கீற்றில் தேட...
இயற்கை & காட்டுயிர்கள்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
உயிர்ப் பன்மயத்தன்மை மறைந்து கொண்டிருக்கும் நிலையில் இயற்கை மயான அமைதியில் ஆழ்கிறது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். சூழல் மண்டலங்களில் இயற்கை ஒலிகளின் செறிவு மற்றும் அவற்றின் பன்முகத் தன்மையின் இழப்பு அதன் ஆரோக்கியத்தின் அழிவைப் பிரதிபலிக்கிறது. சூழல் அழிவு உடனடியாக தடுத்து நிறுத்தப்படாவிட்டால் இந்த ஒலிகள் ஒலியியல் புதைபடிவங்களாக (acoustic fossils) மாறிவிடும் என்று ஒலி சூழலியலாளர்கள் (Sound ecologists) கூறுகின்றனர்.
தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்ததால் ஒலிகள் சூழல் மண்டல ஆரோக்கியம் மற்றும் பன்முகத் தன்மையை அளவிட ஒரு முக்கிய வழியாகப் பின்பற்றப்படுகிறது. காடுகள், மண், கடல்கள் போன்ற அனைத்தும் அவற்றிற்கென்று உள்ள ஒலி முத்திரைகளை (sound signatures) வெளியிடுகின்றன. வாழிடங்கள் மற்றும் உயிரினங்களை சூழல் ஒலிகளைப் பயன்படுத்தி அளவிடும் ஆய்வாளர்கள் எல்லா இடங்களிலும் நிசப்தம் பரவி வருகிறது என்று கூறுகின்றனர்.
ஆயிரக்கணக்கான வாழிடங்களில் உயிரினங்களின் செழுமை மற்றும் வகைகள் மறைந்து கொண்டிருக்கின்றன அல்லது குறைந்து வருகின்றன. இதனால் முன்பு நாம் கேட்டு பழக்கப்பட்ட பறவைகளின் காலை அழைப்புகள் (bird calls), பாலூட்டிகளின் சலசலப்புகள், பூச்சிகளின் கோடை கால ஓசைகள் போன்ற பல உயிரினங்களின் ஒலிகள் இன்று மறைந்து விட்டன. ஒரு சூழல் மண்டலத்தில் ஒலி என்பது முற்றிலும் இல்லாமல் போய்விட்டது. காலத்திற்கு எதிராக நாம் ஓட்டப் பந்தயம் ஓடுகிறோம்.
Bernie Krause (right), who has been recording nature in Sugarloaf Ridge state park, California, for 30 years, with fellow sound ecologist Jack Hines. Photograph: Cayce Clifford/The Guardian
"இப்போதுதான் இயற்கை இத்தகைய ஒலிகளை எழுப்புகின்றன என்பதே நமக்குத் தெரியவந்தது. ஆனால் அதற்குள் இந்த ஒலிகள் மறைந்து கொண்டிருக்கின்றன” என்று ப்ரிஸ்ட்டல் (Bristol) பல்கலைக்கழகப் பேராசிரியர் ஸ்டீவ் சிம்சன் (Prof Steve Simpson) கூறுகிறார்.
“ஆழமான இந்த மாற்றங்கள் எல்லா இடங்களிலும் நிகழ்கின்றன. முன்பு ஒலிப்பதிவு செய்தவற்றில் 75% சூழல் மண்டல வாழிடங்களும் இன்று இல்லை” என்று கடந்த 55 ஆண்டுகளாக பூமியில் உள்ள ஏழு கண்டங்களிலும் 5,000 மணி நேர ஒலிப்பதிவுகளை செய்த அமெரிக்க ஒலிப்பதிவாளர் பெர்னி க்ராஸ் (Bernie Krause) கூறுகிறார்.
“முன்பு பதிவு செய்து பாதுகாத்து வைத்துள்ள ஒலிகள் அனைத்தும் அன்று வாழ்ந்த உயிரின வகைகளைக் குறிக்கிறது. இன்று இந்த ஒலிகளைக் கேட்க முடியாது. பதிவு நடந்த இடங்களும் இன்று காணாமல் போய்விட்டன. அந்த உயிரினங்கள் எவை என்பது நமக்குத் தெரியாது” என்று கடந்த 40 ஆண்டுகளாக உலகின் எல்லா முக்கிய சூழல் மண்டலங்களிலும் ஒலிப்பதிவுகளை செய்துள்ள அமெரிக்க பெர்டு (Purdue) பல்கலைக்கழக ஆய்வாளர் பேராசிரியர் ப்ரயன் பிஜனோஸ்கி (Prof Bryan Pijanowski) கூறுகிறார்.
நிலம் முதல் நீர் வரை ஒலிகள்
ஒலிகள் இயற்கையாக எழுப்பப்படும் பரப்புகள் (sound scapes) மாறிக் கொண்டிருப்பது பற்றி பல ஆய்வுகள் இப்போது நடந்து வருகின்றன. பல குறுக்கீடுகளால் இங்கு ஒலிகள் இடையூறு செய்யப்படுகின்றன, நிசப்தமாக்கப்படுகின்றன. வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் 200,0000 இடங்களில் நடந்த ஆய்வுகள் இந்த இரு கண்டங்களிலும் கடந்த 25 ஆண்டுகளில் ஒலி பன்முகத்தன்மை மற்றும் ஒலி காட்சிகள் அழிவதால் சூழல் அழிகிறது என்று நேச்சர் இதழில் 2021ல் வெளிவந்த ஆய்வு கூறுகிறது.
செழுமை மற்றும் மிக அதிக எண்ணிக்கையில் இருந்த உயிரினங்கள் அழிந்ததே இதற்குக் காரணம். இயற்கையுடன் ஒன்றிணைந்து பழகும் அடிப்படை வழிகளில் மனிதனிடம் ஏற்பட்ட மாற்றம் பல காலங்களாக இருந்து வந்த தொடர்புகளில் பெரும் சரிவை ஏற்படுத்தியது. இது மனித ஆரோக்கியம் மற்றும் நல வாழ்வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆய்வுக்குழுவினர் சுட்டிக் காட்டுகின்றனர்.
சூழல் மண்டலங்களில் சம்பவிக்கும் இந்த மாற்றம் காற்று, காடுகள், மண் மற்றும் நீருக்கடியில் நிகழ்கிறது. இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்க கடற்படை நீருக்கடியில் இருந்து சோவியத் நீர் மூழ்கிக் கப்பல்களைக் கண்காணிக்க பல முறைகளைப் பயன்படுத்தியது. 1990 வரை பவளப்பாறைகளுக்கு அருகில் உள்ள இடங்களில் அங்கு வாழ்ந்த உயிரினங்கள் பல ஒலிகளை எழுப்பின. இதனால் படையினர் கண்காணிப்பை மேற்கொள்ள சிரமப்பட்டனர்.
மக்கள் விஞ்ஞானிகள் (civilian scientists) அது வரை இந்த ஓசைகளின் வகைப்படுத்தப்பட்ட தரவுகளைக் கேட்டனர். “ஆரோக்கியமான ஒரு பவளப்பாறைக்கு அருகில் செல்லும்போது எங்கள் மனது அங்கு வாழ்ந்த உயிரினங்கள் எழுப்பிய ஓசைகளை கேட்டு மகிழ்ச்சியடைந்தது. ஆரோக்கியமான ஒரு பவளப்பாறை திட்டில் இருந்து வரும் ஓசைகள் ஒரு ஒலித் திருவிழா. பவளப்பாறைகளுக்கு அருகில் மோட்டார் படகுகள் ஏற்படுத்தும் ஓசை இயற்கை ஒலிகளைக் கேட்பதில் பெரும் இடையூறு ஏற்படுத்தின. 2015-2016ல் பெருமளவில் நிறமிழந்ததால் 80% பவளப்பாறைகளும் அழிந்தன. 1950 முதல் பூமியில் பாதிக்கும் மேல் பவளப்பாறைகள் இல்லாமல் போய்விட்டன. புவி வெப்ப உயர்வு 2 டிகிரியை எட்டும்போது 99 சதவிகிதத்திற்கும் மேலான பவளப்பாறைகள் அழிய ஆரம்பிக்கும். இதன் விளைவு கடலில் உருவாகப் போகும் மயான அமைதி” என்று கடந்த 20 ஆண்டுகளாக ஹைடிரோ போன்களைப் பயன்படுத்தி பவளப்பாறை ஒலிகளை ஆராய்ந்து வரும் சிம்சன் கூறுகிறார்.
பிரதிபலிக்கும் கண்ணாடி
“இந்த ஒலிகளும் அமைதியும் ஒரு கண்ணாடியின் பிரதிபலிப்பு போல நம்மிடம் பேசுகின்றன. கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் வன உயிரினங்களின் எண்ணிக்கை சராசரியாக 70% குறைந்து விட்டது. இயற்கையின் எந்த ஒலியையும் நாம் மீண்டும் கேட்கத் தொடங்க வேண்டும். முன்பு இத்தகைய ஓசைகளை கேட்டுப் பழகியவர்களுக்கு இப்போது இவற்றைக் கேட்காமல் இருப்பது வேதனை தரும் ஒன்று. இன்று நாம் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சனையை இது எடுத்துக்காட்டுகிறது.
சூழல் பாதுகாப்பு முயற்சிகள் மற்றும் சூழல் மண்டலங்களின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்க இன்று ஒலி தரவுகளுடன் காட்சித்தரவுகளும் பயன்படுத்தப்படுகின்றன. விலை குறைந்த உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய ஒலிப்பதிவு கருவிகள், சூழல் அழிவு பற்றிய அதிகரித்து வரும் கவலைகள் சூழல் ஒலிப்பதிவு துறையை பிரபலமடையச் செய்து வருகிறது” என்று உலக ஒலிக்காட்சிகள் திட்டத்தின் (World Soundscape Project) கீழ் 1973 முதல் மறைந்துவரும் சூழல் மண்டல ஒலிகளை ஆவணப்படுத்தும் ஒலி ஆய்வாளர் ஹில்டிகார் வெஸ்டகேம்ப் (Hildegard Westerkamp) கூறுகிறார்.
மைக்ரோ போன் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியால் விஞ்ஞானிகள் முன்பு கேட்க இயலாத இயற்கை ஒலிகளை கேட்க இத்தொழில்நுட்பத்தை இப்போது அதிகம் பயன்படுத்துகின்றனர். “அழுத்தத்திற்கு உள்ளான துடிப்புகள் போன்றவை மரங்களின் தண்டில் உள்ள அடுக்குகளுக்கு இடையில் இருக்கும் இடைவெளிகள் (cavity) வழியாக வெளிவருகின்றன” என்று மரத் தண்டுகளில் மைக்ரோ போன்களைப் பொருத்தி உயிருள்ள திசுக்கள் வெளியிடும் ஒலிகளைக் கேட்டு ஆராய்ந்து வரும் சுவிட்சர்லாந்து ஒலிச்சூழலியலாளரும் ஒலிப்பதிவாளருமான மார்க்கஸ் மீட்டர் (Marcus Maeder) கூறுகிறார்.
அவர் ஒரு மலைப்புல் தாவரம் வளர்ந்திருந்த மண்ணில் மைக்ரோ போனைப் பயன்படுத்தி ஆராய்ந்தபோது அதன் உயிர்த்துடிப்பை அவரால் கேட்க முடிந்தது. இயற்கையின் ஓசையுடன் ஓர் ஒலி உலகம் வாசல் திறந்தது. பூச்சிக்கொல்லிகள் அதிக அளவில் போடப்பட்டு தீவிர மேலாண்மை செய்யப்படும் விவசாய நிலங்கள் வெளியிடும் ஓசைகள் மிக வித்தியாசமானவை. அத்தகைய மண் நிசப்தமானது” என்று மார்க்கஸ் கூறுகிறார்.
“மறைந்து வரும் ஒலிக்காட்சிகள் பல விஞ்ஞானிகளுக்கு சோகம் தருபவை. ஆராயத் தூண்டுபவை. என்றாலும் இயற்கையின் அழகை எடுத்துச்சொல்ல இந்த ஆய்வுகள் உதவுகின்றன. பன்முகத்தன்மை என்றால் என்ன என்பதை ஒரு விஞ்ஞானியாக இருந்து விளக்குவது கடினம். ஆனால் ஓர் ஒலிப்பதிவை ஒலிக்கச் செய்தால் நாம் எதைப் பற்றி பேசுகிறோம் என்பது எளிதில் புரியும். இவற்றை நாம் பாதுகாக்க முயன்றாலும் இல்லாவிட்டாலும் இவை இந்த இடத்தின் குரல்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும். மனிதர்களுக்கு ஒலி உணர்வைத் தூண்டும் ஒரு முக்கிய சக்தி. ஒலியியல் காட்சிகள் வலிமையானவை. ஓர் ஆய்வாளராக இருந்து இதைப் பற்றி நினைப்பது சுவாரசியமானது. ஆனால் உணர்வுப்பூர்வமாக வேதனை தருவது” என்று பிஜனோஸ்கி கூறுகிறார்.
மீளமுடியாத நித்திரையில் ஆழ்ந்து கொண்டிருக்கும் இயற்கையின் ஒலிகளை இதற்கு மேலும் அழியாமல் பாதுகாப்பது மனித குலத்தின் இன்றைய அவசரத் தேவை என்று விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
மருத்துவமனையின் நர்சரிக்குள் மிருதுவான மணல் மேட்டில் படுத்துக் கொண்டிருக்கும் பானி (Bani) என்ற ஒன்பது மாதமே ஆன அந்த குட்டி பெண் யானை பார்ப்பதற்கு ஒரு சீரழிவில் ஈடுபடுத்தப்பட்ட குழந்தையை போல காட்சி தந்தது. பராமரிப்பு குழுவைச் சேர்ந்த இரண்டு பேர் அவளின் முன்னங்காலி எண்ணெய் மசாஜ் செய்து கொண்டிருந்தனர். தலைக்கு அருகில் உட்கார்ந்திருந்த மற்றொருவர் மென்மையாக அவளின் பெயரைச் சொல்லி அழைத்து பேசிக் கொண்டே கரும்புத் துண்டுகளை வாயில் ஊட்டிக் கொண்டிருந்தார்.
ஒன்பது மாதமே ஆன அந்த குட்டி யானைக்கு இது ஒரு ராஜமரியாதை. ஆனால் இது போன்ற மிகச் சிறந்த கவனிப்பும் பராமரிப்பும் மருத்துவ சிகிச்சையும் அதற்கு மிக மிக அவசியம். 2023 டிசம்பர் நடுப்பகுதியில் உத்ரகண்ட் மாநிலம் நைனிட்டால் மாவட்டம் ஹல்டுவானி (Haldwani) பகுதியில் ஜிம் கார்ப்பெட் தேசியப் பூங்காவிற்கு அருகில் பானி கருவுற்றிருந்த தன் தாயுடன் ஒரு இரயில் தண்டவாளத்தைக் கடந்து கொண்டிருந்தாள். அப்போது வேகமாகப் பாய்ந்து வந்த ஒரு இரயில் அவர்கள் மீது மோதியது.
இதில் பானியின் தாய் கொல்லப்பட்டாள். பானி ஒரு பள்ளத்திற்குள் தூக்கி எறியப்பட்டாள். மோசமான காயங்களுடன் அவளுடைய எலும்புகள் உடைந்தன. விபத்து ஏற்படுத்திய மீள முடியாத அதிர்ச்சியால் பயந்துபோன பானியால் எழுந்து நிற்க முடியவில்லை. சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதைக் கண்ட வனத்துறையினர் வனவிலங்குகள் நலனுக்கான அவசர சேவை அமைப்பைத் (Wildlife SOS) தொடர்பு கொண்டனர்.
அவசர சிகிச்சை அளிக்க நிபுணர்கள் வந்தனர். இடம்பெயரத் தகுதியான உடல்நிலையை பெற்றவுடன் யானைகளுக்கான அவசர உதவி வாகனத்தில் பானி, மதுராவில் உள்ள இந்தியாவில் யானைகளுக்காக இருக்கும் ஒரே ஒரு சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள்.
மதுரா வந்து சேர்ந்ததில் இருந்து அதற்கு தீவிர லேசர் சிகிச்சை, உடலியக்கவியல் பயிற்சிக்கான சிகிச்சைகள், நீர் சிகிச்சை, நரம்புத் தூண்டுதல் சிகிச்சை மற்றும் ஆயுர்வேத மசாஜ் சிகிச்சைகள் தொடர்ந்து கொடுக்கப்படுகின்றன.
ஊழியர்களுக்கு மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் ஏற்படுத்தும் விதம் அவளுடைய முதுகுத்தண்டில் உண்டான காயம் குணமடைந்து வருகிறது என்பதன் அடையாளமாக ஒரு நாள் அவள் தன் வாலை திடீரென்று ஆட்டினாள். பிறகு அவளால் தாங்கியின் உதவியால் ஒரு சில நிமிடங்களுக்கு நிற்க முடிந்தது. “அது ஒரு பரவசமூட்டும் நிமிடம். பானி இனி தன் வாழ்வை உடல் ஊனத்துடனேயே வாழ வேண்டியிருக்கும். என்றாலும் ஒவ்வொரு நாளும் அவளுடைய பயம் மெதுவாகக் குறைந்து வருகிறது.முன்பை விட அவள் இப்போது அதிக நேரம் இயல்பாக விளையாட ஆரம்பித்திருக்கிறாள். தனக்கு கொடுக்கப்படும் வாழைப்பழங்களை மிக விருப்பத்துடன் உண்கிறாள். சரியான நேரத்திற்கு அவை கிடைக்கவில்லை என்றால் பழங்களைக் கேட்டு நாடகமாடுகிறாள். இதற்கு அவள் பல தந்திரங்களைப் பயன்படுத்துகிறாள்” என்று வனவிலங்குகள் நலனுக்கான அவசர சேவை அமைப்பின் இணை தோற்றுனர் கார்த்திக் சத்ய நாராயண் (Kartick Satyanarayan) கூறுகிறார்.
பானியே இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த முதல் காட்டு யானை. தண்டவாளங்கள் காடுகளில் யானைகளின் வாழிடங்கள் வழியாகவும் அவற்றின் வலசை பாதைகள் வழியாகவும் ஊடுருவிச் செல்கின்றன. இதனால் இரயில்கள் இந்த உயிரினங்களின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துகின்றன. இதையே இந்த குட்டி யானையின் வருகை சுட்டிக் காட்டுகிறது. “இரயில் பாதைகள் அமைக்க ஆகும் செலவு மற்றும் அவை செல்லும் வழிகளே அன்றி வாழிடம் துண்டாடப்பட்ட நிலையில் உணவிற்காகவும் நீருக்காகவும் அலையும் யானைகளைக் காப்பாற்ற வேண்டும் என்பது இந்திய இரயில்வேயின் முக்கிய கவலையாக இல்லை” என்று சத்ய நாராயண் கூறுகிறார்.
மின் அதிர்ச்சிகள் மூலம் ஏற்படும் அகால மரணங்களுக்கு அடுத்தபடியாக இரயில்கள் மோதி ஏற்படுத்தும் விபத்துக்களே இந்தியாவில் யானைகள் உயிரிழக்க இரண்டாவது முக்கிய காரணமாக உள்ளது. கடந்த பத்தாண்டில் இரயில் விபத்துக்களால் 200 யானைகள் உயிரிழந்துள்ளன என்று அரசின் புள்ளிவிவரம் கூறுகிறது. காடுகள் வழியாக இரயில் பாதைகள் செல்லும்போது தண்டவாளங்களில் இவை இரத்தம் சிந்துகின்றன, பரிதாபமாக உயிரிழக்கின்றன.
இந்திய யானைகள் ஆபத்தான நிலையில் உள்ள விலங்குகள் பட்டியலில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடைசியாக நடந்த 2019 கணக்கெடுப்பின்படி உலகளவில் 40,000 முதல் 50,000 யானைகள் மட்டுமே வனப்பகுதிகளில் வாழ்கின்றன. துண்டாடப்பட்ட இவற்றின் வாழிடம், சாலைகள், பண்ணைகள் போன்ற மனிதக் குறுக்கீடுகளால் இவற்றின் வாழிடப் பரப்பில் பாதி காணாமல் போய்விட்டது.
வனவிலங்கு சேவை அமைப்பினால் மதுராவில் நடத்தப்படும் மையம் காடுகளில் இருந்து மீட்கப்படும் யானைகளுக்கு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தரும் இந்தியாவின் ஒரே சரணாலயம். இங்கு பராமரிப்பில் வாழும் பல யானைகள் சர்க்கஸ்கள், ஹோட்டல்கள், திருமண விழாக்களுக்காக பயன்படுத்தப்படும் தொழில் மற்றும் கோயில்களில் இருந்து மீட்கப்பட்டவை. “இங்கு இருக்கும் 36 யானைகளில் பெரும்பாலானவை மனிதர்களால் கொடுமைப்படுத்தப்பட்டவை. இவற்றில் பல பார்வையற்றவை. பல யானைகள் மோசமான உடல் ஊனங்களுடன் வாழ்கின்றன. இவை அதிக துன்பம் இல்லாமலும் உரிய மதிப்புடனும் வாழ வழிவகுப்பதன் மூலம் இவற்றிற்கு செய்த கொடுமைகளுக்காக நாம் வருத்தம் தெரிவிக்க வேண்டும். உங்களுக்கு இத்தகைய கொடுமைகளை செய்ததற்காக நாங்கள் வருந்துகிறோம். உங்களை உங்கள் வன வாழிடத்தில் இருந்து கடத்திக் கொண்டு வந்து விட்டோம். அதற்காக வருந்துகிறோம். உங்களை உங்கள் குடும்பத்தில் இருந்து பிரித்ததற்காக வருந்துகிறோம். உங்களிடம் இருந்து நாங்கள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு விட்டோம். இதற்காக மற்ற மனிதர்கள் சார்பாக நாங்கள் வருந்துகிறோம்” என்று இந்த அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஷிவம் ராய் (Shivam Rai) கூறுகிறார்.
இரயில்கள் மோதி யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதைத் தொடர்ந்து இரயில்வேக்களின் மேலாண்மையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று விலங்கு நல செயல்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
2023ல் விபத்துகளைத் தடுக்க தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இரயில் பாதைகளுக்கு அருகில் யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் செயல்முறை நடைமுறைக்கு வந்தது. யானைகளின் நடமாட்டத்தை உணரிகள் கண்டுபிடித்து இரயில் ஓட்டுனர்கள், இரயில் நிலைய ஊழியர்கள், கட்டுப்பாட்டு அறையில் இருப்பவர்களை எச்சரித்தது.
மற்ற பகுதிகளில் இது போல அதிர்வுகளை ஏற்படுத்தும் தொழில்நுட்பங்கள் அமைக்கப்பட்டன. அவை யானைகள் நூறு மீட்டர் தொலைவில் இருக்கும்போது அதை கண்காணித்து தகவல்களைத் தந்தன. வடமேற்கு இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள ஒரு தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு நாளைக்கு நாற்பதுக்கும் அதிகமான எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன.
யானைகளின் வீடுகளை ஆக்ரமிக்கும் இரயில் பாதைகள்
மேற்கு வங்காளத்தில் மூங்கில்கள் மற்றும் வாழை மரங்களின் வரிசைகளுடன் அமைக்கப்பட்டுள்ள ஒரு பாலத்தைப் பயன்படுத்தி இரயில் தண்டவாளங்களை யானைகள் பாதுகாப்புடன் கடந்து செல்கின்றன. ஆனால் இந்த பணிகள் சவால் நிறைந்தது. இந்தியாவில் 130,000 கிலோமீட்டர் நீளத்திற்கு இரயில் பாதைகளும் வலசை செல்லும் யானைகளுக்கான 150 வனப்பெருவழிச் சாலைகளும் உள்ளன.
யானைகளின் நடமாட்டத்தை முன்னெச்சரிக்கை செய்யும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதிகள் பொருத்தப்பட்டிருந்தால் பானியின் தாய் இன்று உயிருடன் வாழ்ந்து கொண்டிருப்பாள். இந்த குட்டி யானையும் ஊணமுற்றிருக்காது, அனாதையாக்கப்பட்டிருக்காது என்று வனவிலங்குகள் நலனுக்கான அவசர சேவை அமைப்பினர் நம்புகின்றனர். பல கால்நடை ஊழியர்களின் உதவியுடன் ஒரு கவணை (sling) பயன்படுத்தி பானி இன்று மெதுவாக நடக்க முயன்று கொண்டிருக்கிறாள். இதில் மெதுவான முன்னேற்றமே காணப்படுகிறது. முழுவதும் குணமடைய பானிக்கு நீண்ட காலம் பிடிக்கும்.
“காடுகள் யானைகளின் வீடுகள். இரயில்கள் இவர்களின் வீடுகளை ஆக்ரமிக்கின்றன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைக் கொண்டு விபத்துகளைத் தடுக்கும் வசதிகளும் கடுமையான வேகக்கட்டுப்பாடுகளும் உடனடியாக கொண்டு வரப்பட்டால் நூற்றுக்கணக்கான யானைகளின் உயிர் காப்பாற்றப்படும். ஒருங்கிணைந்த முறையில் கட்டப்பட்ட பாலங்களைப் பயன்படுத்தி விலங்குகள் கடந்து செல்ல உதவும் எளிமையான சாலைகள் (Ecoducts) உலகின் பல பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ளன.
நெரிசல் மிகுந்த பாதைகளை வழியறிந்து அவற்றை கடந்து செல்ல வனவிலங்குகளுக்கு இவை உதவுகின்றன. இது போன்ற வசதிகள் இந்தியாவிலும் உருவாக்கப்பட வேண்டும். விபத்துக்குள்ளான விலங்குகளில் பானி அதிர்ஷ்டசாலி. அவளின் உடல் நலம் மெதுவாக, உறுதியாக தேறி வருகிறது. உணவுப் பழக்க வழக்கங்கள் சிறிது சிறிதாக மேம்பாடு அடைந்து வருகிறது. மற்றவர்களின் உதவி இல்லாமல் அவளால் இப்போது சிறிது நேரத்திற்கு சுயமாக செயல்பட முடிகிறது.
அவளுடைய உடல் நிலையை கவனித்துக் கொள்ளும் ஊழியர்களுக்கு இந்த முன்னேற்றம் சோகம் கலந்த உணர்வை ஏற்படுத்துகிறது. “பானி இனி எப்போதும் ஒரு இயல்பான யானையாக வாழ முடியாது. ஒருபோதும் வனத்தில் வாழ முடியாது. இனி வரும் காலம் முழுவதும் அவள் ஊனமுற்றவளாகவே வாழ வேண்டும். சுய மதிப்புடனும் மரியாதையுடனும் சுதந்திரமாகவும் வாழக்கூடிய அளவிற்கு அவள் உடல் நலம் பெற வேண்டும் என்பதே அனைவரின் ஆசையும், எதிர்பார்ப்பும், நம்பிக்கையும்:”…
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
“என்னை சாப்பிடு… என்னை சாப்பிடு” என்று தூண்டி உடலை அசைத்து காட்டி தவளையைக் கவரும். அதை நம்பி தவளை நாக்கை நீட்டும்போது ஒரு பக்கம் சரிந்து முகத்தின் மீது பாய்ந்து பிடிக்கும். தொண்டையை அல்லது வாயின் அடிப்பாகத்தை இறுக்கிப் பிடித்துக் கடித்து பற்றிக் கொள்ளும். பிறகு தவளை தப்ப வழியில்லை. பழங்கால பேய்க் கதைகளில் வரும் பேய் பிசாசைப் போல தவளையின் தலையும் கால்களும் மட்டுமே மிஞ்சும்.
ஒரு தவளை வாழ்நாளில் ஒட்டும் தன்மையுடைய, வெளியில் நீட்டக்கூடிய நாவால் ஆயிரக்கணக்கான உயிரினங்களை உண்கின்றன. வாயைத் திறப்பது, நாக்கை நீட்டுவது, வாய்க்குள் போட்டு விழுங்குவது - இதுதானே இதுதானே தவளைகளின் வழக்கமான உணவு உண்ணும் முறை!?
இது போன்ற இரை பிடி உயிரினங்களில் இருந்து தப்பிப் பிழைக்க பல விதமான தந்திரங்களை பரிணாமரீதியில் பல விலங்குகள் பெற்றுள்ளன. எதிரிகளால் இரையாக்கப்படாமல் இருக்க சில சமயங்களில் அருவருக்கத்தக்க சுவையுள்ள அல்லது நச்சுத் தன்மையுடைய வேதிப்பொருட்களை இவை வெளிவிடுகின்றன. தவளைகளை குழப்பத்தில் ஆழ்த்தி அல்லது பயமுறுத்தும் விதத்தில் அமைந்த கண் பொட்டு போன்றவை சிறப்பு அடையாளங்களாக சில வண்ணத்துப்பூச்சிகளின் இறக்கைகளில் காணப்படுகின்றன.
எதிரிக்கு எதிரி
சில லார்வாக்களின் உருவம், கண்ணில் காணப்படும் அடையாளங்கள் அவை பாம்பென்று எதிரிகளால் தவறாக நம்பும் வகையில் அமைந்துள்ளன. என்றாலும் தவளைகளின் வாய்க்குள் சென்று அகப்பட்டு உயிரை இழப்பதே பல விலங்குகளின் பொது விதி.
ஆனால் இயல்பான இந்த இரையைப் பிடிக்கும் முறையைத் திருத்தி, திருப்பியடித்து இரையாக வந்த உயிரினமே இரை பிடி உயிரினமாக மாறி வெற்றிகரமாக வாழும் சில விலங்குகளும் பூமியில் உள்ளன.
எப்போமிஸ் இன மண் வண்டுகள்
எப்போமிஸ் (Epomis) இனத்தைச் சேர்ந்த மண் வண்டுகள், அவற்றின் லார்வாக்கள் இத்திறனைப் பெற்றுள்ளன. தவளை பாம்பை விழுங்கியது ஏன் என்பது நமக்குத் தெரியும். மிகச் சிறிய பாம்புகளை பெரிய தவளையினங்கள் விழுங்குவதில் ஆச்சரியமில்லை. ஆனால் இது இயல்பிற்கு மாறானது, அசாதாரணமானது. “புலியைப் பூனை பிடித்தது” என்பது போல க்ளினியஸ் (Chlaenius) குடும்பத்தைச் சேர்ந்த எப்போமிஸ் துணைக்குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய மண் வண்டுகள் (Groung beetles), புழுக்கள் தவளைகளை ஆக்ரமித்துப் பிடித்து, கொன்று தின்கின்றன.
இந்த உயிரினங்கள் பளபளப்புள்ள பச்சை அல்லது நீல நிற சிறிய வண்டுகள். இவற்றின் உடலில் கெட்டியான எலிப்ட்ரா என்ற மேற்பகுதி ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. கால்கள், உணர் நீட்சிகள் மஞ்சள் நிறம் உடையவை. மூன்று செண்டிமீட்டருக்கும் குறைவான அளவு மட்டுமே உள்ள இந்த குட்டி உயிரினங்களின் முட்டை விரிந்து உண்டாகும் வெள்ளை அல்லது மஞ்சள் நிற உடலில் கறுப்பு மற்றும் ஆரஞ்சு நிற அடையாளங்கள் காணப்படுகின்றன. இவற்றின் நீளம் இரண்டு செண்டிமீட்டர் மட்டுமே.
இரட்டைக் கொக்கிகளுடன் கூடிய தாடைப் பகுதியே இவற்றின் ஆயுதம். தன்னைப் பிடித்து உண்ண அழைப்பு விடுத்து பின் எதிரியின் மீதே தாவிப் பிடித்து அது உயிருடன் இருக்கும்போது அதை உண்ணும் அபாரமான ஆற்றல் இந்த வண்டுகள் மற்றும் அவற்றின் புழுக்களுக்கு உண்டு. இஸ்ரேல் டெல் அவிவ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கில் விசன் (Gil Wizen) மற்றும் அவைடல் கேஸித் (Avital Gasith) ஆகியோர் இணைந்து இந்த சுவாரசியமான ஆய்வுகளை மேற்கொண்டனர்; ஆவணப்படுத்தி வெளியிட்டுள்ளனர்.
கேஸித் வனப்பகுதியில் ஒரு தவளைக்கு அருகில் ஏராளமான லார்வாக்கள் இருப்பதை அவைடல் கண்டார். இது பற்றிய ஆய்வுகளை நான்காண்டுகளுக்கு முன்பு அவர் தொடங்கினார். விஸனுடன் இணைந்து ஆய்விற்கான வழிமுறைகளை உருவாக்கினார். இந்த புழுக்கள் தவளைகளைக் கவரும் வகையில் செயல்பட்டு தங்கள் வலையில் சிக்க வைப்பதை இந்த ஆய்வாளர்கள் கண்டனர். உணர் நீட்சிகளையும் தாடைகளையும் அவ்வப்போது இவை அசைத்துக் கொண்டு நிற்கும். இரை அருகில் வர வர லார்வாவின் அசைவுகள் வேகமாக நடக்கும்.
இதனால் தவளை கவரப்பட்டு சுலபமாக லார்வாவைப் பிடித்து உண்ணலாம் என்று நினைத்து அருகில் வருகிறது. பொதுவாக தவளைகள் பெரிய உயிரினங்களை விட அசைந்து கொண்டிருக்கும் சிறிய உயிரினங்களையே உண்பதற்கு அதிகமாகத் தேர்ந்தெடுக்கின்றன. இவ்வாறு தவளையின் பார்வையில் லார்வா இரையாகத் தோன்றுகிறது. தவளையின் கவனத்தைக் கவரவே இவை இவ்வாறு உடலை அசைத்து அசைத்து “என்னை சாப்பிடு… என்னை சாப்பிடு” என்று அழைப்பு விடுக்கிறது.
ஒரு விநாடியில் பத்தில் ஒரு பகுதி நேரத்தில் இரையை விழுங்கும் திறன் பெற்ற தவளை லார்வாவைத் தாக்குகிறது. ஆனால் அதைவிட வேகமாக புழு செயல்படுகிறது. புழு ஒரு பக்கம் சரிந்து முகத்தின் மீது பாய்ந்து விழுந்து தவளையை ஆக்ரமிக்கிறது. அதன் வாய்க்குள் சென்று நல்ல இடத்தைக் கண்டுபிடித்து தன் வேலையை ஆரம்பிக்கிறது. தொண்டை அல்லது வாயின் அடிப்பகுதியில் இறுக்கமாகக் கடித்து, பிடித்து அப்படியே இருக்கும். பிறகு தவளை உயிர் தப்ப வழியில்லை.
லார்வா உடற்பகுதியைக் கடித்துப் பிடிக்கிறது. ஒட்டுண்ணி போல செயல்படுகிறது. இரையின் உடற்திரவங்களை உறிஞ்சிக் குடிக்கிறது. இரையின் கீழ்த்தாடைப் பகுதியை புழு சப்பி சிறிதுசிறிதாக உண்ண ஆரம்பிக்கிறது. இந்த வகை புழுக்கள் தவளைகளை மட்டுமே உணவாக உண்கின்றன. இதனால் வளர்ச்சியடைந்த வண்டுகள் பகல் நேரத்தில் தவளைகள் வாழும் ஈரமுள்ள மண்ணில் தங்குகின்றன. இரவில் இரை பிடிக்கவே இந்த ஏற்பாடு. மூன்று வண்டுகள் ஒரு தவளையின் பின் உடற்பகுதியில் தாக்குதல் தொடங்குவதை ஆய்வாளர்கள் கண்டனர்.
ஆய்வகத்தில் ஒரு வண்டு தவளையின் உடலின் பின்புறத்தைத் தாக்கியது. குதிரைப் பந்தயத்தில் ஒரு ஜாக்கி குதிரையின் மீது ஏறுவது போல இது இருந்தது என்று விஸன் கூறுகிறார். இதனால் துணுக்குற்ற இரை வேகமாக தன் உடலை உதறி தாக்குதலில் இருந்து தப்ப படாதபாடு பட்டது. ஒரு சில மணி நேரங்களுக்குள் இரையின் தலை மற்றும் கால்கள் மட்டுமே மிஞ்சின.
"வண்டு தவளையின் முதுகுப்பகுதி எலும்பைத் காயப்படுத்துவதில்லை. தவளையின் பின்னங்கால் தசைகளின் இணைப்பையே சேதப்படுத்துகிறது. இதனால் இரை தாவிக் குதித்து தப்பமுடியாது. இது பற்றி மேலும் ஆய்வுகள் நடத்தப்படவேண்டும்” என்று விஸன் கூறுகிறார். நூறு சதவிகிதம் வெற்றி புழுக்களுக்கே. ஆய்வாளர்கள் கண்ட 400 நேரடி ஆக்ரமிப்புகளில் ஏழு முறை மட்டுமே தவளையின் வாயில் புழு சிக்கியது. மீதி சமயங்களில் நாக்கை நீட்டுவதற்கு இடையில் லார்வா தவளையின் முகத்தைப் பிடித்துக் கொண்டது.
வாந்தி எடுக்க வைத்து தப்பும் லார்வா
தவளை வாய்க்குள் போட்டு புழுவை விழுங்கிய போதும் அது அடிபணியவில்லை. அது தவளையை அதன் வாயில் இருந்தே துப்பச் செய்கிறது. வெளியில் வந்து விழும் லார்வா மறுபடி தவளையின் முகத்தைப் பற்றிப் பிடிக்கிறது. ஒரு தவளை லார்வாவை விழுங்கியதை ஆய்வின்போது விஞ்ஞானிகள் கண்டனர். அது தவளையின் வயிற்றில் இரண்டு மணி நேரம் இருந்தது. பிறகு தவளை புழுவை வாந்தி எடுத்தது. உயிரிழக்காத அந்த லார்வா மீண்டும் தவளையைத் தாக்கி சிறிது நேரம் முன்பு தன்னை விழுங்கிய தவளையை உண்ணத் தொடங்கியது.
மூன்று கட்டங்களில் வளரும் லார்வா அதன் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியிலும் புதிய இரையை உண்கிறது. முதலில் ஓர் இரையை உண்ட லார்வா, பிறகு பொருத்தமான இடத்தில் ஒளிந்து கொள்கிறது. லார்வா பின் தன் கடினமான பாம்பின் சட்டை போலுள்ள தோலை உரிக்கிறது. அடுத்த கட்ட உடல் வளர்ச்சிக்காக அது அடுத்த இரையைப் பிடிக்கக் காத்திருக்கிறது. வயதிற்கு வந்த எப்போமிஸ் வண்டு இனத்தைச் சேர்ந்த வேறு சில புழுக்கள் பல வகை ஊர்வன உயிரினங்களை உணவாக உண்கின்றன.
இந்த வகை வண்டுகள் இஸ்ரேலின் மத்திய கடற்கரை சமவெளிப் பகுதியில் அதிகமாக வாழ்கின்றன. முதிர்ந்த வண்டுகள் வேறு பல உயிரினங்களை உண்கின்றன என்றாலும் இவை நேரடியாக தவளைகளைக் கண்டுபிடித்து ஆக்ரமித்து உண்ணும் இயல்புடையவை. புலி தன் இரையைப் பிடிப்பது போல இவை தவளையின் மீது பாய்ந்து தாக்கி அதைக் கொன்று உண்கிறது. உதறி உடலில் இருந்து வண்டை விரட்ட தவளை முயற்சி செய்தாலும் வண்டு தன் பிடியை விடுவதில்லை.
வண்டு தவளையின் மீது தாவி ஏறி அதன் இடுப்பில் அறுவை நடத்துவது போல ஒரு கீறலை (surgical cutting) ஏற்படுத்துகிறது. இதனால் காலில் இருக்கும் தசைகள் முறிந்து தவளை தாவ முடியாமல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டது போன்ற நிலையை அடைகிறது. தாவ முடியாத, நின்ற நிலையிலேயே ஆடாமல் அசையாமல் நிற்கும் தவளையை வண்டு நிம்மதியாக நிதானமாக உண்ணத் தொடங்குகிறது.
தவளை பெரிதாக இருந்தால் ஹைனாப் பறவைகள் போல பல வண்டுகள் ஒன்றுசேர்ந்து கூட்டமாகத் தாக்கி உண்கின்றன. ஊர்வனவற்றைப் பிடித்து உண்ணும் உயிரினங்களின் மிகப்பெரிய தாக்குதல்களில் இருந்து தப்ப பலதரப்பட்ட வழிமுறைகளை பல விலங்குகள் பரிணாமரீதியில் பெற்றுள்ளன. தங்களை விட அளவிலும் வடிவிலும் பெரிய ஊர்வன வகை உயிரினங்களின் அச்சுறுத்தல் தொல்லையை சகிக்க முடியாத இந்த வகை உயிரினங்கள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எதிரியை திருப்பித் தாக்கி வெற்றி அடைந்திருக்கலாம்.
இது காலப்போக்கில் இரை பிடித்தலில் புதிய திருப்பத்தை இந்த மண் வண்டுகள் போன்ற உயிரினங்களில் ஏற்படுத்தியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வாழ்க்கையின் சில கட்டங்களில் இவை எதிரியை விட எண்ணிக்கையில் அதிகம் இருப்பதால் இந்த முறையை அவை கையாண்டு வெற்றி பெற்றிருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இவை வழக்கத்திற்கு மாறான இரை பிடிக்கும் முறையைக் கையாள்கின்றன. இரையை விட அளவில் சிறியவை. இவற்றின் புழுக்கள் தவளைகளை மட்டுமே உண்கின்றன. அவை உயிர் வாழ இந்த முறைக்கு மாற வேண்டியது காலத்தின் கட்டாயம். இதனால் இரையைப் பிடித்து அதன் உடலிற்குள் சென்று அதைக் கொல்லும் நடத்தையை இவை பெற்றுள்ளன.
இயற்கைக்கு மாறாக
தவளைகளும் சாலமாண்டர்களும் வண்டுகளை விட உண்மையில் அளவில் பெரியவை. அதனால் இயற்கையில் இவையே வண்டுகளைப் பிடித்து உண்ண வேண்டும். ஆனால் வண்டுகளின் இனங்களின் எண்ணிக்கை தவளையினங்களின் எண்ணிக்கையை விட அதிகம். தவளைகள் வழக்கமாக வண்டுகளை அரிதாகவே உண்கின்றன. வேறு இன வண்டுகளின் இறந்த உடற்பகுதி மிச்சம் மீதியை ஆய்வாளர்கள் உள்ளூர் தவளையினங்களின் எச்சங்களில் இருந்து கண்டறிந்துள்ளனர்.
எப்போமிஸ் வண்டுகளின் ஒரு சில இனங்கள் மட்டுமே இத்தகைய நடத்தை மாற்றத்தைப் பெற்றுள்ளன. தொடக்கத்தில் வண்டின் இந்த மாற்றம் தற்காப்பிற்காக ஏற்பட்டிருக்கலாம். மற்ற பூச்சிகள் அவற்றின் உடலில் இருந்து அவை வெளிவிடும் நஞ்சு, மறைந்திருந்து தாக்குவது போன்றவற்றால் எதிரிகளிடம் இருந்து தப்புகின்றன. ஆனால் இந்த எப்போமிஸ் வகை வண்டினங்கள் எதிரியைத் தாக்கி தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வழியை சிறந்த முறையாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ளன.
எப்போமிஸ் சர்கம்ஸ்ட்கிரிப்ட்டஸ் (Epomis circumscriptus) மற்றும் எப்போமிஸ் டிஜினீ (Epomis dejeani) என்ற இரண்டு இனங்களைச் சேர்ந்த வண்டுகள் தவளைகளைக் கொல்வதில் தனித்திறமை பெற்றுள்ளன. இவை போன்ற இன வண்டுகள் தவளைகளை மட்டும் இல்லாமல் சாலமாண்டர் (Salamander) போன்ற மற்ற ஊர்வனவற்றையும் இரையாகப் பிடித்து உண்கின்றன.
பூமியில் தோன்றும் ஒவ்வொரு உயிரினத்தையும் அதனதன் அளவு, வடிவம், சூழலுக்கேற்ப உணவூட்டி அவை வாழ இயற்கை வழி செய்கிறது என்பதற்கு தவளையை உண்டு வாழும் இந்த மண் வண்டுகளே சிறந்த எடுத்துக்காட்டு.
** ** **
மேற்கோள்
&
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
நகரத்தின் ஆரவாரங்களுக்கு நடுவில் தங்கள் சொந்தக் குரலைக் கேட்க வைக்க பறவைகள் பாடுபடுகின்றன! சுற்றுவட்டாரத்தில் இருக்கும் சத்தங்களை விட உரத்த குரலில் சில பறவைகள் பாடிப் பார்க்கின்றன. சுற்றுப்புறம் சிறிது நிசப்தமாகும்போது மட்டும் பாடும் பறவைகளும் உண்டு. பாட்டின் சுருதியை மாற்றும் பறவைகளும் உள்ளன.
நகரங்களில் மனிதர்களால் ஏற்படும் ஒலி மாசு (anthropogenic noise) பறவைகளின் பாடல்களை நிசப்தமாக்குகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. இது பாடல் மறைத்தல் (song masking) என்று அழைக்கப்படுகிறது. இதனால் பறவைகளின் சத்தங்களுக்கு அவற்றுக்குரிய பலன் கிடைக்காமல் போகிறது. இணையைக் கவர முடியாமல் இனப்பெருக்கத் திறன் பாதிக்கப்படுகிறது. இதனால் அவை பாடும் பாடல்கள், அழைப்புகளின் பாணியை மாற்றி இதற்குத் தீர்வு காண முயல்கின்றன.
இப்பிரச்சனையைத் தவிர்க்க ஐரோப்பிய ராபின் பறவைகள் இரவு நேரத்தில் மட்டும் பாடும் வழியைத் தேர்ந்தெடுக்கின்றன. பலதரப்பட்ட அழுத்தங்கள் மூலம் நகரங்களில் மனிதர்கள் அனுபவிக்கும் பிரச்சனைகளை மற்ற உயிரினங்களும் அனுபவிக்கின்றன. கவனித்துப் பார்த்தால் நகரங்களில் ஒரு சில இடங்களில் காடு என்பதே சாலையோரத்தில் நிற்கும் ஒற்றை ஆலமரமாக மட்டுமே இருக்கும்.மறையும் நகரத்துப் பறவைகள்
படர்ந்து விரிந்த இலை கிளை பொந்துகளில் பறவைகள், அணில்கள் உட்பட நமக்குத் தெரியாத பல உயிரினங்களும் குடியிருக்கின்றன. சுற்றுவட்டாரத்தில் இருந்து பறவைகளின் பாடல்களும் சிறகடிக்கும் ஓசைகளும் காணாமல் போவதை நாம் உணர்வதில்லை. பதுங்கிப் பதுங்கி நடந்த மைனாக்கள், சலசலவென்று ஓசையெழுப்பி அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்த குருவிகள், கிளிகள் போல பல பறவைகள் எங்கே போய் மறைந்தன என்று நாம் ஆராய்வதில்லை.
நகரத்தில் இயற்கைக்கு என்ன வேலை? அது அங்கு காட்டிலும் மேட்டிலும் அல்லவா இருக்கிறது என்று நாம் நினைப்பதுண்டு. ஆனால் புதிய ஆய்வுகள் இத்தகைய கருத்துக்களை தவறு என்று நிரூபித்துள்ளன. வன உயிரினங்களின் பாதுகாப்பில் நகரங்களுக்கும் முக்கிய பங்கு உண்டு என்று கோர்னெல் (Cornell) பறவையியல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வுகள் கூறுகின்றன.
நகரங்கள் பறவைகளுக்கு எந்த அளவு முக்கிய வாழிடமாக உள்ளது என்பதை அறிய பல காலகட்டங்களில் இ-ஃபேர்ட் (Ebird) அமைப்பின் தரவுகள் ஆராயப்பட்டன. காலநிலை மாற்றத்தின் கெடுதிகளைக் குறைக்க காடுகள் தவிர நகர வனங்களை அமைக்க வேண்டும் என்ற கருத்து தோன்றியது. பிராந்தியரீதியில் உயிர்ப் பன்மயத் தன்மையைக் காக்கும் தாவரங்களைக் கொண்ட மியாவாக்கி வனங்கள் உருவாக்கப்பட்டன.
ஒரு காலத்தில் பெங்களூர் நகரத்தில் சமையலறைகளில் சிதறியிருந்த தானியங்களைப் பொறுக்கி உண்டு வாழ்ந்து வந்த அங்காடிக் குருவிகள் மெல்ல மெல்ல காணாமல் போயின. நீர்நிலைகள் அடுக்குமாடிக் குடியிருப்புகளாயின. வீட்டு முற்றங்கள் டைல்ஸ் கற்களால் மூடப்பட்டன. மிச்சம் மீதி உணவுகள் வெளியில் இடப்படாமல் குப்பைக் கிடங்குகளில் கொண்டு போய் கொட்டப்பட்டன.
இது இந்த சின்னஞ்சிறிய பறவைகளின் வாழ்வைக் கேள்விக்குறியாக்கியது. நகரம் மாநகரமாக வளர்ச்சி அடைந்தபோது இவை வீட்டு முற்றங்களையும் தெருக்களையும் விட்டுவிட்டு சர்வதேச விமான நிலையத்திற்குக் குடிபெயர்ந்தன. 2013ல் இந்திய அறிவியல் ஆய்வுக்கழகத்தின் சூழலியல் மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஹரீஷ் பட் நடத்திய ஆய்வில் பெங்களூர் கெம்பகௌடா விமான நிலையத்தில் நானூற்றிற்கும் மேற்பட்ட அங்காடிக் குருவிகள் வாழ்வது தெரிய வந்தது.
ஒரு காலத்தில் திறந்தவெளி உணவகங்களில் மேசைகள் சுத்தப்படுத்தப்படுவதற்கு முன்பே நகரில் வாழ்ந்துவந்த குருவிகள் சிந்தியிருக்கும் உணவுத்துணுக்குகளை பொறுக்கி உண்ண ஓடிவந்தன. ஆனால் இன்று அவை வாழ இடமில்லாமல் விமான நிலையத்திற்குப் போய்க் குடியிருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. விமான நிலையத்தில் குருவிகள் தவிர புல்வெலியில் சுதந்திரமாக ஓடியாடும் வேறு சில சிறிய உயிரினங்களும் இப்போது வாழ்ந்து வருகின்றன.
கெம்பகௌடா விமான நிலையத்தில் புதிதாக இரண்டாவது முனையம் ஆரம்பிக்கப்பட்டபோது கட்டிடங்கள் சுற்றுப்புறம் அனைத்தும் சூழலிற்கு நட்புடைய விதத்தில் வடிவமைக்கப்பட்டன. அங்கு உருவாக்கப்பட்ட பூந்தோட்டம், நீர்வீழ்ச்சி, தடாகம் இவை வெறும் அழகிற்காக மட்டும் உருவாக்கப்படவில்லை. உயிர்ப் பன்மயத் தன்மையைப் பாதுகாப்பதையும் அது நோக்கமாகக் கொண்டிருந்தது.
நிலத்தில் கூடு கட்டும் பறவைகள்
நிலத்தில் கூடு கட்டும் பறவைகளையே நகரமயமாக்குதல் பெரிதும் பாதிக்கிறது. நிரந்தரமாக நிர்மானப் பணிகள் நடக்கும் இடங்களில் இத்தகைய பறவைகளால் வாழ முடிவதில்லை. ஆனால் கட்டடங்கள், மரங்களில் கூடு கட்டி வாழும் பறவைகள் இந்த சூழலுடன் பொருந்தி வாழ்கின்றன. நகர வாழ்க்கையுடன் பொருந்தி வாழத் திறமையுடைய பறவைகளே நகரங்களில் தொடர்ந்து வாழ்கின்றன.
ஒவ்வொரு இனப் பறவையின் உணவு, அது கிடைக்கும் அளவு, வாழ அவசியமான இயற்கைச் சூழல் ஆகியவை அவற்றின் வாழ்வின் முக்கிய தேவை. காய்கறிகளையும், இறைச்சியையும் ஒரே மாதிரி சாப்பிடும் பறவைகள், பழங்களை மட்டுமே உண்டு வாழும் பறவைகளை விட நகர வாழ்க்கையுடன் பொருந்தி வாழ்கின்றன. நகரப் பறவைகள் புதிய வகை உணவு கிடைக்கும்போது தயக்கமில்லாமல் அதை சோதித்துப் பார்த்து உண்கின்றன. மனிதர்களுடன் அவற்றிற்கு பயம் குறைவாக உள்ளது.
ஆனால் இவற்றிற்கு மற்ற பறவைகளுடன் போட்டி மனப்பான்மை அதிகம். கட்டடங்களின் கட்டுமான முறையில் ஏற்பட்ட மாற்றங்களும், விவசாய இடங்களில் ரசாயனப் பொருட்களின் பயன்பாடும், ஒலி, காற்று மாசும் குருவிகளின் எண்ணிக்கை குறைய முக்கிய காரணங்கள்.
கேரளாவில் குருவிகளின் பாதுகாப்பிற்காக சமூக வனத்துறையால் சந்தைகள், கடைத்தெருக்களில் கூடுகள் அமைக்கப்பட்டன. ஆட்டோ டிரைவர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், அங்காடிகளில் பொருட்கள் வாங்க வருபவர்களின் உதவியுடன் இவை அமைக்கப்பட்டன. கூடுகளுக்கு அருகில் குருவிகளுக்கு உணவும் நீரும் வைக்கப்பட்டது. இதனால் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
நகரங்கள் வனங்களை விழுங்கியபோது
நகரங்கள் வனங்களை விழுங்கியபோது அங்கு உள்ள சூழ்நிலையோடு மனிதர்களின் கூட்டங்களோடு ஒலி ஒளி மாசுடன் கூடிய போக்குவரத்து நெரிசல்களோடு பறவைகளும் மற்ற உயிரினங்களும் பொருந்தி வாழப் பழகிக் கொண்டன. நகரங்களில் வாழும் பறவைகளுக்கு பொதுவாக உடல் அளவு சிறியது.
நீண்ட தூரம் பறக்கும் திறன் பெற்றவை. எல்லா விதமான உணவுகளையும் உண்கின்றன. ஒரு பிரசவத்தில் அதிக முட்டைகளை இடுகின்றன. காட்டிலும் கிராமப்புறங்களிலும் வாழும் பறவைகளை விட இப்பறவைகளுக்கு ஆயுட்காலம் அதிகம் என்று கரண்ட் பையாலஜி என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய நகரத்துப் பறவைகள் குறித்த ஆய்வு கூறுகிறது.
கான்க்ரீட் காடுகளாக உள்ள இந்திய மாநகரங்களான மும்பை மற்றும் டெல்லியில் நகரப் பசுமையை அதிகரிக்க மியாவாக்கி வனங்கள் உருவாக்கும் முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஐநாவின் தலைமையில் உலக மர நகரங்கள் (World Tree city) 2022ம் ஆண்டின் பட்டியலில் மும்பை இரண்டாவது முறையாக இடம்பிடித்தது. உலக நகரங்களில் நடக்கும் சூழல் பாதுகாப்பு செயல்பாடுகளுக்கு உள்ள அங்கீகாரமே உலக மர நகரங்கள் பட்டியல்.
நகரங்கள் வளர்ந்து கொண்டே இருக்கும். அதனுடன் சேர்ந்து சூழல் நாசமும். 2030ல் உலகம் முழுவதும் உள்ள நகரங்களின் நிலப்பரப்பு 1.2 மில்லியன் சதுர கிலோமீட்டர் அளவிற்கு அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கணித்துள்ளன. இப்போது இருக்கும் பசுமை இடங்களையும் நீர்நிலைகளையும் பாதுகாப்பதுடன் உயிர்ப் பன்மயத் தன்மையைப் பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்படும் வளர்ச்சித் திட்டங்களே நகரங்களை நாளை மனிதர்கள் வாழ்வதற்குரிய இடங்களாக மாற்றும்.
மேற்கோள்கள்: https://www.mathrubhumi.com/environment/columns/what-can-cities-do-for-birds-nature-future-column-1.8702995
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- ஈ… பறக்க முடியாத ஈ
- சுரங்கப் பாதைகளில் தஞ்சமடைந்த கொசுக்கள்
- பாம்புகள்: பாயும் பகுத்தறிவும் பதுங்கும் மூடநம்பிக்கைகளும்
- இலை வெட்டும் எறும்புகள்
- காடு காக்க உதவும் கறுப்பு மரங்கொத்தி
- மனிதனைக் கொல்ல வந்தவை அல்ல பாம்புகள்!
- காடு காக்கப் போராடும் பெண்கள்
- காணாமல் போகும் கழுகுகள்
- இன்னும் இரண்டரை மில்லியன் பூஞ்சைகள்
- இந்தியாவின் வண்ணத்துப் பூச்சிக்கு அரேபியாவில் பாஸ்போர்ட்
- வௌவால்களுக்கு அடைக்கலம் தரும் தேவாலயங்கள்
- கொலையாளித் திமிங்கலங்கள்
- ஒரு மனிதன் ஒரு குளம் ஒரு சில தவளைகள்
- பூமிக்கு சம்பவிப்பது எல்லாம் பூமி புத்திரர்களுக்கும் சம்பவிக்கும்
- அழிவின் விளிம்பில் கானமயில்
- நஞ்சு உண்ணும் சீல்கள் மனிதருக்கு உதவுமா?
- அன்று வேட்டையாடும் கிராமம், இன்று காவல் கிராமம்
- இயற்கையின் ஆயுதங்கள்
- ஆழ்கடலில் ஓர் அதிசய உயிரினம்
- தாவரங்கள் பேசுகின்றன