பகைவனே!

என் ஆடை பறித்தாய்

ஆனால் அம்மணமில்லை நான்

மானம் உடுத்தியிருப்பதால்  --

ஆடை மறைத்தாலும்

அம்மணம் நீயே

மனிதம் கிழிந்து மிருகமாய் நிற்பதால்.

 

பகைவனே!

என் கண்ணைக் கட்டினாய்

ஆனால் காண முடிகிறது என்னால்

ஒரு புதிய தேசத்தின் விடியலை --

இருகண் திறந்திருப்பினும்

குருடன் நீயே நீயே

இனவாதம் மூடியிருப்பதால்.

 

 

 

பகைவனே!

என் கைகால் கட்டினாய்

புறமுதுகில் சுடுகிறாய்

நீ கோழையிலும் கோழை --

துவக்கே உன்னைப் பரிகசிக்கும்

தோட்டாவை எனக்குப் பரிசளிக்கும்

வென்றேன் நான் தோற்றாய் நீயே.

 

பகைவனே!

என்னைக் கொன்று வீசினாய்

வெற்றுடல் என்று --

தாய்மண் அணைப்பில்

வித்துடலாகி முளைத்தெழுந்து

உன் கணக்கை முடித்து

விடையும் எடுப்பேன் -

விடுதலை விடுதலை!

Pin It