கீற்றில் தேட...
இயற்கை & காட்டுயிர்கள்
- விவரங்கள்
- டி.ஆர்.ஏ. அருந்தவச் செல்வன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
சமீபத்தில் சத்தியமங்கலம் காட்டை ஒட்டிய பகுதியிலுள்ள போதிப்படுகை (கே.குடி, கர்நாடகா) அருகே சென்று கொண்டிருந்தபோது, தூரத்திலிருந்து பார்த்தபொழுது கேளை ஆடு போன்ற தோற்றத்துடன் ஒரு மான் நின்றது. முதலில் அதை கேளையாடு (Barking deer) என்று நினைத்தாலும் கூர்ந்து பார்த்ததில் அதன் கொம்பின் வடிவம், சற்று அகன்ற மார்பு, சற்று நீண்ட கழுத்தை ஆகியவற்றை வைத்து அது நான்கு கொம்பு மான் என்பதை உணர்ந்து கொண்டேன். இந்த மான் இனம் கண் இமைக்கும் நேரத்தில் மறைந்துவிடும் தன்மை கொண்டது. அது நான்கு கொம்பு மான்தான் என்று தெரிந்தவுடன் என்னை விரைவாகத் தயார்படுத்திக் கொண்டு, படம் எடுக்கத் தொடங்கினேன்.
முப்பாதாண்டுகளுக்கு முன்னால் சத்தி வனக்கோட்டத்தில் உள்ள பீர்கடவு, கொத்தமங்கலத்திலிருந்து ராஜன் நகர் செல்லும் சாலையின் மேற்கே தென்படும் சிறிய குன்றில் எண்ணிக்கையில் குறைந்த நான்கு கொம்பு மான் கூட்டமொன்று தொடர்ந்து வந்து கொண்டிருந்ததைப் பார்த்தது எனக்கு அப்போது நினைவுக்கு வந்தது. விலங்குகளின் மீது ஆர்வம் கொண்டவரும் அவற்றை கூர்ந்து கவனித்து வந்தவருமான முன்னாள் வேட்டைக்காரர் சின்னச்சாமி என்பவர், ஒரு முறை ஜெர்சி மாடு கன்று ஈன்றதைப் பார்த்துவிட்டு, "அதன் கண்ணைப் பாருங்கள், குள்ளமான் கண்ணைப் போலுள்ளது" என்று என்னிடம் கூறினார். குள்ளமான் என்று அவர் குறிப்பிட்டது இந்த நான்கு கொம்பு மானைத்தான்.
கன்றின் கண்ணுக்கு ஒப்புமையாக கூறும் அளவுக்கு அந்தக் காலத்தில் இந்த மான் அதிகமாக இருந்தது மட்டுமின்றி, மக்கள் பார்வையிலும் பட்டுள்ளது இதிலிருந்து தெரிகிறது. கடந்த முப்பது ஆண்டுகளில் இந்த மானின் எண்ணிக்கை வேகமாகச் சரிந்துவிட்டாலும், தற்போது வனத்துறையின் வேட்டைத் தடுப்பு செயல்பாடுகளால் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. இந்த மான் இனம் தற்போது கண்ணில் பட ஆரம்பித்திருப்பதை வைத்து இதை உறுதிப்படுத்தலாம்.
சத்தியமங்கலம் காட்டுயிர் சரணாலயத்தில் உள்ள தலைமலைப் பகுதியில் இந்த மான் தற்போது அருகிவிட்டது. மாவட்ட வன அலுவலர் ராமசுப்ரமணியம், உலக இயற்கை நிதியத்தின் பூமிநாதன், வேட்டைத்தடுப்பு காவலர்கள் சிலர் இந்த மானைப் பார்த்துள்ளனர். இந்தப் பின்னணியில்தான் நானும் அந்த மானைப் பார்த்தேன். தமிழகத்தில் முதுமலை பகுதியில் உள்ள சர்க்கிள் சாலை, மசினகுடி, காங்கரசு மட்டம், சிரியூர் பகுதிகளில் இந்த மான் அரிதாகக் காணப்படுகிறது. ஆராய்ச்சியாளர் ஆறுமுகமும் டாக்டர் கலைவாணனும் இந்த மானை இப்பகுதியில் பார்த்துள்ளனர்.
வழக்கமாக மான்களுக்கு இரண்டு கொம்புகளே இருக்கும். இந்த மானுக்கு இரண்டு ஜோடிகளாக நான்கு கொம்புகள் உண்டு. காட்டில் இதைப் பார்ப்பது கடினம். ஆசியாவிலியே சிறிய இரலை மான் இனம் இது. எண்ணிக்கை மிகக் குறைவு, அதிக மிரட்சியும், நழுவும் தன்மையும் கொண்டது. சாதாரணமாக இணையாகவோ, குட்டிகளுடனோ காணப்படும். தமிழகம், தமிழகத்தை ஒட்டிய கர்நாடக காட்டுப் பகுதிகள், குஜராத் கிர் காடு, ஒரிசாவில் இந்த மான் வாழ்கிறது. திறந்தவெளிகளிலும், மலைச்சரிவுள்ள காட்டுப் பகுதிகளிலும், ஓடை, ஆற்றோரப் பகுதிகளிலும் இதைக் காணலாம்.
இதன் மயிர்ப்போர்வை மஞ்சள் கலந்த மர நிறத்திலும், அடிப்பகுதி வெளிறியும் இருக்கும். மழைக்காலத்தில் நிறம் சற்று அடர்த்தியாகவும், குளிர்காலத்தில் நிறம் சற்று மங்கலாகவும் காணப்படும். நின்ற நிலையில் இதன் உயரம் தோள்பட்டை வரை 60 செ.மீ, 20-25 கிலோ எடையுடன் இருக்கும்.
பெண்ணுக்கு கொம்பு கிடையாது. ஆண்களுக்கு பொதுவாக நான்கு கொம்புகள் உண்டு. சிலவற்றுக்கு ஊட்டச்சத்து குறைவு, வாழுமிடத்தைப் பொருத்து இரண்டு கொம்புகள் மட்டும் இருக்கலாம். இரண்டு பெரிய கொம்புகள் இரண்டு காதுகளுக்கு இடையிலும் 8 - 10 செ.மீ நீளத்திலும், அடுத்து இரண்டு சிறிய கொம்புகள் பெரிய கொம்புகளுக்கு முன்னதாக முன்னந் தலையில் 1 முதல் 2 செ.மீ அளவுக்கு வளர்ந்திருக்கும். ஆண் குட்டிகளுக்கு பிறந்த சில மாதங்கள் கழித்து பெரிய கொம்புகள் வளரும். அடுத்து சில மாதங்கள் கழித்து அது உட்கொள்ளும் ஊட்டச்சத்துக்குத் தகுந்தவாறு 14, 15 மாதங்களில் இரண்டு சிறு கொம்புகள் வளரத் தொடங்கும். அரிதாக சிலவறறுக்கு இந்த சிறிய கொம்புகள் வளராமல் போவதுண்டு.
வெளிமான் அல்லது பிள்ளாய் (Blackbuck – antelope) போன்றவற்றின் கொம்புகளைப் போல் அல்லாமல், இவற்றுக்கு கொம்பின் நுனி நேராகவும் கூர்மையாகவும் இருக்கும். இதன் கொம்புகள் உதிர்ந்து முளைப்பதில்லை. ஆனால் இனச்சேர்க்கை காலத்திலும், இடம் கைப்பற்றுவதற்காகவும் ஆண் மான்களிடையே ஏற்படும் சண்டையின்போது கொம்புகள் ஒடிவது உண்டு. அந்த நேரங்களில் மூர்க்கத்தனமாகச் சண்டையிடும். நீர்நிலைகளுக்கு தொடர்ந்து நீர் அருந்த வரும் தன்மை கொண்டது. எனவே, நீரற்ற பகுதிகளில் இதை அதிகமாகப் பார்க்க முடியாது. வாழ்நாள் முழுவதும் ஒரே இடத்தில் வாழும் தன்மை கொண்டது. திறந்த வெளிக் காடுகளில் நன்கு வளர்ந்த புற்களுக்கு இடையில் தங்கும் இயல்புடையது. வெளிமான் போல கூட்டமாக இருக்காது. இலைகள், புற்கள், வேர்முடிச்சுகள், பழங்கள் போன்றவை இவற்றின் முக்கிய உணவு.
சூலை - செப்டம்பர் மாதங்களில் இணைசேரும். சினைக்காலம் 7 - 8 மாதங்கள். ஜனவரி - பிப்ரவரி குட்டிகள் ஈனும் காலம். ஒன்று முதல் மூன்று குட்டிகள் வரை ஈனும். இதன் ஆயுட்காலம் சுமார் 10 ஆண்டுகள். புலி, சிறுத்தை, செந்நாய், மலைப்பாம்பு ஆகியவை இவற்றின் முக்கிய எதிரிகள். ஆனால் அவற்றைவிட பெரிய எதிரிகள் காடழிப்பும், மனிதத் தொந்தரவுகளும்தான். அரிய இனமான நான்கு கொம்பு மான்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வனத்துறையின் முழுமையான பாதுகாப்பு, வெளி மனிதர்களின் இடையூறு இல்லாதிருப்பது அவசியம்.
(இக்கட்டுரையை எழுதிய ஒளிப்படக் கலைஞர் டி.ஆர்.ஏ. அருந்தவச் செல்வன் பிரபல காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர். காடுகளில் அதிகம் சுற்றியவர். அவரது அரிய நேரடி அனுபவம் இங்கு கட்டுரையாகி இருக்கிறது.)
(பூவுலகு மார்ச் 2010 இதழில் வெளியானது)
- விவரங்கள்
- பா.சதீஸ் முத்து கோபால்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
சிறுத்தைப் புலிகளை பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்னால் சிறுத்தைக்கும் சிறுத்தைப் புலிகளுக்குமான வேறுபாட்டைத் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. சிறுத்தைகள் இன்று இந்திய வனப் பகுதிகளில் இருந்து முழுவதுமாக அழித்து ஒழிக்கப்பட்டு விட்டது. இன்றைய இந்திய வனப் பகுதிகளில் இருப்பது சிறுத்தைப்புலி மட்டுமே. சிறுத்தைகள் தென் ஆப்ரிக்க புகுதியில் தொடங்கி இந்திய வனம் வரை பரவி இருந்தது. அனால் இன்று ஆப்ரிக்காவில் மற்றும் ஈரானில் (மிக குறைந்த அளவில் ஆசியா சிறுத்தைகள் இங்கு மட்டுமே) மட்டுமே உள்ளது. மாறாக சிறுத்தைப் புலி தென் ஆப்ரிக்க தொடங்கி இந்திய வனம் மட்டுமல்லாது ரஷ்யாவின் கிழக்கு பகுதி முதல் கம்போடிய , லாவோ பகுதி வரை பரவி உள்ளது. ஆனாலும் தொடர் வேட்டைகளால் ஆபத்தான நிலையிலேயே உள்ளது.
சிறுத்தை உடலில் கரும் புள்ளிகள் உடல் முழுவதும் இருக்கும். ஆனால் சிறுத்தைப் புலியின் உடலில் தலை மற்றும் கழுத்து பகுதியில் கரும் புள்ளிகளும், உடல் பகுதியில் ரோஜா இதழ்களின் மடிப்பு போன்ற கரும் பட்டைகளும் (பல கோண வடிவம் ) இருக்கும். சிறுத்தை அளவுக்கு சிறுத்தைப் புலிகளால் ஓட முடியாது.
அதே போல சிறுத்தைப் புலிகள், ஜாக்வார் (ஜாக்வார் - இதற்கு சரியான தமிழ் பெயர் இருந்தால் வாசகர்கள் தெரியப்படுத்தவும்) போல இருந்தாலும் இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. ஜாக்வார் உடலில் இருக்கும் பல்கோண வடிவ கரும் பட்டைகள் சிறுத்தைப் புலிகளை விடப் பெரியதாக இருக்கும்.
165 செ.மீ நீளமும் 80 செ.மீ உயரமும் இருக்கும் சிறுத்தைப் புலி, 91 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கும். தன் உடலின் எடையை விட இரண்டு மடங்கு அதிக எடை கொண்ட உணவை மரத்தின் மேல் கொண்டு செல்லும் வலிமை உடையது. பொதுவாக மரத்தில் மேல் அமரும் சிறுத்தைப் புலி, தன் உணவை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்க, மரத்தின் மேல் கொண்டு செல்லும். சிறுத்தைப் புலிகளின் வாழ்விடங்களைப் பொருத்து அவற்றின் நிறத்தில் சிறிய மாறுபாடு காணப்படும். நிறக் குறைபாடு காரணமாக, உடல் முழுவதும் கருமை நிறத்தில் இருக்கும் சிறுத்தை புலி, கருஞ்சிறுத்தை என்றழைக்கப்படுகிறது.
பொதுவாக சிங்கமும் புலியும் ஒரே வனப்பகுதியில் வாழாது. சிங்கம் வாழ சமவெளிப் பகுதியும், புலிகள் வாழ அடர்ந்த காடுகளும் தேவைப்படுகிறது. ஆனால் சிறுத்தைப் புலி இந்த இரண்டு விலங்குகளும் வாழும் வனப் பகுதிகளில் வாழும் தன்மை பெற்றது. நான்கு மாத பேறுகாலத்தில் இரண்டு முதல் நான்கு குட்டிகள் வரை போடும். ஆனால் அவற்றின் ஐம்பது சதவீதம் மட்டுமே முதல் வருடத்தைக் கடக்கின்றன.
உணவுச்சங்கிலியில் முக்கிய இடம் பெறும் சிறுத்தைப் புலிகளை வேட்டைகளில் இருந்து பாதுகாத்தால் மட்டுமே இயற்கையை சமநிலையில் வைத்திருக்க முடியும்.
- பா.சதீஸ் முத்து கோபால் (
- விவரங்கள்
- பா.சதீஸ் முத்து கோபால்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
புலிகளின் பாதுகாப்பு பற்றி சமீப காலங்களில் அதிகம் வலியுறுத்தப்படுவது வரவேற்கத்தக்கது என்றாலும், ஏன் புலிகளைப் பாதுகாக்க வேண்டும் என்கிற புரிதல் தெளிவாக விரிவாக விவாதிக்கப்படுவதில்லை. இதன் விளைவாக, "கூண்டில் அடைத்து வைத்தே புலிகளை பாதுகாத்துவிட முடியும்போது அதற்கு ஏன் சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்" என்று ஒரு கேள்வி கூட வருகிறது. மேலும் புலிகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் மற்ற மிருகங்களுக்கு ஏன் கொடுக்கப்படுவதில்லை என்கிற கேள்வியும் எழக் கூடும்.
புலிகளின் பாதுகாப்பிற்கு முதலில் சொல்லப்படும் காரணம், இந்த உலகில் இல்லாத ஒரு உயிரினத்தை நம்மால் பாதுகாத்து விட முடியாது. இருக்கும்போதே இந்த உயிரினத்தை பாதுகாத்துவிட வேண்டும். இது மேம்போக்கான காரணமாக இருந்தாலும் அறிவியல் சொல்வது வேறு. புலிகளின் பாதுகாப்பைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு, அவற்றின் குணங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.
-
புலி தனித்து வாழும் மிருகம்.
-
புலிகள் தனக்கென்று ஒரு எல்லையை காட்டில் தீர்மானித்துக் கொள்கிறது. சிறுநீர் கழிப்பதன் மூலமும், மரங்களில் கீறல்களை உண்டாக்குவதன் மூலமும் மற்ற புலிகளுக்கு தன்னுடைய எல்லைக் கோட்டை தெரியப்படுத்துகிறது.
-
தனக்குக் கிடைக்கும் உணவின் தேவைகளைப் பொருத்து (மான், காட்டெருமை, காட்டுப்பன்றி மற்றும் பல) தன்னுடைய எல்லைகளைத் தீர்மானிக்கிறது.
-
உணவு எளிதாகக் கிடைக்குமிடங்களில் எல்லையை சுருக்கவும், உணவு அரிதாக கிடைக்கும் இடங்களில் எல்லையைப் பரப்பவும் கற்றுக்கொள்கிறது.
-
எனவே புலிகள் பாதுகாப்பாக வாழ போதுமான உணவு அவசியமாகிறது. இதனால் புலிகள் பாதுகாக்கப்படும்போது புலிகளின் உணவு சார்ந்த மற்ற உயிரினங்களும் பாதுகாக்கப்படுகிறது. அந்த உயிரினங்கள் வாழ அவற்றின் உணவு சார்ந்த தேவைகளும் பாதுகாக்கப்படுகிறது. இது உணவுச் சங்கிலி அறுபடாமல் இருக்க உதவுகிறது.
-
எப்போதாவது அரிதாக இணை சேருகிற புலி ஒரு வார காலத்தில் பிரிந்து செல்கிறது.
-
புலிகள் வாழ அடர்ந்த வனப் பகுதியும், நீர்த் தேவைகளும், மனித இடையூறுகள் அற்ற பகுதியும் தேவைப்படுகிறது.
வேட்டையாடுவதன் மூலம் புலிகள் அழிக்கப்படுவதால் உணவுச் சங்கிலி முற்றிலுமாக அறுபடும். வனத்தின் உண்மைத் தன்மை குறையும். நூறு சதவிகிதம் தரமான வனம் தன்னுடைய தரத்தை இழக்கத் தொடங்கும். பின் வனம் சுருங்கத் தொடங்கும். வனம் சுருங்கச் சுருங்க மழை குறையும். மழை குறைந்தால் நீர்ப் பற்றக்குறை ஏற்பட்டு உலகம் அழிவை நோக்கி வேகமாக நகரத் தொடங்கும்.
எனவே புலிகளையும் மற்ற விலங்கினங்களையும் வேட்டையாடுவதைத் தவிர்த்து, வனமும், விலங்குகளும், பறவைகளும் மற்ற அனைத்து உயிரினங்களும் காக்கப்படுவது அவசியமாகிறது.
இந்த உலகம் அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது. மனிதனுக்கு மட்டுமல்ல; புலிகளுக்குமானது.
- பா.சதீஸ் முத்து கோபால் (
- விவரங்கள்
- முனைவர் க.மணி
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
வெட்டுக்கிளிக்கும் திமிங்கலத்திற்கும் எந்த சொந்த பந்தமும் இருக்க வாய்ப்பில்லை. ஒன்று பூச்சியினம் மற்றது பாலூட்டி. ஆயினும் இரண்டும் விலங்குளே. இரண்டும் சப்தம் எழுப்பி பேசிக்கொள்கின்றன. அப்படிப் பார்க்கப் போனால் ஏராளமான விலங்குகளுக்குள் தவகல் பரிவர்த்தனை சப்தம் மூலமாகத் தான் நடைபெறுகிறது.
ஃப்ளோரிடா பல்கலைக்கழகமும் ஆக்லஹாமா பல்கலைக் கழகமும் இணைந்து 500 வகையான விலங்கு சப்தங்களை ஒப்பிட்டு ஆராய்ந்தன. மேம்போக்காக பார்க்கும்போது அவற்றிடையே நிறைய சுருதி பேதங்களும் தாள வித்தியாசங்களும் காணப்பட்டாலும் விலங்கின் உருவ அளவு மற்றும் அதன் எடைகளில் காணப்படும் வித்தியாசங்களை ஒன்றுபடுத்திப் பார்க்கும்போது அனைத்து விலங்குகளின் ஓசைகளும் அதன் சங்கேதங்களும் ஒன்றுபோலவே இருந்ததைக் கண்டு வியந்தனர்.
அடிப்படையாக எல்லா விலங்கு பாஷைகளுக்குள்ளும் ஒருவித சப்த ஒற்றுமை இருக்கிறது. வெளிப்படையாக அவை விகாரப்பட்டாலும் ஆழமாக ஒற்றுமை சூக்குமமாக உள்ளது.
- திமிங்கல மயானம்
- நாடகமாடும் பாம்பு
- அதிசயத்தின் உச்சம் திமிங்கிலங்கள்
- சிலந்தியின் உருவ பேதங்களுக்கான காரணம்
- பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள்
- மனிதர்க்கு ரோமம் மறைந்த கதை
- பச்சோந்தி ஏன் அடிக்கடி நிறம் மாறுகிறது?
- கவாத்து செய்வது எதற்காக?
- தப்பிப்பிழைக்குமா தவளையினம்?
- பூக்களின் வில்லன் யார்?
- மிருகங்களும் சிந்தித்து முடிவெடுக்கின்றன
- நிலை குலைந்துவரும் மலைத் தொடர்கள்
- என்ன சொல்லப் போகிறோம் யானைகளுக்கு?
- நோய்பரப்பும் வன உயிரிகள்
- கொலை செய்யப்பட்டோர் கணக்கு
- பசுமைக்கு ஏற்ப காதல் பாட்டு
- விலங்குகளின் ரியல் எஸ்டேட்
- நஞ்சு துப்பும் பாம்புகள்
- கார்பன் கிரகிப்பானாகச் செயல்படும் நெல்வயல்கள் மேற்கத்திய விஞ்ஞானிகளின் மோசடி அம்பலம்
- காதல் கீதம் பாடும் டெங்கு கொசுக்கள்