கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- இராசேந்திர சோழன்
- பிரிவு: தொழில்நுட்பம்
அணு சக்தியைப் பொறுத்த வரைக்கும் அதை ஆக்கப் பணிகளுக்கே, சமாதானப் பணிகளுக்கே பயன்படுத்துவோம் என்று அடிக்கடி சொல்லி வந்த இந்தியா 1974இல் உலகமே வியக்கும் ஓர் அற்புதமான காரியத்தைச் செய்தது. அந்த வருடம் மே மாதம் 18ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பொக்ரானில் பூமிக்கடியில் ஓர் அணுகுண்டு வெடிப்புச் சோதனையை நிகழ்த்தியது.
அணுவை ஆக்கப் பணிகளுக்கே பயன்படுத்துவோம் என்றும், அழிவு வேலைகளுக்கு அதைப் பயன்படுத்த மாட்டோம் என்றும் பேசிவந்த இந்தியா இப்படி வல்லரசு நாடுகள் போல் அணுகுண்டு வெடிப்புச் சோதனையில் இறங்கியது உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
‘வாய்மையே வெல்லும்’ என்று தன் தேசிய இலச்சினைப் பட்டயத்தில் பொறித்துள்ள இந்தியா, தான் இதுநாள் வரை பறைசாற்றி வந்த கொள்கையைப் பொய்மையாக்கிவிட்டு இப்படி அணுகுண்டு வெடிப்புச் சோதனையில் இறங்கிவிட்டதே என்று இதர நாடுகள் இந்தியாவைச் சந்தேகக் கண்ணோடு பார்க்கத் தொடங்கின.
இதற்கு இந்தியா எவ்வளவோ சமாதானம் கூறினாலும், தற்காப்பு நடவடிக்கைகளுக்காகவே இந்தச் சோதனை, மற்றபடி எந்த நாட்டின் மீதும் வலிந்து போர் தொடுப்பதற்காக அல்ல என்று விளக்கமளித்தாலும் இந்தியாமீது இதர நாடுகள் கொண்டுள்ள சந்தேகத்தைப் போக்க முடியவில்லை. இந்தியா அணு சக்தியை ஆக்கப் பணிகளுக்காகவே, சமாதானத்தை நிலை நாட்டுவதற்காகவே மட்டும்தான் பயன்படுத்தும் என்கிற நம்பிக்கையையும் உறுதிப்படுத்த முடியவில்லை.
இதன் விளைவாக கனடா இந்தியாவோடு கொண்டுள்ள அணுசக்தித் தொழில் நுட்பக் கூட்டுறவை முறித்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா தாராபூர் அணுமின் நிலை யத்துக்குச் செறிவூட்டப்பட்ட யுரேனியம் சப்ளை செய்வதை நிறுத்தியிருக்கிறது அல்லது சுணக்கம் காட்டியிருக்கிறது.
இந்தியா, அழிவு வேலையெனக் கருதப்படும் அணுகுண்டு வெடிப்புச் சோதனை நிகழ்த்தியதற்கும், ஆக்கப் பணியெனக் கருதப்படும் தாராபூர் மின் நிலையத்துக்கு யுரேனியம் சப்ளையை நிறுத்துவதற்கும் என்ன சம்பந்தம் என்று சிலருக்குத் தோன்றலாம்.
சம்பந்தம் இருக்கிறது. அணு உலை இயக்கமும், அணு குண்டு வெடிப்பும், அதன் கோட்பாட்டளவில் சாராம்சத்தில் ஒன்றே என்று ஆரம்பத்திலேயே குறிப்பிட்டோம் அல்லவா...
அதேபோல அணுவிலிருந்து ஆக்க வேலைக்கான ‘வெப்பம்’ தயாரித்தால் அழிவு வேலைக்கான கதிரியக்கக் கழிவுகளும் கூடவே பிறக்கிறது. அணுவை அழிவு வேலைக்கான அணுகுண்டாகத் தயாரித்தால், அதில் ஆக்க வேலைக்கான வெப்பமும் பிறக்கிறது. எனவே ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை என்று ஆகிறது. ஆனால் இரண்டுமே கட்டுப்படுத்த முடியாதது என்பதையும் எப்போதும் நாம் மறந்துவிடக் கூடாது.
தாராபூர் அணு மின் நிலையம் ஆண்டு ஒன்றுக்கு 135 கி.கி. புளூட்டோனியத்தை வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. இதைக் கொண்டு 20,000 டன்கள் TNT கொண்ட அணு ஆயுதங்கள் தயாரிக்கலாம் என்கிறார்கள். இது நாகசாகி ஹிரோஷிமாவில் போடப்பட்ட அணுகுண்டுகளை விட 12 மடங்கு வலிமை கொண்டதாக இருக்கும் என்று சொல்லப் படுகிறது. இதே போக்கில் போனால் இன்னும் சில ஆண்டுகளில் தாராபூர் அணு மின் நிலையத்திலிருந்து மட்டும் 3 முதல் 4 டன் வரையான புளூட்டோனியம் அணுகுண்டு தயாரிப்புக்காக இந்தியாவிற்குக் கிடைத்துவிடும் என்று வல்லுநர்கள் கருதினார்கள்.
ஆனால் இதில் ஒரு சிக்கல். தாராபூர் அணுமின் நிலையத்தில், புளூட்டோனியத்தை மறு பதனம் செய்யும் தொழில்நுட்ப வசதி மிகச் சிறிய அளவிலேயே உள்ளது.
அதிக அளவில் மறுபதனம் செய்ய அதற்கு மேலும் அதிக அமெரிக்க தொழில்நுட்பம் தேவைப்படுகிறது. இதற்கு அமெரிக்கா மறுத்துவிட்டது.
சரி, தேவையான அளவு மட்டும் மறு பதனம் செய்து கொண்டு எஞ்சியதை எங்காவது கொட்டிவிடலாம் என்றால் அபாயகரமான இக்கழிவை எங்கேயும் கொட்டிவைக்க முடியாது என்கிற பிரச்சினை.
ஆக எரிபொருள் பிரச்சினை, கழிவுப் பிரச்சினை எல்லாமு மாகச் சேர்ந்து தாராபூர் அணுமின் நிலையத்தை இறுக்குகிறது.
இந்த நெருக்கடிக்கிடையில் அமெரிக்கா, 1978ஆம் ஆண்டு மார்ச் 10இல் அணு ஆயுத மிகையுற்பத்தித் தடைச் சட்டம் (Non-Proliferation Of Nuclear wepons Act 1978) என்று ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தது. இச்சட்டம், அமெரிக்கா பிற நாடுகளுக்கு அணுசக்தித் தொழில் நுட்பத்தையோ, அணு உலைகளையோ, அல்லது அணு உலைகளுக்கான கருவி களையோ ஏற்றுமதி செய்வதில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறது.
இதன்படி தாராபூர் அணு மின் நிலையத்துக்குத் தொடர்ந்து யுரேனிய எரிபொருள் வழங்கவும், கழிவுகளை அப்புறப்படுத்தவும் தொடர்ந்து அமெரிக்க ஒத்துழைப்பு தேவைப்படுமானால் தாராபூர் அணுமின் நிலையத்தில் சர்வதேச அணுசக்தி முகமை (International Atomic Energy Agency)யின் மேற்பார்வையில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை முன்வைத்தது. இதற்கு இந்தியா இணங்கவில்லை என்று தெரிகிறது.
அணுசக்தி பற்றிய ஒப்பந்தங்கள், நடவடிக்கைகள் எல்லாமே மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதால் இப்போது தாராபூர் அணுமின் நிலையத்தின் கதி என்ன என்பது முழுமையாக வெளியே தெரியாமல் இருக்கிறது.
ஆக, 1974 பொக்ரான் அணுகுண்டு சோதனை வெடிப்பு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தியது. இருந்தும், இதற்கு 24 ஆண்டுகள் கழித்து 1998 மே 1, 13 தேதிகளில் அதே ராஜஸ்தான் பாலைவனம் பொக்ரான் பகுதியில் இந்தியா வாஜ்பேயி ஆட்சிக்காலத்தில் மீண்டும் இருஅணுகுண்டு வெடிப்புச் சோதனைகளை நிகழ்த்தியது.
இந் நடவடிக்கைகளை வைத்து, தன்னோடு போட்டுக்கொண்ட தாராபூர் ஒப்பந்தத்திற்கு இந்தியா துரோகம் செய்து விட்டது என்று அமெரிக்கா கூறுகிறது. அமெரிக்கா வாக்குப்படி நடந்துகொள்ள வில்லை என்று இந்தியா குமுறுகிறது.
இதில், 1968இல் உலக நாடுகள் சேர்ந்து உருவாக்கிய அணு ஆயுத மிகையுற்பத்தித் தடை ஒப்பந்தத்தில் (Treaty on the Non-proliferation of Nuclear Weapons of 1968) இந்தியா கையெழுத்திட வில்லை. ஆகவே, இந்தியா மேல் எந்தவித குற்றச்சாட்டையும் சுமத்த முடியாது என்று ஸ்வீடன் நாட்டின் முன்னாள் இந்தியத் தூதுவரான ஆல்வா மிர்தால் என்ற பெண்மணி கூறுகிறார். என்றாலும் அணுகுண்டு வெடிப்பில் சண்டைக்கான வெடிப்பு, சமாதானத்துக்கான வெடிப்பு என்று தனித்தனியாகப் பார்க்கு மளவுக்கு இரண்டிலும் சாராம்சத்தில் ஒன்றும் வேறுபாடு கிடையாது. இரண்டும் ஒன்றுதான். குண்டு குண்டுதான் என்பதும் இவர் கருத்து.
வாக்கைக் காப்பாற்றத் தவறியது யார் என்பதில் பிரச்சனை இருந்தாலும் எப்படியோ இந்தியா அணுகுண்டு வெடித்து விட்டது. வெடித்துச் சோதனை நிகழ்த்தியதோடு இல்லை. மேற்கொண்டும் அணுகுண்டு தயாரித்து வைத்திருக்கிறது. தயாரிப்பில் இறங்காமல் சும்மா தமாசுக்கா சோதனை. ஆக இந்தியாவும் அணுகுண்டு தயாரித்து வைத்திருக்கிறது. இப்போது இந்தியாவிடம் சுமார் 20 (பாகிஸ்தானிடம் 4) அணுகுண்டுகள் இருக்கலாம் என்று 8-7-88 இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது...
சரி, இந்தியா ஏன் அணுகுண்டு தயாரித்தது? இதுவரை அது சமாதானம் பற்றிப் பேசி வந்ததெல்லாம் சும்மாவா. அல்லது சந்தர்ப்பவசத்தால் இப்படித் தயாரித்து வெடித்து விட்டதா..? அல்லது அப்படியே தயாரித்து வெடித்தால்தான் அதில் என்ன தவறு..? என்ற சந்தேகங்கள் நமக்கே கூட எழலாம்.
இந்தியா, அணுசக்தியை ஆக்கப் பணிகளுக்குத்தான் பயன் படுத்துவோம், சமாதானப் பணிகளுக்குத்தான் அதை வெளிப் படுத்துவோம் என்று ஆயிரம்தான் சொன்னாலும், அண்டைப் பக்கத்திலுள்ள சிறு நாடுகளை அச்சுறுத்தவோ, அல்லது அந் நாடுகளைவிட தான் ராணுவ பலத்தில் உயர்ந்தவன் என்று காட்டிக்கொண்டு மேலாதிக்கம் செலுத்தவோ, அல்லது சிறு யுத்தம் வந்தால் சமாளிக்கவோ இந்த அணுகுண்டு வெடிப்புச் சோதனையில் இறங்கியிருக்கலாம். அணுகுண்டும் தயாரித்து வைத்திருக்கலாம்.
இல்லாவிட்டால் சர்வதேச அந்தஸ்து கருதியோ, அல்லது உள்நாட்டில் உள்ள நிர்ப்பந்தம் - நிர்ப்பந்தம் என்றால் ஆளும் கட்சி அதன் பின்னால் உள்ள ஆதிக்க சக்திகளின் நிர்ப்பந்தம் தான் - காரணமாகவும் இப்படிப்பட்ட காரியங்களில் இறங்கி யிருக்கலாம்.
எது எப்படியானாலும் ஏதோ ஒரு யுத்த நோக்கம் கருதியோ அல்லது யுத்த எதிர்பார்ப்பு நோக்கம் கருதியோதான் இந்தியா இந்த வேலையில் இறங்கியிருக்கிறது என்பது தெளிவு.
இந்தியாவுக்கு இந்த யுத்த அவசியம் அல்லது யுத்த எதிர்பார்ப்பு அவசியம் எங்கிருந்து வந்தது? அதன் பின்னணி என்ன? இந்தியா இப்படி அணுகுண்டு வெடிப்புச் சோதனை நிகழ்த்தவும் தயாரிக்கவும் காரணமானவர்கள் யார்? அல்லது காரணமான சக்திகள் எவை என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.
எனவே, இதற்குப் பின்னணியாக உள்ள இந்திய அணுசக்திக் கமிஷனின் வரலாற்றை ஓரளவு பார்த்துக்கொண்டு பிறகு அடுத்துச் செல்வோம்.
முதல் அணுசக்திக் கமிஷன்
இந்தியாவில் அணுசக்தி விஞ்ஞான ஆராய்ச்சியின் வளர்ச்சி 1930க்கும் 48க்கும் இடைப்பட்ட ஆண்டுகளிலிருந்து தொடங்குகிறது. இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் டாக்டர் சர்.சி.வி. ராமன், சர் ஜகதீச சந்திரபோஸ் மற்றும் மெஹ்னாத் சாகா ஆகிய மூன்று அறிவியல் அறிஞர்களும் அணுசக்தி துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளில் இறங்கியிருந்தார்கள்.
முன்னதாக அறிவியல் மேதை ஐன்ஸ்டினின் பாராட்டைப் பெற்ற போஸ் - ஐன்ஸ்டின் புள்ளியியலை நிறுவிய எஸ்.என். போஸ் எனப்படும் சத்திய நாராயண போஸ் என்பாரும் அணு இயற்பியல் ஆய்வுகளில் பல அடிப்படை உண்மைகளை நிறுவினார்.
சர் சி.வி.ராமன் பங்களூரில் இருந்த இந்திய அறிவியல் கழகத்தின் (Indian Institute of Sciences) முதல் இந்திய இயக்குநர் ஆனார்.
மெஹ்னாத் சாகா அணுக்கரு இயற்பியல் ஆராய்ச்சிக்கென முதல் இந்திய கழகத்தை (First Indian Institute of Nuclear Physics) கல்கத்தாவில் நிறுவினார். இவரது முயற்சியால், இவரது மாணவரும், பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் சைக்ளோட்ரானிக் விஞ்ஞானத்தில் டாக்டர் பட்டம் பெற்றவருமான பி.டி. நாக் சௌத்ரி என்பவர், முதல் சைக்ளோட்ரானை 1942இல் இந்தியாவுக்குக் கொண்டுவந்தார்.
இந்த முயற்சிகளுக்கெல்லாம் பின் புலமாயிருந்த டாக்டர் ஹோமி. ஜே. பாபா, 1944இல் டாடா அடிப்படை ஆய்வுக் கழகத்தை (Tata Institute of Fundamental Research -TIFR) நிறுவினார். இந்த முயற்சிகள் யாவும் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் என்பதைக் கவனிக்க வேண்டும்.
அதோடு முக்கியமான ஒன்று டாக்டர் ஹோமி ஜே. பாபா என்பவர், இந்திய அணுசக்தியின் வரலாற்றில் அதன் முக்கியமான நபர்களில் ஒருவர். இவர், இந்தியா ஏகபோகத் தொழில் குடும்பங்களில் ஒன்றான டாடாவின் சகோதரர் மகன். இவரை மேல் நாடுகளுக்கு அனுப்பியதும், செலவு செய்து படிக்க வைத்ததும் டாடாதான்.
இவர் படித்து முடித்ததும் டாடா என்ஜினியரிங் நிறுவனங்களில் பாபா முதன்மை ஆராய்ச்சியாளராகப் பணியாற்றுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இவருடைய ஆராய்ச்சிகள் சுதந்திரமாகவும் தங்கு தடையின்றியும் நடைபெற வேண்டும் என பங்களூர் இந்திய அறிவியல் கழகத்தில் இவருக்கென ஒரு தனி மையமும் உருவாக்கப் பட்டது. இதன் பிறகுதான் பாபாவின் தனிப்பட்ட வேண்டு கோளின் பேரில், இயற்பியல் துறையிலும், கணிதத் துறையிலும் பிரத்யேக ஆய்வுகளுக்கென டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் TIFR உருவாக்கப்பட்டதும்.
இப்படி உருவாக்கி வளர்க்கப்பட்ட ஆராய்ச்சிகள், இந்தியா சுதந்திரம் பெற்றபின், நிர்வாக வரையறைகள் அதிகாரக் கெடு பிடிகள், அல்லது மந்தங்கள், அனாவசிய தலையீடுகள், காரணமாகத் தடங்கல் படக்கூடாது எனவும், இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் சுதந்திரமாகச் செயல்பட வேண்டுமெனவும் இதற்கான ஒரு தனி கமிஷன் அமைத்து அந்தக் கமிஷனின் கீழ் இந்த விஞ்ஞானிகள் செயல்பட வேண்டும் எனவும் பாபா கருதினார்.
அதன்படி இந்திய அரசு 1948 ஆகஸ்டு 10ஆம் தேதியன்று வெளியிட்ட ஓர் அறிக்கையின் பேரில், முதல் இந்திய அணுசக்திக் கமிஷன் (Atomic Energy Commission - AEC) 1948இல் தோற்றுவிக்கப்பட்டது.
மூன்றே மூன்று நபர்கள் அடங்கிய இந்தக் கமிஷனில், கமிஷனின் தலைவர் டாக்டர் ஹோமி ஜே. பாபா. மற்ற இரு உறுப்பினர்கள் (1) டாக்டர் கே.எஸ்.கிருஷ்ணன், (2) டாக்டர் எஸ்.எஸ்.பட்நாகர். இவரே இதன் செயலாளரும் ஆவார்.
ஆக, இந்தியா அணுசக்திக் கமிஷன் என்பது பாபாவைத் தலைவராகக் கொண்டும் கூட இன்னோர் உறுப்பினர் செயலாளர், இன்னோர் உறுப்பினர் ஆகிய மூன்று பேரை மட்டுமே கொண்டு உருவாக்கப்பட்டது. கமிஷனின் விதிகளின்படி, இது பிரதம அமைச்சரின் வழிகாட்டுதலின்படி நடக்கவேண்டும் என்று சொல்லப்பட்டது.
அப்போது பிரதமராயிருந்தவர் பண்டித ஜவஹர்லால் நேரு. நேரு மிகச் சிறந்த அறிவாளி, மேதை என்று பலராலும் பாராட்டப் பெற்றவர்தான் என்றாலும், அணுசக்தி அறிவியல் என்பது ஒரு பிரத்யேக அறிவியல். இப்படிப்பட்ட ஒவ்வொரு பிரத்தியேக அறிவியலிலும் ஒவ்வொரு பிரதமரும் வல்லுநராக இருக்க முடியாது. இருக்க முடியும் என்பதும் சாத்தியமில்லை. ஆகவே விதிகளின் படி கமிஷன் பிரதமரின் வழி காட்டுதலின் படி இயங்க வேண்டும் என்று இருந்தாலும், கமிஷன் என்பது குறிப்பிட்ட அந்த அணுசக்தி அறிவியல் வல்லுநர்களைக் கொண்ட குழு என்பதால் அந்த கமிஷனின் வழிகாட்டுதலுக்கு இணங்கவே பிரதமர் நேரு செயல்பட வேண்டியிருந்தது. செயல்பட்டார் என்பதே உண்மை.
அதோடு, பிரதமராயிருந்தவர் அரசியல் கொள்கைகளுக்கு ஏற்ப, அணுசக்தியைப் பயன்படுத்தவேண்டும் என்று கமிஷனுக்கு ‘கொள்கை’ வழி காட்டுநராக மட்டுமே இருக்க முடியுமே தவிர, அணுசக்தியின் உள் தொழில் நுட்ப;ம் ஏதும் தெரிந்திருக்கக் கூடியவராக இருக்கமுடியாது என்பதால் அதற்கான திட்டங்கள் தீட்டுவதிலும், நிதி ஒதுக்கீடு செய்வதிலும் அணுசக்திக் கமிஷன் என்ன சொல்கிறதோ அதற்கு இணங்கிப் போகக்கூடியவராகவே இருப்பார், இருந்தார்.
இவ்வாறாக, இந்திய ஏகபோகத் தொழில் குடும்பங்களின் உதவியோடு படித்த, அப்படிப்பட்ட குடும்பங்களின் உறவினரான டாக்டர் ஜே. ஹோமி பாபாவின் திட்டங்களுக் கெல்லாம் நேருவும் அதன் மூலம் இந்திய அரசும் வளைந்து கொடுத்து வந்த வரலாறுதான் இந்திய அணுசக்தித் துறையின் வரலாறு.
அதாவது சுருக்கமாக, இந்திய மக்களின் கோடானு கோடி ரூபாய் வரிப் பணம், டாக்டர் ஹோமி. ஜே. பாபா என்கிற தனி நபரின் விருப்பங்களுக்கு ஏற்பத் திட்டமிடப்பட்டது, செலவிடப் பட்டதுதான் இந்திய அணுசக்தித் துறையின் வரலாறு என்பதை மட்டும் நாம் ஞாபகத்தில் கொண்டால் போதும்.
இரண்டாவது அணுசக்திக் கமிஷன்
சுதந்திர இந்தியாவில், அறிவியல் ஆய்வுகளுக்காக உள்ள அரசுத் துறை இந்திய அறிவியல் ஆய்வுத் துறை (Department of Scientific Research) இதனுடைய அறிவிப்பின்படிதான் முதல் அணுசக்திக் கமிஷன் தோற்றுவிக்கப்பட்டது. இந்த அணுசக்திக் கமிஷன், அணுசக்தித் துறையில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளவும், செயல்படவும், அதற்கான பிரத்தியேக நிதி ஒதுக்கீடுகளை வசதிப்படுத்தவும், அணுசக்திக் கென்று பிரத்தியேகத் துறை தேவைப்பட்டது. அதன்படி (Department of Atomic Energy - DAE 1954) ஆகஸ்டில் தோற்றுவிக்கப்பட்டது.
கூடவே, முதல் அணுசக்திக் கமிஷன் தோற்றுவிக்கப்பட்ட 10 ஆண்டுகளுக்குள் அணுசக்திக் கமிஷனின் பணிகளை மேலும் விரிவாக்கவும் வலுப்படுத்தவும் இரண்டாவது அணுசக்திக் கமிஷன் 1958 மார்ச் 1இல் நிறுவப்பட்டது. அதாவது முதல் கமிஷனோடு சேர்த்து இரண்டாவது ஒரு கமிஷன் அல்ல. முதல் கமிஷனையே, மறு நிர்மாணம் செய்து இரண்டாவது கமிஷன் உருவாக்கப்பட்டது.
இந்தக் கமிஷனுக்குப் புதிய சட்டத்தின்படி முழு நிர்வாக அதிகாரமும் நிதி அதிகாரமும் வழங்கப்பட்டது. இதன்படி,
1) அணுசக்திக் கமிஷனின் தலைவரும் அணு சக்தித் துறையின் செயலாளரும் ஒரே நபராகவே இருப்பார். அவர் பாபாவாகவே இருப்பார்.
2) இந்த அணுசக்திக் கமிஷன் முழு நேர, மற்றும் பகுதி நேரப் பணியாளர்களைக் கொண்ட மூன்று உறுப்பினர்களுக்குக் குறையாமலும் 7 உறுப்பினர்களுக்கு அதிகப்படாமலும் இருக்கும்.
3) குழுவை மூன்றுக்கு மேல் ஏழுக்குள் எத்தனை உறுப்பினர்களைக் கொண்டதாகவும் அமைப்பது கமிஷன் தலைவரின் அதாவது ‘பாபா’வின் விருப்பத்தைப் பொறுத்தது.
4) இந்தத் தலைவர் பாபா, இந்தியப் பிரதமர் நேரு ஒருவருக்கு மட்டுமே கட்டுப்பட்டவர், பதில் சொல்லக் கடமைப் பட்டவரே தவிர வேறு யாருக்கும் கடமைப்பட்டவர் அல்ல.
5) கமிஷனின் எந்தத் திட்டங்களும், சிபாரிசுகளும், நிதிக் கோரிக்கைகளும் எல்லாமுமே தலைவர் பாபாவின் மூலமே அரசுக்கு அதாவது பிரதமருக்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
6) கமிஷனின் இதர உறுப்பினர்களின் ஆலோசனைகளை நிராகரிக்கவோ, மறுக்கவோ தலைவர் பாபாவுக்கு முழு அதிகாரம் உண்டு.
7) கமிஷனின் நிதி மற்றும் நிர்வாகத்தை கவனிக்கும் பொறுப்பிலுள்ள உறுப்பினர் மட்டும், அதுவும் நிதி சம்மந்தப்பட்ட விஷயங்களில் மட்டும், கமிஷனின் கருத்தைப் பிரதமரின் பார்வைக்குக் கொண்டு செல்லலாம்.
8) இந்தக் கமிஷன் தனக்குத் தேவைப்படும்போது, தேவைப்படும் புதிய சட்டங்களைத் தானாகவே உருவாக்கிக் கொள்ளலாம்.
9) இந்தக் கமிஷன், தலைவர் பாபா எப்போது எங்கு கூடவேண்டும் என்று விரும்புகிறாரோ அப்போது இது அங்கு கூடும்.
என்று, இப்படித் தலைவர் பாபாவுக்கு வானளாவிய அதிகாரங்கள் வழங்கி இரண்டாவது கமிஷன் மறுசீரமைக்கப் பட்டது. ஆக டாக்டர் பாபா அணுசக்திக் கமிஷன் தலைவராகவும், அணுசக்தித் துறைச் செயலாளராகவும் ஆனார், இதுவல்லாமல் தனது குடும்பம் சார்ந்த சுயேச்சை நிறுவனமாக TIFR க்கும் அவரே இயக்குநராக இருந்தார்.
இதன்மூலம் இக்காலப் பகுதியில் பாபாவே, இந்திய அணுசக்தி நிறுவனத்தின் பேரரசராகத் திகழ்ந்தார் என்று சொல்லப்படுகிறது.
அதோடு, அணுசக்தி பற்றிய ஆய்விலும், அணுசக்தியின் எதிர்காலத் திட்டங்களிலும் பிரதமர் நேரு முழுக்க முழுக்கவும் பாபாவைச் சார்ந்து இருந்ததால், பாபாவுக்கும் நேருவுக்குமான உறவு மிகவும் நெருக்கமாகவும் இருந்தது. நேருவுக்கு அடுத்தப்படியாக இந்தியாவின் இரண்டாவது குடிமகனாக பாபா ஆனார். நேருவை பாபா ‘சகோதரனே’ என்று விளிக்கு மளவுக்கு அவர் நேருவிடம் உரிமை பெற்றிருந்தார். இப்படிப் பட்ட உரிமையின்மூலம், நேருவின் தலைமையில் இருந்த இந்திய அணுசக்தித் துறை முழுக்க முழுக்க பாபா என்கிற ஏகபோகத் தொழில் குடும்பங்களைச் சார்ந்த ஒரு தனி நபரின் தலைமையில் இயங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
இதன் விளைவாக, பாபாவின் செல்வாக்கை வைத்து, தனது சிற்றப்பாவும், ஏகபோகத் தொழில் குடும்பங்களில் ஒன்றான டாடா நிறுவனத்தின் தலைவருமான டாட்டாவை நேருவிடம் சொல்லி இந்திய அணுசக்திக் கமிஷனில் உறுப்பினராகவும் ஆக்கிக் கொண்டார். இதற்காகப் பிரதமர் நேருவின் பலகீனங்களைப் பயன்படுத்திக் கொண்டு அவரை இதற்கு இணங்கவைக்கச் சில மறைமுக உத்திகளும் கடைப்பிடிக்கப்பட்டன என்றும் சொல்லப்படுகிறது.
ஆக, ஏகபோகத் தொழில் குடும்பங்களைச் சார்ந்த சீமான் பாபாவின் முன்முயற்சியால் உருவாக்கப்பட்ட முதல் அணுசக்திக் கமிஷன் மறு நிர்மாணத்தின் மூலம் கிட்டத்தட்ட பாபாவின் தனிச் சொத்தாகவே ஆக்கப்பட்டது. அதன்மூலம் பாபாவே இந்திய அறிவியல் உலகத்தின் மூடிசூடா மன்னராகவும் ஆக்கப்பட்டார்.
(தொடரும்)
- இராசேந்திர சோழன்
- விவரங்கள்
- இராசேந்திர சோழன்
- பிரிவு: தொழில்நுட்பம்
இந்திய அணுசக்தித் திட்டம்
அணுசக்தியை எந்த நாளிலும் அழிவு வேலைகளுக்குப் பயன்படுத்த மாட்டோம். அதை ஆக்க வேலைகளுக்கும், சமாதானப் பணிகளுக்கும் மட்டுமே பயன்படுத்துவோம் என்று திடமான உறுதியான ஓர் அணுக் கொள்கையைக் கொண்டிருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் ஒரு நாடு இந்தியா.
அணு ஆராய்ச்சியோ, அணுசக்தி நிலையங்களோ, அதையொட்டிய திட்டங்களோ, அனைத்தும் சமாதானத்தையே இலட்சியமாகக் கொண்டவைகளே அன்றி வேறு எந்த அழிவு நோக்கத்தையும் இலட்சியமாகக் கொண்டதல்ல என்று மீண்டும் மீண்டும் அடித்துக் கூறி வந்த ஒரு நாடு இந்தியா.
அதோடு உலகம் பூராவும் சமாதானத்தைப் பரப்புவதையே இலட்சியமாகக் கொண்ட சமாதானப் புறாவையே முதல் பிரதமராகவும் கொண்டிருந்த ஒரு நாடு இந்தியா.
இந்த நாடு 1947 சுதந்திரத்துக்குப் பின் ஒவ்வொரு துறையிலும் சுயமான வளர்ச்சியை நோக்கி முன்னேறி எல்லா துறையிலும் தன்னிறைவு பெறுவதற்கான பல திட்டங்களைத் தீட்டியது. இவ்வாறே தனது அணுசக்திக் கொள்கைக்கேற்ப அணுசக்தித் துறையிலும் முன்னேற திட்டங்கள் தீட்டப்பட்டன.
1960 ஆண்டு, அதாவது சுதந்திரம் பெற்று 13 ஆண்டுகள் கழித்து இந்திய அணுசக்திக் கமிஷன், திட்டக் கமிஷனுக்கு ஒரு வடிவமைப்பைத் தந்தது. இதன்படி இந்தியாவில் அணு சக்திக்காக எங்கெங்கே என்னென்ன வளங்கள் உள்ளன, அதையொட்டி எங்கெங்கே அணுசக்தி நிலையங்கள் நிறுவலாம் என்று ஆலோசனை வழங்கியது.
கூடவே இப்படி நிறுவப்படும் அணுசக்தி மூலம் கிடைக்கும் அணுமின் சக்தி, இதர அனல், புனல் மின் நிலையங்கள் மூலம் பெறப்படும் மின்சக்திக்கு இணையாக உற்பத்திச் செலவு ஏறக்குறைய ஒரே சமமாயிருக்கும் என்பதையும் அது சுட்டிக் காட்டியது.
எனவே, திட்டக் கமிஷன், அணுசக்திக் கமிஷனின் ஆலோசனையை ஏற்று, அதன்படி அரசுக்கு சிபாரிசு செய்து நாட்டில் அணுசக்தி நிலையங்கள் நிறுவ ஏற்பாடு செய்தது.
இப்படி அணுசக்தி நிலையங்களை நிறுவ, அரசு தெம்போடு அங்கீகாரம் அளித்ததற்கு முக்கியமான காரணங்கள் பல.
1) இந்தியாவில் டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தில் (Tata Institute of Fundamental Research - TIFR) பணியாற்றிப் பயிற்சி பெற்ற திறமையும் ஆர்வமும் மிக்க விஞ்ஞானிகள் இருந்தார்கள்.
இவர்கள் ஏற்கெனவே அணுசக்தி பற்றி, அணு உலைகள் பற்றி சொந்தமாகப் பல ஆராய்ச்சிகள் செய்து இரண்டு சோதனை உலைகளையும் நிறுவியிருந்தார்கள். ஓர் உலை அப்சரா (APSARA) . இன்னொன்று ஜெர்லினா (ZERLINA) .இத்துடன் கனடா தொழில்நுட்பக் கூட்டுடன் சைரஸ் (CIRUS) என்கிற உலையையும் நிறுவியிருந்தார்கள். எனவே, இது அணுசக்தித் தொழிலுக்குப் போதுமான தொழில் நுட்பத்தையும், தொழில் நுட்பம் தெரிந்த விஞ்ஞானிகளையும் பெறுவதற்கான நம்பிக்கை அளித்தது.
2) பீஹார் மாநிலத்தில் ஜடுகுடா பகுதியில் யுரேனியப் படிவுகளும், கேரள மாநிலத்தில் மோனசைட் மணல் பகுதியில் தோரியப் படிவுகளும் ஏராளமான அளவில் படிந்திருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டிருந்தது. இது அணு உலைகளுக்கான எரிபொருள் பிரச்சினையைத் தீர்ப்பதாக இருந்தது.
3) அப்போதைய சூழ்நிலையில், அதாவது இந்திய மண்ணில் புதைந்துள்ள நிலக்கரி மற்றும் எண்ணெய் வளங்கள் முழுதாக ஆராயப்படாமலும், கண்டுபிடிக்கப்படாமலும் இருந்த சூழ்நிலையில் இந்த இயற்கை வளங்கள் இன்னும் 20, 25 ஆண்டுகளுக்குத்தான் வரும் என்று அணுசக்திக் கமிஷன் கூறியிருந்தது. எனவே மாற்று வழிகளில் சக்தியைத் தேடும் அவசியமும் அந்த மாற்று அணுசக்தியைத் தவிர வேறெதுவும் இல்லை எனவும் நம்பப்பட்டது.
4) ஆற்றல் தயாரிப்புக்கு இதர நிலக்கரி, பெட்ரோல், டீசல் எரிபொருள்களைவிட அணு ஆற்றலுக்கு மிகக் குறைவான எரிபொருளே தேவைப்பட்டது. (1 கிலோ யுரேனியம் - 2000 டன் நிலக்கரிக்கு சமம் இல்லையா). எனவே இது எரிபொருள் சிக்கனத்துக்கு வழி கோலும் எனச் சொல்லப்பட்டது.
5) அப்போதைய சூழ்நிலையில் சுதந்திர இந்தியாவின் ‘சுயமான தொழில் வளர்ச்சிப் போக்கிற்கு’ அனல், புனல் நிலையங்கள் மூலம் கிடைத்த மின் சக்தி போதுமானதாக இல்லாமல் பற்றாக்குறையாக இருந்தது. எனவே இந்த வளர்ச்சிக்கு அதிகமான மின்சக்தியும் தேவைப்பட்டது.
இப்படிப்பட்ட பல்வேறு காரணங்களால் ‘சமாதான காரியங்களுக்கே அணுசக்தியைப் பயன்படுத்தும் கொள்கை கொண்ட இந்தியா அணுசக்தி நிலையங்கள் அமைக்க திட்டங்கள் தீட்டியது.
இத்திட்டம் மூன்றுவித படிநிலை வளர்ச்சிகளைக் கொண்டதாக இருக்கும் என்று சொல்லப்பட்டது.
படி ஒன்று : இது இயற்கை யுரேனியத்தை எரிபொருளாகக் கொண்ட கனநீரை முறைப்படுத்தியாகப் பயன்படுத்தும் அணு உலைகளைக் கொண்டதாக இருக்கும். இவ்வுலைகளின் கழிவுகளிலிருந்து அதிகமான அளவு புளூட்டோனியம் கிடைக்கும். இப்புளூட்டோனியத்தைக் கொண்டு அதை எரிபொருளாகப் பயன்படுத்தும் பரிசோதனை வேக ஈனுலைகளும் இதே காலத்தில் நிறுவப்படும். இது 1970 - 80 ஆண்டுக்காலப் பகுதிகளில் செயல்படுத்தப்படும்.
படி இரண்டு : இது மேற்கூறிய இயற்கை யுரேனிய எரிபொருள் உலைகளிலிருந்தும், பரிசோதனை வேக ஈனுலை களிலிருந்தும் பெறப்படும் தோரியத்தைக் கதிரியக்கமூலமாக வேக ஈனுலைகளில் யுரேனியம் - 233ஐ ஈனுவதாக அதை எரிபொருளாகப் பயன்படுத்துவதாக இருக்கும். கூடவே, மேற்கூறிய இரு வகை அணு உலைகளின் அனுபவமும் தோரியம் சுழற்சியைப் பிரதானமாகக் கொண்டதாக அமையும் வகையில் சோதனை உலைகளும் நிறுவப்படும். இது 1980 - 85 காலப் பகுதியில் செயல்படுத்தப்படும்.
படி மூன்று : இது 1985ஐத் தாண்டிய காலப் பகுதியைக் கொண்டதாக இருக்கும். இக்காலப் பகுதியில் நான்கு வகையான அணு உலைகள் செயல்பாட்டில் இருக்கும். 1. இயற்கை யுரேனிய எரிபொருள் அணு உலை. 2. முன்னேறிய அணு உலை, 3. புளூட்டோனிய எரிபொருளைக் கொண்ட வேக ஈனுலை, 4. தோரியம் சுழற்சியைப் பயன்படுத்தும் ஈனுலை.
ஆகவே இவ்வாறாக இந்திய அணுசக்தி வளர்ச்சி, அதாவது சமாதானப் பணிகளுக்கான அணுசக்தி வளர்ச்சி இருக்கும் என்று திட்டமிடப்பட்டது அல்லது எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்தத் திட்டம் எந்த அளவுக்கு நிறைவேறியது. இடையில் இந்தத் திட்டத்திற்கு நேர்ந்த கேடு அல்லது இடையூறு என்ன? இந்தியாவின் அணுசக்திக் கொள்கை என்ன ஆயிற்று என்பதெல்லாம் மிகவும் சுவாரஸ்யமான திகைப்பூட்டும் விஷயங்கள். இதுபற்றி பின்னால் பார்ப்போம்.
அதற்கு முன் இந்தத் திட்டத்தில் நிறைவேறிய அணுமின் நிலையங்கள் எவை எவை? அவை எங்கெங்கு நிறுவப்பட்டு எவ்வாறு செயல்படுகின்றன என்று பார்த்துக் கொண்டு மேலே செல்வோம்.
முதல் அணுமின் நிலையம்
இந்தியாவின் முதல் அணுமின் நிலையம் சர்வதேச முட்டாள்கள் தினத்தன்று, அதாவது 1969 ஏப்ரல் முதல் தேதியன்று செயல்படத் துவங்கியது. இது மகாராஷ்டிரா மாநிலத்தின் மேற்குக் கடற்கரை யோரத்தில் பம்பாய்க்கு வடக்கே சுமார் 100 கி.மீ. தொலைவில் தாராபூருக்கு அருகில் அமைந்துள்ளது. எனவே இது தாராபூர் அணுசக்தி நிலையம் என அழைக்கப்படுகிறது.
இது ஏற்கெனவே இந்திய அரசு திட்டமிட்ட, இந்திய விஞ்ஞானிகள் வடிவமைத்த அப்சரா முறையோ, ஜெரிலினோ முறையோ, அல்லது கனடத் தொழில்நுட்பக் கூட்டுடன் அமைந்த சைரஸ் முறையோ அல்லாமல் முற்றிலும் மாறுபட்டு, அமெரிக்காவிடமிருந்து கடன் வாங்கிப் பெறப்பட்ட அணு உலைகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டது. இந்நிலையத்தில் உள்ள இரண்டு உலைகளும் ஒவ் வொன்றும் 190 மெ.வா. உற்பத்தித் திறன் கொண்டவை.
இதற்கான, அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்குமான இரு தரப்பு பரஸ்பர ஒப்பந்தம், 1963 ஆகஸ்டு 8இல் போடப்பட்டது. ஒப்பந்த அடிப்படைகள் பற்றியதாக இது கையெழுத்திடப் பட்டாலும், உண்மையாக தாராபூர் அணு உலைக்கு செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிபொருளை அமெரிக்க அணுசக்திக் கமிஷன் இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்கான ஷரத்துகள் அடங்கிய ஒப்பந்தம் 1966 மே 17இல் கையெழுத்தாகியது.
இந்த ஷரத்துகளில் மிகவும் முக்கியமானது தாராபூர் அணு மின் நிலையம் எவ்வளவு காலம் இயங்குகிறதோ அவ்வளவு காலத்துக்கும் அமெரிக்கா செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை எரிபொருளாக இந்த நிலையத்துக்கு விற்பனை செய்யும் என்பதாகும்.
இந்நிலையம் தன் மின் உற்பத்தியை ஏப்ரலில் துவங்கினாலும், முழுமையான உற்பத்தி அக்டோபரில்தான் கிடைக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால் அக்டோபர் கடந்து ஒரு ஆண்டுகாலம் ஆகியும் உற்பத்தி முழுமையாகக் கிடைக்கவில்லை. 1970 நவம்பர் வாக்கில்தான் நிலையம் ஓரளவு முழுமையாகச் செயல்படத் துவங்கியது. அதற்குப் பிறகு ஆறு ஆண்டுகள் வரை 1970 - 76க்குள் மிகப் பெரியதும் சிறியதுமான 242 மாற்றங்கள் அணு உலையில் செய்யப்பட்டன. மிக மோசமான தொழில் நுட்பம் கொண்ட இவ்வணு உலையை எப்படியாவது இயங்க வைக்க வேண்டும் என 1977 வாக்கில் மேலும் 58 மாற்றங்கள் செய்யப்பட்டன.
இவ்வளவுக்குப் பிறகும் 1980ஆம் ஆண்டு வாக்கில் உலையில் ஏற்பட்ட ஒரு கசிவினால் அபாயகரமான கதிரியக்கம் வெளிப்பட்டது. இது மிகச் சாதாரண சிறிய கசிவே என்று மூடி மறைக்கப்பட்டது.
தாராபூர் அணுமின் நிலையத்தில் வெளிப்படும் கதிரியக்க அளவு, வரையறுக்கப்பட்ட அளவைவிட மீறியிருப்பதாகவும், அணுமின் நிலையத்தைத் தாண்டி 40 முதல் 50 கி.மீ. தூரம் வரை, அதன் கதிரியக்கம் பரவியிருப்பதாகவும் சொல்லப் படுகிறது.
1972இல் நடந்த ஒரு சிறு விபத்தில் இரண்டு எஞ்சினியர்கள் அணு நிலையத்திலேயே இறந்திருக்கிறார்கள். ஒருவர் அபாயகரமான நிலைக்கு ஆளாகிப் பின் சிகிச்சைக்காக அமெரிக்கா அனுப்பப்பட்டு அங்கேயே இறந்திருக்கிறார். ஆனால் இது விபரம் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப் படவில்லை.
இந்நிலையத்தில் 1974 - 78க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட 5 ரெம் அளவையும் தாண்டி அதிகமான கதிர் வீச்சுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
1975 ஓர் ஆண்டில் மட்டும் இப்படிப்பட்ட அளவைத் தாண்டியவர்கள் 190 பேர் என, கதிரியக்க அளவைத் தாண்டும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த நிலையத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள அணு உலை மாதிரி, கொதிநீர் அணு உலை வகை (Boiling Water Reactor - BWR) எனப்படுகிறது.
இந்தியப் பொருளாதாரத்துக்கு ஏற்ற அணு உலை, கனடா கன நீர் அணு உலைதான் என்றும் (Canadian Heavy Water Reactor, இது சுருக்கமாக CANDU என அழைக்கப்படுகிறது) , இதில் இயற்கை யுரேனியத்தை அப்படியே எரிபொருளாகப் பயன்படுத்தலாம் என்றும் சொல்கிறார்கள்.
அப்படியிருந்தும், மாறாக அமெரிக்காவின் கெடுபிடி நிபந்தனைகளுக்கு உட்பட்டு, இந்த வெற்றிகரமாகச் செயல்படாத BWR உலையைத் தாராபூரில் நிறுவியதற்காக, இந்திய அணு ஆய்வுச் சுதந்திரத்தையே அப்போதைய அணு சக்திக் கமிஷன் தலைவர் பாபா அமெரிக்காவுக்கு அடகு வைத்துவிட்டார் என்று பரவலாக, ‘பாபா’ மேல் குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது.
காரணம், BWR ஒரு பாதுகாப்பான, முழுமையான தொழில் நுட்பம் நிறைந்த உலை இல்லையென்றும், இது அமெரிக்காவில் பரீட்சார்த்தமாகச் சோதிக்கப்பட்டு, பின் பல இடங்களில் நிறுவ திட்டமிடப்பட்டிருந்ததாகவும், ஆனால் பரீட்சார்த்த சோதனைகளில் இது நம்பிக்கை அளிக்காததால், அமெரிக்காவிலேயே திட்டமிட்டப்படி இது ஓர் இடத்தில் கூட நிறுவப்படவில்லை என்றும் அதற்குள் பாபா அவசரப்பட்டு 1960லேயே இந்த ஒப்பந்தத்துக்கு ஏற்பாடு செய்துவிட்டார் என்றும், பாபா அணுசக்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் (Baba Atomic Research Centre) மூத்த விஞ்ஞானி ஒருவரே கூறியிருக்கிறார்.
அதோடு அமெரிக்கா இதுவரை 564 மெ.வா. உற்பத்தித் திறனைவிட, உற்பத்தியின் திறன் குறைவாக உள்ள ஓர் உலையைக்கூட எந்த நாட்டுக்கும் ஏற்றுமதி செய்ததில்லை எனவும் இந்த உலையில் ஏற்பட்ட பரீட்சார்த்த தோல்வி காரணமாகவே இதை நம் தலையில் கட்டிவிட்டது எனவும் இந்நிலையில் அமெரிக்கா இப்படி இதை நம் தலையில் கட்டவும் பாபாவே காரணமாக இருந்தார் என்பதும் பாபா மேல் குற்றச்சாட்டு சுமத்தப்படுவதற்கு மற்றொரு காரணம்.
இப்படிப்பட்ட தோல்விகரமான அணு உலையைத்தான் ‘வேலியில் கிடப்பதை எடுத்துக் காதில் விட்டுக் கொண்டு குடைகிறது, குடைகிறது என்பது போல்’ நம் நாட்டில் இறக்குமதி செய்து வைத்துக் கொண்டு, தினம் தினம் நம் மக்கள் கதிர்வீச்சு அபாயத்துக்குள்ளாகிக் கொண்டும் செத்துக் கொண்டும் இருக்க வழி வகுத்திருக்கிறார்கள்.இதற்கான திட்டச் செலவு 1962இல் 48 கோடியாக இருந்து, 1970இல் 68 கோடியாக மாற்றம் பெற்று, 1981இல் இது 97.12 கோடியாக உயர்ந்திருக்கிறது. அதாவது 97,12,00,000 ரூபாய். இப்போது இது இன்னும் பல மடங்கு கூடியிருக்கும்.
ராஜஸ்தான் அணுமின் நிலையம்
இது ராஜஸ்தான் மாநிலத்தில் கோடாவுக்கு அருகில் ராணா பிரதாப் சாஹர் என்ற இடத்தில் உள்ளது. எனவே ராஜஸ்தான் அணுசக்தி நிலையம் (RAPS) என அழைக்கப் படுகிறது. இங்கு நிறுவப்பட்டுள்ள இரண்டு அணு உலைகள் ஒவ்வொன்றும் 190 மெ.வா. உற்பத்தித் திறன் கொண்டவை. முதல் உலை ஆகஸ்டு 1972லும், இரண்டாவது உலை ஜூன் 1976 லும் செயல்படத் தொடங்கியது.
ஏற்கெனவே அமெரிக்க உதவாக்கரை அணு உலையைத் தாராபூரில் நிறுவிய அனுபவமோ, என்னவோ, மீண்டும் அந்த வம்புக்குப் போகாமல், கனட நாட்டுத் தொழில் நுட்பத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்ட (CANDU) முறை அணு உலை இங்கு நிறுவப்பட்டது. இது அழுத்தம் நிறைந்த கனநீர் உலை (Pressurised Heavy Water Reactor - PHWR) என அழைக்கப்படுகிறது. மிகவும் சிக்கனமானது, பாதுகாப்பானது என்று கருதப்பட்ட இந்த உலையும் சும்மா இல்லை. இதன் முதன் உலை நிறுவப் பட்ட 10 ஆண்டுகளுக்குள் கடும் சேதத்துக்குள்ளாகியது.
10 ஆண்டு என்பது நீண்டகாலப் பகுதியானாலும் இதற்காக கொட்டிய பணத்தையும், நிறுவ எடுத்துக் கொண்ட காலப் பகுதியையும் பார்த்தால் இந்த 10 ஆண்டு என்பது மிக அற்பமே. வெறும் 10 ஆண்டு உற்பத்திக்கா இவ்வளவு பணமும், இவ்வளவு உழைப்பையும் செலவிட்டு நிறுவுவது என்று தோன்றும். ஆக இதுவும் சேதத்துக்குள்ளாகியது. பிறகு அதையடுத்து 1982 மார்ச் 4இல் அணு உலைக் கவசத்தில் மென்னீர் கசிவு காரணமாக செயல் முடக்கம் செய்யப்பட்டது.
இந்தக் கசிவு அபாயகரமான கதிரியக்கம் கொண்டதாக இருந்ததால் மனிதர்கள் கிட்டே நெருங்க முடியாத நிலையில் இருந்தது. தொலைக் கட்டுப்பாட்டுக் கருவி மூலம் (Remote Control) கசிவை அடைக்கும் வசதியும் இல்லை. கடுமையான வேறு பல முறைகளைக் கையாண்டு பல மணி நேரம் போராடி கசிசை அடைக்க முனைந்தார்கள். இதன் விளைவாக என்ஜினியர்களும் தொழிலாளர்களுமாக சுமார் 2,000 பேருக்குமேல் கடுமையான கதிரியக்கத்துக்கு ஆளானார்கள். 300 பேர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்கள்.
இது தவிர இக்கசிவால் சுற்றுப்புறத்தில் எவ்வளவு கதிரியக்கம் பரவியது, சுற்றுச் சூழலில் எவ்வளவு மாசு ஏற்பட்டது என்பது தெரியவில்லை. இது பற்றி அணுசக்தித் துறை எதுவுமே மூச்சு விடவில்லை. மேலை நாடுகள் போல் இதுபற்றி ஆய்வுகள் நடத்த தனிப்பட்ட ஆய்வு அமைப்புகளும் இந்தியாவில் இல்லை.
இந்நிலையில் அணு உலையில் ஏற்பட்ட தொடர்ந்த இடையூறு காரணமாக 1985 மே 20இல் இந்த உலை நிரந்தரமாக மூடப்பட்டது.
1981 செப்டம்பர் 27இல் இரண்டாவது உலையில் வெப்ப மாற்றுக் குழாயில் கசிவு ஏற்பட்டது. இது குழாயின் தரக் கேடான தயாரிப்பு காரணமாக ஏற்பட்டதாக அறியப்பட்டது. இதனால் அபாயகரமான கதிரியக்கம் வெளிப்பட்டது. இதனால் ஏற்பட்ட விளைவுகள் பற்றியும் ஏதும் தெரியவில்லை.
ஆக, கனடா நாட்டுத் தொழில் நுட்ப அணு உலையும் கையை விரித்து விட்டது. அதுவும் ஆபத்தில்லாமல் இயங்க முடியாது என்பது மெய்ப்பிக்கப்பட்டதோடு மட்டுமல்ல, நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியாது என்பதையும் கண்கூடாக நிரூபணம் செய்துவிட்டது.
அதற்கான திட்டச் செலவு எவ்வளவு தெரியுமா? முதல் உலை 1964இல் 33.95 கோடியாக திட்டமிடப்பட்டு 1973இல் 73.27 கோடியாக உயர்ந்தது.
இரண்டாவது உலை 1972இல் 58.16 கோடியாகத் திட்டமிடப் பட்டு 1980இல் 92.26 கோடியாக உயர்ந்தது. ஆக, இரண்டு உலைக்குமான திட்டச் செலவு மொத்தம் 165 கோடியே 53 லட்ச ரூபாய்.
கல்பாக்கம் அணுமின் நிலையம்
சென்னைக்குத் தெற்கே 60 கி.மீ. தொலைவில் வங்கக் கடற்கரையோரம், கல்பாக்கம் என்னும் இடத்தில் கட்டப் பட்டுள்ள அணுமின் நிலையம் இது. இது 235 மெ.வா. உற்பத்தித் திறன் கொண்ட இரு அணு உலைகளைக் கொண்டதாகும். இதன் முதல் உலை MAP – 1 1977லும், இரண்டாவது உலை MAP - 2 1979லும் உற் பத்தியைத் தொடங்கும் என்பதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிறகு 1985லேயே முழு அளவிலான உற்பத்தி சாத்தியம் என்று சொல்லப்பட்டது.
இது ராஜஸ்தானில் கையை விரித்து ஊற்றி மூடிய அதே கனடத் தொழில் நுட்பத்தைக் கொண்ட ‘காண்டு’ முறை அணு உலைதான் என்றாலும், இது முழுக்க முழுக்க 90 சதவீதம் இந்தியத் தொழில் நுட்பத் திறமையுடன் இந்திய விஞ்ஞானி களால் வடிவமைக்கப்பட்டது என்கிறார்கள்.
என்றாலும் இந்த உலையும் சும்மா இல்லை. இதன் முதல் உலையை 1984 ஜூலையில் அப்போதைய பிரதமராயிருந்த திருமதி இந்திராகாந்தி தொடங்கி வைக்க, சில நாள்களுக்குள்ளேயே உலையில் சிறு வெடிப்பு ஏற்பட்டது. அதை உடனடியாகச் சரிசெய்ய முடியாது என்பதால், அதை சரிப்படுத்தும் சில மாதங்கள் வரை உற்பத்தி தடைப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இவ்விபத்து பற்றிய விவரங்களோ விளைவுகளோ இதுவரை எதுவும் வெளியே அறிவிக்கப்படவில்லை.
86ஆம் ஆண்டில் மட்டும் இந்நிலையம் பலமுறை மூடப்பட்டது. மூடப்பட்ட ஒவ்வொரு முறையும் பல மாதங்கள் உற்பத்தித் தடங்கல் ஏற்பட்டது.
1986 மார்ச் மாதம் மின்சார டிரான்ஸ்ஃபார்மர் எரிந்து குளிரூட்டும் சாதனம் பழுதுபட்டதால் கதிரியக்கமுள்ள கனநீர், 16 டன்னுக்கு மேல் உலையில் அடிப்பகுதியில் கொட்டியது. இதில் இடுப்பளவு நீரில் நின்று தொழிலாளர்கள் வேலை செய்திருக்கிறார்கள். இக்கனநீரின் கதிரியக்கத் தன்மை பற்றியோ, அதில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு பற்றியோ நிர்வாகம் எதுவுமே அறிவிக்கவில்லை.
1986 ஆகஸ்டு 14ஆம் தேதி ஆஹஞ - 2 இல் தீய்ந்துபோன எரிபொருள் கலவை பண்டல்களை வெளியே எடுக்கையில் அவை உடைந்து எங்கெங்கோ சிக்கிக் கொண்டன. இதுவரை எந்த உலையிலும் ஏற்படாத ஒரு சிக்கல் இது என்று அணுசக்தித் துறைத் தலைவர், டாக்டர் ராஜா ராமண்ணா கூறியிருக்கிறார். இப்படிச் சிக்கிய துகள்களை, சாதாரண தொழிலாளர்களைப் பயன்படுத்தி, கையை உள்ளே விட்டு எடுக்கச் சொல்லிவிட்டு, எந்திர மனிதனைத் (Robot) தயார் செய்து அதனை எடுத்து விட்டதாகப் பொய்யான தகவல் அளித்திருக்கிறார்கள்.
கல்பாக்கம் டவுன்ஷிப் பகுதியில் வசிப்பவர்களைத் தவிர, சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்து தினம் இங்கு சுமார் நூற்றுக்கணக்கானோர் தினக் கூலிகளாக வந்து கட்டட வேலை செய்து போகின்றனர். இவர்களில் பலர் அணு உலைப் பகுதியில் அபாயகரமான பகுதிகளிலும் வேலைக்கு ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களுக்கு ஏற்படும் கதிர்வீச்சு பற்றியோ அதன் பாதிப்பு பற்றியோ இவர்களுக்கு எதுவுமே தெரியாது. நிர்வாகமும் சொல்வது இல்லை.
1986, நவம்பர் 20ஆம் தேதி கல்பாக்கம் டவுன்ஷிப்பில் உள்ள ஊழியர் கோ-ஆப்பரேடிவ் ஸ்டோருக்கு (கூட்டுறவு பண்டக சாலைக்கு) வேண்டி வாங்கி வரப்பட்ட பொருள்கள் 1.5 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ளவை எரிக்கப்பட்டன. இப்பொருட்களை ஏற்றி வந்த லாரி ‘சென்ட்ரல் வேஸ்ட் மெடீரியல் ஃபெசிலிட்டி’ நிறுவனத்தைச் சேர்ந்தது என்பதால் வாங்கி வந்த பொருட்கள் கதிரியக்கம் கலந்தது என்பதே பொருட்களை எரித்ததற்கான உண்மையான காரணம். ஆனால் இந்தப் பொருட்களை எரித்ததற்கும் அதன் உண்மையான காரணத்தைச் சொல்லாமல் பொருள்கள் மிகவும் பழசாகப் போய், பழைய சரக்குகளைக் காலி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டதாலேயே அவற்றை எரித்து விட்டதாகப் பொய்யான தகவலைச் சொல்லியிருக்கிறார்கள்.
இப்படித் தொட்டதெல்லாம் வம்பாக முடியும் இந்த அணு சக்தியைக் கல்பாக்கத்தில் நிறுவ ஆன செலவு எவ்வளவு தெரியுமா...? முதல் உலை 1973ல் 61.78 கோடியாகத் திட்டமிடப் பட்டு 1980ல் 107.87 கோடியாக உயர்ந்தது. இரண்டாவது உலை 1975ல் 70.63 கோடியாகத் திட்டமிடப் பட்டு 1980ல் 103.02 கோடியாக உயர்ந்தது. ஆக இரண்டு உலைக்குமான செலவு 210 கோடியே 89 இலட்சம் ரூபாய்.
இதுபோதாதென்று இங்கு ஒரு பரிசோதனை வேக ஈனுலை 1979 வாக்கில் தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால், இது திட்டமிட்டப்படி சாத்தியப்படாமல் ஆறு ஆண்டுகள் கழித்து 1985 அக்டோபர் 15லேயே தொடங்கப் பட்டதாகச் சொல்லப் படுகிறது. இந்தப் பரிசோதனை வேக ஈனுலைக்கு (Fast reeder Test Reactor) எவ்வளவு திட்டமிடப்பட்டது. பிறகு அது எவ்வளவாக உயர்ந்தது என்கிற விபரம் தெரியவில்லை.
நரோரா அணு சக்தி நிலையம்
இது உத்திரப் பிரதேச மாநிலம் புலாந்தர் மாவட்டத்தில் உள்ள நரோரா என்னும் இடத்தில் கட்டப்பட்டுள்ளது. எனவே, நரோரா அணுசக்தி நிலையம் (NAP) என அழைக்கப்படுகிறது. 1974ஆம் ஆண்டில் அனுமதிக்கப்பட்ட இந்நிலையம் 14 ஆண்டுகள் கட்டுமானப் பணியை முடித்து 1988ஆம் ஆண்டு அக்டோபர் 31 அன்று இதன் முதல் உலை (NAP.I) இயங்கத் தொடங்கியது.
இரண்டாவது உலை (NAP.II) 1990ஆம் ஆண்டு மே 31 வாக்கில் தொடஙகும் என எதிர்பார்க்கப்பட்டது. இதுவும் கனடத்தொழில் நுட்ப மூலம் கொண்ட CANDU- PHWR வகைப் பட்டதேயாகும்.
470 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இந்நிலையம், இரண்டு 235 மெ.வா. உலைகள் கொண்டது. ஏற்கெனவே இந்தியாவில் ‘இயங்கி வரும்’ கோடாவில் உள்ள ராஜஸ்தான் அணுமின் நிலையம் மற்றும் கல்பாக்கத்தில் உள்ள சென்னை அணுமின் நிலையம் ஆகிய நிலையங்களின் செயல்பாட்டு அனுபவங்களைக் கணக்கில் கொண்டு, மிகச் சிறந்த பாதுகாப்பு வசதிகளுடன் நிறுவப்பட்டுள்ளதாகவும், அதற்காகவே இதனை நிறுவ இத்தனை ஆண்டுகள் பிடித்தன என்றும் அரசுத் தரப்பில் கூறப்பட்டது.
ஆனால் இந்த நிலையம் கட்டுவதற்காகப் பயன்படுத்தப் பட்ட துணைக்கருவிகள் 1975இல் வாங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக திறந்த வெளிகளில் கிடந்ததால், அவை பாதுகாப்பற்றவைகளாகி விட்டன என்றும், நிலையம் துவங்கிய பிறகு இந்த இரண்டாம் தரமான கருவிகளால் ஏதும் விபத்து நேருமாயின் அது பெரும் அழிவுக்கு வழிவகுக்கும் என்றும் எனவே இதன் கட்டுமானப் பணியை நிறுத்துமாறும் பகுதி வாழ்மக்களும் பல்வேறு - சமூகவியலாளர்களும் கோரியிருக்கிறார்கள். இவ்வாறு கோரியவர்களில் திருமதி விஜயலட்சுமி பண்டிட், வி.ஆர். கிருஷ்ணய்யர், பேராசிரியர் மது தந்த வாடே, மால்கம் ஆதிசேஷய்யா, ஐ.கே. குஜ்ரால், ஜனரல் ஜக்ஜீத்சிங் அரோரா, சோலி சராப்ஜி, நயன்தாரா சஹால் ஆகியவர்கள் முக்கியமானவர்கள்.
அதோடு இந்த அணுசக்தி நிலையம் மக்கள் நெருக்கம் மிகுந்த டெல்லி, மதுரா, ஆக்ரா, அலிகார் ஆகிய நகரங்களால் சூழப்பட்டிருக்கிறது. தவிரவும், வட இந்தியாவின் வளம் கொழிக்கும் முக்கிய மூன்று ஜீவ நதிகளான கங்கை, யமுனை, பிரம்மபுத்திரா ஆகியவற்றைத் தோற்றுவிக்கும் இமயமலைப் பகுதிக்கும் இது நெருக்கமாக இருக்கிறது.
எனவே, நிலையத்தில் ஏதும் கோளாறோ அல்லது விபத்தோ ஏற்படுமாயின் இது சுற்றுப்புறப் பகுதிகளிலுள்ள நகரங்களைப் பாதித்து லட்சக்கணக்கான மக்களை அபாயத்துக்குள்ளாக்குவதோடு, மூன்று நதிகளது நீரையும் கதிரியக்கத் தாக்கத்துக்குள்ளாக்கும் பயங்கர ஆபத்தும் ஏற்பட வாய்ப்புண்டு என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அரசு எது பற்றியும் லட்சியம் செய்து கொள்ளாமல் தன் திட்டப்படி நிலையத்தைக் கட்டிமுடித்து முதல் உலையையும் இயங்க வைத்துவிட்டது.
இந்த நிலையம் கட்ட எடுத்துக்கொள்ளப்பட்ட 15 ஆண்டுகளையும் சேர்த்து மொத்தம் 25 ஆண்டுகளே இயங்க இருக்கும் இந்நிலையம், ஒவ்வொரு விநாடியும் ஆபத்தோடு இயங்க இருப்பதோடு இது உற்பத்தி செய்ய இருக்கும் திட, திரவ அணுக் கழிவுகள் 25,000 ஆண்டுகளுக்கும் மேலாக விஷத் தன்மை கொண்டவையாகவும் நீடித்துவரப் போகிறது.
வளமான வண்டல் மண் படிந்த பகுதியான சிந்து கங்கைச் சமவெளியையே இந்தக் கழிவுகள் பாழ்படுத்தி நாசம் செய்ய இருக்கிறது. இந்நிலையில் இந்நிலையத்தின் பாதுகாப்பிற்கும் இக்கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கும், அணுசக்தித்துறை என்ன வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது என்பதே இன்று அனைவர் மத்தியிலும் கேள்வியாக உள்ளது.
இந் நிலையத்துக்கான திட்ட ஒதுக்கீடு 1974ஆம் ஆண்டில் 323 கோடி ரூபாய். பிறகு மேலும் ரூ. 209 கோடி ஒதுக்கீடு செய்து அதன் திட்டச் செலவு 532 கோடியாக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் 21 ஆண்டு உழைப்பில் 530 கோடி டாலர் செலவில் மிகச் சிறந்த பாதுகாப்பு வசதிகளுடன் உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படும் 900 மெ.வா. ‘ஹோர்ஹாம்’ அணுமின் நிலையத்தை மக்களின் எதிர்ப்பு காரணமாகவும், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியத்தின் காரணமாகவும் அமெரிக்க அரசு மூடும்போது அதில் 20இல் ஒருபங்கே செலவிட்டுள்ள இந்நிலையத்தை மக்கள் நலன் கருதியும், இயற்கை வளங்கள் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம் கருதியும் மூடிவிடுவதில் ஒன்றும் பெரிய இழப்பு நேர்ந்து விடாது என்பது அறிஞர்கள் மற்றும் வல்லுநர்களின் கருத்து. ஆனால், அரசு எதையும் காதில் போட்டுக் கொள்வதாக இல்லை.
கைகா அணுமின் நிலையம்
இது கர்நாடக மாநிலத்தின் மேற்குக் கடற்கரை ஓரமாக கார்வாருக்குக் கிழக்கே 32 கி.மீ. தூரத்தில் உள்ளது. 235 மெகாவாட் திறன் கொண்ட கைகா I, கைகா II ஆகிய இரு அணு உலைகளும் 1995 வாக்கில் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்த புகழ்பெற்ற எழுத்தாளர்கள் சிவராம கரந்த், யூ.ஆர். அனந்தமூர்த்தி மற்றும் பங்களூர் இந்திய அறிவியல் கழக விஞ்ஞானிகள், பங்களூர், மைசூர், தார்வார் பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் ஆகிய பலரும் இதை எதிர்த்து வந்துள்ளனர்.
மேற்குத் தொடர்ச்சி மலைகளின் வளம் நிறைந்த காட்டில் 2,220 ஏக்கர் பரப்பை, ஆக்ரமிக்கும் இத்திட்டம் ஏற்கெனவே தன் காடு அழிப்பு வேலையைத் தொடங்கிவிட்டது. இத்துடன் மைசூருக்கு அருகில் ரத்னஹள்ளி என்ற இடத்தில் செறிவூட்டப்பட்ட யுரேனியத் தயாரிப்பு நிலையம் கோலார் தங்க வயலுக்கு அருகில் அணுக்கழிவுகளைக் கொட்டிப் புதைக்க பரீட்சார்த்த ஆய்வுக் கூடம், ஆகியவற்றையும் சேர்த்தே கர்நாடக மக்கள் எதிர்த்து வருகிறார்கள். இருந்தும் அரசு விடாப்பிடியாக இத்திட்டங்களைத் தொடர்வதன் காரணம்;
கார்வாருக்கு அருகே மீனவர்களையும், விவசாயிகளையும் வெளியேற்றியும் 5,000 ஏக்கர் காட்டை அழித்தும் 8,000 ஏக்கர் பரப்பில் நிறுவ இருக்கிற ‘கடல் பறவை’ என்கிற கப்பற்படைத் தளத்துக்கு அணுசக்தியால் இயங்க இருக்கும் நீர் மூழ்கிக் பல்களுக்கும், அக்கப்பல்களில் நிறுவ இருக்கும் அணு ஆயுதங்களுக்கும் புளூட்டோனியம் சப்ளை செய்வதற்காகத்தான் என்று சந்தேகப்பட வைக்கிறது.
இந்தத் திட்டத்தையொட்டி எழுந்த எதிர்ப்பின் காரணமாக அப்போதை கர்நாடக முதல்வராயிருந்த ராமகிருஷ்ண ஹெக்டே ‘அணுசக்தியை ஏன் எதிர்க்கிறீர்கள். இது பற்றி நாடு தழுவிய விவாதத்துக்கு ஏற்பாடு செய்வோம் என்று சொன்னதாகவும், மத்திய அரசும் அணுசக்திக் கமிஷனும் இந்த விவாதத்தை விரும்பவில்லையாதலால், விவாதம் கிடப்பில் போடப்பட்டதாகவும் ஒரு தகவல் அறியப்படுகிறது.
ஆனால், கண்துடைப்புக்காக 88ஆம் ஆண்டு டிசம்பரில் விவாதம் என்கிற பெயரில் பங்களூரில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. அதில் சிவராம கரந்த் கலந்து கொணடு “இந்த மண்ணும் காற்றும், மற்றுமுள்ள இயற்கை வளங்களும் மக்களுக்குச் சொந்தமானவை, அணுசக்தியால் அதை மாசுபடுத்தாதீர்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
‘அதெல்லாம் ஒன்றும் ஆகாது. வீணாக அஞ்சத் தேவையில்லை' என்று அப்போதைய அணுசக்திக்கமிஷன் தலைவர் எம்.ஆர். சீனிவாசன் தெரிவித்து அத்தோடு விஷயத்தை ஏறக் கட்டியிருக்கிறார்கள்.
1987ஆம் ஆண்டு ஆகஸ்டு 6, ஷிரோஷிமா தினத்தன்று இந்நிலையம் நிறுவப்படுவதை எதிர்த்துப் போராடியதில் இரண்டு காட்டுவாசிகள் துப்பாக்கி சூட்டில் பலியானதுதான் மிச்சம். அரசு எதையும் காதில் வாங்கிக் கொள்வதாய்த் தெரியவில்லை.
இதன் திட்ட மதிப்பு 730 கோடி ரூபாய்.
- இராசேந்திர சோழன்
- விவரங்கள்
- இராசேந்திர சோழன்
- பிரிவு: தொழில்நுட்பம்
பிரான்ஸ்
நேட்டோ, வார்ஸா இராணுவ ஒப்பந்தக் கூட்டு நாடுகளுக்கு அப்பால் தனியொரு நாடாக அணுசக்தித் தொழிலில் மிக அதிகம் ஈடுபட்டிருக்கும் நாடாகவும், ஆயுத விற்பனை செய்து வரும் நாடாகவும் பிரான்ஸ் இருக்கிறது. இந்நாட்டுக்குத் தேவைப்படும் மொத்த மின்சாரத்தில் 60% அணுசக்தி நிலையங்கள் மூலம் பெறப்படுகின்றன. உலகிலேயே அதிகமான சதவீதம் அணுமின் சக்தியைப் பெறும் நாடு பிரான்ஸ் என்றே அறியப்படுகிறது.
இவ்வாறு, அதிகமாக அணுசக்தி சார்ந்து இயங்குவதால் பிரான்சின் மின்சாரக் கழகத்திற்கு மட்டும் 32 பில்லியன் அதாவது 3,200 கோடி அமெரிக்க டாலர் கடனாக உள்ளதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதிகமாக அணுசக்தித் தொழிலில் ஈடுபடுவதால் கழிவுகளும் அதிகமாகச் சேர்ந்து கழிவுகளை என்ன செய்வது என்பது இந்த நாட்டுக்கும் ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது.
இங்கு லாஹேக் என்னும் தீபகற்பப் பகுதியில் எரிபொருள் மறுபதனம் செய்யும் நிறுவனம் ஒன்று உள்ளது. 1981ஆம் ஆண்டில் இங்கு ஒரு தீ விபத்து ஏற்பட்டது. பிறகு 1984ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒரு கசிவு விபத்தில் 726.1 ரெம் அளவுக்கு அபாயகரமான கதிரியக்கம் வெளிப்பட்டது. இந்தத் தொழிற்சாலையில் ஆண்டுக்கு 800டன் எரிபொருள் மறுபதனம் செய்யத் திட்டமிட்டப்பட்டது.
ஆனால், நடைமுறையில் 79 முதல் 704டன் வரையே மறுபதனம் செய்ய சாத்தியப்பட்டது. இங்கு 1984ல் ஏற்பட்ட கசிவுக்குப் பிறகு, அணு உலைகள் பற்றிப் பத்திரிகைகள் அக்கறை காட்டத் தொடங்கின. மக்கள் விழிப்புற்று அணு சக்திக்கெதிராகப் போராடத் தொடங்கினார்கள். இங்கு 900 மெகாவாட் உற்பத்தி செய்ய திட்டமிட்டிருந்த போதும் 300 மெகாவாட் அளவே உற்பத்தி நடைபெறுகிறது.
பிரான்சு நாடு இந்த ஹேக் தீபகற்பப் பகுதியை எரி பொருள் மறுபதனம் செய்யும் தொழிற்சாலை நிறுவுவதற்காக தேர்ந்தெடுத்ததன் காரணம், இத்தீவு பிரான்சின் பிரதான நிலப்பகுதியை விட்டுத் தள்ளியுள்ளது. இங்கு ஏதும் விபத்து நேர்ந்தால், ஏற்படும் கதிரியக்கம் பிரான்ஸ் நாட்டு மக்களை அதிகம் பாதிக்காத வகையில், அக்கதிரியக்கத்தை வேறு திசைக்குக் கொண்டு செல்லும் வகையில் இங்கு வீசும் பருவக்காற்றுகள் அதற்குச் சாதகமாக உள்ளன.
இத்தொழிற்சாலை மூலம் கடலில் கொட்டப்படும் கழிவுகளும், கடலின் நீரோட்டத்தோடு கலந்து, அது கடலின் தொலை தூரத்துக்குக் கொண்டு சென்றுவிடும் வகையிலும், அது பிரான்சைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதிகளைப் பாதிக்காத வகையிலும் வாய்ப்பாக உள்ளதாகச் சொல்லுகிறார்கள். அதோடு, பேரபாயம் விளைவிக்கும் விபத்து எதுவும் நேர்ந்தால் இப்பகுதியைப் பிரான்சிலிருந்து எளிதாகத் துண்டித்து விடலாம் என்றும் சொல்கிறார்கள்.
இதுபற்றி ஜெர்மானிய அறிஞர் ராபர்ட் யங் என்பவர் 1978இல் ‘அணுசக்தி அரசு’ என்ற நூலை எழுதியிருப்பதாகப் புறப்பாடு ஜூலை ஆகஸ்டு- 88 இதழ் ‘கதிரியக்க உணவு’ என்கிற கட்டுரை தெரிவிக்கிறது. அக்கட்டுரையில் உள்ள தகவல்களாவன,
ஹேக் கிராமம், பிரான்சு நாட்டில் உள்ள சிறு தீபகற்பப் பகுதியாகும். அங்கு வாழும் மக்களது விருப்பத்துக்கு மாறாக அவர்களை அடக்கி ஒடுக்கியும், மிரட்டியும், அச்சுறுத்தியும், சிலரைக் கொன்றும் இந்த நிலையம் கட்டப்பட்டது.
இந்த எரிபொருள் மறுபதன நிலையத்திலுள்ள புகை போக்கியிலிருந்து ஆக்டினைடு என்ற விஷப்பொருள் காற்றில் கலக்கிறது.
1974ஆம் ஆண்டு முதல் மெர்குரி 203, அயோடின் 131, மேலும் டிரிட்டியம், கிரிப்டான் 85 ஆகிய நச்சுப் பொருள்கள் ஆபத்தான அளவுக்கு வெளியிடப்பட்டன.
1975ஆம் ஆண்டு மட்டும் 11,000 கியூட் டியூரிட்டியம், 23,000 கியூரி ருத்னியம் 106, 1,000 கியூரி சீலியம் 134, 137 ஆகிய தனிமங்கள் அக்குழாய்கள் வழியாக வெளியேறின.
கடலில் புளுட்டோனியக் கழிவுகளை எடுத்துச் செல்லும் குழாய்களில் 30 தடவைக்கும் மேலே கசிவு ஏற்பட்டுள்ளது.
மீன்கள் கதிர் வீச்சுக்குள்ளாகி, அவற்றில் விநோதமான பருக்களும், தசைகள் கருத்தும், பல தலைகள் உடையதுமான விசித்திர மீன்கள் வலையில் அகப்பட்டன.
அப்பகுதியில் டீ, பால் விற்பனை ஆகவில்லை. 1978ஆம் ஆண்டிலிருந்து அணுசக்தித் துறையினரே பாலை வாங்க வேண்டியதாயிற்று.
விலங்கினங்களும், பறவைகளும் கதிரியக்கத்தைத் தொலை தூரங்களுக்குக் கொண்டு செல்கின்றன.
கதிரியக்கக் கழிவுகள் ஈயக்கலனில் அடைக்கப்பட்டு 300 அடி ஆழத்தில் புதைக்கப்படுகின்றன.
இவை 700-8000C வரை வெப்பமுள்ளவை. இவை மேலும் வெப்பமேறாமல் தடுக்கவும், உள்ள வெப்பத்தைக் கட்டுப்படுத்தவும் இராட்சத யந்திரங்கள்மூலம் குளிரூட்டும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இயந்திரங்கள் பழுது அடையும் போதும், அல்லது சிறுசிறு தடைகள் ஏற்படும் போதும் ஈயக் கலனில் வெடிப்போ கசிவோ ஏற்பட்டு வருகிறது.
அடுத்து, இங்கு ப்ளான் மின்விலே என்ற இடத்தில் அணு மின் நிலையத்தின் குளிர்விக்கும் திறன் குறைந்து, இரண்டு முறை தடங்கல் ஏற்பட்டது.
நோஜெண்ட் சர்சேன் என்ற இடத்தில் ரேடியோக் கதிர் கொண்ட ஆவி வெளியேறியது.
இப்படி, அணுசக்தியை அதிகம் பயன்படுத்துவதால் கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரம் 4 மடங்கு பெருகி 2,900 மெகாவாட் அளவுக்கு உற்பத்தி உயர்ந்தாலும் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு 3,900 கோடி டாலர் மதிப்புக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
1980இல் ஆண்டுக்கு 6 அணுமின் நிலையங்கள் அமைப்பதாக இருந்த திட்டம் ஆண்டுக்கு ஓர் அணுமின் நிலையமாகக் குறைக்கப்பட்டது. ஆயினும் மொத்த மின்சாரத்தில் 90 சதவீதத்தை அணு உலைகளிலிருந்தே உற்பத்தி செய்யப் போவதாக அரசு தீர்மானித்துள்ளது. கதிரியக்கச் சாம்பல் கழிவைப்பற்றி அரசு தவறான தகவலைத் தந்தது எனப்பொது மக்கள் கோபம் கொண்டுள்ளனர். அணு உலையின் பத்திரத் தன்மை பற்றி ஆராய அரசு உத்திரவிட்டுள்ளது.
மொத்த மின் உற்பத்தியில் எவ்வளவு சதவீதம் அணுசக்தி மூலம் பெறப்படுகிறது என்பது தெரியவில்லை.
இங்கு 1957ஆம் ஆண்டு விண்ட்ஸ் கேல் என்னுமிடத்தில் உள்ள அணுசக்தி நிலையத்தில் ஒரு விபத்து ஏற்பட்டுப் பெரும் தீ பரவியது. கதிரியக்க மேகம் ஒன்று சூறாவளியாகக் கிளம்பியது. இதனால் சுற்றுப்புறம் பெரும் பாதிப்புக்குள்ளாகியது. சுமார் 20 இலட்சம் லிட்டர் பால் கதிரியக்க அபாயம் காரணமான பயத்தால் பயன்படுத்தப்படாமல் கொட்டப்பட்டு விட்டது.
இங்குப் புதிய அணு உலைகள் நிறுவுவதற்கான எதிர்ப்பு 83 சதவீதமாக உயர்ந்துள்ளது. குடிமக்கள் கதிரியக்கக் கழிவுகள் சேமிக்கப்பட்டுள்ள இடங்களில் மறியல் செய்து வருகிறார்கள். ஆளும் கன்சர்வேடிவ் கட்சி அரசு, தனது அணு ஆற்றல் கொள்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தொழிற்கட்சியும் லிபரல் கட்சியும் அணு உலைகளை மூடும்படி கோருகின்றன.
இங்குச் செல்லாஃபீல்டு அணு எரிபொருள் பதன நிலையம் அபாய நிலையில் உள்ளதாகவும், வட கடல் பிராந்தியம் முழுவதும் மிகக் கதிரியக்கமுள்ள பகுதியாக மாறும் அபாயம் நிலவுவதாகவும், சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) இதுபற்றி ஆய்வு செய்ய உள்ளது.
1980-87க்கு இடைப்பட்ட 8 ஆண்டுகள் கடுமையான விவாதத்துக்குப்பின் சைஸ்வெல் என்ற இடத்தில் அணுமின் நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
புதிதாக இனி எதுவும் அணுஉலை நிறுவப்பட வேண்டு மானால் மக்களிடம் ஒப்புதல் பெற்றாக வேண்டும் என்னும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
அயர்லாந்து
அரசுக்கு அணு ஆற்றல் தவிர்ப்புக் கொள்கை இல்லாத போதிலும், பொதுமக்கள் கருத்துக் கணிப்பு அணுமின் ஆற்றலுக்கு எதிராக அமைந்துள்ளது.
அர்ஜென்டினா
நான்கு அணுமின் நிலையங்கள் அமைக்கும் திட்டங்கள் கைவிடப்பட்டன. கட்டப்பட்டுக் கொண்டிருக்கிற ஒரே ஒரு அணுமின் நிலையமும் பூர்த்தி செய்யப்படாமல் போகலாம் என்று நம்பப்படுகிறது.
ஆஸ்திரேலியா
தொழிற்கட்சி அரசு அணு ஆற்றலைப் பயன்படுத்துவதில்லை என்கிற கொள்கையை வைத்திருக்கிறது.
கிரீஸ்
தனது முதல் அணு உலையைக் கைவிடத் தீர்மானித்துள்ளது.
நார்வே
அணுமின்சாரமே தயாரிப்பதில்லை என முடிவு செய்துள்ளது.
சீனா
ஐந்தாண்டுத் திட்டத்தில் இடம் பெற்றிருந்த 10 அணுமின் நிலையங்களில் 8 ரத்து செய்யப்பட்டன.
டென்மார்க்
நாடாளுமன்றம் எப்போதும் அணு உலைகளைக் கட்டுவதில்லை என முடிவு செய்துவிட்டது. தான் என் றென்றும் அணுசக்தி உற்பத்தியில் ஈடுபடுவதில்லை என 1885ல் சட்டம் நிறைவேற்றியுள்ளது.
நியூசிலாந்து
தொழிற்கட்சி அரசு அணு ஆற்றலற்ற மண்டலத்தை நிறுவும் கொள்கை கொண்டது. அதற்கான சட்டமும் நிறைவேற்றப்பட உள்ளது.
பிரேசில்
1986இல் 8 அணுமின் நிலையத் திட்டங்களில் 6 அரசால் ரத்து செய்யப்பட்டன. மீதி இரண்டும் தாமதிக்கப்பட்டன.
பிலிப்பைன்ஸ்
நாட்டிலுள்ள ஒரே ஒரு அணுமின் நிலையத்தையும் பிரித்து விட அரசு முடிவு.
பின்லாந்து
அணு உலைகளுக்கு எதிர்ப்பு இரு மடங்காகி 64 சதவீதமாக உயர்ந்துள்ளது. 4,000 பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள மறுப்பு தெரிவிக்கின்றனர். புதிதாக அணு உலைகள் நிறுவும் திட்டங்கள் கைவிடப்பட்டன. ஏற்கனவே உள்ள நான்கு அணு உலைகளுக்கு மேலே 5ஆவது அணு உலை அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது.
மெக்சிகோ
1982இல் 20 அணுமின் நிலையங்களை அமைக்க இருந்த திட்டம் கைவிடப்பட்டது. மூன்றாவது, நான்காவது அணு உலைகளை அமைப்பது ரத்து செய்யப்பட்டது.
மேற்கு ஜெர்மனி
கடந்த 10 ஆண்டுகளாகப் புதிய அணுமின் நிலையங்களை அமைக்கும் திட்டங்கள் எதுவும் தீட்டப்படவில்லை. அணுமின் நிலையங்கள் இங்குப் படிப்படியாக மூடப்படுவது சாத்தியமே.
போலந்து
சர்வதேச அணு ஆற்றல் முகமை (IAEA) பார்வையிட்டு சோதிக்கும்வரை அணு உலைகள் கட்டுவதை நிறுத்தி வைக்கக் கோரி 3,000 பேர் அரசுக்கு மனு. பத்திரத்தன்மை அளவை அதிகரிக்க அரசு வாக்குறுதி.
இங்கு நிறுவப்பட இருந்த ஜார்னோவிச் அணுமின் நிலையம் தள்ளிப் போடப்பட்டது.
லக்சம்பர்க்
அணு ஆற்றல் உற்பத்தி நடைமுறையில் ஒத்திவைக்கப் பட்டிருக்கிறது. தற்போதைய அரசு ஒரு தெளிவான அணு ஆற்றல் எதிர்ப்புக் கொள்கையை வைத்திருக்கிறது.
ஜப்பான்
1984இல் உற்பத்தி இலக்குகள் எட்டப்பட்டன. ஒரு ஆண்டுக்கு 2 அணுமின் நிலையங்கள் மட்டுமே கட்டப்படும். ஆயினும் அரசு அணுமின் உற்பத்தித் திட்டத்தைக் கைவிடாது என அறிவித்துள்ளது.
ஸ்பெயின்
கட்டப்பட்டுக் கொண்டிருக்கிற 5 அணுமின் நிலையங்கள் 1984ல் கைவிடப்பட்டன.
ஸ்வீடன்
1980ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின்படி 2010ஆம் ஆண்டுக்குள் அணுமின் நிலையங்கள் மூடப்படும். 1986ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் அதற்கான நடவடிக்கைகளை உறுதி செய்கின்றன.
இதில் 1995க்குள் தனது 12 அணு உலைகளை மூடிவிட பொதுமக்கள் கருத்துக்கணிப்பு கேட்டு, 2010க்குள் எஞ்சிய அணு உலைகளையும் சேர்த்து எல்லாவற்றையும் மூடிவிடவும் திட்டம் செய்யப்பட்டுள்ளது. இது மொத்த மின் உற்பத்தியில் 40% அணு சக்திமூலம் பெற்றுவரும் நாடாகும்.
யுகோஸ்லாவியா
அணு ஆற்றலுக்கு எதிர்ப்பு இருமடங்காகியுள்ளது. உள்ளூர் அளவில் அணுஆற்றல் எதிர்ப்புக் குழுக்கள் அமைக்கப் படுகின்றன. பத்திரத்தன்மை மதிப்பிடப்படும் வரை புதிய அணு உலைகளை நிறுவும் திட்டங்கள் ஒத்தி வைக்கப்படுகின்றன.
இங்குப் பிரெவ்லகா என்னுமிடத்தில் அணுஉலை அமைக்கப்படுவதை எதிர்த்து ‘ஸ்லாவ் கோபுலிக்’ என்கிற விஞ்ஞானி ஜனநாயகத்துக்கும் சோஷலிஸ சுய ஆட்சி அமைப்புக்கும் அணு மின் சக்தி எதிரானதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
யுகோஸ்லாவியா கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் இவானோவிச், அணுஉலை நிறுவும் முயற்சியை எதிர்த்து, ‘யுகோஸ்லாவியாவின் கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்டாதீர்கள்’ என்று குரலெழுப்பியிருக்கிறார்.
இதன் விளைவாக மாற்றுத் திட்டம் காணும் வரை புதிதாக எதுவும் திறப்பதில்லை என முடிவு செய்யப்பட்டு, நீர்மின் சக்தியில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
ஆஸ்திரியா
பொதுமக்கள் கருத்துக் கணிப்பு அணுமின் நிலையம் இயங்குவதைத் தடை செய்தது. இருந்த ஒரே ஒரு அணு உலையையும் பிரித்துவிட அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஒரு அணு உலையும் கட்டுமானப் பணி முடிந்து இன்னும் செயல்படத் துவங்காத நிலையில் இருந்ததாகும். செயல்படத் தொடங்கும் முன்பே மூடிவிட முடிவு செய்யப்பட்டு விட்டது.
இந்த அணு மின்நிலையம் ஸ்வென்தார்ப் என்ற இடத்தில் அமைக்கப்பட்டதாகும். இது முழுப் பாதுகாப்பு வசதிகளுடன் கூடியது என்று பாராட்டப்பட்ட அணு உலையாகும்.
இத்தாலி
அணு உலையைப்பற்றிக் கருத்துக் கணிப்புக் கோரி பத்து இலட்சம் பேர் மனு. எல்லா முக்கிய கட்சிகளும் அணு உலைத் திட்டத்தை எதிர்க்கின்றன. 2000ஆம் ஆண்டில் 13,500 மெகாவாட் உற்பத்திசெய்ய இருந்த திட்ட அளவு கடுமையாகக் குறைக்கப்பட்டது. ஒரே ஒரு அணுமின் நிலையம் மட்டுமே பூர்த்தியாகும் நிலையில் உள்ளது.
மோண்டால்-டி-காஸ்ட்ரோ என்னும் இடத்தில் கட்டப்பட்டு வந்த ஒரு புதிய அணுமின் நிலையக் கட்டுமானப் பணியை நிறுத்தி, நடப்பில் உள்ள 3 அணு உலைகளையும் ஏககாலத்தில் அல்லாமல் மாற்றி மாற்றிப் பயன்படுத்தி வருகிறது.
இதுவரை குறிப்பிட்ட செய்திகள் அனைத்தும் Re-assessing Nuclear Power State of the World 1987, A World Watch Institute Report, New York 1987இல் வெளிவந்தவை.
இது தவிர கிடைக்கும் தவல்கள்:
ஸ்காண்டிநேவியா
எல்லாத் திட்டங்களையும் ஒத்திவைத்துள்ளது.
பெல்ஜியம்
எல்லா திட்டங்களையும் கால வரம்பின்றி ஒத்தி வைத்துள்ளது.
ஹாலந்து
ஒரு அணுமின் நிலையம் கூட இல்லை. எதுவும் வேண்டாம் என முடிவு.
நெதர்லாந்து
தற்போதுள்ள இரண்டு அணு உலைகளுக்கு மேல் புதிதாக எதுவும் தொடங்குவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து
1980க்குப்பின் புதிதாக எந்த அணுமின் நிலையத்தையும் கட்டவில்லை. 6ஆவது அணுமின் நிலையத்தைக் கட்டும் 22 ஆண்டுக்கால திட்டத்தை இரத்து செய்துவிட்டது.
ஆஸ்திரியா, பிலிப்பைன்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து மற்றும் மேற்கு ஜெர்மனி ஆகிய நாடுகள் தங்கள் நாடுகளை அணுசக்தியற்ற பிரதேசங்களாக (NUCLEAR FREE ZONE) ஆக்கத் திட்டம் தீட்டியுள்ளன.
ஆக, உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள், மக்கள் எதிர்ப்பு காரணமாக,
1. இனி புதிதாக அணுமின் திட்டங்களைத் தொடங்குவ தில்லை எனவோ,
2. உள்ள திட்டங்களையும் மூடிவிடுவது எனவோ,
3. அல்லது எந்தக் காலத்திலும் அணுசக்தி பக்கம் திரும்புவதில்லை எனவோ,
தீர்மானம் செய்துள்ளது என ஓரளவு புரிந்து கொள்ளலாம். இதில் சோஷலிச நாடுகளும் விதிவிலக்கில்லை என்பதையும் நாம் புரிந்து கொண்டு மேலே செல்வோம்.
- விவரங்கள்
- இராசேந்திர சோழன்
- பிரிவு: தொழில்நுட்பம்
சோவியத் யூனியனின் அணுமின் உற்பத்தி பற்றிப் பலர் பல்வேறு விதமான புள்ளி விபரங்களைத் தந்தாலும், சோவியத் யூனியனின் மொத்த மின் உற்பத்தியில் 10 சதவீதத்தை மட்டுமே அணுமின் சக்தி தருகிறது எனச் சென்னை சேப்பாக்கத்தைச் சேர்ந்த திரு. P.K.G. மேனன், இந்தியன் எக்ஸ்பிரஸ் வாசகர் கடிதப் பகுதியில் குறிப்பிடுகிறார்.
அணு சக்தியை ஆக்க வேலைகளுக்குப் பயன்படுத்துவது என்பதன் முதன் முயற்சியாக, உலகிலேயே முதல் அணுசக்தி நிலையம் 1954இல் கலுகாவுக்கு அருகில் உள்ள ஒபினின்ஸ்க் என்னும் சிறு நகரத்தில் நிறுவப்பட்டதாக, சோவியத் பிரசுரங்கள் தெரிவிக்கின்றன. என்றாலும், அமெரிக்காவைப் போலவே சோவியத் யூனியனிலும் அணுசக்தி நிலையங்களோடு அணு ஆயுதத் தொழிற் சாலைகளும், அணுமின் நிலையங்களுக்குக் கருவிகளை உற்பத்தி செய்து தரும் தொழிற்சாலைகளும் பரவலாக விரவியுள்ளன.
இங்கு ஏற்பட்ட முதல் விபத்து 1958இல் யூரல் மலைச் சாரல் பகுதியிலுள்ள அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து ஆகும். இங்கு அணுக்கழிவுகள் வைக்கப்பட்டிருந்த இடம் ஒன்று வெடித்ததனால் ஏற்பட்ட கதிரியக்கம் 60 கிராமங்கள் வரை பரவியது.
இந்த 60 கிராமங்களையும் சோவியத் யூனியனின் தற்போதைய வரைபடங்களில் காணவில்லை எனவும், இந்தப் பிரதேசத்தில் புல் பூண்டுகள் கூட முளைப்பதில்லை எனவும், இதில் ஏற்பட்ட சேதம் மற்றும் இதர பின் விளைவுகளைச் சோவியத் நாட்டிலிருந்து வெளியேறிய கோராஸ் மெத்தோவ் என்பவர் 1976இல் ஆதாரங்களுடன் நிரூபித்ததாக ஜூனியர் விகடன் தொடர் கட்டுரை கூறுகிறது.
இதற்கு அடுத்த விபத்து 1974இல் காஸ்பியன் கடல் பகுதியில் செவ்செங்கோ அணு உலையில் ஏற்பட்ட விபத்து என்று அறியப்படுகிறது. இங்குள்ள ஈனுலையில் சோடியம் தீப்பற்றியதால் அணு உலை வெடித்தது. கதிரியக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் விளைவுகள் பற்றி விவரமாக எதுவும் வெளியே தெரியவில்லை.
அதற்கு அடுத்த விபத்து 1986இல் ஏற்பட்ட செர்னோபில் விபத்து. உலகில் இதற்குமுன் எவ்வளவோ அணு உலை விபத்துகள் நேர்ந்திருந்தாலும் அணுசக்தியின் ஆபத்து குறித்து உலகம் முழுவதற்கும் புரிய வைத்த பெருமை இந்த விபத்தையே சேரும் என்று சொல்லப்படுகிறது. இதில் விபத்து நடந்த உடனே இறந்தவர்கள் 31 பேர் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. விபத்து நடந்த சமயத்தில் சோவியத் யூனியன் செய்த ஏற்பாடுகளைப் பற்றி உலக நாடுகள் வெகுவாகப் பாராட்டின. அந்த ஏற்பாடுகளினால் உடனடி உயிர்ச் சேதம் தடுக்கப்பட்டது என்றாலும், பல தலைமுறைகளுக்கு வேண்டிய நாசம் இந்த விபத்தால் விதைக்கப்பட்டு விட்டதாகச் சொல்கிறார்கள்.
விபந்து நடந்து ஒரு வருடம் கழித்து மேற்கு ஜெர்மனி யில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. மேற்கு ஜெர்மனியில் ஊனமுடன் குழந்தைகள் பிறப்பது, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பிறப்பது போன்றவை அதிகரித்துள்ளதற்கும், செர்னோபில் விபத்துக்கும் தொடர்பு உள்ளதாக அதில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அடுத்தடுத்த ஆண்டுகளில் 1000 க்கும் மேற்பட்ட புற்றுநோய் மரணங்கள் ஐரோப்பாவில் நிகழ்ந்த தாகக் கூறப்படுகின்றன. இவ் விபத்து நேர்ந்த உடன் 1,35,000 மக்கள் அதைச் சுற்றி உள்ள இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள் எனக் கூறப்படுகிறது.
செர்னோபில்லுக்கு அருகில் உள்ள செர்னோவ்ஸ்கி என்னும் நகரத்தில் காரணம் கண்டறியப்படாத மர்மமானதொரு நோயின் காரணமாக 130 குழந்தைகள் பாதிக்கப்பட்டு, இவர்கள் கீவ், லெனின்கிராடு, மாஸ்கோ நகர மருத்துவமனைகளில் வெற்றிகரமாகக் குணமாக்கப்பட்டு விட்டார்கள் என மாஸ்கோ ரேடியோ 19-11-88 அன்று அறிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் வானொலி அறிவித்ததாவது,
இந் நோய், சுமாரான தலைமுடியுள்ள, நீல விழிகளைக் கொண்ட குழந்தைகளையே அதிகம் பாதித்துள்ளது. முடி உதிருதல், எரிச்சல், பிரம்மைப் பார்வை ஆகிய அறிகுறிகளோடு இந்நோய் துவங்கியது. இந் நோயின் காரணம் பற்றி ஆராய அரசு பல ஆய்வுக் குழுக்களை நிறுவியது. அதில் ஒரு குழு இந்நோய் செர்னோபில் விபத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட கதிர்வீச்சின் காரணமாக இருக்கலாம் என்கிற கருத்தை முற்றாக ஏற்றுக்கொள்ள மறுத்தது.
இந்நோய் மிகமிக மெதுவாகத்தான் பரவுகிறது என்றாலும், பகுதிவாழ் மக்களிடையேயும், அரசு வட்டாரத்திலும் இது ஆழ்ந்த கவலையளிப்பதாய் உள்ளது. இந்தக் கவலையின் காரணமாகச் சுமார் 15,000க்கும் மேற்பட்ட குழந்தைகளை அதன் பெற்றோர்கள் செர்னோவ்ஸ்கி நகரத்தை விட்டு அப்பால் கொண்டு சென்றுவிட்டிருக்கிறார்கள்.
கீழ்க் குறிப்பிட்டுள்ள இத் தகவல்களையும்மேற்கண்ட செய்திகளின் தொடர்ச்சியாகப் பார்க்கலாம்.
காரணம் அறியமுடியாத மர்மமான நோயின் காரணமாக 160க்கும் மேற்பட்ட குழந்தைகள் ‘கீவ்’ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். முடி உதிர்தல், நரம்புக் கோளாறுகள், மனநிலைப் பாதிப்புகள், பிரம்மைப் பார்வைகள் ஆகியவற்றினால் இக் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுற்றுச் சூழலிலும் நிலத்திலும் ‘தல்லியம்’ விஷப் பொருள் அதிகமாகப் பரவியிருப்பதுதான் இந்நோய்க்குக் காரணம் என்று விசேஷ ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
சமீபத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட அர்மீனியன் பகுதியில் அர்மீனியாவின் தலைநகரமான எரவான் நகரில் இயங்கி வந்த அணு சக்தி நிலையம் செயல்முடக்கம் செய்யப் பட்டுள்ளதாகச் சோவியத் பிரதமர் அறிவித்திருக்கிறார்.
இந்த அணுசக்தி நிலையம் இந்த நில நடுக்கத்தால் எந்தச் சேதாரத்துக்கும் உள்ளாகவில்லை என்பதோடு, இது மிகச் சிறந்த பாதுகாப்பு வசதிகளைக் கொண்ட ஒரு அணுமின் நிலையம் என்றாலும் மக்களுடைய வேண்டுகோளுக்கிணங்க இந்த நிலையம் செயல்முடக்கம் செய்யப்பட்டதாகவும், இது நிரந்தரமாகவே மூடப்படவும் உத்தேசிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சொன்னார். 1989 - 90இல் இதை நிரந்தரமாகவே மூடும் பணி தொடங்கி அது இரண்டு ஆண்டுகளில் நிறைவேறிவிடும் என்றார்.
இது அர்மேனியா பகுதியில் உற்பத்தி செய்யப்படும் நீர் மின்சக்தியைப் போல மூன்று மடங்கு மின் சக்தியை உற்பத்தி செய்து வந்தது என்பதும், இது ஜார்ஜியா, அஜர்பைஜான் ஆகிய குடியரசுகளுக்கும் தேவையான மின்சாரத்தை வழங்கி வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நிலநடுக்க அபாயம் காரணமாகவும், செர்னோபில் விபத்துக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாகவும், சோவியத் யூனியன் 6 அணுசக்தி நிலையங்களை மூடிவிடுவது என முடிவு செய்திருக்கிறது. இத்தகவலைச் சோவியத் யூனியன் அணுசக்தி அமைச்சர் 24-12-88 அன்று அறிவித்திருக்கிறார்.
செர்னோபில் விபத்தையடுத்து மேற்கொள்ளப்பட்ட பணிகள்:
விபத்து நடந்த இடத்தில் சில துப்புரவுப் பணிகளை, மனிதர்கள் கிட்ட நெருங்கவே முடியாது என்பதால் யந்திர மனிதர்களை அனுப்பி, தொலைக் கட்டுப்பாட்டுக் கருவிகளைக் கொண்டு மேற்கொண்டார்கள். கதிரியக்கம் அதிகமாய்த் தாக்க முடியாத ஈயத்தாலான அடிப் பகுதிகளைக் கொண்ட ஹெலிகாப்டர்கள் மூலம் விபத்து நடந்த இடத்துக்கு மேலே பறந்து 40 டன் போரான் கார்பைடையும், 800 டன் சுண்ணாம்புக் கல்லையும், 2400 டன் ஈயத்தையும், மேலும் பல ஆயிரக் கணக்கான கான்க்ரீட் கலவைகளையும் நிலத்தின்மீது கொட்டினார்கள்.
அடிமண்ணிற்குக் கதிரியக்கம் பரவிவிடக் கூடாது என்பதற்காகப் பல நூறு ஏக்கர் நிலப்பரப்பில் ஒருவகைப் பிளாஸ்டிக் துகள் தெளிக்கப்பட்டது. பின்னர் இந்தப் பிளாஸ்டிக் ஈய டின்களில் அடைக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது. இந்தத் தகவல்களை ‘After Chernobyl’ என்கிற நூலில் ‘Christer Flavin’ என்பவர் குறிப்பிட்டு, ‘Science Age’ ஜூலை 87 இதழில் வெளி வந்ததாகப் “புறப்பாடு” இதழ் தெரிவிக்கிறது.
இந்த அணு உலை வெடித்தபோது 7,000 கிலோ எடையுள்ள 5 முதல் 10 கோடி கியூரிகள் ஆற்றல் உள்ள கதிரியக்க வீச்சுடன் 50 தனிமங்களின் கதிர் இயக்க ஐசோடோப்புகள் காற்றுடன் கலந்து 2,000 கி.மீ. சுற்றளவுக்கு உலக நாடுகளில் பரவியதாகக் கணக்கிடப்படுகிறது. இப்படிப் பரவிய 20 நாடுகளில் கதிர் இயக்கப் பொருள் கலந்துவிட்ட பால், இறைச்சி போன்ற உணவுகள் உட் கொள்ளப்படுவது தடுக்கப்பட்டது. இவற்றின் விலை கடுமையான வீழ்ச்சியைக் கண்டது.
செர்னோபில் கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைச் சிகிக்சை செய்வதற்காக இரஷ்யாவுக்குச் சென்று வந்த அமெரிக்க மருத்துவரான டாக்டர் இராபர்ட்கேல் என்பவர், குறைந்தது ஒரு லட்சம் மக்களாவது ஆபத்து விளைவிக்கும் அளவிற்கான கதிரியக்கத்தைப் பெற்றுள்ளனர் என்கிறார்.
விபத்து நடந்த இடங்களைச் சுற்றியிருந்த கருவுற்ற பெண்கள் கருக்கலைப்பு செய்து கொள்ளுமாறு வேண்டப் பட்டனர். அதிகாரப் பூர்வமான அறிவிப்பு ஏதும் இல்லாமலே இப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
செர்னோபில் விபத்தில் பிரும்மாண்டமான கனத்த கதிரியக்க மேகம் ஒன்று விபத்து நடந்த இடத்திற்கு மேலே எழுந்தது. இது அப்படியே வானில் நகர்ந்து பல இடங்களில் கதிரியக்கமுள்ள மழையைப் பொழிந்தது. இந்த மழையின் காரணமாக மண்ணில் முளைத்தெழுந்த புற்களிலும் கதிரியக்கம் பரவியிருந்தது. இதை மேய்ந்த விலங்குகளும் அபாயகரமான கதிரியக்கத்துக்கு ஆளாயின.
ஸ்வீடன் காடுகளில் ‘மூஸ்’ எனப்படும் ஒருவகைக் காட்டு மான்களை அதன் இறைச்சியின் சுவைக்காக அதிகம் வேட்டை யாடுவார்களாம். இப்படி வேட்டையாடப் படுவதன் காரணமாக அந்த விலங்கினமே பூண்டற்று அழிந்து போய்விடுமோ என்று அரசாங்கம் மான் வேட்டையைத் தடை செய்திருந்தது. ஆனால் செர்னோபில் விபத்துக்குப் பிறகு திருட்டுத் தனமாகக் கூட அந்த மான்களை யாரும் வேட்டையாடுவதில்லையாம். காரணம் அந்த மான்கள் கதிரியக்கமுள்ள புல்லை மேய்ந்து இறைச்சியும் கதிரியக்கத்துக்கு ஆளானதுதான். இதனால் 1,36,000 எண்ணிக்கையளவே இருந்த ‘மூஸ்’ வகை மான்கள் ஒரே ஆண்டில் இரட்டிப்பாகி, 4,00,000மாகப் பெருகியதாம். இப்போது இந்த மான்கள் காடுகளிலும் இடம் கொள்ளாமல் அடிக்கடி மந்தை மந்தையாகக் காட்டோரப் பகுதிச் சாலைகளை ஆக்ரமித்து, அதன் காரணமாக சாலை விபத்துகள் அதிகம் நிகழ்கிறதாம்.
இந்தச் செர்னோபில் விபத்தால் ஸ்வீடன் நாட்டில் அதிகம் பாதிக்கப்பட்டது காவ்லே பகுதியாகும். இரண்டு ஆண்டு களுக்குப் பின் ‘மூஸ்’ மான்களின் கதிரியக்கம் இரட்டிப் பாகியுள்ளது. 1 கிலோ இறைச்சியில் சுமார் 3,000 ‘பெக்காரெல்’ கதிரியக்கம் இருக்கும் என நம்பப்படுகிறது. அடுத்த ஆண்டில் இது இன்னும் அதிகமாகுமாம்.
29.1.89 இந்தியன் எக்ஸ்பிரசில் வெளிவந்த செய்தி:
“செர்னோபில் இன்னும் குடியேற்றத்துக்கு இலாயக்கற்ற இடமாகவே இருக்கிறது. அதன் சுற்று வட்டாரம் 30 கி.மீ. தூரத்துக்குப் பாலைவனமாகக் காட்சியளிக்கிறது. செர்னோபில் விபத்துக்குப் பின் ஏற்கெனவே அங்குக் குடியமர்ந்திருந்த மக்கள் தங்கள் குடியிருப்புகளைக் காலி செய்துவிட்டு வெளியேறி விட்டனர். அதன் பிறகு யாரும் மீண்டும் குடியேறவே இல்லை. இப்போதும் அது யாரும் குடியேற முடியாத பகுதியாகவே காட்சியளிக்கிறது. காரணம் இந்த விபத்தினால் ஏற்பட்ட கதிர்வீச்சின் தாக்கம் இன்னும் தணிந்த பாடில்லை.
இந்தச் செர்னோபில் விபத்துக்குப் பிறகு, அதாவது அர்மீனியன் பகுதி நிலநடுக்கத்துக்குப் பின், பல அணுசக்தி நிலையங்கள் மூடப்படுவதற்கு முன்பே, செர்னோபில் விபத்தின் விளைவாகச் சோவியத் யூனியனில் மின்ஸ்க், ஒடேஸ்ஸா, கிளாஸ்னடார் ஆகிய மூன்று இடங்களிலுமுள்ள அணுசக்தி நிலையங்கள் மூடப்பட்டன. இது தொடர்பான மேலும் சில செய்திகளை 28.8.88 தேதியிட்ட ‘தினமணி’ இதழில், சோஷலிச நாடுகளிலும் அணுமின் உலைக்கு எதிர்ப்பு என்கிற கட்டுரையில் நாகர்ஜூனன் என்பவர் குறிப்பிடுகிறார்.
சோவியத் அணுசக்தி விஞ்ஞானியும், சோவியத் அறிவியல் தலைமைக் குழு உறுப்பினருமான 57வயது விஞ்ஞானி வாலெரி லெகசோவ் 1988 ஏப்ரல் 27ல் தற்கொலை செய்துகொண்டார். அவர், தற்கொலை செய்து கொள்ள தேர்ந்தெடுத்த நாள் செர்னோபில் விபத்து நடந்த நாள். அதாவது 1986 ஏப்ரல் 27இல். செர்னோபில் விபத்து நடந்து சரியாக இரண்டாமாண்டு நினைவு நாளில், அவர் தற்கொலை செய்து கொண்டார்.
இவர், குட்சட்டாப் அணுசக்தி ஆராய்ச்சி நிலையத்தின் உதவி இயக்குநராகப் பணியாற்றி வந்தவர். பல அணுசக்தி நிலையங்களை வடிவமைத்தவர். செர்னோபில் விபத்தின் பின் விளைவுகளைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கேற்றவர்.
செர்னோபில் விபத்தினால் தைராய்டு புற்றுநோய்க்கு ஆளானவர்கள் அறுவை சிகிச்சைக்குப் பின்...
அவர் தற்கொலை செய்துகொண்டதன் காரணம்... மரணப் படுக்கையில் அவர், எழுத்தாளர் அலெஸ் அடெமோவுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது : “அணுசக்தி என்பது கட்டுப் படுத்த முடியாத பேரபாயமாக எழுந்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த இதுவரை விஞ்ஞானம் விடைகாண முடிய வில்லை. விடைகாண முடியுமா என்பதும் சந்தேகம். இந்தச் சக்தியின் பேரழிவிலிருந்து மனித குலம் விடுதலை அடைய வேண்டுமானால் அதற்கு ஒரே வழி... இச்சக்தியைக் கையாளாமல் இருப்பதே.” மேலும் அவர் சொன்னார் :“செர்னோபில் விபத்து போன்ற விபத்து இரஷ்யாவில் உள்ள பிற அணுமின் நிலையங்களிலும் நிகழலாம். இதற்கான காரணங்களைத் தடுக்கவே முடியாது”.
இவர் ஆரம்ப முதலே அணுசக்தியின் ஆதரவாளராக இருந்தவர். அணுசக்தியைப் பயன்படுத்துவதைத் தவிர மனித குலத்துக்கு வேறு மாற்று வழியில்லை என்று வாதாடியவர். அணு சக்தியே மனித குலத்தின் எதிர்கால நெருக்கடிகளுக்கு விமோசனமாக இருக்கப் போகிறது என்று வலுவாக நம்பியவர். இறுதி நாட்களில் தன் நம்பிக்கையெல்லாம் தகர்ந்து போனதை அடுத்து, அணுசக்தியின் எதிர்ப்பாளராக மாறியவர்.
1979 அமெரிக்க மூன்றுமைல் தீவு விபத்துக்குப் பின்னிருந்தே பெரும் தொழில் நகரங்களுக்கு அருகில் அணுமின் நிலையங்கள் கட்டுவதற்குச் சோவியத் ஏடான ‘கம்யூனிஸ்டு’ இதழில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்துள்ளது. இருந்தும் இது செர்னோபில் விபத்துக்குப் பிறகே முழுமையாக உணரப்பட்டது.
‘பிராவ்தா’ சோவியத் இதழின் விஞ்ஞான ஆசிரியர் ‘குபரேயவ்’ என்பவர் செர்னோபில் விபத்து பற்றி ஒரு நாடகம் எழுதினார். ‘சார் கோஃபகஸ்’ என்பது நாடகத்தின் பெயர். இது இலண்டன், பாரீஸ், நியூயார்க் உட்பட பல நகரங்களில் நடந்தேறி அமோகப் பாராட்டுதல்களைப் பெற்றது.
சோவியத் யூனியனில் 1958 யூரல் மலை, சிஷ்டிடாவ் என்னுமிடத்தில் அணுக் கழிவுப்பொருள் கிடங்கு வெடித்ததோ, 1974ல் ஷெவ்ஷென்கோவில் பரிசோதனை ஈனுலை வெடித்ததோ, 1983 ஆட்டோமாஷில் உள்ள அணு உலை தயாரிப்பு தொழிற்சாலை வெடித்ததோ வெளியுலகுக்கு உடனடியாகத் தெரியவில்லை. இவை, சோவியத் யூனியனிலிருந்து வெளியேறிய விஞ்ஞானிகள் தந்த தகவல்கள் மூலமும், மற்றும் பல விவரங்கள் சமீபத்திய சோவியத் கொள்கையான ‘கிளாஸ் நாஸ்த்’துக்குப் பிறகு தெரிய வந்தவைகளே. அல்லது மிகக் காலம் கடந்து சோவியத் இதழ்களில் வெளியிடப் பட்டவைகளே.
உதாரணமாய் 1958இல் யூரல் மலைப் பகுதியில் ஏற்பட்ட விபத்து பற்றி சோவியத் அதிருப்தி விஞ்ஞானி டாக்டர் ஜோரஸ் மெட்வேதெவ் 1979இல் எழுதுகிறார். அதன்பிறகே இவ்விபத்து பற்றி விரிவான தகவல்கள் தெரியத் தொடங்கின.
சோவியத் யூனியனில் உள்ள பல அணுசக்தி நிலையங்கள், சோவியத் யூனியனின் ஐரோப்பியப் பகுதியான அர்மீனியா, லிதுவேனியா, லெனின் கிராடு, குர்ஸ்ட், ஸ்மோ லென்ஸ்க், ரோவ்னா ஆகிய பகுதிகளிலேயே அதிகம் உள்ளன.
அணுமின் நிலையங்களுக்கான அணு உலைகள் தயாரிக்கும் தொழிற்சாலை சோவியத் யூனியனில் உள்ள ஆட்டோமாஷ் தொழிற்சாலை. சேர்னோபில் விபத்துக்குப் பிறகு சோவியத் அணுசக்தித் தொழில் எதிர்காலமற்று, பெரும் நெருக்கடிக்குள்ளாகியது. தற்போது இந்தியா போன்ற நாடுகளுடன் சோவியத் யூனியன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் மீண்டும் அணுசக்தித் தொழிலுக்கு நம்பிக்கையூட்டியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
- அமெரிக்காவும் அணுசக்தித் திட்டங்களும்
- அணுசக்தி - பொதுவான வாதங்கள்
- அணுசக்தி தூய்மையானதா? நம்பகமானதா?
- அணுசக்தி சாதகமும் - பாதகமும்
- கதிரியக்கத்தின் உயிரியல் விளைவுகள்
- அணுசக்தித் தொழில் நுட்பம்
- அணுகுண்டும் அணு உலையும்
- கதிரியக்கமும் கதிர்வீச்சும்
- அணுக்கரு ஆற்றலும் இதர ஆற்றல்களும்
- அணுக்கரு ஆற்றல்
- பல்வகை ஆற்றல்கள்
- அணுவின் இயற்பியல் & வேதியியல் பண்புகள்
- அணுவின் வகைகள்
- அணு ஆற்றல் என்றால் என்ன?
- மின் ஆற்றலை வழங்கும் ’செயற்கைச் சூரியன்’கள்
- லேப்டாப் பேட்டரி சக்தியை பராமரிக்க வேண்டுமா!
- அறிவியல் கருவிகளும் அவற்றின் பயன்பாடுகளும்
- உருப்பெருக்கியை உருவாக்கிய ஜோசப் ஜாக்சன் லிஸ்டர்
- வெப்பமானி எப்போது முதலில் உருவாக்கப்பட்டது?
- புதிய முறையில் மின்சார தயாரிப்பு