கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சி.சண்முகம்
- பிரிவு: தொழில்நுட்பம்
அடர்த்தி வித்தியாசமுள்ள இரு பொருள்களை ஒரு திரவத்தினுள் போட்டு அசைக்கும் போது அடர்த்தி அதிகமான பொருள் கீழிறங்கிச் சென்று விடுவதையும், சற்று அடர்த்தி குறைவான பொருள் அதற்கு மேல் அமைத்துக் கொள்வ தையும் பார்க்கலாம். ஈர்ப்பு விசையை முக்கியமாகப் பயன்படுத்தி தனித்தனியாகப் பிரித்தெடுக்கும் இம்முறையின் தத்துவம்தான் சமையலறையிலும் மிகப் பெரிய தொழிற்சாலைகளிலும் செயல் படுகிறது.
ஒரு சில வித்தியாசங்களும் உண்டு. அரிசி களைதல் என்றழைக்கப்பட்டாலும் உண்மையில் அரிசியில் உள்ள கனமான, அதாவது அடர்த்தி அதிகமான கற்களைக் களைதல் என்ற பொருளில் தான் அதை எடுத்துக்கொள்ள வேண்டும். அடர்த்தி அதிகமான கற்கள் நமக்குத் தேவையில்லை. அவற்றைத் தூக்கி எறிகிறோம். சற்று அடர்த்தி குறைவான அரிசிதான் நமக்குத் தேவை என்று அதை எடுத்துக்கொள்கிறோம்.
உலோகத் தொழிற்சாலைகளில் அடர்த்தி அதிகமான தாதுப்பொருள்கள்தான் நமக்குத் தேவை. அவை படுகையின் அடியில் தங்கி விடுகின்றன. அடர்த்தி அதிகமான தும்பு, தூசு, களிமண், மணல் போன்றவை நமக்குத் தேவையில்லை. ஆக, அரிசி களைதல் என்று சமையலறையில் நிகழ்த்தப்படும் செயலின் தத்துவம்தான் ஈர்ப்பு விசையில் பிரித்தல் செயலிலும் பயன்படுத்தப்படுகிறது.
தொழிற்சாலைகளில் நுரை மிதப்பு முறை என்ற ஒன்று கடைபிடிக்கப்படுகிறது. குறிப்பாக சல்பைடு தாதுப் பொருள்களுக்கு இம்முறை கையாளப்படுகிறது. இம்முறையில் பெரிய தொட்டிகளில் பொடியாக்கப்பட்ட சல்பைடு தாதுப் பொருள்களைக் கொட்டி, அதனுடன் சிறிது பைன் எண்ணெயையும் சேர்த்து பின் தொட்டியில் நிறைய நீர் ஊற்றி அழுத்தமான காற்றை அதனுள் செலுத்துவர். சிறிது நேரத்தில் நீரின் மேற்பரப்பில் நுரை திரண்டு மிதக்கும். அந்த நுரையில் தூய்மையான, இலேசான, எண்ணெயில் ஒட்டக்கூடிய சல்பைடு தாதுப் பொருள் களின் துகள்கள் மட்டும் ஒட்டிக் கொண்டு மிதக்கும். தேவையற்ற கனமான பொருள்கள் தொட்டிக்குள் அடியில் தங்கிவிடும். மேலே மிதக்கும் நுரையை வழித்து எடுத்துக்கொள்வர்.
இந்த முறையைக் கவனிக்கும் போது நம் சமையலறையில் கையாளும் முறை நம் நினைவுக்கு வராமலில்லை. தயிரிலிருந்து வெண்ணெயைப் பிரித்தெடுக்க நாம் என்ன செய்கிறோம்? தயிருடன் நீர் சேர்த்துப் பாத்திரத்தில் ஊற்றி, பின் மத்து எனப்படும் ஒரு கருவியை இரு உள்ளங்கைகளுக்கிடையில் பிடித்துக்கொண்டு இப்படியும், அப்படியுமாக உருட்டும் வேலையை மத்தினால் கடைதல் என்றழைக்கிறோம் அல்லவா? சிறிய பாத்திரத்திற்குள் கைகளினால் கடையும் வேலையைப் பெரிய தொட்டிகளில் அழுத்த மான காற்றைச் செலுத்தி தொழிற்சாலைகளில் செய்கிறார்கள் அவ்வளவுதான்!
இங்கு வெண்ணெய் திரண்டு, அடர்த்தி குறைவதனால் மோரின் மேல் மிதக்கிறது. அங்கு தாதுப் பொருள்களின் அடர்த்தி குறைவு. அதனால் நுரையில் அது மிதக்கிறது. நுரை மிதப்பு முறை என்று உலோகவியல் தொழிற்சாலைகளில் அழைக்கப்படும் முறையில் அடங்கியுள்ள தத்துவ மும் தயிர் கடைதல் என்று சமையலறையில் கடைப்பிடிக்கப்படும் முறையில் உள்ள தத்து வமும் ஒன்றுதான்.
(கையினால் கடைதலைச் செய்தபோது இயற்பியலில் வரும் இணையின் திருப்புத்திறன் தத்துவத்தையும் நாம் பயன்படுத்துகிறோம் என்பதை மறக்கக் கூடாது.) இவ்வாறாக வேதி யியல் பாடங்களில் நாம் படிக்கும் பல செயல் முறைகளும் அவற்றுள் அடங்கியுள்ள தத்துவங் களும் நமக்குப் புதியதல்ல. நாம் நம் வாழ்வில் கடைப்பிடிக்கும் பல விவரங்கள்தாம் அவை என்பதை அறிந்துகொண்டு விட்டால் அப்பாடங்களையும் அவற்றினுள் அடங்கியுள்ள தத்துவங்க ளையும் எளிதில் மறக்க முடியாதல்லவா? எந்த ஒரு பாடமும் நமக்குப் புரிய வேண்டுமானால் அது கற்றுக்கொடுக்கப்படும் விதம் ஒரு பக்கம் முக்கியம் என்றால் புரிந்துகொள்ளும் மாணவர்கள் அதை எந்தக் கோணத்தில் பார்க்கிறார்கள் என்பதும் முக்கியம். சரியான கோணத்தில் பார்க்கத் தொடங்கி விட்டால் கடினமான பாடம் என்று ஒன்று உண்டா என்ன?
வேதியியலில் உள்ள பல கோட்பாடுகளில் முக்கியமான ஒன்று கலப்பினச் சேர்க்கை என்பதாகும். உயிரியியலில் கூட கலப்பினச் சேர்க்கை என்ற கோட்பாடு உள்ளது. செயல்படும் விதங்கள் இரண்டிலும் வேறுபட்டாலும் அடிப்படைக் கருத்தை ஒன்றாகத்தானிருக்கிறது.
வேதியியலில் கலப்பினச் சேர்க்கை என்ற கோட்பாடு விளங்கவேண்டுமென்றால் முதலில் வலுவெண் கோட்பாட்டிலிருந்து நாம் தொடங்க வேண்டும். இதை எளிமையாகப் புரிந்துகொள்ள வழக்கமாகக் கையாளும் கரி அணுவை எடுத்துக் காட்டாக எடுத்துக்கொண்டு விளக்கத் தொடங்குவோம். எந்த அணுவிலும் அதன் இறுதிச் சுற்றுப் பாதையில் உள்ள இணை சேராத மின்னணுக்களின் எண்ணிக்கையே வலுவெண் என்பதாகும், என்று வேதியியல் விளக்கம் தருகிறது. சாதாரண நிலையில் கரி அணுவில் மின்னணுக்கள் அமைந்துள்ள நிலையைப் பார்ப்போம்.
Carbon C 1s22s2 2p2
இந்த அமைப்பின்படி பார்த்தால் ஒரு கரி அணுவில் இரண்டு இணை சேராத மின்னணுக்கள் உள்ளன. ஆதலால் அதன் வலுவெண் இரண்டு என்றாகிறது. ஆனால், கரி அணுக்கள் உள்ள கூட்டுப்பொருள்கள் அனைத்திலும் கரி அணுவின் வலுவெண் நான்காகத்தான் உள்ளதே தவிர எங்கேயும் இரண்டைக் காணோம். அதாவது இருக்கவேண்டிய நியதிக்கும், உண்மையில் நடக்கின்ற நடப்புக்கும் தொடர்பில்லாமல் இருக்கிறது.
இயற்கையில் நடக்கும் நிகழ்வுகளை விளக்கத்தான் நியதிகளும், கோட்பாடுகளும் உருவாக்கப்படுகின்றன. அவற்றைக் கொண்டு தான் தீர்வுகள் விளக்கப்படுகின்றன. நியதிக்கும், நடப்புக்கும் வேறுபாடு இருந்தால் என்ன செய்வது? நடக்கின்ற நிகழ்வுகளுக்குத்தான் நாம் நியதி கற்பிக்கலாமே தவிர நாம் கூறிவிட்ட நியதிக்கேற்ப நிகழ்வுகள் நடந்தாக வேண்டுமென்று நாம் எதிர்பார்க்க முடியாது. அப்படி எதிர்பார்த்தால் செருப்புக்குத் தகுந்தாற் போல காலின் அளவை மாற்றிக்கொள்ள முயற்சிக்கும் செயலுக்கு ஒப்பாகும். அது முட்டாள்தனமானது என்பதை சொல்லத் தேவையில்லை.. சரி! இந்தப் பிரச்னைக்குத் தீர்வு என்ன?
(அடுத்த இதழில்)
(அறிவியல் ஒளி - 2012 ஜனவரி இதழில் வெளியான படைப்பு)
- விவரங்கள்
- ம.அருள்தளபதி
- பிரிவு: தொழில்நுட்பம்
புழை இருவாய்க்கு எந்தவித சார்பு மின்னழுத்தமும் அளிக்காதபோது, சமநிலையில் ‘பொ்மி மட்டமானது’ p- பகுதி மற்றும் n – பகுதி ஆகிய இரு பக்கத்திலும் ஒரே நிலையில் இருக்கும். இது படம்-1 (a) ல் காட்டப்பட்டுள்ளது.
திருப்பிய சார்பு மின்னழுத்தம் அளிக்கப்படும்போது மின்னழுத்த ஆற்றல் தடுப்பின் உயரம் (potential energy barrier height) Eh அதிகரிக்கிறது. எனவே n – பகுதியிலுள்ள ஆற்றல் மட்டமானது p – பகுதி ஆற்றல் மட்டத்துடன் ஒப்படும்போது கீழப்புறமாக இடப்பெயா்வு அடைகிறது. ( படம் -1 b ). இப்பொழுது p – பகுதியிலுள்ள இணைதிறன் பட்டையிலுள்ள மின்னணுக்கள் மின்னழுத்த ஆற்றல் தடுப்பைக் குடைந்துகொண்டு ( tunnel) n – பகுதியிலுள்ள அனுமதிக்கப்பட்ட காலியான கடத்து பட்டைக்குச் செல்கின்றன. இதனால் இருவாயில் திருப்பிய சார்பு மின்னோட்டம் பாய்கிறது. புழை இருவாய்க்கு அளிக்கப்படும் மின்னழுத்த அளவை மேலும் அதிகரித்தோமானால், அதிக எண்ணிக்கையிலான மின்னணுக்கள் தடுப்பு அரணைக் குடைந்துகொண்டு மறுபக்கத்திற்கு செல்கின்றன. ஆகையால் திருப்பிய மின்னோட்டமானது மேலும் அதிகாpக்கிறது மற்றும் இருவாய் மின்தடை குறைகிறது. இது புழை இருவாயின் மின்னழுத்த – மின்னோட்ட சிறப்பியல்புக்கோட்டில் (படம் -2 a) ல் (1) என்ற பகுதியில் காட்டப்பட்டுள்ளது.
முன்னோக்கிய சார்பு மின்னழுத்தம் அளிக்கப்படும்போது மின்னழுத்த ஆற்றல் தடுப்பின் உயரம் (Potential energy barrier height) Eh குறைகிறது. எனவே n – பகுதியிலுள்ள ஆற்றல் மட்டமானது p – பகுதி ஆற்றல் மட்டத்துடன் ஒப்பிடும்போது மேல் புறமாக இடப்பெயா்வு அடைகிறது. (படம் -1 c). எனவே n – பகுதியிலுள்ள நிரப்பப்பட்ட கடத்துப் பட்டைப் பகுதியிலிருந்து மின்னணுக்கள் மின்னழுத்த ஆற்றல் தடுப்பைக் குடைந்துகொண்டு p – பகுதியிலுள் காலியான நிலையிலுள்ள இணைதிறன் பட்டைக்குச் செல்கின்றன. இது முன்னோக்க டையோடு மின்னோட்டத்தைத் தருகிறது. இது மின்னழுத்த – மின்னோட்ட சிறப்பியல்புக்கோட்டில் ( படம் -2 a ) ல் ( 2 ) என்ற பகுதியில் காட்டப்பட்டுள்ளது.
முன்னோக்கிய சார்பு மின்னழுத்தத்தை மேலும் அதிகரிக்க, ஆற்றல் நிலையானது படம் - 1 (d) ல் காட்டியுள்ள நிலையை அடைகிறது. இந்நிலையில் மிகப்பெரும்பான்மை எண்ணிக்கையிலான மின்னணுக்கள் மின்னழுத்த ஆற்றல் தடுப்பைக் குடைந்துகொண்டு மறுபக்கத்திற்கு செல்கின்றன. இந்நிலையில் மின்னோட்டமானது மிக உயா்நிலையான முகட்டு நிலையை ( peak level) Ip யை அடைகிறது.
மேலும் முன்னோக்கிய சார்பு மின்னழுத்தத்தை அதிகரித்தோமானால் படம் 1.(e) ல் காட்டியுள்ள நிலை ஏற்படுகிறது. n – பகுதி கடத்துப் பட்டையின் நிலை மற்றும் p – பகுதி இணைதிறன் பட்டையின் நிலை ஆகியவற்றின் ஒருங்கிணைவு மாறுபடுவதால், மின்னழுத்த ஆற்றல் தடுப்பைக் குடைந்தகொண்டு மறுபகுதிக்குச் செல்லும் மின்னணுக்களின் எண்ணிக்கை குறைகிறது, எனவே, எதிர்மின்தடையின் (negative resistance) காரணமாக மின்னோட்டமும் குறைகிறது. இது மின்னழுத்த – மின்னோட்ட சிறப்பியல்புக்கோட்டில் (படம் -2 a) ல் (3) என்ற பகுதியில் காட்டப்பட்டுள்ளது. இப்பகுதி எதிர் மின்தடைப் பகுதி (negative resistance region) என்றழைக்கப்படுகிறது.
முன்னோக்கிய சார்பு மின்னழுத்தத்தை மேலும் அதிகரித்தோமானால் n பகுதியிலுள்ள கடத்து பட்டையும் p- பகுதியிலுள்ள இணைதிறன் பட்டையும் நேரே ஒருங்கிணைவு நிலையில் இல்லாமல் படம் 1 (e) ல் காட்டியுள்ள நிலையில் இருக்கும்.. எனவே, மின்னணுக்கள் குடைந்து கொண்டு மறுபகுதிக்குச் செல்வது நின்றுவிடும், ஆகையால் மின்னோட்டமானது சுழி ( zero ) நிலையை அடைகிறது. இது மின்னழுத்த – மின்னோட்ட சிறப்பியல்புக்கோடு படம் 2 ல் காட்டப்பட்டுள்ளது,
இருந்தாலும் முன்னோக்கிய சார்பு மின்னழுத்தத்தை இதற்கு மேலும் அதிகரித்தோமானால், மின்னோட்டமானது ஒரு சாதாரண சந்தி இருமின்வாயின் முன்னோக்கிய சார்பில் மின்னோட்டம் எவ்வாறு அதிகரிக்கிறதோ அதேபோல் சுழியிலிருந்து அதிகரிக்கத் தொடங்குகிறது இது மின்னழுத்த – மின்னோட்ட சிறப்பியல்புக் கோட்டில் படம் -2 (a) ல் பகுதி (4) எனக் குறிக்கப்பட்டுள்ளது. படம் - 2 (a) ல் குடைவு மின்னோட்டம் தொடா்கோடாகவும், ஊடுருவல் மின்னோட்டம் விட்டு விட்டு உள்ள கோடாகவும் காட்டப்பட்டுள்ளது. இந்த இரண்டும் இணைந்ததாக மின்னழுத்த –மின்னோட்ட சிறப்பியல்புக்கோடு வரைபடம் 2 (b) ல் காட்டப்பட்டுள்ளது. இதில் Ip உயா்மின்னோட்ட அளவான முகடு மின்னோட்டத்தைக் (peak current) குறிக்கிறது. Iv என்பது குறைந்த மின்னோட்ட அளவான பள்ள மின்னழுத்தத்தைக் (valley current) குறிக்கிறது. vF என்பது முன்னோக்கிய மின்னழுத்தமாகக் (forward voltage) குறிப்பிடப்பட்டுள்ளது.
(அறிவியல் ஒளி - 2012 ஜனவரி இதழில் வெளியான படைப்பு)
- விவரங்கள்
- கோபால்
- பிரிவு: தொழில்நுட்பம்
உலக மக்களில் பெரும்பான்மையினர், அணு உலைத் தொழில் நுட்பம் உள்ளார்ந்த வகையில் பாதுகாப்பற்றது என அதை நிராகரித்து வருகின்றனர். மேலை நாடுகளில் உள்ள அணு உலைகள் முடங்கியும், மூடப்பட்டும் இறங்கு முகத்தில் இருக்கின்றன. நம் விஞ்ஞானிகளோ அறிவியலைத் துறந்து, தர்க்க உதவி நாடி அமெரிக்கா, பிரான்சில் அணு உலைகள் தற்போது அணு உலைகள் உற்பத்தி செய்யும் சதவீதங்களைச் கூறிவருகின்றனர். இது தேய்பிறைக்கு வந்துவிட்ட நிலவைப் பார்த்து அதோ பார்… முழு நிலவு தான்… அங்கு இருக்கிறது என்று ஏதுமறியாக் குழந்தைக்குச் சொல்வதற்கு ஒப்பானது.
அத்தொழில் நுட்பத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாகக் கழிக்க வழிமுறைகள் இல்லை என்பது உலக அளவில் கண்ட உண்மை நிலை. ஆனால் நம் அணு விஞ்ஞானிகளோ தங்களுக்கு அணு உலைக் கழிவுகளைப் பாதுகாப்பாகக் கழிக்கத் தெரியும் என்று வாய்வார்த்தையாகக் கூறிவருகின்றனர். அப்படி இருந்தால் காப்புரிமை போட்டு அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனிக்குச் சொல்லித் தருவதாக ஏன் நம் அணு விஞ்ஞானிகள் அவர்கள் நாட்டில் அறைகூவல் விடவில்லை…?
மூடி மறைக்கப்பட்ட உண்மைகள்: இந்தியாவில் ஆற்றல்துறையின் கீழ் திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டிற்கான அமைப்பு (Bureau of Energy Efficiency) இருக்கிறது. அதன் வலைதளத்தில், இந்தியாவில் குறைந்தது 25,000 மெகாவாட் மின்சக்தியைச் சேமிக்க முடியும்; நாட்டின் ஒட்டுமொத்த ஆற்றலில் 23% சேமிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. மின்சேமிப்பிற்கான இந்தக் கணக்கீடு மிகமிகக் குறைந்த அளவாக இருந்தாலும் இது மிகக் கணிசமான தொகை. ஆனால், இதுவே இந்தியாவின் தற்போதைய மின் தேவைகளை நிறைவு செய்யப் போதுமானது; தற்போதைய தட்டுப்பாடுகளை நீக்குவதோடு, கூடுதலான மின்சாரத்தை உபரியாக்கவும் முடியும்.
முதன்மையான ஆற்றல் மூலம் என்று அமெரிக்கா, ஜப்பான், பிரான்சு, ஜெர்மனி, சீனா போன்ற பல அரசுகள் கருதுகிற, பரைசாற்றுகின்ற ஒன்றில், 1994லிருந்து 2010 வரை 16 வருடங்களாக விஷயம் தெரிந்திருந்தும் இந்தியாவில் எந்த திறம்பட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. வெறுமனே திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு பற்றி 2001ல் சட்டம் போட்டோம், திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டின் மூலம் தன்னார்வமாகச் சேமித்தோருக்கு போட்டி நடத்தினோம், கட்டுரைப் போட்டி நடத்தினோம் என இருந்தது இந்திய ஆற்றல் துறை!
இந்தியாவில் நாட்டில் திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு பற்றிய அறிவைப் பயன்படுத்திக் கொண்ட சில தொழில் நிறுவனங்கள், 1999 முதல் 2010 வரையில் தன்னார்வமாக 2461 மெகா வாட் அளவு மின்சாரத்தை சேமித்திருக்கின்றன. இதைச் சொல்வது இந்திய அரசின் ஆற்றல் துறைதான்! அதாவது மக்கள் வரிப்பணச் செலவு எதுவுமே இல்லாமல் 2461 மெகாவாட் மின் சக்தி உபரியாக்கப்பட்டிருக்கிறது. அதாவது கூடங்குள அணு உலைகளின் மின்திறனைக் காட்டிலும் கூடுதலான மின்திறனை அவர்கள் உபரியாக்கி இருக்கின்றனர். அந்த மிகச்சில தொழிற்சாலைகள் மட்டுமே 1999 முதல் 2010 வரையில் சேமித்த தொகை 13,399 கோடி. அவர்கள் இம்முறைகளை அமல்படுத்துவதற்குச் செய்த முதலீட்டை 20 மாதங்களில் திரும்பப்பெற்றனர். இதைச் சொல்வதும் இந்திய அரசின் ஆற்றல் துறைதான்!
2008ல் திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டிற்கான தேசிய நடவடிக்கை (National Mission on Enhanced Energy Efficiency) அறிவிக்கப்பட்டு 4 வருடங்களில் 7500 மெகா வாட் அளவு மின்சாரத்தை சேமித்து மின் நிலைய நிறுவுதிறன் தவிர்க்கப்பட்டிருக்கிறது என்கிறது மத்திய திட்டக்குழு. அதாவது 2010 முதல் 2011 ற்குள் மட்டும் மக்கள் வரிப்பணச் செலவு எதுவுமே இல்லாமல் 5039 மெகாவாட் மின்சேமிப்பு நடந்திருக்கிறது என்கிறது. 2008-ல் தான் இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது என்பது கவனத்திற்கு உரியது.
1994-ல் இருந்தே திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டு முறைகளின் முக்கியத்துவம் அரசிற்குத் தெரிந்திருந்தும், புதிதாக கவனத்திற்கு வந்தது போல், 2011 முதல் 2015ற்குள் 19000 மெகா வாட் மின் சேமிப்பு செய்வோம் என்கிறது மத்திய அரசின் ஆற்றல் துறையின் வலைத்தளம்.
நிதி ஒதுக்கீடு: இவ்வளவு முக்கியமான திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டுத் துறைக்கு நிதி எவ்வாறு மத்திய அரசு வழங்குகிறது தெரியுமா? மாநில அரசுகள் ஒரு குறிப்பிட்ட தொகையை (சில கோடிகள்) அளிக்க வேண்டும். அப்படி அளித்த தொகையிலிருந்து தொகுப்பு நிதி உருவாக்கி ஒவ்வொரு மாநிலத்திற்கும் மத்திய அரசு நிதி உதவி செய்யும்! 2009-2010 முதலான கடந்த மூன்று நிதி ஆண்டுகளுக்கு இந்தியா முழுமைக்குமாக உயர்ந்தபட்சமாக 70 கோடி ரூபாயை மாநில ஆற்றல் சேமிப்புத் தொகைக்கு திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டிற்கான அமைப்பு கொடுக்கலாம். (தெளிவில்லாமல் இருப்பது ஆற்றல்துறை வலைத்தளத்தினால்).
மத்திய அரசு திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டிற்கான தேசிய நடவடிக்கை (National Mission on Enhanced Energy Efficiency) என 2008ல் அறிவித்து, 24 ஜூன், 2010-ல் மத்திய மந்திரி சபை ஒப்புதல் வழங்கி, 11வது 5 ஆண்டுத் திட்ட காலத்தில் எஞ்சிய ஆண்டுகளுக்கு (2009-2010, 2010-2011, 2011-2012) அத்திட்டத்திற்கு 235.35 கோடி ரூபாய் என்று கணக்கிட்டு, 108.03 கோடி ரூபாயை நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கி உள்ளது.
மத்திய திட்டக்குழு ஆராய்ச்சிக்கான தொகைகளைப் பட்டியலிடுகிறது. அணு ஆராய்ச்சிக்கு 610 கோடி ரூபாயும், மற்ற ஆற்றல் தொடர்பான அனல், புனல், திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் சேர்த்து 70 கோடி ரூபாய் செலவழிப்பது எவ்வளவு நியாயம்?
திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டு முறைகளைப் பற்றிய விழிப்புணர்வு
திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டு முறைகளை பற்றியெல்லாம் நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை என்பதோடு, இன்றளவும் இந்த பேருண்மை மூடி மறைக்கப்பட்டு வருகிறது. கூடங்குள அணுஉலைகளை ஒட்டிய இந்த விவாதத்தின் போதும் அது மக்கள் கவனத்திற்கு கொண்டு வரப்படவில்லை.
மின் பயன்பாட்டில் பெருமளவிலான (70% மேல்) பயன்பாடு மின் மோட்டர்களில் தான். கோவை போன்ற தொழில் நகரங்களில் தொழில் முனைவோர் நல்ல மோட்டார்கள் வாங்கத் திணறி வருகின்றனர். அதிகரித்து வருகிற மின்சார விலையின் தீவிரத்தில் தொழில்கள் முடங்கி வருகின்றன. ஏற்கனவே நசிந்து வருகிற விவசாயத்துறையில் இம்மாதிரியான திறம்பட்ட ஆற்றல் முறைகள் பம்ப் செட்டுகளின் வாழ்நாளை நீட்டிக்கும், அரசிற்கு ஆகும் செலவினத்தைக் குறைக்கும். நம் விவசாயிகள் விவரம் அறியாத நிலையில் அரசால் வைக்கப்பட்டு இருக்க, அவர்கள் படிப்பறிவு பெரிதும் இல்லாத நம் ரீவைண்டர்களிடம் கொடுத்து அடிக்கடி மோட்டாருக்கான காயில் சுற்றி வருகிறார்கள். இதனால் தேவையற்ற மின்விரையம் ஆகிறது.
மோட்டார் உற்பத்தித் தொழிலில் இருப்போர் திறம்பட்ட மோட்டார்களைத் தயாரிக்க தேவையான பாகங்கள் கோவை மட்டுமல்ல, இந்தியாவின் இதர இடங்களில் இருந்தும் கிடைப்பதில்லை. அதனால் திறம்பட்ட மோட்டர் பாகங்களுக்காக வெளிநாடுகளை நோக்கி கையேந்த வேண்டிய நிலை உள்ளது.
அரசால் திறம்பட்ட மின்மோட்டர் தயாரிக்க போதுமான ஊக்கம் அளிக்கப்படவில்லை. மக்களுக்குத் தெளிவாக இவை பற்றி எல்லாம் விளக்கப்படாததால், ஏற்கனவே பல்வேறு பொருளாதாரச் சுமையில் உள்ள மக்கள், குறைந்த விலை உள்ள மோட்டர்களையே வாங்குகின்றனர். இதனால் உயர்ந்த திறன் கொண்ட மோட்டார்கள் உருவாக்கப்படுவது மிகச் சொற்பமாக இந்தியாவில் இருந்து வருகிறது. இதனால் இந்த குறைந்த விலை மோட்டர்களை பயன்படுத்துவோருக்கு, மின்துறை, அரசு என்று அனைவருக்குமே நஷ்டம் தான்!
கிராமங்களில் உள்ள குண்டு பல்புகளை CFL விளக்குகளைக் கொண்டு மாற்றுகிறோம் என்ற திட்டத்தை மட்டும் மத்திய அரசு கூறுகிறது. அது பற்றி அணு உலை அமைக்கக் காட்டும் முனைப்பைக் காட்டவில்லை. இப்போது LED விளக்குகள் மிகக்குறைந்த அளவுதான் செலவிடுகின்றன என்று தெரிய வந்துள்ளதே! பெருந்தொழில் நிறுவனங்கள் LED விளக்குகளுக்கு மாறிப் பயனடைவதாக தகவல்கள் உள்ளதே! இது பற்றி செய்தியைக் கூட விவரமாக திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டிற்கான அமைப்பு தரவில்லை. LED விளக்குகளின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலை நாடுகளில் மின் மோட்டார்களை திறம்பட்டவையாக உருவாக்குவதற்கான தரக்கட்டுப்பாட்டு நிர்ணயங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் Frost free ப்ரிட்ஜ், ஏ.சி., டியூப்லைட் (Tube light), பகிர்மான டிரான்ஸ்பார்மர்கள் (Distribution Transformers) என நான்கிற்கு மட்டும் தர நிர்ணயம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஏன் மின்மோட்டர்களுக்கான தரக்கட்டுப்பாடுகள் அமல்படுத்தவில்லை?
மக்கள் விஞ்ஞானம், மக்கள் பொருளாதாரம்: இந்தியாவின் தேசிய உற்பத்தித் திறன் கவுன்சில் தற்போதைய மின் தேவைகள் அனைத்தையும் திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டு முறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் நாம் நிறைவு செய்துவிடலாம்; இம்முறைகளை குறுகிய காலத்தில், குறைந்த செலவில் செய்து முடிக்கலாம்; இவற்றுக்காகச் செலவிடப்படும் தொகை ஆற்றல் செலவுகள் குறைவதால் 3 வருடங்களுக்குள் திரும்பக் கிடைத்துவிடும் என்கிறது.
அதை விட முக்கியமானது, இம்முறைகளைக் கடைப்பிடிப்பதனால் 2 வழிகளில் நம் ஆற்றல் செலவுகள் குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
1. நேரடியாக, நம் ஆற்றல் செலவுகள் குறைவதால் ஆற்றலுக்கு நாம் செலவிடும் கட்டணங்கள் குறைகின்றன.
2. இம் முறைகள் அரசு ஃ பிற அமைப்புகள் செய்யும் செலவுகளைக் குறைக்க வழிவகுப்பதால், அரசு மற்றும் பிற அமைப்புகளால் நிர்ணயிக்கப் படுகிற ஆற்றல் கட்டணங்கள் குறையும்! உதாரணமாக, தமிழக மின் துறை, தமிழகத்தில் குண்டு பல்புகளை சி.எப்.எல். பல்புகளால் மாற்றினால் 600 மெ. வா. மின்திறனை காலை, மாலை வேளைகளில் தேவையற்றதாக்கலாம். வருடத்திற்கு தமிழக அரசு அதிக விலை கொடுத்து இந்நேரங்களில் வாங்கும் மின்சாரத்திற்கான தொகையான சுமார் ரூ. 1200 கோடியை தேவையற்றதாக்கலாம்.
இந்தியாவில் ஒருங்கிணைந்த ஆற்றல் திட்டத்தை வகுக்கும் மத்திய திட்டக்குழு ஆற்றல்களுக்கான கட்டணங்களை கூட்டத் துடிக்கிறது. பாரதப் பிரதமரோ கட்டணங்களைக் கூட்டினால் தான் திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு அதிகரிக்கும் என் கிறார். உண்மையில் திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டு முறைகளைக் கடைப்பிடிப்பது ஆற்றல் கட்டணங்களைக் குறைத்து மக்களின் பொருளாதார நெருக்கடியைக் குறைப்பதாக இருக்கும், மாற்றமில்லாமல் மக்கள் அனைவரும் விரும்புவதாக இருக்கும். நம் பொருளாதார நிபுணரான பிரதமர் மக்கள் சார்பாக ஏன் சிந்தித்துச் செயல்படுவதில்லை?
உண்மை இப்படி இருக்க தற்போதைய தமிழக மின் தட்டுப்பாட்டைப் போக்க அணுசக்தியைத் தவிர வழியே இல்லை என்று மேதகு முன்னாள் குடியரசுத் தலைவரான அப்துல்கலாம் அவர்களும் பொருளாதார நிபுணரான பிரதமரும், எவ்வாறு கூறுகின்றனர்?
இந்தியாவில் திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டின் முக்கியத்துவம், பயன்பாட்டாளர்களுக்கான அதன் பயன்களையும் மக்களுக்கு விளக்குவதே இல்லை. இது வளர்ந்த நாடுகளில் உள்ள நிலைக்கு முற்றிலும் மாறானது. வளர்ந்த நாடுகள், புதிய ஆற்றல் மூலங்களுக்கான தேவையைக் குறைப்பதில் திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு முதன்மையான பங்கு வகிக்கின்றன என்பதை நன்கு உணர்ந்து அதற்கேற்ப செயல்திட்டங்களை வகுக்கின்றன.
ஆற்றல் பிரச்சனைகளை இப்படி அணுகவில்லை எனறால் வண்டியில் உள்ள ஓட்டை ட்யூபில் நாம் காற்றடித்துக் கொண்டே இருப்பதற்குச் சமம்!
வீட்டின் தண்ணீர்த் தேவைக்கு ஒழுகுகிற மேல்நிலைத் தொட்டியை வைத்துக் கொண்டு ஏற்கனவே உள்ள கிணறு போதவில்லை, புதிதாகக் கிணறு தோண்ட வேண்டும் என்று சொல்வதற்குச் சமம்! ஒழுகல்கள் அனைத்தையும் அடைத்த பின் தேவை இருக்கிறது என்று கணக்கீட்டில் தெரியவந்தால் புதிய கிணறுகள் அவசியம் என்ற நிலையை உலக அறிவியலாளர்கள் எடுக்கின்றனர். இதை அறிய அறிவியல் அறிய வேண்டியது இல்லை. இது சராசரி புத்திக் கூர்மையில் தெரியவருவது. நம் அணு விஞ்ஞானிகளோ ஒழுகல்கள் அல்ல, ஓட்டைகள் இருந்தாலும், கணக்கிடக் கூட தரவுகள் இல்லாத நிலையில் புதிய மூலங்கள் அவசியம் என்று புதிது புதிதாய்க் கிண்றுகள் தோண்டும் கனவை மெய்ப்பிக்க இறங்கி உள்ளனர் தலைகீழாக.
எதைச் செய்வது புத்திசாலித்தனம்…?
உலகமே நீடித்து நிலைத்த வளர்ச்சிக்கும், மக்களுக்கும் சாதகமற்றது என்று அறிந்து ஒதுக்கும் ஒன்றை வரப்பிரசாதம் என்பதும், உலகமே அதிமுக்கியமானதாகக் கருதும் திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டை மக்களின் கண்ணில் கூடக் காட்டாது மறைப்பதும் அரசாலும், அரசு விஞ்ஞானிகளாலும் இங்கு நடைபெற்று வருகிறது.
நம் ஊரில் ‘விஞ்ஞானம்’ என்பது வேறுபட்டது போலும்!
- கோபால் (
- விவரங்கள்
- கோபால்
- பிரிவு: தொழில்நுட்பம்
கூடங்குள அணுஉலைகளின் கட்டுமானத்திற்காக 13,147 கோடி ரூபாயைச் செலவு செய்தபின், இயக்கவிருக்கின்ற நேரத்தில் மூடச்சொல்லிப் போராடுகிறார்களே! அணுஉலை கட்டுமானம் துவங்கும் முன்பே தடுத்து நிறுத்தியிருக்கலாமே! என்ற வாதங்கள் பொதுவெளியில் முன்வைக்கப்படுகின்றன.
அணுஉலை வேண்டாம் என்று சொன்னால் மின்தேவை இருக்கிறது அணுஉலையே அதற்குத் தீர்வு அணுஉலைத் திட்டத்தை மறுக்கிறவர்கள் மாற்றுப் பற்றிக் கூறாதவரை தேச நலனுக்கு எதிரானவர்கள் என்ற பார்வையும் நிலவுகிறது.
வழிதெரியா இந்தப் புதிர்ப்பாதையில் இருந்து நாம் எவ்வாறு தப்புவது? நம் வாழ்வையும், வாழ்வாதாரங்களையும் நமக்குப் பிந்தைய தலைமுறையினரின் நலன் களையும் எப்படிக் காப்பது என்பது சமூக நலன் விரும்பிகளுக்கு முன்னுள்ள விழிபிதுங்கவைக்கும் சவாலாக உள்ளது!
இந்திய மின் நிலவரம்: மின்சாரம் நமக்கு இன்றியமையாத ஆற்றலாக இருந்து வருகிறது. இதே போன்று நமக்கு இன்றியமையாத ஆற்றல்களாக இருந்து வருபவை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்ற எரிபொருட்கள். தொழில்துறை, விவசாயம், போக்குவரத்து, வணிகம், வீட்டு உபயோகம், பொதுப்பயன்பாடு என எண்ணற்ற துறைகளுக்கு மின்சாரம் உள்ளிட்ட இந்தப் பல்வேறு ஆற்றல்கள் தேவைப்படுகின்றன.
இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள மின்நிலையங்களில், நிலக்கரி, வாயு, எண்ணெய் போன்றவற்றை உள்ளடக்கிய அனல்மின் 65.09%, புனல்மின் 21.22%, சூரிய ஒளி, காற்றாலை போன்றவற்றிலிருந்து 11.05% அணுமின் 2.62% என நிறுவுதிறன் விகிதம் உள்ளது. மொத்த நிறுவுதிறன் 1,82,344 மெகா வாட்டாக (மெ.வா.) உள்ளது.
அதிகளவில் மின்சாரம் தேவைப்படும் துறைகளாக தொழில்துறையும் விவசாயமும் இருந்து வருகின்றன. தொழில்துறையில் அதிகளவிலான ஆற்றல் தேவைப்படும் தொழில்கள் (Energy intensive industries) என அலுமினியத் தொழில், காரக் குளோரின் (Chlor – Alkali), இரும்புத் தொழில், சிமெண்ட் தொழில், உரத் தயாரிப்பு, நூற்புத் தொழில் போன்றவைகள் பல காலமாக அறியப்பட்டு வருகின்றன.
விவசாயத்துறையில், கணிசமான மின் பயன்பாடு இருக்கிறது. இந்தியாவில் 200 லட்சம் பம்ப் செட்டுகள் இயங்கிவருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை திறம்பட மின்சக்தியைப் பயன்படுத்துவதில்லை.
இதையடுத்து பெருமளவில் ஆற்றலை உறிஞ்சுவது, மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சக்தியைப் பயன்படுத்துவோரின் இடத்திற்கு வந்துசேர்வதற்கு இடையில், மின்கடத்தல் மற்றும் பகிர்மானத்தில் (Transmission and distribution) நடத்தப்படுகிற செலவாகும். இதை ஒருங்கிணைந்த தொழில் நுட்ப மற்றும் வணிக மின் இழப்புகள் (Aggregate Transmission & Commercial losses) என்ற பெயரில் அழைக்கின்றனர். உலக நாடுகளில் தயாரிக்கப்படும் மின் ஆற்றலில் இது அதிகட்சமாக 15% என்று உள்ளது. நம் நாட்டில் இது சில மாநிலங்களில் 50% - ஐத் தாண்டுகிறது இந்திய சராசரியாக 2007-08 கணக்குப்படி இது 31.65%. அதாவது, நம் நாட்டில் சராசரியாக தயாரிக்கப்படும் மின்சார ஆற்றலில் 31%-க்கு மேல் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப, வணிக மின் இழப்பு!
மின் பற்றாக்குறை: தற்போது நமக்கு மின்தட்டுப்பாடு இருந்து வருவது உண்மைதான். இதற்குத் தீர்வு பற்றிச் சிந்திக்கும்போது, வழக்கமாக சூரியஒளி, காற்றாலை, Biomass போன்றவற்றை மூலங்கள் எனக் கண்டுணர்ந்து, அவற்றிலிருந்து பெறக்கூடிய மின்சக்தி பற்றிக் கணக்கில் எடுத்து வருகிறோம். இவை தற்போதைய மின் தேவையை நிறைவு செய்யப் போதுமானவையா என்ற கேள்வி எழும்போது சரியான மாற்று என்ன என்பது நம்முன் பெரும் சவாலாக நிற்கிறது!
விஷயம் இந்தியாவில் இப்படி இருக்க, உலகநாடுகள் அனைத்திலும் என்ன நடக்கிறது? உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளாகக் கருதப்படுகிற அமெரிக்கா ஜப்பான், பிரான்சு என அனைத்திலும் பாதுகாப்புக் காரணங்களால் புதிய அணுஉலைகளைத் துவக்க மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே இயங்கிவரும் அணுஉலைகளையும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மூடச் சொல்லி வருகிறார்கள்.
ஆக, இன்று இந்தியா சந்திக்கிற மாதிரியான சிக்கலைத் தானே அந்நாடுகளும் சந்திக்கும்? அவர்கள் முற்றும் துறந்தவர்களாகக் காட்டிற்கு ஏதும் சென்றுவிடவில்லையே! அவர்கள் நம்மைக் காட்டிலும் அதிகளவில் மின்சாரத்தைப் பயன்படுத்துபவர்கள் ஆயிற்றே! அந்நாடுகளில் காற்று, சூரியஒளி போன்ற மின் ஆற்றல் மூலங்கள் நம் நாட்டைக் காட்டிலும் குறைவு என்பது தானே உண்மை! அவர்கள் எப்படி ஆற்றல் தன்னிறைவை அடையமுடிகிறது? நமக்கு தெரியாத ரகசியமான ஆற்றல் திட்டங்கள் ஏதும் அவர்கள் வைத்திருக்கிறார்களா?
இப்போது நம் நாட்டிற்கும் அமெரிக்கா, ஜப்பான், பிரான்சு, ஜெர்மனி போன்ற பல நாடுகளுக்கும் உள்ள வித்தியாசங்களைப் பார்க்கலாம். அதில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக அமெரிக்காவை எடுத்துக் கொள்வோம்.
தேவையே புதிய கண்டுபிடிப்புகளின் தாய்: அமெரிக்காவில் 1970களில் ஆற்றல் பிரச்சனையின் போது (Energy Crisis), பயனீட்டாளர்கள் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும் ஆற்றல் விலைகளைச் சமாளிக்க வேண்டி வந்தது. அப்போது அணு உள்ளிட்ட பல்வேறு ஆற்றல் மூலங்கள் (Energy Sources) சோதித்துப் பார்க்கப்பட்டன. 1979ல் மூன்று மைல் தீவில் அணு உலைப் பேரழிவு நிகழ்ந்தது. 1980களில் புதிய ஆற்றல் சேமிப்பு (Energy Conservation) முறை தோற்றுவிக்கப்பட்டது. அது அதிகரித்துவந்த ஆற்றல் விலைகளை, பயனீட்டாளர்கள் சமாளிப்பதற்கு உதவியது! அந்த முறை தான் “திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு (Energy Efficiency)”.
அமெரிக்க ஆற்றல் விஞ்ஞானிகள், “திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டு முறைகள் (Energy Efficiency Measures), 1970களில் துவங்கி அமெரிக்க ஆற்றல் தேவையைக் குறைக்க வழிசெய்து வந்திருக்கிறது. திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு தான் ஆற்றலுக்கான எங்கள் முதன்மையான மூலம். பழைய தொழில்நுட்பமும், சந்தை நிலவரமும் மாற்றமில்லாது இருந்திருந்தால், அதிகரித்திருக்கக்கூடிய ஆற்றல் பயன்பாட்டின் 70 விழுக்காட்டிற்கு மேல் திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு தான் குறைத்தது” என்கின்றனர்.
திறம்பட்ட ஆற்றல் பயன்பாடுதான் ஆற்றலுக்கான எங்கள் முதன்மையான மூலம் என்கிறார்களே? அதாவது அனல் மின், நீர் மின், சூரியசக்தி, காற்றாலை என எல்லா வகை மின் மூலங்களைக் காட்டிலும் இந்த திறம்பட்ட ஆற்றல் பயன்பாடுதான் ஆற்றலுக்கான முதல் மூலம் என்று மிகப் பெருமையாகப் பறைசாற்றுகிறார்களே! அது என்ன?
திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு (Energy Efficiency): இந்த வகை ஆற்றல் சேமிப்பின்படி, ஒரே ஆற்றல் சேவைக்கு (உதாரணம்: ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு வண்டியில் போவதற்கு ஆகும் ஆற்றலை) ஆற்றல் விரையத்தைக் குறைக்க சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் ஆற்றல் செலவைக் குறைக்க முடியும்.
ஒரு புரிதலுக்காக இப்படிச் சொல்ல ஆரம்பிக்கலாம். தாயார் தினமும் சமைத்து வைத்த உணவை சாப்பிடும்போது விரையம் செய்து வந்தததால் நால்வர் மட்டுமே சாப்பிட்டு வந்தனர். அதே நேரத்தில் தாயார் தினமும் சமைத்து வைத்த உணவை சாப்பிடுகையில் விரையம் செய்யாதபோது, மீதம் இருந்த சாப்பாடு கூடுதலாக ஒருவருக்கு உணவிடும் அளவிற்கு இருந்தது. இந்த இரு நிகழ்வுகளிலும், அந்த நால்வரும் சாப்பிட்ட சாப்பாட்டின் அளவு குறையவில்லை. விரையம் செய்வதைத் தவிர்த்ததால் ஒருவர் கூடுதலாகச் சாப்பிடும் அளவிற்கு சாப்பாடு மிஞ்சுகிறது. விரையம் செய்து சாப்பிடுவதைக் காட்டிலும் விரையம் செய்யாமல் சாப்பிடும்போது கிடைத்த ஒருவருக்கான சாப்பாட்டை தாயார் அரூபமாக உருவாக்கியதாக (Virtual Generation) நினைத்துக் கொள்ளலாம் அல்லவா? இதையே திறன் உருவாக்கம் (Capacity Creation) என்று சொல்லி அழைக்கின்றனர். ஆக ஒரே ஆற்றல் சேவையை குறைந்த ஆற்றலைக் கொண்டு செய்வதே திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டுமுறை.
அதாவது ஒரு வண்டியில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயனிப்பவர்களுக்கு “எ” அளவு பெட்ரோல் ஆகிறது என்று வைத்துக் கொள்வோம். இம்முறையை மேற்கொண்டால், வண்டியில் சில மாற்றங்களைச் செய்து அதே நபர்கள் அதே பயணத்தூரத்தை “எ” அளவைக் காட்டிலும் குறைவான பெட்ரோல் செலவில் கடக்கமுடியும். இங்கு இரு நன்மைகள். ஒன்று பயணத்திற்கு ஆகும் பெட்ரோல் செலவை குறைக்கிறோம். அதே நேரத்தில் முன்னுள்ள நிலையை ஒப்பிடும்போது பெட்ரோல் அடுத்த பயணத்திற்கு செலவிடும் வகையில் மிச்சமாகிறது.
இதேபோல் ஒரு மின்மோட்டாரைக் கொண்டு ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்யும்போது “அ” அளவு மின்சக்தி தேவையாகிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த மோட்டாரில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் அதே வேலையை செய்வதற்கு “அ” அளவு மின்சக்தியைக் காட்டிலும் குறைவான மின்சக்தி செலவாகும். குறைகின்ற மின்சக்தியை கிலோவாட் என்ற அலகிலும், எவ்வளவு நேரம் நாம் மின்மோட்டாரைச் செலுத்துகிறோமோ அதை மணிநேரமாக மாற்றி இரண்டையும் பெருக்கல் கணக்கு செய்தால் நாம் எவ்வளவு குறைவாக மின் ஆற்றலைச் செலவு செய்திருக்கிறோம் என்பது தெரியவரும். அந்தளவிற்கு தகுந்தாற்போல் நம் மின் கட்டணம் குறையும். நாம் இப்போது பேசியது மின் ஆற்றலைப் (Electrical Energy அல்லது யூனிட் என நாம் அறிவோம்) பற்றியது. நாம் ஏற்கெனவே நமக்குத் தேவைப்படும் மின்சக்தி (Electrical Power அல்லது எத்தனை வாட் என்று அறிவோம்) குறைவதாகக் கூறினோமே அதை பக்கத்து வீட்டுக்காரர் புதிதாக வாங்கிய மோட்டாருக்கு கொடுக்கப் பயன்படும்.
இம்முறையைச் செயல்படுத்துவதற்குக் கூடுதலாக பண முதலீடு செய்ய வேண்டிவரும். கூடுதலாக முதலீடு செய்யும் பணமும் 1 முதல் 3 வருடங்களுக்குள் மின்சாரச் செலவு குறைவதால் திரும்பப் பெற்று விடுவர். ஆக இம்முறையில் நமக்குப் பயன். இவ்வாறு ஒரு யூனிட் மின்சாரம் சேமிப்பது என்பது இரண்டு, இரண்டரை யூனிட் மின்சாரம் தயாரித்ததற்கு ஈடாகும். இதை மின்துறை பற்றி பரிச்சயமுள்ளவர்கள் அறிவர். அதேபோல் தான் பெட்ரோல், எரிவாயு செலவு குறைந்தாலும் நமக்கும், பிறருக்கும், புவிக்கும் நன்மை.
திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டில் அமெரிக்க அனுபவம்: 1980களிலேயே அமெரிக்க ஆற்றல் துறையின் முன்னணி ஆராய்ச்சியாளர்கள், “திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு பொருளாதாரச் செழிப்பை, ஆற்றல் உத்தரவாத்தை, சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்துகிறது இதுவே ஆற்றல் சிக்கலில் இருந்து மீள்வதற்கான மிகச் சிறந்த வழி” என்று அலசிப் பார்த்துக் கூறினர். அதற்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர். அந்த ஆற்றல் விஞ்ஞானிகள் 1980களிலேயே திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டின் மூலம் பொருளாதாரச் செழிப்பை ஏற்படுத்தும் அமெரிக்க சபை (American Council for Energy Efficient Economy) என்ற லாபநோக்கற்ற அமைப்பை ஏற்படுத்தினர். பெயரைச் சற்று ஆழமாகச் சிந்திக்கவும்!
அமெரிக்க அரசின் ஆற்றல் அமைச்சகத்தின் கீழ் திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு மற்றும் மரபுசாரா ஆற்றல் துறை என்ற அமைப்பு உள்ளது. இதிலும், பெயரில் உள்ள வரிசைக் கிரமம் மிக முக்கியமானது! ஆற்றல் சிக்கலுக்கான முதன்மையான மூலம் திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு தான் பின்னர் தான் மரபுசாரா ஆறறல்களான சூரியஒளி, காற்று போன்றவை. இதைப் பல பத்தாண்டுகளாக அமெரிக்க அரசு அறியும்.
2009-ல் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது செனட்டராக இருந்த ஒபாமா, ஆற்றல் பற்றி பேசிய இரண்டு கருத்துக்கள் முக்கியமானவை:
1. அணுமின்சாரம் எடுக்கப் பயன்படுத்தப்பட்ட அணுஎரிபொருளை (Spent Fuel) பாதுகாப்பாக கழிக்க (dispose) வழியில்லை. அதனால் நமக்கு அணுஉலைகள் மூலமான மின்சாரம் வேண்டாம்!
2. நாம் நம்முடைய தரைவழி வண்டிகளின் டயர்களில் வைக்கிற காற்றை ஒழுங்காக வைத்தாலே அமெரிக்க தேசிய அளவில் செலவாகும் எரிபொருளில் ஒரு சதவீதத்தை மிச்சப்படுத்த முடியும்!
மேற்சொன்ன அமெரிக்க சபை, திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டைப் பற்றி பின்வருமாறு கூறுகிறது:
“இது பயனீட்டாளர் அமைப்பிலிருந்து உருவாகிற மூலமாக (Utility System Source) மதிக்கப்படுகிறது. இது புவி வெப்பம் அடையச் செய்யும் வாயுக்களைக் (Green House Gases)) குறைப்பதோடு பயனீட்டாளர்களின் செலவையும் குறைக்கிறது. புதிய தொழில்கள், வேலைக்கு வழிவகுக்கிறது. பொருளாதாரக் கவலைகள் மற்றும் சுற்றுச் சூழல் மாற்றங்களின் காரணமாக சட்டமன்றங்களும், கட்டுபாட்டாளர்களும் (Regulators) திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டு முறைகளுக்கு முன்னெப்போதும் இருந்திராதவகையில் துணை செய்கின்றனர்”.
இன்றளவும் அவர்கள் திட்டம் வகுத்து 2020-ல் தற்போது செலவழியக் கூடிய ஆற்றலில் 20% வரை சேமிக்க முடியும் என்கின்றனர்.
உலகில் திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டின் முக்கியத்துவம் (Energy Efficiency):
நமக்கு மின்சேமிப்பு என்றால் குண்டு பல்ப்பை CFL பல்ப்பைக் கொண்டு மாற்றுவது பற்றித் தெரியும். மின் மோட்டர்கள்தான் மின்பளுவில் (Electrical Load) முக்கியமான பங்கு வகிப்பவை. தொழிற்சாலைகளில் 70மூ-க்கும் மேலான மின்பளு இவற்றினால்தான். விவசாயத்தில் கிட்டத்தட்ட முழுமையான மின்பளுவும் மின்மோட்டர்களால்தான்.
எப்படிப்பட்ட மின்மோட்டர்களை வாங்குவது, ஒரு பயன்பாட்டிற்கு அதன் சக்தி என்னவாக இருக்க வேண்டும், அதை எந்நேரத்தில் இயக்குவது, அதில் மின்சாரத்தைத் திறம்பட பயன்படுத்த வேறேதும் வழிகள் உண்டா? என்பவை போன்றவற்றை உள்ளடக்கியதுதான் இந்த திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டு முறைகள்.
மோட்டார்களில் ஒரு சிறிய அளவு சேமிப்பு செய்தாலே பெருமளவிலான மின் சக்தியைச் சேமிக்க முடியும். இதை நன்கறிந்து தான் அமெரிக்கா, ஐரோப்பா போன்றவை மின் மோட்டார்களுக்கான தரக்கட்டுப்பாடுகளை கடுமையாக்கி, பெருமளவில் ஆற்றலை சேமித்து வருகின்றன. நம் நாட்டில் இருக்கும் மோட்டார்கள் பயன்படுத்தும் மின்சக்தியைக் காட்டிலும் மிகக் குறைந்த அளவே மின்சக்தியை எடுக்கிற மோட்டார்கள் அந்நாடுகளில் வடிவமைக்கப்படுகன்றன. 1980களில் துவங்கி அமெரிக்கா, ஐரோப்பாவில் திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.
திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டு முறைகளில், மின் ஆற்றல் (Electrical Energy), வெம்மை ஆற்றல் (Thermal Energy), காற்றழுத்தத் தேவைகளுக்கான ஆற்றல்களின் (Air Compressor) தணிக்கை என நுண்மையாக பல ஆற்றல் தணிக்கைகளைச் (Energy Audit) செய்து திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டிற்கு வழிவகுக்க முடியும்!
அமெரிக்காவில் State Policy, Federal Policy, Local Policy என பல்வேறு திட்டங்களை வகுத்து உள்ளூர் அளவிலிருந்து தேசிய அளவுவரை திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டிற்கான வழிவகைகளைத் தேடி இன்றளவும் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். அதில் பெரும் வெற்றியடைகின்றனர்! வீடுகள், சிறுதொழில், விவசாயம், தொழிற்சாலைகள், வணிகம் போக்குவரத்து என்று எல்லாத் துறைகளுக்கும் திட்டம் வகுத்து செயல்பட்டு வருகிறார்கள்.
அமெரிக்கர்களுடைய நெடுநாளைய அனுபவத்தைத் தங்கள் நாட்டிற்குப் பயன்படுத்திக் கொள்ள திட்டம் வகுத்து சீன அரசு பல்லாயிரம் மெகாவாட் மின் சக்தியைச் சேமித்துள்ளது. இப்படி இது பற்றிக் கூறிக் கொண்டே போகலாம்!
உலக நடவடிக்கைகள் இவ்வாறு இருக்க, இந்தியாவிற்கு திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு பற்றித் தெரியாதா?
இந்தியாவில் திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு பற்றிய அறிவு: இந்தியாவில் Indian Institute of Science என்ற உயர்கல்வி நிறுவனம் உள்ளது. அதில் பேராசிரியராக இருந்த மறைந்த முனைவர். அமூல்யா ரெட்டி மற்றும் பிரேசில் போன்ற பல நாடுகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் சர்வதேச ஆற்றல் தேவைக்கான முன்முயற்சி (International Energy Initiative) என்ற அமைப்பைத் துவக்கினர். இன்றுவரை அந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளில் ஆற்றலை எப்படித் திறம்பட பயன்படுத்த முடியும் என்பதைப் பற்றியும், இங்குள்ள குறிப்பான தன்மைகளுக்கு ஏற்றவாறு ஆராய்ச்சிகளும் செய்து அவற்றை வெளியிட்டும் வருகின்றனர்.
இந்தியாவின் தேசிய உற்பத்தித்திறன் கவுன்சில் (National Productivity Council), அமெரிக்காவின் பிரின்சிடன் பல்கலைக் கழகத்தின் ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் துறையைச் சார்ந்த மையம் (Center for Energy and Environmental studies of Princeton University, USA) இரண்டும் இணைந்து இந்தியாவை மையமாக வைத்து அதிகளவில் ஆற்றல் செலவழியும், மோட்டார்களை ஒட்டிய அமைப்புகளில் திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டிற்கான தொழில்நுட்ப பட்டியல் (Technology Menu for Efficient Energy use – Motor Drive System) என்ற பெரும் அறிவுப் பொக்கிஷத்தை வெளியிட்டு உள்ளனர். அதை வெளியிட உதவி செய்த அமைப்புகள் புதுதில்லியைச் சேர்ந்த இந்திய அரசின் தொழில் நுட்பம், தகவல், வருங்கால நிலை மற்றும் அதை ஆராயும் கவுன்சில் (Technology. Information, Forecasting & Assessment council (TIFAC), New Delhi, India) மற்றும் நாம் முன்னர் சொன்ன சர்வதேச ஆற்றலுக்கான முன்முயற்சி (International Energy Initiative, Bangalore, India) ஆகியன.
இந்த தொழில்நுட்ப பட்டியல் 1994 ஆம் ஆண்டிலேயே குறிப்பிடப்படுபவை மிகவும் முக்கியமானவை: “மின்சாரத்திற்கான அதிகரித்த தேவையை கணிசமாக ஈடுசெய்வதற்கு, புதிய மின்நிலையங்களை அமைப்பதைக் காட்டிலும் மின்சாரத்தைத் திறம்படச் செலவழிப்பதே சிறந்த வழி என்று பல்வேறு நாடுகள் கண்டுணர்ந்துள்ளன. அமெரிக்கா, பிரேசில், உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கடைநிலையில் (End use) மின்சார பயனீட்டாளர் இடத்தில் திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான நுண்ணிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அநேக ஆய்வுகளில், தற்போதைய மின்சாரப் பயன்பாடு அல்லது பின்னாட்களில் நிறுவ வேண்டிவரக்கூடிய மின்நிலைத் திறனை குறைந்தபட்சம் 25 சதவீதம் குறைக்க முடியும் என்கின்றன. இவற்றில் மோட்டார் சார்ந்த அமைப்புகளில் மின் சேமிப்பிற்கான சாத்தியப்பாடு மிக அதிகளவு இருக்கிறது.”
“இந்தியாவில் இவ்வாறான மின்மோட்டார் உள்ளிட்ட அனைத்து மின்சாதனங்களின் மின்பயன்பாட்டைத் திறம்பட உபயோகிப்பதற்கான சாத்தியத்தைக் கணக்கிட்ட முயற்சிகளே மிகமிகக்குறைவு. இதற்கான காரணம் நாட்டில் கடைநிலைப் பயனீட்டாளர்களை வகைப்படுத்திய தரவுகள் (Data) இல்லை என்பது தான்”.
அவர்கள் சொன்னவை இன்றளவும் இந்தியாவிற்குப் பொருந்தும். வரவிருக்கும் 18வது இந்திய மின்சக்திக் கணக்கீட்டு அறிக்கையிலும் (Report on 18th Electric Power Survey of India) இதற்கான தரவுகள் இருக்காது என்பது நிச்சயம்!
அமெரிக்காவில் திறம்பட்ட ஆற்றல் பயன்பாடுதான் முதன்மையான ஆற்றல் மூலம் என்று மதிக்கப்படுகிறது. அதனால் அவர்கள் பயனடைந்த விவரங்களைப் பார்த்தால் பிரமிப்பாக உள்ளது! இவ்வளவு அதிமுக்கியமான ஒரு மூலம் (Energy Source) நம் நாட்டில் பொதுவெளிக்கு வராமல் போனது தற்செயல்தானா? இது பற்றி நம் விஞ்ஞானிகளுக்குத் தெரியாதா? அப்படி தெரியவில்லை என்றால் ஏன் ஆற்றல் விஞ்ஞானிகளாக (Energy Scientist) அணுவிஞ்ஞானிகள் காட்சி அளிக்க முயல்கின்றனர்? தங்களது ஆற்றல் மூலம் மட்டுமே சிறந்தது என்று ஏன் கூறுகின்றனர்?
நம் நாட்டில் திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு பற்றிய அறிவைப் பயன்படுத்திக் கொண்ட சில பெருந்தொழில் நிறுவனங்கள், 1999 முதல் 2010 வரையில் தன்னார்வமாக 2461 மெகா வாட் அளவு மின்சாரத்தை சேமித்திருக்கின்றன. இதை சொல்வது இந்திய அரசின் ஆற்றல் துறைதான்! அதாவது மக்கள் வரிப்பணச் செலவு எதுவுமே இல்லாமல் 2461 மெகாவாட் மின் சக்தி உபரியாக்கப்பட்டிருக்கிறது. அதாவது கூடங்குள அணு உலைகளின் மின்சக்தித்திறனைக் காட்டிலும் கூடுதலான மின்சக்தித்திறனை அவர்கள் உபரியாக்கி இருக்கின்றனர்.
இவ்வளவு அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒன்றை கணக்கில் எடுக்காமல் எப்படி அணுஉலைதான் சிறந்தது அதுதான் நமக்குத் தேவை என்கின்றனர் அணுவிஞ்ஞானிகள்?
பிரதமருக்கு இந்த மூலம் (Energy Source) பற்றி எல்லாம் சொல்லப்பட்டதா? Integrated Energy Policyயைத் தீட்டும் Planning Commissionம் முறையின் முக்கியத்துவம் பற்றி பிரதமருக்கு விளக்கியதா? அரசு கவிழ்ந்துவிடும் நிலையில் கூட இந்திய – அமெரிக்க அணு ஒப்பந்தத்தை கையெழுத்திட முனைப்பாக இருந்தனரே!
திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு என்ற மூலத்தைப் பற்றி கணக்கிடக் கூட சரியான தரவுகளே இல்லை என்ற நிலையில், அதில் அரூபமாக ஆற்றல் உருவாக்கத்திற்கான (Virtual Energy Generation) பெருமளவு வாய்ப்பு உள்ள ஒன்றை கணக்கிலேயே எடுக்காமல், பொது வெளிக்குக் காட்டாமல் நம் முன்னாள் குடியரசுத் தலைவரும், ஏவுகணை விஞ்ஞானியுமான அப்துல்கலாமும், இந்நாள் பிரதமரும் பொருளாதார நிபுணருமான மன்மோகன்சிங்கும் அணுசக்தி இல்லாமல் வளர்ச்சிக்கு வழியே இல்லை என்கின்றனர். இதுவா விஞ்ஞானப்பூர்வமான விவாதம்?
- கோபால் (
- ஐன்ஸ்ட்டீன் கோட்பாடு ஆட்டம் காண்கிறது!
- ஒளிரும் புரதங்கள்
- மின்மினிகள்... உயிர் காக்கும் கண்மணிகள்
- காற்றாலை - ஒரு அலசல்
- பிள்ளையார் சிலை பால் குடித்தது எவ்வாறு?
- அசத்தும் அன்ட்ரோயிட் அலைபேசிகள் - அடுத்த தலைமுறைக்கு
- எதிர்மறை சவ்வூடு பரவல் முறையில் நீர்த் துப்புரவு முறை
- சூரிய ஒளியில் இருந்து மின் உற்பத்தி
- இழப்பில்லாமல் மின்சாரத்தைக் கடத்த முடியுமா?
- கிருமியகற்றும் ஒளிவெள்ளம்
- வெப்பத்தை பூட்டிவைக்க இயலுமா?
- கல்லீரல் புத்துருவாக்கம்
- அரிப்பு நரம்புகள்
- முட்டையா...? கோழியா...?
- செவி பாதுகாப்பிற்கு ஒரு புதிய கருவி
- உணவை பகுத்து ஆராயும் காந்தவியல்
- பிடுங்கிய பல்லில் இருந்து ஸ்டெம் செல்கள்
- பெட்ரோலை ஒழித்துக் கட்டவருகிறது லித்தியவாயு
- மனித மரபணுக்களுக்கும் காப்புரிமை
- ஒளி மின் விளைவு – ஓர் அறிமுகம்