கிறது. வெகுகாலத்திற்கு முன் ஒரு மிகப் பெரிய விண் முகில் இருந்தது. அதன் ஒரு பகுதியில் நிறைச் செறிவு ஏற்பட்டது. இப்பகுதி ஏனைய பகுதிகளை ஈர்க்க ஆரம்பித்தது. அதாவது நியூட்டனின் ஈர்ப்பு விதியின் படி, இரு பகுதிகளான விண்முகிலில் நிறை ஈர்ப்புக் செறிவு மிகுந்த பகுதி, மறுபகுதியை ஈர்க்க ஆரம்பித்தது. இதன் பின் சொந்த நிறை ஈர்ப்பினால் விண் முகில் சுருங்கத் தொடங்கியது. இந்நிலையில் இது ஒரு வாயுப் பந்து போல் சுருங்கச் சுருங்கச் சுழலும் வேகமும் அதிகரித்தது. காலப்போக்கில் இதன் மையப் பகுதி குமிழ் போன்றும் சுற்றுப்பகுதி வட்டுப் போன்ற அமைப்பையும் பெற்றது. .இதன் பின்னர் வெளிப்புற வட்டின் சுழற்சி வேகம் அதிகரித்ததால் மையப் பகுதியில் உள்ள குமிழ் மேலும் சுருங்கியது. இதனால் மையத்தில் வெப்பம் அதிகரித்து மையப்பகுதி ஒரு விண்மீனாக (சூரியன்) மாறியது.  சுற்றியுள்ள வட்டு உடைந்து சிறு பகுதிகளாகப் பிரிந்து வெவ்வேறு கோள் மீன்களாக மாறின.

சூரியனுக்கு அருகில் உள்ள கோள்களான புதன், வெள்ளி, புவி மற்றும் செவ்வாய் ஆகியன மிக அதிகமான வெப்ப நிலையிலிருந்து குளிர்ந்து உருவானவை. இதனால் இவை திடக் கோளங்களாகக் காணப்படுகின்றன. இவற்றில் சிலிக்கான், இரும்பு போன்ற தாதுக்கள் காணப்படுகின்றன. இத்திடக் கோளங்களைச் சுற்றி மென்மையான வாயு மண்டலம் காணப்படுகின்றது. ஆனால் சூரியனிலிருந்து தொலைவில் உள்ள கோள்கள் உயர்வெப்ப நிலையை அடையாது குளிர்ந்த வாயு நிலையிலேயே சுழன்று வருகின்றன. இவை பெரும்பாலும் ஹீலியம், ஹைடிரஜன் ஆகிய வாயுத் தனிமங்களைக் கொண்டவையாகக் காணப்படுகின்றன.

சூரியனுக்கு அருகிலிருந்து இருக்கும் இடப்படி முறையே புதன், வெள்ளி, புவி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் என அமைந்துள்ளன. சூரியனுக்கும் புவிக்கும் இடையே அமைந்துள்ள கோள்களான புதன், வெள்ளி ஆகிய இரண்டும் உட்கோள்கள் (Inner Planets) என்று அழைக்கப்படுகின்றன. புவியைத் தாண்டிச் சுற்றி வரும் கோள்களான செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியன வெளிக்கோள்கள் என்று அழைக்கப்படுகின்றன. சூரியனைச் சுற்றி வரும் இக் கோள்மீன் அனைத்தின் பாதையும் நீள்வட்டமே. அதே வேளையில் இவை ஏறக்குறைய ஒரே தளத்தில் அமைந்துள்ளன.

(நன்றி – மனோரமா இயர்புக்) 

Pin It

சனி என்பது சூரியனை ஆறாவது கோளாக சுற்றி வருகிறது. அது மட்டுமல்ல, சூரிய குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்தபடியான பெரிய கோள் சனிதான். சனி என்பது பழங்கால ரோமனிய விவசாயக் கடவுளின் பெயராகும். சனிக்கோளின் வானவியல் சின்னம், ரோமானிய விவசாயக் கடவுளின் சின்னமான அரிவாள்தான்.

இரவு வானில் சூரியக் குடும்பத்தின் 5 உறுப்பினர்களை வெறும் கண்ணால் எந்த கருவியும் இன்றி பார்க்க முடியும். அவைகளில் ஒன்றுதான் சனிக் கோள். நம் மூதாதையர்களும், இதனை வெறும் கண்ணால் பார்த்தனர். கண்ணால் பார்க்கும் கோள்களில் இதுதான் தொலைவில் உள்ளது என்றும் தெரிந்து கொண்டனர். சனிக்கோள் மஞ்சள் நிறத்தில் மின்னாமல் பளிச்சென்று தெரியும். பூமியிருந்து பார்க்கும்போது வானில் தெரியும் கோள்களில் மூன்றாவது பிரகாசமான கோள் சனி. சனிக்கோளை வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்தே மனிதர்கள் பார்த்து வந்திருக்கின்றனர்.

sani_620

கலிலியோவும், சனிக்காதும்..!

தொலைநோக்கி மூலம் முதன் முதல் 1610 ஆம் ஆண்டு சனிக்கோளை பார்த்தவர் கலிலியோ தான். சனிக்கோளை வானில் நோக்கிய கலிலியோவுக்கு பிரமிப்பே மிஞ்சியது. காரணம் அதன் வித்தியாசமான தோற்றம்தான். ஆனால் அதனைப் பார்த்து ரொம்பவே குழம்பிவிட்டார். பின்னர்தான் இது என்னடா, இரண்டு பக்கமும் காது போன்ற தோற்றம் உடையதாய் இருக்கிறதே என்று அதன் வளையங்களைப் பார்த்து திகைத்தார். ஏனெனில் அவரது தொலை நோக்கி சிறியதாக இருந்ததால், வளையங்களின் அமைப்பு சரியாகத் தெரியவில்லை.அந்த காதுகள்தான் சனியின் வளையங்கள் என்றும், அவை பனிக்கட்டிகளால் ஆனவை என்றும் அவருக்கு அப்போது தெரியாது. பிறகே அவை சனியின் வளையங்கள் என்று தெரிந்து கொண்டார்.

தட்டை துருவங்கள்..!

சனிக்கோள் வியாழனுக்கும், நெப்டியூனுக்கும் இடையில் சுற்றிக்கொண்டு இருக்கிறது. இது சூரியனிடமிருந்து 140 கோடி கி.மீ. (1,400,000,000௦௦௦ கி.மீ ) தொலைவில் உள்ளது. இது 9 வானவியல் அலகு ஆகும். ஒரு வானவியல் அலகு என்பது பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் உள்ள 14.9 கோடி கி.மீ.தொலைவுதான். சனி இருக்கும் தூரம் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் உள்ள தூரத்தைப் போல சுமார் 9 மடங்கு. சனியின் நடுக்கோட்டு விட்டம் 120,536 கி.மீ. சனியின் விட்டமும் கூட பூமியைப் போல சுமார் 10 மடங்கு. எனவே இதில் வரிசையாக 9 பூமிகளை நிற்க வைக்கலாம். உள்ளே தூக்கிப் போட்டு அடக்கலாம். அவ்வளவு பெரியது. ஆனால் சனிக்கோளின் துருவங்கள் தட்டையான பந்து/ஆரஞ்சு போல காணப்படுகிறது. துருவங்களில் விட்டம் 108,728 கி.மீ தான்.

சனிக்கோள் மிக வேகமாக சுற்றுவதால்தான் துருவப்பகுதிகள் தட்டையாகிவிட்டன என்றும் சொல்லப்படுகிறது. சனிக்கோள் மட்டுமல்ல, சூரிய குடும்பத்தின் வியாழன், யுரேனஸ், நெப்டியூன் மற்றும் அனைத்து வாயுக் கோள்களின் துருவங்களும் தட்டையாகவே உள்ளன. பாறைக் கோளான நம் பூமியின் நிலையும் அதுதானே. சனிக்கோளின் அடர்த்தி நீரின் அடர்த்தியை விட மிகவும் குறைவு. எவ்வளவு தெரியுமா? சனியின் அடர்த்தி 0.69 தான். நீரின் அடர்த்தி 1. சூரிய குடும்பத்தில் மிக மிக அடர்த்தி குறைவான, மிகவும் லேசான கோள் சனி மட்டுமே. பூமியின் அடர்வு 5.32. இதிலுள்ள ஹைடிரஜனும், ஹீலியமும்தான் இதன் அடர்த்தி குறைவுக்கு முக்கிய காரணி. நீங்க சனிக்கோளை தூக்கி கடலில் போட்டால், இடுப்பு ஒட்டியாணம் மாட்டிக் கொண்ட சனிக்கோள், நீரில் ஜம்மென்று ஓர் ஆரஞ்சு பழம் போல மிதக்கும்.

சனியிலிருந்து சூரியனைப் பார்த்தால், நாம் பூமியிலிருந்து பார்ப்பதைப் போல பிரகாசமாக இருக்காது. ஒரு பிரகாசமான விண்மீன் போலவே தெரியும். சனிக்கோளில் பூமியில் தெரியும் சூரிய ஒளியில் 1% மட்டுமே தெரியும். உங்களின் எடை பூமியில் 70 கிலோ என்றால், சனியில் 75 கிலோ.

பூமி தன அச்சில் 23 .5 பாகை சாய்ந்துள்ளது. அது போலவே சூரிய குடும்பத்து அனைத்து கோள்களும் தன் அச்சில் சாய்ந்தே உள்ளன. சனிக் கோளும் தன் அச்சில், 26.73 பாகை சாய்வாகவே சூரியனைச் சுற்றி வருகிறது. நம் பூமியின் கணக்குப்படி சனிக் கோள் ஒரு முறை தன்னைத் தானே சுற்ற 10 மணி, 32 நிமிடம் 35 நொடிகள் ஆகிறது. இந்த துல்லியமான தகவல் 2007 செப்டம்பரில் விண்கலங்கள் வாயேஜர், புரோப் மற்றும் கசினி மூலம் அறிந்தது. இதுதான் சனியின் ஒருநாள் என்பதாகும். ஆனால் பொதுவாக சனியின் ஒரு நாளின் நேரம் என்பது காலப் போக்கில் மாறுகிறது என்பதனை கடந்த 25 ஆண்டுகளில் அறிந்துள்ளனர். முன்பு சனியின் ஒரு சுற்றலின் நேரம் 10 மணி 39 நிமிடம் ஆக இருந்தது. பின்னர், அதன் வேகம் 10 மணி 45 நிமிடம் ஆகிவிட்டது. சனி ஒரு முறை சூரியனைச் சுற்றிவர நம் பூமி நேர கணக்கில் 29 ஆண்டுகள், 167 நாட்கள், 6 மணி மற்றும் 40 நிமிடங்கள் ஆகின்றன. ஆனால் சனிக்கோளுக்கு இது ஓர் ஆண்டு தான்.
 
சனியின் மையப்பகுதியில் இரும்பு, நிக்கல் மற்றும சிலிகனும் ஆக்சிஜனும் கலந்த பாறை இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனைச் சுற்றி உலோக ஹைடிரஜன் உள்ளது. சனிக்கோளின் மேலுள்ள வாயு பகுதிக்கும் பாறைக்கும் இடையில் திரவ ஹைடிரஜனும், திரவ ஹீலியமும்தான். சனிக்கோளின் உள்ளே இருக்கும் உலோக ஹைடிரஜன்தான் மின்னேற்றத்தை உற்பத்தி செய்து சனிக்கோளின் காந்தப் புலத்தை உருவாக்குகிறது. ஆனால் சனியின் காந்தப்பரப்பு, பூமியின் காந்தப் பரப்பை விட பலவீனமானது. வியாழனின் காந்தப் பரப்பில் இருபதில் ஒரு பகுதிதான் (20 :1) சனியின் காந்தப் பரப்பு.

சனியின் வளிமண்டல வெப்பநிலை அதிக பட்சம் -130 °C லிருந்து -191 °C. வரை. இதன் வெளியே இவ்வளவு குளிராக இருக்கிறதே என்று இதைப் பற்றி கொஞ்சம் குறைவாக எடை போட்டு, இது மிக அமைதியான கோள் என நினைத்து விட வேண்டாம். மேற்பரப்பில்தான் குளிரும் உறைபனியும். இதன் உள்ளே மையம் பூமி போலவே கொதித்துக்கொண்டுதான் இருக்கிறது. அதன் உட்பகுதி வெப்பம் என்ன தெரியுமா? 12,000°C .வெப்பம்.

சனி தான் சூரியனிடமிருந்து பெற்ற வெப்பத்தைவிட 2.5 மடங்கு அதிக கதிர்வீச்சு ஆற்றலை அதன் மேற்பரப்பிலிருந்து வெளியிடுகிறது. பெற்ற வெப்பத்தை விட அதிகமாக எப்படி வெளிவிட முடியும்? இது எப்படி? சனியினுள் உருவாகும் அதிகப்படியான ஆற்றல், அதன் மெதுவான ஈர்ப்புவிசை அழுத்தத்தினால், கெல்வின்-ஹேல்ம்ஹோல்ட்ஸ் செயல்பாடு(Kelvin–Helmholtz mechanism) மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. சனியின் அதிகப்படி ஆற்றலுக்கு இது மட்டுமே காரணி அல்ல. இதற்குள்ளே வேறொரு செயல்பாடும் நடந்து கொண்டிருக்கிறது. சனியின் உள்ளே உள்ள ஹீலியம் துகள்கள் மழையாகப் பொழிந்து வெப்பத்தை தக்கவைத்துக் கொள்கின்றன.

sani_1_620

சனிக் கோளின் வளிமண்டலத்தில் காற்று உள்ளது. இது சூறைக்காற்று போல, எப்போதுமே மணிக்கு 1800 கி.மீ வேகத்தில் காற்று வீசிக்கொண்டு இருக்கிறது. பூமியிலிருந்து அனுப்பட்ட வாயேஜர் (Voyager) விண்கலம்தான் சனியின் வளிமண்டலத்தில் கிழக்கு நோக்கிய காற்றின் வேகத்தை கண்டுபிடித்தது. நம் சூரிய குடும்பத்தில் அதிக வேகத்தில் காற்று வீசும் கோள் சனி மட்டுமே. 2007ல் செலுத்தப்பட்ட கசினி (Cassini) விண்கலம், சனிக்கோளின் வடபகுதி யுரேனஸ் போலவே, அழகிய நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் நீல நிறத்தில் மின்னுகிறது என்பதை தெரிவித்தது. ரெலைக் என்ற பிரிட்டிஷ்க்காரர் தான் முதலில் சூரியன் மறையும் தருவாயில் மின்காந்த கதிர்வீச்சு அல்லது ஒளிச்சிதறல் மூலம் ஒலியலைகளை விட சிறிய துகள்கள் இந்த நீல நிறத்தை உருவாக்குவதைக் கண்டறிந்தார். அதனால் இந்த சிதறலுக்கு ரெலைக் சிதறல் (Rayleigh scattering) என்று பெயர். மேலும் துருவங்களில் துருவ வொர்டெக்ஸ்( warm polar vortex,) என்ற புயல் உருவாகிறது. இது சூரிய குடும்பத்தில் சனிக்கோளில் மட்டுமே நடக்கிறது. அங்கே வெப்பநிலையும் உச்சத்தில் 122°C என இருக்கும் என்றும் அறியப்பட்டுள்ளது. இந்த வெப்பநிலைதான் சனிக்கோளின் அதிக பட்சமாக கோடையின் வெப்பமாகும்.
 
அறுகோண மேகம்..!

சனிக்கோளின் வடதுருவ வொர்டெக்ஸைச் சுற்றி ஓர் அறுகோண அமைப்பு மேகமும் காணப்படுகிறது. இதனைக் கண்டுபிடித்தது நாம் செலுத்திய விண்கலமான வாயேஜர்தான். ஆனால் தென் துருவத்தில் வொர்க்டெக்ஸோ, அறுகோண மேகமோ கிடையாது. இங்கே, நம் கடலில் சூறாவளி உருவாகும்போது ஒரு கண் இருப்பது போன்ற கண் அமைப்பு தென் பகுதியில் தென்படுகிறது.
 
வாயுக் கோளத்தின் வாயுக்கள்..!

சனிக்கோளில் 96.3% ஹைடிரஜன் வாயுவும், 3.25% ஹீலியமும் உள்ளது. மேலும் 0.05% அளவு மீத்தேன் மற்றும் கொஞ்சூண்டு அம்மோனியாவும் (ammonia,) அசிட்டிலீன் (acetylene), ஈத்தேன் (ethane), புரொப்பேன் (propane), பாஸ்பைன் (phosphine) மற்றும் மீத்தேனும் (methene) சனியின் வளிமண்டலத்தில் உள்ளன, அதனால் தான் சனி இவ்வளவு லேசாக இருக்கிறது.

சனியின் வளிமண்டல் மேகங்களில் பூமி போலவே மின்னல்கள் உருவாகின்றன. அதன் அதிர்ச்சி என்பது, பூமியில் உருவாவதைப் போல பல கோடி, கோடி மடங்கு அதிகம். நம் பூமி 23.5 டிகிரி சாய்வாக உள்ளதால் பருவ காலங்கள் வருகின்றன. அது போலவே, சனியிலும் பருவகால மாற்றங்கள் உண்டு. அதன் காரணி சனி தன் அச்சில் 26 டிகிரி சாய்ந்திருப்பதே.

பூமியில் ஏற்படுவது போலவே, சனியிலும் அதன் பெரிய துணைக்கோளால் கிரகணம் உண்டா கிறது. சிறு கோள்களால் துணைக்கோள் நகர்வு (Transit)தெரிகிறது.

சனியின் வளையங்கள்

சனியின் நடுகோட்டுப் பகுதியில்தான் இந்த வளையங்கள் காணப்படுகின்றன. வியாழன், யுரேனஸ் மற்றும் நெப்டியூன் கோள்களில் வளையங்கள் இருந்தாளும் கூட, அவை சனியில் இருப்பதைப் போல் அவ்வளவு தெளிவாக, அழகாக தெரிவதில்லை. சனியின் வளையங்கள் அதன் நடுக்கோட்டுக்கு மேலே 6,630 கி.மீ.லிருந்து 120,700 கி..மீ தூரம் வரை விரவிக்கிடக்கின்றன. ஆனால் அவற்றின் கனம் வெறும் 23 மீட்டர் மட்டுமே. சனிவளையங்களின் பொருட்கள் வளையங்களில் 93% பனியின் துகள்களாலும், பாறைத் துணுக்குகளாலும், மீத்தேன் தூசுகளாலும் ஆனவை. மீதி 7% அமார்பாஸ் கார்பன் (amorphous carbon). அந்த துகள்களின் அளவு குட்டியூண்டு துகள்களிருந்து அதிக பட்ச அளவு 10 மீ. சில இவற்றை சின்ன தொலை நோக்கியால் கூட அழகாக காணமுடியும். கொஞ்சம் பெரிய தொலைநோக்கி என்றால் சனிக் கோளின் நிறைய வளையங்களைக் காணலாம்.

கலிலியோவிற்கு அடுத்தபடியாக இந்த வளையங்களை 1655ல் பார்த்து அவைகளுக்கு விளக்கம் சொன்னவர் கிறிஸ்டியன் ஹைஜீன்ஸ் ( Christiaan Huygens). சனிக்கோள் உருவானபோதே இதன் வளையங்களும் உருவாகி இருக்க வேண்டுமென்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த வளையங்கள் ஒருகாலத்தில் சனியின் துணைக்கோளாய் இருந்து மோதி உடைந்ததின் மிச்ச சொச்ச துண்டுகளே இப்படி வளையமாய் சனியைச் சுற்றி உள்ளன என்றும் தெரிவிக்கின்றனர். சனியின் வளையங்களை எப்போதும் காணமுடியாது.

சில சமயம் அவை படுக்கை வசத்தில் இருந்தால் வளையம் ஒரு கோடு போல இருக்கும். அப்போது வளையங்கள் நமக்குத் தெரியாது. 2008-2009ல் அவ்வாறு வளையங்கள் மறைந்து போயின. இனி மீண்டும் 2024-2025 ஆண்டுகளிலும் சனியின் வளையம் காணாமல் போகும். மீண்டும் மீட்கப்படும்.

சனியின் துணைக்கோள்கள்..!

சனிக்கோளுக்கு இதுவரை 62 துணைக் கோள்கள்/சந்திரன்கள் இருப்பதைக் கண்டுபிடித் துள்ளனர். இவற்றில் 20 சந்திரன்கள் வரை கசினி விண்கலத்தால் கண்டுபிடிக்கப் பட்டன. இவற்றில் 53 சந்திரன்/ நிலாவுக்கு பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. அவைகளுள் மிகப் பெரிய துணைக்கோள் டைட்டான்(Titan) தான். இதுதான் சனியின் சுற்றுப்புறத்திலுள்ள பொருள்களில் 90% நிறையைத் தன்னகத்தே கொண்டுள்ளது. சனியின் வளையங்களையும் சேர்த்துத்தான் இந்த கணக்கு. இந்த டைட்டன் துணைக்கோள், நம்ம சூரிய குடும்பத்தின் முதல் புதல்வன் புதனை விடப் பெரியது. அது மட்டுமல்ல, சூரிய குடும்பத்தின் இரண்டாவது பெரிய துணைக்கோள். முதல் பெரிய துணைக்கோள் வியாழனின் கனிமேடுதான். டைட்டனின் வளிமண்டலத்தில் கனமான நைட்ரஜன் நிரம்பி இருக்கிறது. ஒரு காலத்தில் நம் பூமியில் உயிரினம் உருவாகாதபோது இருந்த மாதிரியே இதுவும் இன்று இருக்கிறது. நம் பூமியின் வளிமண்டலம் 60 கி.மீ உயரம் வரை விரிந்துள்ளது. ஆனால் டைட்டனின் வளிமண்டலம், பூமியைப் போல 10 மடங்கு பெரியது. சனியின் அடுத்த இரண்டாவது பெரிய நிலாவின் பெயர் ரியா(Rhea). இதில் மிக மெல்லிய வளையமும், குறைவான வளிமண்டலமும் உள்ள நிலா. மற்ற நிலாக்கள் ரொம்ப சிறியவை. 34 நிலாக்கள் 10 கி.மீ விட்டம் மட்டுமே உள்ளவை. பெரும்பாலான நிலாக்களுக்கு, டைட்டனின் கிரேக்க புராணப்படியே பெயர் சூட்டப்பட்டுள்ளது. சூரிய குடும்பத்தில் பெரிய வளிமண்டலம் உள்ள துணைக்கோள் டைட்டன் மட்டுமே. இதில் தான் ஹைடிரோகார்பன் ஏரி உள்ளது. சனியின் துணைக்கோள்களில் ஒன்றான என்சிலாடஸ் (Enceladus) எதிர்காலத்தில் நுண்ணுயிர்கள் வர வாய்ப்பு உள்ள இடம் என்றும் சொல்லப்படுகிறது .
 
சனியை அறிய அனுப்பிய விண்கலங்கள்..!

சனியின் வளிமண்டலம், அதன் வளையங்கள், துணைக்கோள்கள் பற்றி அறிய, அதனை நோக்கி நான்கு விண்கலங்கள் செலுத்தப்பட்டுள்ளன. அமெரிக்க நாசாவின் பயோனிர் 11 (Pioneer 11) என்ற விண்கலம்தான் முதன் முதலில் 1979ல் சனிக்கோளைப் போய் எட்டிப்பார்த்து கதை பேசிவிட்டு வந்தது. பின்னர் வாயேஜர் 1 (செப்டம்பர் 12, 1980) மற்றும் வாயேஜர் 2 (August 25, 1981) விண் கலன்கள் அனுப்பப்பட்டன. கசினி (Cassini) விண்கலம 2004ல் செலுத்தப்பட்டது. இது இன்னும் சனியைச் சுற்றி வருகிறது. சனியின் இரவுப்பக்கம் கசினி சென்றபோது, வெளிச்சம்படாத சனியின் இந்தப் பகுதி நியான் விளக்கு போல மின்னியது. அதன் வளையங்கள் அழகான நிறங்களில் மினுக்குகின்றன. இது மின்னலடிக்கும் நீலம், மரகதப் பச்சை, புதினா பச்சை என பல வண்ணங்கள் காட்டி நம்மை மயக்குகின்றன. சூரிய ஒளி படாத இந்தப் பகுதியில் சனியின் உள் வெப்பமே இந்த ஒளியை உருவாக்குகிறது.

Pin It

உங்களுக்கு  இரண்டு சூரியன் உள்ள சூரிய மண்டலம் தெரியுமா? இப்போது கெப்ளர் விண் தொலைநோக்கியின் உதவியுடன் இரண்டு சூரியன்களை மையமாகக் கொண்டு சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு சூரிய குடும்பத்தை செப்டம்பர், 2011ல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள‌னர். அதன் பெயர் கெப்ளர் 16b (Kepler-16b).

ஒரு கோளும்..இரு சூரியன்களும்..!

நாசா வானவியல் ஆய்வு மையம் கெப்ளர் விண் தொலைநோக்கியை விண் ஆராய்ச்சி நிலையத்தில் வைத்து அனுப்பி உள்ளது. நம் பால்வழி மண்டலம் பற்றி ஆராயவும் அதனைத் தாண்டி, நீண்ட தொலைவு சென்று பிரபஞ்ச ரகசியம் பற்றி அறியவும்தான் அனுப்பப்பட்டிருக்கிறது. இந்த கெப்ளர் விண் தொலைநோக்கிதான், இரட்டை சூரியன்கள் உள்ள சூரிய குடும்பத்தைக் கண்டுபிடித்துள்ளது. ஒன்றல்ல, இப்படி இரட்டை சூரியன்கள் உள்ள இரு சூரிய குடும்பம் கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் தகவலை 2012 ஜனவரி 12ம் நாள், சான் டியாகோ மாகாண பல்கலைக் கழகத்தைச் (San Diego State University) சேர்ந்த விஞ்ஞானி வில்லிய வெல்ஷ் (William Welsh ) அமெரிக்க வானவியல் கழகத்தில் இயற்கை (journal Nature)என்ற பத்திரிக்கைக்காக பேட்டி கொடுத்து வெளியிட்டார். 
 
இரண்டு சூரியன்கள் ஒரே மையத்தில்..!

sunsஅது என்ன இரட்டைச் சூரியன்கள்? நம் சூரிய குடும்பத்துக்கு மைய நாயகன் சூரியன். ஓர் ஒற்றைச் சூரியன் மட்டுமே. ஆனால், இப்போது கண்டுபிடித்துள்ள சூரியகுடும்பத்துக்கு இரண்டு சூரியன்கள். அதாவது, சூரியகுடும்பத்தின் மைய நாயகர்கள் இரு சூரியன்களாக இருப்பார்கள். இரண்டு சூரியன்களை மையமாகக் கொண்டு அதன் கோள்கள் அவற்றை சுற்றி வருகின்றன என்ற தகவல் கிடைத்துள்ளது.

இன்று புதிதாய் பிறந்தோம்..?

அதோடு இரண்டு புதிய கோள்களையும் கண்டுபிடித்திருக்கிறார்கள். கண்டுபிடித்த இரண்டு புதிய கோள்களின் பெயர்கள்: கெப்ளர் 34b,கெப்ளர் 35b (Kepler-34b and Kepler-35b). இந்த கெப்ளர் 34b கோள், நமது வியாழனின் நிறையில் 22% மும், அதன் விட்டத்தில் 76%மும் கொண்டது. இது, தனது இரண்டு சூரியன்களை 289 நாட்களில் வட்டமிடுகிறது. அந்த இரண்டு சூரியன்களும் என்ன செய்கின்றன தெரியுமா?அவை ஒன்றையொன்று சுற்றி முடிக்க 28 நாட்கள் ஆகின்றன. அடுத்து உள்ள 35b கோள் நம் வியாழனில் 13% நிறையும், 73% விட்டமும் உடையது. அது அதன் மையத்தில் உள்ள இரு சின்ன சூரியன்களை 131 நாட்களில் சுற்றி வருகிறது. அந்த சின்ன சூரியன்கள் நம் சூரியன் அளவில் ஒன்று 80% நிறையும், இன்னொன்று 89% நிறையும் கொண்டிருக்கிறது.. இந்த 35b கோளுக்கான இரண்டு சூரியன்களும் ஒன்றையொன்று 21 நாட்களில் சுற்றுகின்றன.
 
எங்கே.. காண்பது..?

நாம் இரவில் வானிலுள்ள விண்மீன்களைப் பார்க்கிறோம். அவற்றில் சிலவற்றை நாம் அறிகிறோம். அந்த சில விண்மீன் படலங்களில் ஒன்று வடக்கு வானில் உள்ளது. மேகமற்ற, நிலா ஒளி இல்லாத/குறைவான வானை வடக்கில் அண்ணாந்து பார்த்தால், சிலுவை போன்ற அமைப்பில் ஒரு விண்மீன் படலம் தெரியும். இதனை அன்னம்/ வடக்குச் சிலுவை (Cygnus/Swan) என்று அழைக்கின்றனர். அந்த தொகுதியில்தான் நமது கெப்ளர் விண் தொலைநோக்கி கண்டுபிடித்த இரட்டைச் சூரியன்கள் உள்ள சூரிய மண்டலங்கள் உள்ளன. இது எவ்வளவு தொலைவில் உள்ளது தெரியுமா? 34b கோள் உள்ள சூரிய குடும்பம் பூமியிலிருந்து சுமார் 4,900 ஒளியாண்டு தூரத்தில் இருக்கிறது. 35b கோள் உள்ள சூரிய குடும்பம் 5,400 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது.

இதில் இரண்டு சூரியன்களும் ஒன்றையொன்று மறைத்து கிரகண விளையாட்டை அவற்றின் கோள்களுடன் இணைந்து அவ்வப்போது இரட்டைச் சூரிய மண்டலத்திலும் நடத்துகின்றன.

இரண்டு சூரியன்கள் ஒன்றையொன்று தட்டாமாலை போல் சுற்றுவதால், கோள்கள் பெறும் ஆற்றலின் அளவு பெரிதும் மாறுபடுகிறது. மாறுபட்ட ஆற்றலின் வேகத்தால், அங்கு அதீத மாற்றம் கொண்ட காலநிலைகளும் உலவுகின்றன என்ற உண்மையும் தெரிய வ்ந்துள்ளது. நிறைய வெப்பநிலை மாற்றங்களும், ஓர் ஆண்டில் நிறைய முறை 4 பருவ காலங்களும் உண்டாகின்றன.

இந்த சூறாவளி வளிமண்டல மாற்றம் என்பது அங்கு புதிதாக உயிர்கள் வாழும் சூழல், இரட்டைச் சூரிய சுற்றுக்கோள்களில் உருவாக வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது. இது ஒரு சுவையான, தேடல் நிறைந்த தகவலாகும்.

Pin It