கீற்றில் தேட...
இயற்கை & காட்டுயிர்கள்
- விவரங்கள்
- வ.க.கன்னியப்பன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
நாம் நம் அன்பையும், நேசிப்பையும் நம் காதலிக்கு தெரிவிப்பதை 'காதலர் தினம்' என்று ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி, 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய மன்னனுக்கு எதிராக, காதலர்களுக்கு ஆதரவாக இருந்து திருமணங்கள் செய்து வைத்ததால், மன்னனின் கோபத்திற்கு ஆளாகி, செய்ன்ட் வாலண்டைன் கி.பி 270ஆம் ஆண்டு பிப்ரவரி, 14ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். அவர் ஞாபகார்த்தமாக கி.பி 498லிருந்து பிப்ரவரி, 14ஆம் தேதியை வாலண்டைன்ஸ் தினமாக போப் கிளேஷியஸ் அதிகார பூர்வமாக அறிவித்தார். நாம் இருவரும் இன்று போல் என்றும் துணையாய் இருப்போம் என்று பரிசுகள் வழங்கி, வாழ்த்துத் தெரிவித்து மகிழ்கின்றனர். ஆனால் பறவை இனங்களும் - அப்படி ஆயுள் வரையில்லாவிட்டாலும் - முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் ஒரு பருவத்தில் மட்டுமாவது இணை பிரியாமல் வாழ்கின்றனவா என DNA டெஸ்ட் வழியாக ஆராய்ந்ததில் அப்படியில்லை என்றும், ஆச்சரியமான சில உண்மைகள் கண்டறியப்பட்டன.
பாடும் பறவைகள் (Song birds - குயில் ?) DNA ஆய்வில் தெரிய வந்த உண்மைகள்:
உதாரணத்திற்கு, ஒரு கூட்டிலுள்ள நான்கு குஞ்சுகளைப் பரிசோதித்ததில் இரண்டு குஞ்சுகள் மட்டுமே ஒரே பெற்றோரின் குஞ்சுகள் எனத் தெரிய வந்தது.
மற்ற இரண்டு குஞ்சுகளின் தாயோ, தந்தையோ அல்லது இரண்டுமே வேறெனத் தெரிந்தது.
எனவே, பாடும் பறவைகள் (மற்ற பறவைகளும் கூட) வெவ்வேறு துணையுடன் இணைய வாய்ப்புள்ளதென்றும், இது இயல்பானதுதான் என்றும் தெரிகிறது.
ஒரு கூட்டிலிருக்கும் குஞ்சுகள் கலப்பு பெற்றோர்களின் சந்ததியாக அமையவும் வாய்ப்பிருக்கிறது.
சில பறவைகள் -உதாரணத்திற்கு, ராஜாளி வகையைச் சேர்ந்த பருந்து ஜோடிகள் தங்கள் வம்சத்தை விருத்தி செய்ய முடியவில்லை என உணர்ந்தால், தன் இணைப் பறவையைப் பிரிந்து வேறு துணையைத் தேடிக் கொள்கின்றனவாம்.
ஆனாலும், வாத்துகள், அன்னப் பறவைகள் மற்றும் சில வகை கடல் பறவைகள் தங்கள் துணையை மாற்றிக் கொள்ளாமல், வாழ் நாள் முழுதும் இணை பிரியாமல் உண்மையான காதலுடன் வாழ்கின்றனவாம்.
(ஆதாரம்: பிப்ரவரி 08, 2011 தேதியிட்ட eNature இதழிலிருந்து)
- வ.க.கன்னியப்பன் (
- விவரங்கள்
- பா.சதீஸ் முத்து கோபால்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
புலிகள் பாதுகாப்பு பற்றி எப்போது எங்கே பேசினாலும் பொதுவாக வருகிற கேள்விகள் இரண்டு.
முதலாவது: புலிகளை எதற்காக பாதுகாக்க வேண்டும்? (நேரடி பயன்பாட்டிற்கு உதவாத எதையும் அக்கறை கொள்வதில்லை என்ற முடிவில் ஒரு கூட்டம் அலைகிறது)
இரண்டாவது: புலிகள் பாதுகாப்பிற்கு தனி மனிதனின் பங்கு என்ன? (இந்த கேள்வியை யாரெல்லாம் கேட்கிறார்களோ, அவர்கள் அதனை பெறும் இயற்கையின் குழந்தைகளே)
முதலாவது கேள்விக்கான விடை: புலிகளை தவிர்த்து காடுகளை பாதுகாக்க இயலாது. புலிகள் இல்லாத காடுகள், அதன் பரிசுத்த தன்மையை இழந்துவிட்டது, அல்லது இயற்கை சுழற்சியில் இருந்து விடுபட்ட காடுகளில் புலிகள் வாழாது. புலிகள் இன்றி காடுகளும், காடுகள் இன்றி மழையும், மழை இன்றி வேளாண்மையும், வேளாண்மையின்றி உணவும், உணவின்றி நாமும் வாழ்தல் இயலாது. நம் உணவுக்கும் காட்டில் வாழும் புலிகளுக்கும் தொடர்பு உண்டு. எனவே நம் சுயனலத்திற்காவது புலிகளை காப்பாற்ற வேண்டும். புலிகளை காப்பாற்றிவிட்டால், காடுகளையும் காட்டில் வாழும் மற்ற விலங்குகளையும், உணவு சங்கிலியையும் காப்பாற்றியதாகிவிடும். இயற்கையை நேசிப்பவர்களுக்கு முதலாவுது கேள்வியே எழாது.
இரண்டாவது கேள்விக்கான விடை:
புலிகளை பாதுகாக்க பத்து வழிகள்:
வழிமுறை ஒன்று: பாராட்டுதல்
குறைகளை மட்டுமே பேசிப்பழகிய நாம் நிறைகளை விட்டுவிடுகிறோம். இந்த தேசத்தில் சுற்றுச்சூழல் தொடர்பாக எந்த நல்ல விஷயங்கள் நடந்தாலும், அவற்றிற்கு காரணமானவர்களை பாராட்டி கடிதம் எழுதுங்கள். உதாரணத்திற்கு, ஒரு சிறுத்தை புலி வழிதவறி கிணற்றில் விழுந்து, அதை வன பாதுகாவலர்கள் காப்பாற்றி மீண்டும் வனப்பகுதியில் விட்டால், அந்த வன அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் பாராட்டுதல்களைத் தெரிவிக்கலாம், 50 பைசாவில். ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனியாக வனத்துறைக்கான வலைத்தளம் உள்ளது. அதிலிருந்து தேவையான முகவரிகளைப் பெற முடியும்.
வழிமுறை இரண்டு: தகவல் பெறும் உரிமை
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலமாக வனம் சார்ந்த தேவையான தகவல்களைப் பெற முடியும். உதாரணத்திற்கு, ஒரு குறிப்பிட்ட வனவிலங்கு சரணாலயத்தில், இருக்கும் புலிகளின் எண்ணிக்கையைக் கேட்கலாம், எண்ணிக்கை கூடியிருக்கிறது, அல்லது குறைந்திருக்கிறதா, குறைந்திருந்தால் எப்படி குறைந்தது, வேட்டையாடப்பட்டதாக இருந்தால், எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? இப்படி தொடர்ந்து கேள்விகள் கேட்பதன் மூலமாக, வனப்பகுதியில் நடைபெறும் தவறுகளைக் குறைக்க முடியும்.
வழிமுறை மூன்று: விழிப்புணர்வு
மலை கிராமங்களுக்கு நேரடியாக சென்று, காடுகளின் அவசியம் குறித்து பேசுதல். வேட்டையாடுவது தவறு என்று பள்ளி மாணவர்களுக்கு கற்பித்தல்.
வழிமுறை நான்கு: திரையிடுதல்
"புலிகளின் ரகசியங்கள்" என்ற திரைப்படத்தை பள்ளிகளில், கல்லூரிகளில் நேரடியாக சென்று திரையிடுதல். அதன் மூலமாக மாணவர்களிடம் நேரடியாக கலந்துரையாடுதல். என்ற வலைத்தளத்தில் இருந்து இந்த திரைபடத்தை பெற முடியும்.
வழிமுறை ஐந்து: அறிவுரைகள்
புலிகள் பாதுகாப்பு தொடர்பான எண்ணங்களை, அதன் பணி தொடர்பான அலுவலர்களிடம் தெரியப்படுத்துதல். மத்திய மற்றும் மாநில அரசுகளின் வனத்துறை அமைச்சர்களுக்கு பரிந்துரை செய்தல்.
வழிமுறை ஆறு: கணக்கெடுப்பு
புலிகள் கணக்கெடுப்பிற்கு நவீன முறைகளைப் பயன்படுத்தி துல்லியமாக கணக்கெடுத்தல். சரியான இடைவேளையில் தொடர்ந்து கணக்கெடுத்து எண்ணிக்கையை உறுதி செய்ய வேண்டும். இதற்காக அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு உதவியாக இருத்தல்.
வழிமுறை ஏழு: சுற்றுலா
வனப்பகுதியில் சுற்றுலா செல்பவர்கள், நெகிழிக்கழிவுளைp போடதிருத்தல் வேண்டும். வாகனங்களில் செல்லும் போது பாடல்களை ஒலிபரப்பி அமைதியைக் கெடுக்காதிருத்தல் வேண்டும்.
வழிமுறை எட்டு: கல்வி
வனப்பாதுகாப்பு குறித்த அவசியத்தை ஆசிரியர்களும், பெற்றோர்களும் மாணவர்களுக்கு கற்பித்தல். அல்லது கற்பிக்க சொல்லி வலியுறுத்துதல்.
வழிமுறை ஒன்பது: தகவல்
புலிகளையோ அல்லது காட்டில் வாழும் மற்ற விலங்குகளையோ வேட்டையாடுபவர்கள் பற்றிய தகவல்களை உரிய அலுவலர்களிடம் தெரிவித்தல்.
வழிமுறை பத்து: காதல்
இயற்கையை காதல் செய்யுங்கள். இயற்கையிடம் அத்தனை பேரும் காதல் செய்ய தொடங்கிவிட்டால் இந்த ஒன்பது வழிமுறைக்கும் வேலை இருக்காது.
இந்த பத்து வழிமுறைகளில், குறைந்தது மூன்று வழிமுறைகளை மட்டுமாவது ஒவ்வாருவரும் பின்பற்ற தொடங்கினால், இங்கே எந்த உயிரினத்திற்கும் அழிவென்பதே இல்லை, மனிதர்களையும் சேர்த்து.
- விவரங்கள்
- ஏ.சண்முகானந்தம்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
உயிர் வாழத் தகுதியான ஒரே இடமான பூமியில் தாவரங்கள், செடி, கொடிகள், புழு, பூக்கள், பறவைகள், விலங்கினங்கள், இவற்றுடன் மனிதர்களும் வாழ்கிறார்கள். இந்த உறவு பல்லாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.
கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக மனித இனத்தின் பேராசைக்கு பலியாகி காடுகளும், காட்டுயிர்களும் பெரும் அழிவுக்குள்ளாகி வருகின்றன. பலவகை விலங்கினங்கள் பறவைகள் அழிந்தே விட்டன. சில எடுத்துக்காட்டுகள். நம் நாட்டில் பரவலாக இருந்த சிவிங்கி புலி கானமயில், மொரிஷியஸ் தீவை கண்டுபிடித்த போர்ச்சுகீசியர்களால் அழிக்கப்பட்ட டோடோ என்ற பறவை இனம் பலவித தாவர வகைகள் என நீள்கிறது பட்டியல்.
அழிவின் விளிம்பில் புலி, யானை, சிங்கம், கிளிகள், சிருவாசிகள், ஆந்தைகள், பிணம் தின்னிக் கழுகுகள் என பலப்பல காட்டுயிர்கள் உள்ளன. காடுகளையும், காட்டுயிர்களையும் மறந்த சமூகம் அடுத்த கட்டத்திற்கு முன்னேற வாய்ப்புகள் மிகமிக குறைவு. இன்று அந்த ஒரு மோசமான சூழலில் தமிழ் சமூகம் சிக்கித் தவிக்கிறது.
தமிழின் சங்க இலக்கியப் பாடல்கள் பலவற்றில் தாவரங்களையும், பறவைகளையும், விலங்குகளையும் பற்றிய கூர்ந்தறிந்த பல பாடல்கள் வருகின்றன. பழந்தமிழர்கள் இயற்கையுடனும், காட்டுயிர்களுடனும் நெருக்கமான உறவைப் பேணிக் காத்தனர்.
காட்டுயிரில் பேருயிரான யானை மா, கரி, சிந்தூரம், அத்தி, அறுகு, ஆம்பல், ஆனை, இபம், இம்மடி, களிறு, கைம்மா என சுமார் 50 புனைப் பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளது கவனத்திற்குரியது.
தற்காலப் பள்ளி மாணவர்கள் யானையே இல்லாத ஒரு நாட்டின் மொழியில் Elephantஐ பற்றி படித்துக் கொண்டிருப்பது வெட்கப்படக்கூடியது. இது போலவே பறவைகள், விலங்குகள், தாவரங்களுடனான நெருக்கத்தை மறந்ததுடன் அதற்குரிய அழகான தமிழ்ப் பெயர்களையும் மறந்து ஆங்கில மோகத்தில் வாழ்கின்றனர். அழகிய அருவி என்ற சொல் மறந்து நீர்வீழ்ச்சி மாறியது போல.
இயற்கை சூழலமைப்பில் பறவைகள், விலங்குகள், பூச்சிகள், செடி, கொடிகள், தாவரங்கள் என அனைத்தும் இணைந்துள்ளன. இதில் பறவைகள் பல அளவுகளில் நிறங்களில் காணப்படுகின்றன. இதன் காரணமாகவே பெரும்பான்மை மக்களால் (நம் நாட்டில் அல்ல) வெகுவாக இரசிக்கப்படுகின்றன. இனிமையான குரலொலிக்காகவும் இரசிக்கப்படுகின்றன.
விடியற்காலையில் இனிய குரலொலியால் எழுப்பும் பல வித சிரிப்பான்கள் பனைமரங்களில் காற்று தாலாட்டும், பல அறைகளைக் கொண்ட கூடு கட்டும் தூக்கணாங் குருவிகள் மிக நேர்த்தியான தையல் கலையுடன் கூட்டை வடிவமைக்கும் தையல் சிட்டு, மரங்களுக்கு வைத்தியம் பார்க்கும் மரங்கொத்திகள் என பலவிதங்களில் பறவைகள் நம்மை சுற்றி வாழ்கின்றன அவற்றை காண நமக்கேது நேரம்.
பறவைகள் யாவும், புழு, பூச்சிகளை கட்டுப்படுத்தி சுற்றுச் சூழலுக்கு பெரும் பங்களிப்பை செலுத்துகின்றன. பலவித தாவரங்களின் வளர்ச்சிக்கு உதவுகின்றன.
இந்திய அளவில் 1330 வகைப் பறவைகளும், தமிழகத்தில் 350 வகைப் பறவைகள் 60 குடும்பங்களில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளன. ஒவ்வொரு பறவையும் தனக்கென்று ஒரு வாழ்வு எல்லையை வைத்துக் கொள்கிறது. அதற்குள் மட்டுமே உணவு தேடல், இணை தேடல், கூடுகட்டல், இனப்பெருக்கம் செய்தல் போன்ற அனைத்தையும் செய்கின்றன. இதுவே “வாழ்வு எல்லை’’ எனப்படுகிறது.
தமிழகத்தின் மாநிலப் பறவையான மரகதப் புறா மரங்களடர்ந்த காடுகளில், தரையில் இரை தேட காணலாம். இத்துடன் சேர்த்து தமிழகத்தில் 13 வகையான புறாக்கள் காணப்படுகின்றன. கிளிகளைப் போலிருக்கும் பச்சை நிறப் புறாக்களில் 5 இனங்களும் இதில் அடங்கும்.
மரங்களின் இயற்கை வைத்தியர் எனப்படும் மரங்கொத்திகளின் 13 வகைகள் நம் தமிழகத்தில் காணப்படுகிறது. சிறியது சிறு மரங்கொத்தி பெரியதான காக்கா மரங்கொத்தியும் இவற்றில் அடங்கும்.
பழந்தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்படும் அன்றில் எனப்படும் ஒரு வகையான கொக்கு காணப்படுகிறது. மூக்கு வளைந்து அரிவாள் போன்று காணப்படுவதால் ‘அரிவாள் மூக்கன்’ ஆயிற்று 3 வகையான அரிவாள் மூக்கன்களை நாம் காணலாம்.
வெள்ளை அரிவான் மூக்கன் சாம்பல நிற அரிவாள்மூக்கன் கருப்பு அரிவாள் மூக்கன் போன்ற மூன்று வகையான பறவைகளையும் சென்னையை அடுத்துள்ள வேடந்தாங்கல், கரிக்கில பறவைகள் சரணாலயத்தில் காணலாம்.
நீர்நிலை காணப்படும் பகுதிகளில் சிறிது நேரம் நின்று கவனித்தால் வெள்ளை நிற கொக்குகளை காணலாம். இந்த வெள்ளை நிற கொக்குகளில் 4 வகைகள் இங்கு காணப்படுகின்றன. சின்ன கொக்கு நடுத்தர கொக்கு, பெரிய கொக்கு, உண்ணிக்கொக்கு போன்றவையாகும். இதில் முதல் மூன்றை நீர்நிலைகள், குளங்கள், ஏரிக்கரை ஒட்டிய பகுதிகளில் காணலாம். கடைசியாக உள்ள உண்ணிக் கொக்கை கால்நடைகள் மேயும் இடங்களில், கால்நடைகளை பின்தொடர்ந்து அதன் காலடித்தடத்தில் இருந்து வெளிக் கிளம்பும் பூச்சிகளை பிடித்து தின்னக் காணலாம்.
ஆறு வகையான நாரைகளை நம் தமிழகத்தில் காணலாம். நத்தை குத்தி நாரை, வர்ண நாரை, கட்பளி நாரை, கரு நாரை, பூ நாரை, செங்கால் நாரை போன்றவைகளை நாம் காணமுடியும்.
இதில் முதல் 4 வகைகளை வயற்காடுகள், ஏரிக்கரையை ஒட்டிய பகுதிகளில் காணலாம். நீண்டு வளைந்த கழுத்தையும், நீண்ட கால்க¬ளையும், ரோஜா வண்ணத்தை (சிகப்பு) ஒத்த சிறகுகளையும் கொண்ட அழகிய பூ நாரைகள் தமிழகத்தின் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு நவம்பர், டிசம்பர் மாதங்களில் 50 ஆயிரத்திற்கும் மேல் வருகின்றன. சென்னையை ஒட்டிய பழவேற்காடு பறவைகள் சரணாலயத்திற்கும் ஆயிரக்கணக்கில் வருவது குறிப்பிடத்தக்கது. இவற்றில் செங்கால் நாரை ஐரோப்பாவிலிருந்து குளிர்காலத்தில் வலசை வருபவையாகும்.
நமது ஏரிக்கரை, குளங்களில் 6 வகையான மீன் கொத்திகளை காணலாம். 1. சிரால் மீன் கொத்தி, 2. சிறு மீன் கொத்தி, 3. பெரிய அலகு மீன் கொத்தி, 4. வெண்மார்பு மீன் கொத்தி, 5. கருந்தலை மீன் கொத்தி, 6. கருப்பு வெள்ளை மீன் கொத்தி போன்றவையாகும். ஏரிக்கரை குளங்கள், நீர்நிலைகள் உள்ள பகுதிகளில் மரக்கிளைகளில் மீனுக்காக நீண்ட நேரம் காத்திருப்பதை காணமுடியும்.
தமிழகத்தில் இருவகையான ஆள்காட்டிகளை காணலாம். அரளிப்பூ ஆள் காட்டி, ஆவாரம்பூ ஆள்காட்டி போன்ற இரு வகையாகும். நீர்வளம் மிக்க பகுதிகளில் காணமுடியும். எதிரி தம்மை நெருங்குவது கண்டால் டிட்யு டூயுட் என கத்திக் கொண்டே தம்மை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தும் பண்புள்ளதால் ‘ஆள்காட்டி’ என்ற பெயர் வந்தது.
இருவாசி அல்லது இருவாயன் என்றழைக்கப்படும் நமது அடர்காடுகளில் 4 வகையான அழகு சேர்க்கின்றன. பெரிய வான்கோழி அளவுக்கு இருவாசிகள் ஒரு மரவாழ் பறவையாகும். ஒற்றை இருவாயன், சாம்பல் இருவாயன், கருப்பு வெள்ளை இருவாயன், பெரிய கருப்பு வெள்ளை இருவாயன் என்ற 4 வகைகள் நமது காடுகளுக்கு வளம் சேர்க்கின்றன.
சிறுகாய்கள், பழங்கள், காட்டு பல்லிகள், காட்டு பறவைகளின் குஞ்சுகள் போன்றவற்றை உணவாகக் கொள்கின்றன. சில வகை மரங்கள் பெருக இருவாசிகளே முக்கிய காரணமாகின்றன. இவைகள் உண்ட பழங்களின் விதைகள் வீரிய மிக்க விதைகளாக செல்லுமிடமெல்லாம் பரவ காடுகளின் வளர்ச்சிக்கு பங்காற்றுகின்றன. இருவாசிகளின் அழிவு காடுகளின் அழிவுக்கு முன்னறிவிப்பாகும்.
மேற்குறிப்பிட்ட பறவைகளைத் தவிர பலவித பறவைகளும் நம்முடன் வாழ்கின்றன. நகரங்களை சுத்தப்படுத்தும் காக்கை, சிட்டுக்குருவிகள், நாகணவாய் (மைனா, சமஸ்கிருதப் பெயர்) போன்ற பறவைகளோடு பலவித கிளிகள், கதிர்குருவிகள், தேன்சிட்டுகள், பஞ்சுருட்டான்கள், குக்குறுவான்கள், சிலம்பன்கள், கரிச்சான் குருவிகள் என பலப்பல பறவை இனங்கள் நம்மை சுற்றி வாழ்கின்றன. கண் தெரிந்தும் குருடர்களாக இரசிப்புத்தன்மை இருந்தும் இரசிக்காத மூடர்களாக மூட நம்பிக்கைகளின் மொத்த உருவமாக நாம் தான் இருக்கிறோம்.
காடுகளின் துப்புரவாளனாக உள்ள பிணம் தின்னிக் கழுகுகள் விவசாயத்திற்கு நண்பனாக உள்ள இரவாடிகளான பலவித ஆந்தைகள், குயில்கள், காதாரிகள், பலவித ஈப்பிடிப்பான்கள் மலர் கொத்திகள் என அனைத்தும் மனதை கவரும் ஆழகுடன் பல வண்ணங்களில் நம்முடன் இணைந்தே வாழ்கின்றன.
பறவைகள் பற்றிய அறிவை இழந்த தமிழர்கள், இயற்கை, காட்டுயிர்கள் மேல் இருக்கும் மற்ற அனைத்து வகை மூட நம்பிக்கைகளை அறவே ஒழித்து மேற்குலக அறிவியல் கண்ணோட்டத்தில் பகுத்தறிவு சிந்தனையோடு செயல்படுவது ஒன்றே தமிழர்கள் தலைநிமிர இழந்த அறிவுச் செல்வத்தை மீட்க வீரத்தை மீட்க தன்மானத்தை மீட்க ஒரே வழி.
பறவைகளோடு பிணைப்பை ஏற்படுத்துவோம். சூழல் மகத்துவம் காப்போம்..
(இளைஞர் முழக்கம் பிப்ரவரி 2011 இதழில் வெளியானது)
- விவரங்கள்
- வெண்மணி அரிநரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
நான் ஒரு குட்டி யானை. நான் எனது கூட்டத்துடன் இந்தியாவில் ஒரு காட்டில் வசிக்கிறேன். சிலநேரங்களில் நாங்கள் காட்டின் விளிம்பில் உள்ள கிராமங்களில் பயிர்களைத் தின்றுவிடுகிறோம். பின்னர் மனிதர்கள் எங்களைப் பதிலுக்குத் தாக்குகிறார்கள், வழக்கமாக இரு தரப்பிலும் சேதம் ஏற்படுகிறது.
எங்களுடைய வாழ்விடங்கள் சுருங்கிக் கொண்டிருக்கின்றன. நாங்கள் பட்டினியின் விளிம்பில் இருக்கிறோம். எங்களது நீர்நிலைகள் விரைவாக மறைந்து வருகின்றன. பலநேரங்களில் எங்களுக்குப் பருகுவதற்கே நீர் கிடைப்பதில்லை. குளிப்பது பற்றிக் கேட்கவே வேண்டாம். காட்டிலிருந்து வெளியே வந்தால் நாங்கள் கொல்லப்படும் அபாயம் இருக்கிறது. நாங்கள் 'கொடிய’, ‘அபாயகரமான' விலங்குகள் என்று அவர்கள் கூறுகிறார்கள். என்ன முட்டாள்தனம்! சில மனிதர்கள் செய்வதைப்போல நாங்கள் பிற விலங்குகளை உண்பதில்லை.
இதைவிட மோசமான விசயம் வேட்டைக்காரர்கள்தான். நான் பெரியவன் ஆனதும் எனக்குப் பெரிய தந்தங்கள் வளர்ந்துவிடும் என்றும் அப்போது நான் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என்றும் என் அம்மா கூறுகிறார். நான் கொல்லப்படாவிட்டாலும் சிறை பிடிக்கப்படக் கூடும். சர்க்கஸ் அல்லது விலங்குக் காட்சி சாலைக்கு நான் கொண்டு செல்லப்படலாம். அல்லது மரங்களைச் சுமக்கவோ கோயில் திருவிழாக்காலங்களில் பங்கேற்பதற்கோ வேலையில் அமர்த்தப்படலாம்.
ஒரு யானை காட்டில் சுதந்திரமாக வாழ்ந்தால் 60 ஆண்டுகள் வாழ்கிறது. சிறைபிடிக்கப்பட்டால் எண்பது ஆண்டுகள் வாழ்கிறது என்று மனிதர்கள் கூறுகிறார்கள். ஆனால் பாதிக்கும் மேற்பட்ட யானைகள் 15 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிடுகின்றன. ஐந்தில் ஒரு யானை மட்டும் தான் 30 வயதைக் கடக்கிறது. காடு உண்மையிலேயே ஒரு அபாயகரமான இடம் தான்.
மனிதர்களே தங்கள் இயற்கையான வாழ்விடத்தில் இப்போது வாழ்வதில்லை. இந்தப் புவிக்கோளத்தின் மீது ஆதிக்கம் செலுத்தி மனிதன் தனக்கு நன்மை செய்து கொள்கிறான். அப்படியானால் யானைகள் காட்டை விட்டு வெளிய வந்து மனிதர்களுடன் ஏன் வசிக்கக் கூடாது. மனிதன் தான் பூமியில் சிறப்பாக வழங்கக் கூடியவன் அல்லவா?அவன் நிச்சயமாக அவனது நாய்களுக்கும், பூனைகளுக்கும், குதிரைகளுக்கும், பன்றிகளுக்கும் ஆடுகளுக்கும் கோழிகளுக்கும் வழங்குவது போல உணவும் இருப்பிடமும் வழங்கிக் கொடிய காட்டிலிருந்து எங்களுக்கும் பாதுகாப்பு வழங்குவான்.
2
அவன் அவற்றில் சிலவற்றைத் தின்று விடுகிறான் என்று எனக்குத் தெரியும். ஆனால் அனைத்தையும் தின்று விடுவதில்லையே. நான் நல்ல உழைப்பாளி. எனவே என்னைக் கொல்லமாட்டான் என்று எனக்கு உறுதியாகத் தெரியும். அவனுக்குத் தந்தங்கள் தருவேன். எனது வாளின் முடியைக் கொண்டு அவன் கைவளையமும் மோதிரமும் செய்து அணிந்து கொள்ளலாம். இருந்தாலும் என்னுடைய வால் மிகவும் குட்டை தான். எந்த வகையிலாவது அது நடைமுறையில் உதவுமா என்று எனக்குத் தெரியவில்லை.
இந்தியாவில் கி.மு.3500 ஆண்டுகளுக்கு முன்பே சிறைபிடிக்கப்பட்ட யானைகள் இருந்திருக்கின்றன. எங்களுடைய முன்னோர்களான சடை யானைகளும் ராட்சத யானைகளும் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே பூமியை வலம் வந்திருக்கிறார்கள். பின்னர் அவர்கள் 1300 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்து விட்டார்கள்.
நாங்களும் அழிவின் விளிம்பில் இருக்கிறோம். 1970ல் உலகில் 1.5 மில்லியன் காட்டு யானைகள் இருந்தன. இருபதாண்டுகளில் அவை 6,40,000 ஆகக் குறைந்து விட்டன. இந்தியாவில் இப்பொழுது 30,000 யானைகள் மட்டுமே இருக்கின்றன. மிக மூத்த யானை இதை என்னிடம் கூறியது.
கடந்த 100 ஆண்டுகளில் 65 பாலூட்டி இனங்கள் அழிந்து போயுள்ளன. ஆசிய சிங்கங்களுக்கு என்ன நடந்தது என்று பாருங்கள். காட்டின் ‘அரசன்’ என்றழைக்கப்படும் சிங்கம் இன்று குஜராத் கீர் சரணாலயத்தில் அடைபட்டுவிட்டது. பிற அனைத்து இடங்களிலும் மறைந்து விட்டது. 2010 ஏப்ரலில் அந்தக் காப்பகத்தில் 411 சிங்கங்கள் மட்டுமே இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகில் 1,00,000 புலிகள் இருந்தன. இந்தியாவில் மட்டும் 40,000 புலிகள் இருந்தன. இன்று உலகில் 6020 புலிகள் மட்டுமே உள்ளன. இந்தியாவில் 1409 மட்டுமே உள்ளன. விரைவிலேயே புலிகள் இனம் அழிந்துவிடும். எங்கள் நிலை தேவலாம். ஆனாலும் நாங்களும் கவலையடைந்து தான் இருக்கிறோம்.
மனிதனோடு சேர்ந்து வாழக் கற்றுக்கொண்ட பறவைகளும் விலங்குகளும் பிழைத்திருக்கின்றன என்பதை வரலாறு காட்டுகிறது. மனிதர்களோடு சேர்ந்து வாழக் கற்றுக்கொள்வது நிச்சயமாக அறிவுடைமை தான்! நாய்களையும் பூனைகளையும் காண எனக்குப் பொறாமையாக இருக்கிறது. அவர்கள் அச்சம் கொள்ள எதுவும் இல்லை. வேலையும் செய்யவேண்டியதில்லை. உண்பதற்கு நிறையக் கிடைக்கிறது. ஏராளமான வசதிகள். ஒரு யானையால் இதை கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது.
3
யானைகளாகிய எங்களுக்கு நிறைய உணவு தேவை. நாங்கள் கண்டிப்பான தாவர உண்ணிகள். இந்தப் புவிக்கோள் ஏற்கனவே 630 கோடி மனிதர்களுக்கு உணவளிக்க வேண்டியுள்ளது. இன்னும் ஏராளமான உயிரினங்களுக்கு உணவளிக்க வேண்டும். நாங்கள் உயிர் வாழ்வதற்கு என்ன வாய்ப்புக்கள் இருக்கின்றன? நாங்கள் புதிய வாழ்விடத்தைத் தேடியாக வேண்டும். மனிதர்கள் மட்டும் எங்களைப் பராமரிக்கும் பொறுப்பையும் உணவுக்காக அலையும் துன்பத்திலிருந்து பாதுகாக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்வார்களானால் எனக்கு வேலை செய்வதில் மறுப்பேதுமில்லை. யானைகள் வேலை செய்தால் என்ன தவறு? மனிதர்கள் வேலை செய்வதில்லையா?
நான் சிறை பிடிக்கப்படுவதை வெறுக்கிறேன். ஆனாலும் யானைப் பாகர்கள் மட்டும் இன்னும் சிறிது மனிதாபிமானத்தோடு நடந்து கொள்வார்களானால், பின்னர் மனிதர்களோடு எங்களது வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கும். பிறகு நாங்கள் பயிர்களை அழிக்க மாட்டோம்; மனிதர்களைத் தாக்க மாட்டோம் என்று நான் உறுதியாகக் கூறுகிறேன்.
நன்றி: தி இந்து நாளிதழ்
26.12.2010.
புஷ்பா குருப்
தமிழில்: வெண்மணி அரிநரன் (
- பாண்டா கரடிகள்: சீனாவின் சூப்பர் ஸ்டார்
- சுமத்திரா புலிகள் - இன்னும் கொஞ்சமே மிச்சம் இருக்கு
- வீழ்ந்து கொண்டிருக்கும் வரையாடுகள்
- காணாமல் போகும் நீர் நாய்கள்
- அழிந்து வரும் சோலை மந்தி
- பழனி மலை தொடர்ச்சி
- மிரட்டும் தவளைகள்
- எறும்புக்கூட்டம் - யார் அந்த ராணி?
- டார்வினின் விதி மீறும் நாய்கள்
- பறவைகளின் ரேடியேட்டர்
- மீன்களின் உலகம்
- அபசகுனமா? ஆஸ்திரேலியப் பறவையா?
- நான்கு கொம்பு மான் (Four horned antelope–Tetracerus quadricornis)
- சிறுத்தைப் புலி - இயற்கையின் கொடை
- புலிகளும் புரிதலும்
- சப்தங்கள் பொதுவானதா?
- திமிங்கல மயானம்
- நாடகமாடும் பாம்பு
- அதிசயத்தின் உச்சம் திமிங்கிலங்கள்
- சிலந்தியின் உருவ பேதங்களுக்கான காரணம்