கீற்றில் தேட...
இயற்கை & காட்டுயிர்கள்
- விவரங்கள்
- ராமன்ராஜா
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
பள்ளி வயதில் காக்கை குருவி ஓணான்களும், ஹெலிகாப்டர் பூச்சிகளும்தான் எங்கள் தோழர்கள். கொட்டாங்கச்சியில் தண்ணீர் பிடித்துத் துவைக்கிற கல்லின் மேல் வைத்துவிட்டுக் காத்திருந்தால் சிட்டுக் குருவிகள் வந்து உட்காரும். சின்ன வாயால் அவை தண்ணீர் மொண்டு தலையைச் சாய்த்துக் குடிக்கிற அழகே அழகு. சில குருவிகள் அந்தக் கொட்டாங்கச்சித் தண்ணீரிலேயே சிக்கனமாகச் சென்னைவாசி போல் குளித்துவிட்டுப் போகும்.
இந்த 2010-ல் என் குருவிகள் எல்லாம் எங்கே? சென்னையில் கண் பூக்கத் தேடினாலும் சிட்டுக் குருவி தட்டுப்பட மறுக்கிறது. அன்றைக்கு உலக சிட்டுக் குருவி தினம் என்று மீடியாவில் பார்த்துவிட்டு, எங்கள் வீட்டுப் பொடியன் மொட்டை மாடியில் அரிசி வைத்துவிட்டுக் காத்திருக்கிறான். மீதி இருக்கும் குருவிகள் எங்கிருந்தாலும் இதைத் தந்தி போல் பாவித்து உடனே வேளச்சேரிக்கு வரவும்.
சிட்டுக் குருவிகள் போலவே காணாமல் போய்க்கொண்டிருக்கும் மற்றொரு ஜீவன், தேனீக்கள். இரண்டுமே மறைந்து போவதற்குக் காரணம், பேராசையே அடிப்படையாகக் கொண்ட நம் வாழ்க்கை முறை. அடுத்த ரெசிஷனுக்குள் முடிந்தவரை சம்பாதித்துவிட வேண்டும் என்ற அவசரம்.
மூன்று வருடங்களுக்கு முன்னால் உலகில் தேனீக்கள் வேகமாகக் குறைய ஆரம்பித்தன. (ஜோ க்ளார்க்). முதலில் இதன் காரணம் யாருக் கும் பிடிபடவில்லை.
இந்த மர்மக் கதையின் ஆரம்பம் நவம்பர் 12, 2006. ஃப்ளாரிடாவில் தொழில் முறையில் தேனீ வளர்க்கும் விவசாயியான டேவ். அன்று காலையில் தன் தேனீப் பெட்டிகளைக் கவனித் தார். வழக்கமாகப் பெட்டியைச் சுற்றித் தேனீக்கள் குற்றாலக் குறவஞ்சியில் வர்ணிப்பது போல முரலும். ஆனால் அன்றைக்குத் தேனீக்கள் ஏதும் கண்ணில் படவில்லை. சோம்பேறிப் பூச்சிகள், இன்னும் தூங்குகிறதோ என்று பெட்டியைத் திறந்து பார்த்தால், பகீரென்றது. கூட்டில் ராணித் தேனீ, குஞ்சுப் புழுக்கள், மற்றும் ஒரு சில எடுபிடி ஏவலாட்கள் மட்டும்தான் இருந்தார்கள். பதற்றத்துடன் ஒவ்வொரு பெட்டியாகத் திறந்து திறந்து பார்த்தார். மிகச் சில தேனீக்களே மீதி இருக்க, மற்ற அத்தனையும் போன இடம் தெரியவில்லை.
விரைவிலேயே இது தொடர் கதையாக ஆயிற்று. அமெரிக்கா முழுவதும் தேனீக் கூட்டங்கள் ஒட்டு மொத்தமாகக் காணாமல் போக ஆரம்பித்தன. 2007 பிப்ரவரிக்குள் கரை முதல் கரை வரை தேனீ மரணங்கள். சில விவசாயிகளுக்கு 90 முதல் 100 சதவீதம் வரை இழப்பு!
வருடா வருடம் ஒட்டுண்ணி, வைரஸ் போன்ற பிரச்னைகளால் சில தேன் கூடுகள் காலியாவது உண்டுதான். ஆனால் குறுகிய காலத்தில் 6 லட்சம் முதல் 8 லட்சம் வரை தேன்கூடுகள் செத்துவிட்டதன் காரணம் புதிராகவே இருந்தது. என்ன வியாதி என்று கண்டுபிடிக்க முடியாததால் இதற்கு காலனி கொலாப்ஸ் டிஸ்ஆர்டர் (CCD) என்று சராசரி விவசாயியின் வாயில் நுழையாத பெயராக வைத்தார்கள்.
நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொள்வதற்கு, அமெரிக்கப் பொருளாதாரத்தில் தேனீக்கள் பங்கு பற்றிப் பார்க்கவேண்டும். அங்கே பயிர்களில் கிட்டத்தட்ட 23 சதவீதம் தேனீக்களால்தான் மகரந்தச் சேர்க்கை பெற்றுச் சூல் கொள்கின்றன.
தேனீக்கள் முதன்முதலில் அமெரிக்கா வுக்குப் போன வருடம் 1622. ஐரோப்பியர்கள் கொண்டு வந்த இந்த புதிய பூச்சியைப் பார்த்த செவ்விந்தியப் பழங்குடியினர் அதற்கு ‘வெள்ளைக்காரன் ஈ’ என்று பெயர் வைத்தார்கள். கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி மெல்ல ஐரோப்பியக் குடியிருப்புகள் பரவ ஆரம்பித்த போது அதற்குச் சற்று முந்திக்கொண்டு தேனீக்களும் அமெரிக்காவுக்குள் ஊடுருவின. எனவே தேனீக்கள்தான் நாகரிகம், நவீனத்துவத்திற்குக் கட்டியம் கூறியவை. அத்தோடு கூடவே பழங் குடியினரின் அழிவுக்கும் அவை கெட்ட சகுனமாக ஆகிவிட்டது வேறு கதை. குறைந்த சோனித் தேனீக்கள் மட்டுமே பெருகி வளர்ந்தன. இது சிசிடி விடுகதைக்கு முதல் சாவி.
புதிய கண்டத்திற்கு ஐரோப்பியர்கள் கொண்டு வந்த மற்றொரு தாவரம் ஆப்பிள். ஆப்பிள் போன்ற பயிர்களை மகரந்தச் சேர்க்கை செய்வதற்குத் தேனீக்கள் அவசியம். குறிப்பாக ஏக்கர் கணக்கில் ஒரே வகைப் பயிரை வளர்க்க வேண்டுமென்றால் தேனீக்களின் உதவி இல்லாமல் முடியாது. தெரிந்தோ தெரியாமலோ அவர்கள் தேனீயையும் கையோடு கொண்டு வந்தார்கள்.
கண்ணுக்கெட்டிய வரை ஒரே பயிரை வளர்க்கும் மானோ கல்ச்சர் முறை, தொழிற்புரட்சி காலத்தில் டிராக்டரில் ஏறிச் சவாரி செய்தது. இருபதாம் நூற்றாண்டு பிறந்த போது கண்ட கண்ட நைட்ரஜன் உரங்கள், பூச்சி மருந்து, அறுவடையை நாலா புறமும் அனுப்ப, ரயில் பாதை என்று மேலும் மேலும் பெரிய பண்ணை கள் உருவாகத் தேவையான அனைத்தும் அமெரிக் காவுக்குக் கிடைத்துவிட்டன. ஃபோர்டு கார் தயாரிப்பது போலவே அவர்கள் விவசாயத்தையும் செய்ய முயற்சித்ததுதான் சிசிடியின் இரண்டாவது சாவி.
பண்ணைகள் அளவுக்கு மீறிப் பெரியதான போது அத்தனை ஏக்கராவில் அத்தனை கோடிப் பூக்களுக்கு மகரந்தம் கொண்டு சேர்க்கத் தேனீக்கள் போதவில்லை. அப்போது பிறந்தது தான் நடமாடும் தேனீப் பண்ணை ஐடியா. பெட்டி பெட்டியாகத் தேன் கூடுகளை லாரியில் ஏற்றி நாடு பூரா கொண்டு போவார்கள். இந்த சீசனுக்கு கலிபோர்னியாவில் பாதாம் தோட்டங்கள். அடுத்த சில மாதங்களில் சர்க்கஸ் கூடாரத்தைக் கிளம்பிக் கொண்டு போய் வாஷிங்டனில் ஆப்பிள்கள் அங்கிருந்து நேராக ஃப்ளோரிடா.... இப்படி ஒரு வசதி கிடைத்துவிட்டதால் மானோ கல்ச்சர் என்பது அமெரிக்காவின் தலைவிதியாகவே ஆகிவிட்டது.
இத்தனை கலாட்டாக்களையும் தாங்கிக் கொண்டு வருடம் முழுவதும் அவைகளை உயிருடன் வைத்திருப்பதற்காக, தேனீக்களுக்கு செயற்கையான உணவு கொடுத்து வளர்த்தார்கள். என்ன என்னவோ ஃப்ரக்டோஸ் சிரப்கள், மானோ சக்கரைடுகள் என்று சீப்பாக சாப்பாடு போட்டு சமாளித்தார்கள். டெண்டுல்கரை வைத்து விளம்பரம் செய்து நம் குழந்தைகளுக்கு அவர்கள் புட்டி புட்டியாக விற்கும் அதே வெற்று சர்க்கரைக் கரைசல்கள்! தேனீக்கள் வசந்த காலப் பூச்சிகள். அமைதி விரும்பிகள். இப்போது அவைகள் எல்லாப் பருவங்களிலும் டிராவலிங் சேல்ஸ் மேன் மாதிரி டை கட்டிக் கொண்டு ஊர்ஊராக அலைந்து கிடைத்ததைத் தின்று வாழ நேர்ந்தது.
இரண்டாம் உலகப் போர் முடிந்ததும் வயல்கள் மூர்க்கமாக இயந்திர மயமாயின. ஆயிரக் கணக்கான சிறு விவசாயிகள் ‘ஏரின் உழாஅர் உழவர்’ என்று மனம் உடைந்துபோய், வயிற்றுப்பிழைப்புக்காக வடக்கே நகரங்களுக்குப் புலம் பெயர்ந்தார்கள். இதனால் பண்ணையார்கள் எண்ணமெல்லாம், இன்னும் பரந்த ஏரியாவில் ஒரு பயிரை வளர்த்து உற்பத்திச் செலவைக் குறைக்க முடியுமா என்பதிலேயே போயிற்று. தேனீக்களின் சுமை அதிகரித்தது
தேனீ வளர்ப்பவர்கள் அவ்வப்போது பெட்டியைக் கையில் தூக்கிப் பார்ப்பார்கள். கனமாக இருந்தால் நிறையத் தேன் சேர்ந்துவிட்டது என்று உடனே பூச்சிகளைக் கொன்று தேனை அறுவடை செய்து கொண்டார் கள். பெட்டி லேசாக இருந்தால் இரண்டு மூன்று கூடுகளை ஒன்றாகச் சேர்த்து, இப்போதாவது தேன் சேருகிறதா என்று பார்த்தார்கள். இதன் விளைவு, டார்வினின் மரபீனி விதிகளுக்கு நேர் மாறாக இருந்தது : சுறுசுறுப்பான தேனீக்கள் எல்லாம் சீக்கிரம் கொல்லப்பட்டு, உற்பத்தித் திறன் பிழைப்புக்காக வடக்கே நகரங்களுக்குப் புலம் பெயர்ந்தார்கள். இதனால் பண்ணையார் கள் எண்ணமெல்லாம், இன்னும் பரந்த ஏரியாவில் ஒரு பயிரை வளர்த்து உற்பத்திச் செலவைக் குறைக்க முடியுமா என்பதிலேயே போயிற்று. தேனீக்களின் சுமை அதிகரித்தது.
இது எப்படி சிசிடிக்கு இட்டுச் சென்றது என்பதற்கு வருவோம். மிகப் பெரிய ஏரியாவில் ஒரே ஒரு வகைப் பயிர்தான் என்றால் தேனீக்களுக்கு ஒரே வகை மகரந்தம்தான் கிடைக்கிறது. தங்களுக்குத் தேவையான ப்ரோட்டினை அவை மகரந்தத்திலிருந்துதான் பெறுகின்றன. பல வகைப்பட்ட தாவரங்களின் மகரந்தத்தைச் சாப்பிட்ட தேனீக்கள் ஆரோக்கியமாக வளர்கின் றன என்பதையும், ஒரே வகை உணவை வாழ் நாள் முழுவதும் சாப்பிட்டு வளர்ந்த தேனீக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்து விடுகிறது என்ப தற்கும் பல ஆராய்ச்சி முடிவு கள் சாட்சி இருக்கின்றன. அதுவும், பற்பல ஆபத்தான பூச்சி மருந்துகளில் சொட்டச் சொட்ட நனைந்த மகரந்தம்.
இது வரை நாம் தயாரித்த பூச்சி மருந்துகள் 19 வகைகளில் அடங்கும். அதில் DDT போன்ற சில மருந்துகளைத் தடை செய்து 25 வருடம் ஆகிறது. இருந்தும் ஆயிரக் கணக்கான மகரந்தத் துகள் கள், தேன் மெழுகு சாம்பிள்களை சோதித்துப் பார்த்தபோது டிடிடி உள்பட எல்லா மருந்து களின் மிச்சங்களும் அதில், காணக் கிடைத்தன. அதாவது, பூச்சி மருந்துகள் ஜாடி பூதம் மாதிரி. ஒரு முறை திறந்துவிட்ட பிறகு அவை உலகத்தை விட்டுப் போவதே இல்லை!
மனிதன் வங்கியில் திருடுவான், வளையலைத் திருடுவான், கிரிக்கெட்டில் திருடுவான், ஆடு மாடுகள் என்று தன்னைவிடக் கீழான பிராணிகளிடமும் பால், தோல் உட்பட அனைத் தையும் திருடிக் கொள்வான். கேவலம் பூச்சிகளிடம்கூட அவற்றின் கடைசிச் சொட்டு உழைப்பு வரை திருடிக் கொள்ளக் கூச்சப்பட மாட்டான் என்பதற்கு வாழும் சாட்சியாக இருப்பவை தேனீக்கள்.
- சொல்வனம்
(மாற்று மருத்துவம் ஜனவரி 2011 இதழில் வெளியானது)
- விவரங்கள்
- வ.க.கன்னியப்பன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
முதலைக் கண்ணீர் என்பது ஒருவர் துன்புறும்போது, வருத்தப்பட்டு அழுது கண்ணீர் வடிப்பது போல் நடிப்பதாகும். முதலை தன் இரையை விழுங்கும்போது கண்ணீர் விடுவது போல தோற்றம் தரும். நமக்கு உணவைப் பார்த்ததுமே வாயில் உமிழ் நீர் சுரப்பதுபோல, அது தன் இரையைப் பார்த்ததும் கண்களில் கண்ணீர் வருவதும், இரை நெருங்கியதும் அதை கவ்விப் பிடிப்பதும் அதன் இயல்பு.
உண்மையில் முதலைகள் அழுவதில்லை, ஏனென்றால் அவைகளுக்கு கண்ணீர் நாளங்களே (Tear ducts) கிடையாது எனத் தெரிகிறது. ஏனென்றால் அவைகள் பெரும்பாலும் தண்ணீரிலேயே இருப்பதால் கண்களை, குறிப்பாக கருவிழிகளை (Cornea) காய்ந்து விடாமல் நனைக்க கண்ணீர் தேவையே இல்லை. தண்ணீரை விட்டு நிலத்திற்கு வரும்போது, இமைகளையும், கண்களையும் நனைக்கும் வகையில் கண்களில் திரவம் சிறிதளவு சுரக்கிறது, ஆனால் அது கண்ணீரில்லை.
பின், இரையை விழுங்கும்போது கண்களில் எப்படி, ஏன் நீர் வடிகிறது?
கண்களை நனைத்து ஈரமாக்கும் சுரப்பிகள் கிட்டத்தட்ட முதலையின் தொண்டைக்கருகில் இருபக்கமும் இருப்பதாக முதலையின் உடற்கூறு அறிந்தவர்கள் சொல்வதாகத் தெரியவருகிறது.
இரையைப் பார்த்ததுமே சுரப்பிகள் சுரக்க ஆரம்பித்து விடுகின்றன. எனவே இரையை விழுங்கும்போது, இரையின் உடலால் சுரப்பிகளின் மீது ஏற்படுத்தும் அழுத்தம், சுரப்பியிலிருந்து அதிகளவு திரவத்தை கண்களில் வெளிப்படுத்தி பெருமளவு கண்ணீர் வடிப்பது போன்ற தோற்றம் தருகிறது.
இரையை விழுங்குவதற்கு எவ்வளவு நேரம் எடுக்கிறதோ, அவ்வளவு நேரம் கண்ணீர் வடிப்பது போன்றும் தெரிகிறது.
- வ.க.கன்னியப்பன் (
- விவரங்கள்
- பா.சதீஸ் முத்து கோபால்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
கங்கை மாதாவின் வாகனமாக கருதப்படும் கங்கை முதலைகள் (Gharial), தன் இருப்பை உறுதி செய்து கொள்வதில், மிகுந்த சிரமப்படுகின்றன. நன்னீரில் வாழும் இந்த முதலைகள், ஆற்றின் அடி ஆழத்தில், வாழ்கின்றன. அவ்வப்போது தலை நீட்டி தன் இருப்பை மற்ற உயிரினங்களுக்கு அறிவித்துவிட்டு மீண்டும் உள்ளே சென்று விடும்.
சுமார் 60 முட்டைகள் இடும் இந்த முதலைகள், 90 நாட்களில் குஞ்சு பொறிக்கும். மீன்களை அதிகம் விரும்பி உண்ணும் இந்த முதலைகள், இந்திய துணை கண்டத்தின் பெரும்பாலான இடங்களில் பரவி இருந்தன. பாகிஸ்தான், பர்மா, பூடான் மற்றும் பங்களாதேஷ் நாடுகளில் இவை முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன.
தற்சமயம் இவை இந்தியா மற்றும் நேபாளத்தில் தன்னுடைய வாழ்க்கைக்கு போராடிக் கொண்டிருக்கின்றன. கிர்வா மற்றும் சாம்பல் ஆறுகளில் வாழ்கின்றன. 2007 ஆம் ஆண்டு, நச்சு தன்மை ஆற்றில் கலந்து. அதன் விளைவாக பாதிப்புக்குள்ளான மீன்களை உணவாக உட்க்கொண்டதன் மூலம் சுமார் 100 முதலைகள் யமுனை ஆற்றில் இறந்து போயின. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம், இந்த முதலைகளை அரிய வகை உயிரினமாக அறிவித்து சிகப்பு பட்டியலில் சேர்த்துள்ளது.
ஆற்றில் எடுக்கப்படும் அதிகப்படியான மணல், புதிய அணை கட்டுகள், வேளான் மற்றும் மேய்ச்சல் தொழில் காரணமாக இவை அதிகம் பாதிக்கப்படுகின்றன.
அதிகப்படியான மீன் பிடி தொழிலால், இவற்றின் உணவுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது.
மணலில் முட்டையிட்டு வைத்திருக்கும் போது, அவை சேதப்படுத்தப்படுவதால் புதிய முதலைகள் பிறப்பதில் சிக்கல் உருவாகிறது.
ஆற்றில் கலக்கப்படும் அதிகப்படியான தொழிற்சாலை கழிவுகள், மிகப்பெரிய இடையூறாக இருக்கிறது.
ஆற்றை தூய்மைபடுத்தினால் மட்டுமே இந்த முதலைகளை காப்பற்ற முடியும். இந்த முதலைகளுக்கு என்று சரணாலயங்கள் உருவாக்கப்பட்டு, மனிதர்களின் இடையூறுகளை தடை செய்ய வேண்டும்.
இந்த முதலைகளை காப்பாற்றி விட்டால், ஆறுகள் தூய்மையாகிவிட்டன என்று பொருள். ஆறுகள் தூய்மையாகிவிட்டால், நமக்கு ஏற்ப்படும் நன்மைகள் அனைவரும் அறிந்ததே. இந்த முதலைகள் வாழத் தகுதி இல்லாத ஆறுகள் யாவும், நமக்கும் தகுதி இல்லாத ஆறுகள் என்பதே இவை நமக்கு சொல்லும் பாடம்.
- விவரங்கள்
- சு.உலோகேசுவரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
மண்புழுக்களும் மண்ணுக்குள் வாழும் பல கோடி நுண்ணுயிர்களும் மண்ணை வளப்படுத்துவதற்கு உதவுகின்றன என்பது புதிய செய்தியன்று. தரைக்கு மேலும் வானிலைக்கேற்ப பறவைகளும் தேனீக்களும் மலர்களிலிருந்து மகரந்தம் சேமித்தும் பகிர்ந்தளித்தும் மண்ணை வளப்படுத்த பெரும்பங்கு செய்கின்றன.
உழவர்கள் தமது காய்கனி பயிர் சாகுபடிக்கு மகரந்தச் சேர்க்கையின் இன்றியமையாத் தன்மையை நன்கு உணர்ந்திருப்பர். காய்கனி பயிர் வளர்ப்பு அதன் மலர்களிலுள்ள படியெடுத்தலைப் பெரிதும் சார்ந்துள்ளது. எனவே இயற்கை வேளாண்மை என்பது தேனீக்கள் இன்றி அமையாது என்கிறார் தேனீக்கள் வளர்த்து வரும் சாமிநாதன் என்பவர். சிறு வயது முதலே இவர் தேனீக்கள் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்; இந்திய வகை, இத்தாலிய வகை ஆகிய தேனீக்களை வெவ்வேறு தேன்கூட்டுப் பெட்டகங்களில் வைத்து வளர்க்கிறார். குறிப்பாக தேன்கூட்டுப் பெட்டகங்களை நாட்டின் வெவ்வேறு இடங்களிலிருந்து பெற்றிருக்கிறார். கட்டுப்படியின்மையால் பல தச்சர்கள் தேன்கூட்டுப் பெட்டகங்களைச் செய்துதர மறுத்தனர்.
அரசு வழங்கும் பெட்டகங்களும் ஒரு மழைக்காலத்தைக் கூடத் தாங்குவதில்லை. இதனால், நல்ல தரமான தேன்கூடு பெட்டகங்கள் கிடைப்பதற்குத் தொல்லைகள் நேர்ந்தன. தேனீ வளர்ப்பிலுள்ள வேறு சிலருக்கும் இதே தொல்லைகள் இருந்திருக்கலாம். ஆனால், இவர் இதற்கு மாற்றாகச் சமையலறையில் பயன்படுத்தப்படும் கடப்பா பலகைகளை வைத்து தேன்கூடு அமைக்கத் தொடங்கினார். அவை கனமாக இருப்பதால் ஓரிடத்திலிருந்து வேறிடத்திற்கு மாற்றக் கடினமாக இருக்கும். ஆனால் நெடுநாள் நீடித்திருக்கும்.
வணிக அடிப்படையில் பெருநகரங்களில் தேனீ வளர்ப்பு நடைமுறைக்கு ஒத்துவருமா?
ஊர்ப்புறங்களில் பயிர்களுக்கு அடிப்பது போல நகரங்களில் வளர்ந்துள்ள சில மரங்களில் பூச்சிக் கொல்லிகளோ வேதிப்பொருட்களோ அடிக்கப்படுவதில்லை. எனினும், இங்கு சுற்றுச்சூழல் மாசு மிகுந்திருக்கும். ஆனாலும் அவை பூச்சிக்கொல்லிகளைப் போலத் தேனீக்களுக்குப் பெரிதும் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை.
உணவுத்தட்டுப்பாட்டைத் தீர்க்கும் தேனீக்கள்:
- தனிப்பட்ட முறையில் பணம் பார்ப்பதற்காகத் தேனீக்களை வளர்ப்பதில்லை. அவற்றைப் படித்து அறிந்து கொள்வதற்காகவே வளர்க்கப்படுகிறது.
- தேனீக்கள் மட்டுமல்லாமல் மற்றைய பூச்சிகளும் வளர்வதற்கு நகரங்களில் ஏற்ற சூழல் உள்ளதாக சாமிநாதன் கூறுகிறார். பொதுவாக மக்கள் தேனீக்களின் கொட்டுக்கு அஞ்சுகின்றனர். ஆனால், சில ஆண்டுகளில் அவை நம்முடன் நன்றாகப் பழகிச் செல்லமாகிவிடும் என்று தமது அநுபவங்களைச் சொல்லி வியக்க வைக்கிறார்.
- அவை நம் கைகளின் மீது மென்மையாக ஊர்ந்து செல்லும். எப்போதாவது தான் கொட்டும்.
- நம் நாட்டில் பலர் தேனீக்களைத் தேன் சொரியும் பூச்சிகளாகத் தான் பார்க்கின்றனர். ஆனால், அவை இல்லாவிட்டால் உணவுத் தட்டுப்பாடு வருங்காலத்தில் மேலும் கடுமையாவது உறுதி என்றும் அச்சுறுத்துகிறார்.
- மனிதர்களோடு வயல் விலங்குகளும் இதனால் பாதிக்கப்படும். ஏனெனில், அந்த விலங்குகள் மேயும் மசால்புற்கள் வளர்வதற்குத் தேனீக்கள் மகரந்தம் சேர்க்கின்றன.
தர வரிசை:
- காய்கனி சாகுபடியில் சீனாவிற்குப் பின் இந்தியா உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. தேனீக்களைப் போன்ற மகரந்த சேர்ப்பிகளின் செழிப்புக்கும் காய்கனி விளைச்சலுக்கும் தொடர்பு உள்ளது. தேனீக்கள் அரிதாகும்போது காய்கனி விளைச்சலும் குறைந்து போகும் என்று கூறுகிறார்.
- ஐ.நா வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு அறிக்கையின் படி 140க்கும் மேற்பட்ட நாடுகளில் 90 விழுக்காடு உணவு வழங்கும் 100 பயிர்வகைகளில் 71 பயிர்கள் மகரந்தச் சேர்க்கையினால் செழிப்பவை என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
- தேனீக்கள் காலை கூட்டிலிருந்து கிளம்பி சராசரி 3 முதல் 5 கி.மீ வரை பயணிக்கும். மலர்களிலிருந்து மகரந்தம் எடுத்து சேமித்துக்கொண்டு அதன் கூட்டில் தமக்கு உணவு சமைக்கும்.
தேனீக்களின் கழிவுகள்:
செரித்து மீந்த மகரந்த உணவைத் தேனீக்கள் கழிக்க வேண்டும். தேனீக்களின் கழிவு என்பது வெளிர் மஞ்சள் நிறத்தில் நீர்த்துளியைப் போன்ற நீர்மம். இவை தேனீச்சாணம் என்று அழைக்கப்படுகிறது.
தேனீக்கள் தமது கூட்டிலிருந்து 10 – 30 மீட்டர் தொலைவு கொண்ட இடத்தைக் கழிப்பிடமாகக் கொள்ளும். சராசரியாக ஒரு தேன்கூடு ஆண்டுக்கு 45 – 50 கிலோ சாணம் கழிக்கும். மழை பொழியும்போது இந்தச் சாணம் மண்ணோடு குழைந்து அருமையான இயற்கை உரமாகிவிடுகிறது. இதனால், இயற்கை வேளாண்மை செய்யும் உழவர்கள் தேனீக்கள் வளர்ப்பதன் வாயிலாகத் தேனீக்கழிவு இயற்கை உரம் கொண்டு கூடுதல் விளைச்சல் காணலாம்.
உழுவார் தாம் கொல்லைகளில் 3 – 4 கூடுகளில் தேனீக்கள் வளர்த்து அவை தரும் பயன்பாடுகளைப் பெற்று பயனடைய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார்.
இவர் தேனீக்கள் வளர்ப்பிற்கு கூடுகளை வாடகைக்கு அளிக்கிறார்.
மேலும் விவரங்களுக்கு:
ஆங்கில மூலம்: http://www.thehindu.com/sci-tech/article1564787.ece
- புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..?
- வேங்கை வர்ணங்கள்
- நம்முடன் வாழும் யானைகள்
- இந்தியாவில் மீண்டும் சிறுத்தைகள்
- பறவைகளுக்கும் பொருந்துமா காதலர் தினம்?
- புலிகள் பாதுகாப்புக்கு என்ன செய்ய வேண்டும்?
- மனங்கவரும் பறவைகள்
- நான் ஒரு குட்டி யானை
- பாண்டா கரடிகள்: சீனாவின் சூப்பர் ஸ்டார்
- சுமத்திரா புலிகள் - இன்னும் கொஞ்சமே மிச்சம் இருக்கு
- வீழ்ந்து கொண்டிருக்கும் வரையாடுகள்
- காணாமல் போகும் நீர் நாய்கள்
- அழிந்து வரும் சோலை மந்தி
- பழனி மலை தொடர்ச்சி
- மிரட்டும் தவளைகள்
- எறும்புக்கூட்டம் - யார் அந்த ராணி?
- டார்வினின் விதி மீறும் நாய்கள்
- பறவைகளின் ரேடியேட்டர்
- மீன்களின் உலகம்
- அபசகுனமா? ஆஸ்திரேலியப் பறவையா?